ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 115

கேள்வி: கும்பாபிஷேகமே நடக்காத பாழடைந்த ஆலயங்களில் அபிஷேகம் தீபம் ஏற்றுதல் செய்வதால் ஏற்படும் பலன்கள் பற்றி விளக்குங்கள் குருநாதா?

இறைவன் அருளாலே இறைவன் நீக்கமற எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறான். தூய்மையான உள்ளத்தோடு எண்ணத்தோடு சாத்வீகமான எண்ணத்தோடு எங்கு இறைவனை எண்ணி வழிபட்டாலும் இறைவன் அருள் அவனுக்குக் கிட்டும். கலச விழா எனப்படும் கும்பாபிஷேகம் ஆகாத பாழ்பட்ட ஆலயத்திற்கு தாராளமாக மனிதர்கள் சென்று உழவாரப் பணிகள் தீபங்கள் ஏற்றுதல் ஏனைய வழிபாடுகள் போன்றவற்றை தாராளமாக செய்யலாம். புரிவதற்காக யாம் வேறுவிதமாக கூறுகிறோம். தூய்மையான ஒரு ஆலயம் இருக்கிறது. நல்ல முறையிலே பஞ்ச வர்ணம் பூசப்பட்ட கோபுரம் இருக்கிறது. எங்கு நோக்கினாலும் பரிசுத்தம். எங்கு நோக்கினாலும் நறுமணம் சந்தனம் அகில் ஜவ்வாது மணக்கிறது. எல்லா இடங்களிலும் தூய்மையான நெய்தீபம் எரிகிறது. எல்லா இடங்களிலும் நல்ல முறையிலே மிக சுத்தமாகவும் எல்லா வசதிகளும் மிக அழகுற அமைக்கப்பட்டிருக்கிறது. தற்கால வசதிகள் அனைத்தும் அந்த ஆலயத்தில் இருக்கிறது. ஆங்காங்கே சலவை கற்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. பார்ப்பதற்கு நேர்த்தியாக மிகவும் அற்புதமாக தினமும் 6 கால பூஜை நடக்கிறது. உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் வருகிறார்கள். நறுமண மலர்கள் ஆங்காங்கே தூவப்படுகிறது. எல்லா வகையான வேத மந்திரங்களும் தேவார திருவாசகமும் ஓதப்படுகிறது. நித்திய பூஜை நடக்கிறது. வருவோர் போவோர்க்கெல்லாம் அன்னசேவை நடக்கிறது. இது விழிக்கு விருந்தாக மனதிற்கு சாந்தமாக இருக்கிறது. ஆனால் அங்குள்ள ஊழியர்கள் அங்கு வந்து போகக்கூடிய மனிதர்கள் உண்மையில் நல்ல தன்மை இல்லாதவர்களாகவும் வெறும் சுயநலவாதிகளாகவும் இருந்தால் அங்கு என்ன கிடைக்கும்? தீய நோக்கத்தோடு வந்தால் அங்கே இறைவன் இருப்பாரா? எனவே இறைவனுக்கு உகந்த இடம் ஒவ்வொரு மனிதனின் மனம்தான். அந்த மனம் சுத்தமாக பரிசுத்தமா நேர்மையாக நீதியாக சத்ய நெறியில்,தர்ம நெறியில் இருந்தால் எந்த இடத்திலும் இறைவன் அருள் மனிதனுக்கு உண்டு.

மனம்

ஒருவர் ஐம்புலன்களையும் அடக்கி ஆள வேண்டும் என்ற முடிவோடு ஒரு ஆற்றங்கரைக்கு சென்று அமைதியாக அமர்ந்தான். அப்போது அந்தப் பக்கம் அழகான ஒரு பெண் நடந்து சென்றாள். இவரும் எதேச்சையாக திரும்பி பார்த்தார். அந்த அழகை ரசித்தார். சிறிது நேரத்தில் இன்று இந்த கண் நம்மை ஏமாற்றி விட்டதே என்று எண்ணி வீட்டிற்கு வந்தார். ஐம்புலனில் முதலில் கண்ணை அடக்க வேண்டும் என்ற முடிவோடு அடுத்த நாள் ஆற்றங்கரைக்கு சென்று கண்ணை துணியால் கட்டி கொண்டு அமைதியாக அமர்ந்தார். சிறிது நேரத்தில் அதே பெண் தலையில் வாசனை மிக்க மலர்களை வைத்துக் கொண்டு சென்றாள். மலரின் வாசனை மூக்கை துளைத்தது. நேத்து வந்த அதே பெண்ணாக இருக்குமோ என்று தன் கண்ணைத் திறந்து பார்த்து அந்த அழகை ரசித்தார். இன்று இந்த மூக்கு நம்மை ஏமாற்றி விட்டதே என்று எண்ணி வீட்டிற்கு வந்தார். ஐம்புலனில் கண்ணோடு மூக்கையும் அடக்க வேண்டும் என்ற முடிவோடு அடுத்த நாள் ஆற்றங்கரைக்கு சென்று கண்ணை துணியால் கட்டி கொண்டு மூக்கையும் மூடிக்கொண்னு அமைதியாக அமர்ந்தார். சிறிது நேரத்தில் சலக் சலக் என்று ஒரு சலங்கை ஒலி. இவருக்கு நேற்று வந்த பெண்ணாக இருக்குமா என்று பார்த்து ரசித்து விட்டு காது நம்மை ஏமாற்றி விட்டதே என்று எண்ணி வீட்டுக்கு வந்தார். அடுத்த நாள் ஆற்றங்கரையில் கண் மூக்கு காது அனைத்தையும் கட்டிக் கொண்டு அமைதியாக அமர்ந்தார். சில நிமிடங்கள் சென்றது அவருக்குள் ஒரு கேள்வி எழுந்தது. இப்போது அந்த பெண் இந்தப் பக்கமாக நடந்து போய் இருப்பாளா இல்லையா என்று சிந்திக்க ஆரம்பித்தது அவரது மனம். இப்போது தான் அவருக்கு ஒன்று புரிந்தது. இந்த கண் காது மூக்கு வாய் உணர்வு என்று சொல்லக்கூடிய ஐம்புலன்களும் வெறும் அடியாட்கள் தான். இவற்றை அடக்கி உபயோகம் இல்லை. முதலில் அடக்க வேண்டியது மனதை தான் என்று உணர்ந்து கொண்டு அதற்கேற்ற பயிற்சிகளில் ஈடுபட ஆரம்பித்தார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 114

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 114

கேள்வி: கண்ணையா யோகியைப் பற்றி?

இறைவனின் அருளைக் கொண்டு இந்த மகான்களும் ஞானிகளும் தாமே எல்லா இடங்களிலும் இருந்து கொண்டு எல்லா மனிதர்களையும் நெறிப்படுத்த இயலாது. சுவடி மூலம் வாக்கை கூறலாம். மனித வடிவிலே சிலரை ஆட்கொண்டு நெறிப்படுத்தலாம். இன்னும் சிலரை உள்ளத்திலே உணர்த்தி ஆட்படுத்தலாம். இதுவும் வினை சார்ந்ததே. அவனவன் வினைக்கு ஏற்பதான் இறைவன் அருளால் செயல்படுத்துப்படும். அப்படி சில மனிதர்களை இறைவனின் அருளாணைக்கு ஏற்ப எம்போன்ற மகான்கள் ஆட்கொண்டு அந்த மனிதர்கள் மூலம் பல மனிதர்களை ஆன்ம வழியில் திசை திருப்ப இறைவன் திருவுள்ளம் கொண்ட பொழுது அப்படி எத்தனையோ மனிதர்களை தேர்ந்தெடுத்த பொழுது அதில் ஒருவன் தான் இன்னவன் வினவிய விழி ஐயா(கண்ணையா) என்ற நாமம் கொண்டோன் அந்த கண்ணையா நாமகரணம் கொண்டவன். அவனுக்கும் பல போதனைகளை யாம் நேரடியாகவே செய்திருக்கிறோம். இருந்தாலும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு ஸ்தலத்தை பார்த்து இங்கு மார்கண்டேயர் வந்து தவம் செய்து நிறைய பேறுகளை பெற்றிருக்கிறார். இங்கு சந்திரன் தவம் செய்து தோஷத்தை நீக்கிக் கொண்டிருக்கிறார். இங்கு பிருகு முனிவர் தவம் செய்திருக்கிறார் என்றெல்லாம் ஸ்தல புராணம் கூறும். அதற்காக அங்கு சென்று ஒரு மனிதன் வழிபட்டால் உடனடியாக பலன் கிடைக்குமா? என்றால் அங்கு தவம் செய்தவர்கள் எந்த நிலையில் தவம் செய்தார்களோ அந்த நிலையில் நாம் இருக்கிறோமா? என்று மனிதன் தம்மைத் தாமே பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே அந்த ஒரு மனிதனுக்கு நாங்கள் வழிகாட்டி அவனை எம் வழியில் அழைத்து சென்றிருக்கிறோம். அவனுக்கு நாங்கள் கூறியதை சிலவற்றை அவன் அவனை நாடி வருபவர்களுக்கு கூறியிருக்கிறான். அதில் அவனவன் பூர்வ புண்ணியத்திற்கு ஏற்ப சில அவனவன் அறிவிற்கு எட்டும். பல அறிவிற்கு எட்டாது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 113

கேள்வி: ஏன் ஆண்களைவிட பெண்கள் அதிகம் தலைவலியால் பாதிக்கப்படுகிறார்கள்:

இறைவன் அருளால் கூறவருவது யாதென்றால் இவள் கூறுவதை ஒருபுறம் வைத்துக்கொள்வோம். ஆனால் ஆண்களைக் கேட்டுப் பார்த்தால் பெண்களால்தான் தலைவலி வருகிறது என்று கூறுகிறார்கள். பெண்களைக் கேட்டால் ஆண்களால்தான் வருகிறது என்று கூறலாம். இந்த கபால வேதனை (தலைவலி) என்பது கூட ஒரு பிறவிலே அந்த பிறவி முழுக்க சிலருக்கு மன உலைச்சலைத் தந்ததின் பாவத்தின் எதிரொலி. ஒவ்வொரு பிணிக்கும் (நோய்க்கும்) ஒரு கர்மவினை என்றுமே காரணமாக அமைகிறது. சில பிணிகளுக்கு (நோய்களுக்கு) பல்வேறு பாவவினைகள் காரணமாக அமைகிறது. பொதுவாக இவற்றைக் கூறினாலும்கூட அப்படியெல்லாம் ஏற்றுக்கொள்வது என்பது எம்மால் இயலாது. மனித தேகம் என்பது ஒரே விதமாக படைக்கப்பட்டாலும் சில மாற்றங்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் உண்டு. மன அழுத்தம் அல்லது தீவிரமான சிந்தனை இவற்றிலிருந்து துவங்கி நூற்றுக்கணக்கான காரணங்கள் உடல்ரீதியாகவும் மனோரீதியாகவும் இந்த கபால வேதனைக்கு காரணங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். எனவே திருப்பழனம் (தஞ்சாவூர் மாவட்டம்) என்றொரு ஸ்தலம் இருக்கிறது காவிரியின் கரையிலே. கபால தொல்லைகள் இருக்கும் மனிதர்கள் அங்கு சென்று இயன்ற வழிபாடுகள் செய்வது கட்டாயம் நல்ல பலனைத் தரும். அதற்காக இல்லின் அருகே ஒரு ஆலயம் இருக்கிறது. அங்கு சென்றால் தீராது என்று தவறாகக் கருதிவிடக்கூடாது. குறிப்புக்காக இதனை கூறுகிறோம். இந்தக் கபால வேதனை என்பது ஆணுக்கும் வருகிறது. பெண்ணுக்கும் வருகிறது. யாருக்கு தீவிரமாக இருக்கிறதோ அது ஒரு வகையான வினையின் எதிரொலி என்பதை புரிந்து கொண்டு பரிபூரண சரணாகதி பக்தியும் இயன்ற தொண்டும் செய்து வந்தால் கட்டாயம் அதிலிருந்து விடுதலை பெறலாம்.

திருப்பழனம் கோவிலைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 112

கேள்வி: திருவட்டாறு (கன்னியாகுமரி மாவட்டம்) ஆதிகேசவ பெருமாள் ஆலயத்தின் சிறப்புகள் பற்றி?

எல்லா ஸ்தலங்களிலும் எல்லா வகையான பாக்கியங்களையும் ஒரு மனிதன் பெறலாம். இது பொது நியதி. பிறகு எதற்கு எந்த பிரச்சனை என்றால் இந்த ஸ்தலம் செல்ல வேண்டும் என்றெல்லாம் வகுத்து வைத்திருக்கிறார்கள்? என்றால் அப்படியாவது அந்த பிரச்சனை யாருக்கு இருக்கிறதோ அந்த பிரச்சனை யாரை வாட்டுகிறதோ அந்த மனிதன் அதனை ஒருமுகமாக எண்ணி இதோ இந்த ஆலயத்திற்கு வந்துவிட்டேன். இதோ மனம் ஒன்றி இந்த இறைவனை வணங்கிவிட்டேன். எனவே இந்த பிரச்சனை இனி என்னை விட்டுப் போகும் என்று ஒரு தீவிர நம்பிக்கையை கொண்டு வருவான். அதற்காகத்தான் இவ்வாறு வகுக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி எல்லா ஆலயங்களும் சிறப்புதான். இருந்தாலும் இன்னவன் கூறுகின்ற ஆலயமும் ஐாதகத்தில் புதன் வலிமை குன்றியவர்கள் புதன் தோஷம் இருப்பவர்கள் அதனை சார்ந்து (லோகாய ரீதியாக மட்டும் கூறுகிறோம். இதனை வேறுவிதமாக புரிந்து கொள்ளக்கூடாது) லோகாய ரீதியாக எத்தனைதான் உழைத்தாலும் செல்வம் சேரவில்லை. செல்வம் வந்தாலும் நேரிய வழியில் செலவை விருப்பம் போல் செய்ய முடியாமல் வீண் வழியில் செல்கிறது என்று வருந்தக்கூடிய மனிதர்கள் சென்று வணங்கக்கூடிய ஆலயங்களில் இதுவும் ஒன்று. இன்னும் பல்வேறு சிறப்புகளை காலப்போக்கில் புரிந்து கொள்ளலாம்.

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் ஆலயத்தின் சிறப்புகளைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 111

கேள்வி: பெரம்பலூர் அருகில் உள்ள பிரம்மரிஷி மலையில் 210 சித்தர்கள் வாழ்வதாக சொல்லப்படுவது பற்றி?

மலைகளில் சித்தர்கள் இருக்கிறார்களா? இல்லையா? ஆலயத்தில் சித்தர்கள் இருக்கிறார்களா? இல்லையா? பழனியில் போகர் இருக்கிறாரா? இல்லையா? கோரக்கர் பொய்கை நல்லூரில் இருக்கிறாரா? இல்லையா? இதுபோன்ற விவாதங்கள் காலகாலம் இருந்து கொண்டுதான் இருக்கும். எந்த இடத்திற்கு சென்றாலும் அங்கு சென்று வழிபடக்கூடிய மனித மனதில் பக்தி இருக்கவேண்டுமப்பா. பக்தியோடு ஒருவன் தன் இல்லத்திலிருந்து வழிபட்டாலும் சித்தர்கள் அங்கே வந்து காட்சி தருவார்கள். இதற்காக வனத்திற்கு (காட்டிற்கு) செல்ல வேண்டும் மலைக்கு செல்ல வேண்டும் என்பதல்ல. ஆனால் தேகம் நலமாக இருக்க வேண்டுமென்றால் ஒரு மனிதனுக்கு மூலிகைகளின் காற்று அவசியம். அதனால்தான் இது போன்ற மலை பிரயாணத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். எனவே நீ கூறிய இடத்தில் மட்டுமல்ல சித்தர்கள் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். மனிதன் மனதிலே களங்கமில்லாமல் தூய எண்ணத்தோடு பிராத்தனை செய்தால் சித்தர்களின் அருளாசி கட்டாயம் கிட்டும்.

கேள்வி: மாயன் காலண்டர்படி 2012 இல் அழிவு ஏற்படும் என்ற செய்தி பற்றி

எந்த பாதிப்பும் ஏற்படாதப்பா. இது போன்ற வானியல் நிகழ்வுகள் மனித கண்களுக்குப் புலப்படாமல் அன்றாடம் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. அண்ட பிரபஞ்சங்கள் இயங்கும் போது அந்த இயக்கத்தின் காரணமாக சில எதிர் விளைவுகள் ஏற்படத்தான் செய்யும். ஆனால் இதற்கும் அழிவற்கும் எந்த தொடர்பும் இல்லை.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 110

கேள்வி: ஸ்ரீவித்யா உபாசகர்கள் கடைபிடிக்க வேண்டிய முறைகளையும் ஸ்ரீசக்ரமகா மேருவின் சிறப்பையும் விளக்குங்கள்

இறைவன் அருளால் இன்னவன் கூறிய பூஜைக்கு மட்டுமல்ல எல்லா வகையான பூஜைகளுக்கும் அடிப்படை ஒழுக்கம் அவசியம். பூஜைகளே செய்யாவிட்டாலும் போதும் ஒரு மனிதன் ஒழுக்கமாக நேர்மையாக வாழ்ந்தாலே அதுவே ஒரு பூஜைதானப்பா. பூஜை செய்கிறேன் என்று ஒருவன் பிறரை இடர்படுத்துவதோ தன்னை இடர்படுத்திக் கொள்வதோ அல்ல. எனவே மனோரீதியாக ஒருவன் மனித நேயத்தை வளர்த்துக் கொண்டு மனதை செம்மைபடுத்த மனதை வைராக்யப்படுத்த மனதை வைரம் போல் உறுதிப்படுத்தத்தான் பூஜைகள் எல்லாம் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் அந்த பூஜையை செய்து அதனால் மனசோர்வு என்றால் அவன் அந்த பூஜையையே செய்யத் தேவையில்லை. எனவே சரியான வழிமுறை என்பதைவிட ஒரு மனிதனின் மனநிலைதான் அங்கே முக்கியம்.

இந்த ஸ்ரீசக்ர மந்திரங்களை முறையாக உபதேசமாக தக்க மனிதரிடம் பெற்று முறையாக ஒருவன் அந்த பூஜையை செய்து வந்தால் நல்ல பலன் உண்டு. இதை நாங்கள் ஒரு பொழுதும் மறுக்கவில்லை. ஆனால் அங்கே வெறும் பூஜை என்ற அளவில் மட்டும் மனித நேயம் புறக்கணிக்கப்பட்டால் அந்த பூஜையால் எந்த பலனும் இராது என்பதை கூறிக்கொள்கிறோம். இந்த பூஜைகள் (ஸ்ரீவித்யா மார்க்க பூஜைகள் – அன்னை ஸ்ரீலலிதாம்பிகையின் தச மகாவித்தை) ஒரு மனிதனின் பல்வேறு பிறவிகளின் பாவங்களைப் போக்கும். போக்குவதோடு குண்டலினி சக்தியையும் மேலே எழுப்பும். முறையாக ஸ்ரீசக்ர உபதேசம் பெற்று தன் வாழ்நாள் முழுவதும் நித்ய ஸ்ரீசக்ர பூஜையை ஒருவன் செய்தால் பரிபூரண தவத்திற்கு சமமப்பா.

கேள்வி: புறசடங்குகள் பற்றி

ஆத்மார்த்தமான பக்திதான் முக்கியம். இயன்ற தர்மங்கள் பிராத்தனைகள் தாம் முக்கியம். பரிகாரங்களை விட மனம் ஒன்றிய பிராத்தனைகள் அதிகம் சக்தி வாய்ந்தவை.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 109

கேள்வி: யுத்தம் என்றால் என்ன?

ஒரு மனிதனை அவனுடைய மன எண்ணங்கள் தாறுமாறாக அழைத்துச் செல்கிறது. பஞ்ச புலன்களும் மனதிற்கு கட்டுப்படாமல் விருப்பம் போல் அலைகிறது. ஒரு மனிதன் யுத்தம் செய்ய வேண்டும் என்று கருதினால் முதலில் தன்னுடன்தான் யுத்தம் செய்ய வேண்டும். தன்னைத்தான் யுத்தம் செய்து எவன் வெல்கிறானோ அவனுக்குத்தான் பிறரை வெல்லக்கூடிய யோக்யதை வருகிறது. தன்னையே வெல்லமுடியாத ஒருவன் எப்படி பிறரை வெல்ல முடியும்? எனவே மனிதர்கள் செய்கின்ற போர் அல்லது யுத்தம் என்பதெல்லாம் எம் போன்ற ஞானிகளால் ஏற்கப்படக்கூடிய நிலையில் என்றுமே இல்லை. ஆனால் விதி அப்படித்தான் நடக்க வேண்டும் என்றால் அது நடந்துவிட்டுப் போகட்டும் என்று நாங்கள் பார்வையாளராக பார்த்துக் கொண்டிருப்போம். அதே சமயம் பகவான் கிருஷ்ண பரமாத்மா யுத்தம் என்று கூறும் பொழுது இந்த யுத்த தர்மத்தை அப்படி வகுத்ததன் காரணம் யுத்தமே செய்யக்கூடாது. செய்யக்கூடிய நிலை வந்தால் எதற்காக செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும்? அந்த யுத்தத்தில் யார் யார் என்ன விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்? என்றெல்லாம் அவர் போதித்தது உண்மை. ஆனால் யுத்தமே வேண்டாம் என்ற நிலையிலே இதுபோன்ற விதிமுறைகளே தேவையில்லை. அடுத்ததாக யுத்தமே வேண்டாம் என்று கிருஷ்ண பரமாத்மா கூறினாலும் ஆதியிலிருந்தே கூறி வந்திருக்கிறார். அதை யாரும் கேட்பதாக இல்லை. முதலில் பாண்டவர்களே கேட்பதாக இல்லை. எனவே விதி வழி மதி செல்கிறது. அதை இறைவனாலும் தடுக்க முடியாது என்பது போல அங்கே கிருஷ்ண பரமாத்மாவும் எம் போல் பார்வையாரகத்தான் இருந்திருக்கிறார்.

அடுத்ததாக தர்மத்திற்காக யுத்தம் செய்தால் யுத்தமே வேண்டாம் வேண்டாம் என்று ஒதுங்குகின்ற மனிதரிடம் தேவையில்லாமல் யுத்தம் திணிக்கப்பட்டு வேறு வழியில்லாமல் அதை கர்மயோகமாக ஏற்று அவன் யுத்தம் செய்யும் பட்சத்தில் உடலை விட நேர்ந்தால் அவன் சொர்க்கம் செல்வான் என்பது வெறும் அந்த யுத்த நிகழ்வைப் பொறுத்ததல்ல. வாழ்க்கையின் அடிப்படையையும் சேர்த்துதான். வெறும் யுத்தத்தில் ஒருவன் வீரமரணம் அடைந்தால் வீர சொர்க்கம் அடைவான் என்பதெல்லாம் எதற்காக கூறப்பட்டது தெரியுமா? இல்லையென்றால் போர் என்றால் யாராவது துணிந்து வருவார்களா? தர்மம் செய்தால் உன் வாழ்க்கை நன்றாக இருக்குமப்பா. உனக்கு பிணி வராது என்று கூறுகிறார்களே அதைப் போல் இந்த போரிலே கலந்து கொண்டால் இது நேர்மையான யுத்தம். நம் தேசத்தின் மீது எந்த தவறும் இல்லை. நீ நேர்மையாக யுத்தத்தில் ஈடுபடு. புறமுதுகிட்டு ஓடாதே. யார் வந்தாலும் எதிர்த்து நில். அதை மீறி உன் உயிர் போனால் உனக்கு மேலே சொர்க்கம் காத்திருக்கிறது என்று கூறி யுத்த பயத்தை நீக்குவதற்காக கூறப்பட்ட வாசகங்கள். இவை எங்களால் (சித்தர்களால்) ஒரு பொழுதும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. வாழ்க்கை முழுவதும் எல்லா தவறுகளையும் செய்துவிட்டு யுத்தத்திலே ஒருவன் வீரமரணம் எய்தினால் அவன் தன் நாட்டிற்காக வீரமரணம் எய்தினாலும் அதற்காக அவனுக்கு இறைவன் சொர்க்கமெல்லாம் தரமாட்டார் இதை நன்றாக புரிந்துகொள்.

அப்படியென்றால் துரியோதனனுக்கு வீர் சொர்க்கம் கிடைத்தது என்பது பற்றி:

ஏற்கனவே கூறியிருக்கிறோம். அனைத்தும் நாடக கதாபாத்திரங்கள். அந்தக் கூத்தில் நடப்பதையெல்லாம் நிஜம் என்று எண்ணக்கூடாது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 108

கேள்வி: முன்னோர்கள் கடனை எப்படி கொடுப்பதென்று மீண்டும் எங்களுக்கு நினைவூட்ட வேண்டும்?

இறைவன் கருணையைக் கொண்டு சுருக்கமாக இத்தருணம் கூறுகிறோம். எத்தனையோ விதிமுறைகளும் விளக்கமான முறைகளும் இருக்கிறது. எல்லாவற்றையும் எல்லா மனிதர்களாலும் எல்லாக் காலங்களிலும் பின்பற்றுவது மிக மிகக் கடினமப்பா. குறைந்தபட்சம் ஒரு தினம் ஒரு ஏழைக்காவது அன்னமிடுதல் வேறு தக்க உதவிகள் செய்தல் அன்றாடம் ஒரு ஆலயம் சென்று வழிபாடு குறிப்பாக பைரவர் வழிபாடு. அந்த நிலையிலே நிறைமதி (பெளர்ணமி) காலம் போன்றவற்றில் ஒரு சிறப்பான வழிபாடு இயன்றவரை தர்ம காரியங்கள் அதோடு மட்டுமல்லாமல் ஆ (பசு) கோட்டம் வைத்து நல்ல முறையிலே பராமரிக்கும் ஆலயங்களிலே ஆவினங்களுக்கு (பசுவினங்களுக்கு) இயன்ற உதவிகள் செய்தல் இங்கே ஆவினம் (பசு இனம்) என்று கூறுவது ஒரு குறிப்பாக. அதற்காக வேறு உயிர்களையெல்லாம் கவனிக்கக் கூடாது என்று பொருள் அல்ல. இறைவன் கருணையைக் கொண்டு இதோடு மட்டுமல்லாமல் வருடம் ஒரு முறையாவது தெய்வத்தீவு எனப்படும் இராமேஸ்வரம் சென்று வழிபாடும் இயன்ற வரையில் அங்கு தற்காலத்தில் 100 க்கு 100 புனிதமான முறையிலே திலயாகம் செய்யப்படாவிட்டாலும் அந்த மண்ணிலே பூஜை செய்வதால் சில நன்மைகள் வரும் என்பதால் யாங்கள் கூறுகிறோம். இயன்றவரை கூடுமானவரை அங்கு ஒரு தில யாகத்தை செய்து வருவதும் ஒரு முறை செய்துவிட்டால் போதும் மீண்டும் செய்ய வேண்டாம் என்ற கருத்தையெல்லாம் விட்டுவிட்டு வாய்ப்பு உள்ளவர்கள் ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ ஒரு வருடத்திற்கு ஒரு முறையோ அங்கு எல்லா வகையான யாகங்களோடும் தில யாகத்தை செய்வதும் அப்படியில்லாதவர்கள் அங்கு மூன்று தினங்கள் குறைந்தபட்சம் தங்கி இறை வழிபாடும் இயன்ற தர்ம காரியங்களை செய்வதும் ஏற்புடையதாகும். இவை எதுவுமே செய்ய இயலாதவர்கள் அன்றாடம் ஆலயம் சென்று பைரவரை வணங்குவதும் அதுவும் இயலாதவர்கள் இல்லத்திலே அமைதியாக அமர்ந்து 108 முறை பைரவர் காயத்ரி மந்திரத்தை உருவேற்றுவதும் அதுவும் இயலாதவர்கள் பைரவர் திருவடி போற்றி என்று கூறுவதும் இப்படி ஏதாவது ஒன்றை பின்பற்றினால் நல்ல பலன் உண்டு.