ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 194

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

இறைவனின் கருணையாலே உலகியல் வாழ்வும் உலகியல் வாழ்வு சார்ந்த விஷயங்கள் மட்டுமே ஒரு மனிதனை மாயையில் ஆழ்த்துவதாக எண்ணி விடக்கூடாது. அது பொதுவான மாயை. ஆன்ம ஞானத்தில் வந்த பிறகும் கூட இது ஆன்மீகமோ? இது தான் மெய்யான இறை வழியோ? என்று எண்ண வைத்து மாயையில் ஆழ்த்துகின்ற விஷயங்களும் இருக்கின்றது. இன்னும் கூறப் போனால் கடுகளவு கூட ஆன்மீகம் பற்றி தெரியாத ஆன்மாக்கள் கூட தப்பித்து விடலாம். ஆனால் படிப்படியாக பிறவி கர்மா இறை நவக்கிரகம் ஞானம் அபர ஞானம் பர ஞானம் என்றெல்லாம் விவாதித்துக் கொண்டு சகல சாஸ்திரங்களையும் வேதங்களையும் எப்பொழுது ஒரு ஆத்மா கற்கத் துவங்குகிறதோ அப்பொழுதே குழப்பமும் தெளிவும் பிறகு மீ்ண்டும் குழப்பம் பிறகு புரிதலும் பிறகு புரியாத நிலையும் ஏற்பட்டு அதற்குள்ளே அந்த ஆன்மா மாயையில் சிக்குவதற்கு வாய்ப்புகள் ஏராளம். வேறு வகையில் கூறப் போனால் எல்லாவற்றையும் ஓதுதலும் ஓதியதை அசை போடுவதும் ஒருபுறமிருக்க பரிபூரண சரணாகதி அந்த பக்தி வழியில் செல்லும் பொழுதே சற்றே சுலபமாக மாயையை விடுவதற்கு இறைவன் அருளலாம் என்பதால்தான் பக்தி வழியையும் தர்ம வழியையும் நாங்கள் காட்டுகின்றோம்.

ஒரு மனிதன் யோகாசங்கள் செய்ய வேண்டாமா? வேண்டும். பிரணாயாமம் செய்ய வேண்டாமா? வேண்டும். உடல் பயிற்சி செய்ய வேண்டாமா? வேண்டும். ஒரு மனிதன் ஸ்தல யாத்திரை செய்ய வேண்டாமா? செய்ய வேண்டும். யாகம் செய்ய வேண்டாமா? செய்ய வேண்டும். தர்மங்கள் செய்ய வேண்டாமா? செய்ய வேண்டும். ஆனால் இவைகளை நிஷ்காம்யமாக (விருப்பு வெறுப்பின்றி) செய்ய ஒரு மனிதன் கற்றுக் கொள்வதே மாயையில் சிக்கிக் கொள்ளாமல் வாழ்வதற்குண்டான வழியாகும். எனவே ஒரு மனிதன் என்ன தான் ஆன்மீக வழியில் வருவதாக எண்ணினாலும் கூட தான் பிறரைப் போல் அல்ல. ஆன்மீகத்தில் இருக்கிறோம் என்று எண்ணும் பொழுதே ஒரு மாய சேற்றில் அவன் விழுந்து விடுகிறான். உண்மையான ஆன்மீகம் யாரையும் வெறுப்புடன் பார்க்காது. உண்மையான ஆன்மீகம் எல்லோரையும் அரவணைத்தே செல்லும். உண்மையான ஆன்மீகம் பிறரை தூஷகம் (நிந்தை) செய்தாலும் (பதிலுக்கு) பிறரை தூஷகம் செய்யத் தூண்டாது. எனவே கிட்டத்தட்ட பக்தர்கள் பார்வையில் இறை எப்படி இருந்தாலும் இறைவனின் பார்வையில் பக்தர்கள் எப்படி இருக்கிறார்கள்? என்பதே ஒரு உயர்ந்த சிந்தனையாகும். அந்த சிந்தனையை வளர்த்துக் கொண்டால் தான் மாயையில் சிக்கிடாமல் இருப்பதற்கு நல்லதொரு வழியை மனிதர்கள் உணரலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.