பந்தார் விரலி

இராமானுஜரின் ஐந்து குருக்களில் திருக்கோட்டியூர் நம்பியும் ஒருவர். இவரிடத்தில் அஷ்டாக்ஷர மந்திரோபதேசம் பெறுவதற்காக 36 முறை அலைந்தார். அத்தனை முறையும் இன்னும் உனக்கு பக்குவம் வரவில்லை என்று இராமானுஜரை திருப்பி அனுப்பி விட்டார் குருவாகிய நம்பி. அதனால் தினமும் தன்னுடைய குருவை சந்திக்க வேண்டும் என்று திருக்கோஷ்டியூரிலேயே தங்கி தினமும் குருவை தரிசித்தார் இராமானுஜர். மார்கழி மாதம் ஒரு நாள் அதிகாலையில் இராமானுஜர் வீதியில் சங்கீர்த்தனம் செய்து கொண்டே தன்னுடைய குருவை பார்க்க சென்று கொண்டிருந்தார். மார்கழி மாதம் என்பதினால் ஒவ்வொரு வீட்டு வாசலில் கோலம் போட்டு அதில் ஒரு பூ வைத்து விளக்கு வைப்பார்கள். இராமானுஜர் குருவின் வீட்டு வாசலில் வந்து நின்றார். அப்போது நம்பியின் வீட்டு வாசலில் அவரது பெண் இருட்டில் கோலம் போட்டு கையில் விளக்குடன் நிற்பதைப் பார்த்ததும் ‘ஆ’ என்று கத்தி மயக்கம் போட்டு விழுந்து விட்டார். அந்தப் பெண் பயந்து வீட்டின் உள்ளே ஓடிச் சென்று நம்பியிடம் நமது வீட்டு வாசலில் ஒருவர் திருப்பாவை பாடிக் கொண்டே வந்து நின்றார். வந்தவர் என்னைப் பார்த்ததும் மயக்கம் போட்டு விழுந்து விட்டார் என்று சொன்னாள். இதனைக் கேட்ட நம்பி அவர் என்ன பாட்டு திருப்பாவையில் பாடிக் கொண்டு வந்தார் என்று கேட்டார். பந்தார் விரலி பாடல் என்றாள்.

பந்தார் விரலி பாடலின் அர்த்தம் என்ன என்றால் கையில் விளக்குடன் அந்த மகாலக்ஷ்மியின் தரிசனம் எனக்குக் கிடைக்கிறது என்று அர்த்தம். அப்போது திருக்கோஷ்டியூர் நம்பி தன் மகளிடம் சொல்கிறார். அவன் மேல் ஒன்றும் குறையில்லை. அந்தப் பாட்டில் மகாலட்சுமி எதிரில் வந்தாய் என்ற வார்த்தையை அவன் பாடும் போது அவன் முன் நீ கையில் விளக்குடன் நின்றிருப்பாய். அந்தப் பாட்டில் அவன் இலயித்து இருந்ததால் உன்னைப் பார்த்ததும் மகாலட்சுமி நிற்பது அவன் கண்களுக்கு தெரிந்திருக்கிறது. ஆகையால் அவன் அப்படியே மயங்கி விழுந்து விட்டான் என்றார்.

இதுபோல் எந்தப் பாட்டு நாம் பாடினாலும் அந்தப் பாட்டில் நம்மை ஐக்கியப்படுத்தி இலயித்துப் பாடும் போதுஅதன் பலன் முழுமையாக இருக்கும். மந்திரங்கள் நாம் ஜெபிக்கும் போதும் மந்திரத்தின் தெய்வத்தை நினைத்துக் கொண்டே தன்னை அதில் ஐக்கியப்படுத்தி ஜெபம் செய்வதினால் அந்த மந்திரத்தின் சித்தி விரைவாக கிடைக்கும்.

திருப்பாவை பாடல் 18

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: மதம் கொண்ட வலிமையான யானையை தன்னிடத்தே கொண்டனும் போரில் பின்வாங்காத தோள்வலிமை உடையவனுமான நந்தகோபனின் மருமகளே! நப்பின்னை பிராட்டியே! ((நப்பின்னை என்றாள் கண்ணனுக்கு முறைப்பெண் என்று பொருள்) வாசனை சிந்தும் கூந்தலை உடையவளே! உன் வாசல் கதவைத் திற! கோழிகள் கூவும் ஒலி நாலாபுறத்தில் இருந்தும் கேட்கிறது. குருக்கத்திக் கொடியின் மேல் அமர்ந்து குயில்கள் பாடத் துவங்கி விட்டன. பூப்பந்தைப் போன்ற மென்மையான விரல்களைக் கொண்டவளே! உன் கணவனின் புகழ் பாட நாங்கள் வந்துள்ளோம். அளவுமாறாத நீ உனது செந்தாமரை மலர் போன்ற கைகளில் உள்ள வளையல்களின் ஓசைகள் ஒலிக்கும் கைகளால் மகிழ்ச்சியுடன் வந்து கதவைத் திறந்தால் எங்கள் உள்ளம் மகிழ்ச்சியடையும் என்று அழைக்கிறாள் ஆண்டாள்.

விளக்கம்: பெருமாள் கோயிலுக்குப் போனால் நேராக சுவாமி சன்னதிக்கு போகக்கூடாது. தாயாரை முதலில் சேவிக்க வேண்டும். ஏன் என்றால் நமது வீட்டில் அப்பாவிடம் கோரிக்கை வைத்தால் எதற்கடா அதெல்லாம் என்பார். அதையே அம்மாவிடம் சொல்லி அப்பாவிடம் கேட்கச் சொன்னால் அதே கோரிக்கை பத்தே நிமிடத்தில் நிறைவேறி விடும். இதுபோல் தான் நாராயணனிடம் ஒரு கோரிக்கை வைத்தால் அந்த மாயன் அவ்வளவு எளிதில் ஏற்க மாட்டான். அதையே தாயாரிடம் சொல்லி வைத்து விட்டால் அவனால் தப்பவே முடியாது. கண்ணனின் மனைவி நப்பின்னையை (மகாலட்சுமியை) எழுப்பி கண்ணனை எழுப்புகிறார்கள் பாவை நோன்பிருக்கும் பெண்கள்.

இந்த திருப்பாவைப் பாடலை தினமும் இராமானுஜர் இலயித்து பாடியது போல் பாடி பரந்தாமனை வணங்கினால் வாழ்வில் குன்றாத செல்வமும் குறையாத மகிழ்வும் தந்து நம்மை உய்விப்பான் மாலவன்.

கடவுள் இருக்கின்றார்

ஒரு நாத்திகர் இருந்தார். அவர் ஒரு மக்கள் கூட்டத்தில் பேசும் போது கடவுள் என்ற ஒருவர் கிடையவே கிடையாது என்று கடவுளை அவன் விருப்பத்திற்கு திட்டினான். நான் வேண்டுமானால் சவால் விடுகிறேன். கடவுள் என்று ஒருவர் இருந்தால் இன்னும் 30 நிமிடத்திற்குள் இந்த மேடைக்கு வந்து என்னை கொல்ல வேண்டும். அப்போது நான் கடவுள் இருக்கிறார் என்று ஏற்கிறேன் என்று சொல்லி விட்டு கடிகாரத்தை அவர் முன் இருக்கும் டேபிள் மீது வைத்து அங்கு அமர்ந்து விட்டார். இப்போது இங்கு என்ன நடக்க போகிறது என்று அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 30 நிமிடம் ஆனது. சவால் விட்டவன் சாக இல்லை. அப்போது அங்கு உள்ளவர்களின் மனதில் கடவுளை இவ்வளவு திட்டுகிறான். இவ்வளவு திட்டியும் இவனுக்கு ஒன்றுமே ஆகவில்லையே? கடவுள் என்ற ஒருவர் இல்லையோ என்ற சந்தேகம் வர ஆரம்பித்தது. சிலர் இவன் சொன்னது சரிதான் 5 நிமிடமாகியும் இவன் சாகவே இல்லை. ஆக கடவுள் இல்லை என்று சொன்னார்கள்.

அப்போது அந்த மேடையில் ஒரு ஞானி வந்து மக்கள் முன் பேச ஆரம்பித்தார். இவன் சொன்னதை இவ்வளவு நேரம் கேட்டீர்கள். இப்போது நான் சொல்வதையும் கேட்டு சிந்தித்து முடிவு செய்யுங்கள் என்று ஆரம்பித்தார். உங்களது மகனோ மகளோ உங்களது எதிரில் வந்து என்னை நீ 5 நிமிடத்தில் கொன்றால்தான் நீ எனக்கு தாய் தந்தை. இல்லை என்றால் நீங்கள் எனது தாய் தந்தை இல்லை என்று என்று சொன்னால் நீங்கள் உங்களது தாய் தந்தை உறவை நிருபிக்க உங்களது குழந்தைகளை நீங்கள் கொல்வீர்களா? உங்களது குழந்தைகள் உங்களை தவறாக பேசினால் கூட அவர்களை எப்படி திருத்துவது என்றுதானே சிந்திப்பீர்கள். அவர்களுக்கு நீங்கள் தண்டனை கொடுப்பதில்லை. அதுபோல் இறைவன் என்பவர் நமக்கு உண்மையான தாய் தந்தை. அவர் அன்பின் உருவம். நாம் அவரை தவறாக பேசினால் கூட அவர் நம்மை தண்டிப்பதில்லை. நாம் இறைவன் என்று ஒருவர் இருக்கிறார் என்று அவரை ஏற்றுக் கொள்வதாலோ ஏற்றுக் கொள்ளாமல் போனாலோ அவருக்கு எந்த நஷ்டமும் இல்லை. அவர் தன்னுடைய கடமைகளை சரியாக செய்து கொண்டே இருப்பார். இதனை அறிந்து கொள்வதும் ஆன்மிகமே என்று சொல்லி முடித்தார். மக்கள் மனதில் வந்த சந்தேகம் முழுமையாக அகன்று இறைவன் இருக்கிறார் என்று ஒருமித்த குரலில் சொல்லி அங்கிருந்து கிளம்பினார்கள். நாத்திகரின் மனதிற்குள்ளும் இறைவன் இருக்கிறாரோ என்ற சிந்தனை ஓட ஆரம்பித்தது.

நன்மை தீமை

ஒரு சீடன் தன் குருவிடம் ஒரு கேள்வி கேட்டான். குருவே இறைவனை அடைய நல்லதை செய் நல்லதை பார் நல்லதை கேள் என்று சொல்லிக் கொடுக்கிறீர்கள். இந்த உலகில் உள்ள அனைத்தையும் நம்முடைய நன்மைக்காகவே படைத்தார் என்றும் சொல்கிறீர்கள். அப்படி என்றால் நன்மை தீமை இரண்டையும் இறைவன்தான் படைத்திருக்க வேண்டும். இறைவன் படைத்த நல்லதை நாம் ஏற்பது போல் கெட்டதையும் ஏற்றால் என்ன? என்று கேட்டான். அதற்கு குரு சிரித்துக் கொண்டே அது அவரவர் விருப்பம் என்று சொல்லி விட்டு உணவிற்கு பின் பதில் சொல்வதாக சொல்லி அவனையும் அழைத்துச் சென்றார்.

சீடன் தனக்கு அளிக்கப்பட உணவைப் பார்த்து அதிர்ந்து விட்டான். ஒரு கிண்ணத்தில் பாலும் மற்றோரு கிண்ணத்தில் பசு மாட்டு சாணமும் வைக்கப்பட்டு அவனிடம் உண்ணக் கொடுக்கப்பட்டது. சீடன் விழித்தான். குரு புன்முறுவலுடன் அவனிடம் சொன்னார். பால் சாணம் இரண்டுமே பசு மாட்டிடம் இருந்து தானே வருகிறது. பாலை ஏற்றுக் கொள்ளும்போது சாணியை ஏற்றுக் கொள்ளக் கூடாதா? என கேட்டார். சீடன் விழித்தான். குரு தொடர்ந்தார் பால் போன்ற நல்லவை நாம் மகிழ்வாய் வாழ. அதனை அப்படியே ஏற்கலாம். சாணியை விலக்கி மண்ணில் புதைத்து உரமாக்குவது போல் தீயவைகளை விலக்கி புதைத்து அது தரும் பாடத்தை வாழ்விற்கு உரமாக்கி உயரும் வல்லமை கற்க வேண்டும் என்று சீடனுக்கு விளக்கம் அளித்தார்.

நாம் யார்?

ஒரு ராஜா யுத்தத்தில் தோற்றுப் போகிற மாதிரியான சூழல் வந்ததும் தப்பித்துப் போகலாம் என்று எண்ணுகிறான். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு குதிரையில் ஏறி தப்பிப் போகிறான். எதிரி நாட்டுக்காரர்கள் துரத்திக் கொண்டு வந்ததைப் பார்த்தலும் ராஜா தன் மனைவியிடம் நான் முடிந்தால் இவர்களுடன் சண்டை போட்டு ஜெயித்து வருவேன். நீ கர்ப்பிணியாக இருக்கிறாய் உன் வயிற்றில் இருப்பது நம் நாட்டின் வாரிசு. அவனை வைத்து எப்படியாவது நாட்டை மீட்பதற்கு தயார் செய். நாட்டிற்காக நீ தப்பித்துப் போ என்கிறான். அதனால் ராணி குதிரையின் மேல் ஏறி தப்பிப் போகிறாள். சண்டையில் ராஜா இறந்து விடுகிறார். ராணி சிறிது தூரம் சென்றவுடன் அவளுக்கு பிரசவம் ஆகிறது. குழந்தை பிறந்ததும் அவள் இறந்து விடுகிறாள். அந்த இடம் வேடர்கள் வசிக்கிற ஒரு காடு. அவர்களுக்கு இந்தப்பெண்மணி ராணி என்பதும் தெரியாது. அதனால் ராஜகுமாரன் தான் யார் என்று தெரியாமல் வேடவர்களுடைய காட்டில் வளர்கிறான். அவன் ராஜகுமாரன் என்கிற விஷயம் ராஜா ராணி இரண்டு பேருக்கு மாத்திரம் தான் தெரியும். இரண்டு பேரும் உயிரோடு இல்லை. அவன் வேடர்களைப் போலவே சாப்பிட்டு அவர்கள் மொழியை பேசி வளர்கிறான்.

அந்த நாட்டில் இருந்த மந்திரி புத்திசாலி. தப்பித்துப் போன ராஜா ஒரு வேளை உயிரோடு இருந்திருந்தால் இந்த நேரம் வந்திருப்பார். வரவில்லை ஆகையால் ராணிக்கு குழந்தை பிறந்து இன்று உயிரோடு இருந்தால் அந்த ராஜகுமாரனை வைத்து எப்படியாவது இந்த நாட்டை மீட்டுவிடலாம் என்று சொல்லி மந்திரி ராஜா தப்பிச் சென்ற திசையை நோக்கி சென்று தேடிச் செல்கிறார். காட்டில் வேடர் குலத்தில் வளரும் ராஜகுமாரனின் முகத்தில் அரசரின் சாயல் மற்றும் நடை பாவனையை பார்த்து வேடர்களிடம் இவனைப் பற்றி விசாரிக்கிறார். அவர்கள் சொன்னதை வைத்து நம் ராஜகுமாரன் இவன் தான் என்று தெரிந்து கொண்டு நீ ராஜகுமாரன் வா போகலாம் உனக்கென்று நாடு மக்கள் இருக்கிறார்கள். நாட்டை மீட்டுவிடலாம் வா. அங்கு வந்தால் உனக்கு அத்தனை சுகங்களும் கிடைக்கும் என்கிறார். அவன் பயந்து கொண்டு நான் ராஜா எல்லாம் கிடையாது என்னை விட்டு விடுங்கள் வர முடியாது என்கிறான். அவனை மந்திரி தேற்றி அவனுக்கு குதிரை ஏறுவது கத்தி சண்டை போடுவது வரை எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்து அவனை அழைத்து வந்து நாட்டை மீட்டு விடுகிறார். நாட்டில் இப்போது அரசனாக அனைத்து சுகங்களையும் அனுபவித்தான் அந்த காட்டில் வளர்ந்த ராஜாகுமாரன்.

இது கதையில் உள்ள அந்த இளவரசன் நாம்தான். நம்முடைய தந்தை நடராஜா. சிதம்பரம் நடராஜா.

இக்கதையில் உள்ளது போல் நாமெல்லாம் பிறவி எடுக்கும் முன்பாக பகவானோடு இருந்தவர்கள். ஆசை காரணமாக எங்கிருந்து வந்தோம் ஏன் வந்தோம் எதற்கு வந்தோம் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் மாயையில் மாட்டிக் கொண்டு பிறவிப் பெருங்கடல் என்னும் இந்த பவசாகரத்தில் மாட்டிக் கொண்டு துன்பத்தை அனுபவித்துக் கொண்டு இதிலிருந்து மீள வழி வழி தெரியாமல் நாம் வாழும் இந்த உலகம் என்று சொல்லக்கூடிய இந்த காட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாமெல்லாம் ராஜகுமாரர்கள். ஜீவாத்மாக்களாகிய நாம் கைலாயத்திலோ வைகுண்டத்திலோ இருந்தவர்கள். நம் அப்பா இறைவன் என்று சொல்கின்ற ராஜா நடராஜா. நாம் இந்த உலகத்தில் வந்து மக்களுடன் சேர்ந்து மக்களாகி விட்டோம். அவர்களைப் போல் உடை உடுத்திக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாமெல்லாம் கைலாசவாசிகள். வைகுண்டவாசிகள் பசி தாகம் தூக்கம் இல்லாமல் அமிழ்தம் சாப்பிட்டுக் கொண்டு அழகாக பட்டாடைகளை தரித்துக் கொண்டு தேவர்களுடைய கிரீடத்தை போட்டுக் கொண்டு பேரின்பத்தில் லயித்துக் கிடந்தவர்கள். இன்றைக்கு பசிக்கிறது தாகம் எடுக்கிறது. உடலிலிருந்து துர்நாற்றம் வருகிறது என்று சேம்பும் சோப்பும் போட்டுக் கொண்டு சென்ட் அடித்துக் கொண்டிருக்கிறோம். பல நேரங்களில் இதனையெல்லாம் பெருமையாக வேறு நினைத்து செய்து கொண்டிருக்கிறோம். நாம் எவ்வளவு ஆனந்தமாக பகவானோடு இருந்தவர்கள். இன்றைக்கு மானுடர்களாக மயக்கத்தில் மயங்கிக் கொண்டிருக்கிறோம்.

கதையில் வந்த மந்திரியைப் போல் நம் வாழ்க்கையிலும் ஒருவன் வந்து நீங்களெல்லாம் சாதாரண ஆட்கள் இல்லை. நான் உங்களை கயிலாயத்தில் பார்த்திருக்கிறேன். அங்கிருக்கும் சுகங்களையெல்லாம் விட்டுவிட்டு இப்படி மனிதனோடு மனிதனாகப் போய் சுற்றிக் கொண்டிருக்கிறீர்களே என்று சொன்னால் நாம் என்ன சொல்வோம். அதெல்லாம் கிடையாது இது என் உடம்பு என் வீடு என் பந்தம் என்போம். மாயையின் மயக்கத்தில் இருப்பதினால் இறைவனே வந்து சொன்னாலும் நான் மனிதன் என்போம். கதையில் வரும் மந்திரியை ராஜ குமாரன் நம்பி அவர் சொன்னதை எல்லாம் செய்தது போல் நம்மிடம் சொன்னவரை நம்பினால் அவர் சொல்வதை நம்பினால் அவர் விடாமல் பயிற்சி கொடுத்து நமக்கு இருக்கிற சக்தியை நமக்கு புரிய வைப்பார். யார் அந்த அவர்? நாயன்மார்கள், ஆழ்வார்கள், ஞானிகள், மகான்கள் மற்றும் சித்தர்கள் நமக்கு அருள்பாலித்த நூல்கள் நம்முடைய தேவாரம் திருவாசகம் திருமந்திரம் திருப்புகழ் பெரிய புராணம் உட்பட பன்னிரு திருமுறைகள் என்று பெரிய நூல் களஞ்சியமே இருக்கிறது. இந்த நூல்கள் வழியாக நமக்கு அவர்கள் பயிற்சி கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். நாம் பயிற்சி செய்து அந்த பயிற்சியில் எப்போது முற்றுப் பெருவோமோ அப்போது இந்த துன்ப பிறவியில் இருந்து விடுபட்டு கைலாசம் அல்லது வைகுண்ட அரசவைக்கு சென்று விடுவோம்.

அமைதி

ஒரு அரசன் அமைதி என்பதை மிகச் சரியாக விளக்கும் ஓவியத்திற்குப் பெரிய பரிசு கொடுக்கப்படும் என்று அறிவித்தார். பல ஓவியர்கள் பல அற்புதமான ஓவியங்களை வரைந்து வந்தனர். அதில் சிறந்த இரண்டு ஓவியங்களை மட்டும் அரசர் தேர்ந்தெடுத்தார்.

முதல் ஓவியத்தில் மிக அழகாக சலனமே இல்லாத ஒரு தெளிவான ஏரி இருந்தது. அதைச் சுற்றிப் பச்சைப் பசேலென்ற மலைகள். அதன் மேல் வெண் மேகங்கள் தவழும் நீல வானம் என அற்புதமாக இருந்தது. ஒவியத்தைப் பார்த்தாலே மனதில் முழுமையான அமைதி பிறக்கும். ஒவியத்தைப் பார்த்த அனைவரும் இந்த ஒவியத்தைதான் அரசன் தேர்ந்தெடுப்பார் என்று நினைத்தார்கள்.

இரண்டாவது ஓவியத்தில் இருண்ட வானம் இடி மின்னலுடன் பெய்யும் பயங்கரமான மழை. பார்ப்பதற்கே பயத்தைக் கொடுக்கும் உருண்டு திரண்டு விழும் ஒரு பெரிய அருவி. படத்தை உற்றுப் பார்த்தால் அந்த அருவிக்குப் பின்னால் உள்ள ஒரு பாறை இடுக்கில் ஒரு சின்ன செடியில் தாய் பறவை ஒன்று தன் கூட்டில் குஞ்சுகளோடு மிக நிம்மதியாகக் கண் மூடி அமர்ந்திருந்தது.

அரசர் இரண்டாவது ஓவியத்தை அமைதி ஒவியமாக அறிவித்தார். அனைவருக்கும் ஒரே குழப்பம் இந்த ஓவியத்தில் எங்கே அமைதி இருக்கிறது? என்று அரசரிடம் கேட்டார்கள். அரசர் சிரித்துக்கொண்டே சொன்னார். அமைதி என்பது சத்தமே இல்லாத எந்தப் பிரச்சனையும் இல்லாத இடத்தில் இருப்பது அல்ல. எவ்வளவு பெரிய புயலும் சத்தமும் போராட்டமும் உங்களைச் சுற்றி நடந்தாலும் உங்கள் மனதிற்குள் எந்தச் சலனமும் இல்லாமல் அந்தப் பறவையைப் போல் நிம்மதியாக இருந்தால் அதுதான் உண்மையான அமைதி என்றார்.

நம் வாழ்க்கையில பிரச்சனைகளே வரக்கூடாது அப்போதான் நிம்மதியா வாழ முடியும்னு நினைத்தால் அது கடைசி வரைக்கும் நடக்கவே நடக்காது. கடனைப் பற்றிய கவலை வேலைப்பளு குடும்பக் கஷ்டங்கள் என உலக துன்பங்கள் அனைத்தும் சுற்றிப் புயல் மாதிரி வீசினாலும் மனசை மட்டும் அந்தப் பறவை மாதிரி எப்பவும் அமைதியா வைத்துக் கொண்டால் அதுதான் அமைதியான நிம்மதியான வாழ்க்கை. உண்மையான அமைதி நிம்மதி வெளியில சூழ்நிலையில இல்லை. ஒவ்வொருவரின் மனதில் தான் இருக்கிறது.

நடிப்பு

பக்தர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலாக இராமகிருஷ்ணர் சொன்ன குட்டி கதை.

ஒரு மனிதன் தனக்கு பணம் தேவைப்பட்ட போதெல்லாம் கடன் வாங்கிக் கொண்டிருந்தான். கடனை அடைக்கும் வகையில் அவன் தொழிலை வளர்க்கவில்லை. தேவைப்படும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் கடன் வாங்கிக் கொண்டேயிருந்தான். இதனால் கடன் அதிகமாகி விட்டது. கடன் கொடுத்தவர்கள் பலர் அடிக்கடி கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்கும்படி அவனைத் தொந்தரவு செய்ய ஆரம்பித்தார்கள். அவனால் கடனை திருப்பிக் கொடுக்க முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு வந்தது. இதிலிருந்து எப்படித் தப்புவது என்று அந்த மனிதன் யோசனை செய்து ஒரு வழியைக் கண்டு பிடித்தான். அதன்படி பைத்தியம் பிடித்தவன் போல் பாசாங்கு செய்தான். உறவினர்கள் அவனுடைய பைத்தியத்தைத் தெளிவிப்பதற்காக வைத்தியர்களைக் கூட்டி வந்து காண்பித்தார்கள். வைத்தியர்கள் வந்து பார்த்து மருந்து கொடுத்துப் போனார்கள். மருந்து கொடுக்கக் கொடுக்க அவனுடைய பாசாங்கும் அதிகரித்தது. அந்த வைத்தியர் சரியில்லை இந்த வைத்தியர் சரியில்லை என்று உறவினர்கள் வேறு வேறு வைத்தியர்களைக் கூட்டிக் கொண்டு வந்து காண்பித்தார்கள்.

இறுதியாக ஒரு வைத்தியரிடம் அழைத்துச் சென்றார்கள். அவர் அனுபவம் நிறைந்தவர். சிறந்த அறிவாளி. அவர் அவன் கையைப் பிடித்துப் பார்த்தார். அவனுடைய செயல்களைக் கூர்ந்து கவனித்தார். இது உண்மையான பைத்தியம் அல்ல என்று தெரிந்து கொண்டார். பைத்தியக்காரனைத் தனியாக அழைத்துச் சென்றார். நீ செய்வது சரியல்ல. இப்பொழுது உன்னிடம் சில பைத்திய அறி குறிகள் தென்படுகின்றன. நீண்டநாள் இப்படியே பைத்தியம் போல் நடித்துக் கொண்டிருந்தால் உனக்கு உண்மையாகவே பைத்தியம் பிடித்துவிடும். எச்சரிக்கையாய் இரு என்று கூறினார். இதைக் கேட்ட அந்த மனிதன் பயந்து போய் அன்று முதல் பைத்தியக்காரனைப் போல் பாசாங்கு செய்வதை நிறுத்திவிட்டான்.

ஒரு மனிதன் தொடர்ந்து தான் எப்படி இருப்பதாகக் காட்டிக் கொள்கிறானோ அவன் அப்படியே ஆகி விடுகிறான். ஆகவே நல்லவனாக இருப்பதாகக் கொண்டால் அவன் நல்லவனாகவே ஆகி விட முடியும். பக்தி இருப்பதைப் போல் நடித்துக் கொண்டிருந்தால் பக்தி வந்துவிடும். தியானம் செய்வது போல் நடித்துக் கொண்டிருந்தால் இறுதியில் தியானம் கைகூடும்.

கீதை விளக்கத்தில் விவேகானந்தர் – நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்த வனாகவே ஆகிவிடுவாய்.

பச்சோந்தி

தெய்வங்களைப் பற்றியும் மற்ற மதங்களைப் பற்றிம் பக்தர் கேட்ட கேள்விக்கு பதிலாக இராமகிருஷ்ணர் சொன்ன குட்டி கதை.

ஒரு பனந்தோப்பு வழியாக இரண்டு மனிதர்கள் பேசிக் கொண்டே போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு மனிதன் அங்கு நின்ற பனை மரத்தின் மேல் ஒரு பச்சோந்தி இருப்பதைக் கவனித்தான். அதோ அந்தப் பனை மரத்தில் ஓர் பச்சோந்தி இருக்கிறது பார். அதன் நிறம் சிவப்பு என்றான். இரண்டாவது மனிதன் எந்தப் பனை மரம் எந்தப் பனைமரம்?” என்று கேட்டுக் கடைசியாக அவன் சுட்டிக் காட்டிய மரத்தைப் பார்த்தான். அதில் இருந்த பச்சோந்தியையும் பார்த்தான். பனைமரம் இருக்கிறது. அதில் பச்சோந்தியும் இருக்கிறது. ஆனால் அதன் நிறம் சிவப்பல்ல நீலநிறம் என்று சொன்னான் இரண்டாவது மனிதன். சிவப்புக்கும் நீலத்துக்கும் வேற்றுமை தெரியாமல் உளறுகிறானே இவன் என்று நினைத்துக் கொண்டான் முதல் மனிதன். இருவருக்கும் பச்சோந்தி என்ன நிறம் என்பதில் விவாதம் முற்றியது.

பனந்தோப்பில் இவர்கள் இருவரும் விவாதித்துக் கொண்டிருக்கும் போது வேறொரு மனிதர் அந்த பக்கம் வந்தார். சண்டையிட்டுக் கொண்ட இருவரும் அந்த வழியாக வந்தவரை அருகில் அழைத்தார்கள். ஐயா இந்த பச்சோந்தி சிவப்பு நிறம் தானே என்று கேட்டான் முதல் ஆள். ஆமாம் என்றான் புது ஆள். என்னையா இப்படிச் சொல்கிறீர்? நன்றாகப் பார்த்துச் சொல்லுங்கள் பச்சோந்தி நீல நிறம் தானே? என்று கேட்டான் இரண்டாமவன். இதற்குத் ஆமாம் என்றான் புது ஆள். என்ன இது நான் கேட்டாலும் ஆமாம் என்று சொல்கிறீர்கள்? அவன் கேட்டாலும் ஆமாம் என்று சொல்கிறீர்கள்? உனக்கென்ன பைத்தியமா? என்று கேட்டான் முதல்வன். பைத்தியம் எனக்கல்ல உங்கள் இருவருக்கும்தான். பச்சோந்தி நேரத்துக்கு நேரம் தான் இருக்கின்ற இடத்தின் நிறத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளும். நீங்கள் பார்த்த போது சிவப்பாயிருந்தது. அவர் பார்த்த போது நீலமாகி விட்டது. பச்சை இலை மீது இந்த பச்சோந்தி அமர்ந்தால் பச்சையாகவும் தெரியும் என்றார் புதுமனிதன். இருவரும் உண்மையை உணர்ந்து அமைதி ஆனார்கள்.

இறைவனும் இப்படித்தான். பிள்ளையாரை நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு பிள்ளையாராகவும் முருகரை நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு முருகராகவும் பெருமாளை நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு பெருமாளாகவும் காட்சி கொடுப்பவர் இறைவன். மனிதன்தான் தான் வணங்கும் இறைவனே பெரியவர் என்றும் மற்றவர் வணங்கும் தெய்வம் சிறியவர் என்றும் தன் கண்ணால் காண்பவற்றை மட்டுமே அறியாமையால் நம்பிக் கொண்டும் அனைத்தும் அந்த பரம்பொருள்தான் என்ற உண்மையை உணராமல் மதச்சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சரணாகதி நம்பிக்கை

ஒரு முனிவர் ஒருவர் வெகுநாட்களாக இமயமலை அடிவாரத்தில் சாதுக்களுடன் தவமிருந்து பல சக்திகளைப் பெற்றார். தான் பெற்ற சக்தியை இறைவனின் அருளை மக்களும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அருகில் இருந்த கிராமத்திற்கு சென்றார். அங்குள்ள பிள்ளைகளுக்கு கல்வி கற்பித்து மக்களுக்கு இறைவனின் மீது நம்பிக்கையும் சரணாகதியும் வர வைக்க வேண்டும் என்று நினைத்தார். அந்த கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இடத்தை தேர்வு செய்து கிராம மக்களிடம் தான் இங்கு ஆசிரமம் அமைத்து தங்கப் போவதாகவும் இங்கு சிறிய ஆலயம் ஒன்று கட்டி இங்குள்ள பிள்ளைகளுக்கு ஆன்மீகத்தை கற்பிக்கப் போவதாகவும் கூறினார். அவருக்கு அந்த கிராம மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து அவர்களும் அவருக்கு உதவியாக அவர் தங்குவதற்கு தென்னை ஓலைகள் பனை ஓலைகள் போன்றவற்றை கொடுத்து இடத்தையும் சீர் செய்து கொடுத்தனர். அங்கு ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்தார். கிராம மக்களும் பூஜைக்கு தேவையான பால் பழம் இளநீர் போன்றவற்றை கொண்டு வந்து கொடுத்தனர். பூஜைகள் செய்து விட்டு மக்களுக்கு புராண கதைகளை கூறி தர்மத்தை போதித்தார்.

ஒரு நாள் அந்த வழியாக ஒரு ஆடு ஒன்று மேய்ந்து வந்தது. அது பாறை தடுக்கி கீழே விழுந்து அதன் கால் முறிந்து ரத்தம் கொட்டியது. உடனே முனிவர் அந்த ஆட்டுக் குட்டியை பிடித்து தன் ஆசிரமத்திற்கு பின்னால் இருந்த ஒரு பச்சிலையை கொண்டு வந்து அதன் காலில் துணியால் கட்டி இறைவா உனது செயல் இந்த ஆடு குணம் ஆக வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார். உடனே அந்த ஆடு எழுந்து ஓட ஆரம்பித்தது. இதை பார்த்த அந்த ஆடு மேய்க்கும் சிறுவன் கிராமத்தில் சென்று முனிவர் செய்த அதிசயத்தை கூறினான். உடனே அந்த கிராமத்து மக்கள் முனிவரை வந்து சந்தித்து அங்கு நோய் வாய்ப்பட்ட அனைவருக்கும் சிகிச்சை செய்யும்படி கூறினார்கள். அதற்கு முனிவர் நான் வைத்தியன் அல்ல ஏதோ ஒரு பச்சிலையை எடுத்து அந்த ஆட்டு குட்டிக்கு கட்டினேன். இறைவன் குணப்படுத்தினார். அது எழுந்து ஓடியது. எனது செயல் ஒன்றும் இல்லை என்றார். ஆனால் கிராம மக்கள் இல்லை முனிவரே நீங்கள் உங்கள் கையால் எதை கொடுத்தாலும் எங்களுக்கு சுகமாகும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று சொல்லி நோயாளிகளை அழைத்து வந்தார்கள். முனிவரும் செய்வதறியாது இறைவா இதுவும் உன் செயல் என்று கூறி நினைத்து காட்டிலிருந்த தனக்கு தெரிந்த மூலிகை செடிகளை பச்சிலைகளை பறித்து தனக்கு தெரிந்தவரை சிலவற்றை காய வைத்து பவுடராக ஆக்கியும் சில தழைகளை அரைத்து லேகியம் போல உருண்டைபிடித்தும் சில பச்சிலைகளை தைலம் போல தயாரித்து வைத்தார். கிராம மக்கள் தங்களுக்கு உண்டான நோய்களை சொல்லி மருந்து கேட்டபோது அவர்கள் வியாதிக்கு ஏற்றபடி மருந்தை கொடுத்து இறைவா குணப்படுத்து என்று பிரார்த்தனை செய்து கொடுத்தார். நம்பிக்கையுடன் வாங்கி சென்ற கிராம மக்கள் விரைவில் குணமடைந்தனர். தினமும் கூட்டம் வெளி கிராமத்தில் இருந்தும் வர ஆரம்பித்தது. அந்த ஊரில் இறைவன் மீது நம்பிக்கை இல்லாத ஒரு வாலிபன் இந்த சாமியார் செயலைப் பார்த்து இந்த ஆளை சோதிக்க வேண்டும் என்று வந்தான்.

முனிவரை பார்த்து நீங்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான மூலிகைகளைத்தான் கொடுக்கிறீர்கள் எப்படி குணமாகிறது என்று கேட்டான். அது இறைவன் செயலப்பா என்று முனிவர் கூறினார். எனக்கு இப்போது தீராத வயிற்று வலி அதற்கு ஏதாவது மருந்து கொடுங்கள் என்று சிரிப்புடன் கேட்டான். அவன் எண்ணத்தை புரிந்து கொண்ட முனிவர் இவனுக்கு வயிற்று வலி அல்ல. நம்மை சோதிக்க வந்திருக்கிறான் என்பதை அறிந்து சரியப்பா அப்படியே செய்கிறேன் என்று சும்மா அவன் கையைப் பிடித்து பார்த்து விட்டு அந்த லேகியத்தில் ஒரு ஐந்து உருண்டை எடுத்துக் கொடுத்து தம்பி உனக்கு தீராத வயிற்று வலி. வயிறெல்லாம் புண்ணாகி உள்ளது. ஆகவே இந்த லேகியத்தை காலையில் எழுந்தவுடன் குளித்துவிட்டு நெற்றியில் திருநீர் அணிந்து ஒரு லேகியத்தை வெரும் வயிற்றில் ஒரு வாரம் சாப்பிட்டால் குணமாகும். இதற்கு ஒரு பத்தியம் இருக்கிறது நீ இந்த லேகியத்தை சாப்பிடுவதற்கு முன்பு குரங்கை மட்டும் நினைக்கக் கூடாது. நீ குரங்கை நினைத்து இந்த லேகியத்தை சாப்பிட்டால் அது எதிர்மறையாகி உன் உயிருக்கு ஆபத்தாகி விடும் அதுதான் பத்தியம். தொடர்ந்து ஒரு வாரம் செய்து வா. குரங்கை நினைத்து விட்டால் இந்த லேகியத்தை சாப்பிடாதே. மறுநாள் சாப்பிடு என்று அனுப்பி வைத்தார். மருந்து சாப்பிடாமலேயே தனக்கு குணம் ஆகிவிட்டது என்று மக்களிடம் சொல்லி இந்த முனிவரை திட்ட வைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வீட்டிற்கு சென்றான். வீட்டிற்கு உள்ளே நுழைந்த உடனேயே அவனுக்கு உண்மையிலேயே வயிற்று வலி வருவது போன்ற உணர்வு வந்தது. என்ன இது உண்மையிலேயே வயிறு வலிக்கிறதோ என்று பயந்தான். பின் முனிவர் கொடுத்த மருந்துதான் இருக்கிறதே வயிற்று வலி வந்தால் காலையில் முனிவர் சொன்னது போல குளித்துவிட்டு நெற்றியில் திருநீர் இட்டுக் கொண்டு அந்த லேகியத்தை எடுத்து சாப்பிடலாம் என்று நினைத்துவிட்டு படுத்து விட்டான்.

காலையில் எழுந்ததும் வயிற்று வலி அதிகமாக இருந்தது. முனிவர் சொன்னது போலவே குளித்துவிட்டு திருநீறு அணிந்து கொண்டு லேகியத்தை எடுத்ததுமே குரங்கு ஞாபகம் அவனுக்கு வந்தது. முனிவர் எதை நினைக்கக் கூடாது என்றாரோ அந்த குரங்கு மீண்டும் மீண்டும் நினைவில் வந்து கொண்டே இருந்தது. குரங்கை நினைத்து விட்டோமே. இனி இந்த லேகியத்தை சாப்பிட்டால் நம் உயிருக்கு ஆபத்து வந்து விடும் என்று அன்று மருந்து சாப்பிடாமல் விட்டு விட்டான். அன்று முழுதும் வலியால் துடித்தான். மறுநாள் விடிந்ததும் குளித்துவிட்டு அதேபோல் லேகியத்தை எடுத்து சாப்பிட போனான் அப்போதும் அந்த குரங்கு தான் அவனுக்கு நினைவுக்கு வந்தது அன்றும் சாப்பிடவில்லை. இப்படியாக ஐந்து நாட்கள் வயிற்று வலியிலேயே அந்த லேகியத்தை சாப்பிடாமல் துடித்தான். இனி தாமதிக்கக்கூடாது என்று அந்த முனிவரிடம் ஓடிவந்து முனிவரே என்னை மன்னியுங்கள். நான் உங்களை சோதிக்கவே சும்மா வயிற்று வலி என்று சொன்னேன். ஆனால் உண்மையிலேயே வயிற்று வலி வந்து விட்டது. நீங்கள் கொடுத்த லேகியத்தை சொன்னபடி சாப்பிடலாம் என்று நினைத்தேன். ஆனால் பத்தியம் கடைபிடிக்க முடியவில்லை அந்த லேகியத்தை எடுக்கும் போதெல்லாம் என் கண் முன்னே குரங்கு தான் வந்தது அதனால் மருந்தை சாப்பிட முடியவில்லை. நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் அதன்படியே செய்கிறேன். என் வயிற்று வலியை குணப்படுத்துங்கள் என்று மனதார வேண்டினான்.

முனிவர் அவனை தட்டிக் கொடுத்து தம்பி உனக்கு ஒன்றுமில்லை நீ கவலைப்படாதே நீ என்னை சோதிக்க வந்தாய் அதனால் நான் உன்னை சோதித்தேன். பத்தியம் எல்லாம் ஒன்றும் இல்லை நீ குரங்கை நினைத்து சாப்பிட்டாலும் அது ஒன்றும் செய்யாது லேகியம் வேலை செய்யும் வயிற்று வலி குணமாகும். இந்த லேகியத்தை இங்கேயே வாயில் போட்டு தண்ணீர் குடி மீதியை வீட்டிலிருந்து மீதி நான்கு நாட்களுக்கும் சாப்பிட சரியாகிவிடும். எதிலுமே நம்பிக்கை வைத்து எந்த செயல் செய்தாலும் அது வெற்றி அடையும். கிராம மக்கள் என்னிடம் நம்பிக்கையோடு வந்தார்கள் நான் கொடுத்த மருந்தை சாப்பிட்டார்கள் குணமானார்கள். நம்பிக்கை இல்லாமல் அரைகுறையாக எந்த காரியம் செய்தாலும் அது திருப்தி அடையாது வெற்றியடையாது என்று ஆசி கூறி அனுப்பினார்.

கோயில் பிரசாதம்

இராமானுஜரின் சிறு வயதில் யாதவ பிரகாசர் என்பவர் குருவாக இருந்தார். இவர் தன்னுடைய பல்லலாக்கில் ஒரு நாட்டின் வழியாக சென்று கொண்டிருந்தார். பல்லக்கை இராமானுஜர் உட்பட அவரது சீடர்கள் தூக்கிக் கொண்டு சென்றார்கள். யாதவ பிரகாசர் தனது நாட்டின் எல்லைக்குள் வந்திருப்பதை அறிந்த அந்த நாட்டின் அரசர் அவரை வரவேற்று வணங்கி தன்னுடைய மகளை ஒரு பிரம்மராட்சசன் என்ற பேய் பிடித்திருப்பதாகவும் அந்த பேயை ஓட்டி தனது மகளை காப்பாற்றுமாறு கேட்டுக் கொண்டார். யாதவ பிரகாசர் அரசரின் வேண்டுகோளை ஏற்று அரசனின் மாளிகைக்கு சென்றார். அங்கு அவரது மகளைப் பார்த்த யாதவ பிரகாசர் அவளுடைய உடம்பிற்குள் இருந்த பிரம்ம ராட்சனைப் பார்த்து இந்த உடம்பை விட்டு ஓடிப்போ என்றார்.

யாதவ பிரகாசரைப் பார்த்து சிரித்த பிரம்ம ராட்சசன் நீ சொன்னால் நான் போக வேண்டுமா? நான் யார் தெரியுமா? நீ யார் தெரியுமா? என்று பேச ஆரம்பத்தது. நீ சென்ற ஜென்மத்தில் ஒரு உடும்பாக பிறந்து ஒரு கோயிலில் கிடந்தாய். கோயிலில் வருபவர்கள் அனைவருக்கும் பிரசாதம் கொடுப்பார்கள். அந்த பிரசாதத்தை அவர்கள் சாப்பிடுவார்கள். அதில் சிதறும் பிரசாதத்தை சாப்பிட்டு உயிர் வாழ்ந்தவன் நீ. அப்படி வாழ்நாள் முழுவதும் கோயில் பிரசாதத்தை மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்தாய். அதில் புண்ணியத்தை நிரம்ப பெற்றாய். அதில் கிடைத்த ஞானத்தை வைத்து இந்த ஜென்மாவில் மனித பிறப்பெடுத்து வேதம் கற்றுக் கொண்டு பிராமணனாக குருவாக நிற்கிறாய். நான் யார் தெரியுமா? அந்தணனாக பிறப்பெடுத்து அந்தணனாக வாழ்ந்து கோயிலில் வேதம் சொல்லி யாகம் கொண்டிருந்தேன். இறைவனைப் பற்றிய சிந்தனை இல்லாமல் சொல்லில் மந்திரத்தை தவறாக சொல்லியும் பெயரளவிற்கு செயலில் யாகத்தையும் செய்து கொண்டு மனம் போன போக்கில் தவறுகள் செய்து கொண்டு வாழ்ந்தபடியால் பிரம்மராட்சசனாக பிறப்பெடுத்தேன். என்னைப் பொறுத்தவரையில் நீ ஒரு உடும்பு. ஆகவே நீ சொன்னால் நான் போக மாட்டேன். நீ வந்த வழியே திரும்பிப் போ என்றான் பிரம்மராட்சசன். யாதவ பிரகாசர் என்ன செய்தால் நீ இந்த உடம்பை விட்டு செல்வாய் என்று கேட்டார். உன்னுடைய பல்லக்கை சுமந்து கொண்டு வரும் இராமானுஜர் தனது காலை எனது தலையில் வைத்து நீ போ என்றால் நான் சாப விமோசனம் பெற்று இந்த உடம்பை விட்டு சென்று விடுவேன் என்றது. யாதவபிரகாசரும் இராமானுஜரை அழைத்து பிரம்மராட்சனின் தலைமீது காலை வைக்க சொன்னார். உடனடியாக பிரம்மராட்சனும் சாப விமோசனம் பெற்று அரசனின் மகளின் உடம்பை விட்டு சென்று விட்டான்.

கோயில் பிரசாதம் கொடுக்கப்பட்டு அதில் சிந்திய உணவை சாப்பிட்ட ஒரு உடும்பே புண்ணியத்தைப் பெற்று அதன் பலனாக ஞானத்தை பெற்று குருவாக உயர்ந்த நிலைக்கு சென்றிருக்கிறார். உடும்பு பிறப்பை விட மேன்மையாக பிறப்பு மனிதப் பிறப்பு. இவர்களுக்கு கோயிலுக்கு செல்வதற்கும் இறைவனுக்கு பிரசாதம் படைப்பதற்கும் அதனை சாப்பிடுவதற்கும் உண்டான அத்தனை வாய்ப்புகளும் இருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களின் வாழ்க்கையில் தர்மப்படி வாழ்ந்து தினமும் சிறிது நேரம் ஒதுக்கி கோயிலுக்கு சென்று இறைவனை வழிபட்டு கோயிலின் பிரசாதம் சாப்பிட்டு வாழ்ந்தாலே விரைவாக இந்த பிறவிக் கடலை கடந்து இறைவனை அடைந்து விடலாம்.

தர்மம்

சாது ஒருவர் காட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது தாகம் ஏற்பட்டது. அருகில் இருந்த குளத்தில் இறங்கினார். தண்ணீரை கைகளில் அள்ளும் போது தண்ணீருக்குள் ஒளிந்திருந்த முதலை சாதுவின் கால்களை கவ்விப் பிடித்தது. சாது முதலையை கருணையாக பார்த்தார். முதலை சாதுவிடம் பேசியது. சாதுவே இந்தக் குளம் என் ஆளுகைக்குட்பட்டது. இதில் இறங்குபவர்களை நான் தின்று விடுவேன். இன்று நீங்கள் எனது பசியை போக்க வந்திருக்கிறீர்கள். எவ்வளவு கருணையோடு நீங்கள் என்னைப் பார்த்தாலும் நான் உங்களை விட மாட்டேன் என்றது. அதற்கு சாது முதலையே மரணத்தைக் கண்டு நான் பயப்படவில்லை. என் குருகுலத்தில் படிக்கும் சீடர்களுக்கு கல்வி இன்னமும் நிறைவுபெறவில்லை. நான் இறந்து விட்டால் அவர்களின் படிப்பு பாதியில் நின்று விடும். அந்தக் கவலைதான் என்னை வாட்டுகிறதே தவிர உயிரை இழப்பதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என்னை நீ விட்டால் அதற்கு உபகாரகமாக ஏதேனும் இருந்தால் சொல் அதனை செய்கிறேன் என்றார் சாது. யோசித்தது முதலை. சாதுவே உங்களை நான் விடுகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. நீங்கள் தினமும் சீடர்களுக்கு கல்வி சொல்லிக் கொடுக்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் இந்த குளத்திற்கு எதிரில் அமர்ந்து கொள்ள வேண்டும். தாகத்தோடு வருபவர்கள் குளத்தில் இறங்க பயப்படுகிறார்கள். அவர்களிடம் குளத்தைப் பற்றி பெருமையாகச் சொல்ல வேண்டும். அவர்கள் குளத்தில் இறங்குவார்கள். பிறகு நான் அவர்களை கொன்று தின்று விடுவேன். இதைச் செய்வதாக நீங்கள் சத்தியம் செய்து கொடுத்தால் உங்களை விடுவிக்கிறேன். அதே போல சத்தியத்தை மீறினால் கொடுத்த வாக்கை காப்பாற்றாத பாவம் உங்களை வந்தடையும் என்றது முதலை. சாதுவும் முதலை சொன்னதை ஏற்றுக் கொண்டு முதலைக்கு சத்தியம் செய்து கொடுத்தார். முதலை அவரை விடுவித்தது. அங்கிருந்து புறப்பட்டார்.

சாது முதலைக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் படி அடுத்த நாள் குளக்கரைக்கு வந்து எதிரில் அமர்ந்தார். சற்று நேரத்தில் ஒரு மீனவன் வந்து சாதுவிடம் பேசினான். ஐயா நான் மீன் பிடிப்பதற்காக வந்திருக்கிறேன். இந்தக் குளத்தில் வலை வீசினால் அதிகமாக மீன்கள் கிடைக்குமா? என்று கேட்டான். மீன் பிடிப்பவரே இந்தக் குளம் மிகவும் ஆற்றல் வாய்ந்தது பெருமை வாய்ந்தது என்று குளத்தை மிகவும் பெருமையாக பேசி தொடர்ந்தார். ஆனால் மீன் கிடைக்குமா என்ற உனது கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. இந்தக் குளத்தில் வசிக்கும் முதலையிடம் கேள். உன் கேள்விக்கு முதலையிடம் பதில் கிடைக்கும் என்றார். இந்தக் குளத்தில் முதலை இருக்கிறதா? ஐயோ என்று கத்தியவாறு ஓட்டம் பிடித்தான். இதைப் பார்த்த முதலை குளத்திலிருந்து வெளியே வந்தது. சாதுவே இதுதான் சத்தியத்தை காப்பாற்றுகிற லட்சணமா? நீங்கள் அவனிடம் என்ன சொன்னீர்கள்? அவன் ஏன் ஓடுகிறான்? என்று கோபத்தோடு கேட்டது. முதலையே குளத்தைப் பற்றியும் குளத்தில் உள்ள உன்னைப் பற்றி மிகவும் பெருமையாகத்தான் சொன்னேன். நான் சத்தியத்தை மீறவில்லை என்றார் சாது. சாது தம்மை ஏமாற்றுகிறாரோ என்று சந்தேகமடைந்த முதலை உடனே தன்னுடைய குட்டியை கூட்டி வந்தது. சாதுவே இது என் குட்டி. நீங்கள் வைத்திருக்கும் துணியில் இதை மூட்டையாக கட்டி பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இங்கு வருபவர்களிடம் என்ன பேசுகிறீர்கள் என்பதை குட்டி கேட்டு என்னிடம் சொல்லும் என்றது.

சாதுவின் பக்கத்தில் மூட்டையில் குட்டி இருந்தது. அன்று அதன் பிறகு யாருமே அந்தப் பக்கம் வரவில்லை. அடுத்த நாள் ஒரு வழிப்போக்கன் வந்தான். அவன் கையில் ஒரு பை இருந்தது. சாதுவே இந்தப் பையில் தங்க நகைகள் இருக்கின்றன. நான் குளத்தில் குளித்துவிட்டு வந்து வாங்கிக் கொள்கிறேன். இந்தக் குளம் குளிப்பதற்கு உகந்ததுதானே? என்று கேட்டான். வழிப்போக்கரே குளத்து நீர் மிகவும் நல்ல நீர். குடிப்பதற்கும் குளிப்பதற்கும் மிகவும் சிறப்பான குளம். நேற்று ஒருவன் இப்படித்தான் தனது பொருளை எனது அருகில் இருக்கும் துணியில் வைத்துவிட்டு குளத்தில் இறங்கினான். அவன் இன்னும் வரவில்லை. குளத்தில் இறங்கியவன் வந்ததும் அவனிடம் கேட்டுக்கொள் என்றார் சாது. என்னது நேற்று போனவன் இன்னும் வரலையா? குளத்தில் ஏதோ பிரச்னை இருக்கிறது என்று சொல்லிவிட்டு ஓடினான். இதனை கண்ட தாய் முதலை குட்டியிடம் நடந்தவற்றை கேட்டு தெரிந்து கொண்டது. கோபத்தோடு சாதுவைப் பார்த்து நேற்று யார் வந்து உங்களிடம் மூட்டையை கொடுத்தது என்று கத்தியது. முதலையே நீ தானே என்னிடம் உனது குட்டியை இந்த துணியில் வைத்து விட்டு குளத்தில் இறங்கினாய். அதன்பின் நீதான் வரவேயில்லையே. குளத்தை பெருமையாகத்தானே சொல்லியிருக்கிறேன். நான் சத்தியத்தை மீறவில்லை என்றார் சாது. அடுத்த நாள் அந்த நாட்டு மந்திரி குளக்கரைக்கு வந்தார். சாதுவைப் பார்த்து இந்தக் குளத்தில் குளிக்க வேண்டும். குளம் பாதுகாப்பானதா? என்று கேட்டார். மந்திரியே இந்த குளத்திற்கு செல்லும் பாதையைப் பாருங்கள். மனிதர்கள் குளத்தை நோக்கி நடந்து சென்ற பாதத் தடங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை பாருங்கள். அப்படியானால் இந்த குளத்தில் அதிகமான மக்கள் குளிக்க சென்றிருக்கிறார்கள். ஆகவே இந்த குளம் குளிக்க சிறப்பான குளம் போல தெரிகிறது. ஆனால் குளத்திலிருந்து திரும்பிய மனிதர்களின் பாதத் தடங்களும் சரி சமமாக இருக்கிறதா என்பதை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார். மந்திரி பார்த்தார். குளத்தை நோக்கிச் சென்ற பாதச் சுவடுகள் அதிக எண்ணிக்கையில் இருந்தன. குளத்திலிருந்து கரைக்குத் திரும்பிய பாதச் சுவடுகள் ஏதுமில்லை. குளத்திற்குள் சென்றவர்கள் திரும்பி வரவில்லை குளத்தில் ஏதோ பிரச்சனை என்பதை புரிந்து கொண்ட மந்திரி சாதுவிற்கு நன்றி சொல்லி அங்கிருந்து நகர்ந்தார். இதனை கண்ட முதலை குட்டியிடம் நடந்தவற்றை கேட்டு தெரிந்து கொண்டது.

சாதுவைப் பார்த்து முதலை சாதுவே நீங்கள் சத்தியத்தை மீறிவிட்டீர்கள். குளக் கரையில் அமர்ந்து எனக்கு உணவாக வேண்டியவர்களை காப்பாற்றி கொண்டிருக்கிறீர்கள். இது நியாயமல்ல நீங்கள் வாக்கு மீறி விட்டீர்கள் ஆகவே உங்களை பாவம் வந்து சேரும் என்று கத்தியது. அதற்கு சாது முதலையே உன் பார்வையில் உன் கோபம் நியாயமானது உனது பார்வையில் நான் கொடுத்த வாக்கை மீறியவனாக உனக்கு தெரிகிறது. ஆனால் தர்மத்தின்படியே நான் நடந்து கொண்டேன். தர்மத்துக்கு எதிராக எதையும் சாதுவானவர்கள் செய்யமாட்டார்கள். நான் காப்பாற்ற வேண்டிய தர்மங்கள் இங்கு இரண்டு இருக்கிறது. ஒன்று உனக்கு கொடுத்த வாக்கை தவறாமல் காப்பது. இரண்டு இங்கு வந்தவர்களுக்கு குளத்தைப் பற்றி கேள்வி கேட்கும் போது நான் சொல்லும் பதில் சரியாக இருக்கும் என்று என்னை நம்பினார்கள். அவர்களின் நம்பிக்கையை நான் காப்பாற்றுவது எனது கடமை. ஒரே நேரத்தில் இரண்டு தர்மங்களை நான் காப்பாற்றியாக வேண்டும். குளத்தை பெருமையாக கூறி உனக்கு கொடுத்த வாக்கையும் காப்பாற்றினேன். அதே போல் அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றும் விதமான வார்த்தையை கூறி அவர்களையும் காப்பாற்றினேன். ஆக நான் தர்மத்தை மீறவில்லை. என்னை பாவம் அண்டாது என்று சொல்லி முதலைக்கு கொடுத்த வாக்கின்படி மீண்டும் குளத்தின் எதிரே சென்று அமர்ந்து கொண்டார். சாது இருக்கும் வரை தனக்கு உணவு கிடைக்காது என்று உணர்ந்த முதலை தனது உணவிற்கு வேறு இடத்திற்கு சென்று விட்டது.