சோமஸ்கந்த மூர்த்தி

அரிய பழங்காலச் சிலை. அந்தச் சிற்பத்தில் இருக்கும் தன் சிறு குழந்தை கந்தனைப் பார்த்துக் கொள்ளும் அன்னை பார்வதி. சிவனின் உடையும் பார்வதியின் புடவையும் அலங்காரம் மிகவும் அருமை. இடம்: காஞ்சிபுரம் அருள்மிகு ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் சுவாமி கோயில்.

திருசெந்தூர் தலபுராணம்

திருச்செந்தூர் தல புராணம் புத்தகம் PDF வடிவில் டவுண்லோடு செய்து கொள்ளும் வசதி இந்த பக்கத்தில் உள்ளது.

வேடுவ கோலத்தில் முருகன்

நமது சங்க இலக்கியம் சொல்லும் வடிவோடு பொருந்தக் கூடிய முருகனின் சிற்பம் ஒடிசாவில் உள்ளது. கொற்றவை சிறுவ பழையோள் குழவி என திருமுருகாற்றுப்படையில் சொல்லப்பட்ட கொற்றவையின் மகனாக குறிப்பிடப்படும் வடிவம் ஒடிசாவில் உள்ளது. துர்க்கை என ஆகிவிட்ட கொற்றவை ஆதி குடிகளின் தெய்வமாய் திகழ்ந்து தற்போது துர்க்கை வடிவமாகி விட்டாள். அவளின் மைந்தன் முருகனும் அவ்வாறே. இந்த தொன்ம தொடர்ச்சி பழங்குடிகளின் பண்பாட்டில் இருப்பது சான்றாக இன்றும் தொடர்ந்து வருகிறது. இடம் சித்தேஷவர் கோவில். புவனேஷ்வர். ஒடிசா மாநிலம்.

கார்த்திகேயன்

ஒடிசாவின் கட்டாக் கலிங்கன் கட்டிடக்கலையில் லலித்கிரியின் கைவினைஞர்களால் காதி கல்லில் செதுக்கப்பட்ட கார்த்திகேயனின் சிற்பம். அவருடன் மயிலும் நாகமும் உள்ளது. இடம் பத்ரேஸ்வர மஹாதேவ் கோவில் மெஹங்கா ஒடிசா மாநிலம்.

அருள்மிகு சுருளிவேலப்பர் திருக்கோயில்

தேனி மாவட்டத்தில் உள்ள சுருளியில் இக்கோவில் உள்ளது. பொதிகை மலையும் சதுரகிரி மலையும் இணைந்த மேற்குத் தொடர்ச்சி மலைப்பிரிவுகளில் சுருளி மலை அமைந்துள்ளது. புராண பெயர் சுருதிமலை. மூலவர் சுருளிவேலப்பர் மற்றும் சுருளி ஆண்டவர். உற்சவர் வேலப்பர். தீர்த்தம் சுரபி தீர்த்தம் சுருளி தீர்த்தம். இத்தலத்தில் இனிய சுருதியுடன் அருவி கொட்டுவதால் சுருதி எனப்பட்ட தீர்த்தம் சுருளி என மருவியது. முருகனுக்கும் சுருளி வேலப்பர் என்ற பெயர் ஏற்பட்டது. ஆண்டிக் கோலத்தில் இருப்பதால் இவர் சுருளியாண்டி என்றும் அழைக்கப்படுகிறார். சுருளி வேலப்பர் மலையில் இயற்கையாகத் தோன்றிய குடவரை சன்னதியில் காட்சி தருகிறார். அருகில் விநாயகர் மகாலிங்கம் சந்தான கிருஷ்ணர் வீரபாகு ராமபிரான் லட்சுமணன் உள்ளனர். முருகன் குடிகொண்டதால் நெடுவேள்குன்றம் என்றழைக்கப்படும் இம்மலையில் அனைத்து தெய்வங்களும் வசிக்கின்றனர் என்பதலால் அனைவருக்கும் தனி சிலைகள் உள்ளன. இங்கு பூதநாராயணப்பெருமாள் கோயிலும் இருக்கிறது. பெருமாள் சன்னதிக்குள் சிவலிங்கம் இருக்கிறது. இதனால் இங்கு விபூதி குங்குமமும் தருகிறார்கள். சடாரி ஆசிர்வாதமும் செய்கிறார்கள். உச்சிக் கால பூஜையின் போது துளசி தீர்த்தம் தருகின்றனர். இக்கோயிலில் பெருமாளுக்கு பரிவார மூர்த்தியாக நரசிம்மரும் சிவனுக்கு தட்சிணாமூர்த்தியும் இருக்கின்றனர். இவர் இடது கையில் சின்முத்திரையுடன் காட்சியளிக்கிறார்.

சுருளியாண்டவர் சந்நதியில் கிழக்கு பாகத்தில் அமைந்துள்ள இமயகிரி சித்தர் குகை மிகவும் பிரசித்தி பெற்றது. இமயமலையில் வாழ்ந்த சித்தர் ஒருவர் சுருளி மலையில் தங்கி தவமியற்றி சிவபெருமான் தரிசனம் பெற்றார். இந்த குகையில் சிவலிங்கம் ஒன்றைப் பிரதிஷ்டை செய்துள்ளார். இது இமயகிரி சித்தர் குகை என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஒருவர் மட்டும் படுத்துக் கொண்டு போகக் கூடிய இந்தக் குகையில் சிறிது தூரம் தவழ்ந்து சென்றதுமே குகையின் உள்ளே பெரிய அறை போன்ற அமைப்பு உள்ளது. சுருளி ஆண்டவர் சன்னதியின் மேற்பாகத்தில் மரத்தின் வேர்களைப் பிடித்து மேலே சென்றால் அங்கு ஆகாசகங்கை வரும் வழியில் பல குகைகளைக் காணலாம். கோயில் உள்ள மலையில் கைலாச குகை என்ற ஒரு குகை உள்ளது. இந்த குகையில் சிவபெருமான் அகத்தியருக்கு காட்சி கொடுத்தபடியால் இந்த குகை கையிலாச குகை என்று அழைக்கப்படுகிறது. சிவனின் திருமணத்தின் போது அனைவரும் இமயமலைக்குச் சென்று விட வடக்கு உயர்ந்து தெற்கு தாழ்ந்தது. இதனால் உலகு சம நிலையை இழக்க சிவன் தென் பொதிகை எனும் இம்மலைக்கு அகத்தியரை அனுப்பி உலகை சமப்படுத்தினார். பின் இங்குள்ள குகையில் அகத்தியருக்கு மணக் கோலத்தில் சிவன் காட்சியளித்தார். இக்குகை தவிர விபூதிக் குகை சர்ப்பக் குகை பாட்டையா குகை கிருஷ்ணன் குகை கன்னிமார் குகை என பல குகைகள் தனித்தனி தீர்த்தங்களுடன் உள்ளன. சுருளி மலையைச் சுற்றி சுமார் 225 குகைகள் உள்ளது. இவற்றில் ரிஷிகள் தேவர்கள் சித்த புருஷர்கள் ஆகியோர் தவமிருந்துள்ளனர். சில குகைகள் பொதுமக்களின் பார்வையில் தென்படக்கூடியது. பிற குகைகள் அடர் வனத்திற்கு உள்ளே யாரும் காணாத படி அமைந்துள்ளது.

கோவில் அருகில் உள்ள மாமரத்தின் அடியில் இருந்து ஊற்று நீர் பொங்கி வந்து கொண்டே இருக்கிறது. 48 நாட்கள் இந்நீரில் கிடக்கும் இலை தழைகள் பாறை போல மாறுகிறது. பாறை மீது நீர் விழுவதால் ஏற்படும் பாசை வழுக்குத் தன்மையின்றி இருப்பது வியப்பிற்குரியது. இங்குள்ள மரம் ஒன்றின் மீது தொடர்ந்து நீர் விழுந்ததில் பாறையாக மாறி காட்சியளிக்கிறது. கோயில் வளாகத்தில் விபூதிப்பாறை உள்ளது. இந்த பாறையில் தீர்த்தம் பட்டு ஈரமான மணல் துகள்கள் காய்ந்த பின் வெண்ணிறத்தில் விபூதியாக மாறுகிறது. இந்த விபூதியையே பிரசாதமாக தருகிறார்கள். ஓம்கார வடிவில் உள்ள இம்மலையில் கன்னிமார்கள் நடனமாடிய ரேகைகளுடன் ஒரு பாறை உள்ளது.

மகாவிஷ்ணுவின் மகளான வள்ளியை மலையரசனான நம்பிராஜன் வளர்த்தார். அவளை முருகப்பெருமான் மணந்து கொண்டார். திருமண சீராக நம்பிராஜன் தனது ஆட்சிக்குட்பட்ட மலைப் பிரதேசங்களைக் கொடுத்தார். அதில் இந்த மலேயும் ஒன்று. இம்மலையில் முருகப்பெருமான் குடிகொண்டார். ஒரு சமயம் சனி பகவான் தன் சஞ்சாரப்படி தேவர்களைப் பிடிக்க வேண்டியிருந்தது. தேவர்கள் தங்களைக் காத்தருளும்படி இங்குள்ள முருகனை தஞ்சமடைந்தனர். சுவாமி அவர்களுக்கு அடைக்கலம் தந்து காத்தருளினார்.

ராவணன் தனது தவத்தால் அண்டசராசரங்கள் அனைத்தையும் ஆளும்படி வரம் பெற்று தேவர்களை கொடுமைப்படுத்தினான். அவனுக்கு முடிவு கட்ட எண்ணிய தேவர்கள் ரிஷிகள் சித்தர்கள் ஆகியோர் இங்குள்ள கைலாசநாதர் குகையில் மகாவிஷ்ணு தலைமையில் ஆலோசனை செய்தனர். அவர்களை அழிக்க ராவணேஸ்வரன் தனது அரக்கர் படையுடன் இங்கு வந்தான். தேவர்களைக் காக்க மகாவிஷ்ணு பூத சொரூபத்துடன் பஞ்ச பூதங்களாக விண்ணுக்கும் மண்ணுக்குமாக நின்றார். அவரது கோலத்தை கண்டு பயந்த ராவனேஸ்வரன் தன் அரக்கர் படையுடன் திரும்பி ஓடினான். இவ்வாறு தேவர்கள் ரிஷிகள் சித்தர்கள் தவம் புரிந்த கைலாசகுகையின் மேல் பகுதியில் சுருளிவேலப்பர் அருள் புரிகிறார். திருமுருகாற்றுப்படையில் மலைகள் அனைத்தும் முருகனுக்கே சொந்தம் எனக்குறிப்பிடும் நக்கீரர் மலைக் கோயில்களை குன்றுதோறாடல் என்கிறார். இத்தலமும் குன்றுதோறாடல் என்றே அழைக்கப்படுகிறது. ஆடி அமாவாசையன்று சுவாமிக்கு விசேஷ பூஜை நடக்கும்.

விராலி மலை

விராலிமலை முருகன் கோயில் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. இம்மலையின் புராண பெயர் சொர்ணவிராலியங்கிரி. மூலவர் சண்முகநாதர் ஆறுமுகம். முருகர் மயில் மீது வீற்றிருக்கிறார். இந்த மயில் தெற்கு பார்த்திருப்பதால் இதற்கு அசுர மயில் என்று பெயர். அம்மன் வள்ளி மற்றும் தெய்வானை. தலமரம் விராலிச்செடி காசிவில்வம். தீர்த்தம் சரவணப் பொய்கை நாக தீர்த்தம். நாகதீர்த்தம் நடுவே நாகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. முருகரின் வாகனமான மயில்கள் அதிகமாக நடமாடும் கோயில் இது. இடும்பன் சன்னதி பாறையில் குடைந்து அமைக்கப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதி அமைந்துள்ளது.

வயலூரில் ஓம் என்று நாவில் எழுதி திருப்புகழ் பாட வைத்த முருகப்பெருமான் அவரை விராலிமலை இருக்குமிடத்திற்கு வர கட்டளையிட்டார். விராலி மலைக்கு வழி தெரியாமல் தவித்த அருணகிரிநாதருக்கு விராலிமலைக்கு செல்லும் வழியை காட்ட முருகன் வேடன் வேடம் பூண்டு வேங்கையைத் துரத்தி வந்து அருணகிரிநாதருக்கு வழிகாட்டி தற்போது இக்கோவில் இருக்குமிடத்தில் உள்ள குரா மரத்தினுள் மறைந்து விட்டார். இந்த விராலிமலைத் தலத்தில்தான் அருணகிரிநாதருக்கு முருகர் அஷ்டமாசித்தி என்னும் கூடு விட்டு கூடு பாயும் வித்தையை வழங்கினார். திருப்புகழில் 18 தடவை இத்திருத்தலத்தைக் குறித்து அருணகிரிநாதர் பாடியுள்ளார். இத்தலத்தில் பலகாலம் தங்கியிருந்த அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தன் திருப்புகழில் உருகிப்பாடியுள்ளது இத்தலத்தின் பெருமைக்கு சான்று.

சிவன் பிரம்மாவின் ஆணவத்தை அடக்குவதற்காக அவரது ஒரு தலையைக் கொய்தார். அப்போது நாரதர் தன் தந்தை எந்தத் தவறும் செய்யவில்லை என்று சிவனிடம் வாதிட்டார். இதனால் அவர் சிவநிந்தனைக்கு ஆளானார். இதனால் அவரது தம்புரா வளைந்தது. சிவநிந்தையை போக்குவதற்கு இத்தலத்தில் முருகப் பெருமானை வணங்கி விமோசனம் பெற்றார். இதன் அடிப்படையில் இங்கு நாரதர் உற்சவராக இருக்கிறார். இவரது தம்புரா இப்போதும் வளைந்து காணப்படுகிறது. கோயில் திருவிழாவின் போது சுவாமி முன்பாக இவரும் உலா வருகிறார்.

குமாரவாடி என்ற ஜமீனில் நிர்வாகியாகப் பணி புரிந்தவர் கருப்பமுத்து பிள்ளை. வெள்ளிக் கிழமை தோறும் முருகப்பெருமானை தரிசித்த பின்பே உண்ணும் வழக்கம் உடையவர். இவர் தீவிர முருக பக்தர். இக்கோவிலில் நடந்த திருப்பணியில் கருப்பமுத்து ஈடுபட்டார். ஒருநாள் வெள்ளிக் கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்தது. அருகில் இருந்த நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆற்றைக் கடக்க முடியவில்லை. எப்படியாவது முருகனை தரிசிக்க வேண்டும் என்று முருகனைப் பிரார்த்தித்தார். குளிர் தாங்காமல் சுருட்டு ஒன்றை பற்ற வைத்தார். அப்போது அவர் அருகே ஒருவர் நடுங்கியபடி வந்து நின்றார். அவர் மீது இரக்கப்பட்ட கருப்பமுத்து உங்களுக்கும் சுருட்டு வேண்டுமா? எனக் கேட்டார். வந்தவரும் சுருட்டை வாங்கிக் கொண்டார். அந்த நபர் கருப்பமுத்துவுக்கு ஆற்றைக் கடக்க உதவி செய்தார். இருவருமாக ஆற்றைக் கடந்து சென்று கொண்டிருக்கும் போது அவர் மறைந்து விட்டார். இதனைக் கண்டு வியப்புற்ற கருப்பமுத்து கோயிலை அடைந்ததும் அங்கு முருகனுக்கு முன்பாக தான் கொடுத்த சுருட்டு இருப்பதைக் கண்டு தம்மிடம் சுருட்டு பெற்றவர் முருகனே என உணர்ந்தார். கருப்பமுத்து அங்கிருந்த அனைவரிடமும் நடந்ததைக்கூற ஆச்சரியமடைந்தனர். அன்று முதல் மாலை வேளை பூஜையில் முருகனுக்கு சுருட்டு நைவேத்யமாக படைக்கும் பழக்கம் உருவானது.

புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர் ஒரு முறை விராலிமலை வந்தார். சுருட்டை நிவேதனமாக வைப்பது கண்டு திடுக்கிட்ட மன்னர் இனி சுருட்டை நிவேதனப் பொருளாக வைக்கக்கூடாது என்று உத்தரவிட்டு சென்றுவிட்டார். அன்று மாலை அரண்மனை திரும்பிய மன்னருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. எந்த மருத்துவமும் பலன் தரவில்லை. அன்று இரவு முருகர் அவர் கனவில் தோன்றி எனக்கு சுருட்டு படைப்பது மற்றவருக்கு உதவி செய்யும் மனப்பான்மை வளர வேண்டும். பிறர் துன்பம் கண்டு அன்பை வளர்க்க வேண்டும் என்பதற்காகத்தானே தவிர புகைக்கும் பழக்கத்திற்கு முக்கியத்துவம் தருவதற்காக அல்ல. துன்பப்படும் ஒருவனுக்கு ஏதோ ஒரு வழியில் உதவி செய்ய வேண்டும் என என் பக்தர் விரும்பினார். அதற்காகவே அவர் தந்த சுருட்டை தகுதியற்றதாயினும் அன்புடன் ஏற்றுக் கொண்டேன். இப்பழக்கம் தொடரட்டும். தடை செய்யாதே என்றார். மேலும் நிவேதனமாக சுருட்டை வைக்க வேண்டாம் என்று கூறியதால் தான் அவருக்கு வயிற்று வலியை தோன்ற செய்தேன் என்று கூறினார். அடுத்தநாள் மன்னர் தான் போட்ட தடையை நீக்கினார். முதல் சுருட்டு நைவேத்தியமாக முருகனுக்கு வைத்தவுடன் மன்னரின் வயிற்று வலி குணமானது. அதன்பிறகு இன்று வரை இப்பழக்கம் இருக்கிறது. ஆறு கால பூஜையின் போது பாலும் பழமும் பஞ்சாமிர்தம் நைவேத்தியமாக செய்யப்படுகிறது. உச்சிகால வழிபாட்டின்போது மட்டும் சுருட்டு சேர்த்து நைவேத்தியம் செய்யப்படுகிறது

வசிஷ்டரும் அவரது துணைவி அருந்ததியும் தமது சாபம் நீங்க இத்தலத்தில் தவமியற்றி உள்ளார்கள். திருவாரூரில் இருந்த தட்சிணாமூர்த்தி என்னும் அடியார்க்கு இறைவனே அப்பம் தந்த தலம். சனகர் சனந்தர் சனாதனர் சனத்குமாரர் ஆகிய நால்வருக்கும் முருகன் தோன்றி காட்சி தந்த திருத்தலம். இத்தலத்தின் மீது விராலிக் குறவஞ்சி என்னும் நூலை முத்துப்பழனிக் கவிராயர் இயற்றினார். பங்குனி உத்திரம் கந்த சஷ்டி ஆகிய நாட்களில் இத்தலத்தின் சிறப்பான உற்சவங்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. பொதுவாக ஆலயங்களில் பிரமோச்சவம் என்பது ஒரு தடவை மட்டுமே நடக்கும். ஆனால் இந்த ஆலயத்தில் விசாகம் மற்றும் பூசம் விழாக்களை ஒட்டி இரண்டு பிரம்மோச்சவம் நடைபெறுகிறது. விஜயநகரப் பேரரசரின் வழிவந்த இரண்டாம் தேவராயரின் (கிபி1422 -1446) காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. குன்றில் அமைந்துள்ள இயற்கையான குகைகளில் மனிதர்கள் வாழ்ந்திருந்த அறிகுறிகள் காணப்படுகின்றன.

சண்முகன்

ஆறுமுகங்களும் பன்னிருகைகளுடன் கொண்ட சண்முகன். ஸ்ரீ சிகாநாதசாமி (சிகாகிரீஸ்வரர்) கோவில் குடுமியான்மலை. புதுக்கோட்டை மாவட்டம்.

தண்டாயுதபாணி

தண்டாயுதபாணி தன்னுடைய வாகனமான மயில் மீது சாய்ந்த தோரணையில் சுமார் 6 அடி உயரத்தில் நிற்கும் எழில்மிகு தோற்றம். மயிலின் வாயில் பாம்பு. இடம் ஆத்மநாத சுவாமி கோவில் ஆவுடையார்கோயில். புதுக்கோட்டை மாவட்டம்.

சேனாதிபதி ஆறுமுகன்

சேனாதிபதி ஆறுமுகனின் அழகிய கற்சிலை. ஆறு முகத்தில் ஐந்து முகம் மட்டுமே முன்னால் தெரிகிறது. முருகரின் வலது பக்கத்தில் ஆறாவது முகம் மறைவாக இருக்கிறது. இடம்: ஸ்ரீ கண்டேஸ்வரர் கோயில். நஞ்சன்கூடு. கர்நாடக மாநிலம்.