உத்தவர்

கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதல் அவருக்குப் பணிவிடைகள் செய்து தேரோட்டி பல்வேறு சேவைகள் புரிந்து இறுதி வரை அவருடனே இருந்தவர் உத்தவர். இவர் தனது வாழ்நாளில் தனக்கென எந்தவிதமான உதவியோ நன்மைகளோ வரங்களோ கிருஷ்ணரரிடம் கேட்டதில்லை. துவாபரயுகத்தில் தமது அவதாரப் பணி முடித்து விட்ட நிலையில் கிருஷ்ணர் உத்தவரிடம் இந்த அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும் நன்மைகளும் பெற்றிருக்கின்றனர். ஆனால் நீங்கள் எதுவுமே கேட்டதில்லை. ஏதாவது கேளுங்கள் தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன் என்றார். தனக்கென எதையும் கேட்காவிட்டாலும் சிறு வயது முதலே கிருஷ்ணனின் செயல்களை உற்று கவனித்து வந்த உத்தவருக்கு சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாக இருந்த பல கிருஷ்ணனின் லீலைகள் புரியாத புதிராகவே இறுதிவரை இருந்தன. அவற்றுக்கான தனக்கு புரியாத காரண காரியங்களைத் தெரிந்து கொள்ள விரும்பினார்.

கிருஷ்ண நீ வாழச் சொன்ன வழி வேறு. நீ வாழ்ந்து காட்டிய வழிவேறு. நீ நடத்திய மகாபாரத நாடகத்தில் நீ ஏற்ற பாத்திரத்தில் நீ புரிந்த செயல்களில் எனக்குப் புரியாத பல விஷயங்கள் உண்டு. அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக இருக்கிறேன். நிறைவேற்றுவாயா என்றார் உத்தவர். கிருஷ்ணர் சம்மதிக்க உத்தவர் கேட்க ஆரம்பித்தார். கிருஷ்ணா நீ பாண்டவர்களின் உற்ற நண்பன். உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக கடைசி வரை பரிபூரணமாக நம்பினார்கள். நடப்பவை மட்டுமல்ல நடக்கப் போவதையும் முன் கூட்டியே நன்கு அறிந்த ஞானியான நீ உற்ற நண்பன் யார் என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின் படி முன்னதாகவே சென்று யுதிஷ்டிரா வேண்டாம் இந்தச் சூதாட்டம் என்று தடுத்திருக்கலாம் ஏன் அப்படிச் செய்யவில்லை. விளையாட ஆரம்பித்ததும் யுதிஷ்டிரர் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து வஞ்சகர்களுக்கு நீதி பாடம் புகட்டியிருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. யுதிஷ்டிரன் செல்வத்தை இழந்தான். தன் நாட்டை இழந்தான். தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத் தண்டனையாக அதோடு அவனை விட்டிருக்கலாம். தம்பிகளை அவன் பணயம் வைத்த போதாவது நீ சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம் வைத்து ஆடு. இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன் என்று சவால்விட்டான் துரியோதனன். அப்போதாவது உனது தெய்வீக சக்தியால் அந்த பொய்யான பகடைக்காய்கள் யுதிஷ்டிரனுக்குச் சாதகமாக விழும்படி செய்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. மாறாக திரௌபதியின் துகிலை உரித்து அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போது தான் சென்று துகில் தந்தேன் திரௌபதி மானம் காத்தேன் ஆடை தந்தேன் என்று மார்தட்டிக் கொண்டாய். மாற்றான் ஒருவன் குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து சூதர் சபையில் பலர் முன்னிலையில் அவள் ஆடையில் கை வைத்த பிறகு எஞ்சியமானம் என்ன அவளிடம் இருக்கிறது. அவள் அப்போதே இறந்து விட்டாள் உயிர் மட்டுமே ஊசலாடியது எதனைக் காத்ததாக எண்ணி நீ பெருமைப்படுகிறாய்? ஆபத்தில் உதவுபவன் தானே ஆபத்பாந்தவன்? ஆபத்தான இது போன்றசமயத்தில் உன் பக்தர்களுக்கு உதவாத நீ எப்படி ஆபத்பாந்தவன்? நீ செய்தது நியாயமா தருமமா? என்று மிகக் கடுமையாக குரலில் குழம்பிய மன நிலையில் கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.

உத்தவரே விவேகம் உள்ளவனே வெற்றி பெற வேண்டும் என்பது உலக தர்ம நியதி. துரியோதனனுக்கு இருந்த விவேகம் யுதிஷ்டிரனுக்கு இல்லை. அதனால் தான் யுதிஷ்டிரன் தோற்றான். துரியோதனனுக்கு சூதாடத்தெரியாது. ஆனால் பணயம் வைக்க அவனிடம் பணமும் ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. பணயம் நான் வைக்கிறேன். என் மாமா சகுனி பகடையை உருட்டிச்சூதாடுவார் என்றான் துரியோதனன். அது விவேகம் யுதிஷ்டிரனும் அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு நானும் பணயம் வைக்கிறேன். ஆனால் என் சார்பாக என் கிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான் என்று சொல்லியிருக்கலாம். யுதிஷ்டிரன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்து விட்டான். இதனை மன்னித்து விடலாம். ஆனால் அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவறையும் செய்தான். விதி வசத்தால் சூதாடஒப்புக் கொண்டேன். இந்த விஷயம் கிருஷ்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாது கடவுளே என்று மனதில் எண்ணிக்கொண்டான். கிருஷ்ணன் மட்டும் சூதாட்டமண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும் என்று என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு அவனே என்னை வேண்டுதலால் கட்டிப் போட்டு விட்டான். நான் அங்கு வரக் கூடாதென என்னிடமே வேண்டிக்கொண்டான். யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக் கூப்பிடமாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக் கொண்டு வெகு நேரமாக காத்து நின்றேன். பீமனையும் அர்ஜுனனையும் நகுல சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும் தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர என்னைக் கூப்பிடவில்லை. அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன் சென்று திரௌபதியின் சிகையைப் பிடித்தபோது திரௌபதியும் என்னை கூப்பிடவில்லை. அவளும் தனது பலத்தையே நம்பி சபையில் வந்து வீண் வாதங்கள் செய்து கொண்டிருந்தாள். என்னைக் கடைசி வரை கூப்பிடவில்லை. துச்சாதனன் துகிலுரித்த போது தனது பலத்தால் போராடாமல் அபயம் கிருஷ்ணா அபயம் எனக் குரல் கொடுத்தாள் திரௌபதி. அவளுடைய மானத்தைக் காப்பாற்ற அப்போது தான் உள்ளே செல்ல எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அழைத்ததும் சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். இந்தச்சம்பவத்தில் என் மீது என்ன தவறு என்று பதிலளித்தார் கிருஷ்ணர்.

அப்படி என்றால் நீ கூப்பிட்டால் தான் வருவாயா கிருஷ்ணா. நீயாக நீதியை நிலை நாட்ட ஆபத்துகளில் கஷ்டங்களில் உதவ உன் அடியவர்களுக்கு வரமாட்டாயா என்று கேட்டார். உத்தவா மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை. அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் சாட்சி பூதம் மட்டுமே நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவன் மட்டுமே. அது தான் தெய்வ தர்மம் என்றார். அப்படியானால் நீ அருகில் நின்று நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து துன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டுமா என்று கேட்டார் உத்தவர். அதற்கு கிருஷ்ணர். உத்தவரே நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நீங்கள் நன்றாக கவனியுங்கள்.

நான் உங்கள் அருகில் நிற்பதை நீங்கள் மனப்பூர்வமாக உணரும் போது உங்களால் தவறுகளையோ தீவினை செயல்களையோ நிச்சயமாகச் செய்ய முடியாது. நான் உங்கள் அருகில் நிற்பதை நீங்கள் மறந்துவிடும் போதும் எனக்குத் தெரியாமல் ஏதாவது தீவினையைகளை மறைத்து எதையாவது செய்து விடலாம் என்று எண்ணி நீங்களாகவே முடிவெடுத்து செய்கிறீர்கள். பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் அப்போதுதான் நடக்கிறது. எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று யுதிஷ்டிரன் நினைத்தானே அது அவனது அஞ்ஞானம். நான் சாட்சி பூதமாக எப்போதும் எல்லோருடனும் இருப்பவன் என்பதை யுதிஷ்டிரன் உணர்ந்திருந்தால் இந்த சூதாட்ட நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும் என்றார் கிருஷ்ணர். உத்தவர் தனது கேள்விக்கு கிடைத்த பதிலில் பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார். அவனின்றி ஓர்அணுவும் அசையாது என்ற நம்பிக்கையுடன் சரணாகதி அடைபவனுக்கு எந்த துன்பமும் இல்லை.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.