தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 237 காஞ்சிபுரம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 237 வது தேவாரத்தலம் காஞ்சிபுரம். புராணபெயர் திருக்கச்சி அனேகதங்காவதம். மூலவர் கச்சி அனேகதங்காவதேஸ்வரர், கச்சி அநேகதங்காபதம், அனேகதங்காவதேஸ்வரர், அனேகபேஸ்வரர். இறைவன் இத்தலத்தில் வட்டவடிவ ஆவுடையார் மீது பெரிய லிங்கத் திருமேனியுடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் காமாட்சி. தீர்த்தம் தாணு தீர்த்தம். அநேகதங்காபதம் என்ற பெயரில் இரண்டு பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் இருக்கின்றன. ஒன்று வடநாட்டில் ஹரித்வார், கேதார்நாத் செல்லும் வழியில் உள்ள கெளரிகுண்டம் சென்று அங்கிருந்து பயணிக்க வேண்டும். மற்றொன்று காஞ்சிபுரத்திலுள்ள இத்தலம். வடநாட்டில் உள்ள அநேகதங்காபதம் சிவஸ்தலத்திலிருந்து வேறுபடுத்திக் காட்ட இத்தலம் கச்சி அநேகதங்காபதம் என்ற பெயரால் வழங்குகிறது.

இவ்வாலயம் வடக்கில் ஒரு சிறிய கோபுரத்துடன் கூடிய முகப்பு வாயிலுடனும் கிழக்கில் மற்றொரு முகப்பு வாயிலுடனும் காணப்படுகிறது. ராஜகோபுரமும் கிடையாது. இந்த வாயில்கள் வழியே நுழைந்தால் ஒரு விசாலமான வெளிச் சுற்று உள்ளது. கிழக்கு வாயிலின் உள்ளே சென்றவுடன் பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம் உள்ளது. தெற்கு வெளிப் பிரகாரத்தில் தேவாரம் பாடிய மூவர் சந்நிதி உள்ளது. மேற்கு வெளிப் பிரகாரத்தில் தென்மேற்குப் பகுதியில் விநாயகர் சந்நிதியும், வடமேற்குப் பகுதியில் வள்ளி தெய்வானையுடன் உள்ள ஸ்ரீசுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, விநாயகர், பிரம்மா மற்றும் துர்க்கை உள்ளனர். அனேகதம் என்றால் யானை. யானை முகத்தையுடைய விநாயகர் பிரதிஷ்டை செய்த லிங்கம் என்பதால் சுவாமி அநேகதங்காவதேஸ்வரர் எனப்படுகிறார். விநாயகருக்கு அநேகதங்காவதர் என்றும் பெயர் உண்டு. விநாயகப் பெருமானால் வழிபடப்பட்ட அநேகதங்காபதேஸ்வரரை வழிபடுவர்கள் கொடிய துன்பமாகிய பிறவித்துயர் தீர்ந்து இறைவனின் திருக்கயிலாயத்தை அடைவார்கள் என்று காஞ்சிப் புராணம் கூறுகிறது.

பிரம்மாவின் புத்திரராகிய மரீசி மகரிஷி தடாகத்தில் நீராடச்சென்றபோது நீரிலிருந்த தாமரை மலரில் ஒரு குழந்தையைக் கண்டார். குழந்தைக்கு வல்லபை என பெயரிட்டு வளர்த்து வந்தார். சிவபக்தையாக இருந்த அவளை இரண்ய அசுரனான கேசி பிடித்துச் சென்றான். வல்லபை தன்னை காத்தருளும்படி சிவனிடம் வேண்டினாள். அப்போது அம்பிகை சிவனிடம் விநாயகன் அசுரர்களை அழித்து வெற்றி பெற அருள் செய்ய வேண்டும் என்றாள். சிவன் இத்தலத்தில் தன்னை வணங்கிவிட்டு சென்றிட அசுரர்களை வெற்றி கொள்ள வலிமை உண்டாகும் என்றார். விநாயகரும் அசுரர்களை அழிக்க செல்லும் முன்பு இவ்விடத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பின் வல்லபையை மீட்டு வந்தார். சிவன் அம்பாள் இருவரும் விநாயகருக்கு இத்தலத்திலேயே வல்லபையை மணம் முடித்து வைத்தனர். விநாயகர் வல்லபையை மணம் முடித்த தலம் என்றாலும் இங்கு தனிச்சன்னதியில் விநாயகர் மட்டுமே பெரிய மூர்த்தியாக இருக்கிறார். அவருடன் வல்லபை இல்லை. குபேரன் தன் முற்பிறவியில் செய்த புண்ணியபலனால் அருந்தமனின் மகனாப்பிறந்து அளகைக்கு அரசனானான். அசுரகுருவான சுக்கிரன் அவன் மீது பொறாமை கொண்டு தொல்லைகள் கொடுத்தான். எனவே இங்கு சிவனை வேண்டி தன்னை காக்கும்படி வேண்டினான் குபேரன். சிவன் அவனுக்காக சுக்கிரனை விழுங்கி அவனது கர்வத்தை அடக்கினார். இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது. குபேரன், விநாயகர், சுந்தரர் வழிபட்டுள்ளனர். சுந்தரர் சிவனை கச்சி அநேகதங்காவதமே என்று பதிகம் பாடியுள்ளார். சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.