53. கீரனைக் கரையேற்றிய படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் கீரனைக் கரையேற்றிய படலம் ஐம்பத்தி மூன்றாவது படலமாகும்.

இறைவனான புலவனார் நெற்றிக் கண்ணைத் திறந்து காட்டியபோதும் இறைவனே ஆயினும் உமது பாடல் குற்றமுடையதே என்று வாதிட்ட நக்கீரனை சொக்கநாதர் தன்னுடைய நெற்றிக்கண்ணால் எரித்தார். வெப்பம் தாளாமல் நக்கீரன் பொற்றாமரைக் குளத்தில் சென்று அழுந்தினான். நக்கீரர் வெம்மை பொறுக்காமல் நீரில் மூழ்குவார். வெளியே வந்ததும் மீண்டும் எரிச்சல் தாளாமல் மறுபடி குளத்தில் மூழ்குவார். இப்படி இருந்தபடியால் தமிழ் சங்கத்துக்கு நக்கிரரால் வர இயலவில்லை. தமிழ் சங்கத்தில் நக்கீரர் இல்லாமல் ஏனைய சங்கப் புலவர்களும் செண்பகப் பாண்டியனும் துயரத்தில் ஆழ்ந்தனர். நக்கீரன் இல்லாத தமிழ் சபை அரசன் இல்லாத நாடு போன்றும் நடுநாயக மணி இல்லாத கண்டிகை போன்றும் ஞானம் இல்லாத கல்வி போன்றும் இருப்பதாக சங்கப் புலவர்கள் கருதினர். இறைவன் என்று தெரிந்தும் அவருடன் வாதிட்டதால் இந்நிகழ்வு நேர்ந்தோ? இதனை தீர்ப்பது எப்படி? என்று அவையோர் மனம் கலங்கினர். சொக்கநாதரைச் சரணடைந்தால் நக்கீரரை திரும்பப் பெறலாம் என்று எண்ணி அனைவரும் சொக்கநாதரை வழிபாடு செய்ய கோவிலுக்குச் சென்றனர்.

சொக்கநாதரை பலவாறு போற்றி வழிபாடு நடத்தினர். ஐயனே செருக்கினால் அறிவிழந்த நக்கீரனின் பிழையைப் பொறுத்தருளுக என்று வேண்டினர். சொக்கநாதர் மீனாட்சி அம்மனுடன் பொற்றாமரைக் குளத்தில் எழுந்தருளினார். முன்னர் நெருப்பு கண்ணால் பார்த்த இறைவனார் தற்போது அருட்கண்ணால் பார்க்க நீரில் அழுந்திக் கிடந்த நக்கீரன் மீண்டு எழுந்தான். பின்னர் நக்கீரர் இறைவனார் மீது கைலை பாதி காளத்தி பாதி என்ற அந்தாதி பாடலைப் பாடினார். கோபப்பிரசாதம் மற்றும் திருவெழு கூற்றிருக்கை ஆகிய பாமாலைகளை இறைவனார் மீது பாடினார். ஏனைய புலவர்களும் இறைவனார் மீது கவிதாஞ்சலி பாடினர். இவற்றை எல்லாம் செவிமடுத்த இறைவனார் நக்கீரனை கைபிடித்து பொற்றாமரைக் குளத்தில் இருந்து கரையேற்றினார். நீ முன் போலவே புலவர் கூட்டத்திற்கு நடுவிலே தங்குவாயாக என்று கூறி மறைந்தருளினார். இறைவனின் அருள் பெற்ற தருமிக்கு மேலும் பல பரிசுகளை பாண்டியனைக் கொண்டு கொடுக்கச் செய்தனர். செண்பகப் பாண்டியன் நாள்தோறும் சொக்கநாதரையும் மீனாட்சி அம்மனையும் வழிபட்டுப் பல திருப்பணிகள் செய்து சிவமே பொருள் எனத் துணிந்த உள்ளன்பினோடு இனிது வாழ்ந்து நல்லாட்சி செய்து வந்தான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

இறைவன் சோதனை செய்து இருக்கும் குறைகளைப் போக்கி தகுதியை கொடுத்து இறுதியில் சாதனையாளனாக மிளிரச் செய்வார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.