ஜனாபாய்

ராமயணத்தில் கைகேயிடம் பணியாளாக இருந்தவள் கூனி. கைகேயியை ராமனுக்கு எதிராகத் தூண்டி பாவத்தை சேர்த்துக் கொண்டவள். இவளே கிருஷ்ணரின் அவதாரத்தில் கம்சனுக்கு சந்தனம் பூசி விடும் பணி செய்தாள். கம்சனின் நாட்டுக்கு வந்த கிருஷ்ணனை பார்த்து மெய் மறந்து அவனுக்கும் சந்தனம் பூசினாள். அதன் பலனாக அவளது கூனை கிருஷ்ணன் நிமிர்த்தினான். அடுத்த பிறவியில் பாண்டுரங்க பக்தையான ஜனாபாய் என்ற பெயரில் பிறந்தாள்.

பண்டரிபுரம் கோவிலில் கார்த்திகை மாத ஏகாதசி திருவிழாவில் ஏகப்பட்ட கூட்டம் பாண்டுரங்கன் சன்னிதியில் பத்து வயது பெண் குழந்தை இனிய குரலில் பாடிக் கொண்டிருந்தாள். பக்தர்கள் அனைவரும் மெய் மறந்து கேட்டுக் கொண்டிருந்தனர். பாட்டு முடிந்ததும் அவள் தன் பெற்றோருடன் ஊர் திரும்பவில்லை. பாண்டுரங்கனே தனக்கு அன்னையும் தந்தையுமாக இருக்கிறார் என்று சொல்லி கோவிலிலேயே தங்கி விட்டாள். அந்த தெய்வக் குழந்தை தான் ஜனாபாய். அங்கு வந்த நாமதேவர் என்ற ஞானி ஜனாபாயிடம் பேசி அவளது மனநிலையை அறிந்தார். கடவுளின் திருவருளால் குழந்தைக்கு இளம் வயதிலேயே பக்தி ஏற்பட்டிருப்பதை எண்ணி வியந்தார். அவளிடம் பக்குவமாகப் பேசி தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். பாண்டுரங்கனின் சிறந்த பக்தரான நாமதேவர் சிறுவயதிலேயே சிறந்த ஞானியாக விளங்கியவர். நூறு கோடி பாடல்கள் பாடி இறைவனுக்கே உணவளித்த பாக்கியம் பெற்றவர். தன் தாய் குனாயி அம்மையாரிடம் ஜனாபாயை ஒப்படைத்து பார்த்துக் கொள்ளுமாறு கூறினார்

நாமதேவரின் வீட்டில் எல்லா வேலைகளையும் செய்ததோடு கோவிலிலும் பஜனை செய்து கொண்டு காலத்தை கழித்தாள். சிறு பெண்ணாக இருந்த அவள் மங்கைப்பருவம் அடைந்தாள். ஒருநாள் இரவு கடும் காற்றுடன் மழை பெய்ததால் நாமதேவரின் வீட்டுச் சுவர் ஈரம் தாங்காமல் கீழே விழுந்தது. இதைக் கண்ட பாண்டுரங்கன் தன் பக்தனின் துன்பத்தை துடைக்க தானே நேரில் வந்து மண்ணைப் பிசைந்து சுவர் எழுப்பினார். பாண்டுரங்கனைக் கண்ட நாமதேவரும் ஜனாபாயும் அவரது திருவடியில் விழுந்து வணங்கினர். பகவானுக்கு சேவை செய்யும் பாக்கியம் ஜனாபாய்க்கு கிடைத்தது. வேகமாக வெந்நீர் தயார் செய்து சேறாகி இருந்த அவரது பட்டு பீதாம்பரத்தை வாங்கி துவைத்து உலர வைத்தாள். அதுவரை பாண்டுரங்கன் ஜனாபாயின் கந்தல் துணியை உடுத்திக் கொண்டார். அது அவரது திருமேனிக்குப் பொருத்தமாகவும் இருந்தது. பீதாம்பரம் உலரும் வரை பாண்டுரங்கன் சிறிது நேரம் கண்ணயர விரும்பினார். அவர் படுத்துக் கொள்வதற்கு வசதியாக தன் அறையில் இருந்த பழைய துணிகளையும் சாக்கு பைகளையும் ஜனாபாய் விரித்தாள். பகவானின் பாதங்களை மெதுவாகப் பிடித்து விட்டாள். ஆதிசேஷனின் மலர்ப்படுக்கையில் அயர்ந்து உறங்கும் பாண்டுரங்கன் வைகுண்டத்தை விட இங்கு சுகமாக தூக்கம் வருகிறதே என்று அழுக்குத் துணியிலேயே நன்றாகத் தூங்கி எழுந்தார். பிறகு ஜனாபாய் உடவு பரிமாற நாமதேவர் குடும்பத்தாருடன் பாண்டுரங்கன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்.

நாமதேவர் பாண்டுரங்கனுக்கு தன் கையால் சோற்றை ஊட்டி விட அதை புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டார். இதைப் பார்த்த ஜனாபாய் தனக்கும் அது போல் பாக்கியம் கிடைக்கவில்லையே என வருத்தப்பட்டாள். இதை அறிந்த பாண்டுரங்கன் அவளது அறைக்கு சென்றார். அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்த ஜனாபாயிடம் எனக்கும் ஒரு கவளம் ஊட்டி விடு தாயே என்று கேட்டுக் கொண்டார். ஆனந்தக் கண்ணீர் வழிய அவள் பாண்டுரங்கனுக்கு ஊட்டி விட்டாள். நிஜபக்தி ஒன்றுக்கே கட்டுப்படும் பாண்டுரங்கன், ஜனாபாயின் மடியிலேயே தலை வைத்து படுத்து விட்டார். பிறகு அவள் பகவானின் தசாவதார லீலைகளைப் பாடலாகப் பாடியபோது ரசித்து மகிழ்ந்தார். ஜனாபாய் உரலில் மாவு அரைத்தபோது தானியத்தை தன் கையால் தள்ளி விட்டு உதவியும் செய்தார்.

நாமதேவரின் பக்தியையும் ஜனாபாயின் பக்தியையும் உலகிற்கு தெரிவிக்க திருவுள்ளம் கொண்டார் பாண்டுரங்கன். தன் பட்டு பீதாம்பரம் ஜனாபாய் வீட்டுக் கொடியில் காய்ந்து கொண்டிருக்க அவளின் கந்தல் புடவையை உடுத்திக் கொண்டு மறைந்து போனார். கோவிலின் கதவை மாலை நேர வழிபாட்டிற்காக திறந்த அர்ச்சகர்கள் அதிர்ந்தனர். பாண்டுரங்கன் அணிந்திருந்த அருமையான காசி பட்டும் ஆபரணங்களும் காணாமல் போயிருந்தன. ஒரு கந்தல் துணி சிலையில் சுற்றப்பட்டிருந்தது. ஜனாபாயின் குடும்பத்திற்கு மிகவும் பழக்கமான அர்ச்சகர் இது ஜனாபாயின் துணி போல இருக்கிறதே என்று சொல்ல எல்லாரும் நாமதேவரின் வீட்டுக்கு வந்தனர். அங்கு கொடியில் காய்ந்து கொண்டிருந்த பட்டு பீதாம்பரத்தைப் பார்த்து இவள் தான் பாண்டுரங்கனின் பீதாம்பரத்தையும் ஆபரணங்களையும் திருடிக் கொண்டு வந்திருக்கிறாள் என்று சொல்லி வீட்டில் சோதனை செய்யத் தொடங்கினர். அவளது படுக்கை அறையில் ஆபரணங்கள் இருந்தன. அவளிடம் நகைகளை எப்போது திருடினாய்? பாண்டுரங்கன் கட்டியிருந்த வஸ்திரத்தைக் கூட விட்டு வைக்காமல் எடுத்து வந்து விட்டாயே? என்று விசாரித்தனர். ஜனாபாய் இதற்கெல்லாம் கலங்கவில்லை. நான் தவறு செய்யாதவள். அப்படி தவறு செய்ததாக நீங்கள் கருதினால் என்ன தண்டனை வேண்டுமானாலும் தாருங்கள் எனக் கூறி நெஞ்சு நிமிர்த்தி நின்றாள். அவள் பொய் சொல்வதாக நினைத்த அர்ச்சகர்கள் அரசனிடம் புகார் கூறினர். அவளை பொதுவீதியில் கழுவேற்றும்படி தீர்ப்பளிக்கப்பட்டது. ஜனாபாயை கழுமர மைதானத்திற்கு அழைத்து வந்தனர்.

ஜனாபாய் கழுமரத்தைப் பார்த்து கைகூப்பி விட்டல விட்டல ஜெய ஜய விட்டல என்று பாடினாள். கழுமரம் தீப்பற்றி எரிந்தது. பாண்டுரங்கன் ஓடி வந்து ஜனாபாயைத் தழுவிக் கொண்டு உன் நிஜபக்தியை உலகிற்குத் தெரிவிக்கவே இவ்வாறு செய்தேன் என்று சொல்ல ஜனாபாய் அவரது திருவடியில் விழுந்து வணங்கினாள். ஜனாபாயின் புகழும் அவளது கீதங்களின் உயர்வும் நாடெங்கும் பரவியது. பாண்டுரங்கனே நேரில் வந்து ஜனாபாய் மற்றும் நாமதேவரின் பாடல்களை எழுதி தொகுத்தும் கொடுத்தார். அமுதமயமான அந்த பாடல்களே இன்றும் பண்டரிபுரத்தில் பக்தர்களால் பாடப்பட்டு வருகின்றன.

ராமரின் ரகுவம்சம்

ராமருக்கு அகஸ்தியர் முனிவர் பரிசாக கொடுத்த விலைமதிப்பற்ற கற்களை கொடுத்தார். அது குசாவிடம் இருந்தது. அந்த கற்களை நாகர்கள் திருடி சென்ற காரணத்தால் குசா அவர்களை கொலை செய்ய முயற்சித்தார். அப்போது துர்ஜயா எனும் அரக்கனுடன் போரிடும் போது குசா இறந்தான். குசாவின் மரணத்திற்கு பிறகு குசா மற்றும் கும்தவதி என்பவளுக்கும் பிறந்த அதிதி மன்னராக பதிவு ஏற்றுள்ளார். அதிதி தனது முன்னோர்கள் போல சிறந்த மன்னராகவும் தலைசிறந்த போர் வீரனாகவும் திகழ்ந்துள்ளார். அதிதி வசிஷ்டர் முனிவரின் அறிவுரை மற்றும் வழிகாட்டுதலின் படி வாழ்ந்ததாக அறியப்படுகிறது. அதிதியின் மரணத்திற்கு பிறகு அவரது மகன் நிஷதா மன்னர் பதவி வகித்தார். தனது தந்தை அதிதியை போலவே நிஷத்தும் சிறந்த போர் வீரராக திகழ்ந்தார். இவருக்கு பிறகு நலா எனும் மிகச்சிறந்த போர்வீரன் மன்னர் பதவி வகித்தார். இவர் முனிவர்களுடன் காடுகளில் சென்று வாழ திட்டமிட்டு தனது மகன் நபாவை அரசராக்கி செல்கிறார். நபா கோசல தேசத்தை ஆண்டு வந்தார். இவரை எதிர்த்து புந்தரிகா போரிட்டார். இதன் பிறகு புந்தரிகாவின் மகன் க்ஷீமா எனும் போர் வீரன் பதிவியேற்றான். இவர் தேவா எனும் படைக்கு தலைவனாக இருந்த காரணத்தால் தேவநீகன் என்றும் அழைக்கப்பட்டார். இவரது மகன் அகிநாகு என்பவர் உலகியே ஆண்டதாகவும் புகழ் பாடப்பட்டுள்ளது. இவரை எதிரிகளும் கூட விரும்பினார்கள் என்றும் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிறகு நபியின் மகன் வஜ்ரானபா. வஜ்ரானபாவின் மகன் சங்கத். சங்கத்திற்கு பிறகு ஹரிதஷ்வா. இவர்களை பின்தொடர்ந்து விஷ்வா சஹா, ஹிரண்ய நபா, கௌசல்யா, பிரமிஷ்தா, புத்ரா, புஷ்யா, துர்வ சந்திசுதர்ஷனா மற்றும் அக்னி வர்ணா போன்றவர்கள் அரசராக திகழ்ந்துள்ளனர். இவர்களுடன் ரகுவம்சம் முடிவுற்றது.

அனந்தன்

ராமர் சிறுவயதில் வசிஷ்டரின் ஆசிரமத்தில் தனது சகோதரர்கள் லட்சுமணன் பரதன் மற்றும் சத்ருக்னனுடன் குருகுலத்தில் பாடம் கற்றுக் கொண்டிருந்தார். அப்போது அவனுக்கு உற்ற நண்பனாக இருந்தவன் பெயர் அனந்தன். பரம ஏழையான அவன் வசிஷ்டரின் ஆசிரமத்தில் குருவுக்கு சேவை செய்து கொண்டிருந்தான். குருகுலத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த ராமருக்குத் தொண்டு செய்வதில் அனந்தன் பேரானந்தம் கொண்டான். ராமரும் பதிலுக்கு அனந்தனிடம் பேரன்பு காட்டினார். இருவரும் சேர்ந்து குருகுலத்தில் சிறந்த நண்பர்களாக இருந்தார்கள். ராமனுக்கு ஏடுகளை எடுத்து வைத்தல் எழுத்தாணியைக் கூராக்குதல் வில்லைத் துடைத்தல் அஸ்திரங்களை எடுத்து வைத்தல் உணவு பரிமாறுதல் ஆகிய பணிகளை பெருமகிழ்ச்சியோடு செய்து வந்தான் அனந்தன். ராமரை ஒருநாள் காணவில்லை என்றாலும் அவன் மனம் ஏங்கித் தவிக்கும். ஒவ்வொரு மாதமும் சில நாட்கள் வனத்துக்குச் சென்று தர்ப்பைப் புல் பறித்து வரவேண்டியது அனந்தனின் கடமை. அதுபோல் ஒருமுறை அனந்தன் வனத்துக்குச் சென்றிருந்தான்.

ராமரின் குருகுலம் முடிந்து குருவிடம் விடைபெற்று சகோதரர்களுடன் அயோத்திக்குச் சென்றுவிட்டார். வனத்தில் இருந்து திரும்பி வந்த அனந்தன் விவரம் அறிந்து தாங்கமுடியாத வருத்தம் கொண்டான். உடனே ராமரைக் காண அவன் மனம் துடித்தது. உடனே புறப்பட்டு அயோத்தியில் உள்ள ராமரின் அரண்மனைக்குச் சென்றான். அங்கே ராமரும் லட்சுமணனும் விஸ்வாமித்திரரின் யாகத்தைக் காப்பதற்காக வனத்துக்குப் புறப்பட்டுச் சென்றிருக்கிறார்கள் என்ற செய்தி அனந்தனின் மனதை மேலும் வாட்டியது. ஒன்றும் அறியாத பாலகனான ராமர் கானகம் செல்ல நேர்ந்ததை எண்ணிக் கலங்கினான். ராமரைக் காட்டுக்கு அனுப்பிய தசரதனையும் அழைத்துச் சென்ற விஸ்வாமித்திரரையும் மனத்துக்குள் கடிந்து கொண்டான். ராமர் காட்டில் என்ன செய்வார்? அவருக்கு யார் உதவிகள் செய்வார்கள்? நித்திய கர்மங்களுக்கு தர்ப்பை சமித்து போன்றவற்றை யார் சேகரித்துத் தருவார்கள்? இப்படியெல்லாம் அனந்தனின் மனம் தவித்தது.

ராமரை எப்படியும் தேடிக் கண்டுபிடித்து அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று அனந்தன் முடிவு செய்தான். தன் குரு வசிஷ்டரிடம் கூடச் சொல்லாமல் நேராக காட்டிற்குள் சென்றான். அடர்ந்த காட்டில் ராமா ராமா என்று கதறிக் கொண்டு ராமரைத் தேடி அலைந்தான். காட்டில் வழி தவறி ஒரு இருண்ட பகுதிக்குள் அகப்பட்டுக்கொண்டான். அங்கே பல நாட்கள் ராமனைத் தேடியும் அவரைக் காணாமல் அனந்தனின் மனம் வாடியது. ராமரைக் காணாமல் ஊர் திரும்பவும் அவனுக்கு விருப்பமில்லை. ராமா ராமா என்று கூப்பிட்டுக் கொண்டே சென்ற அவன் ஒரு நேரத்தில் மிகவும் சோர்வடைந்து அமர்ந்தான். ராமா ராமா என்று செபித்துக் கொண்டு இருந்த அவன் தன்னை மறந்து அன்ன ஆகாரமின்றி அந்தக் காட்டிலேயே அமர்ந்தான். அவன் அமர்ந்த இடத்தில் அவனை மூடியவாறு புற்று வளர்ந்துவிட்டது. ஆனால் அவனது ராம செபம் மட்டும் நிற்கவில்லை. காலச் சக்கரம் வேகமாகச் சுழன்றது. ராமாயண சம்பவங்கள் அனைத்துமே நிகழ்ந்து முடிந்திருந்தன. ராவண வதத்திற்கு பிறகு அயோத்தி திரும்பிய ராமருக்கு பட்டாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. எதுவும் தெரியாமல் புற்றுக்குள் ராமா ராமா என்று தவமியற்றிக் கொண்டிருந்தான் அனந்தன்.

ராமரின் பட்டாபிஷேகத்தைக் காண பாரத தேசத்தின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் மக்களும் மன்னர்களும் மகரிஷிகளும் அயோத்திக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது காட்டு வழியே சென்று கொண்டிருந்த சில மகரிஷிகள் ராம நாமத்தைப் பாடிக்கொண்டே சென்றனர். அவர்களில் ஒருவரது கால் பட்டு அனந்தன் தவமியற்றிக் கொண்டிருந்த புற்று இடிந்தது. அனந்தன் தவம் கலைந்து எழுந்தான். ராமா ராமா எங்கிருக்கிறாய் என்று கதறினான். காலச் சுழற்சியினால் தனக்கு வயதாகியிருப்பதைக் கூட அவன் அறியவில்லை. பல ஆண்டுகள் முடிந்து போனதையும் அவன் உணரவில்லை. இன்னும் குழந்தை போல ராமரைத் தேடினான். அப்போது மகரிஷிகள் கூட்டத்தில் ராமர் வனவாசம் முடிந்து பட்டாபிஷேகம் செய்து கொள்ளப் போவதையும் அதற்காகவே அயோத்தி செல்வதையும் அனந்தனுக்குத் தெரிவித்தார். ராமனுக்குப் பட்டாபிஷேகம் நடக்கப் போகும் செய்தி அறிந்து அதைக் காண மகரிஷிகளுடன் அயோத்தி புறப்பட்டான் அனந்தன். அயோத்தி நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. அன்று பட்டாபிஷேக நாள். எங்கும் வேத கோஷமும் மங்கல இசையும் முழங்கிக்கொண்டிருந்தன. குல குரு வசிஷ்டர் விஸ்வாமித்திரர் முதலானோர் பட்டாபிஷேக ஏற்பாடுகளை முன்னின்று செய்து கொண்டிருந்தனர்.

ராமர் ஆடை அணிகலன்கள் அணிந்து தாயார் மூவரையும் வணங்கி கொலு மண்டபம் நோக்கி கம்பீரமாக நடந்து வந்தான். அப்போது எல்லோரும் அதிர்ச்சி அடையும் வகையில் உரத்த குரலில் அடே ராமா இத்தனை காலம் எங்கிருந்தாயடா? உன்னை எத்தனை காலமாய் தேடுகிறேனடா என்று குரல் கொடுத்தபடியே ராமரை நோக்கி ஓடி வந்தான் அனந்தன். ராமனை இறுகத் தழுவிக் கொண்டான். கந்தல் உடையில் ஜடா முடியுடன் பரதேசிக் கோலத்தில் பாமரன் ஒருவன் அடே ராமா என்று கூவி அழைத்தது கண்டு அவையினர் அதிர்ச்சி அடைந்தார்கள். மனநிலை பாதிக்கப்பட்டவன் இவ்வாறு செய்கிறான் என்று கோபத்துடன் காவலர்கள் அனந்தனைப் பிடித்திழுக்க விரைந்த போது ராமர் அனந்தனை நெஞ்சாறத் தழுவி அவன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து என்னை மன்னித்துவிடு அனந்தா என்று உணர்ச்சி பொங்கக் கூறினான். உன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் குருகுலத்தில் இருந்து வந்துவிட்டேன். என் பிரிவினால் நீ எவ்வளவு துயரம் அடைந்திருப்பாய் என்பதை நான் அறிவேன். என் தவற்றை மன்னித்துவிடு என்று மீண்டும் சமாதானம் செய்தார் ராமர். தன்னைப் போலவே தன் ராமரிடம் பக்தி செலுத்தும் மற்றொரு பக்தன் இருக்கிறான் என்றெண்ணிப் பூரித்த அனுமனின் கண்களிலும் நீர் சுரந்தது. அப்போது ராமர் இவன் என் பள்ளித் தோழன். குருகுலத்தில் எனக்கு சேவை செய்தவன். இத்தனை பெரிய அவையில் எல்லோரும் என்னைப் பிரபு என்றும் மகாராஜா என்றும் தான் அழைக்கிறார்கள். என்னை அடே ராமா என்று அழைக்க என் தந்தை தசரதன் இல்லையே என ஏங்கினேன். அந்தக் குறையைத் தீர்த்து வைத்ததன் மூலம் என் தந்தைக்கு நிகரானவன் ஆகிவிட்டான் இந்த அனந்தன் என்று கூறினார் ராமர். அனைவரது கண்களிலும் ஆனந்தக் கண்ணீர்.

ராம நாமத்தை இத்தனை நாட்கள் எனக்காகத் தவமிருந்து இடைவிடாமல் செபித்து என்னைத் தேடி வந்த இவனுக்கு நான் இந்த அவையில் மரியாதை செய்யக் கடமைப்பட்டுள்ளேன் என்று கூறிய ராமர் அனுமனை நோக்கி உன்னைப் போலவே என்னை நேசிக்கும் இவனுக்கு என்ன கௌரவம் தரலாம் என்று கேட்டார் ராமர். அதற்கு அனுமன் தங்கள் தந்தைக்குச் சமமானவர் இவர் என்று சொல்லி வீட்டீர்கள். எனவே தாங்கள் சிம்மாசனத்தில் அமரும் முன்பு இவரை அதில் அமர்த்தி மரியாதை செய்வது நம் அனைவருக்குமே பெருமை என்று கூறினார் அனுமன். அனைவரும் இதனை ஆமோதித்தார்கள். இத்தனை பெரிய மரியாதைக்குத் தான் தகுதியானவனா என்றெண்ணிக் கூனிக் குறுகினான் அனந்தன். வேண்டாம் வேண்டாம் என்று தடுத்தும் கேளாமல் அவனைச் சிம்மாசனத்தில் அமர்த்தி மாலை அணிவித்து மரியாதை செய்து பாதபூஜையும் செய்தார் ராமர். அதன் பின்பே ராமருக்கு பட்டாபிஷேகம் ஆரம்பமானது.

சமர்த்த ராமதாசர்

சத்ரபதி சிவாஜி வீர சிவாஜி என்றெல்லாம் பேரும் புகழும் பெற்ற சிவாஜி மகாராஷ்டிரத்தை ஆண்டு கொண்டிருந்த காலம் அது. நதியில் இறங்கி சிவாஜி தன் கை கால்களைத் தூய்மை செய்து கொண்டிருந்த போது ஆற்று நீரில் பல ஓலைச் சுவடிகள் மிதந்து வந்ததைப் பார்த்தார். ஓர் ஓலைச்சுவடியை எடுத்துப் பார்த்த போது அதில் மஹாராஷ்டிர மொழியில் எழுதப்பட்டிருந்த அற்புதமான கவிதைகள் இருந்தன. மனம் வியந்த சிவாஜி ஓலைச் சுவடிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு ஆற்று நீர் வந்த திசையை நோக்கிக் குதிரையைச் செலுத்தினார். அங்கே ஓரிடத்தில் சிவாஜி கண்ட காட்சி அவரை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அங்கே மர நிழலில் ஒரு பாறையின் மீது இருந்தபடி ஞானி ஒருவர் இனிய குரலில் ராம நாமத்தைப் பாடிக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றி காட்டில் இருந்த கொடிய விலங்குகள் எல்லாம் அமர்ந்திருந்தன. அந்தக் கொடிய விலங்குகளிடம் பயப்பட வேண்டிய பசுக்களும் மான்களும் அவற்றின் அருகிலேயே எந்த விதமான பயமும் இல்லாமல் அவரைச் சுற்றி அமர்ந்து கொண்டு கண்களிலிருந்து நீர் வழிய அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தன. ஞானியின் வாக்கிலிருந்து வெளிப்பட்ட ராம மந்திர இசை ஓசையில் தாம் ஒரு மன்னர் என்பதையே மறந்தார். அது வரை சிவாஜி அப்படிப்பட்ட இசையைக் கேட்டதே இல்லை. அங்கிருந்த ஒரு மரத்தின் நிழலில் அப்படியே அமர்ந்து தன்னிலை மறந்தார். அன்று முதல் அந்த ஞானியை தம் மானசீக குருவாக ஏற்றுக் கொண்டார் சிவாஜி.

ராம நாம மந்திரத்தை சொல்லியபடி ஞானி ஒரு நாள் தனிமையில் இருந்தார். விலங்குகள் எதுவும் அருகில் இல்லை. சிவாஜிக்கு மகிழ்ச்சி தாளவில்லை. அவர் உடனே ஞானியை நெருங்கி அவரது திருவடிகளில் விழுந்து வணங்கினார். குருநாதா அடியேனுக்கு ஞான உபதேசம் செய்யுங்கள் என வேண்டினார். அப்போது தான் அந்த ஞானியின் பெயர் சமர்த்த ராமதாசர் என்பதை சிவாஜி அறிந்து கொண்டார். சமர்த்த ராமதாசர் சிவாஜிக்கு ராம மந்திர உபதேசம் செய்து அவரைத் தம் சீடராக ஏற்றுக் கொண்டார். குருநாதரை வணங்கிய சிவாஜி அவரிடம் ராம மந்திரத்தை இனிய இசையுடன் பாடக் கற்றுக் கொண்டார். ஒரு நாள் சிவாஜி சிறிதளவு படையுடன் சமர்த்த ராமதாசர் தங்கியிருந்த மாவுலி என்ற நகரத்திற்குப் போய்க் கொண்டிருந்தார். அந்தத் தகவலை அறிந்த முகலாய மன்னன் ஔரங்கசீப் சிவாஜியைச் சிறைப் பிடிக்க ஒரு பெரும் படையை அனுப்பி வைத்தான். இரவு நேரம் நெருங்கியது. பயணம் செய்து கொண்டிருந்த சிவாஜி காட்டிலேயே ஓரிடத்தில் முகாம் போட்டுத் தங்கிவிட்டுக் காலையில் பயணத்தைத் தொடரலாம் எனத் திட்டமிட்டார். அதன்படியே காட்டில் ஆங்காங்கு கூடாரமிட்டுப் படைவீரர்கள் தங்கினார்கள். சிவாஜி மட்டும் தனிமையை விரும்பிச் சற்றுத் தள்ளியே கூடாரத்தை அமைத்து அதில் தங்கியிருந்தார்.

ராம நாம மந்திரத்தை அப்போது சிவாஜி இனிய இசையுடன் பாடிக் கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து ஔரங்கசீப்பின் பெரும் படை சிவாஜியையும் சிவாஜியின் படையையும் சுற்றி வளைத்து முற்றுகையிட்டது. அது எதுவும் தெரியாத சிவாஜி மன்னரோ தன்னை மறந்த நிலையில் பக்திப் பரவசத்தோடு ராம மந்திரத்தைப் பாடிக் கொண்டிருந்தார். எந்த நேரமும் சிவாஜியும் அவரது படையும் கைது செய்யப்படலாம் என்ற அந்தச் சூழ்நிலையில் அந்த இரவு நேரத்தில் காட்டிலிருந்த குரங்குக் கூட்டங்கள் சிவாஜி மன்னரின் படைகளுக்கு உதவியாக முகலாயப் பெருஞ்சேனையின் மீது பாய்ந்தன. முகலாயப் படை திகைத்தது. இவ்வளவு பெரிய வானரக் கூட்டம் எங்கிருந்து வந்தது என்ற அதிர்ச்சியில் முகலாயப் படை சிதறிப் போய் சின்னாபின்னமாகி ஓடியது. சிவாஜிக்கு விவரம் தெரிந்தது. அனுமன் வந்து தம்மைக் காப்பாற்றியிருக்கிறார் என உணர்ந்தார். அதனால் விடிந்ததும் புறப்பட்ட சிவாஜி நேரே போய் சமர்த்த ராமதாசரைத் தரிசித்து வணங்கி நடந்ததையெல்லாம் அவரிடம் கூறி ராமர் தனக்கு அருளியதை எண்ணி பெரு மகிழ்ச்சியில் இருந்தார்.

ராம நாம மந்திரத்தை சொல்லிக் கொண்டிருந்த சிவாஜியைப் பார்ப்பதற்காக சமர்த்த ராமதாசர் ஒரு நாள் அரண்மனைக்கு வந்தார். அந்த நேரத்தில் சமர்த்த ராமதாசரின் தலைமைச் சீடரான உத்தமர் என்பவர் அரண்மனை நந்தவனத்தில் இருந்த பழங்களைப் பறிப்பதற்காக சமர்த்த ராமதாசரிடம் அனுமதி கேட்டார். அதற்கு நானே பறித்துத் தருகிறேன் என்று சொல்லி கீழே கிடந்த கல்லை எடுத்துக் கனிகளின் மீது வீசினார் சமர்த்த ராமதாசர். அந்தக் கல் தவறுதலாக ஒரு பறவை மீது பட்டு பறவை துடிதுடித்துக் கீழே விழுந்து இறந்தது. அதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் கல்லை எடுத்து அடித்துப் பறவையைப் பரலோகம் அனுப்பிவிட்டாரே இந்த ஞானி என்று பரவலாகப் பேசினார்கள். அதைக்கேட்ட சமர்த்த ராமதாசர் ராம மந்திரத்தின் மகிமையை விளக்கும் ஒரு பாடலை பாடினார். பாடலைப் பாடிய படியே கீழே இறந்து கிடந்த பறவையை எடுத்து ஆகாயத்தில் வீசினார். அந்தப் பறவை உயிர் பெற்று அப்படியே பறந்து ஓடியது. சமர்த்த ராமதாசர் இறந்து போன பறவையை உயிருடன் எழுப்பிய தகவல் ஊரெங்கும் பரவியது. அப்போது மாவுலி நகரத்தை ஆட்சி செய்து கொண்டிருந்த முகலாய மன்னனுக்கும் தகவல் தெரிந்தது. அவன் மனைவிக்கு சித்தப் பிரமை உண்டாகியிருந்தது. அந்த முகலாய மன்னன் மாவுலி நகர ஹிந்துக்கள் அனைவரையும் இஸ்லாம் மதத்தைச் சாரும்படி கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தான். அப்படிப்பட்ட அந்த மன்னன் தான் சமர்த்த ராமதாசரைப் பணிந்து என் மனைவியின் சித்தப் பிரமையைத் தீர்த்து வையுங்கள் என வேண்டினான். சமர்த்த ராமதாசரும் பார்த்தார். இந்த மன்னனை நல்வழிப்படுத்த ஒரு நல்ல வாய்ப்பு என்று எண்ணிய அவர் மன்னனின் மனைவி முன்னால் மூன்று மணிநேரம் ராம பஜனை செய்தார். மூன்றாவது மணியில் மன்னனின் மனைவி சித்தப் பிரமை நீங்கித் தெளிந்து எழுந்தாள். அவளையும் தன்னுடன் சேர்ந்து பாடச் செய்தார் சமர்த்த ராமதாசர். இந்துக்களுக்குத் தான் இழைத்த அநீதிக்கு ஏதாவது பரிகாரம் செய்ய எண்ணி சமர்த்த ராமதாசரிடம் வழி கேட்டான். அதற்கு ராமதாசர் மக்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும்போது ராம் ராம் என்று சொல்லிக் கொள்ள வேண்டும் எனக் கேட்டார். அன்று முதல் மஹாராஷ்டிர மாநிலம் மாவுலி நகரம் முதலான வட தேசங்களில் மக்கள் ஒருவருக்கொருவர் ராம் ராம் எனச் சொல்லிக் கொள்ள அரசன் உத்தரவிட்டான்.

லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை

ராமன் செலுத்திய அம்பில் காயம்பட்டு குற்றுயிராய்க் கிடந்த ராவணனிடம் உயிர் பிரியாமல் இருந்தது. அப்போது ராமர் லட்சுமணனை பார்த்து லட்சுமணா ராவணன் அனைத்துக் கலைகளையும் அறிந்தவன் ராஜதந்திரம் மிக்கவன். நமக்கு அவனுடைய அரசியல் அனுபவம் மிகவும் பயனுள்ளதாயிருக்கும். நீ அவனிடம் போய் நான் கேட்டதாகக் கூறி அவனுடைய சிறந்த அறிவுரைகளைப் பெற்று வா என்று கூறி அனுப்பினார். லட்சுமணன் பவ்யமாக ராவணனின் காலடியில் நின்று இலங்கேஸ்வரா உன்னுடைய ஞானம் உன்னோடு அழிந்துவிடக்கூடாது. நீ எனக்கு உபதேசிப்பதன் மூலம் அதை இந்த உலகம் அறிந்து பயன் பெறும் எனவே எனக்கு உபதேசியுங்கள் என்று வேண்டி நின்றான். லட்சுமணனை சிரித்துக் கொண்டே வரவேற்ற ராவணன் ராமர் தன்னிடத்தில் வைத்திருக்கும் மதிப்பு அறிந்து மகிழ்வுடன் தன் அறிவுரைகளைச் சொன்னான். லட்சுமணா ஒரு காலத்தில் சர்வ வல்லமை படைத்தவனாக நான் இருந்தேன். நவக்கிரகங்களும் எமனும் இந்திரனும் கூட எனக்குக் கீழ்ப்படிந்தனர். அப்போது நான் எண்ணியது என்ன தெரியுமா? நாட்டில் அனைவரும் சொர்க்கம் செல்ல வேண்டும். நரகம் யாருக்கும் இல்லையென உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஒரு பறக்கும் ஏணி அனைவரையும் ஏற்றிச் செல்ல எமனைக் கொண்டே உருவாக்கப்பட வேண்டும் என்பதே. ஆனால் இந்த நல்ல எண்ணத்தைச் செயல்படுத்தாமல் தள்ளிப் போட்டேன். அதன் விளைவாகவே இன்று நான் அவதிப்பட்டேன். சூர்ப்பனகை வந்து சீதாதேவி அழகின் சிகரம். அவள் உனக்கு ஏற்றவள் என்று கூறியதும் உடனே அந்தச் செயலை தள்ளிப் போடாமல் புறப்பட்டேன். விளைவு அனைவருக்கும் நாசம். அதனால் நான் முக்கியமாகச் சொல்ல விரும்புவது.

  1. நல்ல செயலை உடனடியாக செய்து முடி அது பலன் தரும்.
  2. தீய செயலைத் தள்ளிப் போடு தள்ளிப்போடுவதால் அந்த தீய செயல் நடைபெறாமல் இருக்க வாய்ப்புண்டு.
  3. உன் சாரதியிடமோ வாயிற்காப்போனிடமோ சகோதரனிடமோ பகை கொள்ளாதே உடனிருந்தே கொல்வார்கள்.
  4. தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும் எப்போதும் வெல்வோம் என்று எண்ணாதே.
  5. உன் குற்றங்களை சுட்டிக் காட்டும் நண்பனை நம்பு.
  6. நான் அனுமனை சிறியவன் என்று எடை போட்டது போல் எதிரியை எப்போதும் எளியவன் என்று எடைபோட்டுவிடாதே.
  7. வானின் நட்சத்திரங்களை வளைக்க முடியும் என்று நம்பாதே. அவை நம் வழிகாட்டிகள் என்று ராவணன் சொல்லி முடித்தான்.
  8. பொறுமையைவிட மேலான தவமுமில்லை.
  9. திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.
  10. இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.
  11. மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை என்று சொல்லி முடித்தான் ராவணன்.

லட்சுமணன் ராவணனை வணங்கி உபதேசங்களை பெற்றுக் கொண்டான்.

அனுமனின் ராம நாமம்

குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம் நகரில் அழகிய ரம்யமான சூழ்நிலையில் ரன்பால் ஏரி அமைந்துள்ளது. இங்குள்ளவர்களால் லக்கோடா ஏரி என்று அழைக்கப்படும் இந்த ஏரிக்கரையில் அனுமனுக்கு கோயில் உள்ளது. மூலவராக வீற்றிருக்கும் ஆஞ்சநேயர் செந்தூரம் பூசப்பட்ட திருக்கோலத்துடன் காட்சி தருகிறார். பிரேம் பீகுஜி மகராஜ் என்பவரால் 1961ம் ஆண்டு கட்டப்பட்ட இக்கோயிலில் தினமும் நடைபெற்று வரும் ராம் தூன் என்ற நாம சங்கீர்த்தனம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 1964ம் ஆண்டு முதல் இந்த ராம பஜனை தொடர்ந்து இடைவெளி இல்லாமல் 24 மணி நேரமும் நடைபெற்று வருகிறது.

ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம என்ற பதிமூன்று எழுத்துக்கள் கொண்ட ராம மந்திரம் இங்கே இடைவிடாமல் 24 மணி நேரமும் ஜபிக்கப்பட்டு வருகிறது.

இந்த ராம நாம சங்கீர்த்தனத்தில் பக்தர்கள் பங்கேற்க விரும்பினால் இரண்டு நாட்களுக்கு முன்பே திருக்கோயில் நிர்வாகத்திடம் முன் பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் நிர்வாகம் திருக்கோயில் அறவிப்பு பலகையில் அறிவித்துள்ள கால நேரப்படி முன்னரே பதிவு செய்து கொண்ட பக்தர்கள் தவறாமல் வந்து பஜனையில் பங்கேற்க வேண்டும். இந்த ஜப சேவையில் சிறியவர் பெரியவர் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற எந்த வேறுபாடுமின்றி அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொள்கிறார்கள். இப்படி ராம் தூன் பஜனை தொடர்ந்து இடைவிடாமல் நடைபெற ஆலய நிர்வாகம் எல்லாவிதமான முன்னேற்பாடுகளையும் செய்கிறது. முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் உரிய காலத்தில் வராத பட்சத்தில் நான்கு பேர் அடங்கிய ஒரு பஜனைக் குழுவினை எந்நேரமும் எந்தவிதமான சூழ்நிலையிலும் எதிர்கொண்டு பஜனை செய்திடத் தயாராக வைத்திருக்கிறார்கள்.

அகண்ட நாம சங்கீர்த்தனம் என்ற இந்தத் தொடர் பஜனையை கின்னஸ் உலக சாதனையாக 1984ல் உலக சாதனைப் பட்டியலில் சேர்த்துக் கௌரவித்துள்ளார்கள். கடந்த 2001ம் ஆண்டில் குஜராத்தில் ஏற்பட்ட பங்கர நிலநடுக்கத்தின் போதும் இந்த அனுமன் கோயிலுக்க எந்தவிதச் சேதமும் ஏற்படவில்லை. ராமநாம பஜனும் எந்தவிதமான தடங்களும் இன்றி தொடர்ந்து நடந்த வண்ணமிருந்தது என்பதே இத்தலத்து அனுமனின் ஆற்றலுக்குச் சான்றாக உள்ளது.

ராமர் விட்ட கொட்டாவியும் அனுமன் போட்ட‍ சொடுக்கும்

ராமர் வனவாசம் முடிந்து அயோத்திக்குத் திரும்பி அரசாட்சி செய்தபோது அனுமனும் அங்கேயே தங்கினார். ராமர் காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை அவருக்கு வேண்டிய அத்தனை சேவைகளையும் அவரது குறிப்பறிந்து அனுமன் செய்து வந்தார். ராமருடன் இருந்த சீதாதேவி பரதன் லட்சுமணன் சத்ருக்னன் ஆகியோரும் அனுமனின் சேவையை எண்ணி வியந்தனர். ஒரு நாள் ராமர் அனுமனின் சேவைகளைப் பாராட்டினார். அதைக் கவனித்த சீதையும் ராமரின் தம்பிகளும் அனுமனைப் போல் நாமும் ஒரு நாளாவது ராமருக்கு சேவை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தனர். இந்த விருப்பத்தை ராமரிடம் தெரிவித்தனர். உங்களுக்குரிய சேவைகளை அனுமன் ஒருவரே செய்கிறார். நாளை ஒரு நாள் மட்டும் அந்தச் சேவைகளை நாங்கள் செய்யத் தங்கள் அனுமதி வேண்டும் என்று கேட்டனர். அதற்கு ராமரும் அனுமதி வழங்கினார்.

ராமர் காலையில் கண் விழிப்பது முதல் இரவு உறங்கச் செல்வது வரையிலான சேவைகளைப் பட்டியலிட்டு அவற்றை யார் யார் செய்வது என்றும் தங்களுக்குள் பிரித்துக் கொண்டனர். அந்தப் பட்டியலை ராமபிரானிடம் காட்டி ஒப்புதல் பெறச் சென்றனர். ராமபிரான் அவர்களிடம் இதில் அனுமன் பெயரைக் குறிப்பிடவில்லையே என்றார். நாங்களே அனைத்துச் சேவைகளையும் செய்கிறோம் என்று பதிலளித்தார்கள். எல்லாச் சேவைகளையும் பட்டியலிட்டு விட்டீர்களா என்று கேட்டார் ராமர். அவர்களும் ஆம் என்றார்கள். ராமர் புன்னகைத்து இதில் ஏதாவது ஒரு சேவை விடுபட்டிருந்தால் அதை அனுமன் செய்யலாமா? என்று கேட்டார். அதற்கு அப்படி ஒரு நிலை வராமால் நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்றார்கள். நடந்தவைகளை ராமர் அனுமனிடம் தெரிவித்து ஒரு நாள் ஓய்வு எடுத்துக் கொள்ளுமாற் கேட்டுக் கொண்டார். மறுநாள் காலையில் ராமர் எழுந்தது முதல் செய்ய வேண்டிய சேவைகளை சீதையும் ராமரின் தம்பிகளும் செய்தனர். அவர்களுக்கு வாழ்வில் இரட்டிப்புச் சந்தோஷம். ஒன்று ராமபிரானின் அருகில் இருப்பது மற்றொன்று அவருக்கு சேவை செய்வது.

ராமரின் உத்தரவுப்படி அனுமன் அவரது அறை வாசலில் அமர்ந்து ராம நாமத்தை செபித்துக் கொண்டிருந்தார். ராம சேவைகள் நன்றாக நடந்து வருகிறதா என்றும் கவனித்தார். பகல் பொழுது எந்த சேவையும் குறைவின்றிப் போனது. இரவில் ராமர் படுக்கச் சென்றார். தாம்பூலத்துடன் சீதாப்பிராட்டி வந்தார். ராமபிரான் வாய் திறந்தார். திறந்த அவரது வாய் மூடவே இல்லை. பேச்சோ அசைவோ இல்லை. ராமருக்கு ஏதோ ஆகிவிட்டது என்று சீதை பயந்தாள். பரதன் லட்சுமணன் சத்ருக்னன் என்று எல்லோரையும் கூப்பிட்டாள். அவர்கள் ஓடி வந்தார்கள். அண்ணா அண்ணா என்று அழைத்தனர். அரண்மனை மருத்துவர் வரவழைக்கப்பட்டார். அவர் பரிசோதித்து விட்டு எந்த நோயும் இல்லை என்று கிளம்பிவிட்டார். அவர்களுக்கு அனுமனிடம் கேட்கலாமா என்று முதலில் தோன்றியது. பிறகு வசிஷ்டர் குலகுரு ஆயிற்றே. அவரிடம் கேட்கலாம் என்று அவரை அழைத்து வந்தனர். அவரும் தன் பங்குக்கு ஏதேதோ செய்து பார்த்தார். ராமர் அசையாமல் இருந்தார். சிறிது நேரம் தியானம் செய்த வசிஷ்டர் அனுமனால் தான் இதற்கு பதில் சொல்ல முடியும் என்றார். அனுமனிடம் அனைவரும் வந்து ராமரைப் பார்க்கும்படி சொல்ல துள்ளிக் குதித்து வந்த அனுமன் கை விரலால் ராமரன் வாய்க்கு நேராகச் சொடக்குப் போட்டதும் அவருடைய வாய் தானாகவே மூடிக் கொண்டது. இதைப் பார்த்த பிறகுதான் அனைவருக்கும் நிம்மதி பிறந்தது. ராமர் பேச ஆரம்பித்தார். எனக்குக் கொட்டாவி வந்தால் அனுமன் தான் சொடக்குப் போடுவார். உங்களுக்கு இது தெரியவில்லை என்றார். அனைவரும் தலை குனிந்தனர். பக்தி சேவையில் அனுமனுக்கு நிகர் அனுமனே என்பதை புரிந்துகொண்ட அவர்கள் அனுமனை மனதார பாராட்டினர்.

ராமாயணத்தில் ராமர் மீது அனுமன் கொண்ட பக்தியை உலகிற்க்கு எடுத்துக் காட்ட ராமர் செய்த திருவிளையாடல்

சுந்தரகாண்டம்

ராமாயணத்தை எழுதி முடித்த வால்மீகி முனிவர் ஒவ்வொரு காண்டத்திற்கும் ஒவ்வொரு பெயர் சூட்டினார். அப்போது சுந்தர காண்டத்திற்கு அனுமன் என்று பெயரை சூட்டினார். அதற்கு அனுமன் தன் பெயரை சூட்ட வேண்டாம் என்று உறுதியாக சொல்லிவிட்டார். வால்மீகி முனிவர் தனது சமயோசிதத்தால் சுந்தர காண்டம் என்று பெயர் சூட்டினார். அனுமன் அருமை என்று பாராட்டி இது நம் பெயர் இல்லையே என்று அங்கிருந்து கிளம்பி தன் அன்னை அஞ்சனா தேவியை பார்க்கச் சென்றார். தன் மகன் அனுமனின் வரவால் மகிழ்ச்சி அடைந்த அஞ்சனை வா சுந்தரா வா என்று அழைத்தாள். அனுமானுக்கு தூக்கி வாரி போட்டது. தாயே தாங்கள் என்னை என்ன பெயர் சொல்லி அழைத்தீர்கள் என்று கேட்டார். அதற்கு அஞ்சனா தேவி உனது உனது பால்ய பருவத்து பெயர் சுந்தரன் தானை மறந்து விட்டாயா என்று சொல்லி பலகாரம் செய்ய செல்கிறேன் என்று உள்ளே சென்று விட்டார். தன் பெயரை வால்மீகி எனக்கே தெரியாமல் வைத்துவிட்டாரே என்று அப்போது தான் அனுமானுக்கு புரிந்தது.

சுந்தரகாண்டம் படிப்பவர்கள் எண்ணற்ற பலன்களை அடைவார்கள் என்று பல மகான்கள் அருளியுள்ளார்கள்.

சாப்பாட்டு ராமன் என்ற பெயர் எப்படி வந்தது?

இலங்கையில் போர் முடிந்த பின் ராமர் சீதை லட்சுமணன் சுக்ரீவன் விபீஷணன் மற்றும் வானரப்படைகள் அனைவரும் அயோத்திக்குத் திரும்பிக் கொண்டிருக்கையில் அயோத்திக்கு செல்லு முன்பாக பரதவாஜ முனிவரை தரிசிக்க ராமர் விரும்பினார். ஆனால் பதினான்கு ஆண்டுகள் முடிந்த உடனேயே ராமர் அயோத்திக்கு திரும்பி வராவிட்டால் தான் தீயில் விழுந்து மாண்டு விடுவதாக பரதன் ராமரிடம் சொல்லி இருந்தான். இதனை ராமர் நினைத்துப் பார்த்தார். பரதன் சொன்னதை செய்யக்கூடியவன் என ராமர் நன்கு அறிவார். பதினான்கு வருடங்களுக்கு முன்பு வனவாசத்தை பரதவாஜ முனிவரிடம் ஆசிர்வாதம் பெற்ற பின் ராமர் கிளம்பினார் அதன் காரணமாக மீண்டும் பரதவாஜ முனிவரிடம் ஆசி பெற்று அயோத்தி திரும்பி செல்ல ராமர் முடிவு செய்தார்.

பரத்வாஜ முனிவர் ராமர் சீதையையும் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்து வரவேற்றார். இன்று இரவு இங்கே தங்கி நடக்கும் உணவு உண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ராமரால் முனிவரின் வேண்டுகோளை நிராகரிக்க முடியவில்லை. ஆனால் அதே நேரம் தன் வருகை தாமதமானால் தம்பி உயிர் துறப்பான் என்றும் அஞ்சினார். ஆகவே அனுமனை அழைத்தார். எனக்காக நீ பரதனிடம் சென்று நான் அனைவருடனும் வந்து கொண்டிருப்பதை சொல்லி விட்டுவா என்று கேட்டுக் கொண்டார். ராமரின் உத்தரவை நிறைவேற்ற அங்கிருந்து விரைவாக சென்ற அனுமன் திரும்பி வருவார் என்று பரதவாஜ முனிவர் எண்ணவில்லை. அதனால் வந்திருக்கும் அனைவருக்கும் சாப்பிட இலை ஏற்பாடு செய்த பரதவாஜ முனிவர் அனுமனுக்கு தனியாக உணவு சாப்பிட இலை ஏற்பாடு செய்யவில்லை. அனைவரும் சாப்பிட ஆரம்பிக்கும் நேரம் சரியாக அனுமன் வந்து விட்டார். இதனைக் கண்ட ராமர் தனது இலையின் மேல்பக்கம் அனுமன் சாப்பிடட்டும் என்று சொல்லி தனக்கு எதிர்பக்கம் அனுமனை அமரச் செய்தார். அனுமன் காய் பழங்களைத் தான் விரும்பி உண்பார் என ராமருக்குத் தெரியும். ஆகவே பரிமாறுபவர்களிடம் தனது இலையின் மேல்பக்கத்தில் காய் பழங்களை பரிமாரச் சொன்னார். அரிசி சாதம் மற்ற உணவு வகைகளைத் தன் பக்கம் வைக்கச் சொன்னார். இருவரும் ஒரே இலையில் சாப்பிட்டு முடித்தார்கள். தான் உடனடியாகப் போகாவிட்டால் பரதனின் உயிர் சென்றுவிடும் என்று தெரிந்தும் பரதனிடம் தான் வந்து கொண்டிருப்பதாக அனுமனை தூது போகச் சொல்லி விட்டு பரதவாஜ முனிவரின் விருந்தில் ராமர் கலந்து கொண்டது. மேலும் தனது இலையில் அனுமனுக்கு பழங்கள் காய்களிகளை மட்டும் வைக்கச் சொல்லி தான் சாப்பாட்டை சாப்பிட்டதாலும் ராமர் சாப்பாட்டு ராமர் ஆனார். அதுவே காலபோக்கில் சாப்பாட்டில் விருப்பம் உடையவர்களை இப்படிப் பெயரிட்டு அழைப்பது வழக்கமாகிவிட்டது.

மந்திரம்

ராமர் தனது அயோத்தி மக்களுக்கு இறைவனின் மீதான பக்குவம் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள எண்ணினார். அனுமனை நன்றாக புரிந்து வைத்திருந்த ராமர் அவரை வரவழைத்தார். அபூர்வமான மந்திரம் ஒன்றை அனுமனுக்கு உபதேசித்தார். இது மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம் எல்லாருக்கும் சொல்லி விடாதே பக்குவம் உள்ளவர்களுக்கு மட்டுமே இதை உபதேசிக்க வேண்டும். ஆகையால் இதை மனதிற்குள் உருவேற்று பக்குவம் இல்லாதவர்களுக்கு இதனை சொல்லாதே என்றார். மறு நாள் ஏதோ பறை ஒலிக்கும் சத்தம் கேட்டு உப்பரிகைக்கு சென்று வீதியை பார்த்த ராமர் திடுக்கிட்டார். காரணம் அங்கே ராமர் ரகசியமாய் உபதேசித்த மந்திரத்தை பறை அறிவித்து வீதி வீதியாய் சொல்லிக் கொண்டிருந்தார் அனுமன். ராமர் அனுமனை வரவழைத்து என்ன காரியம் செய்கிறாய் பக்குவம் உள்ளோருக்கு சொல்ல வேண்டிய மந்திரத்தை பறை அறிவித்து சொல்கிறாயே என்றார். அமைதியாக ராமரை நமஸ்கரித்து அடியேன் பக்குவம் உள்ளோருக்கு மட்டுமே உபதேசம் செய்திருக்கிறேன் தங்கள் உத்தரவை மீறவேயில்லை. வேண்டுமானால் அடியேன் அறிவிப்பை கேட்டவர்களில் சிலரை அழைத்து தாங்களே விசாரிக்கலாம் என்றார் அனுமன். சிலரை வரவழைத்து அனுமன் சொன்னது உங்களுக்கு ஏதாவது புரிந்ததா? எனக் கேட்டார் ராமர்.

ராமர் கேட்ட கேள்வி ஒன்றுதான் ஆனால் பதில்கள் பலவிதமாக வந்தன. புரியவில்லை என்று சிலர் கூறினார்கள். அனுமன் ஏதோ மனம்போன போக்கில் உளறிக் கொண்டு சென்றார் என்று சிலர் கூறினார்கள். இன்னும் சிலரோ அனுமன் பேசியது புரியாவிட்டாலும் நகைச்சுவையாக இருந்தது என்று சிலர் கூறினார்கள். இவ்வாறு பலரும் பலவிதமாக கூற பக்குவமான ஞானவான்கள் சிலர் மட்டும் அனுமன் உபதேசித்தது சாதாரண மந்திரமா பிறவிப் பிணியையே தீர்க்கக் கூடிய மந்திரமாயிற்றே என்று சொல்லி மெய் சிலிர்த்தார்கள். மக்களின் பக்குவத்தை ராமர் புரிந்து கொண்டார்.

விதை ஒன்று தான் நிலத்திற்கு தகுந்தாற் போல் தானே விளைகிறது. நிலம் நன்றாக இருந்தால் கூட அவ்வப்போது நீர் உரம் இட்டு பத்திரமாக பாதுகாத்தால் தானே நன்றாக விளைச்சல் காணும். அதுபோல குரு உபதேசிக்கும் மந்திரத்தை எல்லாரும் பெற்றுக் கொண்டாலும் அது பக்குவப்பட்டோரின் உள்ளங்களில் மட்டுமே பதிந்து வெளிப்படத் துவங்குகிறது.