மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -39

வேந்தர்களில் சிலர் வில்லையும் அம்புகளையும் அருகில் வந்து உற்றுப் பார்த்தனர். வியப்பின் அறிகுறி அவர்களின் முகங்களில் தாண்டவமாடியது. ஒன்றும் பேசாமல் பின்வாங்கினர். மேலும் சிலர் வில்லை கையில் தூக்கி பார்த்தனர். அஞ்சி அவர்களும் பின்வாங்கினர். சிசுபாலன் மற்றும் ஜராசந்தன் என்னும் அரசர்கள் அந்த வில்லை தூக்கி அதில் அம்மை ஏற்றி இலக்கை அடிக்க முயன்றனர். ஆனால் பெரும் தோல்வி அடைந்தார்கள். பகட்டே வடிவாக தெரிந்த துரியோதனன் உறுதியான தீர்மானத்துடன் இலக்கை நோக்கி அடித்தான். ஆனால் அதில் அவனும் வெற்றி காணவில்லை. கர்ணனுடைய முயற்சி மிக நேர்த்தியாக இருந்தது. மேடையை நோக்கி அவன் ஒரு வேங்கையை போன்று கம்பீரமாக நடந்தான். சுழன்று கொண்டிருந்த சக்கரத்தின் துவாரத்தின் வாயிலாக அம்பை அவன் சிரமம் ஏதுமின்றி செலுத்தினான். ஆனால் இலக்கை மட்டும் அடிக்க அவனால் முடியவில்லை. போட்டிக்கு வந்த மன்னர்கள் அனைவரது முயற்சியும் தோல்வியில் முடிந்தது. சுயவரம் தோல்வி அடையும் போல தென்பட்டது.

திருஷ்டத்யும்னன் மீண்டும் ஒருமுறை மேடையில் வந்து பிரகடம் பண்ணினான். இவ்வளவு நேரம் நடந்த போட்டியானது நாட்டை ஆளும் வேந்தர்களுக்கு என்று ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இனி இது அனைவருக்கும் பொதுவாக அமைகிறது. பிராமணர்கள் க்ஷத்திரியர்கள் வைசியர்கள் சூத்திரர்கள் ஆகிய யார் வேண்டுமானாலும் முயற்சி செய்து பார்க்கலாம். வில்லால் இலக்கை அடிக்கின்றவர்களுக்கு என் சகோதரி மனைவியாவாள் என்று அறிவித்தான். பிராமணர்களின் கூட்டத்தில் இருந்து ஒருவன் எழுந்து நின்றான். அவனுக்கு பலர் உற்சாகம் ஊட்டினார்கள். வேறு சிலர் அவனை அதட்டி உட்கார சொல்லினர். ஆனால் அவன் அர்ஜூனன் என்பதை கிருஷ்ணன் அறிந்துகொண்டான். திரௌபதியின் விவாகம் நிச்சயமாக நடைபெறப்போகிறது என்று கிருஷ்ணன் எண்ணினான். கூட்டத்தில் இருந்து வந்தவனுடைய நடையில் ராஜரீதி மிளிர்ந்தது. வில்லையும் அம்புகளையும் நெருங்கி அதற்கு தலைவணங்கினான். பின்பு வில்லை கையில் எடுத்து ஓசையை கிளப்பினான். பிறகு ஒன்றன் பின் ஒன்றாக ஐந்து அம்புகளையும் எய்தான். மீன் போன்று அமைக்கப்பட்ட குறியானது கீழே தரையில் விழுந்தது. பிராமணனாக வேடம் போட்டு வந்திருந்த அர்ஜூனன் வெற்றி பெற்றான்.

கொட்டகை முழுவதிலும் திடீரென்று கர்ஜனை முழங்கியது. அங்கு இருந்தவர்கள் அனைவரையும் விட பிராமணர்கள் யாண்டும் க்ஷத்திரர்களுக்கும் மேலானவர்கள் என்ற சொல் காதைத் துளைத்தது. திரௌபதி அன்னப்பறவைக்கு நிகராக மெதுவாக நடந்து வந்து பிராமண வாலிபன் நின்று கொண்டிருந்த இடத்தை அணுகி அவனுக்கு மாலை சூட்டினாள். அப்போது சங்குகள் ஒலித்தன. துத்தாரிகள் கதறின. பேரிகைகள் கொட்டின. காளங்கள் கத்தின. தம்பட்டங்கள் அடித்தன. வாத்திய முழக்கங்கள் வானை எட்டியது. தம்பதிகள் மீது பூக்கள் தூவப்பட்டது. மணமகன் மணமகளின் கரத்தைப் பற்றிக்கொண்டு மேடையிலிருந்து கீழே இறங்கினான். தகுதி வாய்ந்த மருமகன் தனக்கு வாய்த்தது குறித்து திருபத மன்னன் மிக மகிழ்வு அடைந்தான். இதனை பார்த்துக் கொண்டிருந்த கர்ணன் ஏமாற்றமடைந்தான். அதற்கு காரணம் இரண்டு இருந்தது. வில்வித்தையில் தன்னை விட மேன்மையானவன் ஒருவன் இருக்கின்றான் என்ற எண்ணம் ஒன்று. உலகறியாத பிராமணன் ஒருவன் அக்கலையில் உச்ச நிலையை எய்தியது மற்றொன்று. உண்மையில் அவ்விளைஞன் வில் வித்தையில் வல்லவனா அல்லது குருட்டுப்போக்கில் வெற்றி பெற்றானா இன்னும் சந்தேகம் கர்ணனுக்கு வந்தது.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -38

பாஞ்சால நாட்டின் தலைமை பட்டணத்தில் சுயவரத்திற்க்காக மகத்தான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது. பிரபலம் வாய்ந்த ராஜகுமாரர்களுக்கு எல்லாம் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. துரியோதனனை தலைவனாகக் கொண்டு கௌரவர்வர்கள் அங்கு வந்திருந்தார்கள். கர்ணனும் வந்திருந்தான். சகோதரர்களாகிய பலராமனும் கிருஷ்ணனும் அங்கு வந்திருந்தார்கள். வந்திருந்த மன்னர்களில் பெரும்பாலோனோர் நடக்கவிருக்கும் நிகழ்ச்சியை வேடிக்கை பார்ப்பதற்க்காக வந்திருந்தனர். போட்டி போடுவதற்கும் பலர் வந்திருந்தனர். இவர்கள் அனைவரும் அமர்வதற்கு பொருத்தமான இட வசதிகள் செய்யப்பட்டிருந்தன. அழைப்பு இல்லாதவர்களாகவும் யாருக்கும் அறிமுகமாகாத பாண்டவர்கள் இந்நகரத்திற்கு வந்தார்கள். ஒரு குயவனுடைய வீட்டில் அவர்கள் தங்கியிருப்பதற்கு இடம் தேடிக் கொண்டார்கள். பிட்சையாக அகப்பட்டதை அவர்கள் பூசித்து வந்தார்கள். வீதிகளில் அலைந்து திரிந்து அங்கு நிகழும் சுயவரத்தைப் பற்றிய விவரங்களை எல்லாம் அவர்கள் சேகரித்து கொண்டார்கள்.

அர்ஜுனன் மட்டும் உயிரோடு இருப்பானாகில் அவன் திடீரென்று கவர்ச்சிகரமாக மேடையில் தோன்றி மற்ற போட்டியாளர்களை எல்லாம் பின்வாங்கும் படி அவன் தோற்கடித்தான் என்னும் பேச்சு மக்களிடையே இருந்தது. குறிப்பிட்ட சுயவர நாள் வந்தது. மேடை மிக அற்புதமாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நறுமணம் எங்கும் தவழ்ந்து கொண்டிருந்தது. இனிய இசை எங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. மன்னாதி மன்னர்கள் கவர்ச்சிகரமான பாங்கில் அவரவர்களுக்குரிய ஆசனங்களில் அமர்ந்து கொண்டனர். அதற்கு நேர்மாறாக மாறுவேடம் பூண்டிருந்த பாண்டவர்கள் தனித்தனியாக வந்து பிராமணர்களுக்கு உரிய இடங்களில் அமைதியாக அமர்ந்து கொண்டனர். அவர்கள் தனித்தனியாக வந்ததற்கு காரணம் ஒன்று இருந்தது. அனைவரும் சேர்ந்து வந்தால் நிச்சயமாக உலகத்தவர்கள் அவர்களை அடையாளம் கண்டு பிடித்துவிடுவார்கள். ஆகையால் அவர்கள் தனித்தனியாக வந்து அமர்ந்து கொண்டனர்.

அகன்ற கொட்டகையின் மத்தியிலே அரங்கம் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு திருஷ்டத்யும்னன் தன்னுடைய சகோதரி திரௌபதியை அழைத்து வந்தான் பிறகு போட்டியிடுவதற்காக வந்திருந்தவர்களின் பெயர்களை வாசித்தான். திரௌபதி அற்புதமாக அலங்கரிக்கப்பட்டு இருந்தாள். தெய்வீக சௌந்தர்யம் அவளிடம் இயல்பாக அமைந்திருந்தது. அவள் அணிந்திருந்த ஆடை அந்த அழகை மேலும் அதிகரிக்கும்படி செய்தது. பூமாலை ஒன்றை அவள் கையில் ஏந்தியிருந்தாள். வெற்றி பெற்ற ராஜகுமாரனுக்கு அந்த மாலையை அவள் சூட்டுவாள். திரௌபதி தன் கண்பார்வையை கீழே தரையின் மீது வைத்தவளாக அமைதியுடன் நின்று கொண்டிருந்தாள்.

போற்றுதற்குரிய மன்னர்கள் இருக்கும் பேரவையில் திருஷ்டத்யும்னன் பேச ஆரம்பித்தான். எல்லோருடைய கவனத்தையும் பணிவுடன் வேண்டுகிறேன் இதோ இங்கு வில் இருக்கிறது. 5 அம்புகள் இருக்கின்றன. ஒரு துவாரத்தைச் கூடிய சக்கரம் ஒன்று மேலே சுழன்று கொண்டு இருக்கிறது. அதற்கு மேல் இலக்கு அமைக்கப்பட்டிருக்கின்றது. சுழன்று கொண்டிருக்கின்ற சக்கரத்தின் வாயிலாக மேலே இருக்கின்ற இலக்கின் மேல் எய்பவர்கள் என் சகோதரியை திருமணம் முடிந்து கொடுக்கின்றோம் இது என் உறுதிமொழி என்று திருஷ்டத்யும்னன் பேசி முடித்தான். வேந்தர்கள் அனைவரும் வில்லையும் அம்பையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொழுது கிருஷ்ணனுடைய கருத்து சபையில் அமர்ந்து இருந்தவர்கள் மீது சென்றது. தன் பார்வையை எல்லா பக்கமும் அவன் செலுத்தினான். பிராமணர்களிடையே பாண்டவ சகோதரர்கள் மாறுவேஷத்தில் அமர்ந்திருப்பதை கிருஷ்ணன் கண்டு கொண்டான். அவர்கள் உயிரோடு இருப்பதை பார்த்து அகமகிழ்ந்து கொண்டான்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -37

குந்திதேவி பிராமணரையும் அழைத்துக்கொண்டு பீமனிடம் சென்று அனைத்தையும் கூறினாள். பீமன் அசுரனை அழித்துவிடுவதாக உறுதி கூறினான். அடுத்த நாள் காலையில் ஒரு வண்டி நிறைய உணவு அவர்களின் வீட்டருகே கொண்டு வரப்பட்டது. பகன் என்னும் அசுரன் வசித்து இருந்த இடத்திற்கு பீமன் அந்த வண்டியை ஓட்டிச் சென்றான். வேண்டுமென்றே செல்லும் வழியில் காலதாமதம் செய்தான். பகனுடைய குகைக்கு அருகில் வந்ததும் கொண்டு வந்திருந்த உணவு வகைகளை தானே திருப்தியாக புசித்தான். தனது உணவுகளை ஒரு மனிதன் சாப்பிடுவதைப் பார்த்த அசுரன் அந்த மனிதனை அழிப்பதற்கு விரைந்து ஓடி வந்தான். பசிப் பிணிக்கு உட்பட்டிருந்த பீமன் கொண்டு வந்த உணவு முழுவதையும் சாப்பிட்டு முடிக்கும் வரையில் அவனை ஒரு கையால் பிடித்து சமாளித்தான். பிறகு சண்டை தொடங்கியது. யானை கரும்பு ஒன்றை இரண்டாக கிழிப்பது போன்று அந்த அரக்கனை இரண்டாக கிழித்து அசுரனின் பிரேதத்தை வண்டியில் பொட்டு நகரத்தின் வாயில் அருகில் கொண்டு வந்து நிறுத்தினான் பீமன். ஊரார் அனைவரும் அதை பார்க்க வேண்டும் என்பது அவனது எண்ணம். தேவதை ஒன்று அந்த அரக்கனைக் கொன்று தன்னை காப்பாற்றியது என்று பிராமண விருந்தினர் ஊராருக்கு எடுத்துரைத்தார். பாண்டவர்கள் இன்னும் சிறிது காலம் மறைத்து இருக்க வேண்டும் என்பதே அதற்கு காரணம். ஏகசக்ர நகரம் அன்று முதல் நரபலியில் இருந்து விடுவிக்கப்பட்டது.

மாறுவேடம் பூண்டிருந்த பாண்டவர்கள் அந்த வீட்டு பிராமணரின் பாராட்டுக்குரிய விருந்தினர்களாக மகிழ்வுடன் வாழ்ந்து வந்தார்கள். வேதங்களை கற்பதிலும் ஏனைய சாஸ்திரங்களை ஆராய்ச்சி பண்ணுவதிலும் மறைந்திருந்த காலத்தில் நேரத்தை செலவிட்டார்கள். காலம் சிறிது நாள் சென்றது காலம் எப்படி கடந்து போயிற்று என்பது அவர்களுக்கே விளங்கவில்லை. நூல் ஆராய்ச்சியில் ஆழ்ந்து மூழ்கி இருந்ததே அதற்கு காரணம்.

சாஸ்திரங்களை ஆழ்ந்து ஆராய்ந்து படித்த பிராமண பண்டிதன் ஒருவன் ஒவ்வொரு நாடாக தேச சஞ்சாரம் செய்து கொண்டிருந்த போது ஏகசக்ர நகரத்தில் பாண்டவர்களை அவர்களுடைய வீட்டில் வந்து சந்தித்து சில காலம் தங்கினான். அங்கு அவன் வசித்து வந்த குறுகிய காலத்தில் அரிய பெரிய விஷயங்களைப் பற்றிய அற்புதமான சொற்பொழிவுகள் நிகழ்தினான். வேறு நாட்டில் நடக்கின்ற சம்பவங்கள் சிலவற்றை பற்றியும் பேசினான். அப்பொழுது பாஞ்சால நாட்டு மன்னனாகிய துருபதனை பற்றியும் அவளது மகளாகிய திரௌபதியை பற்றியும் பேசினான். அந்த அழகிய பெண்ணுக்கு சுயவரம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. முதலில் தலைசிறந்த வில்லாலியான அர்ஜுனனுக்கு அப்பெண்ணை மணந்து கொடுக்க அவளது தந்தை துருபதன் தீர்மானித்திருந்தான். ஆனால் வாரணவதத்தில் நடந்த பரிதாபகரமான முடிவை கேள்வியுற்று அவனுடைய மனம் உடைந்து போயிற்று. எனினும் ஒருவேளை அர்ஜுனன் மாண்டு போகாது உயிரோடு இருந்தால் அவன் இந்த சுயம்வரத்திற்கு வந்து சேர வேண்டும். என்பது அதனுடைய ஆவலாக இருக்கிறது. இவ்வாறு புதிதாக வந்திருந்த பண்டிதன் துருபதனைப்பற்றியும் திரொபதியைப்பற்றியும் கூறினான். மாறுவேடம் பூண்டிருந்த பாண்டவர்களில் உற்சாகத்துடன் இதனை கேட்டு திரௌபதி அர்ஜுனனுக்கு உரியவள் என்று உணர்ந்தார்கள். வியாச மகரிஷி மறுபடியும் அவர்களிடம் பிரசன்னமாகி அவர்களை ஏகசக்ர நகரத்தில் இருந்து புறப்பட்டு துருபதன் ஆண்டுவந்த பாஞ்சால நாட்டு தலைமை பட்டனமாகிய கம்பிலியாவுக்கு புறப்பட்டுப் போகும்படி அவர்களுக்கு புத்திமதி கூறினார். பாண்டவர்கள் பாஞ்சால நாட்டு தலைமை பட்டணமாகிய கம்பிலியாவுக்கு புறப்பட்டு போக தீர்மானித்தார்கள்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -36

குந்தி தேவியும் பாண்டவர்களும் காட்டிற்குள் நெடுந்தூரம் நடந்து சென்று இறுதியாக ஏகசக்கர நகரத்தை அடைந்தார்கள். அங்கு அவர்கள் வசித்திருப்பதற்கு ஒரு பிராமணனுடைய இல்லத்தில் இடம் கிடைத்தது. துறவறம் வாழ்க்கை வேசத்திற்க்கு ஏற்றவாறு ஏகசக்ர நகரத்தில் பிட்சை எடுத்து அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். எனினும் இயல்பாக அவர்களிடம் அமைந்திருந்த ராஜரீதியை மறைத்துக் கொள்ள அவர்களால் இயலவில்லை. அந்நகரத்தில் வசித்து இந்த அறிஞர்கள் அவர்களை சரியாக மதிப்பீட்டார்கள். இவர்கள் பேரியல்பு வாய்க்கப்பெற்ற பெருமக்கள் ஏதோ ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக துறவிகள் போன்று வேஷமிட்டு இருக்கின்றார்கள் என்பது அவர்களுடைய யூகமாக இருந்தது. ஒரு நாளைக்கு ஐந்து புதல்வர்கள் பிச்சை எடுத்து வந்த அன்னத்தை சரிபாதி பீமனிடம் கொடுத்துவிட்டு மறுபாதியை ஏனைய சகோதரர்களுக்கு குந்திதேவி பங்கிட்டுக் கொடுத்தாள். அப்படி இருந்தும் பீமனுக்கு அந்த உணவு போதவில்லை. ஓரளவு பட்டினியுடன் அவன் தாக்குப்பிடித்து வந்தான்.

ஒரு நாள் பாண்டவர்கள் ஐவரும் பிட்சை எடுக்க நகரத்திற்குள் சென்றனர். அப்போது குந்திதேவி வசித்துவந்த வீட்டின் உட்புறத்தில் அழுகை சத்தம் அவள் காதுக்கு எட்டியது. உள்ளே சென்று அவள் அந்த அழுகைக்கு காரணம் என்ன என்று அவள் கேட்டாள். அதற்கு அவர்கள் பகன் என்னும் அசுரன் ஒருவன் இந்நகரத்தின் அருகில் இருக்கும் காட்டுப் பகுதியில் வசித்து வருகின்றான். அவன் இந்த ஊரில் நிகழ்த்திய உயிர்சேதம் வரம்பு கடந்து இருந்தது. ஆகையால் அந்த நஷ்டத்தை குறைத்துக் கொள்வதற்காக ஊரார் அந்த அரக்கனுடன் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டனர். அந்த உடன்படிக்கையின் படி அந்த ஊருக்கு எந்த ஒரு தீங்கும் நிகழாதவாறு அந்த ஊரை காப்பாற்றுவது அரக்கனுடைய கடமையாகும். அதற்கு கைமாறாக அரக்கனுக்கு வாரத்தில் ஒரு வண்டி உணவும் இரண்டு காளைகளும் ஒரு மானுடனும் அவனுக்கு உணவாக அளிக்கப்பட வேண்டும். இந்த நகரத்தில் முறைப்படி ஒவ்வொரு குடும்பமும் உணவையும் மானுடன் ஒருவனையும் பலியாகக் கொடுத்து விடுதல் வேண்டும் என்பது ஊரின் உத்தரவு. அடுத்த நாள் காலையில் அவ்வாறு நரபலி தருகின்ற முறை எங்களது குடும்பத்திற்கு உரியது. குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் தாயும் மகனும் மகளும் ஒருவரை ஒருவர் காப்பாற்றும் பொருட்டு நான் போகின்றேன் என்று முந்திக் கொண்டு இருக்கின்றோம். எங்களில் ஒருவரை இழக்கப்போகின்றோம் என்பதை முன்னிட்டு அழுகின்றோம் என்று கூறினார்கள்.

அக்குடும்பத்திற்கு ஏற்பட்டிருந்த சங்கடத்தை நிவர்த்தி பண்ணுவதாக குந்திதேவி உறுதி கூறினாள். தன்னுடைய புதல்வர்களை ஐவரில் ஒருவனை அன்றைக்கு உணவாக அனுப்பி வைக்கிறேன் என்று அவள் கூறினாள். அதற்கு அக்குடும்பம் ஒத்துக்கொள்ளவில்லை. விருந்தினர்களை பலி கொடுப்பது தர்மமாகாது. எப்படியும் விருந்தினர்களை காப்பாற்றுவதே எங்களுக்குரிய தர்மம் என்பதால் அதற்கு மறுப்பு தெரிவித்தார்கள். அதற்கு அவர்களிடம் குந்திதேவி ஒரு செய்தியை கூறினாள். எனது ஐந்து புதல்வர்களையும் தேவர்கள் சிலர் காப்பாற்றி வருகின்றார்கள். ஆகையால் அவர்கள் வழியாக இவ்வூருக்கு ஏதேனும் விமோசனம் கிடைக்கும் என்று அவர்களுக்கு சமாதானம் கூறி அவர்களை சம்மதிக்க வைத்தாள். அவர்களும் சிறிது தயக்கத்திற்கு பிறகு ஒத்துக்கொண்டனர்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -35

காட்டிற்குள் இருந்த பாண்டவர்கள் ஐவரும் குந்திதேவியுடன் அடுத்து எங்கு செல்லலாம் என்று கலந்தாலோசித்துக் கொண்டே காட்டிற்குள் நடந்து கொண்டிருந்தார்கள். அவர்களை இடும்பியும் பின் தொடர்ந்து சென்றாள். இதனைக் கண்ட குந்திதேவி எதற்காக எங்கள் பின்னால் வருகின்றாய் என்று கேட்டாள். அதற்கு இடும்பி பீமன் மீது நான் காதல் கொண்டுள்ளேன். அவரோ தன் தாய் தமையன் ஆகியோரிடையே அனுமதியின்றி என் காதலை ஏற்க முடியாது என்று சொல்லிவிட்டார். தாயே என் மீது இரக்கம் வையுங்கள். நான் வேண்டுவது தர்மமே. என்னை தாங்கள் புறக்கணித்தால் நான் மாண்டு போவேன். என் மீது இரக்கம் வைத்து என்னை ஏற்றுக்கொண்டீர்கள் என்றால் நான் உங்களுக்கு விசுவாசத்துடன் இருப்பேன். நீங்கள் எங்கு போக விரும்புகிறீர்களோ அங்கு உங்களை என்னால் தூக்கி செல்ல முடியும். உங்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருகின்றேன் என்றாள். குந்திதேவிக்கு அவள் மீது இரக்கம் உண்டாயிற்று.

மூத்தவன் யுதிஷ்டிரனோடு இந்த விஷயத்தை பற்றி குந்திதேவி கலந்து பேசினாள். அதன் பிறகு பீமன் சிறிது காலம் இடும்பியுடன் வாழ அனுமதித்தாள். இடும்பிக்கு இப்பொழுது பரம திருப்தி உண்டாயிற்று. இடும்பி அவர்கள் அனைவரையும் ஸாலிஹோத்ரத் என்னும் காட்டிற்கு தூக்கிச் சென்றாள். அங்கு அவர்களுக்கு குடில் ஒன்றை கட்டிக் கொடுத்தாள். அவர்கள் வாழ்வதற்கேற்ற வசதிகள் அனைத்தையும் செய்து கொடுத்தாள். காலையில் இருந்து மாலை வரை இடும்பி பீமனைத் தன்னோடு அழைத்துச் சென்று பல இடங்களுக்குச் சென்று மகிழ்ச்சியாக இருந்தாள். சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு பீமனுடன் அவர்கள் வசிக்கும் குடிசைக்கு திரும்பி வந்தாள். பீமனுக்கும் இடும்பிக்கும் ஒரு குழந்தை பிறந்தது. பயங்கரமான கண்களுடனும் பெரிய வாயுடனும் அம்பு போன்ற நீண்ட காதுகளுடனும் பார்ப்பதற்குப் பயங்கரமாகவும் ஒரு மகனை அவள் பெற்றெடுத்தாள். அக்குழந்தைக்கு அவர்கள் கடோத்கஜன் என்று பெயரிட்டார்கள். ராட்சசப் பெண்கள் தாங்கள் விரும்பிய வடிவை அடையும் சக்திவாய்ந்த பிள்ளையைப் பெற்றெடுப்பார்கள். அவர்கள் எப்படி வேண்டுமானாலும் தங்கள் வடிவை மாற்றிக் கொள்வார்கள். அவன் குழந்தையாக இருந்தாலும் பிறந்த அந்த மணிநேரத்திலேயே ஓர் இளைஞனுக்கு உரிய வளர்ச்சியை அடைந்தான்.

வனவாசிகளாக இருந்த பாண்டவர்களுக்கு வியாச பகவான் தரிசனம் கொடுத்தார். அவர்களுடைய நலத்தை அவர் விசாரித்தார். கௌரவர்கள் தங்களுக்கு செய்திருந்த கொடுமைகளை பற்றி அவர்கள் முறையிட்டார்கள். இப்பிரபஞ்ச வாழ்வு அனைத்தும் நலம் மற்றும் கேடு ஆகிய இரண்டும் கலந்தது. தர்மத்தை உறுதியாக பற்றிக்கொண்டு பொறுமையுடன் கேடு காலத்தை சகித்து வரவேண்டும் என்றும் விரைவில் அதனைத் தொடர்ந்து நல்ல காலம் நிச்சயம் வரும் என்றும் அது வரை பொறுமை காக்குமாறு அவர்களிடம் கூறினார். பாண்டவ சகோதரர்கள் அதுவரையில் தவம் செய்யும் பிராமணர்களாக தங்கள் வேஷத்தை மாற்றிக்கொண்டு ஏகசக்கர நகரத்திற்குச் சென்று அங்கு வசித்து வரவேண்டும் என்றும் வியாசர் பாண்டவர்களிடம் தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றார்.

பீமன் இடும்பியிடம் உன்னையும் கடோத்கஜனையும் விட்டு பிரியும் நேரம் வந்து விட்டது என்றும் தான் செல்ல வேண்டும் என்றும் தனக்கு இருக்கும் சூழ்நிலையை விளக்கிக் கூறினான். அதற்கு இடும்பி இத்தனை நாட்கள் தம்முடன் குடும்ப வாழ்க்கை வாழ்ந்து வந்தது தமக்கு திருப்தி என்றும் உங்களை விட்டு நானும் கடோத்கஜனும் பிரிந்து செல்கின்றோம். பாண்டவர்களாகிய உங்களுக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் தம்மையும் கடோத்கஜனையும் எப்பொழுது வேண்டுமானாலும் அழைக்கலாம். உடனே நாங்கள் வருவோம் என்று கூறிவிட்டு கடோத்கஜனையும் அழைத்துக்கொண்டு அரைமனதுடன் அவர்களை விட்டு பிரிந்து சென்றாள்.

சாமியாரும் குரங்கும் வாரியார் சொன்ன கதை

ஒரு சாமியாரின் ஆசிரமத்துக்கு அவர் நண்பர் ஒருவர் வந்தார். அவருக்கு உணவு கொடுக்க விரும்பிய சாமியார் தான் வளர்த்த குரங்கைப் பார்த்து இலை போடு என்றார். குரங்கு வாழை இலை எடுத்து வந்து போட்டது. உடனே சாமியார் தன் கையில் வைத்திருந்த பிரம்பால் குரங்கின் தலையில் ஓங்கி அடித்து சாதம் போடு என்றார். குரங்கு சாதம் கொண்டு வந்து பரிமாறியது. திரும்பவும் தலையில் அடித்தார். அவர் சொன்னதை எல்லாம் குரங்கு சரியாகச் செய்தாலும் அடி விழுந்து கொண்டே இருந்தது. நண்பருக்கு மனம் பொறுக்கவில்லை.

சாமி குரங்கு தான் நீங்கள் சொன்னதை எல்லாம் சரியாகச் செய்கின்றதே அந்த வாயில்லாச் ஜீவனை ஏன் அடித்துத் துன்புறுத்துகிறீர்கள் என்று கேட்டார். சாமியார் எதுவும் பேசவில்லை. சிரித்து விட்டுப் பிரம்பை தானிருந்த பாயின் கீழே ஒளித்து வைத்தார். சற்று நேரத்தில் குரங்கு தாவிப் பாய்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவரின் தோளில் ஏறி இருந்தது. காதைப் பிடித்து இழுத்தது. தலை மயிரைப் பிரித்துப் பேன் பார்த்தது. சாப்பிட்ட இலையில் வாலைத் தொங்க விட்டு ஆட்டியது. உடனே சாமியார் நண்பர் ஐயோ சாமி இந்தக் குரங்கின் தொல்லை தாங்க முடியவில்லை அடி போடுங்கள் என்றார் நண்பர். உடனே சாமியார் பிரம்பை எடுத்துக் குரங்கின் தலையில் அடித்தார். அது போய் ஒரு மூலையில் அமைதியாக இருந்தது.

அப்போது சாமியார் சொன்னார் இந்தக் குரங்கைப் போலத் தான் மனித மனங்களும் நாம் சொன்னதை எல்லாம் மனம் கேட்டு நடக்கின்றதே என்று சும்மா விட்டு விடக் கூடாது. தேவாரம், திருவாசகம், தியானம், தவம், விரதங்கள் என்னும் பிரம்புகளால் மனதை தொடர்ந்து தட்டிக் கொண்டே இருக்க வேண்டும். சற்று மனதிற்கு ஓய்வு கொடுத்தாலும் மனிதனின் மனம் தாவத் தொடங்கி விடும் என்றார்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -34

தண்ணீர் தேடிச்சென்ற பீமன் சிறிது தூரத்தில் ஒரு தாமரைக் குளத்தைக் கண்டான். அதில் ஸ்படிகம் போன்ற குளிர்ந்த நீர் இருந்தது. திருப்திகரமாக அவன் அதில் நீராடி தெளிவு பெற்றான். அழகிய தாமரை இலைகளை கொண்டு அற்புதமான நீர் பாண்டம் ஒன்றை அவன் செய்தான். அதில் தண்ணீர் எடுத்துக்கொண்டு தன் தாயும் சகோதரர்களும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த இடத்திற்கு வந்தான். அவர்களோ அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர். எனவே பீமன் அமைதியாக அவர்களுக்கு காவல் இருந்தான். பீமனுடைய உள்ளத்தில் சில எண்ணங்கள் தோன்றியது கொலை பாதகர்களான கௌரவர்களோடு ஒளிந்திருத்தல் கண்டுபிடித்தல் விளையாட்டு விளையாடுவது சரி. ஆனால் தனது தாய் குந்திதேவியையும் இந்த ஆபத்தில் அழைத்து செல்வது சரிதானா என்று எண்ணிக்கொண்டு இருந்தான்.

அப்போது கட்டழமே வடிவெடுத்திருந்த அழகிய பெண் ஒருத்தி பீமனின் அருகில் வந்தாள். பீமனை அவன் பார்த்த பார்வையில் காதல் இருந்தது. அவள் யாரென்று பீமன் மரியாதையாக கேட்டான். அதற்கு அப்பெண் இந்த இடத்திற்கு இடும்பவனம் என்று பெயர். எனது சகோதரன் பெயர் இடும்பன். அவனது சகோதரியாகிய எனது பெயர் இடும்பி. இந்த இடத்தை நாங்கள் ஆண்டு வருகின்றோம். நாங்கள் ராட்சஷ கணத்தைச் சேர்ந்தவர்கள். மனித மாமிசத்தை உண்பதில் எங்களுக்கு ஆசை உண்டு. உன்னை கொன்று உன் மாமிசத்தை தன்னிடம் கொண்டு வருமாறு என் சகோதரன் என்னிடம் உத்தரவிட்டிருக்கிறார். ஆனால் உன்னை பார்த்ததும் நான் காதல் கொண்டேன். எனது உடலை எப்படி வேண்டுமானாலும் மாற்றி அமைக்கும் திறமை எனக்கு உண்டு. இப்பொழுது ஒரு அழகிய பெண்ணாக வடிவெடுத்து இங்கு வந்திருக்கின்றேன். அன்புடன் என்னை ஏற்றுக்கொள். இங்கிருந்து நாம் புறப்பட்டு வேறு இடத்திற்குச் சென்று இன்பமான வாழ்க்கையில் ஈடுபட்டு இருப்போமாக என்று அவள் கூறினாள்

அதற்கு பீமன் எனது தாயும் சகோதரர்களும் உறங்கி ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். நான் அவர்களுக்கு காவல் இருக்கின்றேன். என் தாய் மற்றும் தமையன் உத்தரவு இன்றி நான் உன்னோடு வர இயலாது. தயவு செய்து இங்கிருந்து சென்று விடு என்றான். இடும்பி செய்த காலதாமதத்தை முன்னிட்டு பசியின் விளைவாக இடும்பன் கோபத்துடன் கர்ஜித்து கொண்டு அந்த இடத்திற்கு ஓடி வந்தான். தூரத்தில் அவன் வருவதை பார்த்த பீமன் அவன் அந்த இடத்திற்கு வருவதற்கு முன்பே அவனை தூரத்திற்கு தூக்கிக்கொண்டு சென்றுவிட்டான். தன்னுடைய தாய் மற்றும் சகோதரர்களின் உறக்கத்திற்கு இடைஞ்சல் இருக்கக்கூடாது என்பது அவனுடைய நோக்கமாக இருந்தது.

சற்று தூரத்தில் பீமனுக்கும் இடும்பனுக்கும் சண்டை துவங்கியது. அப்போராட்டம் பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தது. இடும்பனும் பீமனும் சண்டையிடுவது இரண்டு யானைகள் ஒன்றோடொன்று சண்டையிடுவது போன்று இருந்தது. தூரத்தில் கிளம்பிய சண்டையின் சத்தம் தூங்கி கொண்டு இருந்தவர்களை எழுப்பி விட்டது. எழுந்தவர்கள். தங்களுக்கு அருகில் பெண் ஒருத்தி பணிவிடை பண்ணும் பாங்கில் அருகில் அமர்ந்து இருந்ததைப் பார்த்தார்கள். பீமன் ராட்சஸனோடு தூரத்தில் சண்டை போட்டுக் கொண்டிருப்பதையும் பார்த்தார்கள். என்ன நடந்தது என்று குந்திதேவி அப்பெண்ணிடம் கேட்டாள். நடந்தவைகள் அனைத்தையும் அப்பெண் குந்திதேவியிடம் கூறினாள். அல்லும் பகலும் ஓய்வில்லாமல் இருந்த பீமன் ராட்சஷனோடு சண்டை போட்டுக் கொண்டிருப்பதை பார்த்த அர்ஜுனன் அவனுக்கு ஓய்வு கொடுக்கும் பொருட்டு ராட்சஷனோடு சண்டையிட அந்த இடத்திற்கு விரைந்தான். ஆனால் அர்ஜுனன் அருகில் வருவதற்கு முன்பே பீமன் ராட்சசனை முதுகுப்பக்கம் இரண்டாக வளைத்து ஓடித்து அவன் தலையை உடலிலிருந்து திருகி எடுத்து ராட்சஷனை அழித்து விட்டான்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -33

அரக்கு மாளிகையில் எரிந்த கடும் தீயானது அதிவிரைவில் கட்டடம் முழுவதும் பரவியது. நெருப்பின் ஓசை பயங்கரமாய் இருந்தது. அது வாரணாவத மக்களை தூக்கத்திலிருந்து எழுப்பியது. நெருப்பின் சத்தத்தில் பயந்து எழுந்த மக்கள் விபத்து பகுதிக்கு ஓடி வந்தனர். அவர்களால் கொளுந்துவிட்டு எரிந்த நெருப்பை அணைக்க இயலவில்லை. ஏனெனில் அருகில் செல்ல அகழி அவர்களுக்கு இடம் தரவில்லை. குருவம்சத்து பாண்டவ ராஜகுமாரர்கள் இப்படி அழிந்து போனதற்கு காரணம் திருதராஷ்டிர அரசனும் அவனுடைய பொல்லாத மகன் துரியோதனனுமே என்று மக்கள் பேசிக்கொண்டனர். எரிந்த தீ சிறிது குறைந்த பிறகு மக்கள் நீர் ஊற்றி அனைத்தனர். அங்கு வெறும் சாம்பல் மட்டுமே எஞ்சியிருந்தது. பிறகு அங்கு பாண்டவர்களை சென்று தேடினர். ஏழு பேருடைய எலும்புக்கூடுகள் மட்டுமே இருந்தது. ரகசியமாய் பாண்டவர்கள் வெளியேறிய சுரங்கத்தின் வாயில் முழுவதும் சாம்பலும் மண்ணும் மூடி அது மறைந்தது. ஆகவே பாண்டவ சகோதரர்கள் அனைவரும் அவர்களுடைய தாயும் எரிந்து போயினர் என்று மக்கள் முடிவுக்கு வந்தார்கள்.

அரக்கு மாளிகை எரிந்த இச்செய்தி விரைவில் அஸ்தினாபுரத்தில் வசித்து வந்த கௌரவர்களிடம் சொல்லப்பட்டது. திருதராஷ்டிரன் துரியோதனன் இருவர் உள்ளத்திலும் பரம திருப்தி அடைந்தனர். பங்காளிகள் அனைவரும் மறைந்து பட்டுப் போனார்கள். இனி ஆட்சிக்கு போட்டி போடுவதற்கு யாரும் இல்லை என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டது. ஆனால் வெளியே துயரத்திற்கு ஆளானவர்கள் போன்று அவர்கள் நடித்தனர். பொதுமக்களிடம் தாங்கள் நல்லவர்களாக தென்பட வேண்டும் என்பது அவர்களுடைய எண்ணமாக இருந்தது. விதுரருக்கு அனைத்தும் தெரிந்ததாலும் பீஷ்மர் இவ்வுலக வாழ்க்கையில் பற்று இல்லாதவராக இருந்ததால் இருவரும் இச்செய்தியை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இவர்கள் இருவர் நீங்கலாக அனைத்து ராஜ குடும்பத்தார்கள் அனைவரும் துக்கத்தில் மூழ்கி கிடந்ததாக காட்டிக்கொண்டனர். அதற்கேற்றபடி ஆடம்பரமாக ஈமக்கிரியைகள் பாண்டவ சகோதரர்களுக்கும் அவருடைய அன்னை குந்தி தேவிக்கும் நிறைவேற்றப்பட்டன. மடிந்துபோன ஒவ்வொருவருடைய சிறப்பையும் தனித்தனியே சிலாகித்துப் பேசி வந்தனர். குரு வம்சத்துக்கு நிகழ்ந்த நஷ்டம் அளப்பரியது என்று துரியோதனன் பாசாங்கு பண்ணினான்.

வாரணம் பாதத்தில் அரக்கு மாளிகையில் இருந்து தப்பித்துக் கொண்ட பாண்டவர்கள் நெடுந்தூரத்துக்கு அப்பால் உள்ள கங்கை நதியின் தென்கரையில் இருந்த ஒரு காட்டில் கரையை அடைந்தனர். கார்இருள் அப்போது அகலவில்லை. காட்டின் உட்புறத்தில் நெடுந்தூரத்துக்கு அவர்கள் நடந்தனர்.. விடியற்காலையில் அவர்கள் யார் கண்ணுக்கும் தென்படாமல் காட்டின் நடுப்பகுதிக்கு வந்துவிட்டனர். குந்திதேவி மிகவும் களைத்துப் போய் இருந்தாள். தன்னால் ஓர் அடிகூட எடுத்து வைக்க இயலாது என்றும் தாகத்தால் நாக்கு உலர்ந்து போயிற்று தனக்கு தண்ணீர் வேண்டும் என்றும் கேட்டாள். தாயையும் தன் உடன் பிறந்தவர்களையும் அருகில் இருந்த ஒரு ஆலமரத்தின் அடியில் ஓய்வு எடுக்கும்படி அமரச் செய்து விட்டு அருகில் எங்காவது தண்ணீர் கிடைக்குமா என்று தேடி பீமன் புறப்பட்டு போனான்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -32

துரியோதனன் மற்றும் அவனுடைய மந்திரி புரோச்சனன் இவர்களது கொடிய சதித்திட்டத்தை விதுரர் தெளிவாக அறிந்தார். எனவே சுரங்கம் அமைப்பதில் சிறந்த பொறியாளனான கனகன் என்பவன் ஒருவனே வாரணவதத்திற்கு அனுப்பி வைத்தார். கனகன் யுதிஷ்டிரனை தனியாக சந்தித்து விதுரர் தன்னை சுரங்கம் அமைக்க அனுப்பி வைத்ததாக சொன்னான். அந்த அரக்கு மாளிகையில் இருந்து அருகில் இருந்த வனத்திற்கு போகும் படியான ரகசிய சுரங்கம் ஒன்றை கட்டுவதற்கான திட்டத்தைப் பற்றி யுதிஷ்டிரனிடம் பேசினான். இருவரும் திட்டம் ஒன்றை திட்டினார்கள்.

அந்த திட்டத்தின்படி புரோச்சனனிடம் யுதிஷ்டிரன் இந்த மாளிகையிலேயே தாங்கள் நிரந்தரமாக வசித்து இருக்கப்போவதாகவும் ஆகையால் பாதுகாப்பிற்காக அகழியை வலிமைப்படுத்த வேண்டும் என்றும் இங்கு இருக்கும் காலம் முழுவதும் புரோச்சனன் அவர்களுக்கு நிர்வாக காரியதர்சியாக இங்கேயே இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துக் கொண்டார்கள். இவர்களது திட்டப்படி கனகன் மாளிகையை சுற்றி இருந்த அகழியை திருத்தி அமைக்கும் வேலையில் நியமிக்கப்பட்டான். புரோச்சனன் அதற்கு ஆட்சேபம் எதுவும் செய்யவில்லை. காலையிலிருந்து இரவு வரையில் காட்டில் சென்று வேட்டையாடுவதில் பாண்டவர்கள் ஈடுபட்டார்கள். புரோச்சனனையும் அவர்களோடு நாள்தோறும் அழைத்துச்சென்றனர். இவர்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் வேறு யாருக்கும் தெரியாதபடி அதிவிரைவில் சுரங்கம் ஒன்று அமைக்கப்பட்டது.

அரக்கு மாளிகைக்கு தீ மூட்டும் நாள் ஒன்றை துரியோதனனும் புரோச்சனனும் குறித்து வைத்திருந்தனர். அந்த நாளும் வந்தது. அந்நாளில் குந்திதேவி ஊரில் இருப்பவர்கள் அனைவருக்கும் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தாள். விருந்திற்கு வந்தவர்களில் வேடுவச்சி ஒருத்தியும் அவளின் ஐந்து புதல்வர்களும் வந்திருந்தனர். அன்னமும் பானமும் அனைவருக்கும் தாராளமாக வழங்கப்பட்டது. உணவை உண்டு முடித்தபின் வேடுவச்சி மற்றும் அவளது ஐந்து மைந்தர்களை தவிர அனைவரும் சென்று விட்டனர். விதிவசத்தால் உண்ட மயக்கத்தில் வேடுவச்சியும் அவர்களது புதல்வர்களும் அங்கேயே தங்கி விட்டனர். நள்ளிரவு வந்தது. புரோச்சனனும் அயர்ந்து தூங்கி போனான்.

குந்தி தேவியையும் மற்ற சகோதரர்களையும் சுரங்கத்தின் வழியாக வெளியே போகும்படி பீமன் கூறினான். அவர்களும் அவ்வாறே சென்றனர். பிறகு அரக்கு மாளிகையின் அனைத்து பகுதிக்கும் தீ மூட்டிவிட்டு பீமனும் அச்சுரங்கத்தின் வழியாக வெளியே வந்தான். அரக்கு மாளிகை முற்றிலும் எரிந்த பின்பு சுரங்கத்தின் அமைப்பின்படி இவர்கள் வெளியேறிய நுழைவுப்பகுதியின் வாயிலை மூடியது. பாண்டவர்களும் சுரங்கத்தின் மறுபகுதியை வந்தடைந்தனர். பின் இவர்கள் வெளியே வந்த வாயில் இருக்கும் இடம் தெரியாமல் அதனை மூடிவிட்டனர். அடுத்தபடியாக காட்டில் இருந்த நதிக்கரைக்கு வந்தனர். அங்கு விதுரரின் ஏற்பாட்டின்படி அவர்களுக்காக படகு ஒன்று இருந்தது. நதியில் நெடுந்தூரத்துக்கு அப்பால் இருக்கும் அடையாளம் தெரியாத ஒரு நாட்டிற்கு அவர்கள் வந்து சேர்த்தனர்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -31

பாண்டவர்கள் தங்கள் ஊருக்கு விஜயம் செய்ததை குறித்து வாரணவதத்தில் வசிக்கும் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். பாண்டவர்களுக்கு ஆர்வத்தோடு கூடிய வரவேற்பு செய்தார்கள். முக்கியமான பிரமுகர்கள் பலருடைய இல்லங்களில் விருந்துக்கு அவர்கள் அழைக்கப்பட்டனர். அவைகளை எல்லாம் நிறைவேற்றி வைத்து விட்டு ஏற்கனவே அவ்வூரில் இருந்த ராஜகுடும்ப விடுதியில் அவர்கள் தங்கியிருந்தார்கள். அதற்கிடையில் ஏற்கனவே கட்டப்பட்ட அரக்கு மாளிகையைச் சுற்றிலும் அகழி ஒன்று வெட்டப்பட்டது. உள்ளே வசிப்பவர்களின் பாதுகாப்புக்காக என்று வெளியில் காட்டிக் கொள்ள நல்ல திட்டம் அது. ஆனால் உள்ளே அகப்பட்டுக் கொண்டவர்கள் உயிரோடு வெளியே தப்பித்து வர முடியாத படி அது கட்டப்பட்டிருந்தது. அதில் வந்து வசிக்கும்படி ராஜகுமாரர்களை மந்திரி புரோச்சனன் வரவேற்றான். மாளிகை வசதி மிக வாய்க்கப்பெற்று இருந்தாலும் புதிய கட்டிடத்திற்கு வந்த உடனே யுதிஷ்டிரன் மற்றும் பீமன் இருவருக்கும் இந்த மாளிகையில் ஆபத்து மிக அமைந்திருக்கிறது என்று சந்தேகப்பட்டார்கள். அரக்கு மெழுகு குங்கிலியம் போன்ற விரைவில் தீப்பற்றி சுடர்விட்டு எரியும் பொருளைக் கொண்டு அம்மாளிகை கட்டப்பட்டு இருந்ததை அவர்கள் கவனித்தார்கள். அவ்வீட்டில் உள்ள வாசனையும் அதற்கு அறிகுறியாக இருந்தது. பாண்டவர்களாகிய தங்களுக்கென்று அமைக்கப்பட்ட இந்த பொறி என்று உணர்ந்தார்கள்.

பீமன் தனது சகோதரர்களிடம் துரியோதனன் எனக்கு விஷம் கலந்த உணவை கொடுத்து நீரில் மூழ்கவைத்து கொல்ல முயன்றான். தெய்வாதீனமாக நச்சுப்பாம்புகள் கடித்ததில் விஷம் முறிந்து மரணத்திலிருந்து நான் தப்பித்துக் கொண்டேன். இப்பொழுது நாம் அனைவரையும் நெருப்புக்கு இறையாகும் திட்டமொன்றை துரியோதனன் வகுத்து வைத்திருக்கின்றான். சித்தப்பா விதுரருடைய எச்சரிக்கை இங்கே உண்மை ஆகின்றது. இப்பொழுதே நாம் பழைய அரச விடுதிக்கு திரும்பி போய்விடுவோம். பிறகு அஸ்தினாபுரத்திக்கு சென்று துரியோதனனிடமிருந்து ராஜ்ஜியத்தை பறிமுதல் செய்து பெற்றுக் கொள்வோம் என்றான்.

அதற்கு யுதிஷ்டிரன் துரியோதனனுடைய சூழ்ச்சி நமக்கு தெளிவாக விளங்குகின்றது. ஆனால் இப்பொழுதே சூழ்ச்சி செய்து அவர்கள் நம்மை கொன்று விட்டால் கொலை பாதகன் என்னும் பழி துரியோதனனுக்கு வந்து சேரும். ஆகையால் சிறிது நாட்கள் கழித்து அவன் தன் திட்டத்தை செயல்படுத்துவான். அதற்குள்ளாக அவனுடைய சூழ்ச்சியை தோற்க்கடிக்கும் திட்டம் ஒன்றை நாம் வகுப்போம். கேடு ஏதும் இன்றி நாம் தப்பித்துக்கொள்வோம். இந்த மாளிகையினுள் நாம் கொளுத்தி கொல்லப்பட்டோம் என்னும் நம்பிக்கையை துரியோதனனுக்கு உண்டாக்க வேண்டும். நாம் தப்பித்துக் கொண்டு வெளியே தூரத்தில் உள்ள பிரதேசம் ஒன்றில் மாறு வேஷம் பூண்டு நாம் வாழ்ந்திருப்போம். நெருக்கடியில் நமக்கு உதவிபுரியும் நண்பர்களை நாம் தேடிக் கொள்வோம். அதன் பிறகு நாம் நம்முடைய பங்காளிகளான கௌரவர்களுக்கு நாம் உயிருடன் வாழ்ந்து கொண்டு இருப்பதை வெளிப்படுத்துவோம் என்றான்.

இத்திட்டத்தை பீமன் ஆமோதித்தான். ஆபத்தான மாளிகையில் எச்சரிக்கையாக வாழ்ந்திருக்க சகோதரர்கள் தீர்மானித்தார்கள். அந்த ராஜகுமாரர்களுக்கு ஏற்ற வாழ்க்கை வசதிகள் அனைத்தையும் செய்து வைப்பது போன்று பாசாங்கு பண்ணிய அமைச்சர் புரோசனன் உண்மையில் அவர்கள் தப்பித்து ஓடாத படி காவல் காத்திருந்தான். சகோதரர்களும் அவனிடத்தில் பூரண நம்பிக்கை வைத்திருப்பது போன்று பாசாங்குடன் நடந்துகொண்டார்கள்.