ஶ்ரீ மீனாட்சி அம்மன்

காமதேனுவின் மீது அமர்ந்திருந்து அருள்பாலிக்கும் அன்னை மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோலம். இடம் மதுரை மீனாட்சியம்மன் கோயில் தேரில் உள்ள பழைமையான மரச்சிற்பம்.

புஷ்பக விமானம்

இராவணனின் புஷ்பக விமானம் பிரம்மாவுக்காக விஸ்வகர்மா உருவாக்கினார். பின்னர் பிரம்மா அதை செல்வத்தின் அதிபதியான குபேரனுக்கு பரிசளித்தார். பின்னர் அதை அவரது ஒன்றுவிட்ட சகோதரர் இராவணன் குபேரனிடம் இருந்து கைப்பற்றி தனதாக்கிக் கொண்டார். இராமர் அனுமன் உருவாக்கிய பாலத்தின் மூலம் இலங்கை சென்று இராவணனை போரில் வென்று இராவணன் வைத்திருந்த புஷ்பக விமானத்தில் சீதையுடன் திரும்ப அயோத்திக்கு வந்தார். தனது பட்டாபிஷேகம் முடிந்த பின்னர் குபேரனை அழைத்து மீண்டும் குபேரனிடம் புஷ்பக விமானம் திரும்ப கொடுத்து விட்டார். இவ்வரலாறு கம்ப இராமாயணத்தில் மீட்சிப் படலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வரலாற்றை மரச்சிற்பமாக வடித்துள்ளார்கள். கிபி 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கடவல்லூர் விஷ்ணு ஆலயத்தின் கருவறையின் வெளிச்சுவரில் இந்த சிற்பம் உள்ளது.

பிரம்ம முகூர்த்த நேரம்

சகலாகம சார சங்கிரகம் என்னும் ஆகம நூல் பிரம்ம முகூர்த்த நேரம் பற்றிய அதிகாலை நேரத்தின் விளக்கத்தை சொல்கிறது. அந்த நூலில் சொல்லப்பட்ட ஒரு சுலோகம்

சுலோகம்

பிராம்ஹே முகூர்த்தே வித்வாம்ஸ்து
மனசா சிந்தயே சிவம்
சத்ரிபாத திரிகடிகா
ராத்திரியேது தினே தினே.

சூரியன் மறைந்த நேரத்தில் இருந்து மாலை 6 மணிக்கு சூரியன் மறைகிறது என்று வைத்துக் கொள்வோம். மீண்டும் அதிகாலை 6 மணிக்கு விடிகிறது என்று வைத்துக் கொள்வோம். மொத்தம் 12 மணி நேரம் இரவு ஆகும். இந்த 12 மணி நேரம் கொண்ட ஒரு இரவை நான்கு பகுதிகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். ஒரு பகுதிக்கு ஜாமம் என்று பெயர். 7 1/2 நாழிகை என்பது ஒரு ஜாமம். 24 நிமிடங்கள் கொண்டது ஒரு நாழிகை ஆகும். ஆக ஒரு இரவுக்கு மொத்தம் 4 ஜாமங்கள் இருக்கும். 1 ஜாமம் என்பது 3 மணி ஆகும். சூரியன் மறைந்த 6 மணி முதல் 9 மணி வரை முதல் ஜாமம். 9 மணி முதல் நடுஇரவு 12 மணி வரை 2 ஆம் ஜாமம். 12 மணி முதல் 3 மணி வரை 3 ஆம் ஜாமம். அதிகாலை 3 மணி முதல் விடியற் காலை 6 மணி வரை 4 ஆம் ஜாமம். இந்த 4 ஆம் ஜாமத்தில் உள்ள 7 1/2 நாழிகையில் பாதி 3 3/4 நாழிகை அதாவது 1.30 மணி நேரத்திற்கு பிரம்ம முகூர்த்த நேரம் என்று பெயர். சூரியன் உதிக்கும் 6 மணிக்கு 1.30 மணி நேரம் முன்பிலிருந்து பிரம்ம முகூர்த்த நேரம் ஆரம்பிக்கிறது.

இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் தூய்மையான பிரபஞ்ச சக்தியானது மழைபோல் கொட்டிக் கொண்டே இருக்கும். இந்த சக்திக்கு பிரம்மாவின் துணைவியான சரஸ்வதி என்று பெயர். அந்த அதிகாலை நேரத்தில் ஒவ்வொரு மனிதனுடைய அறிவும் மனமும் விழிப்பு நிலையில் இருக்கும். இந்த அதிகாலை நேரத்தில் எழுந்து உடலை தூய்மை செய்து விட்டு எக்காரியத்தை செய்தாலும் அறிவும் மனமும் விழிப்பு நிலையில் இருப்பதினால் மழை போல் கொட்டிக் கொண்டிருக்கும் பிரபஞ்ச சக்தியை எளிமையாக கிரகித்துக் கொள்ளும். அப்போது நூல்களை படித்தாலும் பூஜைகள் செய்தாலும் தியானம் ஜெபம் என்று எந்த காரியம் செய்தாலும் அக்காரியமானது நமது மனதில் அப்படி ஞாபகமாக பதிய ஆரம்பிக்கும். ஞாபகமாக பதியும் அந்த செயலானது நல்ல சிந்தனையை கொடுத்து அறிவை வளர்த்து நம்மை மேலும் மேன்மைப் படுத்துகிறது. அதனால் தான் நம் முன்னோர்கள் அதிகாலை எழுந்து படி என்றும் அதிகாலை எழுந்து பூஜைகள் செய். தியானம் செய். ஜபம் செய். கோயிலுக்கு செல் என்று எந்த நல்ல காரியம் செய்தாலும் அதிகாலை நேரத்தில் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்கள்.

மன சுத்தம்

ஸ்ரீ ஆதிசங்கரர் – ஒளியின் உதவி இல்லாமல் ஒரு பொருளை பார்க்க முடியாது. அதுபோலவே மனதில் ஆராய்ச்சி இல்லாமல் ஞானம் அடைய முடியாது. அஞ்ஞானத்தால் மனதில் தோன்றிய அனைத்தும் ஞானம் உதித்தவுடன் மறைந்து போகும். கண்ணாடி போன்ற மனதானது பரிசுத்தமானால் அதில் ஞானம் தானே விளங்கும். ஆகையால் மனதைப் பரிசுத்தமாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.

நடிப்பு

பக்தர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலாக இராமகிருஷ்ணர் சொன்ன குட்டி கதை.

ஒரு மனிதன் தனக்கு பணம் தேவைப்பட்ட போதெல்லாம் கடன் வாங்கிக் கொண்டிருந்தான். கடனை அடைக்கும் வகையில் அவன் தொழிலை வளர்க்கவில்லை. தேவைப்படும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் கடன் வாங்கிக் கொண்டேயிருந்தான். இதனால் கடன் அதிகமாகி விட்டது. கடன் கொடுத்தவர்கள் பலர் அடிக்கடி கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்கும்படி அவனைத் தொந்தரவு செய்ய ஆரம்பித்தார்கள். அவனால் கடனை திருப்பிக் கொடுக்க முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு வந்தது. இதிலிருந்து எப்படித் தப்புவது என்று அந்த மனிதன் யோசனை செய்து ஒரு வழியைக் கண்டு பிடித்தான். அதன்படி பைத்தியம் பிடித்தவன் போல் பாசாங்கு செய்தான். உறவினர்கள் அவனுடைய பைத்தியத்தைத் தெளிவிப்பதற்காக வைத்தியர்களைக் கூட்டி வந்து காண்பித்தார்கள். வைத்தியர்கள் வந்து பார்த்து மருந்து கொடுத்துப் போனார்கள். மருந்து கொடுக்கக் கொடுக்க அவனுடைய பாசாங்கும் அதிகரித்தது. அந்த வைத்தியர் சரியில்லை இந்த வைத்தியர் சரியில்லை என்று உறவினர்கள் வேறு வேறு வைத்தியர்களைக் கூட்டிக் கொண்டு வந்து காண்பித்தார்கள்.

இறுதியாக ஒரு வைத்தியரிடம் அழைத்துச் சென்றார்கள். அவர் அனுபவம் நிறைந்தவர். சிறந்த அறிவாளி. அவர் அவன் கையைப் பிடித்துப் பார்த்தார். அவனுடைய செயல்களைக் கூர்ந்து கவனித்தார். இது உண்மையான பைத்தியம் அல்ல என்று தெரிந்து கொண்டார். பைத்தியக்காரனைத் தனியாக அழைத்துச் சென்றார். நீ செய்வது சரியல்ல. இப்பொழுது உன்னிடம் சில பைத்திய அறி குறிகள் தென்படுகின்றன. நீண்டநாள் இப்படியே பைத்தியம் போல் நடித்துக் கொண்டிருந்தால் உனக்கு உண்மையாகவே பைத்தியம் பிடித்துவிடும். எச்சரிக்கையாய் இரு என்று கூறினார். இதைக் கேட்ட அந்த மனிதன் பயந்து போய் அன்று முதல் பைத்தியக்காரனைப் போல் பாசாங்கு செய்வதை நிறுத்திவிட்டான்.

ஒரு மனிதன் தொடர்ந்து தான் எப்படி இருப்பதாகக் காட்டிக் கொள்கிறானோ அவன் அப்படியே ஆகி விடுகிறான். ஆகவே நல்லவனாக இருப்பதாகக் கொண்டால் அவன் நல்லவனாகவே ஆகி விட முடியும். பக்தி இருப்பதைப் போல் நடித்துக் கொண்டிருந்தால் பக்தி வந்துவிடும். தியானம் செய்வது போல் நடித்துக் கொண்டிருந்தால் இறுதியில் தியானம் கைகூடும்.

கீதை விளக்கத்தில் விவேகானந்தர் – நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்த வனாகவே ஆகிவிடுவாய்.

நம்மாழ்வார் சொன்ன ஞான உண்மை

நம்மாழ்வார் 16 ஆண்டுகள் உண்ணாமல் உறங்காமல் பேசாமல் ஒரு புளியமரத்தின் பொந்துக்குள் யோக நிலையில் இருந்தார். உலகம் அவரை ஊமை என்று நினைத்தது. மௌனத்தையே மொழியாகக் கொண்ட அவரிடம் ஒரு தத்துவப் புதிரை கேள்வியாக கேட்டார் மதுரகவி ஆழ்வார்.

மதுரகவி ஆழ்வாரின் கேள்வி: செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?

இந்த கேள்வியின் விளக்கம்: அறிவில்லாத ஒரு ஜடப் பொருளின் (உடலின்) உள்ளே மிகச் சிறிய ஒரு உயிர் (ஆத்மா) புகுந்து கொண்டால் அது எதை அனுபவித்துக்கொண்டு எங்கே தங்கியிருக்கும்?

நம்மாழ்வார் அளித்த பதில்: அத்தைத் தின்று அங்கே கிடக்கும்.

இந்த பதிலின் விளக்கம்: உடலால் ஏற்படும் இன்ப துன்பங்களை நுகர்ந்து கொண்டு உயிர் (ஆத்மா) அந்த உடலிலேயே தங்கியிருக்கும்.

இந்த தத்துவ கேள்வி பதிலில் மறைந்துள்ள தத்துவ உண்மை:

செத்தது (உடல்): நம் உடல் என்பது தானாக இயங்காத ஒரு ஜடப் பொருள். உயிர் இல்லையென்றால் அது வெறும் ஜடம்.

சிறியது (ஆத்மா): நம் உடல் பெரியதாக இருக்கலாம் ஆனால் அதற்குள் இருக்கும் உயிர் (ஆத்மா) அணுவை விடச் சிறியது.

எத்தைத் தின்று?: இந்த உயிர் உடலுக்குள் புகுந்தவுடன் வினைகளை ஆசைகளை அனுபவிக்க நான் எனது என்ற அகங்காரத்தில் சிக்கிக் கொள்கிறது. உடலுக்குப் பசிக்கும் போது உணவை உண்கிறது. மனம் ஆசைப்படும் போது இன்பத்தைத் தேடுகிறது. பாவ புண்ணியங்களை அனுபவிக்கிறது. இதைத்தான் அத்தைத் தின்று (அந்த உடலின் வினைகளையே உண்டு) என்கிறார்.

எங்கே கிடக்கும்?: இந்த மாயையில் இருந்து விடுபடத் தெரியாமல் மீண்டும் மீண்டும் அதே உடல்களில் பிறந்து உழன்று கொண்டிருக்கும்.

16 ஆண்டுகள் பேசாத நம்மாழ்வார் இந்த பதிலின் மூலம் மனிதன் ஏன் பிறக்கிறான்? அவன் எப்படி இந்த உலக மாயையில் சிக்கிக் கொள்கிறான்? என்பதை உலகிற்கு உணர்த்தினார். இதைக் கேட்ட மாத்திரத்திலேயே மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரைத் தன் குருவாக ஏற்றுக்கொண்டார். ஞானம் என்பது இப்படியும் சில சொற்களில் இருக்கிறது. நாம்தான் புரிந்து கொண்டு உண்மையை உணர வேண்டும்.

ஶ்ரீ பூதநாதகீதை பகுதி – 9

இறைவனே மணிகண்டனாக அவதரித்திருக்கிறார் என்பதை அந்த இறைவனின் அருளால் உணர்ந்த ஐயப்பனின் வளர்ப்புத் தந்தை அரசன் இராஜசேகர பாண்டியன் இறைவனது பாத கமலங்களில் சரண் புகுந்து பிறவிப் பிணி தீர்க்க வேண்டி பிரார்த்தித்தார். முக்தியை நாடி வரும் மன்னனுக்கு மணிகண்டன் தானே ஞானாசிரியனாக விளங்கி ஞான தத்துவங்களை உபதேசித்தார். இந்த உபதேசத்தில் ஞான முதிர்ச்சி அடைந்தார் மன்னன். அந்த உபதேசமே ஶ்ரீபூதநாத கீதை நூல் ஆகும். இந்த ஶ்ரீபூதநாதகீதை நூல் திரு V. அரவிந்த் சுப்ரமணியம் அவர்களால் வெளிக் கொண்டு வரப்பட்டது. அந்த நூலில் உள்ள உபதேசங்களில் நான்காம் அத்தியாயத்தில் மனத்தை வென்று குருவருளால் முக்தியை அடைய வழி காட்டும் தத்வ விக்ஞான யோகம் பற்றி உபதேசித்திருக்கிறார். இந்த நான்காம் அத்தியாயத்தில் மொத்தம் 23 சுலோகங்கள் உள்ளது. இதில் 20 முதல் 23 வரையும் அடுத்து ஐந்தாம் அத்தியாயத்தில் 9 ஆம் சுலோகம் முதல் 23 ஆம் சுலோகம் வரை உள்ள சுலோகங்களுக்கு சிறு விளக்கம் இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சி பகுதி – 10 விரைவில் பதிவேற்றப்படும்.

பச்சோந்தி

தெய்வங்களைப் பற்றியும் மற்ற மதங்களைப் பற்றிம் பக்தர் கேட்ட கேள்விக்கு பதிலாக இராமகிருஷ்ணர் சொன்ன குட்டி கதை.

ஒரு பனந்தோப்பு வழியாக இரண்டு மனிதர்கள் பேசிக் கொண்டே போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு மனிதன் அங்கு நின்ற பனை மரத்தின் மேல் ஒரு பச்சோந்தி இருப்பதைக் கவனித்தான். அதோ அந்தப் பனை மரத்தில் ஓர் பச்சோந்தி இருக்கிறது பார். அதன் நிறம் சிவப்பு என்றான். இரண்டாவது மனிதன் எந்தப் பனை மரம் எந்தப் பனைமரம்?” என்று கேட்டுக் கடைசியாக அவன் சுட்டிக் காட்டிய மரத்தைப் பார்த்தான். அதில் இருந்த பச்சோந்தியையும் பார்த்தான். பனைமரம் இருக்கிறது. அதில் பச்சோந்தியும் இருக்கிறது. ஆனால் அதன் நிறம் சிவப்பல்ல நீலநிறம் என்று சொன்னான் இரண்டாவது மனிதன். சிவப்புக்கும் நீலத்துக்கும் வேற்றுமை தெரியாமல் உளறுகிறானே இவன் என்று நினைத்துக் கொண்டான் முதல் மனிதன். இருவருக்கும் பச்சோந்தி என்ன நிறம் என்பதில் விவாதம் முற்றியது.

பனந்தோப்பில் இவர்கள் இருவரும் விவாதித்துக் கொண்டிருக்கும் போது வேறொரு மனிதர் அந்த பக்கம் வந்தார். சண்டையிட்டுக் கொண்ட இருவரும் அந்த வழியாக வந்தவரை அருகில் அழைத்தார்கள். ஐயா இந்த பச்சோந்தி சிவப்பு நிறம் தானே என்று கேட்டான் முதல் ஆள். ஆமாம் என்றான் புது ஆள். என்னையா இப்படிச் சொல்கிறீர்? நன்றாகப் பார்த்துச் சொல்லுங்கள் பச்சோந்தி நீல நிறம் தானே? என்று கேட்டான் இரண்டாமவன். இதற்குத் ஆமாம் என்றான் புது ஆள். என்ன இது நான் கேட்டாலும் ஆமாம் என்று சொல்கிறீர்கள்? அவன் கேட்டாலும் ஆமாம் என்று சொல்கிறீர்கள்? உனக்கென்ன பைத்தியமா? என்று கேட்டான் முதல்வன். பைத்தியம் எனக்கல்ல உங்கள் இருவருக்கும்தான். பச்சோந்தி நேரத்துக்கு நேரம் தான் இருக்கின்ற இடத்தின் நிறத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளும். நீங்கள் பார்த்த போது சிவப்பாயிருந்தது. அவர் பார்த்த போது நீலமாகி விட்டது. பச்சை இலை மீது இந்த பச்சோந்தி அமர்ந்தால் பச்சையாகவும் தெரியும் என்றார் புதுமனிதன். இருவரும் உண்மையை உணர்ந்து அமைதி ஆனார்கள்.

இறைவனும் இப்படித்தான். பிள்ளையாரை நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு பிள்ளையாராகவும் முருகரை நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு முருகராகவும் பெருமாளை நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு பெருமாளாகவும் காட்சி கொடுப்பவர் இறைவன். மனிதன்தான் தான் வணங்கும் இறைவனே பெரியவர் என்றும் மற்றவர் வணங்கும் தெய்வம் சிறியவர் என்றும் தன் கண்ணால் காண்பவற்றை மட்டுமே அறியாமையால் நம்பிக் கொண்டும் அனைத்தும் அந்த பரம்பொருள்தான் என்ற உண்மையை உணராமல் மதச்சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஶ்ரீபூதநாதகீதை பகுதி – 8

இறைவனே மணிகண்டனாக அவதரித்திருக்கிறார் என்பதை அந்த இறைவனின் அருளால் உணர்ந்த ஐயப்பனின் வளர்ப்புத் தந்தை அரசன் இராஜசேகர பாண்டியன் இறைவனது பாத கமலங்களில் சரண் புகுந்து பிறவிப் பிணி தீர்க்க வேண்டி பிரார்த்தித்தார். முக்தியை நாடி வரும் மன்னனுக்கு மணிகண்டன் தானே ஞானாசிரியனாக விளங்கி ஞான தத்துவங்களை உபதேசித்தார். இந்த உபதேசத்தில் ஞான முதிர்ச்சி அடைந்தார் மன்னன். அந்த உபதேசமே ஶ்ரீபூதநாத கீதை நூல் ஆகும். இந்த ஶ்ரீபூதநாதகீதை நூல் திரு V. அரவிந்த் சுப்ரமணியம் அவர்களால் வெளிக் கொண்டு வரப்பட்டது. அந்த நூலில் உள்ள உபதேசங்களில் நான்காம் அத்தியாயத்தில் மனத்தை வென்று குருவருளால் முக்தியை அடைய வழி காட்டும் தத்வ விக்ஞான யோகம் பற்றி உபதேசித்திருக்கிறார். இந்த நான்காம் அத்தியாயத்தில் மொத்தம் 23 சுலோகங்கள் உள்ளது. இதில் 20 முதல் 23 வரையும் அடுத்து ஐந்தாம் அத்தியாயத்தில் 1 ஆம் சுலோகம் முதல் 8 ஆம் சுலோகம் வரை உள்ள சுலோகங்களுக்கு சிறு விளக்கம் இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சி பகுதி – 9 விரைவில் பதிவேற்றப்படும்.