ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 550

கேள்வி: மது பானத்திற்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீள வழி என்ன?:

இறைவன் அருளால் முன்னோர்கள் பெற்ற கடுமையான பிதுர் சாபங்கள். இதுதான் மதிமயக்கும் பானத்திற்கு அடிமையாவதின் சூட்சுமம் அப்பா. எனவே தொடர்ந்து பைரவர் வழிபாடு சரபேஸ்வரர் வழிபாடு நரசிம்மர் வழிபாடு அன்னை ப்ரத்யங்கிரா வழிபாடு செய்வது நல்ல பலனை தரும்.

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 85

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 549

கேள்வி: தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் அதிகமாக இருக்கிறது. அதனால் இறைவனின் தலையில் இருக்கும் கங்கையையும் தங்கள் கமண்டலத்தில் உள்ள காவிரியையும் இணைக்க ஒரு வழி சொல்லுங்கள்:

இணைத்து விடலாம் அப்பா கவலைப்படாதே. ஒன்று தெரியுமா? மூடர்களால் வரக்கூடிய துன்பங்கள் தான் இந்த உலகிலே அதிகம். தன்முனைப்பு ஆணவம் உள்ள மனிதர்கள் பெருந்தன்மை இல்லாத மனிதர்கள் இவர்கள் கையில் நாடு சிக்கினால் இந்த நாட்டிற்கு விமோசனம் என்பதே கிடையாது. அரியாசனங்கள் என்றுமே அறியா ஜனங்களால் தீர்மானிக்கப்படுவதால் இந்த அறியா சனங்கள் அரியாசனங்களை சரியாக தக்க வைத்துக்கொள்ள தெரிவதில்லை. அறியா சனங்களின் அந்த அறியாத்தனத்தை அரியாசனங்கள் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. நல்லவர்களை இனம் காண முடியாத கொடுமைதான் இத்தனை கொடுமைக்கும் காரணம். ஏற்கனவே தான் எல்லா கொடுமைகளையும் ஒருவன் செய்கிறானே? மீண்டும் எதற்கு அவனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனென்றால் மனிதர்களை பொறுத்தவரை எல்லோருக்கும் தெரிந்தவனைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. அவன் மதிக்குள் அவன் விதி அப்படித்தான் அமர்ந்து வேலை செய்கிறது. வேறு விதமாக கூறினால் நன்றாக புரிந்து கொள்ளலாம்.

ஒரு மனிதன் பல நாட்களாக பல தர்ம காரியங்களை நல்ல தொண்டுகளை செய்கிறான். யாராவது அவனை கண்டு கொள்வார்களா? ஆனால் ஒரு நாள் அவன் சில பெண்களோடு பழகினால் தவறான ஒரு இடத்திற்கு சென்று வந்தால் மறுதினம் ஊரே எங்கும் அவனை பற்றி பேச்சாக இருக்கிறது. நல்லதே செய்யும் பொழுது கண்டுகொள்ளாத சமுதாயம் தீயதை செய்யும் பொழுது ஏன் கண்டு கொள்கிறது? இந்த குணம் மாறினால் தான் நாட்டில் சுபிட்சம் உண்டாகும். நல்லதை அங்கீகரிக்க கற்றுக் கொள்ளுங்கள். நல்லவர்களை ஆதரிக்க கற்றுக் கொள்ளுங்கள். முதலில் ஒவ்வொரு மனிதனும் நல்லவனாக வாழ கற்றுக் கொள்ளுங்கள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 548

கேள்வி: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கருவூரார் சாபம் பெற்றது பற்றி:

கருவூரான் என்றுமே கருவில் அவன் ஊரான் என்பதால் தான் அவனுக்கு அப்பெயர் இறைவனால் வழங்கப்பட்டது. மூலஸ்தானத்திலே இறையோடு இரண்டற கருவூர் பசுபதிசுவரர் ஆலயத்திலே அன்னவன் கலந்ததை யாம் என் நேத்திரம் கொண்டு பார்த்து களித்தோம். அது போல் நிலையிலே என்னதான் சித்தனாக இருந்தாலும் கூட சித்தர்கள் குறித்து பல்வேறு அனாச்சாரமான காரியங்கள் செய்ததாக கருத்துக்கள் மனிதர்களிடையே நிலவி வருகிறது. இதை தவிர்க்கவே முடியாது என்பது எமக்குத் தெரியும். இது மட்டுமல்ல அன்னவன் ஒருமுறை நெய்வேலி சென்று நெல்லையப்பரை பார்த்த பொழுது அங்குள்ள காளியிடம் ஏதோ கேட்டதாகவும் ஏதோ கிட்டியதாகவும் நெல்லையப்பர் ஏதோ மறுத்ததாகவும் அவரை சபித்ததாகவும் கூட கதை இருக்கிறது. இவை அத்தனையும் கட்டுக்கதை. இட்டுக்கதை. சித்தர்களை உயர்ந்த நிலையிலும் உயர்ந்த எண்ணத்திலும் தான் பார்க்க வேண்டும். சித்தர்கள் எது ஏதோ பானங்களை பருகுவதாகவோ வேறு விதமான பழக்க வழக்கங்களுக்கு ஆட்பட்டதாகவோ கூறப்படுவதெல்லாம் இடைச் செருகல்களில் ஒன்றுதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அப்பேர்ப்பட்ட இடைச்செருகல்ளில் ஒன்றுதான் இன்னவன் வினவியது. ஆனாலும் கூட அந்த ஆலய நிர்மாணத்திற்கு வேண்டிய அத்தனை ஆலோசனைகளையும் கருவூரான் தான் தந்தான். அப்படி அந்த சிவலிங்கத்தை ஸ்தாபிக்க மூலிகை சாற்றால் சிலவற்றை செய்தான். பிரார்த்தனையின் பலத்தால் சிலவற்றை செய்து தந்தான். இதுதான் மெய்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 547

கேள்வி: பலரும் கூட்டாக சேர்ந்து பூஜை மற்றும் தர்மம் செய்யலாமா?

இறைவன் அருளால் பலரும் கூட்டாக சேர்ந்து பூஜை செய்வதையோ தர்மம் செய்வதையோ நாங்கள் ஒருபோதும் தடை கூறவில்லை. ஆனால் மனிதர்களுக்குள் தேவையில்லாத கசப்புணர்வு ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. மனம் திறந்து மனதிலே எந்த வஞ்சனையும் சூழ்ச்சியும் சராசரி எண்ணங்களும் இல்லாமல் பெருந்தன்மையோடு யார் வேண்டுமானாலும் ஒன்று சேர்ந்து பூஜைகள் செய்யலாம். எமது பரிபூரண நல்லாசிகள் உண்டு.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 546

கேள்வி: திருவண்ணாமலை இடுக்குப் பிள்ளையார் இருக்கும் இடுக்கின் வழியாக வந்தால் முக்தி கிடைக்குமா?

இறைவன் அருளால் இதே போல காஞ்சியிலே கைலாசநாதர் ஆலயம் இருக்கிறது. அங்கே தவழ்ந்து வந்தால் ஒரு பிறவி போய்விடும் என்ற வழக்கு இருக்கிறது. இன்னொரு ஆலயத்திலேயே தலவிருட்சம் இருக்கிறது. அதனை சுற்றி வந்தால் பல பிறவிகள் போய்விடுகிறது என்று கூறுகிறார்கள். இன்னொரு ஆலயத்திற்கு ஒருமுறை சென்று இறை நாமத்தை ஒரு முறை ஜெபித்தாலே கோடி முறை ஜெபித்த பலன் இருக்கிறது என்று கூறுகிறார்கள். இவையெல்லாம் இறைவனின் பெருமையை பறைசாற்றுவதற்காக மனிதர்களால் கூறப்பட்டது. பஞ்சமா பாதகங்கள் அனைத்தையும் செய்துவிட்டு நீ கூறிய இடுக்கின் வழியாக ஒருவன் வெளியே வந்தால் அவனுக்கு என்ன முக்தி கிடைக்குமா? மோட்சம் கிடைக்குமா? முதலில் ஒருவனின் நடைமுறை வாழ்க்கையில் சாத்வீகமும் சத்தியமும் தர்மமும் பக்தியும் தான் இருக்க வேண்டும். மற்ற புற சடங்குகள் எல்லாம் இரண்டாம் பட்சம் தான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 545

கேள்வி: விராலிமலைக்கு சென்றால் வாய்ப்புள்ளவர்களுக்கு அதிகாலையில் நாரதர் தரிசனம் தருவார் அதுபற்றி:

இறைவன் அருளாலே மோட்சம் முக்தி சாயுச்சியம் சாரூபம் சாமீபம் சாலோகம் என்கிற ஆன்ம உயர்வு நிலைகளுக்கெல்லாம் எத்தனையோ தெய்வீக சூட்சமங்கள் இருக்கிறது. இவளொத்து பலர் கேட்பது என்னவென்றால் மிகப்பெரிய ஞானிகளெல்லாம் ஒரு பிறவியிலே மகானாக ஞானியாக பிறந்து இறை தரிசனத்தை கண்டு இறையோடு இரண்டற கலந்த பிறகு மீண்டும் ஏன் பூமியில் பிறக்க வேண்டும்? என்று. இந்த இடத்தில் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் மருத்துவமனைக்கு நோயாளி செல்கின்ற விதம் வேறு. மருத்துவர்கள் செல்கின்ற விதம் வேறு. மருத்துவமனையில் பணியாற்றுகின்ற ஊழியர்கள் செல்கின்ற விதம் வேறு. நோயாளி நோய் குணமாவதற்காக செல்கின்றான். மருத்துவன் அந்த நோயாளியை குணப்படுத்தும் பணிக்காக செல்கிறான். இங்கே சராசரி மனிதர்கள் நோயாளியாக வருகிறார்கள். மகான்கள் பிறப்பது மருத்துவன் போல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 544

கேள்வி: காக புஜண்டருக்கு கோவில்கள் எங்கெங்கே இருக்கிறது?

உண்மையான பக்தர்களின் உள்ளம் அனைத்திலும் காக புஜண்டருக்கு கோவில்கள் இருக்கிறது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 543

கேள்வி: துறவு பற்றி

துறவு என்றால் என்ன என்று நீ எண்ணுகிறாய்? முற்றிலும் துறப்பதல்ல. முற்றிலும் உணர்வது தான் துறவின் இலக்கணம். உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற்குரு யாருக்கும் எந்த தீங்கும் செய்யாமல் தன் கடமையை நேர்மையாக ஆற்றுவதுதான் உண்மையான துறவு. இல்லறத்தில் இருந்து கொண்டு நேர்மையாக சத்தியமாக தர்மத்தோடு பக்தியோடு வாழ்ந்தால் அதுவும் துறவுக்கு சமானம்தான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 542

கேள்வி: கோயில் என்றாலே புண்ணியமான இடம் தானே. இராசி இல்லாத கோயில்கள் என்ற ஒன்று இருக்கிறதா?

இறைவன் அருளால் மனிதன் தனக்கு ஏற்படக்கூடிய துன்பங்களுக்கு எப்பொழுதுமே பிறவற்றை அல்லது பிறரை குற்றம் சாட்டுவது என்பது இயல்பாகி விட்டது. ஆயிரக்கணக்கான ஆடு மாடுகளை கொன்று குவிக்கும் பொழுது வராத பாவம் ஆயிரக்கணக்கான மனிதர்களை போர் என்ற பெயரில் கொன்று குவிக்கும் போது வராத பாவம் ஒரு ஆலயம் சென்று தரிசித்தால் வந்துவிடுமா என்ன? ஆலயத்தில் இறைவனால் எந்த அனாச்சாரமும் நடப்பதில்லை. அவனவன் விதியின் படி நடக்க வேண்டியது நடந்து கொண்டே இருக்கிறது. அதற்கும் ஒரு ஆலயத்திற்கும் தொடர்பு இல்லை. இன்னொன்று காலத்தில் ஆலய கட்டுமான பணிகள் செய்யும்போது பல்வேறு மனிதர்கள் அந்த கட்டுமானத்தின் காரணமாக அந்த வேலையின் காரணமாக உயிரை துறந்திருக்கிறார்கள். அதற்கெல்லாம் பூஜை நடந்திருக்கிறது. இன்னும் எமக்கு பிடிக்காத பலவும் நடந்திருக்கிறது. ஆலய வேலை பழுதுபடாமல் இருக்க உயிர் பலியெல்லாம் கூட தந்திருக்கிறார்கள். இவையெல்லாம் எக்காலத்திலும் மூடர்கள் செய்யக்கூடிய விஷயம்தான். அக்காலத்தில் அரசனும் சில மூட பழக்க வழக்கங்களுக்கு ஆளாகி இப்படியெல்லாம் செய்ததுண்டு. ஆனால் அதற்கும் இன்னவள் கூறிய வினாவிற்கும் தொடர்பில்லை. அங்கு திரையை போட்டு மறைத்து விட்டால் மட்டும் ஒருவனின் கர்மாவையும் மறைத்து விட முடியுமா என்ன?

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 541

அகத்தியரின் பொது வாக்கு:

இறைவன் அருளாலே இறைவன் என்ற மகாசக்தியிலிருந்து பிரிந்த துகள் தான் அனைவரும் என்று தத்துவார்த்தமாக கூறினாலும் கூட இறைவன் விளையாட்டாக இந்த உலகை படைத்ததாக சொல்லுவோம். அப்படி படைக்கும் பொழுது இப்படி வாழ வேண்டும். இப்படி வாழ கூடாது. இது தக்கது. இது தகாதது. இது நன்மையை தரக்கூடியது. இது தீமையை தரக்கூடியது என்றெல்லாம் நல்ல ஞானிகளையும் உடன் அனுப்பி போதனைகளையும் செய்திருக்கிறார். ஆனாலும் கூட இங்கு வந்த பிறகு ஆத்மாக்கள் வெறும் லோகாய இச்சைக்குள் சிக்கி தவறுகளையும் பாவங்களையும் செய்து கொண்டேதான் போகிறது. இது எங்ஙனம்? என்றால் ஒரு மகா பெரிய ஞானி யோகி இருப்பதாக கொள்வோம். அந்த ஞானியின் போதனைகளை கேட்டு பலரும் மனம் திருந்தி நல்ல வழியில் வருவதாக கொள்வோம். ஆனால் அந்த ஞானியின் பிள்ளை அவ்வாறு இருக்க வேண்டும் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லையே? ஞானியின் பிள்ளை அசட்டுத்தனமாக மூடத்தனமாக தவறுகளை செய்யக்கூடிய பிள்ளையாக பலருக்கும் இருப்பது போலத்தான். இறைவன் படைப்பாக இருந்தாலும் இறைவனைப் போல உயர்ந்த எண்ணங்கள் இல்லாமல் வாழும் சூழலை மாயையால் மனிதன் உண்டாக்கி கொள்கிறான். ஆனால் இறைவன் தான் இந்த உயிர்கள் எல்லாம் படைத்தார் என்பதற்கு குழந்தைகளை பார்த்தால் புரிந்து கொள்ளலாம். குழந்தைகளிடம் வஞ்சகம் இல்லை. சூழ்ச்சி இல்லை. சூது இல்லை. வாது இல்லை. அது இறைவனின் நகலாக இருக்கிறது. அது பிறகு வளர வளர ஏற்கனவே வளர்ந்த குழந்தை அனைத்தையும் அந்த குழந்தைக்கு சொல்லி தந்து விடுகிறது.

நல்லதை தொடர்ந்து செய் என்று எண்ணிதான் இறைவனை இறைவன் உயிர்களை படைத்திருக்கிறார். ஆனால் அப்படி ஒருபோதும் செய்ய மாட்டேன் அப்படி செய்தால் உடனடியாக நன்மைகள் ஏற்பட போவதில்லை. லோகாய நஷ்டம் ஏற்படுகிறது. எனவே நான் சுயநலவாதியாகத்தான் வாழ்வேன் என்பது மனித சமுதாயத்தின் ஒட்டுமொத்த தீர்மானமாக இருக்கிறது. அப்படி பார்க்கும் பொழுது இறைவன் நல்ல எண்ணத்தில் தான் அனைத்தையும் செய்து இருக்கிறார். இறைவன் மனிதனை இப்படி ஒரு மாயையில் தவிக்க விட்டதாக தத்துவார்த்த ரீதியில் புலம்பலாமே தவிர இந்த குற்றத்திற்கு முழுக்க முழுக்க மனிதர்களை காரணம். ஏனென்றால் சிந்திக்கும் ஆற்றலை தந்து தான் உயிர்களை இறைவன் உலாவை விட்டிருக்கிறார். வெளியூருக்கு செல்லும் மைந்தனுக்கு போக வர செலவுக்கும் உணவு அங்காடிக்கு உண்டான செலவுக்கும் சத்திரத்தில் தங்குவதற்கு உண்டான செலவுக்கும் தனம் தந்து அந்த தனம் எதிர்பாராத விதமாக தொலைந்து விட்டால் வேறுவிதமான ஏற்பாடுகளையும் செய்து தான் தந்தை அனுப்புகிறார். ஆனால் பிள்ளையோ அதனை கேட்காமல் தவறான வழியில் சென்றால் அனுப்பிய தந்தையின் குற்றமா? தவறான வழியில் சென்ற பிள்ளையின் குற்றமா?