பரமாத்மா

அந்தக் காலத்தில் புனித யாத்திரையாக கங்கையிலிருந்து காவடியில் தீர்த்தம் எடுத்துக் கொண்டு வந்து ராமேஸ்வரத்தில் இருக்கும் ராமநாதருக்கு அபிஷேகம் செய்வார்கள். பின் ராமநாதபுரத்தின் கடற்கரை மண்ணை எடுத்துக் கொண்டு போய் காசியில் சேர்ப்பார்கள். ஏகநாதர் சில பிராமணர்களுடன் கங்கா ஜலத்தைக் காவடியில் எடுத்துக்கொண்டு ராமநாதபுர மாவட்டத்தை நோக்கி இரண்டாயிரம் மைல் வரை வந்து விட்டார். ராமநாதபுரம் இன்று மாதிரியே அந்த காலத்திலும் தண்ணீரில்லாமல் வெறும் மணல்வெளியாக பாலைவனமாகத்தான் இருந்தது. அங்கே ஒரு கழுதை வெயில் தாங்க முடியாமல் தண்ணீர் தாகத்துடன் தண்ணீருக்காக வாயை ஆ வென்று திறந்து கொண்டு மணலில் புரண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

ஏகநாதர் தன்னுடைய காவடியில் இருக்கிற கங்கா ஜலத்தை எடுத்து அந்தக் கழுதையின் வாயில் ஊற்றி கழுதையின் தாகத்தை தீர்த்து அதனை காப்பாற்றினார். அவருடன் வந்தவர்கள் நீ மகாபாவி எங்களுடைய கூட்டத்திலிருந்து உன்னை விலக்கப் போகிறோம். ஈஸ்வரனுக்கு அபிஷேகம் செய்ய அவ்வளவு தூரத்திலிருந்து கொண்டு வந்த தீர்த்தத்தை ஒரு கழுதைக்குக் கொடுத்து விட்டாயே என்று திட்டினார்கள். அதற்கு ஏகநாதர் உங்களுக்கு இன்னும் அஞ்ஞானம் போகவில்லை. நான் எந்த ராமநாதேஸ்வரரைத் தேடி வந்தேனோ அவர் நான்கு மைல் முன்னாலேயே வந்து என்னிடம் இருக்கிற கங்கைத் தீர்த்தத்தை வாங்கிக் குடித்தார் கடவுள் இல்லாத வஸ்து உலகத்தில் எதுவுமே இல்லை. உலகத்தில் உள்ள எல்லாமும் எல்லோரும் பரமாத்மாதான் என்றார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.