இறைவனை எளிமையாக சென்று அடையும் வழி

தன்னிடம் சீடனாக புதிதாக வந்து சேர்ந்தவரிடம் குரு கேட்டார் ஆன்மிகத்தின் நோக்கம் என்ன என்று சொல்ல முடியுமா?

புதிய சீடன் – இறைவனை அறிவதும் அடைவது தான் ஆன்மிகத்தின் நோக்கம் என்றான்.

குரு – சரி இத்தனை நாள் ஆன்மிகத்தில் சாதகம் செய்து வருகிறாயே இறைவனை அறிந்தாயோ? இல்லை ஆனால் முயன்று கொண்டிருக்கிறேன். என்றான் நல்லது உண்மையிலேயே இறைவனை அறிந்து கொண்டுவிட முடியும் என்று நம்புகிறாயா?

சீடன் – நம்புகிறேன் இருப்பினும் கொஞ்சம் சந்தேகமாகவே இருக்கிறது.

குரு – எதனால் இந்த சந்தேகம் வருகிறது?

சீடன் – பலர் பலவிதமாக இறைவனைப் பற்றிச் சொல்கிறார்கள். மிகவும் ஆராய்ந்து பார்த்தால் தெளிவை விடக் குழப்பமே மிஞ்சுகிறது.

குரு – நல்லது எப்போது நீ உள்ளது உள்ளபடி சொன்னாயோ அதுவே நல்லது சீடனே.

குரு – இப்போது நான் வேறு விதமாகக் கேட்கிறேன் நீ ஆண்டவனைத் தெரிந்து கொள்ளவும் அடையவும் உண்மையிலேயே விரும்புகிறாயா?

சீடன் – ஆமாம் குருவே.

குரு – உன் விருப்பத்தின் காரணமாகத்தான் நீ ஆன்மிகப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறாய் அப்படித்தானே?

சீடன் – ஆமாம் குருவே.

குரு – அன்புள்ள சீடனே நீ இறைவனை அடைய ஓர் எளிமையான மாற்று வழியைச் சொல்லித் தருகிறேன்.

சீடன் – மிகவும் சந்தோஷம் குருவே இந்த வழிக்காகத்தான் நான் காத்துக் கொண்டிருக்கிறேன்.

குரு – ஆனால் இந்த வழியில் நீ இறைவனை அடைய முடியாது ஆனால் இறைவன் தான் உன்னை வந்து அடைவான்.

சீடன் – இது குழப்பமாக இருக்கிறதே.

குரு – ஒரு குழப்பமும் இல்லை ஒர் கதை சொல்கிறேன் கேள் ஒரு அரசன் இருக்கிறான். பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு அவன் ராஜா. அவன் அருகே நெருங்குவதோ பேசுவதோ அறிவதோ எளிமையான விஷயம் அல்ல முடியவும் முடியாது. ஆனால் ராஜாவை சந்திக்க வேண்டும் என்கிற பிரஜை ஓர் அருமையான காரியத்தைச் செய்கிறான் அவன் தேசத்தில் உள்ள மக்கள் எல்லோருக்கும் பயன்படும்படியாக உழைக்கிறான். பல அறச் செயல்களைச் செய்கிறான். நாட்டுக்கு நன்மை பயக்கும் பல நற்காரியங்களை செய்கின்றான் இந்தச் செய்தி ராஜாவுக்குப் போகிறது. ராஜாவே அவரே நேரில் அவனைப் பார்க்க வருகிறார். அவனோடு உரையாடுகிறார் பாராட்டுகிறார் பரிசுகள் தருகிறார். இது நடக்கும் இல்லையா?

சீடன் – நிச்சயமாக நடக்கும் குருவே.

குரு – இப்போது ராஜாதான் இறைவன். நீதான் அவன். நீ என்ன முயற்சி செய்தாலும் ராஜாவைப் நெருங்குவது சிறிது கடினம். ஆனால் உன் செயல்கள் பலருக்கும் பயனுடையதாக இருந்தால் அந்த ராஜாவே (இறைவனே) உன்னைப் பார்க்க வருவார். எனவே இறைவனைப் பார்க்கும் முயற்சியைக் கைவிடு. இறைவன் உன்னைத் தேடி வரும் தகுதியான தானம் தர்மம் ஆகிய செயல்களில் ஈடுபடு இறைவனே உன்னை வந்து அடைவான் சரிதானே?

சீடன் – மிகவும் சரிதான் குருவே.

குரு – நல்லது சீடனே இனி ஆன்மிகம் உனக்கு கை கூடும் போய் வா என்றார்.

சீடன் தெளிவடைந்து குருவிற்கு நன்றி தெரிவித்தான்.

நம் எண்ணங்களும் உணர்வுகளும் சிந்தனைகளும் சொல்களும் செயல்களும் நம்மை சுற்றி உள்ள மனிதர்களுக்கு நல்லது செய்யுமெனில் இறைவனை நாம் தேட வேண்டியதில்லை இறைவனே நம்மை தேடி வருவார்.

சோழ மற்றும் பாண்டிய மன்னர்களிடம் இறைவன் புரிந்த லீலை

பாண்டிய மாமன்னன் ராஜேந்திரன் சிவபெருமான் மீது மிகுந்த மன வருத்தத்துடன் இருந்தான். பட்டத்தரசி சுவர்ண மீனாட்சி எத்தனையோ முறை ஆலய தரிசனத்திற்கு அழைத்துப் பார்த்தாள். அவன் பிடிவாதமாக மறுத்துவிட்டான். தேவி நீ சென்று சொக்கநாதனை வணங்கி வா நான் தடுக்கவில்லை. ஆலயத்திற்கு அளிக்க வேண்டிய எந்த உதவிகளையும் நான் நிறுத்தவில்லை. ஆனால் சொக்கேசனை வணங்கும்படி மட்டும் என்னை வற்புறுத்தாதே என்று உறுதிபடக் கூறிவிட்டான். அப்படி என்னதான் சிவன் மீது உங்களுக்குக் கோபம்? என்று விடாப்பிடியாக வினவினாள் பாண்டிமாதேவி. ராஜேந்திர பாண்டியனின் தந்தை குலபூஷண பாண்டியன் காலத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

சோழர்கள் அப்போது காஞ்சியிலிருந்து ஆண்டு கொண்டிருந்தனர். சோழன் சிவநேசனுக்கு மதுரை சென்று ஆலவாய் அண்ணலைத் தரிசிக்க வேண்டுமென்று ஆவல். ஆனால் பாண்டியனோடு பகை. எப்படி அங்கு செல்வது? சிவநேசச் சோழன் உறையூர் வந்திருந்தான். எப்படியும் ஒரு நடை மதுரை சென்று மகேசனைத் தரிசிப்பது என்று முடிவும் செய்து விட்டான். மாறுவேடம் பூண்டு ஒரு சாதாரண யாத்ரீகன் போன்று மதுரைக்குப் புறப்பட்டான். வைகைக் கரைக்கு வந்து சேர்ந்த போது இருள் பரவத் தொடங்கியிருந்தது. வைகையில் வெள்ளமும் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றைக் கடக்க வழி புரியாமல் மனம் கலங்கி நின்றான் சோழன்.

பொற்றாமரை குளத்தில் நீராடி இறைவனை தரிசிக்க விருப்பம் கொண்டு வந்த எனக்கு இது என்ன சோதனை? பாண்டியன் கண்டால் துணையின்றி வந்த என்னை சிறைபிடிப்பானே. வெள்ளம் வடியும் வரை பொறுமையாக காத்திருந்து செல்லவும் வழியில்லையே எனப் பலவாறு எண்ணி வேதனையுற்றான். அப்போது சொக்கநாதர் சித்தர் வடிவில் வந்து மீனாட்சியைப் பார்க்கப் போகிறேன் வருகிறாயா அப்பா எனக் கேட்டார். சோழன் ஆச்சர்யம் அடைந்தான். சித்தர் வைகையை பார்க்க வைகையில் வெள்ளம் குறைந்தது. சோழன் பெருத்த ஆச்சர்யத்துடன் சித்தரைப் பின் தொடர்ந்து சென்றான். கோவில் அருகில் வரும்போது நடு இரவாகிவிட்டது ஆகையால் ஆலயம் அர்த்தஜாம பூஜை முடிந்து பூட்டப்பட்டு விட்டது. இதனால் மீண்டும் சோழன் வருத்தத்துடன் நின்றான். அப்போது சித்தர் வடிவில் இருந்த சொக்கநாதர் ஆலயத்தின் காவல்காரன் எனக்கு மிகவும் வேண்டியவன். நான் போய் அவனிடமிருந்து சாவி வாங்கி வருகிறேன். நீங்கள் சொக்கநாதரை தரிசிப்பீர்கள் கவலை வேண்டாம் என்று சொல்லி திறவுகோலை வாங்கி வந்து ஆலயக் கதவுகளைத் திறந்து விட்டான். பொற்றாமரையில் நீராடி அம்மனையும் சொக்கநாதரையும் கண்குளிர தரிசித்து வழிபட்டு போற்றிப் பாமாலை பாடினான்.  இருட்டிலும் அவன் தெளிவாகப் பார்க்கும் தன்மையை சிவபெருமான் அருளி இருந்தார். விடியும் நேரமாகியும் அவன் புறப்படவில்லை.

சித்தர் வடிவில் இருந்த சொக்கநாதர் சோழ மன்னா நீ இங்கிருப்பதை பாண்டியன் அறிந்தால் உனக்கு துன்பம் உண்டாகும். ஆதலால் நீ இப்போது காஞ்சியை நோக்கி உன்னுடைய பயணத்தை ஆரம்பிப்பது நல்லது என்று கூறினார். பின்னர் சோழனை அழைத்துக் கொண்டு வடக்கு வாசல் வழியாக வந்தார். கோவிலின் வெளியே வந்ததும் கோட்டைக் கதவை அடைத்துத் தாளிட்டு நந்தி முத்திரையை வைத்தார். பின் வைகையின் அக்கரைக்கு கொண்டு சோழனை விட்டுவிட்டு உனக்கு நல்ல துணை கிடைக்கப் பெற்று செல்வாய் என்று திருவாய் மலர்ந்தருளினார். ஆலயத்தை மறுநாள் திறக்க வந்த ஊழியர்களுக்கு அதிர்ச்சி. வழக்கமாக ஆலயக் கதவுகள் மூடப்பட்டதும் அவற்றில் பாண்டிய முத்திரையான மீன் முத்திரையைப் பதிப்பார்கள். ஆனால் அன்று அங்கே காணப்பட்டதோ நந்தி முத்திரை அது பல்லவ நாட்டிற்குரியது. பல்லவம் அப்போது சோழராட்சியில் இருந்ததால் அது சோழ முத்திரையாகவும் பயன்பட்டது. அதை மதுரை ஆலயக் கதவுகளில் பொறித்தது யார்? செய்தி தெரிந்ததும் பாண்டிய மன்னன் கொதித்தான். எனக்குத் தெரியாமல் எதிரி இங்கே வந்து போயிருக்கிறான். இது பாண்டிய நாட்டின் மானத்திற்கும் வீரத்திற்கும் மகா இழுக்கு. எப்படி நடந்தது இந்த அநியாயம் இப்பழியைத் துடைக்க நாம் உடனே சோழ நாட்டின் மீது போர் தொடுத்தேயாக வேண்டும் முழங்கி படை திரட்ட உத்தரவிட்டான். போர் ஆயத்தங்கள் மும்முரமாக நடந்தன. விடிந்தால் படைகளுடன் சோழநாட்டை நோக்கிப் புறப்பட தயாராக இருந்த்தார்கள்.

குலபூஷண பாண்டியன் இரவு தூங்க செல்லும் முன்பாக சொக்கநாதரிடம் முறையிட்டு வேண்டினான். இரவில் குலபூஷண பாண்டியனின் கனவில் தோன்றிய சொக்கநாதர் உன்னைப் போலவே காடுவெட்டிச் சோழனும் என்னுடைய பக்தன். அவன் எம்முடைய தரிசனம் வேண்டினான். அவனுடைய விருப்பத்தை நிறைவேற்ற மாறுவேடத்தில் அவனை வரச்செய்து திருக்கோவிலின் வடக்கு வாயிற்வழியின் மூலமாக உட்செல்லச் செய்து வழிபாடு மேற்கொள்ளச் செய்து காஞ்சிக்கு திருப்பி அனுப்பினோம். இறுதியில் வடக்கு வாயில் கதவிற்கு நந்தி முத்திரையை வைத்து மூடினோம். சோழனின் பக்தியை எடுத்துரைக்கவே இவ்வாறு செய்தோம்

குலபூஷணா சோழன் மீதுள்ள சினத்தை விடு பகையை மற. அவனும் உன் போல் ஒரு சிவ பக்தன். அவன் பக்தியை மெச்சி நான்தான் சென்று அவனை இங்கு அழைத்து வந்தேன். மூடி முத்திரையிட்ட ஆலயக் கதவுகளைத் திறந்து சோழன் சிவதரிசனம் செய்யவும் நானே உதவினேன். திரும்ப மூடி முத்திரையிட்ட போது நந்தி முத்திரையை இட்டுவிட்டேன். பாண்டிய மன்னா நீ நினைப்பதுபோல் நந்தி முத்திரை பல்லவ நாடாளும் உரிமையால் சோழனுக்கு வந்ததல்ல. அது சிவராஜனின் சிறப்பு அடையாளம். இதை ஒரு காரணமாக்கி நீ சோழன் மீது போர் தொடுக்க வேண்டாம். குற்றம் சோழனுடையதல்ல என்னுடையது. ராஜ தண்டனை அளிப்பது என்றாலும் நீ எனக்கே அளிக்க வேண்டும் கனவில் வந்து சிவன் பேசப் பேச மெய் சிலிர்த்து போனார் பாண்டிய வேந்தர். பிறகு சிவநேசச் சோழனுக்குத் தூதனுப்பி நட்பு பேசினார். அதன் அடையாளமாக சோழன் மகளை பாண்டிய குமாரன் மணந்தான். பகை இப்போது உறவாக மலர்ந்து விட்டது. குலபூஷண பாண்டியர் சிவபதம் அடைந்தார். ராஜசேகரன் பாண்டிய மன்னன் ஆனான். ஆனால் ஈசன் சோழனுக்கு ஆதரவாகவே இருந்து விட்டார் என்பது அவன் மனக்குறை. இந்த வஞ்சகமே தன் தந்தையின் உயிரைக் குடித்துவிட்டதாக எண்ணினான். அதனாலேயே ஈசனை வணங்கவும் மறுத்தான்.

சோழன் மகளை மணந்தது பாண்டியனின் இளைய குமாரன் ராஜசிம்மன். மூத்தவன் ராஜசேகரன் மணந்திருப்பதோ சேரன் செல்வியை. இளையவன் சோழ சைன்யத்தோடு சேர்ந்து ஒருமுறை அண்ணனை எதிர்க்க எண்ணிச் சதி வேலைகள் செய்தான். அவை பாண்டிய ராஜதந்திரிகளால் முறியடிக்கப்பட்டன. பாண்டிய ராணி பிரபு பழசையெல்லாம் மறந்து விடுங்கள். உங்கள் தம்பி தன் குட்டு வெளிப்பட்டு விட்டதால் உங்கள் முகத்தில் விழிக்கவே அஞ்சி உறையூரே கதியென்று சோழநாட்டில் போய்க் கிடக்கிறாரே பிறகு ஏன் கவலை? சிவன் மீதான ஊடலையும் விட்டு விடுங்கள் என்றாள். இல்லை தேவி தம்பியை வேண்டுமானால் மன்னிக்கலாம். சிவபெருமான் செய்தது பெரிய அநீதி. எங்களுக்குள் ஒரு வழக்கு நடப்பதாக வேண்டுமானாலும் வைத்துக் கொள். குலதெய்வமாக எண்ணிய எங்களுக்கு அவர் ஓரவஞ்சனை செய்து விட்டார். சோழனுக்கு ஓடக்காரனாக நேரிலேயே சென்று உதவினார். சோழனுக்காக வாதிட என் தந்தையின் கனவில் மட்டுமே தோன்றினார். எங்கள் சிவபக்தி எதில் குறைந்தது? இதுவே என் தந்தையை மனம் நலியச் செய்து மரணத்தில் தள்ளியது. இவ்வளவு வருந்துகிறேனே என் கனவில் ஏன் வரவில்லை சிவன்? அவர் சோழன் ஆதரவாளர். அதனால்தான் நான் வெறுக்கிறேன் என்றான்.

சோழன் மகளை மணந்து உறையூர் ராஜமாளிகையில் தங்கியிருந்த பாண்டிய இளவல் ராஜசிம்மன் மீண்டும் ஒருமுறை மதுரை மீது படையெடுக்கத் திட்டமிட்டான். மதுரை நோக்கிப் புறப்பட்டு விட்டன சோழ சைன்யம். பொழுது புலர்ந்தால் மதுரைக் கோட்டையை முற்றுகையிடுவது அவர்கள் திட்டம். முன்னிரவில் மனைவியிடம் சிவபிரான் மீது ஏகப்பட்ட வசை மொழிகளை அர்ச்சித்து விட்டு கண்ணயரத் துவங்கியிருந்தான் ராஜசேகரப் பாண்டியன். நள்ளிரவில் அவன் கனவில் சிவன் தோன்றினார். குலபூஷண பாண்டியனின் புதல்வனே என் மீது சினம் கொண்ட பிள்ளையே எழுந்திரு. இது நீ உறங்க வேண்டிய தருணமல்ல. அங்கே சிவநேசச் சோழனின் மனத்தைக் கெடுத்து அவனையும் சோழப் படைகளையும் அழைத்துக் கொண்டு உன் தம்பி ராஜசிம்மன் உன்மீது போர் தொடுக்க வருகிறான். விடிந்தால் உன் கோட்டை முற்றுகை இடப்படும் நிலை. நீ என்னை வசை பாடினாலும் நான் உன்னைக் கோபித்ததில்லை. உன் வேண்டுகோள்படி இதோ உன் கனவில் தோன்றி உனக்கு நல்லதைச் செய்துள்ளேன். எழு விழி போராடு எதிரியை வெற்றிக் கொள் என்றார். சிவபிரான் பேசக்கேட்டு சிலிர்த்து எழுந்தான் பாண்டியன். விடியும் வரை காத்திருக்க அவன் விரும்பவில்லை. நிலைப் படையாக இருக்கும் சில நூறு வீரர்களை அழைத்துக் கொண்டு அப்பொழுதே புறப்பட்டான்.

சோழர் படையுடன் வரும் தம்பியை மதுரையின் எல்லைக்குள் நுழையவே விடக்கூடாது என்பது அவன் எண்ணம். வழியெங்கும் அவனுக்கு வியப்பூட்டும் விந்தை காத்திருந்தது. ஆங்காங்கே ஊருக்கு நூறுபேர் ஆயுதங்களும் தீப்பந்தங்களும் ஏந்தி நின்று காத்திருந்து மதுரைப் படையோடு தங்களை இணைத்துக் கொண்டனர். எப்படி நிகழ்ந்தது இந்த அதிசயம் மதுரைக்கு எதிரிகள் புறப்பட்டு வருவதை இவர்கள் எப்படி அறிவார்கள்? விசாரித்தான் பாண்டியன் எல்லோரும் கூறியது ஒரே தகவல் ஆஜானுபாகுவான ஒரு மனிதர் குதிரை மீது வந்தார். ஒவ்வொரு சிற்றூரிலும் மக்களை எழுப்பி சோழ சைன்யம் மதுரையைத் தாக்க வருகிறது. அவர்களை வழிமடக்கிப் போரிட இதோ பாண்டியன் சிறிய படையுடன் வருகிறான். இளம் சிங்கங்கள் எழுந்து ஆயுதம் ஏந்தி வந்து மதுரைப் படையுடன் சேர்ந்து கொள்ளுங்கள் என அறிவித்தார். அவர் பாண்டிய ராஜமுத்திரையான மீன் பொறித்த மோதிரத்தைக் காட்டினார். கையில் மீன் கொடியும் ஏந்தியிருந்தார். அவர் பேச்சை ராஜ கட்டளையாக எண்ணியே நாங்கள் திரண்டோம் என்றனர். யார் அந்த மாய மனிதன்? ராஜசேகரப் பாண்டியனால் ஊகிக்க முடியவில்லை. அந்தப் புதிர் அவிழ அவன் மறுநாள் இரவு வரை காத்திருக்க நேர்ந்தது. சோழர் படை முறியடிக்கப்பட்டது. தம்பியும் தம்பிக்கு உதவிய சோழ வேந்தனும் சிறைப்பட்டனர். இரவில் நிம்மதியாகக் கண்ணுறங்கப் போனான் ராஜசேகரன். யார் அந்த மாய மனிதன்? என்கிற வினா மட்டும் இன்னமும் அவன் மண்டையைக் குடைந்து கொண்டிருந்தது.

அந்த மாய மனிதன் அதே உருவில் அவன் கனவில் தோன்றினான். என்னவொரு கம்பீரம் பிரபோ தங்கள் கட்டளையை மக்களிடம் அறிவித்த ஊழியன் அடியேன்தான் என்றான். யார் நீ? என் ஊழியரில் எவரும் உன் போல் இல்லையே? நான் எப்போது உன்னிடம் கட்டளையிட்டேன்? இதோ இப்போது பார் என்னை. உன் ஐயம் அனைத்தும் விலகும் பாண்டிய வீரன் சிவனாகிறார். இறைவா தாங்களா எனக்கு ஊழியம் பார்த்தீர்கள்? என்றான். அதற்கு இறைவன் பதற்றம் வேண்டாம் பாண்டிய மன்னா பரிகாரம் என்பது மனிதர்கள் செய்ய வேண்டியது மட்டுமன்று பக்தனுக்காக இறைவனும் செய்யலாம். நான் சோழனுக்கு ஓடக்காரனாக வந்து ஊழியம் புரிந்தேன். உனக்கு உன் சேவகனாக இதோ வந்தேன் உன் ராஜ முத்திரையை ஏந்தி ஊழியம் புரிந்தேன். போதுமா இல்லை இன்னும் என்மீது உனக்குச் சினம்தானா? நான் எதும் ராஜ தண்டனை ஏற்க வேண்டுமா? என்று கேட்டார். சிவ சிவா என்ன பேச்சு சுவாமி இது தாங்கள் எனக்கு ஊழியம் பார்த்தீர்களா? எவ்வளவு பெரிய அபசாரத்துக்கு என்னை ஆளாக்கிவிட்டீர்கள். இதற்கு நான் ஏதேனும் பரிகாரம் செய்ய விரும்புகிறேன். என்ன செய்ய வேண்டும்? ஆணையிடுங்கள் நீ சினம் தணிந்தால் போதும். போய் சிவநேசச் சோழனை விடுதலை செய். உன் தம்பியையும் விடுவித்து மன்னித்து ஏற்றுக்கொள். அப்படியே ஆகட்டும் ஐயனே இப்போதும் தங்கள் கருணை அவர்கள் பக்கம்தான் இருக்கிறது. ஓடக்காரனாக வந்தீர்கள். மக்கள் முன் பாண்டிய வீரனாக வந்தீர்கள். எனக்கு மட்டும் கனவுக் காட்சிதானா? விண்ணும் மண்ணும் அதிர வாய் விட்டு சிரித்தார் இறைவன். பிறகு ராஜசேகரா என்னிடம் வாதிப்பதிலேயே இன்பம் காணும் முரட்டு பக்தன் நீ. உன் மனைவியிடம் என்ன சொன்னாய்? சிவன் என் கனவில் வரவேண்டும் என்றுதானே? வந்து விட்டேன் சரிதானே? வாழ்வே ஒரு கனவுதான் கனவு ஒரு வாழ்வுதான். கவலையை விடு கடமையைச் செய் சிவன் ஜோதிமயமானார். பாண்டியன் கனவிலிருந்து சந்தோஷமாக விடுபட்டான். கிழக்கு வெளுத்தது. சிவன் கட்டளைப்படி சிறைக் கதவுகள் திறக்கப்பட்டன. பண்பு சிறந்து பகை மறைந்தது. உறவின் உன்னதம் மலர்ந்தது. சோழ மன்னனை அழைத்துச் சென்று சொக்கேசப் பெருமானைத் தரிசிக்க வைத்தான் ராஜசேகரப் பாண்டியன். அவன் கண்ட கனவுகள் வரலாற்றுப் பக்கங்களில் பதிவாயின.

வாழ்க்கை

ஒரு சீடன் குருவிடம் தன் சந்தேகத்தை கேட்டான். குருவே வாழ்க்கை இனிமையானதா இல்லை கடுமையானதா? என்றான். அதற்கு அந்த குரு வாழ்க்கை பூனையின் பற்களைப் போன்றது என்று பதிலளிக்க சீடனுக்கு ஒன்றும் புரியவில்லை. நாம் வாழ்க்கையை பற்றி கேட்டால் இவர் பூனையின் பற்களை பற்றி சொல்கிறாரே என்று ஒன்றும் புரியாமல் குழம்பி நின்ற சீடனிடம் குரு அதனை விளக்கினார். ஒரு பூனையின் குட்டியிடம் பூனையின் பற்கள் எப்படிப்பட்டது என்று கேட்டால் பூனையின் பற்கள் மிக மென்மையானவை இனிமையானவை என்று சொல்லும். பூனை தன் குட்டிக்கு சிறிதும் வலிக்காதவாரு அக்கறையுடன் அதனை மிகப்பாதுகாப்பாக தன் பற்களால் கவ்விக்கொண்டு போகும். அதே ஒரு எலியிடம் பூனையின் பற்கள் எப்படிப்பட்டது என்ற அதே கேள்வியை கேட்டால் ஐயோ பூனையின் பற்கள் மிகக்கொடுமையானவை என்ற பதில்தான் வரும். பூனையின் பற்களை போலத்தான் வாழ்க்கையும். வாழ்க்கையை நாம் எப்படி பார்க்கிறோம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதை பொருத்தே அமையும் என்று விளக்கினார் அந்த துறவி.

திருவேங்கடமுடையான்

தொண்டைமான் என்ற மன்னன் நாட்டு நன்மைக்காக ஒரு யாகம் செய்ய ஆசைப்பட்டான். தனது விருப்பத்தைத் தன் புரோகிதரான ஜடாதாரியிடம் சொன்னான். அவரும் சம்மதித்தார். ஜடாதாரியோ தீய எண்ணத்துடன் ஒரு துர்தேவதையைக் குறித்து யாகம் செய்து நாட்டுக்குத் தீங்கு விளைவிக்கத் திட்டமிட்டார். அந்த யாகத்துக்கு அனைத்து ரிஷிகளையும் வரவேற்கும்படி ஜடாதாரியிடம் மன்னன் கூறினான். அவரும் நாராயண ரிஷி உட்பட அனைத்து ரிஷிகளையும் நேரில் சென்று வரவேற்றார். ஆனால் நாராயண ரிஷி மட்டும் திருவேங்கடமுடையான் அருளால் இவர் ஏதோ தீய எண்ணத்தில் யாகம் செய்கிறார் என உணர்ந்து கொண்டார். அதனால் யாகத்துக்கு வர மறுத்து விட்டார். மேலும் இந்த யாகத்தால் நாட்டுக்குத் தீங்கு ஏற்படாமல் காக்குமாறு திருவேங்கடமுடையானை வேண்டினார். நாராயண ரிஷியால் தனது திட்டத்துக்கு ஆபத்து ஏற்படலாம் என உணர்ந்த ஜடாதாரி அவரைப் பற்றி அவதூறாக மன்னனிடம் பலவாறு கூறினார். தொண்டைமான் என்ன பெரிய மன்னனா? அவன் செய்யும் யாகத்துக்கு நான் வர வேண்டுமா? மன்னன் என் காலில் வந்து விழுந்து வரவேற்றால் தான் வருவேன் என்றெல்லாம் கர்வத்துடன் நாராயண ரிஷி பேசுவதாகக் கூறிய ஜடாதாரி மன்னா அவருக்கு நீங்கள் தான் சரியான தண்டனை அளித்துத் தாங்கள் யாரென்று காட்டவேண்டும் என்றார். கோபம் கொண்ட மன்னன் தனது வீரர்களை அனுப்பி நாராயண ரிஷியை இழுத்து வரச் சொன்னான். அவர்களும் ரிஷியை மன்னன் முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள். இந்த நாட்டை ஆளும் மன்னன் நான் எனக்கு எப்படி மரியாதை தர வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா? மரியாதையாக இந்த யாகத்தில் நீங்களும் பங்கு கொள்ளுங்கள் என்றான் மன்னன். இந்த யாகம் செய்வது நாட்டுக்கு நல்லதல்ல. ஏதோ துர்தேவதையைக் குறித்து ஜடாதாரி யாகம் செய்கிறார். நான் இதில் பங்கேற்க மாட்டேன் என்றார் ரிஷி. அவரது விளக்கத்தை ஏற்காத தொண்டைமான் இறுதியாகச் சொல்கிறேன். மன்னனின் ஆணைக்கு அடிபணிவீரா? மாட்டீரா? என்றான். நீ இந்த ஒரு தேசத்துக்குத் தான் அரசன். மன்னா என் ஏழுமலையானோ அகிலாண்டங்கோடி பிரம்மாண்ட நாயகன். அந்த மன்னாதி மன்னனைத் தவிர வேறு எந்த மன்னனுக்கும் அடிபணிய மாட்டேன் என்றார் ரிஷி. அவரைச் சிறையிலடைத்தான் தொண்டைமான்.

சிரித்துக் கொண்டே திருவேங்கடமுடையானின் அடியார்களுக்குச் சிறைச்சாலை கூட தங்க மாளிகை போல மின்னும். மூங்கில் கழிகள் கூட அவர்களுக்குக் கரும்பு போல் இனிக்கும் என்றார் நாராயண ரிஷி. அப்படியா? அப்படியானால் உங்கள் அகிலாண்டங்கோடி பிரம்மாண்ட நாயகனிடம் சொல்லி இந்தச் சிறையைத் தங்கமாக மாற்றச் சொல்லுங்கள். மூங்கில் கழிகளைத் தருகிறேன் நீங்கள் அதைக் கரும்பாய்க் கருதிச் சாப்பிடுங்கள். இவை இரண்டும் நாளை காலைக்குள் நடக்காவிட்டால் உங்கள் தெய்வத்தை இனி அகிலாண்டங்கோடி பிரம்மாண்ட நாயகன் என்று அழைக்கக் கூடாது என்றான். மூங்கில் கழிகளை அவரது சிறைக்குள் கொண்டு வந்து போடச் சொல்லி உத்தரவிட்டு விட்டுத் தன் அந்தப்புரத்துக்குச் சென்றான் மன்னன் அன்றிரவு திருவேங்கடமுடையான் கஜேந்திரன் யானையை சிறைச் சாலைக்கு அனுப்பினார். கஜேந்திரன் வந்து அனைத்து மூங்கில்களையும் எளிதில் தின்று தீர்த்தார். தன் திருமார்பில் உள்ள மகாலட்சுமியிடம் அந்தச் சிறைச் சாலையைக் கடாட்சிக்கும்படி கூறினார் திருமலையப்பன். மகாலட்சுமியின் பார்வை பட்டதும் சிறைச்சாலை பொன் மயமானது. அடுத்த நாள் காலை வந்து பார்த்த மன்னன் மூங்கில் கழிகள் அனைத்தும் காணாமல் போனதையும் சிறைச்சாலை முழுவதும் தங்கமயமாக இருப்பதையும் கண்டு வியந்து திருமலையப்பனின் மேன்மையையும் நாராயண ரிஷியின் பக்தியின் பெருமையையும் உணர்ந்தான். ஜடாதாரி செய்ய நினைத்த யாகத்தை நிறுத்தினான். அன்று முதல் தொண்டைமான் திருமலையப்பனின் பக்தனாக மாறினான்.

பகவத்கீதையும் கிருஷ்ணரும்

ஒரு ஏழை பிராமணன் கங்கைக் கரையில் மனைவியோடு வசித்து வந்தான். தினமும் கீதை பாராயணம் செய்து விட்டு பிட்சை எடுத்து கிடைத்ததை மனைவியிடம் கொடுத்து சமைக்க சொல்லி அன்றைய உணவை கிருஷ்ணனுக்கு நைவேத்யம் செய்து விட்டு இருவரும் சாப்பிடுவது வழக்கம். ஒரு நாள் கீதையைப் பாராயணம் செய்யும் போது ஒன்பதாம் அத்தியாயத்தில் யோக க்ஷேமம் வஹாம்யஹம் என்று வந்தது. இதனை படித்ததும் அவனுக்கு ஒரு சந்தேகம். இந்த உலகத்தில் கோடானு கோடி பேர் இருக்கிறார்கள். அவ்வளவு பேரையும் கிருஷ்ணன் எப்படி நான் ரட்சிக்கிறேன் என்று சொல்கிறான். தானே ஒவ்வொருவரின் துன்பத்தையும் அறிந்து நேரில் சென்று போக்குவது என்பது நடக்காத காரியம். எல்லோரின் துன்பத்தையும் கிருஷ்ணன் தனி ஒருவனாக எப்படி சுமப்பான்? அவர்களை துன்பத்திலிருந்து எவ்விதம் காப்பாற்றுவான்? நான் பாதுகாக்கிறேன் என்றால் என்ன அர்த்தம் என்று திரும்பி திரும்பி கீதையை படித்தும் அவருக்கு விளங்கவில்லை. இதை விடக்கூடாது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்து அந்த சுலோகத்தின் அருகில் x என்ற குறியிட்டை போட்டுவிட்டு புத்தகத்தை மூடினார். ஜால்ராவையும் பாத்திரத்தையும் எடுத்துக் கொண்டு வழக்கம் போல பிட்சைக்கு கிளம்பினான். அன்று யாரும் அவனுக்கு உணவு தானியங்கள் என்று எதுவும் பிட்சை அளிக்கவில்லை. ஜால்ராவை வைத்து பாடிக் கொண்டே சென்றான்.

பிராமணன் ஊருக்குள் அலைந்து கொண்டிருந்த சமயம் ஒரு சிறு பையன் பிராமணன் வீட்டு கதவைத் தட்டினான். பிராமணன் மனைவி வாசல் கதவை திறந்த போது அந்த சிறுவன் தலையிலிருந்து ஒரு பெரிய மூட்டையை இறக்கி வைத்தான். இதனை கண்ட அவன் மனைவி யாரப்பா நீ? என்ன இதெல்லாம்? தவறான இடத்திற்கு வந்து விட்டாய் போல இருக்கிறது என்றாள். அதற்கு அந்த சிறுவன் இல்லேம்மா. நான் அருகில் வசிக்கிறேன். இது என் குருநாதர் வீடு. அவர் எனக்கு கட்டளை இட்டிருக்கிறார். அந்த கட்டளையின் படி உணவிற்கு தேவைப்படும் அனைத்து பொருட்களும் கொண்டு வந்திருக்கிறேன் என்றான். நான் உன்னை பார்த்ததில்லை. அவருக்கு தெரியாமல் இதை நான் வாங்க மாட்டேன். இதெல்லாம் வேண்டாம் அவருக்கு தெரியாமல் வாங்கினால் அவர் என்னை கோபிப்பார் என்றாள். அம்மா உங்களுக்கு நான் இங்கே வருவதும் தெரியாது போவதும் தெரியாது. ஆனால் என் குருநாதருக்கு தெரியும். இதோ பாருங்கள் அவர் சொன்னதும் இந்த நான் மூட்டையை சுமந்து கொண்டு மெதுவாக நடக்கிறேன் என்று என் முதுகில் இடது பக்கமும் வலது பக்கமும் பலமாக அடித்திருக்கிறார் பாருங்கள் என்றான். முதுகில் x போல் அடித்தற்கான தழும்பு இருந்தது. அவள் திகைத்தாள் கணவர் ஏன் இவ்வாறு இந்த சிறுவனிடம் கொடுமையாக நடந்து கொண்டிருக்கிறார் என்று எண்ணியபடி நீ உள்ளை வா என்று அந்த சிறுவனை உள்ளே அழைத்து முதுகில் எண்ணெய் தடவி அவனுக்கு உணவளித்தாள். அவர் வரும் வரை ஓய்வெடு என்றாள். அவன் பூஜை அறையில் போய் படுப்பதாக சொல்லி உள்ளே சென்றான்.

பிராமணர் உணவு சமைக்க பிட்சை எதுவும் கிடைக்காமல் களைப்பாக வீடு திரும்பினார். அவரைக் கண்டதும் அவரை பேச விடாமல் ஒரு சிறுவனிடம் இப்படியா கொடுமைப்படுத்தி அடிப்பீர்கள் என்று அவரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்க ஆரம்பித்தாள். அவருக்கு ஒன்றும் புரியவில்லை என்ன உளற்றுகிறாய் என்றார். அவரிடம் நடந்த அனைத்தையும் சொல்லி மேலும் கேள்வி கேட்க ஆரம்பித்தாள். பிராமணருக்கு தலை சுற்றியது. எனக்கு சிஷ்யனா? நான் சாமான் கேட்டேனா? அவனை அடித்தேனா? என்னம்மா உளறுகிறாய். நீ சொல்வது போல் எதுவுமே நடக்கவில்லை என்றார். அதற்கு அவள் அந்த சிறுவன் முதுகை காட்டினான். அதில் x போல் அடித்த அடையாளம் இருந்தது. அவன் முதுகில் எண்ணெய் தடவினேன். சிறுவன் பொய் சொல்லவில்லை என்றாள். அதற்கு பிராமணர் என் கிருஷ்ணன் மீது ஆணையாக சொல்கிறேன். எனக்கு அவனைத் தெரியவே தெரியாது நான் அடிக்கவில்லை என்கிறார். அதற்கு அவள் இதோ பூஜை அறையில் தான் அந்த சிறுவன் இருக்கிறான் போய் பாருங்கள் என்றாள்.

பிராமணர் பூஜை அறைக்கு ஓடினார். வீடு முழுதும் தேடினார். சிறுவனைக் காணவில்லை. பிராமணருக்கு புரிந்துவிட்டது வந்தது கிருஷ்ணன் தான். வீட்டில் நிறைய உணவுப் பொருட்களை கொடுத்து தன் வறுமை நீக்கி கிருஷ்ணன் லீலை புரிந்திருக்கிறார். கிருஷ்ணரின் மீது நன்றியோடு கீதை புத்தகத்தை எடுத்து மறுபடியும் பாராயணம் செய்ய பக்கத்தை புரட்டினார். காலையில் அவர் சந்தேகத்தோடு போட்ட x குறியைக் காணவில்லை. கோடானு கோடி மக்களின் துன்பத்தை தீர்க்க நான் அருகிலே இருப்பேன் என்று சொல்கிறாயே. உன்னால் அது எப்படி சாத்தியம் என்று உன்னை சந்தேகப்பட்டேனே. உன்னால் அனைத்தையும் செய்ய முடியும் என்று எனக்கு புரிய வைத்தாய். கீதையும் நீயும் வேறல்ல என்பதைக் காட்ட கீதையில் நான் போட்ட x குறியை உன் முதுகில் தாங்கி வந்து என் சந்தேகத்தை தீர்த்து என் அகக் கண்ணை திறந்தாய் கிருஷ்ணா என்னை மன்னித்துவிடு என்று பிரார்த்தனை செய்தார்.

திருநீறு

ஒருவன் வறுமையில் வாடிக் கொண்டிருந்தான். அவன் சோம்பேறியும் அல்ல. சென்ற ஜென்ம பிரதிபலனோ அவன் எங்கு சென்றாலும் வேலை கிடைக்காது. அவன் பொய் பேச மாட்டான். ஆகையால் அவனை அனைவரும் வெறுப்பர்கள். ஒரு நாள் தன் வாழ்வை நொந்து நடந்து கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு அருகில் மேனியெங்கும் திருநீற்றை அணிந்தபடி ஒரு சிவனடியார் சென்றார். அவரை பார்த்ததும் ஐயா சற்று எனக்காக நிற்க முடியுமா என கேட்டான். சிவனடியாரும் என்ன வேண்டும் உனக்கு எனக்கேட்டார். சிறிய சந்தேகம் தீர்த்து அருள்வீராக என்று அவரை வணங்கி தன் கேள்வியை கேட்டான். ஐயா தாங்கள் ஏன் இப்படி சாம்பலை உடல் முழுவதும் பூசிக் கொண்டிருக்கிறீர்கள் என்றான்.

சிவனடியாரும் இது மனித உடல் இறுதியின் வெளிப்பாடு. அதன் அடையாளமே இது நாம் இறந்த பிறகு சாம்பலாய் போய் விடுவோம் என நம் மனம் எப்போதும் நினைக்க வேண்டும். ஆகவே இந்த உடலால் அடுத்தவர்க்கு தீமை செய்யக் கூடாது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளவும் இன்னும் உயிருள்ள வரை இதுவே மகாலட்சுமி அம்சம் இதையணிந்தால் செல்வம் பெருகும் என்பதற்காகவும் திருநீறு அணிகிறேன் என்றார். அதற்கு அவன் சுவாமி எங்கள் குல வழக்கத்தில் இதை அணிய மாட்டார்கள். நானும் வறுமையில் வாடுகிறேன் நான் என்ன செய்வேன் என்று சிவனடியாரிடம் புலம்பினான். சிவனடியாரும் சரி நீ திருநீறு அணியவில்லை என்றாலும் பரவாயில்லை அணிந்தவர் நெற்றியையாவது பார் உன் வறுமை நீ்ங்கிவிடும் என சொல்லி அங்கிருந்து கிளம்பினார். ஏழை சிந்தித்தான். நாம் பூச வேண்டாம் சிவனடியார் சொல்லியது போல் திருநீறு அணிந்தவரின் நெற்றியை பார்ப்போம் என்று முடிவு செய்தான். வீட்டின் எதிரில் திருநீறணிந்து அதிகாலை மண்ணெடுக்கச் செல்லும் குயவரின் நெற்றியை தரிசிக்க வேண்டும் என முடிவு செய்து விட்டு அதிகாலை எழ வேண்டும் என்று உறங்க சென்றான். அதிகாலை எழுந்து தெருமுனையில் குயவரின் நெற்றித் திருநீறை காண காத்திருந்தான். குயவர் வரவில்லை விசாரித்தான். அவர் சீக்கிரமாகவே சென்று விட்டார் என்று சொன்னார்கள். நாம் மண்ணெடுக்கும் இடத்திற்கே சென்று அவரின் நெற்றி விபூதியை தரிசனம் செய்யலாம் என எண்ணியவாறு வயலை நோக்கி நடந்தான்.

குயவர் நெற்றி நிறைய விபூதியுடன் மண்ணை தோண்டிக் கொண்டிருக்கும் போது எதிர் பாராதவிதமாக புதையல் பானை அவருக்கு சிக்கியது. அந்த தங்கப் பானை புதையலைக் கண்டு அதிர்ச்சியும் மகிழ்ச்சியுடனும் இதை எப்படியாவது வெளியில் யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு கொண்டு சென்று விட வேண்டும் என்று எண்ணினார். ஆனால் பானை இருவர் சேர்ந்தால்தான் தூக்க முடியும் என்ற அளவிற்கு எடை கணமாக இருந்தது. யாராவது வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டிருந்தான். அங்கு வந்து சேர்ந்த ஏழையானவன் அவர் நெற்றியைப் பார்த்து பார்த்துட்டேன் பார்த்துட்டேன் என ஆவலாய் கூறினான். குயவர் இவன் புதையலைத்தான் பார்த்து விட்டானோ? என்று எண்ணி உண்மையாகவே நீ பார்த்தாயா? எனக் கேட்டான். ஏழையானவன் ஆமாம் நிறைவாகக் கண்டு விட்டேன் எனக் கூறினான். அதற்கு குயவன் அப்படியென்றால் குழிக்குள் இறங்கி இந்தப் பானையை ஒரு கைப்பிடி ஆளுக்கு பாதி எடுத்துக் கொள்வோம் எனக் கூறினான். ஏழைக்கு அப்போதுதான் உண்மை விளங்கியது. அப்போது சிந்தித்தான் நெற்றியைப் பார்த்ததற்கே தங்கம் பாதி கிடைத்தது இன்னும் நாம் பூசினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று தன் குல வழக்கத்தை தள்ளி வைத்து விட்டு திருநீற்றை பூசினான்.

ஓப்பீடு

துறவி ஒருவரின் புகழ் நாடெங்கும் பரவியதைக் கண்ட மன்னர் ஒருவருக்கு பொறாமை ஏற்பட்டது. தன் அமைச்சரிடம் எனக்கு சேவை செய்ய ஆயிரமாயிரம் பணியாளர்கள் காத்துக் கிடக்கின்றனர். ஆனால் ஏதுமில்லாத துறவிக்கு கிடைக்கும் மரியாதை எனக்கு கிடைக்கவில்லை ஏன் எப்படி? என கேட்டார்.

அமைச்சர் மன்னரிடம் இன்றே நாம் துறவியை சந்தித்து அவரது புகழுக்கான் காரணத்தை அறிந்து கொள்வோமே என்றார். இருவரும் துறவியைச் சந்தித்தனர். சுவாமி என் மனதில் ஒரு சந்தேகம் என வந்த நோக்கத்தை வெளிப்படுத்தினார் மன்னர். உடனே துறவி மன்னா வானில் பிரகாசிக்கிறதே அது என்ன? என்று கை காட்டினார். நிலா என்றார் மன்னர். தென்றலில் அசைந்தாடும் மலரைக் காட்டி இது என்ன என கேட்டார். ரோஜாப்பூ என்றார் மன்னர். இந்த பூ எப்போதாவது நிலவைப் பார்த்து அதைப் போல ஒளி வீச முடியவில்லையே என்று வருந்தியிருக்கிறதா? அல்லது நிலா மலர் போல மணம் வீச முடியவில்லையே என எண்ணியதுண்டா? யாரையும் யாரோடும் ஒப்பிடத் தேவையில்லை இயற்கையின் படைப்பில் உயர்வு தாழ்வு இல்லை ஒவ்வொருவர்குள்ளும் ஒரு திறமை இருக்கிறது. உன்னைப்போல் என்னால் வாளெடுத்து என்னால் சண்டை போடமுடியாதே என்றார் துறவி. மன்னருக்கு தன் சந்தேகம் தீர்ந்து அறிவுக் கண் திறந்தது.

ஏழை பணக்காரன்

ஒரு அரசன் இன்னொரு நாட்டின் மீது படை எடுப்பதற்காக ஒரு காட்டைக் கடந்து சென்று கொண்டிருந்தான். காட்டிற்குள் ஒரு முனிவர் இருந்தார். அவரிடம் தனது வெற்றிக்காக ஆசி பெறச் சென்றான் அரசன். காட்டில் கடும் குளிர் அடித்தது. முனிவரோ இடையில் மட்டுமே ஆடை உடுத்தியிருந்தார். தியானத்தில் ஆழ்ந்திருந்த அவருக்கு தனது மேலாடையை எடுத்துப் போர்த்தினான் அரசன். கண் விழித்த முனிவர் அரசனைப் பார்த்தார். யாரப்பா நீ எதற்காக இங்கே வந்தாய் என்று கேட்டார். அதற்கு அரசன் முனிவரே நான் பண்ணைபுரத்தின் அரசன். பக்கத்து நாட்டின் மீது படையெடுத்துச் செல்கிறேன். நான் வெற்றி பெற தங்களிடம் ஆசி பெறவே காத்திருக்கிறேன் என்றான். அதற்கு முனிவர் எனக்கு அணிவித்த இந்த மேலாடையை எடுத்துச் செல் என்றார். திடுக்கிட்ட அரசன் நான் ஏற்கனவே பணக்காரன். என்னிடம் இதுபோல் பல சால்வைகள் உள்ளன. அதில் ஒன்றைத் தான் உங்களுக்கு கொடுத்தேன். இதை தாங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள் என்றான். அதற்கு முனிவர் அரசனே உன்னிடம் ஏற்கனவே ஒரு நாடு இருக்கிறது. அது போதாதென்று இன்னொரு நாட்டையும் பிடிக்கச் செல்கிறாய். ஒரு நாடு இருக்கும் போது இன்னோரு நாடு உனக்கு தேவைப் படுகிறது. அது போல் எத்தனை சால்வைகள் இருந்தாலும் இதுவும் உனக்கு தேவைப்படும் என்றார். அரசன் பதில் பேச முடியாமல் விழித்தான். முனிவர் தொடர்ந்தார். தேவை உடையவனே ஏழை அவனுக்கே பொருட்கள் தேவை. உனக்கு தேவை இருப்பதினால் நீயே இதனை எடுத்துச் செல். நான் தேவை இல்லாதவன் ஆகவே நானே பணக்காரன் ஆகவே எனக்கு வேண்டாம் என்று கண்ணை மூடி மீண்டும் தியானத்தை தொடர்ந்தார். அரசனுக்கு துறவியின் வார்த்தைகள் சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது. போர் எண்ணத்தைக் கைவிட்டு நாடு திரும்பினான்.

நம்பிக்கை

ஒரு ஊரில் திருடன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவ்வூரில் அவனைப் பற்றி தெரிந்ததால் அவனால் திருட்டு தொழிலை செய்ய முடியவில்லை. வேறு ஊருக்கு சென்று திருட்டு தொழிலை செய்ய முடிவு செய்து பயணமானான். வெகுதூரம் பயணப்பட்டு ஓர் ஊரை அடைந்தான். திருடனுக்கோ அகோர பசி. உணவுக்கு எங்கு செல்வது எனப் பார்க்கும் பொழுது பூசணிக்காய் தோட்டம் ஒன்று இருப்பதை கண்டு வேலியை தாண்டி குதித்து பூசணி பழத்தைத் திருடி உண்ண எண்ணினான். வெள்ளை பூசணி பழத்தை திருடும் சமயம் தோட்ட காவல்காரன் யாரோ ஒருவன் தோட்டத்தில் இருப்பதை பார்த்து கூச்சலிட்டான். சப்தம் கேட்டு மக்கள் கூட்டமும் தோட்ட காவல்காரனும் வருவதை கண்ட திருடன் மறைந்து கொள்ள இடம் தேடினான். பூசணி தோட்டத்தில் மறைந்து கொள்ள இடமா இருக்கும்? உடனே சமயோஜிதமாக தனது ஆடைகளைக் கழற்றி விட்டு பூசணிக்காய் மேல் படந்திருக்கும் சாம்பலை எடுத்து உடல் முழுவதும் பூசிக் கொண்டான். திருடனை நெருங்கிய மக்கள் நீண்ட நாட்கள் பசியில் மெலிந்த உடல் சாம்பல் பூச்சு என அங்கு ஒரு சிவ தொண்டு புரியும் ஆன்மீக குரு இருப்பதாக நினைத்துக் கொண்டனர்.

திருடனின் சாம்பல் பூச்சு அவனை ஒரு முனிவனாக காட்டியது. தாங்கள் முனிவரை தவறாக எண்ணியதாக்க கூறி மன்னிப்பு கேட்டனர். ஊருக்கு வந்த புதிய முனிவரை காண பலரும் வரத் துவங்கினார்கள். ஞானத் தேடல் கொண்ட ஒருவன் இந்த முனிவரை சந்தித்தான். ரிஷி புருஷரே என்னை சிஷ்யனாக ஏற்று உங்களைப் போல ஞானம் அடைய வழி சொல்லுங்கள் எனக் கேட்டான். பூசணி முனிவருக்கு ஞானம் என்றால் என்ன என்றே தெரியாது. வாய் திறந்து பேசினால் தனது சுயரூபம் தெரிந்துவிடும் என்பதால் சைகையில் பேச ஆரம்பித்தார்.

பூசணி முனிவர் பூசணி திருட வந்த நான் இவ்வாறு ஆகிவிட்டேன் என்பதையே சைகையில் கூறுவதற்காக பூசணிக்காயை காட்டி தனது உடல் முழுவதையும் காட்டி விட்டு கண்களை மூடினார். வாலிபனோ தன்னை ஆசீர்வதித்து சிஷ்யனாக ஏற்றுக் கொண்டார் என்று நினைத்தான். மேலும் உலகில் எதுவும் இல்லை அனைத்தும் உன் உள்ளே இருக்கிறது என குரு உணர சொல்வதாக எண்ணிக் கொண்டான். சீடனோ ஆனந்தமாக அவரை மூன்று முறை வலம் வந்து வணங்கி விடை பெற்றான். வருடங்கள் ஓடின. தீவிர தேடலில் சீடன் ஞானம் அடைந்தார்.

இந்தக் கதையின் மூலம் குருவின் தன்மை முக்கியமில்லை. சிந்தனையில் உணர்வுகளில் நம்முடைய எண்ணத்தை நம்பிக்கையில் வைத்ததால் ஞானம் கிடைக்கும்.

தொண்டு

ஒரு பெரிய அரசர் இருந்தார். அவருக்கு ஆன்மிகத்தில் மிகவும் ஈடுபாடு ஆகையால் தினந்தோறும் கோவிலுக்கு செல்வார். வழக்கம் போல ஒரு நாள் கோவிலுக்கு சென்று திரும்பி வந்து கொண்டிருந்தார். கோவிலுக்கு வெளியில் ஒரு சந்நியாசி தியானத்தில் அமர்ந்திருந்தார். இதனைக் கண்ட அரசர் அவரிடம் சென்று வணங்கி நின்றார். சந்நியாசியும் ஆசிர்வாதம் செய்தார். அரசர் தன்னிடம் இருந்த விலை உயர்ந்த சால்வை ஒன்றை சன்னியாசிக்கு கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பினார். மறுநாள் காலையில் அரசர் அரண்மனையின் மேல் மாடத்தில் நின்றிருந்தார். அப்போது தெருவில் ஒரு பிச்சைக்காரன் சென்று கொண்டிருந்தான். அவனை பார்த்த அரசர் அதிர்ச்சி அடைந்தார். காரணம் சன்யாசியிடம் கொடுத்த அந்த விலை உயர்ந்த சால்வையை இப்போது அந்த பிச்சைகாரன் வைத்திருந்தான். அரசர் உடனே காவலர்களை அனுப்பி அந்த பிச்சைக்காரனை அழைத்து வரச் சொன்னார். அவனிடம் இந்த போர்வை எப்படி வந்தது என்று விசாரிச்சார். கோவில் வாசலிலே தனக்கு ஒரு சன்யாசி கொடுத்தார் என்று சொன்னான். உடனே அந்த சன்யாசியை அழைத்து வர உத்தர விட்டார். சன்யாசியிடம் ஏன் பிச்சைக்காரனிடம் இந்த சால்வையை கொடுத்தீர்கள் என்று கேட்டார். அதற்கு சன்யாசி இவன் இரவில் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தான். அவனது உடையும் கிழிந்திருந்தது. ஆகவே எனக்கு தேவைப்படுவதை விட இவனுக்குத்தான் தேவை என்று கொடுத்து விட்டேன் என்றார். இந்த பதிலைக் கேட்ட பிச்சைக்காரன் சன்யாசியின் அன்பில் பூரித்து மகிழ்ச்சியில் சிரித்தான். இதனைக் கண்ட அரசர் கோபமடைந்து இது மிகவும் விலை உயர்ந்த சால்வை அரசர்களுக்கு என்றே விசேசமாக தயாரிக்கப்பட்டது. அதை உங்களுக்கு கொடுத்தேன். இந்த சால்வையை அவனிடம் கொடுத்தது என்னை அவமதிப்பு செய்வது போல் உள்ளது. ஆகவே உங்களையும் உங்களுடன் இந்த பிச்சைக்காரனையும் சிறையில் அடைக்க உத்தர விடுகிறேன் என்று சொல்லி விட்டு அரண்மனைக்குள் சென்று விட்டார். காவலாளிகள் இருவரையும் சிறையில் அடைத்தார்கள்.

அன்றிரவு அரசர் தூக்கத்தில் ஒரு கனவு கண்டார். அந்த கனவில் மன்னர் அந்த கோவிலுக்கு போகிறார். ஆண்டவன் சந்நிதியில் போய் நிக்கிறார். அங்கே கடவுள் குளிரால் நடுங்கி கொண்டிருக்கிறார். அரசர் கடவுளே என்ன ஆச்சு உனக்கு என்றார்? அதற்கு கடவுள் குளிர் அதிகமாக இருக்கிறது என்றார். உடனே அரசர் தன்னிடமிருந்த விலை உயர்ந்த சால்வையை எடுத்துக் கொண்டு கடவுளை நெருங்கினார். கடவுள் பயத்தில் கத்தினார் என்ன அது? உன்னுடைய சால்வையா? வேண்டாம் வேண்டாம் என்றார். அரசர் கடவுளே இதை ஏன் வேண்டாம் என்று சொல்கிறீர்கள்? நான் என்ன பாவம் செய்தேன்? என்று பயத்துடன் நின்றார். அதற்கு கடவுள் நேற்று ஒரு சால்வையை எனக்கு கொடுத்தனுப்பினாய். அதை கொண்டு வந்தவனையும் பெற்றுக் கொண்டவனையும் சிறையில் அடைத்து விட்டாய். இப்போது எனக்கும் சால்வை கொடுக்கிறாய். நாளை என்னையும் சிறையில் அடைத்து விடுவாய் ஆகவே வேண்டாம் என்றார். அரசர் அதிர்ச்சியில் விழித்து கொண்டார் அவருக்கு எல்லாம் புரிந்தது. ஓடிப்போய் அவரே சிறையின் கதவுகளை திறந்து விட்டார். சன்யாசியின் கால்களில் விழுந்தார். சுவாமி நான் அறியாமல் செய்து விட்டேன் தாங்கள் ஒரு மகான் என்னை மன்னித்து விடுங்கள் என்றார். அரசரே துன்பப் படுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான் கடவுளுக்கு செய்கிற தொண்டு அதை புரிந்து கொள் என்று சொல்லி விட்டு நடக்க ஆரம்பித்தார் சன்யாசி.