குருநாதர் கருத்துக்கள் #1.28

கேள்வி: முற்பிறவியில் சென்றது இப்பிறவியில் பாதிப்பது ஏன்? முற்பிறவியில் சென்றதை மறந்துவிட வேண்டும் என்று கூறுகிறார்களே அவ்வாறு மறந்தால் முற்பிறவியில் நாம் செய்த கர்மா குறையும் என்று எடுத்துக் கொள்ளலாமா? இது உண்மையா?

அன்பரே நன்றாக சிந்திக்க வேண்டும். அன்று விதைத்தது இன்று பயிராக நிற்கின்றது. விதைத்தது மறந்து நின்றால் பயிரானது இறையருள் இருந்தால் வளர்ந்து நிற்கும் இறையருள் இல்லையேல் காய்ந்து போகும். சென்ற பிறவியே இப்பிறவியையும் வரும் பிறவியையும் முடிவு செய்யும். வினையைத் தாங்கும் சக்தி நம்முடன் இருத்தல் வேண்டும். அந்த வினையைத் தாங்கும் சக்தியைப் பெற இறைவன் காட்டிய வழியைப் பின்பற்ற வேண்டும். இப்பிறவியில் முன்பிறவியை நாம் மறந்து விடுகின்றோம். இப்போது நடப்பது முற்பிறவியின் வினையாலே என உணர்ந்தால் இறைவன் அருளால் அனைத்தும் சமமாகும். இறப்பதும் பிறப்பதும் இறைவன் விதியே. கர்மவிதியால் அவ்விதிப்படி நம் வாழ்வு முறை அமைகிறது. கர்மத்தை இறைவன் மாற்ற முடியாது என்பது பொது விதி. இருப்பினும் இறைவனின் அருளை முழுமையாகப் பெற்றால் இறைவன் அவ்வாறு நினைத்தால் உங்கள் விதியை மாற்ற முடியும். இந்த உணர்வோடு இறைவன் திருவடியை நாடுங்கள் இந்த உணர்வோடு சரணடையுங்கள். இந்த உணர்வோடு திருவடி பணிந்திட நல்வழி நல்மார்க்கம் நல்மாற்றம் உண்டு.

குருநாதர் கருத்துக்கள் #1.27

பிறவிதனை அறுக்கும் திறனை அளிக்க வல்லான் ஒருவனே அவனும் எம்பிரான் ஒருவனே என்றும் அனைவருக்கும் எடுத்துரைத்தோமே. இதற்குரிய வழிகளை எம்பிரான் அருளால் திருமந்திரத்தில் உரைத்துள்ளோம். இதனைக் கைப்பற்றியோர் இஜ்ஜென்மத்திற்குள்ளாகவே பிறவி இல்லா நிலை அடையக்கூடும். சீவன் (உயிர்) முக்தர்களாக நிலவக்கூடும் என்றும் கூறுவோமே.

நாகரீக காலங்களில் இவையாவும் இயலுமோ? என ஓர் வினாவும் கேட்டோம். உறுதியாக இயலும் என்பது மட்டுமல்லாது இந்நகரில் பலப்பல ஜீவன் முக்தர்கள் நடமாடுகின்றனர் என்பதும் மட்டுமல்லாது பலர் அவதாரம் எடுத்தும் நடமாடுகின்றனர். இவையாவும் கலி முடியும் முன்னதாக வாசியை கைப்பற்றுகின்றோரையும் சிவநெறியைக் கடைபிடிக்கின்றோரையும் கலிதனின் கொடுமையிலிருந்து மீட்கவே பிரளயத்திலிருந்து காக்கவே என்றும் இங்கு எடுத்துரைத்தோமே.

குருநாதர் கருத்துக்கள் #1.26

கேள்வி: மலை போல் நம்பினோம் என அனைவரும் உரைக்க இதற்கு விஷேச விளக்கம் யாதும் உண்டா?

மலை போல் என்பது உயரத்துக்கல்ல. மலை போல் என்பது வஜனத்துக்கு என்பேனே. வஜனம் என்றால் கனம் என்பது பொருளாகும். அதாவது அசைக்க முடியாத நம்பிக்கை என்பது பொருளாகும். மேலும் மற்றோர் விளக்கமும் உண்டு. அதுவும் இறைவன் போல் நம்பினோம் என்கின்ற பொருளும் உண்டு. ஏனெனில் மலை மேல் நின்றிட யாம் சிறியதாக உணர்வு பெறுவோம். இத்தகைய நிலையில் அப்பெரும் நம்பிக்கை இறைவன் போல் உம்மையும் நம்பினோமே என்பதோடு மலை போல் நம்பினோம் என்றும் கூறுவார்களே.

குருநாதர் கருத்துக்கள் #1.25

கேள்வி: இன்று மாவிலைத் தோரணம், வாழைக்கால் பந்தல், அரசமரம் சுற்றுதல் என்பதெல்லாம் கண்டோம். விழா நாளில் இது அவசியமா?

உண்மையில் இக்கால நிலையில் இவை அனைத்தும் தேவையற்றதே என்றும் விளக்கிடுவோம். இக்காலமதில் பெரிதாக தோரணங்களும் நவீன மின்சார வர்ண விளக்குகளும் போதுமானது என்கின்ற நிலையும் கண்டோம். அக்காலங்களில் திருமணங்கள் என்பது விசேஷங்களாகப் பல நாட்கள் தொடர்ந்து நடந்தன. இவ்விதமிருக்க அவரவருக்கும் அஜீரண நிலைகள் காண்பது சாதாரண நிலை என்றும் விளக்கிடுவோம். இதனை நீக்கி வைக்கும் வகையில் கொழுந்தான மாவிலை உபயோகம் கண்டது. இதற்கெனவே தோரணம் என்று விளக்கிட்டோமே.

மேலும் வெட்ட வெளியில் பந்தல்கள் நட்டும் அங்கு திருமணம் விசேஷங்கள் நடைபெற அரவம்தனின் (பாம்பு முதலான ஜந்துக்கள்) தீண்டுதலும் பலரும் கண்டனர். இதற்குத் தக்க மருந்தாக நஞ்சை இழுக்கும் வகையில் உபயோகிக்கப்பெறும் வாழைப் பட்டைகள் என்றும் விளக்கிட்டோமே. இத்தகைய வாழைத் தண்டுகளைப் பிளந்து அவை பாம்பு கடித்த இடத்தின் மேல் வைத்து முதலுதவியாக அக்காலத்தில் கண்டனர் என்று இங்கு எடுத்துரைத்தோமே. மேலும் அரச மரத்தின் தன்மையைக் குறித்தால் அன்று திருமணங்களில் பந்தலின் நடுவாக அரசக்கொம்பு ஒன்றை நட்டு இதனை மணமக்கள் சுற்றி வர வேண்டும் என்ற சம்பிரதாய விதியும் இருந்தது. இது சம்பிரதாயமாக குழந்தையின்மையை நீக்க வல்லது என்பதே பொருளாகின்றது. பல சம்பிரதாயங்கள் இவ்விதம் உண்டு. இன்று இங்கு ஏற்றும் சூடத்தின் (கற்பூரம்) தரம் குறைந்து விட்டது. அக்காலத்தில் நல் கற்பூரம் என அழைக்கப்படும் வஸ்துவை எரித்தும் அதனைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொள்வதும் கிருமி நாசினியாக உதவியது என்றும் சாம்பிராணி என்னும் தூபங்களைப் புகைப்பதால் அத்தலமதிலிருந்து கடிக்கும் பிராணிகள் ஜந்துக்கள் விலகி விடுகிறது. இவையாவும் கூறினால் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்கின்ற நிலையில் தெய்வத்தின் பெயரில் இதனைக் கூறிட பலரும் ஒப்புக்கொண்டு செய்கின்றனர் என்பதே நிஜமான நிலை.

மேலும் வெள்ளி சனி அன்று பொதுவாக மாமிச வகைகள் யாவரும் உண்பதில்லை. இதற்குக் காரணம் இவ்விரண்டு நாட்களிலும் பொதுவாக உடம்பில் உஷ்ணம் அதிகரிக்கக் கூடிய நாட்களாகிறது. இதனால் உடம்புக்கு ஏற்படும் பாதிப்புகள் தவிர்க்க அந்நாள் தெய்வீகநாள் எவரும் புலால் உண்ணக்கூடாது என்கின்ற விதியை வகுத்தனர். இறைவனுக்கு எந்நாளும் நீ என்ன உண்ட போதிலும் அக்கறை இல்லை என்பதை இங்கு உணர்தல் வேண்டும். மனிதனாக சுய திருத்தங்களை வகுத்துக் கொள்ள வேண்டும். நல்வழியை நாட வேண்டும். என்பதற்கென இறைவன் சுயபுத்தியை அளித்தான் என்பதை நாம் மறக்கலாகாது. நம் புத்திக் கூர்மையை உபயோகித்துப் பல காரியங்கள் சாதிக்க இயலும் என்றும் சிறு சிறு காரியங்களுக்கு விடை தெரிய தெய்வத்தை நாடுவது சிலாக்கியமற்றது என்றும் இங்கு உரைத்தோமே. ஏனெனில் கோடிக்கணக்கான மக்களுக்குத் தனித்தனியாக விடை அளிக்க இயலாது என்பதால் பிரதானமான சித்தர்கள் முனிவர்கள் ரிஷிகள் மூலமாக சில விதிகளை வகுத்து இதனை பின்பற்ற ஏற்படுத்தினர் என்பதே உண்மை நிலையாகின்றது. பொதுவாக இதனை மனிதர்கள் ஒப்புக்கொள்வதில்லை. ஆகவே அனைத்திற்கும் தெய்வீகம் என்கின்ற ஓர் போர்வையை போர்த்தி அனுசரிக்க வைத்தனர் இது தான் நிலை.

குருநாதர் கருத்துக்கள் #1.24

தெளிவு குருவின் திருமேனி காண்டல் எனத் துவங்கும் அந்நான்கு வரிகள் படித்து நன்றென அவ்வரிகளின் எளிமையை இரசித்தோரும் உண்டு. இருப்பினும் இதன் முழுமையான அர்த்தமும் எவ்விதம் செய்தல் வேண்டும் என்கின்றதும் அறியா நிலையில் உள்ளனர். இதனை யாம் இங்கு எடுத்துரைப்போமாக.

குருவும் தெய்வமும் வேறில்லை என்கின்றதை முதலில் உணர்தல் வேண்டும். நாம் வணங்கும் தெய்வமே குருவின் வடிவில் நம் முன் நிற்கின்றார் என்பதையும் மறப்பது நல்லதல்ல. யாம் வணங்கும் சிவன், கிருஷ்ணன், விஷ்ணு, அம்பிகை என்ற அனைத்தும் குருவுக்குள் அடக்கம் என்பதையும் மறவாது செயல்படுத்துதல் வேண்டும்.

மேலும் குருவை எவ்விதம் வணங்குவது? என்கின்ற ஓர் வினாவும் இங்கு எழும்பிடக் கண்டோம். குருவின் ஆத்மா அவருடய ஆன்மிக சக்தியை நாம் நேசிக்க வேண்டும் என்பதில் எவ்வித குழப்பமும் இல்லை. இவ்விதமிருக்க நாம் குருவாக வேண்டும் குரு நாமாக வேண்டும் என்கின்ற ஐக்கிய மனப்பான்மையை வளர்த்தல் வேண்டும். இதனைச் செய்யும் முன் குரு எவ்விதம் இருக்கின்றாரோ அவ்விதம் நாமும் மாற முயற்சித்தல் வேண்டும். இந்நிலையை எவ்விதம் அடைவது என்றால் குருவை எண்ணித் தியானம் செய்தல் வேண்டும். செய்திடும் முன்னதாக கால் தொட்டு சிரசு வரை அங்கங்களை நாம் தொட்டு அவை குருவின் அங்கங்களாக கருதி வணங்கிட்ட பின் குருவின் செய்கைகள் குருவின் தன்மைகள் அனைத்தும் நன்கென தியானித்து மனமதில் நிறுத்தல் வேண்டும். இவ்விதம் சில மாதங்கள் செய்கின்ற போது நமக்கு மகத்தான முன்னேற்றங்கள் குருவழி கிட்டக்கூடும் என்றும் விளக்கிட்டோமே.

குருநாதர் கருத்துக்கள் #1.23

இன்று கூறிட விசேஷங்கள் இல்லை. இல்லை என்கின்ற போதிலும் பலதும் உண்டே? இருக்கும் என்பது இல்லாது போகும். இல்லாது என்பது எங்கும் நிறைந்திட இதுவே சத்தியம் என்று கூறுவோம். இப்போது எது நிஜம் என்று நாம் நினைப்பது நிஜமில்லை. அனைத்தும் மாயை என்றாவது ஒரு நாள் இல்லாமல் போகும். எது நம் கண்ணுக்குத் தெரியவில்லையோ ஒன்றுமில்லாமல் இருக்கிறதோ அதுவே தான் இருக்கின்றது. இறைவன் நம் கண்ணுக்குத் தெரியவில்லை ஆனால் அவரே எப்போதும் எங்கும் இருக்கின்றார். இதுவே சத்தியம்.

கேள்வி: மறுபிறவி உண்மையா இல்லையா?

எண்ணற்ற பிறவிகள் மனிதனுக்கு உண்டு. ஒன்று இரண்டு மறுபிறவிகள் உண்டா? என்று கேட்டால் எண்ணற்ற பிறவிகள் உண்டு. இப்பிறவிகள் நம்முடைய கர்மாக்களின் விளைவுகளே. நல்ல கர்மாவானது நம்மைத் தொடர்ந்து வரும். தீயவை அனைத்தும் நல்ல பள்ளத்தில் விடும். எந்த நிலை வேண்டும் என்று நன்கு சிந்திப்பீர். ஏனெனில் சிந்திக்கும் தன்மை மனிதப் பிறவியில் மட்டுமே உள்ளது. மானிடன் சிந்திக்கும் தன்மையை நன்றாகப் பெற்றுக் கொண்டான். வினையின் விளைவுகளை நல் செய்கையால் நீக்கினால் வினையின் தீமைகளை தியானத்தால் நீக்கினால் வினையின் தீமைகளை பக்தியால் நீக்கினால் வினைகளின் தீமைகள் நீங்கிடும். சொர்க்கமும் நரகமும் இங்கேதானப்பா. நல் வினைகள் அது ஆனந்தம் கொடுக்கும். அந்த ஆனந்தமே சொர்க்கம் ஆகும். தீயவை நமக்கு கடினத்தை அளித்திட இக்கடினமே நரகம் ஆகும் என்று கூறுவோமே.

குருநாதர் கருத்துக்கள் #1.22

கேள்வி: எவ்வழி நல்வழி? யோக வழியா? பூஜை வழியா?

அவரவர் சக்திக்கேற்றார் போல் என யாமும் கூறுகிறோம். இதில் பல அர்த்தமும் உண்டு என்பேன். அவரவர் சக்தி எனக் கூறிட ஒன்று உடல் வலிமையைக் குறிக்கின்றது. இரண்டு காலமதின் நிலையையும் குறிக்கின்றது. அதாவது கடினமானது செய்திட காலம் கிட்டுமோ என்கின்ற வினாவும் இங்கு காணப்படுகின்றது. மூன்றாவது அவரவர் ஜென்மாந்திர நிலையையும் குறிக்கின்றது. இதுவே முக்கியத்துவம் காண்கின்றது என்று இங்கு எடுத்துரைப்போமே. நல்லதோர் நிலையில் செல்வந்தன் ராட்சஸ பறவையில் (விமானம்) அயல் நாடு செல்ல நேரிடும். சாதாரணமானவன் இணைப்புப்பெட்டி (இரயில்) வழியாகவும் செல்ல நேரிடும். இல்லாதோன் பேருந்து வழியாகச் செல்லக்கூடும். அதுவும் இயலாதோன் நடை பயணமாகச் செல்வதும் உண்டு.

இவ்விதமே பூர்வ ஜென்ம நிலையைக் குறித்தும் அவரவர்க்கும் மார்க்கம் அமையும். இதில் நீங்களாக யாதும் தேடுதல் வேண்டாம் என்பதே எமது கருத்தாகின்றது. இருப்பினும் கிட்டும் வழி நல்வழி எனக் கண்டு முழுமையாக ஒன்றில் நின்று சாதனை புரிந்திட வெற்றி, இறைபாதம், ஜெயம் உறுதி என்றும் இங்கு எடுத்துரைக்கின்றோம்.

கஜசம்ஹாரமூர்த்தி

சிவபெருமானின் 64 வடிவங்களில் கஜாசுர சம்ஹாரர் என்ற வடிவமும் ஒன்று. தாருகாவன முனிவர்கள் சிவபெருமானை அழிக்க அபிசார வேள்வி நடத்தி அதில் இருந்து கஜசூரன் என்ற யானையை உருவாக்கி சிவபெருமான் மீது ஏவி விட்டனர். இறைவன் கஜசூரன் என்ற யானையின் தோலை உரித்து தனது மேல் போர்த்திக் கொண்டு கஜசம்ஹாரமூர்த்தியாக நின்று தாருகாவன முனிவர்களின் அகங்காரத்தை அழித்து அவர்களுக்கு அருள் பாலித்தார். இவர் கரி உரித்த சிவன் என்றும் அழைக்கப்படுகிறார். கரி என்றாலும் யானை என்று பொருள். இந்த சிற்பம் உள்ள இடம் திருவதிகை வீரட்டானேசுவரர்கோவில் கடலூர் மாவட்டம்.

குருநாதர் கருத்துக்கள் #1.21

இவ்வுலக நிலையில் பொதுவாக மானிடர்களிடம் ஓர் தன்மை உண்டு. அத்தன்மையானது மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பது. பொதுவாக மற்றவர்கள் நல்ல நிலையில் இருந்தால் அதைக்கண்டு யாமும் அந்த நிலையை அடைய வேண்டும் என்று எண்ணாது சிறு பொறாமைத் தன்மையையும் வளர்க்கின்றனர். இதனைத் தவிர்த்தல் வேண்டும் என்று இங்கு கூறுகிறோம். பொதுவாக ஒப்பிடுவதை ஓர் நல்வழியில் மாற்றி அமைத்தல் வேண்டும். மற்றொருவரின் நல்குணங்கள் நம்மிடம் உள்ளதா என்று ஆராய்தல் வேண்டும். அவ்விதம் இல்லையேல் அதனை நம் வாழ்வில் அமைக்க முயற்சித்தல் வேண்டும். இது மட்டும் அல்லாது தீயவர்களின் குணங்கள் நம்மிடத்தில் உண்டா என்று எண்ணி அவ்விதம் இருந்தால் அதை நீக்குதல் வேண்டும். இதுவே சீரான ஒப்பிடும் முறை என்று இங்கு கூறுகிறோம். இக்காலத்தில் ஒப்பிடுதல் செல்வம் அறிவு பதவி என்கின்ற நிலையில் செல்கின்றது. இது ஓர் வருத்தமான காரியமாகின்றது. சிறிது சிறிதாக ஒப்பிடுதலை மாற்றி நம் நன்மைக்கென ஒப்பிட்டுப் பயன் பெறுவீர்களாக.