சுலோகம் -66

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #19

இவன் கொல்வான் என்று நினைப்போனும் கொல்லப்படுவானென்று நினைப்போனும் ஆகிய இருவரும் உண்மையை அறியாதவர்கள். எனெனில் இந்த ஆத்மா உண்மையில் யாரையும் கொல்வதுமில்லை. யாராலும் கொல்லப்படுவதுமில்லை.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

ஒருவன் இன்னொருவனை கொல்லும் போது அவனது ஆன்மாவை அழித்து விட்டதாக நினைப்பவனும், ஒருவனால் இன்னொருவன் கொல்லப்படும் போது கொல்லப்பட்டவனின் ஆன்மாவும் அழிந்து விட்டதாக நினைப்பவனும் உண்மையை அறியாதவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஆத்மாவைப் பற்றிய ஞானம் இல்லை. இந்த ஆத்மா உண்மையில் யாரையும் கொல்வதுமில்லை. யாராலும் கொல்லப்படுவதுமில்லை. ஏன் என்றால் இந்த உடலில் இருக்கும் ஆத்மாவின் பூர்வ ஜென்ம ஆசைகளும் எண்ணங்களுமே இந்த உடலால் செய்யப்படும் செயல்களாக இருக்கிறது.

இந்த சுலோகத்தில் ஒரு கேள்வி:

இந்த ஆத்மா உண்மையில் யாரையும் கொல்வதுமில்லை. யாராலும் கொல்லப்படுவதுமில்லை என்றால்
கொல்பவன் யார்?

மனம் புத்தியுடன் கூடிய உடலுடன் இணைந்து இன்னொரு உடலை அழிக்க வேண்டும் என்று அஞ்ஞானத்தால் எண்ணி அதற்கான செயலில் ஈடுபடும் போது ஒரு உடலில் இருந்து உயிர் பிரிந்து சென்றால் அந்த செயலில் ஈடுபட்டவனே கொல்பவன் ஆவான். அப்படி கொல்பவன் நான் என்ற எண்ணத்தால் இதனை செய்கின்றதால் அதன் பலனாக வரும் பாவங்களை அவன் அனுபவித்துக் கொள்வான். ஆனால் அறத்தைக் காக்க தர்மத்தின் படி போர் புரிந்து ஒருவனை கொல்பவனை அதன் பலன்கள் அணுகுவதில்லை கர்ம வீரனை அவை பாதிப்பதும் இல்லை.

கொல்லப்படுபவன் யார்?

கொல்பவன் அதற்கான பலன்களை அனுபவிக்க வேண்டியும் கர்மாக்களை தீர்த்துக் கொள்ள வேண்டியும் இன்னொரு மனம் புத்தியுடன் கூடிய உடலுடன் கொண்டவனால் தனது உடலையும் உயிரையும் இழப்பவன் கொல்லப்படுபவன் ஆகிறான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 93

கேள்வி: கல்வியை அரசாங்கமே ஏற்று நடத்த அருள் செய்ய வேண்டும்?

இறைவன் அருளால் லட்சுமி (பணம்) இருந்தால் சரஸ்வதியை (கல்வி) வாங்கலாம் என்ற நிலை இப்பொழுது இருக்கிறது. இது காலகாலம் இருக்கக்கூடிய ஒரு நிலைதான். முற்காலத்திலும்கூட ஒரு சில அறிவிலிகள் நிறைய தனத்தை தந்தால்தான் போதிப்பேன் என்றெல்லாம்கூட இருந்திருக்கிறார்கள். இது மனித மலினங்களில் ஒன்று. இதை தவிர்ப்பது என்பது கடினம். இருந்தாலும்கூட ஏழைகளுக்கு இலவசமாக கல்வியைத் தரவேண்டுமென்று பல நல்ல உள்ளங்கள் ஒன்றுகூடி அதற்காக போராடினால் மெல்ல மெல்ல இதற்குரிய சூழ்நிலை ஏற்படும். இருந்தாலும்கூட பிரம்மனுக்கு உகந்த ஸ்தலங்கள் சென்று வணங்குவதும் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குறைந்தபட்சம் 120 தினங்கள் பிரம்மாவையும் சரஸ்வதியையும் இல்லத்தில் வணங்குவதுமாக இருந்தால் இப்படி முறையற்ற கல்வி முறையற்ற மனிதனுக்கு போகாமல் தேவையான மனிதனுக்கு நியாயமான முறையில் கல்வி கற்பிக்க ஒரு சூழல் ஏற்படும்.

கேள்வி: தாங்கள் ஏழு கடல்களை உள்ளங்கையில் வைத்து குடித்ததின் நோக்கம் என்ன ஐயனே?

இறைவன் எம்மைக் கருவியாக வைத்து எத்தனையோ செயல்களை செய்திருக்கிறாரப்பா. அதில் ஒன்றுதான் நீ வினவியது.

கேள்வி: கல்வியை அரசாங்கமே ஏற்று நடத்த அருள் செய்ய வேண்டும்?

இறைவன் அருளால் லட்சுமி (பணம்) இருந்தால் சரஸ்வதியை (கல்வி) வாங்கலாம் என்ற நிலை இப்பொழுது இருக்கிறது. இது காலகாலம் இருக்கக்கூடிய ஒரு நிலைதான். முற்காலத்திலும்கூட ஒரு சில அறிவிலிகள் நிறைய தனத்தை தந்தால்தான் போதிப்பேன் என்றெல்லாம்கூட இருந்திருக்கிறார்கள். இது மனித மலினங்களில் ஒன்று. இதை தவிர்ப்பது என்பது கடினம். இருந்தாலும்கூட ஏழைகளுக்கு இலவசமாக கல்வியைத் தரவேண்டுமென்று பல நல்ல உள்ளங்கள் ஒன்றுகூடி அதற்காக போராடினால் மெல்ல மெல்ல இதற்குரிய சூழ்நிலை ஏற்படும். இருந்தாலும்கூட பிரம்மனுக்கு உகந்த ஸ்தலங்கள் சென்று வணங்குவதும் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குறைந்தபட்சம் 120 தினங்கள் பிரம்மாவையும் சரஸ்வதியையும் இல்லத்தில் வணங்குவதுமாக இருந்தால் இப்படி முறையற்ற கல்வி முறையற்ற மனிதனுக்கு போகாமல் தேவையான மனிதனுக்கு நியாயமான முறையில் கல்வி கற்பிக்க ஒரு சூழல் ஏற்படும்.

கேள்வி: தாங்கள் ஏழு கடல்களை உள்ளங்கையில் வைத்து குடித்ததின் நோக்கம் என்ன ஐயனே?

இறைவன் எம்மைக் கருவியாக வைத்து எத்தனையோ செயல்களை செய்திருக்கிறாரப்பா. அதில் ஒன்றுதான் நீ வினவியது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 92

கேள்வி: வடலூர் (கடலூர் மாவட்டம்) வள்ளலார் ஔிதேகம் அடைந்ததைப் பற்றி?

இறைவன் அருளாலே வெளியில் தெரிந்த வள்ளலார் ஒருவன். தெரியாத வள்ளலார் அநேகம் பேர் இருக்கிறார்களப்பா. இருந்தாலும் இறைவன் திருவடியை அடைவதற்கு எத்தனையோ வழிமுறைகள் உண்டு. அதில் ஒன்றுதான் வள்ளலார் அடைந்த வழிமுறை. அவன் (வள்ளலார்) ஔிதேகம் பெற்றதும் உண்மை. மறைந்ததும் உண்மை. அதைப் போன்று பின்னால் பலருக்கும் அந்த வாய்ப்பை இறைவன் தந்ததும் உண்மை. இனி எதிர்காலத்தில் தரப்போவதும் உண்மை.

கேள்வி: தீர்த்தமலையில் (தருமபுரி மாவட்டம்) உள்ள தீர்த்தங்களின் சிறப்புகள் என்ன? அவைகள் எப்பொழுது உருவானது?

இறைவன் அருளால் பல்வேறு விதமான தீர்த்தங்கள் அங்கு இருக்கிறது. இராம தீர்த்தம் கூட அங்கு இருக்கிறது. அகத்தியர் என்ற நமது நாமத்திலும் தீர்த்தம் இருக்கிறது. அனுமன் நாமத்திலும் தீர்த்தம் இருக்கிறது. இது போன்ற தீர்த்தங்கள் எல்லாம் இறைவன் அருளால் காலகாலம் உருவாக்கப்பட்டு மனிதனின் தீராத கொடிய பிணிகளை தீர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்டவைகள். ஆனாலும்கூட இதுபோன்ற இடங்களில் அநாகரீகமான மனிதர்கள் சென்று பல அனாச்சாரங்களில் ஈடுபட்டால் கட்டாயம் இறைவன் அருளை மாற்றிவிடுவார் என்பதை மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இன்றளவு பரிசுத்த உள்ளத்தோடு சென்று பரிபூரணமான சரணாகதியோடு இறைவனை வணங்கி அந்த தீர்த்தத்தை அருந்த கட்டாயம் நன்மைகள் உண்டு. கொடும் நோய்கள் தீரும்.

வழுவூர் கோவிலில் உள்ள கஜசம்ஹார மூர்த்தி

தேவார பதிகத்தில் கரிஉரித்த சிவன் என்றும் வடமொழியில் கஜசம்ஹார மூர்த்தி என்றும் இச்சிவனை அழைக்கின்றார்கள். சிவனின் பல்வேறு ஆனந்தத் தாண்டவங்களில் கஜ சம்ஹார தாண்டவம் மிக முக்கியமான ஒன்றாகும். யானை முகமுடைய கஜமுகா அசுரனை வதம் செய்யும் சிவபுராணக் காட்சி இங்கு அற்புதமான சிலை ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்சிலையின் கீழே யானையின் தலை கிடக்கிறது. யானையின் மத்தகத்தின் மீது ஒரு காலை ஊன்றி தனது திரிசூலத்தால் வதம் செய்கிறார் ஈஸ்வரன். வதம் செய்யப்பட்ட யானையின் தோலையே தனது மாலையாகத் தரித்து கொள்கிறார் ஈஸ்வரர். அதுவே ஈஸ்வர சிற்பத்திற்கு அக்னி திருவாட்சியாகவும் அமைந்துள்ளது. மேலே யானையின் இரண்டு கால்கள் தொங்கிய நிலையிலும் யானையின் வால் மேல் நீட்டிய நிலையிலும் காணப்படுகின்றன. கீழே இரண்டு கால்கள் கிடக்கின்றன. சிவனின் ரௌத்ரப்பார்வை நான்கு கரங்கள் அக்கரங்களுக்கான ஆயுதங்கள் இரண்டு கால்களில் ஒன்று தூக்கிய நிலையிலும் இன்னொன்று ஊன்றிய நிலையிலும் உள்ளது. சிவனின் உள்ளங்கால் தரிசனம் காணலாம்.

ஆபிசார வேள்வியில் எழுந்த யானை இறைவனை நோக்கிச் சினந்து ஓடிவர அதை அழிப்பதற்காக இறைவன் அதன் உடலுள் புகுந்தார். உலகங்கள் இருண்டன அம்பிகை செய்வதறியாது திகைத்தார். இறைவன் தன்னுள் புகுந்ததைத் தாளாத யானை பஞ்ச முக தீர்த்தத்தில் போய் வடமேற்கு மூலையில் விழுந்தது. இறைவன் அதையழித்துத் தீர்த்தத்தின் தென் மேற்கு மூலையில் எழுந்து வந்தார். கணவனைக் காணாது அம்பிகை வருத்த முற்றுச் செல்ல முற்பட இறைவன் எழுந்து வெளிப்படவே முருகப் பெருமான் தன் தாய்க்கு இதோ தந்தையார் என்று சுட்டிக் காட்டினார். இவ்வரலாறு பற்றிய காட்சி கோயிலுள் சிற்பங்களாக உள்ளன.

பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்தது இச்சிலை அற்புதமான உலோக வேலைப்பாடுகள் சோழ சிற்பிகளின் அதீத கற்பனை திறனை வெளிப்படுத்துகிறது. மயிலாடுதுறை திருவாரூர் சாலையில் பத்தாவது கிமீ தூரத்தில் வழுவூர் உள்ளது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 91

கேள்வி: வியாபாரம் சிறக்க எந்த ஸ்தலம் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

இறைவனின் கருணையைக் கொண்டு நல்ல முறையில் வியாபாரம் தொழில் அமைந்து அதனை அலட்சியம் செய்தவர்க்குதான் மறுபிறவியிலே சரியான தொழிலும் வியாபாரமும் அமைவதில்லை. அடுத்ததாக வியாபாரத்தில் பொய் சொல்லலாம் தவறொன்றுமில்லை. பொய் சொல்லாமல் இருந்தால் வியாபாரத்தில் தோற்றுவிடுவோம் என்ற சித்தாந்தம் மனிதரிடம் இன்றுவரை நிலவி வருகிறது. இதுவும் தொழில் தோஷம் ஏற்பட காரணமாக இருக்கிறது. எத்தனை நஷ்டங்கள் கஷ்டங்கள் வந்தாலும் ஒருவன் வியாபாரத்தை நேர்மையாகத்தான் செய்ய வேண்டும். இவையெல்லாம் மனிதர்களால் வெறும் ஏட்டளவில் மட்டும்தான் ஏற்க முடிகிறது. நடைமுறையில் யாரும் அப்படி இருப்பதில்லை. அப்படியிருந்தால் உடனடியாக நஷ்டம் வருகிறது என்று பயந்து வியாபாரத்தில் பொய் சொல்ல மனிதன் துவங்கி விடுகிறான். இப்படி செய்யாவிட்டால் வியாபாரத்தில் ஜெயிக்க முடியாது என்று சமாதானம் கூறுகிறான். அதனால்தான் வியாபார ஸ்தானத்திலே தோஷத்தை ஏற்படுத்திக் கொள்கிறான். இருந்தாலும்கூட திருவெண்காடு ஸ்தலத்திற்கு சென்று வழிபாடு செய்வதும் புதன்கிழமை தோறும் புதனுக்கும் பெருமாளுக்கும் தச வதன நெய் தீபம் ஏற்றுவதும் இன்ன பிற வழிபாடுகள் செய்வதும் தச தோஷ நிவர்த்தி யாகம் செய்வதும் தச லாப அபிவிருத்தி யாகம் செய்வதும் தக்க வியாபாரமோ தொழிலோ அறிந்த ஏழைக்கு தொழிலைத் துவங்க உதவி செய்வதும் இந்த தோஷத்தை நீக்கி வியாபாரத்தில் வெற்றியைத் தரும்.

திருவெண்காடு கோவிலைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

சுலோகம் -65

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #18

அழிவற்ற விளக்க முடியாத நித்தியமான ஜீவாத்மாவினுடைய நீ பார்க்கும் அனைத்து உடல்களும் அழியக்கூடியது. ஆகவே பரதகுலத் தோன்றலே அர்ஜூனா நீ போர் புரிவாயாக.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

நாம் காணும் இந்த அழியக்கூடிய உடல்கள் அனைத்திலும் காணமுடியாததும் அழிவற்றதும் அறிய இயலாததுமாகிய ஆத்மா தன் கர்மாவை தீர்த்துக் கொள்வதற்காக சில காலம் மட்டுமே தங்குகிறது. நீ தர்மப்படி யுத்தம் செய்து இந்த உடலை மட்டுமே அழிக்கிறாய். ஜீவாத்மாவை அல்ல ஆகவே யுத்தம் செய் என்று கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு உபதேசம் செய்கிறார்.

இந்த சுலோகத்தில் ஒரு கேள்வி?

அர்ஜூனனை பரதகுலத் தோன்றலே என்று கிருஷ்ணர் ஏன் அழைக்கிறார்?

பரதகுலத்தில் தோன்றிய அரசர்கள் தர்மத்தின்படி உடனடியாக முடிவு எடுத்து அதனை செயல்படுத்தினார்கள். அந்த குலத்தில் வந்த நீயும் அது போல் தர்மத்தின்படி உடனடியாக முடிவு எடுத்து யுத்தம் செய்ய வேண்டும் என்பதை குறிப்பிட்டு சொல்வதற்காக அர்ஜூனனை கிருஷ்ணர் பரதகுலத் தோன்றலே என்று அழைக்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 90

கேள்வி: நமக்கு முன் பின் தெரியாத நமது முன்னோர்கள் செய்த பாவத்திற்கு நாங்கள் ஏன் தண்டனையை அனுபவிக்க வேண்டும்?

பிறகு நீ பாவம் செய்தாய் அதனால் அனுபவிக்கிறாய் என்று கூறினால் அதை ஏற்றுக் கொள்ளக்கூடிய பக்குவம் எத்தனை பேருக்கு இருக்கிறது. ஜோதிடம் இதையெல்லாம் நாகரீகமாக கூறுகிறது என்பதை புரிந்துகொள். முன்னோர்கள் பாவம் ஒருவனை படுத்துகிறது என்றால்? இவன் என்ன புண்ணியவானா? ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். முன் செய்த பாவம். அதுதான் இவனுக்கு முன்னோர்கள் வழியாக வருகிறது. இதில் இன்னொன்றையும் எடுத்துக் கொள்ளலாம். அந்த முன்னோர்கள் யார்? இவனே அந்த முன்னோர்களாக இருந்து பாவங்கள் செய்து இருக்கலாம். இன்னொன்று. முன்னோர்கள் பாவம் செய்து ஒரு சொத்தை சேர்க்க அந்த சொத்தினால் வரும் லாபத்தை அந்த குடும்பம் அனுபவிக்க அதனால் உணவு உண்ண அதனால் இரத்தம் ஏற்பட அந்த இரத்தத்தினால் வாரிசுகள் ஏற்பட கட்டாயம் அந்த வாரிசுகளுக்கு அந்தப் பாவங்கள் வரத்தான் செய்யும். முன்னொர்கள் கொடுக்கின்ற சொத்துக்களை ஆசையோடு ஏற்று கொள்ளுகின்ற மனிதன் பாவத்தையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். முன்னோர்கள் பாவங்கள் மட்டுமல்ல புண்ணியங்களும் வருகிறது. அதை மனிதன் மறந்து விடுகிறான். எனவே பாவமும் புண்ணியமும் ஒரு மனிதனோடு மட்டும் போய்விடுவதில்லை. அவன் வாரிசுகளையும் தாக்குகிறது என்பதை நினைவிலே கொண்டு கூடுமானவரை பாவத்தைக் குறைத்து புண்ணியத்தை அதிகரித்துக் கொண்டால் நன்மைகள் அதிகரிக்கும்.

கேள்வி: ஒரே மாதிரியான உருவ ஒற்றுமையில் ஆணாக இருந்தாலும் அல்லது பெண்ணாக இருந்தாலும் அதிலும் இரத்த சம்பந்தமில்லாதவர்கள் 7 பேர் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்த கூற்று உண்மையா?

7 மட்டுமல்ல அதற்கு மேற்பட்டவர்கள் உண்டு. இதற்கும் பல்வேறு தெய்வீக சூட்சும காரணங்கள் இருக்கிறது. இதற்கு பிறிதொரு சந்தர்பத்தில் விளக்கம் தருவோம்.

ஹொய்சாளேஸ்வரர் கோவில்

ஹொய்சாளேஸ்வரர் கோயில் ஒரு சிவன் கோயில் ஆகும். இது இன்றைய இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹளபீடு என்னும் இடத்தில் உள்ளது. 12ஆம் நூற்றாண்டில் போசளப் பேரரசை விஷ்ணுவர்த்தனன் ஆண்டு வந்த காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டது. ஹொய்சாளேஸ்வரர் கோயிலில் காணப்படும் சிவா பார்வதி சிலை அக்காலத்தில் போசளப் பேரரசை ஆண்டுவந்த விஷ்ணுவர்த்தன ஹொய்சாளேஸ்வரர் என அழைக்கப்பட்ட விஷ்ணுவர்த்தனன் என்னும் மன்னனின் பெயரைத் தழுவியே இக்கோயிலின் பெயர் ஏற்பட்டதாகப் பதிவுகள் காட்டுகின்றன. இருந்தாலும் இக்கோயில் மன்னனால் மட்டுமின்றி நகரத்தின் செல்வந்தர்களான குடிமக்களாலும் கட்டுவிக்கப்பட்டதாகத் தெரிகிறது. கேதமல்லன் கேசரசேத்தி என்னும் இருவர் இவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர். இக்கோயில் 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பெரிய குளம் ஒன்றை நோக்கியபடி அமைந்துள்ளது. இதற்கு யகாச்சி ஆற்றுக்குக் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த அணைக்கட்டு ஒன்றிலிருந்து வாய்க்கால்கள் மூலம் நீர் வழங்கப்பட்டது. இக்குளம் ஹொய்சாளேஸ்வரர் கோயில் கட்டப்படுவதற்குச் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இக்கோயில் தென்னிந்தியாவில் உள்ள பெரிய சிவன் கோயில்களுள் ஒன்றாகும்.

கோவில் எளிமையான இரட்டை விமானக் கோயில் ஆகும். ஒரு விமானம் ஹொய்சாளேஸ்வரருக்கும் மற்றது சாந்தலேஸ்வரருக்கும் உரியது. சாந்தலேஸ்வரர் என்ற பெயர் விஷ்ணுவர்த்தனனின் அரசியாகிய சாந்தலேஸ்வரியின் பெயரைத் தழுவி ஏற்பட்டது ஆகும். நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளைச் செய்வதற்கு உகந்த சோப்புக்கல் எனப்படும் ஒருவகைக் கல்லாலேயே இக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. கோயில் முழுவதும் ஜகதி எனப்படும் மேடையொன்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள இரண்டு கோயில்களும் கிழக்கு நோக்கியவையாக அருகருகே அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயில்கள் ஒவ்வொன்றுக்கும் முன் மண்டபங்கள் உள்ளன. இரண்டு மண்டபங்களும் இணைக்கப்பட்டனவாய்ப் பெரிதாகக் காட்சியளிக்கின்றன. கருவறைகளில் சிவனைக் குறிக்கும் எளிமையான லிங்க வடிவங்கள் உள்ளன. கருவறைகளுக்கு மேல் அமைந்திருந்து இன்று அழிந்து போய்விட்ட சிகரங்கள் இதன் கருவறையைப் போலவும் நல்ல நிலையிலிருக்கும் பிற ஹோய்சாலக் கோயில்களில் காணப்படுவது போலவும் நட்சத்திர வடிவு கொண்டு இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இக் கோயில்களின் வெளிச் சுவர்களில் பல நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள் உள்ளன. ஹளபீட்டில் உள்ள இக் கோயில் இந்தியக் கட்டிடக்கலையின் ஒரு சிறப்பான எடுத்துகாட்டு எனப்படுகின்றது.

கோவில் வாசலில் விநாயகப்பெருமான் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார். மேல் உள்ள இரண்டு கைகளில் பாச அங்குசம் உள்ளது. வலதுகரம் மாலிக்காபூர் படையெடுப்பில் உடைக்கப்பட்டு விட்டது. இடக்கரம் மோதகத்தை தாங்குகிறது. துதிக்கையால் மோதகத்தைச் சுவைத்தபடி காட்சி தருகிறார். விநாயகரின் கிரீடமும் யாளியால் ஆன திருவாட்சியும் நுட்பமான வேலைப்பாடுகளுடன் உள்ளது. கால்கள் இரண்டையும் மடித்து அமர்ந்திருக்கிறார். கழுத்தில் அணிந்திருக்கும் தாழ்வடம் பாதத்திற்கும் கீழே தரையில் கிடக்கிறது. வெயிலும் மழையும் பாராமல் வெட்டவெளியில் வெயிலுகந்த விநாயகராக காட்சியளிக்கிறார். இரண்யனை வதம் செய்யும் உக்ர நரசிம்மர் கோவர்த்தன மலையைக் குடையாகத் தாங்கும் கிருஷ்ணர் லட்சுமி நாராயணர் அர்ஜுனனுக்கு தேரோட்டும் கிருஷ்ணர் என்று ராமாயண மகாபாரத கதை தொடர்பான சிற்பங்கள் உள்ளன. ஆதிநாதர் சாந்திநாதர் பார்சவநாதர் ஆகிய சமணக் கோயில்களும் இக்கோயிலின் சுற்றுப்புறங்களில் உள்ளன.

கோவிலில் இரண்டு பிரதான சன்னதிகள் அமைந்துள்ளன. முதல் சன்னதியில் ஹொய்சாளேஸ்வரர் என்னும் திருநாமத்தில் இருக்கிறார். சிவலிங்க பாணத்தின் மேல் நாகாபரணம் குடைபிடிக்கிறது. பாணத்தின் மீது இரு கண்கள் அழகாக உள்ளது. இச்சன்னதியின் முன் நவரங்க மண்டபம் மிகுந்த வேலைப்பாடுகளுடன் உள்ளது. விஷ்ணுவர்த்தனன் என்னும் ஹொய்சாள மன்னனின் மனைவி சாந்தளாதேவி. ராணியின் பெயரால் இவர் சாந்தளேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். வடநாட்டு பாணியில் சாந்தளேஸ்வரர் மீது தாராபாத்திரம் வைக்கப்பட்டுள்ளது. இரு சன்னதிக்கும் நேரே கிழக்கு வாசல்கள் உள்ளன. வடக்கு தெற்கு வாசல்களும் உண்டு. வெளியில் எவ்வளவு வெயில் இருந்தாலும் கோயிலுக்குள் நுழைந்ததும் குளிர்ச்சியாக உள்ளது. சுவாமி தரிசனத்தின் போது தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. சாந்தளேஸ்வரர் சன்னதியில் உற்சவர் சிலைகள் உள்ளன. ஹொய்சாளேஸ்வரருக்கும் சாந்தளேஸ்வரருக்கும் நேராக நந்தி மண்டபங்கள் உள்ளன. நந்தியும் மண்டபத் தூண்களும் கலைநயம் மிக்கவை. நந்தி மண்டபத்தைச் சுற்றி மரச்செப்பு கடசல் போல கல்லில் வடித்த கலைநயம் மிக்க தூண்கள் உள்ளன. ஒற்றைக் கருங்கல்லினால் நந்தி வடிக்கப்பட்டுள்ளது. இரு நந்திகளும் ஒன்று போலவே உள்ளன. கழுத்து சிறிது வளைந்திருக்கிறது. தமிழ்நாட்டுப் பாணியில் நாக்கை வெளியில் நீட்டாமல் உள்ளது. சிவாம்சத்துடன் நந்தி மகாகாளர் என்னும் துவாரபாலகர்கள் சன்னதிகளில் காவலாக நிற்கின்றனர். இதில் சாந்தளேஸ்வரர் முன்புள்ள துவாரபாலகர்கள் கையில் திரிசூலமும் டமருகம் என்னும் உடுக்கையும் ஏந்தி சிவாம்சத்துடன் உள்ளனர். கைகளை லாவகமாக வளைத்தும் கால்கள் சற்று சாய்ந்தும் ஒய்யார பாவனையில் இந்த சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன. அவர்களின் அருகில் சாமரம் வீசும் சேடிப்பெண்களின் சிலைகள் கண்களைக் கவரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன. துவார பாலகர்களின் பாதத்தில் காவல் வீரர்கள் நிற்கின்றனர்.

கோவில் பிரகார சுவர் முழுவதும் சித்திர வேலைப்பாடுகள் நுட்பமாக செதுக்கப்பட்டுள்ளன. யானை சிங்கம் குதிரைவீரர்கள் பூவிதழ் என்று அடுக்கடுக்காக சிற்பங்கள் நூற்றுக்கணக்கில் ஒன்றின்மேல் ஒன்றாக உள்ளன. கோயில் ஒரு தேர் போலவும் அதை இழுத்துச் செல்வது போல சிற்ப வரிசைகளும் உள்ளன. யானைகள் ஒன்றையொன்று முட்டி மோதிக் கொள்ளும் சிலைகளைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். ஹொய்சாள மன்னர்கள் தங்களை துவாரகாபுரியைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்வார்கள். இருப்பினும் இவர்கள் கிருஷ்ணனை வணங்காமல் சமண சமயத்தையே பின்பற்றி வாழ்ந்தனர். ராமானுஜர் காலத்திற்குப் பிறகு இவர்கள் மீண்டும் தங்கள் வேதசமயத்தைப் பின்பற்ற தொடங்கினர். அதன்பின் சிறியதும் பெரியதுமாக சிவபெருமான் மகாவிஷ்ணுவை மூலவராகக் கொண்டு 150 கோயில்கள் கட்டினர். பதினோராம் நூற்றாண்டில் ஹளபேடு ஹொய்சாளர்களின் தலைநகராகத் திகழ்ந்தது. அப்போது இங்கு ஒரு சிவாலயம் கட்டி மூலவருக்கு தங்கள் இனத்தின் பெயரால் ஹொய்சாளேஸ்வரர் என்று பெயரிட்டனர். 1127ல் தொடங்கிய கோயில் கட்டும்பணி 1207ல் நிறைவு பெற்றது. விஷ்ணுவர்த்தனின் அமைச்சரில் ஒருவரான கெட்டுமல்லா இக்கோயிலைக் கட்டினார்.

14 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வட இந்தியாவிலிருந்து படையெடுத்த டெல்லி சுல்தான் படைகள் ஹளபீட்டைத் தாக்கிக் கொள்ளையிட்டபோது இக்கோயிலும் அழிவுக்கு உள்ளாகிக் கவனிப்பாரற்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. அன்னியப் படையெடுப்பின் போது சிதைந்த சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இக்கோவில் தொல்லியல் துறையின்கீழ் செயல்பட்டு வருகிறது. மைசூரில் இருந்து 149 கிமீ தூரத்தில் இக்கோவில் உள்ளது.

சுலோகம் -64

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #17

இந்த உலகில் உள்ள அனைத்தும் ஆத்மாவினால் நிறைந்துள்ளன. இந்த ஆத்மா என்பது அழியாமல் உள்ளது என்பதை நீ அறிந்து கொள்வாயாக. அழிவே இல்லாத இந்த ஆத்மாவிற்கு அழிவு என்பதை யாராலும் எற்படுத்த முடியாது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இந்த உலகத்தில் படைக்கப்பட்ட புல் முதல் அனைத்து உயிர்களும் ஆத்மாவினால் நிறைந்துள்ளது. இந்த ஆத்மா அனைத்தும் பரமாத்மாவிடம் சென்று சேரும் வரையில் தனது உடலை மாற்றிக் கொண்டே இருக்குமே தவிர எப்போதும் அழியாமல் இருக்கும். இந்த ஆத்மாவை அழிக்கும் வல்லமை இந்த உலகத்தில் யாருக்கும் இல்லை. இதனை தெரிந்து கொள்வாயாக என்று கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு உபதேசம் செய்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 89

கேள்வி: பல உன்னதமான ஆத்மாக்கள் விண்மீன்களாக மாறும் என்று கூறியிருந்தீர்கள். அவர்களின் நிலை என்ன? அவர்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள்?

சதா சர்வ காலம் இறை தியானத்தில் இருப்பார்கள். தன் ஆக்கப் பூர்வமான கதிர்களை பூமிக்கும் மற்ற லோகங்களுக்கும் (உலகங்களுக்கும்) அனுப்பிக்கொண்டே இருப்பார்கள். எவையெல்லாம் (ஆத்மாக்கள்) இறைவனை நோக்கி வர வேண்டும் என்று துடிக்கிறதோ அவற்றை மேலும் நல்ல பாதையில் தூண்டி விடுவதற்குமான முயற்சியில் அது போன்ற ஆத்மாக்கள் இறங்கி செயலாற்றிக் கொண்டே இருக்கும்.

கேள்வி : திருஷ்டி கழிப்பது என்றால் என்ன? அரைஞாண் கயிறு கட்ட வேண்டுமா?

அரை என்றால் இடுப்பு என்ற ஒரு பொருள் இருக்கிறது. இன்னொன்று ஒட்டு மொத்த மனிதனின் அரைப்பகுதி பாதிப்பகுதியை ஒட்டிதான் குண்டலினி சக்தி இருக்கிறது. கனகம் எனப்படும் தங்கத்திலும் வெள்ளியிலும் பஞ்சு நூலிலும் கயிறுக் கட்டிக் கொள்வதும் குறிப்பாக காளையினத்தவர் (ஆண்கள்) கட்டிக் கொள்வதும் சிலவகையான சூட்சுமமான சக்திகளை பெற உதவும். ஆனால் ஏதோ அங்காடியில் (கடையில்) விற்கிறது வாங்கிக் கட்டிக் கொள்வது போல அல்ல. எப்படி முப்புரி நூல் எனப்படும் பூணுலை முறையாக ஜெபித்து அணிகிறார்களோ இதையும் இப்படிதான் அணிய வேண்டும். இதை மட்டுமல்ல. உடலிலே பிற்சேர்க்கையான ஒரு அணிகலனை ஒருவன் அணிந்து கொள்ள வேண்டுமென்றால் ஏதோ அங்காடியில்(கடை) வாங்கி அணிவதில் நன்மை ஏதுமில்லை. அதை முறையாக எடுத்து வந்து இல்லத்திலாவது அமர்ந்து குறைந்தபட்சம் ஒரு சப்த (07 நாட்கள்) தினங்களாவது பூஜை செய்து மந்திர உருவேற்றி அணிய வேண்டும். அது உடலுக்கு ஒரு கவசம் போல் ஒரு பாதுகாப்பைத் தரும். இதை ஆண்கள்தான் அணிய வேண்டும். பெண்கள் அணியக்கூடாது என்பதெல்லாம் இல்லை. யார் வேண்டுமானாலும் அணியலாம். பஞ்சு நூலாலும் அணியலாம். தவறொன்றுமில்லை. இது போன்ற பல்வேறு விதமான சடங்குகளெல்லாம் இறை நம்பிக்கையையும் பிராத்தனையையும் அடிப்படையாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்டவை.