ஒடிசா மாநிலத்தில் புவனேஸ்வர் பகுதியில் உள்ள பரசுராமேஸ்வரர் கோவில் முருகர்.

ஒடிசா மாநிலத்தில் புவனேஸ்வர் பகுதியில் உள்ள பரசுராமேஸ்வரர் கோவில் முருகர்.
முருகன் 11 தலை 22 கைகளுடன் அருள்மிகு சுவாமிநாத சுவாமி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இராமநாதபுரம் குண்டுக்கரை பகுதியில் இக்கோவில் உள்ளது. சூரபத்மனை வதம் செய்வதற்கு முன்பு முருகன் இத்தலத்துக்கு வந்த முருகனுக்கு 11 தலை 22 கைகள் இருந்ததாக தல வரலாறு சொல்கிறது. அதே வடிவில் விஸ்வரூபம் எடுத்த நிலையில் முருகன் தரிசனம் தருகிறார். மற்ற கோயில்களில் எல்லாம் பிரணவ மந்திரத்தின் பொருள் கூற முருகன் சிவனின் மடியில் அமர்ந்திருப்பது போல சிலை இருக்கும். ஆனால் இத்தலத்தில் தகப்பன் சுவாமியான முருகன் குன்றின் மீது அமர்ந்து பிரணவ மந்திரத்திற்கு பொருள் சொல்ல சிவன் அதை நின்று கேட்கும் நிலையில் அமைந்துள்ளது. முருகனே சிவன் சிவனே முருகன். இருவரும் ஒருவரின்றி வேறில்லை என்பதற்கேற்ப இங்கு தகப்பன் சுவாமி குன்றின் மீது அமர்ந்து அருள்பாலிப்பது மிகச்சிறப்பான அம்சமாகும். கோயிலுக்குள் 18 திருக்கரத்துடன் கூடிய 7 அடி உயர துர்க்கை சிலையும் உள்ளது.
300 ஆண்டுகளுக்கு முன் ராமநாதபுரத்தில் வாழ்ந்த பாஸ்கர சேதுபதி குண்டுக்கரை முருகன் கோயிலுக்கு தினமும் வந்து வழிபாடு செய்வார். ஒருமுறை இவர் சுவாமிமலை சென்று தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்த போது இவரது கனவில் சுவாமிமலை முருகன் தோன்றி குண்டுக்கரை முருகன் கோயிலில் உள்ள பழைய முருகன் சிலையை எடுத்து விட்டு புதிதாக முருகனை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால் உனக்கும் உனது மக்களுக்கும் நன்மை உண்டாகும் என கூறி மறைந்தார். ராமநாதபுரம் வந்த பாஸ்கர சேதுபதியும் கனவில் முருகன் கூறியபடி குண்டுக்கரை சென்று அந்த கோயிலிலிருந்த பழைய முருகன் சிலையை அகற்றி விட்டு புதிதாக முருகன் சிலை பிரதிஷ்டை செய்தார். சுவாமி மலையானின் பெயரான சுவாமிநாதன் என்று பெயர் சூட்டினார்.
தமிழ் என்றால் முருகன். முருகன் என்றால் தமிழ். இரண்டையும் பிரிக்க முடியாத அளவிற்கு இணைந்தே இருக்கும். உதாரணமாக 12 உயிரெழுத்து என்பது முருகனின் 12 தோள்களை குறிக்கும். 18 மெய்யெழுத்து என்பது முருகனின் 18 கண்கள் (முருகன் சிவனது நெற்றிப் பொறியிலிருந்து தோன்றியவர் என்பதால் இவரது ஒவ்வொரு முகத்திலும் இவருக்கும் நெற்றிக்கண் உண்டு) 6 இன எழுத்து என்பது 6 முகங்களை குறிக்கும். ஃ என்ற ஆயுத எழுத்து வேலை குறிக்கும். இந்த வேலை வணங்குவதையே வேலையாக கொண்டால் வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.
வில்வாரணி என்னும் ஊரில் நட்சத்திரகிரி நட்சத்திரக் குன்று என்று அழைக்கப்படும் ஊரில் மலை மேல் சமேத சிவசுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளது. சிவன் தான் லிங்க வடிவில் காட்சியளிப்பார். ஆனால் சிவனும் முருகனும் ஒன்றே என்பதை நிரூபிக்கும் வகையில் இங்கு லிங்க வடிவ சுப்பிரமணியராக அருள்பாலிக்கிறார். இங்கு முருகர் வள்ளி தெய்வானையுடன் வீற்றிருக்கிறார். இத்திருத்தல கருவறையில் நாகாபரணத்துடன் முருகரும் சுயம்பு வடிவான சிவபெருமானும் ஒன்றாக காட்சி தருகிறார்கள். இக்கோயில் சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. காஞ்சி புராணம் மற்றும் அருணாச்சல புராணத்தில் இக்கோவிலைப் பற்றிய புராண வரலாறு உள்ளது. 27 நட்சத்திரங்களும் சிவ சர்பமும் முருகப் பெருமானை வழிபடுகிறார்கள். வள்ளி தெய்வானையுடன் தம்பதி சமேதரராக முருகப் பெருமான் அமர்ந்து நித்யம் சிவபூஜை செய்கிறார். 27 நட்சத்திரங்களுக்கும் பரிகார ஸ்தலமாகவும் இக்கோயில் அமைந்திருக்கிறது. எனவே நட்சத்திர கோயில் என்றும் அழைக்கப் படுகிறது. மலை மீது உள்ள இக்கோவிலுக்கு செல்ல படிக்கட்டுகள் 300 உள்ளது.
வேல் விளையாட்டில் வல்லவனான வேலவன் வாழைப் பந்தலில் இருந்து எய்த அம்பு பருவத மலை மீது பாய்ந்தது. அப்போது அங்கு தவமிருந்த சப்த ரிஷிகளின் தலைகள் துண்டிக்கப்பட்டன. அதனால் பெருக்கெடுத்த உதிரம் ஆறாக பெருக்கெடு த்து மலையில் இருந்து வழிந்தோடியது. உதிரம் பெருக்கெடுத்து ஆறாக பாய்ந்ததால் இன்றைய செய்யாற்றுக்கு சிவப்பு நதி செய்நதி எனும் பெயரும் உண்டு. சப்த ரிஷிகளின் தலைகளை கொய்ததால் முருகப்பெருமானுக்கு பிரம்ம கத்திதோஷம் பிடித்தது. எனவே செய்நதியின் வடகரையில் ஏழு இடங்களில் கரை கண்டீஸ்வரரையும் இடக்கரையில் ஏழு இடங்களில் கைலாச நாதரையும் பிரதிஷ்டை செய்து ஒரு மண்டலம் பூஜித்தால் முருகப்பெருமானுக்கு தோஷம் நிவர்த்தியாகும் என பார்வதிதேவி உபதேசித்தார். அதே போல் முருகப்பெருமான் செய்நதியின் வலது கரையில் வில்வாரணி மலையில் குடிகொண்டு காஞ்சி கடலாடி மாம்பாக்கம் மாதிமங்கலம் எலத்தூர் குருவிமலை பூண்டி ஆகிய இடங்களில் கரைகண்டீஸ்வரரையும் இடதுகரையில் தேவகிரிமலையில் குடிகொண்டு வாசுதேவன்பட்டு ஓரந்தவாடி நார்த்தாம்பூண்டி நெல்லிமேடு மோட்டுப்பாளையம் பழங்கோயில் மண்டகொளத்தூர் ஆகிய இடங்களில் கைலாசநாதரையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இன்றளவும் இந்த 14 இடங்களிலும் முருகன் வழிபட்ட சிவாலயங்கள் அமைந்திருக்கின்றன.
முருகப்பெருமான் வழிபட்ட இந்த 14 சிவாலயங்களையும் இரண்டு சிவாச்சாரியார்கள் வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இவ்விருவரும் ஆடிக்கிருத்திகை நாளில் திருத்தணி சென்று முருகப்பெருமானை வழிபடுவது வழக்கம். ஒரு வருடம் ஆடிக் கிருத்திகைக்கு திருத்தணிக்கு செல்ல இயலவில்லை. அதனால் மனம் வருந்தினர். இருவரின் கனவிலும் தோன்றிய முருகன் திருத்தணிக்கு செல்லவில்லை என வருந்த வேண்டாம் நான் நட்சத்திரகிரி எனும் குன்றின் நடுமலையில் சுயம்பு ரூபமாக சிவசுப்ரமணிய ஐக்கியத்தில் குடியிருக்கிறேன். சூரியன் சந்திரன் உள்ளவரை 27 நட்சத்திரங்களும் நாகமும் நித்தமும் என்னை பூஜிக்கின்றன. எனவே நட்சத்திரகிரி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் சந்திரபுஷ்கரணி சுனையில் இருந்து நாகம் உங்களுக்கு வழிகாட்ட என்னை வந்து சேருங்கள் என இருவர் கனவிலும் முருகர் அருள்புரிந்தார். திடுக்கிட்டு விழித்த சிவாச்சாரியார்கள் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் புறப்பட்டு நட்சத்திரகிரியில் நாகம் வழிகாட்டிய இடத்துக்கு சென்றனர். அங்கே முருகன் குறிப்பிட்டபடி லிங்கம் ஒன்று கிடந்தது. அதை ஒரு நாகம் பாதுகாத்துக் கொண்டிருந்தது. குருக்களைக் கண்டதும் நாகம் லிங்கத்திற்கு குடைபிடித்த நிலையில் சிலையாகி விட்டது. குருக்கள் இருவரும் சிறு கொட்டகை அமைத்து லிங்கத்தை முருகனாக கருதி வழிபட்டனர். காலப்போக்கில் வள்ளி தெய்வானை சமேத முருகன் சிலையும் வைக்கப்பட்டது. நாகம் வடிவெடுத்து சுப்பிரமணியருக்கு நிழல் தந்ததால் நாகத்தின் கீழ் சுப்பிரமணியர் இருப்பது போல் சிலை வடிக்கப்பட்டது. திருவண்ணாமலையில் இருந்து கலசப்பாக்கம் வழியாக சென்றால் 34 கி.மீ. தூரத்தில் இக்கோவில் உள்ளது.
முருகனை வணங்கும் போது அரோகரா என்ற சொல்லுக்கு விளக்கம் என்ன?
அரோகரன் என்பது முருகனின் தூய தமிழ்ப் பெயராகும். அரன் + ஓங்கரன் = அ(ர+ஓ)கரன் = அரோகரன். ஓங்கரனில் இருக்கின்ற “ங்” உச்சரிப்பே நாளடைவில் மழுவி ஓகரன் ஆகிவிட்டது. தமிழ் இலக்கணத்தின்படி ன் எழுத்து இருந்தால் அது விலகி ஆ சேரும். உதாரணமாக முருகன் கந்தன் என்ற அழைக்கும் போது முருகன் என்பதை முருகா என்றும் கந்தன் என்பதை கந்தா என்றும் அழைக்கிறோம். அதுபோலவே அரோகரன் என்பதை அரோகரா என்றும் அழைக்கிறோம்.
அரோகரன் என்றால் பொருள் என்ன?
அரன் என்றால் = சிவன்
ஓங்கரன் = ஓங்காரத்தின் உருவமாக இருப்பவன்
அரோகரன் என்றால் சிவனிடமிருந்து வெளிவந்த ஓங்காரத்தின் வடிவமானவன் என்று பொருள்.