பக்தர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலாக இராமகிருஷ்ணர் சொன்ன குட்டி கதை.
ஒரு மனிதன் தனக்கு பணம் தேவைப்பட்ட போதெல்லாம் கடன் வாங்கிக் கொண்டிருந்தான். கடனை அடைக்கும் வகையில் அவன் தொழிலை வளர்க்கவில்லை. தேவைப்படும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் கடன் வாங்கிக் கொண்டேயிருந்தான். இதனால் கடன் அதிகமாகி விட்டது. கடன் கொடுத்தவர்கள் பலர் அடிக்கடி கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்கும்படி அவனைத் தொந்தரவு செய்ய ஆரம்பித்தார்கள். அவனால் கடனை திருப்பிக் கொடுக்க முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு வந்தது. இதிலிருந்து எப்படித் தப்புவது என்று அந்த மனிதன் யோசனை செய்து ஒரு வழியைக் கண்டு பிடித்தான். அதன்படி பைத்தியம் பிடித்தவன் போல் பாசாங்கு செய்தான். உறவினர்கள் அவனுடைய பைத்தியத்தைத் தெளிவிப்பதற்காக வைத்தியர்களைக் கூட்டி வந்து காண்பித்தார்கள். வைத்தியர்கள் வந்து பார்த்து மருந்து கொடுத்துப் போனார்கள். மருந்து கொடுக்கக் கொடுக்க அவனுடைய பாசாங்கும் அதிகரித்தது. அந்த வைத்தியர் சரியில்லை இந்த வைத்தியர் சரியில்லை என்று உறவினர்கள் வேறு வேறு வைத்தியர்களைக் கூட்டிக் கொண்டு வந்து காண்பித்தார்கள்.
இறுதியாக ஒரு வைத்தியரிடம் அழைத்துச் சென்றார்கள். அவர் அனுபவம் நிறைந்தவர். சிறந்த அறிவாளி. அவர் அவன் கையைப் பிடித்துப் பார்த்தார். அவனுடைய செயல்களைக் கூர்ந்து கவனித்தார். இது உண்மையான பைத்தியம் அல்ல என்று தெரிந்து கொண்டார். பைத்தியக்காரனைத் தனியாக அழைத்துச் சென்றார். நீ செய்வது சரியல்ல. இப்பொழுது உன்னிடம் சில பைத்திய அறி குறிகள் தென்படுகின்றன. நீண்டநாள் இப்படியே பைத்தியம் போல் நடித்துக் கொண்டிருந்தால் உனக்கு உண்மையாகவே பைத்தியம் பிடித்துவிடும். எச்சரிக்கையாய் இரு என்று கூறினார். இதைக் கேட்ட அந்த மனிதன் பயந்து போய் அன்று முதல் பைத்தியக்காரனைப் போல் பாசாங்கு செய்வதை நிறுத்திவிட்டான்.
ஒரு மனிதன் தொடர்ந்து தான் எப்படி இருப்பதாகக் காட்டிக் கொள்கிறானோ அவன் அப்படியே ஆகி விடுகிறான். ஆகவே நல்லவனாக இருப்பதாகக் கொண்டால் அவன் நல்லவனாகவே ஆகி விட முடியும். பக்தி இருப்பதைப் போல் நடித்துக் கொண்டிருந்தால் பக்தி வந்துவிடும். தியானம் செய்வது போல் நடித்துக் கொண்டிருந்தால் இறுதியில் தியானம் கைகூடும்.
கீதை விளக்கத்தில் விவேகானந்தர் – நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்த வனாகவே ஆகிவிடுவாய்.
தெய்வங்களைப் பற்றியும் மற்ற மதங்களைப் பற்றிம் பக்தர் கேட்ட கேள்விக்கு பதிலாக இராமகிருஷ்ணர் சொன்ன குட்டி கதை.
ஒரு பனந்தோப்பு வழியாக இரண்டு மனிதர்கள் பேசிக் கொண்டே போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு மனிதன் அங்கு நின்ற பனை மரத்தின் மேல் ஒரு பச்சோந்தி இருப்பதைக் கவனித்தான். அதோ அந்தப் பனை மரத்தில் ஓர் பச்சோந்தி இருக்கிறது பார். அதன் நிறம் சிவப்பு என்றான். இரண்டாவது மனிதன் எந்தப் பனை மரம் எந்தப் பனைமரம்?” என்று கேட்டுக் கடைசியாக அவன் சுட்டிக் காட்டிய மரத்தைப் பார்த்தான். அதில் இருந்த பச்சோந்தியையும் பார்த்தான். பனைமரம் இருக்கிறது. அதில் பச்சோந்தியும் இருக்கிறது. ஆனால் அதன் நிறம் சிவப்பல்ல நீலநிறம் என்று சொன்னான் இரண்டாவது மனிதன். சிவப்புக்கும் நீலத்துக்கும் வேற்றுமை தெரியாமல் உளறுகிறானே இவன் என்று நினைத்துக் கொண்டான் முதல் மனிதன். இருவருக்கும் பச்சோந்தி என்ன நிறம் என்பதில் விவாதம் முற்றியது.
பனந்தோப்பில் இவர்கள் இருவரும் விவாதித்துக் கொண்டிருக்கும் போது வேறொரு மனிதர் அந்த பக்கம் வந்தார். சண்டையிட்டுக் கொண்ட இருவரும் அந்த வழியாக வந்தவரை அருகில் அழைத்தார்கள். ஐயா இந்த பச்சோந்தி சிவப்பு நிறம் தானே என்று கேட்டான் முதல் ஆள். ஆமாம் என்றான் புது ஆள். என்னையா இப்படிச் சொல்கிறீர்? நன்றாகப் பார்த்துச் சொல்லுங்கள் பச்சோந்தி நீல நிறம் தானே? என்று கேட்டான் இரண்டாமவன். இதற்குத் ஆமாம் என்றான் புது ஆள். என்ன இது நான் கேட்டாலும் ஆமாம் என்று சொல்கிறீர்கள்? அவன் கேட்டாலும் ஆமாம் என்று சொல்கிறீர்கள்? உனக்கென்ன பைத்தியமா? என்று கேட்டான் முதல்வன். பைத்தியம் எனக்கல்ல உங்கள் இருவருக்கும்தான். பச்சோந்தி நேரத்துக்கு நேரம் தான் இருக்கின்ற இடத்தின் நிறத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளும். நீங்கள் பார்த்த போது சிவப்பாயிருந்தது. அவர் பார்த்த போது நீலமாகி விட்டது. பச்சை இலை மீது இந்த பச்சோந்தி அமர்ந்தால் பச்சையாகவும் தெரியும் என்றார் புதுமனிதன். இருவரும் உண்மையை உணர்ந்து அமைதி ஆனார்கள்.
இறைவனும் இப்படித்தான். பிள்ளையாரை நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு பிள்ளையாராகவும் முருகரை நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு முருகராகவும் பெருமாளை நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு பெருமாளாகவும் காட்சி கொடுப்பவர் இறைவன். மனிதன்தான் தான் வணங்கும் இறைவனே பெரியவர் என்றும் மற்றவர் வணங்கும் தெய்வம் சிறியவர் என்றும் தன் கண்ணால் காண்பவற்றை மட்டுமே அறியாமையால் நம்பிக் கொண்டும் அனைத்தும் அந்த பரம்பொருள்தான் என்ற உண்மையை உணராமல் மதச்சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு முனிவர் ஒருவர் வெகுநாட்களாக இமயமலை அடிவாரத்தில் சாதுக்களுடன் தவமிருந்து பல சக்திகளைப் பெற்றார். தான் பெற்ற சக்தியை இறைவனின் அருளை மக்களும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அருகில் இருந்த கிராமத்திற்கு சென்றார். அங்குள்ள பிள்ளைகளுக்கு கல்வி கற்பித்து மக்களுக்கு இறைவனின் மீது நம்பிக்கையும் சரணாகதியும் வர வைக்க வேண்டும் என்று நினைத்தார். அந்த கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இடத்தை தேர்வு செய்து கிராம மக்களிடம் தான் இங்கு ஆசிரமம் அமைத்து தங்கப் போவதாகவும் இங்கு சிறிய ஆலயம் ஒன்று கட்டி இங்குள்ள பிள்ளைகளுக்கு ஆன்மீகத்தை கற்பிக்கப் போவதாகவும் கூறினார். அவருக்கு அந்த கிராம மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து அவர்களும் அவருக்கு உதவியாக அவர் தங்குவதற்கு தென்னை ஓலைகள் பனை ஓலைகள் போன்றவற்றை கொடுத்து இடத்தையும் சீர் செய்து கொடுத்தனர். அங்கு ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்தார். கிராம மக்களும் பூஜைக்கு தேவையான பால் பழம் இளநீர் போன்றவற்றை கொண்டு வந்து கொடுத்தனர். பூஜைகள் செய்து விட்டு மக்களுக்கு புராண கதைகளை கூறி தர்மத்தை போதித்தார்.
ஒரு நாள் அந்த வழியாக ஒரு ஆடு ஒன்று மேய்ந்து வந்தது. அது பாறை தடுக்கி கீழே விழுந்து அதன் கால் முறிந்து ரத்தம் கொட்டியது. உடனே முனிவர் அந்த ஆட்டுக் குட்டியை பிடித்து தன் ஆசிரமத்திற்கு பின்னால் இருந்த ஒரு பச்சிலையை கொண்டு வந்து அதன் காலில் துணியால் கட்டி இறைவா உனது செயல் இந்த ஆடு குணம் ஆக வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார். உடனே அந்த ஆடு எழுந்து ஓட ஆரம்பித்தது. இதை பார்த்த அந்த ஆடு மேய்க்கும் சிறுவன் கிராமத்தில் சென்று முனிவர் செய்த அதிசயத்தை கூறினான். உடனே அந்த கிராமத்து மக்கள் முனிவரை வந்து சந்தித்து அங்கு நோய் வாய்ப்பட்ட அனைவருக்கும் சிகிச்சை செய்யும்படி கூறினார்கள். அதற்கு முனிவர் நான் வைத்தியன் அல்ல ஏதோ ஒரு பச்சிலையை எடுத்து அந்த ஆட்டு குட்டிக்கு கட்டினேன். இறைவன் குணப்படுத்தினார். அது எழுந்து ஓடியது. எனது செயல் ஒன்றும் இல்லை என்றார். ஆனால் கிராம மக்கள் இல்லை முனிவரே நீங்கள் உங்கள் கையால் எதை கொடுத்தாலும் எங்களுக்கு சுகமாகும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று சொல்லி நோயாளிகளை அழைத்து வந்தார்கள். முனிவரும் செய்வதறியாது இறைவா இதுவும் உன் செயல் என்று கூறி நினைத்து காட்டிலிருந்த தனக்கு தெரிந்த மூலிகை செடிகளை பச்சிலைகளை பறித்து தனக்கு தெரிந்தவரை சிலவற்றை காய வைத்து பவுடராக ஆக்கியும் சில தழைகளை அரைத்து லேகியம் போல உருண்டைபிடித்தும் சில பச்சிலைகளை தைலம் போல தயாரித்து வைத்தார். கிராம மக்கள் தங்களுக்கு உண்டான நோய்களை சொல்லி மருந்து கேட்டபோது அவர்கள் வியாதிக்கு ஏற்றபடி மருந்தை கொடுத்து இறைவா குணப்படுத்து என்று பிரார்த்தனை செய்து கொடுத்தார். நம்பிக்கையுடன் வாங்கி சென்ற கிராம மக்கள் விரைவில் குணமடைந்தனர். தினமும் கூட்டம் வெளி கிராமத்தில் இருந்தும் வர ஆரம்பித்தது. அந்த ஊரில் இறைவன் மீது நம்பிக்கை இல்லாத ஒரு வாலிபன் இந்த சாமியார் செயலைப் பார்த்து இந்த ஆளை சோதிக்க வேண்டும் என்று வந்தான்.
முனிவரை பார்த்து நீங்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான மூலிகைகளைத்தான் கொடுக்கிறீர்கள் எப்படி குணமாகிறது என்று கேட்டான். அது இறைவன் செயலப்பா என்று முனிவர் கூறினார். எனக்கு இப்போது தீராத வயிற்று வலி அதற்கு ஏதாவது மருந்து கொடுங்கள் என்று சிரிப்புடன் கேட்டான். அவன் எண்ணத்தை புரிந்து கொண்ட முனிவர் இவனுக்கு வயிற்று வலி அல்ல. நம்மை சோதிக்க வந்திருக்கிறான் என்பதை அறிந்து சரியப்பா அப்படியே செய்கிறேன் என்று சும்மா அவன் கையைப் பிடித்து பார்த்து விட்டு அந்த லேகியத்தில் ஒரு ஐந்து உருண்டை எடுத்துக் கொடுத்து தம்பி உனக்கு தீராத வயிற்று வலி. வயிறெல்லாம் புண்ணாகி உள்ளது. ஆகவே இந்த லேகியத்தை காலையில் எழுந்தவுடன் குளித்துவிட்டு நெற்றியில் திருநீர் அணிந்து ஒரு லேகியத்தை வெரும் வயிற்றில் ஒரு வாரம் சாப்பிட்டால் குணமாகும். இதற்கு ஒரு பத்தியம் இருக்கிறது நீ இந்த லேகியத்தை சாப்பிடுவதற்கு முன்பு குரங்கை மட்டும் நினைக்கக் கூடாது. நீ குரங்கை நினைத்து இந்த லேகியத்தை சாப்பிட்டால் அது எதிர்மறையாகி உன் உயிருக்கு ஆபத்தாகி விடும் அதுதான் பத்தியம். தொடர்ந்து ஒரு வாரம் செய்து வா. குரங்கை நினைத்து விட்டால் இந்த லேகியத்தை சாப்பிடாதே. மறுநாள் சாப்பிடு என்று அனுப்பி வைத்தார். மருந்து சாப்பிடாமலேயே தனக்கு குணம் ஆகிவிட்டது என்று மக்களிடம் சொல்லி இந்த முனிவரை திட்ட வைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வீட்டிற்கு சென்றான். வீட்டிற்கு உள்ளே நுழைந்த உடனேயே அவனுக்கு உண்மையிலேயே வயிற்று வலி வருவது போன்ற உணர்வு வந்தது. என்ன இது உண்மையிலேயே வயிறு வலிக்கிறதோ என்று பயந்தான். பின் முனிவர் கொடுத்த மருந்துதான் இருக்கிறதே வயிற்று வலி வந்தால் காலையில் முனிவர் சொன்னது போல குளித்துவிட்டு நெற்றியில் திருநீர் இட்டுக் கொண்டு அந்த லேகியத்தை எடுத்து சாப்பிடலாம் என்று நினைத்துவிட்டு படுத்து விட்டான்.
காலையில் எழுந்ததும் வயிற்று வலி அதிகமாக இருந்தது. முனிவர் சொன்னது போலவே குளித்துவிட்டு திருநீறு அணிந்து கொண்டு லேகியத்தை எடுத்ததுமே குரங்கு ஞாபகம் அவனுக்கு வந்தது. முனிவர் எதை நினைக்கக் கூடாது என்றாரோ அந்த குரங்கு மீண்டும் மீண்டும் நினைவில் வந்து கொண்டே இருந்தது. குரங்கை நினைத்து விட்டோமே. இனி இந்த லேகியத்தை சாப்பிட்டால் நம் உயிருக்கு ஆபத்து வந்து விடும் என்று அன்று மருந்து சாப்பிடாமல் விட்டு விட்டான். அன்று முழுதும் வலியால் துடித்தான். மறுநாள் விடிந்ததும் குளித்துவிட்டு அதேபோல் லேகியத்தை எடுத்து சாப்பிட போனான் அப்போதும் அந்த குரங்கு தான் அவனுக்கு நினைவுக்கு வந்தது அன்றும் சாப்பிடவில்லை. இப்படியாக ஐந்து நாட்கள் வயிற்று வலியிலேயே அந்த லேகியத்தை சாப்பிடாமல் துடித்தான். இனி தாமதிக்கக்கூடாது என்று அந்த முனிவரிடம் ஓடிவந்து முனிவரே என்னை மன்னியுங்கள். நான் உங்களை சோதிக்கவே சும்மா வயிற்று வலி என்று சொன்னேன். ஆனால் உண்மையிலேயே வயிற்று வலி வந்து விட்டது. நீங்கள் கொடுத்த லேகியத்தை சொன்னபடி சாப்பிடலாம் என்று நினைத்தேன். ஆனால் பத்தியம் கடைபிடிக்க முடியவில்லை அந்த லேகியத்தை எடுக்கும் போதெல்லாம் என் கண் முன்னே குரங்கு தான் வந்தது அதனால் மருந்தை சாப்பிட முடியவில்லை. நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் அதன்படியே செய்கிறேன். என் வயிற்று வலியை குணப்படுத்துங்கள் என்று மனதார வேண்டினான்.
முனிவர் அவனை தட்டிக் கொடுத்து தம்பி உனக்கு ஒன்றுமில்லை நீ கவலைப்படாதே நீ என்னை சோதிக்க வந்தாய் அதனால் நான் உன்னை சோதித்தேன். பத்தியம் எல்லாம் ஒன்றும் இல்லை நீ குரங்கை நினைத்து சாப்பிட்டாலும் அது ஒன்றும் செய்யாது லேகியம் வேலை செய்யும் வயிற்று வலி குணமாகும். இந்த லேகியத்தை இங்கேயே வாயில் போட்டு தண்ணீர் குடி மீதியை வீட்டிலிருந்து மீதி நான்கு நாட்களுக்கும் சாப்பிட சரியாகிவிடும். எதிலுமே நம்பிக்கை வைத்து எந்த செயல் செய்தாலும் அது வெற்றி அடையும். கிராம மக்கள் என்னிடம் நம்பிக்கையோடு வந்தார்கள் நான் கொடுத்த மருந்தை சாப்பிட்டார்கள் குணமானார்கள். நம்பிக்கை இல்லாமல் அரைகுறையாக எந்த காரியம் செய்தாலும் அது திருப்தி அடையாது வெற்றியடையாது என்று ஆசி கூறி அனுப்பினார்.
இராமானுஜரின் சிறு வயதில் யாதவ பிரகாசர் என்பவர் குருவாக இருந்தார். இவர் தன்னுடைய பல்லலாக்கில் ஒரு நாட்டின் வழியாக சென்று கொண்டிருந்தார். பல்லக்கை இராமானுஜர் உட்பட அவரது சீடர்கள் தூக்கிக் கொண்டு சென்றார்கள். யாதவ பிரகாசர் தனது நாட்டின் எல்லைக்குள் வந்திருப்பதை அறிந்த அந்த நாட்டின் அரசர் அவரை வரவேற்று வணங்கி தன்னுடைய மகளை ஒரு பிரம்மராட்சசன் என்ற பேய் பிடித்திருப்பதாகவும் அந்த பேயை ஓட்டி தனது மகளை காப்பாற்றுமாறு கேட்டுக் கொண்டார். யாதவ பிரகாசர் அரசரின் வேண்டுகோளை ஏற்று அரசனின் மாளிகைக்கு சென்றார். அங்கு அவரது மகளைப் பார்த்த யாதவ பிரகாசர் அவளுடைய உடம்பிற்குள் இருந்த பிரம்ம ராட்சனைப் பார்த்து இந்த உடம்பை விட்டு ஓடிப்போ என்றார்.
யாதவ பிரகாசரைப் பார்த்து சிரித்த பிரம்ம ராட்சசன் நீ சொன்னால் நான் போக வேண்டுமா? நான் யார் தெரியுமா? நீ யார் தெரியுமா? என்று பேச ஆரம்பத்தது. நீ சென்ற ஜென்மத்தில் ஒரு உடும்பாக பிறந்து ஒரு கோயிலில் கிடந்தாய். கோயிலில் வருபவர்கள் அனைவருக்கும் பிரசாதம் கொடுப்பார்கள். அந்த பிரசாதத்தை அவர்கள் சாப்பிடுவார்கள். அதில் சிதறும் பிரசாதத்தை சாப்பிட்டு உயிர் வாழ்ந்தவன் நீ. அப்படி வாழ்நாள் முழுவதும் கோயில் பிரசாதத்தை மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்தாய். அதில் புண்ணியத்தை நிரம்ப பெற்றாய். அதில் கிடைத்த ஞானத்தை வைத்து இந்த ஜென்மாவில் மனித பிறப்பெடுத்து வேதம் கற்றுக் கொண்டு பிராமணனாக குருவாக நிற்கிறாய். நான் யார் தெரியுமா? அந்தணனாக பிறப்பெடுத்து அந்தணனாக வாழ்ந்து கோயிலில் வேதம் சொல்லி யாகம் கொண்டிருந்தேன். இறைவனைப் பற்றிய சிந்தனை இல்லாமல் சொல்லில் மந்திரத்தை தவறாக சொல்லியும் பெயரளவிற்கு செயலில் யாகத்தையும் செய்து கொண்டு மனம் போன போக்கில் தவறுகள் செய்து கொண்டு வாழ்ந்தபடியால் பிரம்மராட்சசனாக பிறப்பெடுத்தேன். என்னைப் பொறுத்தவரையில் நீ ஒரு உடும்பு. ஆகவே நீ சொன்னால் நான் போக மாட்டேன். நீ வந்த வழியே திரும்பிப் போ என்றான் பிரம்மராட்சசன். யாதவ பிரகாசர் என்ன செய்தால் நீ இந்த உடம்பை விட்டு செல்வாய் என்று கேட்டார். உன்னுடைய பல்லக்கை சுமந்து கொண்டு வரும் இராமானுஜர் தனது காலை எனது தலையில் வைத்து நீ போ என்றால் நான் சாப விமோசனம் பெற்று இந்த உடம்பை விட்டு சென்று விடுவேன் என்றது. யாதவபிரகாசரும் இராமானுஜரை அழைத்து பிரம்மராட்சனின் தலைமீது காலை வைக்க சொன்னார். உடனடியாக பிரம்மராட்சனும் சாப விமோசனம் பெற்று அரசனின் மகளின் உடம்பை விட்டு சென்று விட்டான்.
கோயில் பிரசாதம் கொடுக்கப்பட்டு அதில் சிந்திய உணவை சாப்பிட்ட ஒரு உடும்பே புண்ணியத்தைப் பெற்று அதன் பலனாக ஞானத்தை பெற்று குருவாக உயர்ந்த நிலைக்கு சென்றிருக்கிறார். உடும்பு பிறப்பை விட மேன்மையாக பிறப்பு மனிதப் பிறப்பு. இவர்களுக்கு கோயிலுக்கு செல்வதற்கும் இறைவனுக்கு பிரசாதம் படைப்பதற்கும் அதனை சாப்பிடுவதற்கும் உண்டான அத்தனை வாய்ப்புகளும் இருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களின் வாழ்க்கையில் தர்மப்படி வாழ்ந்து தினமும் சிறிது நேரம் ஒதுக்கி கோயிலுக்கு சென்று இறைவனை வழிபட்டு கோயிலின் பிரசாதம் சாப்பிட்டு வாழ்ந்தாலே விரைவாக இந்த பிறவிக் கடலை கடந்து இறைவனை அடைந்து விடலாம்.
சாது ஒருவர் காட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது தாகம் ஏற்பட்டது. அருகில் இருந்த குளத்தில் இறங்கினார். தண்ணீரை கைகளில் அள்ளும் போது தண்ணீருக்குள் ஒளிந்திருந்த முதலை சாதுவின் கால்களை கவ்விப் பிடித்தது. சாது முதலையை கருணையாக பார்த்தார். முதலை சாதுவிடம் பேசியது. சாதுவே இந்தக் குளம் என் ஆளுகைக்குட்பட்டது. இதில் இறங்குபவர்களை நான் தின்று விடுவேன். இன்று நீங்கள் எனது பசியை போக்க வந்திருக்கிறீர்கள். எவ்வளவு கருணையோடு நீங்கள் என்னைப் பார்த்தாலும் நான் உங்களை விட மாட்டேன் என்றது. அதற்கு சாது முதலையே மரணத்தைக் கண்டு நான் பயப்படவில்லை. என் குருகுலத்தில் படிக்கும் சீடர்களுக்கு கல்வி இன்னமும் நிறைவுபெறவில்லை. நான் இறந்து விட்டால் அவர்களின் படிப்பு பாதியில் நின்று விடும். அந்தக் கவலைதான் என்னை வாட்டுகிறதே தவிர உயிரை இழப்பதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என்னை நீ விட்டால் அதற்கு உபகாரகமாக ஏதேனும் இருந்தால் சொல் அதனை செய்கிறேன் என்றார் சாது. யோசித்தது முதலை. சாதுவே உங்களை நான் விடுகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. நீங்கள் தினமும் சீடர்களுக்கு கல்வி சொல்லிக் கொடுக்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் இந்த குளத்திற்கு எதிரில் அமர்ந்து கொள்ள வேண்டும். தாகத்தோடு வருபவர்கள் குளத்தில் இறங்க பயப்படுகிறார்கள். அவர்களிடம் குளத்தைப் பற்றி பெருமையாகச் சொல்ல வேண்டும். அவர்கள் குளத்தில் இறங்குவார்கள். பிறகு நான் அவர்களை கொன்று தின்று விடுவேன். இதைச் செய்வதாக நீங்கள் சத்தியம் செய்து கொடுத்தால் உங்களை விடுவிக்கிறேன். அதே போல சத்தியத்தை மீறினால் கொடுத்த வாக்கை காப்பாற்றாத பாவம் உங்களை வந்தடையும் என்றது முதலை. சாதுவும் முதலை சொன்னதை ஏற்றுக் கொண்டு முதலைக்கு சத்தியம் செய்து கொடுத்தார். முதலை அவரை விடுவித்தது. அங்கிருந்து புறப்பட்டார்.
சாது முதலைக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் படி அடுத்த நாள் குளக்கரைக்கு வந்து எதிரில் அமர்ந்தார். சற்று நேரத்தில் ஒரு மீனவன் வந்து சாதுவிடம் பேசினான். ஐயா நான் மீன் பிடிப்பதற்காக வந்திருக்கிறேன். இந்தக் குளத்தில் வலை வீசினால் அதிகமாக மீன்கள் கிடைக்குமா? என்று கேட்டான். மீன் பிடிப்பவரே இந்தக் குளம் மிகவும் ஆற்றல் வாய்ந்தது பெருமை வாய்ந்தது என்று குளத்தை மிகவும் பெருமையாக பேசி தொடர்ந்தார். ஆனால் மீன் கிடைக்குமா என்ற உனது கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. இந்தக் குளத்தில் வசிக்கும் முதலையிடம் கேள். உன் கேள்விக்கு முதலையிடம் பதில் கிடைக்கும் என்றார். இந்தக் குளத்தில் முதலை இருக்கிறதா? ஐயோ என்று கத்தியவாறு ஓட்டம் பிடித்தான். இதைப் பார்த்த முதலை குளத்திலிருந்து வெளியே வந்தது. சாதுவே இதுதான் சத்தியத்தை காப்பாற்றுகிற லட்சணமா? நீங்கள் அவனிடம் என்ன சொன்னீர்கள்? அவன் ஏன் ஓடுகிறான்? என்று கோபத்தோடு கேட்டது. முதலையே குளத்தைப் பற்றியும் குளத்தில் உள்ள உன்னைப் பற்றி மிகவும் பெருமையாகத்தான் சொன்னேன். நான் சத்தியத்தை மீறவில்லை என்றார் சாது. சாது தம்மை ஏமாற்றுகிறாரோ என்று சந்தேகமடைந்த முதலை உடனே தன்னுடைய குட்டியை கூட்டி வந்தது. சாதுவே இது என் குட்டி. நீங்கள் வைத்திருக்கும் துணியில் இதை மூட்டையாக கட்டி பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இங்கு வருபவர்களிடம் என்ன பேசுகிறீர்கள் என்பதை குட்டி கேட்டு என்னிடம் சொல்லும் என்றது.
சாதுவின் பக்கத்தில் மூட்டையில் குட்டி இருந்தது. அன்று அதன் பிறகு யாருமே அந்தப் பக்கம் வரவில்லை. அடுத்த நாள் ஒரு வழிப்போக்கன் வந்தான். அவன் கையில் ஒரு பை இருந்தது. சாதுவே இந்தப் பையில் தங்க நகைகள் இருக்கின்றன. நான் குளத்தில் குளித்துவிட்டு வந்து வாங்கிக் கொள்கிறேன். இந்தக் குளம் குளிப்பதற்கு உகந்ததுதானே? என்று கேட்டான். வழிப்போக்கரே குளத்து நீர் மிகவும் நல்ல நீர். குடிப்பதற்கும் குளிப்பதற்கும் மிகவும் சிறப்பான குளம். நேற்று ஒருவன் இப்படித்தான் தனது பொருளை எனது அருகில் இருக்கும் துணியில் வைத்துவிட்டு குளத்தில் இறங்கினான். அவன் இன்னும் வரவில்லை. குளத்தில் இறங்கியவன் வந்ததும் அவனிடம் கேட்டுக்கொள் என்றார் சாது. என்னது நேற்று போனவன் இன்னும் வரலையா? குளத்தில் ஏதோ பிரச்னை இருக்கிறது என்று சொல்லிவிட்டு ஓடினான். இதனை கண்ட தாய் முதலை குட்டியிடம் நடந்தவற்றை கேட்டு தெரிந்து கொண்டது. கோபத்தோடு சாதுவைப் பார்த்து நேற்று யார் வந்து உங்களிடம் மூட்டையை கொடுத்தது என்று கத்தியது. முதலையே நீ தானே என்னிடம் உனது குட்டியை இந்த துணியில் வைத்து விட்டு குளத்தில் இறங்கினாய். அதன்பின் நீதான் வரவேயில்லையே. குளத்தை பெருமையாகத்தானே சொல்லியிருக்கிறேன். நான் சத்தியத்தை மீறவில்லை என்றார் சாது. அடுத்த நாள் அந்த நாட்டு மந்திரி குளக்கரைக்கு வந்தார். சாதுவைப் பார்த்து இந்தக் குளத்தில் குளிக்க வேண்டும். குளம் பாதுகாப்பானதா? என்று கேட்டார். மந்திரியே இந்த குளத்திற்கு செல்லும் பாதையைப் பாருங்கள். மனிதர்கள் குளத்தை நோக்கி நடந்து சென்ற பாதத் தடங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை பாருங்கள். அப்படியானால் இந்த குளத்தில் அதிகமான மக்கள் குளிக்க சென்றிருக்கிறார்கள். ஆகவே இந்த குளம் குளிக்க சிறப்பான குளம் போல தெரிகிறது. ஆனால் குளத்திலிருந்து திரும்பிய மனிதர்களின் பாதத் தடங்களும் சரி சமமாக இருக்கிறதா என்பதை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார். மந்திரி பார்த்தார். குளத்தை நோக்கிச் சென்ற பாதச் சுவடுகள் அதிக எண்ணிக்கையில் இருந்தன. குளத்திலிருந்து கரைக்குத் திரும்பிய பாதச் சுவடுகள் ஏதுமில்லை. குளத்திற்குள் சென்றவர்கள் திரும்பி வரவில்லை குளத்தில் ஏதோ பிரச்சனை என்பதை புரிந்து கொண்ட மந்திரி சாதுவிற்கு நன்றி சொல்லி அங்கிருந்து நகர்ந்தார். இதனை கண்ட முதலை குட்டியிடம் நடந்தவற்றை கேட்டு தெரிந்து கொண்டது.
சாதுவைப் பார்த்து முதலை சாதுவே நீங்கள் சத்தியத்தை மீறிவிட்டீர்கள். குளக் கரையில் அமர்ந்து எனக்கு உணவாக வேண்டியவர்களை காப்பாற்றி கொண்டிருக்கிறீர்கள். இது நியாயமல்ல நீங்கள் வாக்கு மீறி விட்டீர்கள் ஆகவே உங்களை பாவம் வந்து சேரும் என்று கத்தியது. அதற்கு சாது முதலையே உன் பார்வையில் உன் கோபம் நியாயமானது உனது பார்வையில் நான் கொடுத்த வாக்கை மீறியவனாக உனக்கு தெரிகிறது. ஆனால் தர்மத்தின்படியே நான் நடந்து கொண்டேன். தர்மத்துக்கு எதிராக எதையும் சாதுவானவர்கள் செய்யமாட்டார்கள். நான் காப்பாற்ற வேண்டிய தர்மங்கள் இங்கு இரண்டு இருக்கிறது. ஒன்று உனக்கு கொடுத்த வாக்கை தவறாமல் காப்பது. இரண்டு இங்கு வந்தவர்களுக்கு குளத்தைப் பற்றி கேள்வி கேட்கும் போது நான் சொல்லும் பதில் சரியாக இருக்கும் என்று என்னை நம்பினார்கள். அவர்களின் நம்பிக்கையை நான் காப்பாற்றுவது எனது கடமை. ஒரே நேரத்தில் இரண்டு தர்மங்களை நான் காப்பாற்றியாக வேண்டும். குளத்தை பெருமையாக கூறி உனக்கு கொடுத்த வாக்கையும் காப்பாற்றினேன். அதே போல் அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றும் விதமான வார்த்தையை கூறி அவர்களையும் காப்பாற்றினேன். ஆக நான் தர்மத்தை மீறவில்லை. என்னை பாவம் அண்டாது என்று சொல்லி முதலைக்கு கொடுத்த வாக்கின்படி மீண்டும் குளத்தின் எதிரே சென்று அமர்ந்து கொண்டார். சாது இருக்கும் வரை தனக்கு உணவு கிடைக்காது என்று உணர்ந்த முதலை தனது உணவிற்கு வேறு இடத்திற்கு சென்று விட்டது.
ஒரு பேரரசர் இருந்தார். அவரது ராஜ்ஜூயத்தின் கீழ் பல சிற்றரசுகள் இருந்தன. அவர் தன் மந்திரியுடன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றார். அரசருக்கு மந்திரி எப்போதும் தன்னுடன் இருக்க வேண்டும் என்று விரும்புவார். அதனால் அவர் எங்கு சென்றாலும் மந்திரியையும் உடனே அழைத்துச் செல்வார். மந்திரிக்கு வேட்டையாடுவதில் விருப்பமில்லை. ஆனாலும் அரசரின் உத்தரவாதலால் அவருடன் சென்றார். மந்திரி மகா பக்திமான். செல்லும் இடமெல்லாம் ராம நாமத்தை பக்தியுடன் சொல்லிக் கொண்டே இருந்தார். காட்டில் இருவரும் நீண்ட தூரம் அடர்ந்த காட்டிற்குள் சென்றும் மிருகங்கள் கண்ணில் படவில்லை. அலைச்சலில் இருவரும் மிகவும் களைத்துப் போனார்கள். கொண்டு வந்த நீரும் காலியானது. இருவருக்கும் பசி ஆரம்பித்தது. அப்போது தூரத்தில் சிறிய குடிசை ஒன்று தெரிந்தது.
அரசர் மந்திரியிடம் நாம் இருவரும் ரொம்ப களைப்பா பசியோட இருக்கோம். அந்த குடிசையிலே போய் ஏதாவது சாப்பிட இருக்கான்னு கேட்டுப் பார்க்கலாம் வா என்றார். மந்திரி அரசரிடம் எனக்கும் பசிதான் மிகவும் களைப்புதான். ஆனால் நான் அங்கு வரவில்லை. இப்போது சூரியன் மறையும் நேரம் நான் ராம நாமம் ஜெபிக்கும் நேரம். ஆகவே நான் இங்கேயே இந்த மரத்தடியில் ராம நாமத்தை ஜெபித்துக் கொண்டிருக்கிறேன். அது என்னுடைய களைப்பையும் பசியையும் ஆற்றிடும். நீங்கள் சென்று பசியாறி வாருங்கள் என்றார். அரசருக்கு மந்திரி மேல் கோபமாக வந்தது. இருந்தாலும் முதல்லே பசிக்கு ஏதாவது கிடைக்குதான்னு பார்க்கலாம் என்று அந்த குடிசைக்கு நடந்து போனார். அது ரொம்ப ஏழ்மையான வீடு. அங்கிருந்த பாட்டியிடம் அரசன் தான் யார் என்றும் தனக்கு உணவு வேண்டும் என்றும் பாட்டியிடம் கேட்டார். அன்று காலையில் சமைத்த உணவை அரசருக்கு பாட்டி கொடுத்தாள். அரசர் திருப்தியாக தனது பசியாரும் வரை சாப்பிட்டார். மீண்டும் பாட்டியை அழைத்த அரசன் இந்த காட்டிற்கு தன்னுடன் மந்திரியும் என்னுடன் வந்தார். அவரும் பசியுடன் மரத்தடியில் இருப்பதால் அவருக்கும் உணவு கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். உணவு தீர்ந்து விட்டதாகவும் நான் உடனடியாக சமைத்து கொடுக்கிறேன் என்று சொல்லிய பாட்டி விரைவாக அறுசுவை உணவையும் சமைத்து கொடுத்தார்.
பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் பாடம் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் அறிவு என்றால் என்ன? ஞானம் என்பது எது? என்று கேள்வி கேட்டனர். பகவான் ராமகிருஷ்ணர் மூன்று மாணவர்களை அழைத்து இன்று உங்களுக்கு ஞானம் என்பது எது? என்பதை ஒரு செயல் மூலம் விளக்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டு மூவரையும் ஒரு அறையில் உட்கார வைத்தார். அவர் மற்றொரு அறைக்குச் சென்று சிறிது நேரத்தில் வெளியே வந்தார். அறையின் கதவுகளை மூடிவிட்டு அம்மூவரின் அருகில் வந்து அமர்ந்தார். முதல் மாணவனைப் பார்த்து அந்த அறையினுள் மூன்று குவளையில் பால் உள்ளது. அதில் நீ ஒரு குவளை பாலை பருகிவிட்டு வா என்றார். அவன் உள்ளே சென்றான். தங்கம் வெள்ளி வெண்கலம் ஆகிய மூன்று குவளைகளில் பால் இருந்தது. தங்க குவளையில் இருந்த பாலை எடுத்து மிகுந்த மகிழ்ச்சியோடு பருகினான். பிறகு வெளியே வந்தான். அடுத்து இரண்டாவது மாணவன் உள்ளே சென்றான். தங்கத் தம்ளரில் பால் இல்லாததைப் பார்த்த அவன் அதிலிருந்த பால் தனக்குக் கிடைக்கவில்லையே என்று ஆதங்கமுற்றான். ஆயினும் அதற்கடுத்த மதிப்பினைக் கொண்ட வெள்ளி குவளையில் இருந்த பாலை எடுத்துக் குடித்துவிட்டு ஓரளவு நிறைவோடு வெளியே வந்தான். மூன்றாவது மாணவன் உள்ளே சென்றதும் காலியாகக் கிடந்த தங்க வெள்ளி குவளைகளைப் பார்த்ததும் கோபம் தலைக்கேறியது. எனக்கு வெண்கல குவளை பாலா? யாருக்கு வேண்டும் இது? நான் என்ன அவ்வளவு தாழ்ந்தவனா? எந்த விதத்தில் நான் தாழ்ந்தவனாகி விட்டேன்? என்று அவன் மனதில் எண்ணங்கள் ஓடின. ஆயினும் குரு பாலைக் குடித்து வா என்றதை நினைவில் கொண்டு வருத்தத்தோடு குடித்துவிட்டு வெளியே வந்தான். அவன் முகத்தில் கவலை நிலைகொண்டிருந்தது.
பகவான் ராமகிருஷ்ணர் மூவரையும் பார்த்து பாலைக் குடித்தீர்களா என்றார். முதல் மாணவன் மகிழ்ச்சிப் பூரிப்புடன் தங்கத் குவளையில் பால் குடித்தேன். நான் மிகவும் கொடுத்து வைத்தவன் குருவே என்றான். இரண்டாவது மாணவன் எனக்கு தங்க குவளையில் பால் கிடைக்கவில்லை என்கிற வருத்தம் இருந்தாலும் வெள்ளி குவளையிலாவது கிடைத்ததே என்கிற மகிழ்ச்சி ஓரளவு இருக்கிறது குருவே என்றான். மூன்றாவது மாணவன் பதில் சொல்ல ஆரம்பிக்கும் முன்பே அழுகை வந்துவிட்டது. மூன்று பேர்களில் மிகவும் துரதிர்ஷ்டக்காரன் நானே குருவே. எனக்கு வெண்கலக் குவளையில் பால் கிடைத்தது என்றான். மூவரும் பேசியவற்றை அமைதியாக கேட்ட பகவான் ராமகிருஷ்ணர் பேச ஆரம்பித்தார். மாணவர்களே தங்கம் வெள்ளி வெண்கலம் ஆகிய மூன்று குவளைகளிலும் ஏலக்காய் குங்குமப்பூ சேர்த்து சுண்டக் காய்ச்சிய சுவையான பசும் பால் ஒரே அளவில் இருந்தது. அதில் எந்த வேறுபாடும் இல்லை. பாலை பருகப் போகிற மூவருக்குமே அதிலிருந்து ஒரே மாதிரியான சுவையும் சத்துவ குணமும்தான் கிடைக்கப் போகிறது. அதிலும் வேறுபாடில்லை. ஆனால் நீங்கள் மூவருமே நினைத்தது வேறு. பால் ஊற்றி வைத்திருக்கும் குவளைகளின் மதிப்பைப் பற்றியே உங்கள் மனம் யோசித்தது. பாலின் குணம் சுவை ருசி ஆகிய அனைத்தும் ஒரேமாதிரிதான் இருக்கும் என்பதை யோசிக்கவே இல்லை. ஆகவே நீங்கள் பண்டத்தை விட்டு விட்டு பாத்திரத்தையே பார்த்துள்ளீர்கள் பாத்திரத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைவது அறிவு. அதில் உள்ள பண்டத்தை நுகர்ந்து அனுபவித்து இன்புறுவது ஞானம். நீங்கள் அறிவைக் கொண்டு புறத்தோற்றத்தைப் பார்த்தபடியால் அது எதனால் ஆனது? மதிப்பானதா? மதிப்பு குறைவானதா? என்று சிந்தித்து அதில் உங்களின் கவனம் முழுமையாக சென்றது. பாலில் உள்ள சுவையை அனுபவிக்காமல் விட்டு விட்டீர்கள். நீங்கள் அறிவு கொண்டு பார்க்காமல் ஞானம் கொண்டு பார்த்திருந்தால் அதில் உள்ள சுவையை அனுபவித்து மூவருமே ஒரே மாதிரியான மன நிலையை கொண்டு ஒரே மாதிரியான அனுபவத்தை பெற்றிருப்பீர்கள்..
ஞானிகள் பண்டத்தைப் பற்றியும் அதன் பயன் பற்றியுமே பார்ப்பார்கள். பாத்திரங்களுக்கு மதிப்பு தர மாட்டார்கள். மண் சட்டியில் ஊற்றிக் கொடுத்தால் கூட ஆனந்தமாக பருகிச் செல்வார்கள். ஏனேனில் ஞானிகள் அனைத்திலும் உள்ள இறைவனை நுகர்ந்து அனுபவித்து ஆனந்தமடைவார்கள். இதுவே ஞானத்தின் உச்சம் என்று பகவான் ராமகிருஷ்ணர் சொல்லி முடித்ததும் மூன்று பேர்களுக்கும் அறிவிற்கும் ஞானத்திற்கும் உள்ள வேறுபாடு தெளிவாக விளங்கியது.
கௌரவர்களின் தலைநகராக இருந்த அஸ்தினாபுரம் நகருக்கு கிருஷ்ணர் வந்தார். பலர் தங்களுடைய வீட்டிற்கு அழைத்தும் அங்கெல்லாம் போகாமல் விதுரனின் வீட்டுக்குச் சென்றார் கிருஷ்ணர். தன்னுடைய வீட்டிற்கெல்லாம் கிருஷ்ணர் வரமாட்டார் என்றிருந்த விதுரரின் வீட்டிற்கு திடீரென்று வந்த கிருஷ்ணரைப் பார்த்ததும் நிலை தடுமாறினார் விதுரர். இங்கும் அங்குமாக ஓடி என்ன செய்வது என்று தெரியாமல் பரபரத்தார். கிருஷ்ணரை இப்படியா நிற்க வைத்து உபசரிப்பது? என்று எண்ணிய விதுரர் ஓடிப் போய் ஓர் ஆசனத்தை எடுத்து வந்து அவருக்கு அருகில் வைத்து விட்டு அந்த ஆசனத்தை நன்றாக தடவித் தடவிப் பார்த்துக் கொண்டே அதில் அமரச் சொன்னார். கிருஷ்ணர் சிரித்தபடியே நின்றார். ஏதேனும் சாப்பிடக் கொடுக்க வேண்டுமே என்று நினைத்துக் கொண்டே அடுப்படிக்கு ஓடினார். கண்ணில் பழங்கள் தென்பட்டன. அப்படியே அள்ளியெடுத்துக் கொண்டு கிருஷ்ணரிடம் வந்து கிருஷ்ணா இப்போது என்னிடம் இருப்பது இவை மட்டுமே மறுக்காமல் சாப்பிடுவாயாக என்று கேட்டுக் கொண்டார்.
விதுரர் படபடப்போடேயே காணப்பட்டார். அவரது சிந்தனையில் தான் துரியோதனனின் உப்பைச் சாப்பிடுகிறோம். அவன்தான் தனக்குச் சோறு போடுகிறான். பாண்டவர்களுக்காக கிருஷ்ணர் தூது வந்தபோது மிகப்பெரிய பள்ளம் தோண்டி அதன் மேல் கம்பளம் விரித்து அந்தக் கம்பளத்தின் மீது ஆசனத்தை வைத்திருந்தான் துரியோதனன். கிருஷ்ணர் அந்த ஆசனத்தில் அமர்ந்ததும் கீழே விழுவார். அவரை சிறை பிடிக்கலாம் என்று திட்டம் வைத்திருந்தான் துரியோதனன். இப்படிப்பட்ட கீழ்மையான எண்ண் கொண்ட துரியோதனனின் சாப்பாட்டில் வளர்ந்த நாம் அவனைப் போலவே சிந்தனை கொண்டு சுயநினைவின்றி கிருஷ்ணரை அவமானப்படுத்தும் வகையில் ஏதேனும் பள்ளம் தோண்டி வைத்திருக்கிறோமோ அந்த ஆசனத்தில் ஊசியைச் செருகி வைத்து இம்சிக்கச் செய்திருக்கிறோமோ துரியோதனின் சாப்பாட்டை சாப்பிட்ட எனக்கு அவன் புத்தியானது நம்மையும் அறியாமல் வந்திருக்குமோ எனப் பதைபதைத்தார் விதுரர். விதுரருக்கு எவ்வளவு பெரிய ஞானம். இந்த ஞானியின் கலக்கத்தைக் கண்டு ரசித்த கிருஷ்ணர் விதுரா என்னைக் கண்டதும் நீ படுகின்ற உன் கலக்கமே என் பசியை ஆற்றிவிட்டது என்றார்.
இறைவனுக்காக பூஜை செயல்களில் ஈடுபடும் போது தன்னையும் அறியாமல் தவறு ஏதேனும் செய்து விடுவோமோ நடந்து விடுமோ என்று எண்ணத்தில் இறைவனைத் தவிர வேறு சிந்தனையில்லமால் சிரத்தையுடன் இருக்க வேண்டும். இப்படி இருப்பவர்களே ஞானியாகத் திகழ்கிறார்கள். இறைவன் இவர்களுக்கே முதன்மையில் அருள்கிறார் அரவணைக்கிறார் ஆட்கொள்கிறார் என மகாபாரதத்தில் அற்புதமாக விளக்குகிறார் வேதவியாசர்.
அரசன் ஒருவன் தனது படை வீரர்களுடன் காட்டுக் சென்று வேட்டையாடிக் கொண்டிருந்தான். அப்போது பசி வந்தது. சுற்றுமுற்றும் பார்த்த போது ஒரு குடிசை தென்பட்டது. அங்கே சென்று நான் பசியோடு இருக்கிறேன். எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா என்று கேட்டன். அங்கிருந்த முனிவர் அரசனைப் பார்த்து யார் நீ என்று கேட்டார். நான் இந்நாட்டின் அரசன் என்று பதிலளித்தான். அதற்கு முனிவர் நீ யார் என்று தான் கேட்டேனே தவிர உனது பதவி பற்றி கேட்கவில்லை. வேறொரு நாட்டு அரசன் உன்னை வென்று இந்த நாட்டை கைப்பற்றிவிட்டால் நீ அரசன் இல்லை. இது உனக்கு தெரியுமா? இப்போது மீண்டும் அதே கேள்வியை கேட்கிறேன். உண்மையில் நீ யார் என்று கேட்டார். அரசனின் மனதில் உண்மையில் நீ யார்? என்ற கேள்வி லேசான சலனத்தை உண்டு பண்ணியது. ஆனாலும் அரசனின் பசியின் காரணமாக சுவாமி பசியின் காரணமாக நான் களைப்பாக இருக்கிறேன். ஆனால் நீங்கள் ஏதோ தத்துவம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்றான். இந்த வேளையில் முனிவரின் சீடன் ஒருவன் முனிவருக்கு பழ வகைளை கொண்டு வந்து முனிவரை வணங்கி பழக்கூடையை கொடுத்துச் சென்றான். அரசனை கண்டு கொள்ளவே இல்லை. நாட்டுக்கே அரசனாக இருக்கிறேன். இவன் தன்னை வணங்காமல் செல்கிறானே என்று எண்ணி அரசனின் முகம் இறுகியது. முனிவரும் அவன் கொண்டு வந்த பழத்தில் ஒன்றைக் கூட அரசனிடம் கொடுக்கவில்லை.
முனிவருக்கு தனக்கு பழங்கள் கொடுக்க மனமில்லை போலும் என்றெண்ணி அரசன் அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானான். முனிவர் அரசனே பார்த்து எனது சீடனுக்கு உன்னைப் பற்றித் தெரியாது. அதனால் உன்னை வணங்காமல் சென்று விட்டான். உண்மையில் யார் நீ என்பதை தெரிந்து கொள்வது நல்லது என்று சொல்லி விட்டு பழங்களை சாப்பிடக் கொடுத்தார். அந்த நேரத்தில் அங்கு ஒரு வீரன் அவசரமாக குதிரையில் வந்தான். அரசே நம் கோட்டையை பகை மன்னர்கள் சூழ்ந்து கொண்டு விட்டனர். தலைநகரில் போர் நடந்து கொண்டிருக்கிறது. வாருங்கள் என்றான் பதைபதைப்புடன். அரசனுக்கு இப்போது பசி காணாமல் போனது. குதிரையை நோக்கி ஓடினான். முனிவர் அவனைத் தடுத்து பழங்களைச் சாப்பிடும்படி கூறினார். சுவாமி நான் இப்போது அமைதி இழந்து தவிக்கிறேன். என்னை விட்டுவிடுங்கள் என்று கிளம்ப முயற்சித்தான். முனிவர் அரசனை தடுத்து நிறுத்தி முதலில் சாப்பிடு. களைப்பைப் போக்க சிறிது நேரம் ஓய்வெடு. கொஞ்சம் பொறுமையாக இரு என்று முனிவர் அறிவுரை சொன்னார். முனிவரின் கனிவான வார்த்தைகள் கட்டளை போல் அவனை தடுத்து நிறுத்தியது. அரசனும் பழங்களை சாப்பிட்டு பதட்டம் நீங்கி அமைதியானான். களைப்பின் காரணமாக மரநிழலில் உறங்கி விட்டான். திடீரென்று கண் விழித்ததும் வேகமாக எழுந்து நின்றான். சுவாமி எப்படியோ என்னையும் அறியாமல் நான் தூங்கிவிட்டேன் இப்போது நான் புத்துணர்ச்சியுடன் இருக்கிறேன். எனது நாட்டிற்கு செல்ல வேண்டும் என்றான்.
முனிவர் அரசனிடம் நான் இந்நாட்டின் அரசன். நான் பசியோடு இருக்கிறேன். நான் அமைதியை இழந்து தவிக்கிறேன். நான் அறியாமல் தூங்கிவிட்டேன். இப்போது நான் புத்துணர்ச்சியுடன் இருக்கிறேன். இப்படி எத்தனையோ விதத்தில் நான் நான் என்று பதில் கொடுத்துக் கொண்டே இருக்கிறாய். இத்தனை நான் சொன்னாயே இதில் எந்த நான் உண்மை. உண்மையில் யார் நீ என்பதை அறிந்தாயா? என்று கேட்டார். அமைதியாக நின்ற அரசனிடம் உடலோ உள்ளமோ உணர்வோ நான் அல்ல. நான் என்பது உண்மையில் ஆன்மா மட்டும் தான். உனது வாழ்வின் அன்றாட விஷயங்களான மக்கள் நாடு போர் வெற்றி தோல்வி என்பதெல்லாம் தற்காலிகமானதே. உயிர் உள்ளவரை மட்டுமே அதற்கு பயன். நீ யார் என்று அறிந்து கொண்டு ஆன்மிக வாழ்வில் வெற்றியடைவதை வாழ்வின் குறிக்கோளாகக் கொள் என்று அறிவுரை கூறினார். முனிவர் சொன்னபடி வாழ்வில் வந்து போகும் பொருட்கள் எதுவும் நிரந்தரமல்ல. நிரந்தரமானது உள்ளே இருக்கக் கூடிய இறைவன் தான் என்று உள்ளத் தெளிவுடன் அரசன் கிளம்பினான். முனிவரின் வார்த்தைகள் அரசனின் உள்ளத்தின் உள்ளே தான் யார் என்று தேட ஆரம்பித்தது.
புத்தர் தனது சீடர் ஆனந்தாவுடன் காட்டுப் பாதையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆனந்தா புத்தரிடம் ஞானமடைவதற்கு எளிமையான வழி என்ன என்று கேட்டார். அதற்கு புத்தர் சுற்றி இருப்பவற்றை சும்மா கவனி என்றார். சும்மா கவனித்தால் எப்படி ஞானம் கிடைக்கும் என்றார். புத்தர் அமைதியாக ஓர் இடத்தில் அமர்ந்தார். தாகம் அதிகமாக இருக்கிறது குடிக்க எங்காவது சென்று நீர் கொண்டு வா என்று கூறினார். ஆனந்தா தண்ணீர் தேடி அலைந்தார். எங்கும் கிடைக்கவில்லை. ஓரிடத்தில் யானைகள் உடலில் சேறோடு சென்று கொண்டிருப்பதைப் பார்க்கிறார். அருகில் ஏதோ நீர்நிலை இருக்கிறது என்றறிந்து தேடி ஒரு குட்டையைக் கண்டுபிடிக்கிறார். யானைகள் புரண்டு எழுந்து போனதால் நீர் முழுக்க சேறாகி குடிக்க தகுதியில்லாததாக ஆகிவிட்டது. வருத்தத்தோடு திரும்பி புத்தரிடம் விஷயத்தைச் சொல்கிறார். எனக்கு அதெல்லாம் தெரியாது. காரணமெல்லாம் சொல்லாதே. எனக்கு குடிக்க நீர் வேண்டும் என்று கேட்டார் புத்தர். ஆனந்தா வேறு வழியில்லாமல் மீண்டும் அந்த குட்டைக்குச் சென்றார். நீர் இப்போது கொஞ்சம் தெளிவானதைப் போலத் தெரிந்தது. இன்னும் கொஞ்சம் தெளியட்டும் என்று கரையில் காத்திருந்தார். குட்டைத் தண்ணீர் சிறிது சிறிதாகத் தெளிந்து கொண்டே இருந்தது. ஆனந்தா அந்த பண்பு மாற்றத்தை கவனித்துக் கொண்டே இருந்தார். சில நிமிடங்களில் மீண்டும் நீர் மிகவும் தெளிந்து தூய்மையானதாக மாறியது. இதைக் கண்ட ஆனந்தரின் கண்களில் அருவியென கண்ணீர் கொட்டியது. குடுவையில் நீர் பிடித்துக்கொண்டு புத்தரிடம் திரும்பியவர் அவரது கையில் தண்ணீரைக் கொடுத்துவிட்டு அப்படியே சாஷ்டாங்கமாக காலில் விழுந்தார். மனசுக்குள் எண்ணங்கள் அலைமோதிக் கொண்டிருக்கும்போது அது குழம்பிய குட்டையாகத்தான் இருக்கும். அமைதியாக அதை கவனித்துக்கொண்டே இருந்தால் அதுவாகவே தெளியும். என் மனதைத் தெளியவைக்கும் இந்த சூத்திரத்தை நீங்கள் கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள் என்றார். புத்தர் புன்னகைத்தார்.
பிரச்சனைகள் கவலையாகவோ கோபமாகவோ ஆத்திரமாகவோ அகங்காரமாகவோ எந்தவொரு ரூபத்தில் வந்து மனதை வாட்டி எடுத்தாலும் குழம்பிய குட்டை தெளிவதற்காகக் காத்திருப்பதைப் போல மனதில் உள்ள பிரச்சனை துன்பம் சோகம் கவலை என எதுவாக இருந்தாலும் அது தெளிவடையயும் வரை அமைதியாக மனதை கவனித்துக் கொண்டிருந்தால் போதும். மனதில் வந்த பிரச்சனை துன்பம் சோகம் கவலை அனைத்தும் மறைந்து மகிழ்ச்சி நிலை உண்டாகும்.