பந்தார் விரலி

இராமானுஜரின் ஐந்து குருக்களில் திருக்கோட்டியூர் நம்பியும் ஒருவர். இவரிடத்தில் அஷ்டாக்ஷர மந்திரோபதேசம் பெறுவதற்காக 36 முறை அலைந்தார். அத்தனை முறையும் இன்னும் உனக்கு பக்குவம் வரவில்லை என்று இராமானுஜரை திருப்பி அனுப்பி விட்டார் குருவாகிய நம்பி. அதனால் தினமும் தன்னுடைய குருவை சந்திக்க வேண்டும் என்று திருக்கோஷ்டியூரிலேயே தங்கி தினமும் குருவை தரிசித்தார் இராமானுஜர். மார்கழி மாதம் ஒரு நாள் அதிகாலையில் இராமானுஜர் வீதியில் சங்கீர்த்தனம் செய்து கொண்டே தன்னுடைய குருவை பார்க்க சென்று கொண்டிருந்தார். மார்கழி மாதம் என்பதினால் ஒவ்வொரு வீட்டு வாசலில் கோலம் போட்டு அதில் ஒரு பூ வைத்து விளக்கு வைப்பார்கள். இராமானுஜர் குருவின் வீட்டு வாசலில் வந்து நின்றார். அப்போது நம்பியின் வீட்டு வாசலில் அவரது பெண் இருட்டில் கோலம் போட்டு கையில் விளக்குடன் நிற்பதைப் பார்த்ததும் ‘ஆ’ என்று கத்தி மயக்கம் போட்டு விழுந்து விட்டார். அந்தப் பெண் பயந்து வீட்டின் உள்ளே ஓடிச் சென்று நம்பியிடம் நமது வீட்டு வாசலில் ஒருவர் திருப்பாவை பாடிக் கொண்டே வந்து நின்றார். வந்தவர் என்னைப் பார்த்ததும் மயக்கம் போட்டு விழுந்து விட்டார் என்று சொன்னாள். இதனைக் கேட்ட நம்பி அவர் என்ன பாட்டு திருப்பாவையில் பாடிக் கொண்டு வந்தார் என்று கேட்டார். பந்தார் விரலி பாடல் என்றாள்.

பந்தார் விரலி பாடலின் அர்த்தம் என்ன என்றால் கையில் விளக்குடன் அந்த மகாலக்ஷ்மியின் தரிசனம் எனக்குக் கிடைக்கிறது என்று அர்த்தம். அப்போது திருக்கோஷ்டியூர் நம்பி தன் மகளிடம் சொல்கிறார். அவன் மேல் ஒன்றும் குறையில்லை. அந்தப் பாட்டில் மகாலட்சுமி எதிரில் வந்தாய் என்ற வார்த்தையை அவன் பாடும் போது அவன் முன் நீ கையில் விளக்குடன் நின்றிருப்பாய். அந்தப் பாட்டில் அவன் இலயித்து இருந்ததால் உன்னைப் பார்த்ததும் மகாலட்சுமி நிற்பது அவன் கண்களுக்கு தெரிந்திருக்கிறது. ஆகையால் அவன் அப்படியே மயங்கி விழுந்து விட்டான் என்றார்.

இதுபோல் எந்தப் பாட்டு நாம் பாடினாலும் அந்தப் பாட்டில் நம்மை ஐக்கியப்படுத்தி இலயித்துப் பாடும் போதுஅதன் பலன் முழுமையாக இருக்கும். மந்திரங்கள் நாம் ஜெபிக்கும் போதும் மந்திரத்தின் தெய்வத்தை நினைத்துக் கொண்டே தன்னை அதில் ஐக்கியப்படுத்தி ஜெபம் செய்வதினால் அந்த மந்திரத்தின் சித்தி விரைவாக கிடைக்கும்.

திருப்பாவை பாடல் 18

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: மதம் கொண்ட வலிமையான யானையை தன்னிடத்தே கொண்டனும் போரில் பின்வாங்காத தோள்வலிமை உடையவனுமான நந்தகோபனின் மருமகளே! நப்பின்னை பிராட்டியே! ((நப்பின்னை என்றாள் கண்ணனுக்கு முறைப்பெண் என்று பொருள்) வாசனை சிந்தும் கூந்தலை உடையவளே! உன் வாசல் கதவைத் திற! கோழிகள் கூவும் ஒலி நாலாபுறத்தில் இருந்தும் கேட்கிறது. குருக்கத்திக் கொடியின் மேல் அமர்ந்து குயில்கள் பாடத் துவங்கி விட்டன. பூப்பந்தைப் போன்ற மென்மையான விரல்களைக் கொண்டவளே! உன் கணவனின் புகழ் பாட நாங்கள் வந்துள்ளோம். அளவுமாறாத நீ உனது செந்தாமரை மலர் போன்ற கைகளில் உள்ள வளையல்களின் ஓசைகள் ஒலிக்கும் கைகளால் மகிழ்ச்சியுடன் வந்து கதவைத் திறந்தால் எங்கள் உள்ளம் மகிழ்ச்சியடையும் என்று அழைக்கிறாள் ஆண்டாள்.

விளக்கம்: பெருமாள் கோயிலுக்குப் போனால் நேராக சுவாமி சன்னதிக்கு போகக்கூடாது. தாயாரை முதலில் சேவிக்க வேண்டும். ஏன் என்றால் நமது வீட்டில் அப்பாவிடம் கோரிக்கை வைத்தால் எதற்கடா அதெல்லாம் என்பார். அதையே அம்மாவிடம் சொல்லி அப்பாவிடம் கேட்கச் சொன்னால் அதே கோரிக்கை பத்தே நிமிடத்தில் நிறைவேறி விடும். இதுபோல் தான் நாராயணனிடம் ஒரு கோரிக்கை வைத்தால் அந்த மாயன் அவ்வளவு எளிதில் ஏற்க மாட்டான். அதையே தாயாரிடம் சொல்லி வைத்து விட்டால் அவனால் தப்பவே முடியாது. கண்ணனின் மனைவி நப்பின்னையை (மகாலட்சுமியை) எழுப்பி கண்ணனை எழுப்புகிறார்கள் பாவை நோன்பிருக்கும் பெண்கள்.

இந்த திருப்பாவைப் பாடலை தினமும் இராமானுஜர் இலயித்து பாடியது போல் பாடி பரந்தாமனை வணங்கினால் வாழ்வில் குன்றாத செல்வமும் குறையாத மகிழ்வும் தந்து நம்மை உய்விப்பான் மாலவன்.

கருடி

கருட வாகனத்தில் பெருமாளை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவியே இல்லை. பெருமாளுக்கு வாகனமாகவும் அவரது கொடியின் சின்னமாகவும் இருப்பவர் கருடாழ்வார். ஆண் வடிவில் மட்டுமே காணப்படும் கருடாழ்வார் ஒரு சில விஷ்ணு ஆலயங்களில் கருடி என்ற பெயரில் பெண் வடிவில் அருள் பாலிக்கிறார். புராணங்கள் நூல்களில் கருடனின் பெண் வடிவம் அல்லது கருடனின் துணைவி கருடீ அல்லது உன்னதி என்று அழைக்கப்படுகிறார். கருட பகவான் சாதாரணமாக இரு பெரிய இறக்கைகளுடன் மனிதனைப் போல வடிவம் கொண்டு வளைந்த மூக்குடன் அழகிய முகத் தோற்றத்தில் பெருமாள் எதிரே நின்ற நிலையில்தான் கோவில்களில் காட்சி தருவார். வாகனமாக திருமாலை எழுந்தருளச் செய்து செல்லும்போது அமர்ந்த நிலையில் காட்சி தருவார்.

திருவாரூரிலிருந்து சுமார் 30 கிமீ தொலைவில் உள்ள மன்னார்குடியில் அமைந்துள்ள இராஜகோபாலசுவாமி கோவிலில் செங்கமலத்தாயார் சன்னிதி அருகே பெருமாள் சன்னிதி எதிரே பெண் வடிவ கருடாழ்வார் காட்சி தருகிறார். இவர் காதணி மூக்கணி மற்றும் புடவை அணிந்த கோலத்தில் மங்களகரமாகக் காட்சி தருகிறார். ஆண் வடிவ கருடன் பெருமாளுக்கு வாகனமாக இருப்பது போல தாயாரின் வாகன சேவைக்கு அடையாளமாக இந்த பெண் வடிவ கருடீ வழிபடப்படுகிறார்.

கம்பராயப்பெருமாள் காசிவிஸ்வநாதர் கோயில்

தேனி மாவட்டத்தில் கம்பம் என்னும் ஊரில் கம்பராயப்பெருமாள் காசிவிஸ்வநாத கோவில் அமைந்துள்ளது. இத்தலம் மும்மூர்த்திகள் தலம் என்று அழைக்கப்படுகிறது. பெருமாளுக்கு தனியாக சன்னதியும் சிவனுக்கு தனியாக சன்னதியும் சிவன் பெருமாள் கோயில்கள் ஒரே வளாகத்தில் தனித்தனி கொடிமரங்களுடன் உள்ளது. பிரம்மா வன்னி மர வடிவில் அருள்பாலிக்கிறார். ஆக மும்மூர்த்திகளும் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார்கள். பெருமாள் மூலவர் கம்பராயப்பெருமாள். தாயார் அலமேலு மங்கை நாச்சியார் தனிச்சன்னதியில் இருக்கிறாள். விமானத்துடன் தரிசிக்கும் வகையில் இவளது சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது. சக்கரத்தாழ்வாருக்கு சன்னதி இருக்கிறது. இவருக்கு பின்புறமுள்ள நரசிம்மர் நான்கு கைகளிலும் சக்கரங்களுடன் காட்சி தருகிறார். சிவன் மூலவர் காசி விஸ்வநாதர். அம்பாள் காசிவிசாலாட்சி. ஆஞ்சநேயர் தட்சணாமூர்த்தி கௌமாரியம்மன் உபசன்னதிகளும் உள்ளன. தலவிருட்சம் வன்னி. தீர்த்தம் சுரபி. மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் திரிதள விமானம் எனப்படும். இத்தலவிநாயகர் சித்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். காசி விநாயகர் காவல் தெய்வம் வடமலை மொட்டையாண்டி ஆகிய தெய்வங்களுக்கும் சன்னதி இருக்கிறது. இங்குள்ள முருகப்பெருமான் சண்முகநாதர் என்றழைக்கப்படுகிறார். ஆறுமுகங்களைக் கொண்ட இவருக்கு முன்புறம் ஐந்து முகங்களும் பின்புறம் ஒரு முகமும் கொண்டு வித்தியாசமான அமைப்பில் அருள்பாலிக்கிறார். சிவன் கோயிலில் காசி விஸ்வநாதர் சதுர வடிவ ஆவுடையாருடன் காட்சி தருகிறார். காசி விசாலாட்சிக்கும் சன்னதி இருக்கிறது. கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தி கமண்டலத்துடன் யோக நிலையில் காட்சி தருகிறார். யோக பட்டை அணிந்திருக்கிறார். சீடர்கள் இல்லாமல் இவரது தலைக்கு மேலே கல்லால மரம் இல்லாமல் இவரது காலுக்கு கீழ் முயலகன் இல்லாமல் இருக்கிறார். காலின் கீழ் நாகம் மட்டும் இருக்கிறது.

அக்காலத்தில் இப்பகுதியை ஆண்ட சிற்றரசர் ஒருவருக்கு சிவனுக்கும் பெருமாளுக்கும் ஒரே இடத்தில் கோயில் கட்ட வேண்டுமென்ற ஆசை இருந்தது. எப்படி இக்கோயிலை கட்டுவது என்று அவருக்கு தெரியவில்லை. ஒருநாள் அவரது கனவில் தோன்றிய பெருமாள் மேற்கு மலைத்தொடர்ச்சியின் அடிவாரத்தில் ஒரு கல் கம்பம் இருப்பதைச் சுட்டிக்காட்டி அவ்விடத்தில் தனது சிலை வடிவம் இருப்பதை உணர்த்தினார். அவரது கனவில் பெருமாள் சொன்னபடி சிலையை எடுத்து வந்து இங்கு பிரதிஷ்டை செய்தார். கம்பம் அருகில் கிடைத்தவர் என்பதால் சுவாமிக்கு கம்பராயப் பெருமாள் என்ற திருநாமம் சூட்டினார். அந்த ஊருக்கும் கம்பம் என்று பெயர் வைத்தார். பின்னர் காசியிலிருந்து லிங்கம் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்து இருவருக்கும் ஒரே நாளில் கும்பாபிஷேகம் செய்வித்தார்.
 
சோழ நாட்டில் உள்ள திருவாலிதிருநகரி என்னும் ஊருக்கு அருகில் உள்ள திருக்குரையலூரில் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு கலியன் என்று பெற்றோர்கள் பெயர் வைத்தார்கள். இவரை நீலன் என்றும் அழைத்தார்கள். இவர் சோழ மன்னனுக்கு படைத்தலைவனாக இருந்தார். ஒருமுறை போர்க் களத்தில் இவருடைய வீரத்தைக் கண்ட அரசன் இவரை சோழ தேசத்தின் ஒரு பகுதியான திருமங்கை என்னும் நாட்டின் மன்னனாக்கினான். அன்று முதல் இவர் திருமங்கை மன்னன் என அழைக்கப்பட்டார். இவர் குமுதவல்லி எனும் மங்கை மீது கொண்ட காதலினால் பெருமாளை வணங்கி வழிபட ஆரம்பித்தார். மங்கையின் விருப்பப்படி திருமங்கை மன்னன் அடியார்களுக்குத் தினமும் அன்னதானம் செய்வதையும் திருக்கோயில் கைங்கரியங்களில் ஈடுபடுவதையும் செய்து வந்தார். காலப்பொழுதில் தன்னை முழுமையாக இதில் ஈடுபடுத்திக் கொண்டு தன் செல்வங்களையும் அரசு செல்வங்களையும் முழுக்க இழந்தார். இறை சேவைக்காக யாசகம் செய்ய ஆரம்பித்தார். அதுவும் போதவில்லை. எனவே திருட ஆரம்பித்து அதில் கிடைக்கும் பொருளை வைத்து அடியார்களுக்கு தினமும் அன்னம் இடுவதையும் திருவரங்கத் திருக்கோயிலுக்கு கைங்கரியங்களையும் செய்து வந்தார். ஒரு நாள் இவர் திருட காத்திருக்கும் இடத்தில் பெருமாள் தன் உருவத்தை மாற்றி இலட்சுமி தேவியுடன் மணக்கோலத்தில் வந்தார். திருமங்கை மன்னன் தன் படையினருடன் அவர்களை மிரட்டி அவர்களது நகைகளை பெற்றுக் கொண்டார். தன் கால் விரல் மோதிரத்தை மட்டும் பெருமாள் கழட்டவில்லை. திருமங்கை மன்னன் மோதிரத்தை கழட்டும்படி கூறியதற்கு என்னால் முடியவில்லை முடிந்தால் நீயே கழட்டிக்கொள் என்றார் பெருமாள். அதேபோல் திருமங்கை மன்னன் குனிந்து தன் பற்களால் விரலைக்கடித்து மோதிரத்தை இழுத்தார். அப்போது பெருமாள் ஆழ்வாரின் காதுகளில் நாராயண மந்திரத்தை உபதேசித்தார். வந்திருப்பது நாராயணன் என்பதை அறிந்த திருமங்கை மன்னன் மண்டியிட்டு பெருமாிடம் சரணடைந்தார். அதன்பின் அவர் ஆழ்வார்களில் ஒருவராகி திருமங்கையாழ்வார் என்று பெயர் பெற்றார்.

திருமங்கையாழ்வாரின் பக்தியையும் அவரது வாழ்க்கையையும் சிறப்பிக்கும் விதமாக இக்கோயிலில் ஆனி மாதம் நடக்கும் பிரம்மோற்ஸவத்தில் திருமங்கையாழ்வார் திருடிய வைபவம் திருவிழாவாக நடத்தப்படுகிறது. அன்று திருமங்கையாழ்வார் திருடுவது போல பாவனை செய்து காவலர்கள் அவரை பிடித்துச் சென்று சுவாமி முன்பு நிறுத்துகின்றனர். அவ்வேளையில் அவர் திருடிய பொருட்களின் பட்டியல் வாசிக்கப்படும். இந்த நிகழ்வுக்கு பட்டோலை வாசித்தல் என்று பெயர். அதன்பின் பெருமாள் திருமங்கையாழ்வாருக்கு காட்சி தரும் நிகழ்வு நடைபெறும். திருவோண நட்சத்திர நாட்களில் பெருமாள் சன்னதியில் ஓண தீபம் ஏற்றப்படும். அர்ஜுனனுக்கு தேரோட்டியாக இருந்ததால் திருவல்லிக்கேணியில் பார்த்த சாரதி கோயில் பெருமாள் மீசையுடன் காட்சி தருகிறார். அது போல் இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியன்று ஒருநாள் மட்டும் சுவாமிக்கு மீசையுடன் அலங்காரம் செய்யப்படுகிறது. திருவிழா நாட்களில் பெருமாள் சிலை கிடைக்கப்பெற்ற இடத்திலுள்ள கம்பத்திற்கு முதல் பூஜை செய்யப்படுகிறது. இவ்வூரில் தேரோட்டம் மூன்று நாட்கள் நடக்கும். ஆனி மாத சித்திரை நட்சத்திரத்தில் சக்கரத்தாழ்வாருக்கு விசேஷ ஹோமத்துடன் பூஜை நடக்கிறது. பெருமாள் கோயிலில் கிருஷ்ணஜெயந்தி நவராத்திரி அனுமன் ஜெயந்தி ராமநவமி ஆகிய விழாக்களும் சிவனுக்கு சிவராத்திரி ஆடிப்பெருக்கு ஐப்பசி அன்னாபிஷேகம் ஆருத்ரா தரிசனம் ஆகிய விழாக்கள் நடைபெறுகிறது. இந்த கோயிலை விஜயநகரப் பேரரசு காலத்தில் விஸ்வநாத நாயக்கர் புதுப்பித்து கட்டியிருக்கிறார்.

ஸ்ரீ மண்ணுடையார்

இந்திய கோயில்களில் தங்கமும் விலை மதிக்க முடியாத பொருளும் நிறைய உள்ளது என்று வெளி நாட்டில் இருந்து கொள்ளையடிக்க வந்த கும்பல் ஊர் ஊராகச் சென்று கோயில்களை இடித்து இறைவனது திருமேனிகளை உடைத்தும் பஞ்ச லோக சிலைகளையும் கோயில் சொத்துக்களையும் திருடிக் கொண்டு வந்தது. இப்படி வந்தவர்கள் தமிழகத்தின் உப்பிலியப்பன் கோயிலுக்கும் வந்தார்கள். மண்பாண்டம் செய்யும் குயவர் ஒருவர் இறைவனது திருமேனியைக் காக்க ஸ்ரீ தாயார் ஸ்ரீ பெருமாள் திருமேனிகளை சூளையில் மறைத்து வைத்து சூளையைக் கொளுத்தி விட்டார். கொள்ளையடிக்க வந்த கும்பல் இது என்ன என்று கேட்ட போது இது மண் பாண்டங்கள் செய்யும் சூளை என்று சொன்னார். வந்தவர்கள் சென்ற பின் சூளையின் நெருப்பை அணைத்து திருமேனிகளை மீண்டும் பிரதிஷ்டை செய்ய வைத்தார். இந்தக் குயவருடைய கைங்கர்யத்திற்காக அவருக்கு ஸ்ரீ மண்ணுடையார் என்ற திரு நாமத்தை கொடுத்து பெருமாளை எப்போதும் அவர் வணங்கும்படியான சிலை செய்து பெருமாள் சன்னதிக்கு நேரே பிரதிஷ்டை செய்யப்பட்டது.

ராம நாமம்

ஒரு பேரரசர் இருந்தார். அவரது ராஜ்ஜூயத்தின் கீழ் பல சிற்றரசுகள் இருந்தன. அவர் தன் மந்திரியுடன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றார். அரசருக்கு மந்திரி எப்போதும் தன்னுடன் இருக்க வேண்டும் என்று விரும்புவார். அதனால் அவர் எங்கு சென்றாலும் மந்திரியையும் உடனே அழைத்துச் செல்வார். மந்திரிக்கு வேட்டையாடுவதில் விருப்பமில்லை. ஆனாலும் அரசரின் உத்தரவாதலால் அவருடன் சென்றார். மந்திரி மகா பக்திமான். செல்லும் இடமெல்லாம் ராம நாமத்தை பக்தியுடன் சொல்லிக் கொண்டே இருந்தார். காட்டில் இருவரும் நீண்ட தூரம் அடர்ந்த காட்டிற்குள் சென்றும் மிருகங்கள் கண்ணில் படவில்லை. அலைச்சலில் இருவரும் மிகவும் களைத்துப் போனார்கள். கொண்டு வந்த நீரும் காலியானது. இருவருக்கும் பசி ஆரம்பித்தது. அப்போது தூரத்தில் சிறிய குடிசை ஒன்று தெரிந்தது.

அரசர் மந்திரியிடம் நாம் இருவரும் ரொம்ப களைப்பா பசியோட இருக்கோம். அந்த குடிசையிலே போய் ஏதாவது சாப்பிட இருக்கான்னு கேட்டுப் பார்க்கலாம் வா என்றார். மந்திரி அரசரிடம் எனக்கும் பசிதான் மிகவும் களைப்புதான். ஆனால் நான் அங்கு வரவில்லை. இப்போது சூரியன் மறையும் நேரம் நான் ராம நாமம் ஜெபிக்கும் நேரம். ஆகவே நான் இங்கேயே இந்த மரத்தடியில் ராம நாமத்தை ஜெபித்துக் கொண்டிருக்கிறேன். அது என்னுடைய களைப்பையும் பசியையும் ஆற்றிடும். நீங்கள் சென்று பசியாறி வாருங்கள் என்றார். அரசருக்கு மந்திரி மேல் கோபமாக வந்தது. இருந்தாலும் முதல்லே பசிக்கு ஏதாவது கிடைக்குதான்னு பார்க்கலாம் என்று அந்த குடிசைக்கு நடந்து போனார். அது ரொம்ப ஏழ்மையான வீடு. அங்கிருந்த பாட்டியிடம் அரசன் தான் யார் என்றும் தனக்கு உணவு வேண்டும் என்றும் பாட்டியிடம் கேட்டார். அன்று காலையில் சமைத்த உணவை அரசருக்கு பாட்டி கொடுத்தாள். அரசர் திருப்தியாக தனது பசியாரும் வரை சாப்பிட்டார். மீண்டும் பாட்டியை அழைத்த அரசன் இந்த காட்டிற்கு தன்னுடன் மந்திரியும் என்னுடன் வந்தார். அவரும் பசியுடன் மரத்தடியில் இருப்பதால் அவருக்கும் உணவு கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். உணவு தீர்ந்து விட்டதாகவும் நான் உடனடியாக சமைத்து கொடுக்கிறேன் என்று சொல்லிய பாட்டி விரைவாக அறுசுவை உணவையும் சமைத்து கொடுத்தார்.

சம்மோகன கிருஷ்ணர்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயிலில் மோகனூரில் லலிதையும் கிருஷ்ணனும் இணைந்த கோலமான சம்மோகன கிருஷ்ணர் உருவம் உள்ளது. கிருஷ்ணர் தனது பாதி உடலை ராதைக்கு அளித்து அர்த்தநாரீ கிருஷ்ணராக காட்சியளிக்கிறார்.

மூலவர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர். சுயம்பு மூர்த்தியாக வலது புறம் ஸ்ரீதேவியுடனும் இடதுபுறம் பூமா தேவியுடனும் நின்ற திருக்கோலத்தில் வேதஸ்ருகங்க விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். உற்சவர் சீனிவாசர் பொதுவாக உற்சவமூர்த்தியின் மார்பில் மகாலட்சுமியின் உருவம் பொறிக்கப்படடிருக்கும். ஆனால் இங்குள்ள உற்சவர் சீனிவாசரின் மார்பில் முக்கோணம் போன்ற வடிவமும் அதன் மத்தியில் மகாலட்சுமி ரேகையும் உள்ளது. அம்மன்/தாயார் பத்மாவதி. மகா மண்டபத்தின் வலதுபுற விளிம்பில் தனிச்சன்னதியில் சிவ பார்வதியின் அர்த்தநாரீஸ்வரர் கோலத்தைப் போல லலிதையும் கிருஷ்ணரும் இணைந்து கோபால சுந்தரி எனும் சம்மோகன கிருஷ்ணராக அருள்பாலித்து வருகின்றார். தல விருட்சம் வில்வம். தீர்த்தம் காவிரி. புராணபெயர் மோகினியூர். காவிரியின் கரையில் அமைந்த கோயில் இது. காவிரி இங்கு வடக்கிருந்து தெற்கு நோக்கி பாய்கிறது. காவிரியம்மனுக்கும் தனிசன்னதி இருக்கிறது. ஆடிப்பெருக்கு மற்றும் ஐப்பசி மாதத்தில் இவளுக்கு காவிரி தீர்த்தத்தால் அபிஷேகம் நடக்கிறது. சுவாமி சன்னதிக்கு பின்புறம் தன்வந்திரிக்கு சன்னதி உள்ளது. தன்வந்திரிக்கு மூலிகைகள் கலந்த சூர்ணம் பிரதான நைவேத்யமாக படைக்கப்பட்டு சுக்குப்பொடி நாட்டுச்சர்க்கரை நல்லெண்ணெய் மற்றும் மூலிகைள் சேர்ந்த தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இச்சன்னதியின் முன் மண்டப மேற்கூரையில் நவக்கிரகங்கள் மரச்சிற்பமாக இருக்கிறது. எதிரே கோஷ்டத்தில் லட்சுமி நரசிம்மர் இருக்கிறார். சுவாமி கோஷ்டத்தில் லட்சுமி ஹயக்ரீவர் இருக்கிறார். பௌர்ணமி மற்றும் வியாழக்கிழமைகளில் ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. இவருக்கு எதிரே மேதா சரஸ்வதி காட்சி தருகிறாள். இவளிடம் வீணை கிடையாது.

கோயில் முன் மண்டபத்தில் நவநீதகிருஷ்ணர் இரு கரங்களிலும் வெண்ணெய் வைத்தபடி காட்சி தருகிறார். உடன் பாமா ருக்மணி உள்ளனர். ஆண்டாள் சக்கரத்தாழ்வாருக்கு சன்னதி இருக்கிறது. கோயிலின் அக்னி மூலையில் கிழக்கு நோக்கி பதினாறு திருக்கரங்களுடன் ஸ்ரீசக்கரத்தாழ்வார் காட்சி கொடுக்கிறார். கோயில் வளாகத்தில் வன்னி மரத்தடியில் விநாயகரும் ஆஞ்சநேயரும் இருக்கின்றனர். கோயிலுக்கு எதிரே ஆஞ்சநேயருக்கு மற்றொரு சன்னதி இருக்கிறது. கருடாழ்வார் அமைந்திருக்கும் சோபன மண்டபத்தின் வடபுறம் பரமபத வாசல். அதன் நேர் எதிரே திருப்பதி வேங்கடவனின் சுதைச் சிற்ப உருவம் தாங்கிய உற்சவர் அலங்கார மண்டபம் உள்ளது. முதல் பிராகார மண்டபத் தூண்களில் ஆழ்வார்களின் உருவங்கள் சுதைச் சிற்ப வடிவில் உள்ளது. அதன் கீழே அவரவர் பாடிய பாசுரங்களில் நான்கு வரிகள் எழுதப்பட்டுள்ளது.

இந்த ஊரில் வசித்த பக்தர் ஒருவர் திருப்பதி வெங்கடாஜலபதி மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். வருடம் தவறாமல் திருப்பதி கோயிலுக்கு சென்று வருவார். ஒரு சமயம் அவருக்கு வாத நோய் ஏற்பட்டதால் திருப்பதிக்கு செல்ல முடியவில்லை. வருத்தமடைந்த அவர் காவிரியில் மூழ்கி உயிர் துறக்க நினைத்தார். தள்ளாடியபடி நடந்து சென்று காவிரிக் கரையை அடைந்தார். அப்போது கரையில் இருந்த ஒரு புற்றில் இருந்து நாகம் வெளிவந்தது. பாம்பைக் பார்த்த பக்தர் தற்கொலை எண்ணத்தை கைவிட்டு வீடு திரும்பி விட்டார். அன்றிரவில் அவரது கனவில் தோன்றிய திருமால் பாம்பு வெளிப்பட்ட புற்றுக்குள் சிலை வடிவில் இருப்பதாக கூறினார். காலை எழுந்ததும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பக்தர் உடனே அங்கு சென்று புற்றை உடைத்து பார்த்த போது உள்ளே சுவாமி சிலை இருந்தது. பின்பு அந்த இடத்திலேயே ஸ்ரீதேவி,பூதேவி சமேதராக மணக்கோலத்தில் பிரதிஷ்டை செய்தனர். சுவாமிக்கு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் என்று பெயர் சூட்டப்பட்டது. இதுதவிர பத்மாவதி தாயாருக்கு தனி சன்னதி கட்டப்பட்டது.

திருப்பதி வெங்கடாஜலபதியின் அருளால் கோயில் உருவாக்கப்பட்டதால் நவராத்திரியின்போது வரும் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டும் திருப்பதியில் ஓர் நாள் என்னும் உற்சவம் நடக்கிறது. அன்று அதிகாலை நடை திறக்கப்படுவதில் இருந்து இரவு வரையில் அனைத்து பூஜைகளும் திருப்பதியில் நடக்கும் முறையிலேயே செய்யப்படுகிறது. திருப்பதியில் வெங்கடாஜபதிக்கு அலங்காரம் செய்யப்படுவது போலவே அன்று சுவாமிக்கு அலங்காரம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு திருவோண நட்சத்தர தினத்தன்று மாலையில் சத்யநாராயண பூஜை நடக்கிறது. அப்போது சுவாமிக்கு மட்டைத்தேங்காய் படைத்து வழிபடப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் திருவோண நட்சத்திரத்தில் சுவாமி கருடவாகனத்தில் எழுந்தருளுகிறார்.

குரு பக்தி

திருப்பதியில் அடிவாரத்தில் சீடர்கள் எழுப்பும் சந்தேகங்களுக்கு தகுந்த விளக்கங்களை அளித்துக் கொண்டிருந்தார் ஸ்ரீராமானுஜர். அப்போது மோர் விற்றுக் கொண்டிருந்த ஒரு பெண்மணி அந்த வழியாக சென்றாள். சீடர்களுக்கு மோர் சாப்பிட வேண்டும் என்று ஆசை தோன்றியது. ஆனால் குருநாதர் பாடம் நடத்திக் கொண்டிருக்கிற இந்த வேளையில் மோர் விற்பவளைக் கூப்பிட்டால் பாடத்தின் மேல் கவனம் இல்லாதது போல் ஆகிவிடும் என்பதால் மோர் ஆசையைத் துறந்து பாடத்தில் கருத்தாக இருந்தார்கள். சீடர்களின் கூட்டத்தை பார்த்ததும் நல்ல வியாபாரம் ஆகிவிடும் என்று தீர்மானித்து மோர்க்காரப் பெண்மணி இந்த இடத்தில் பானையை இறக்கி வைத்து ராமானுஜருக்கு வணக்கத்தை செலுத்தினாள். ராமானுஜர் சீடர்களின் ஆசையை பார்த்து கண்ணசைக்க ஆசையில் இருந்த சீடர்களுக்கு மோர் பானையைப் பார்த்ததும் எனக்கு எனக்கு என்று கேட்டு வாங்கிக் குடித்தனர். எல்லோருக்கும் மோர் கொடுத்து முடித்ததும் நிறைந்த மனத்துடன் ராமானுஜரை பார்த்தாள். குரு பக்தியின் பிடியில் அகப்பட்டுக் கொண்ட காரணத்தால் மோருக்கான காசை கேட்டுப்பெற வேண்டும் என்பதையும் மறந்து நின்றாள். ராமானுஜர் அந்தப் பெண்மணியைப் பார்த்து அம்மா நீ எங்களுக்குக் கொடுத்த மோரின் விலை என்ன? என்று கேட்டார். ராமானுஜரை நமஸ்கரித்த அந்தப் பெண் மோருக்கு பணம் வேண்டாம் சாமி. அதை வைத்துக் கொண்டு நான் என்ன செய்யப் போறேன்? அதற்கு பதிலாக பெருமாள் இருக்கக் கூடிய பரமபதத்தை அடையணும் மோட்சம் கிடைக்கணும். அதுக்கு வழியைக் காட்டுங்க. மகிழ்ச்சியுடன் செல்வேன் என்றாள்.

ராமானுஜர் ஆச்சரியத்துடன் பார்த்தார். ஆசார நியமங்களோ சாஸ்திர ஞானமோ அறியாத அவளுக்குள் மோட்சம் வேண்டும் என்கிற ஆசை தோன்றியது ஆச்சரியம். இப்படி ஒரு கோரிக்கையை அவள் வைப்பாள் என்றும் அவர் எதிர்பார்க்கவில்லை. ஒரு சில நிமிட இடைவெளிக்குப் பிறகு கவலைப்படாதம்மா உன்னோட நல்ல குணத்துக்கு நிச்சயம் மோட்சம்தான் கிடைக்கும். மகழ்ச்சியுடன் சென்று வா என்றார். அந்தப் பெண்மணி விடவில்லை. உங்கள் வாக்கு அப்படியே பலிக்கட்டும் சாமி. ஆனா அந்த மோட்சம் எனக்குக் கிடைக்கறதுக்கு ஒரு வழியைக் காட்டுங்க. நான் அந்த வழியில் செல்கிறேன் என்றாள். ராமானுஜர் சிரித்தார். அம்மா நீ நினைப்பதுபோல் மோட்சத்துக்கு ஒரு வழியைக் காட்டுவதோ மோட்சம் வழங்குவதற்கு உண்டான தகுதியோ எனக்கோ இங்கு கூடி இருக்கின்ற சீடர்களுக்கோ இல்லை. மேலே திருமலையில் ஏழுமலைக்குச் சொந்தக்காரன் ஒருவர் இருக்கிறார் அவரிடம் போய்க் கேள். உனக்கு வேண்டியதை எல்லாம் அருளுகின்ற தகுதி அவருக்குத் தான் உண்டு என்றார். இதற்குப் பிறகும் அந்த மோர்க்காரப் பெண்மணி நகர்கிற வழியாக இல்லை. சாமி மேலே இருக்கிற ஏழுமலையான் கிட்ட போய் எத்தனையோ தடவை மோட்சம் வேணும் மோட்சம் வேணும்னு கேட்டுப் பாத்துட்டேன். ஆனா அங்கே இருக்கிற பெருமாள் வாயைத் திறந்து எதுவும் பதில் சொல்லவில்லையே என்றாள்.

பெருமாளுக்கு நிறைய வேலை இருக்கும். அதனால் இதை ஒரு குறையா சொல்லிக் கொண்டு இருக்காதே. உன் மனதில் படுவதை நீ கேட்க வேண்டும் என்று நினைப்பதை அவரிடம் கேட்டுக் கொண்டே இரு. ஒருநாள் நிச்சயம் உனது பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார் என்றார் ராமானுஜர். ராமானுஜரின் வார்த்தையை கேட்டதும் உங்களை நம்புகிறேன். உங்களது வார்த்தையை நம்பகிறேன். உங்களைப் பார்த்த பிறகு எனக்கு நம்பிக்கை வந்திருக்கிறது என்று உற்சாகத்துடன் கூறிவிட்டு சாமி எனக்கு மோட்சம் தர வேண்டும் என்று சொல்லி பெருமாள்கிட்ட சிபாரிசு செய்து நீங்கள் ஒரு ஓலை எழுதிக் கொடுங்கள் என்றாள். உங்களை மாதிரி பெரியவங்க ஓலை கொடுத்தா இருக்கிற வேலையை எல்லாம் விட்டுட்டு பெருமாள் எனக்குப் பதில் சொல்வார் என்று நம்புகிறேன் ஆகவே கொடுங்கள் என்று கேட்டாள். அவள் அபரிமிதமான நம்பிக்கையோடு கேட்பதால் அவள் கேட்பதை மறுக்க இயலாது என்று உணர்ந்த ராமானுஜர் ஒரு சீடரிடம் ஓலையும் எழுத்தாணியும் கொண்டு வரச் சொன்னார். அதைக் கேட்டதும் சீடர்களுக்கு வியப்பு தாங்க முடியவில்லை என்றாலும் அவர் கேட்டதை எடுத்துக் கொண்டு வந்து தந்தனர். உண்மையாகவே திருமலை பெருமாளுக்கு சிபாரிசு செய்து குருநாதர் ஓலை எழுதப் போகிறாரா இல்லை அந்தப் பெண்மணியை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படி ஏதேனும் செய்கிறாரா? என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாகி ராமானுஜரைச் சுற்றி அமர்ந்து கவனிக்கலானார்கள். மேலே அண்ணாந்து திருமலையைப் பார்த்து இருகரம் கூப்பிவிட்டு ஓலையில் பெறுநர் முகவரியை எழுதும் இடத்தில் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் திருமலை என்று குறிப்பிட்டுவிட்டு பெண்மணியின் கோரிக்கையை எழுதத் தொடங்கினார் ராமானுஜர். எழுதி முடித்த பின் ஓலையின் கீழே தன் கையெழுத்தையும் போட்டு அதை அந்தப் பெண்மணியிடம் கொடுத்தார்.

ராமானுஜர் எழுதிக் கொடுத்த ஓலையில் எழுதப்பட்டிருந்த வாசகங்களை சீடர்களும் படித்துப் பார்த்தனர். மோர் விற்பனை செய்யும் பெண்ணுக்கு மோட்சம் கிடைக்க அனுக்ரகம் செய் என்று சிபாரிசு செய்து ஓலையில் எழுதப்பட்டிருந்தது. ஓலையை வாங்கிய அடுத்த விநாடி அந்தப் பெண்மணி ஆனந்தமாக திருமலையை நோக்கிப் புறப்பட்டாள். மலை ஏறி பெருமாள் சன்னிதிக்குச் சென்று அங்குள்ள அர்ச்சகர்களிடம் கொடுத்தாள். பெண்மணியை மேலும் கீழும் பார்த்து இது என்ன ஓலை? என்று குழப்பத்துடன் கேட்டனர் அர்ச்சகர்கள். அவர்களிடம் முழு விவரத்தையும் சொன்னாள் அவள். ராமானுஜர் எழுதிக் கொடுத்த ஓலை என்று அறிந்ததும் மறுப்பு ஏதும் சொல்லாமல் அதைக்கொண்டு போய் பெருமாளின் முன்னால் நீட்டினர் அர்ச்சகர். உடனே தம் வலக் கையை நீட்டி அதை வாங்கிக் கொண்டார் பெருமாள். பிறகு உனக்கு மோட்சம் தந்தேன் என்று அந்தப் பெண்ணைப் பார்த்துப் பெருமாள் அசிரீரீயாக அருளினார். அடுத்த கணம் வானில் இருந்து பிரகாசமாக ஒரு புஷ்பக விமானம் வந்தது. அதில் இருந்து விஷ்ணு தூதர்கள் இறங்கினர்கள். மோர் விற்கும் பெண்மனியை தங்களுடன் ஏற்றிக் கொண்டு வைகுந்தம் புறப்பட்டார்கள்.

தெய்வ பக்தி சாதிக்காததை குரு பக்தி சாதிக்கும்.

அவராதங்களில் அழகு நரசம்மர்

ஆழ்வார்களிலே நான்காவதாக உள்ள திருமழிசை ஆழ்வார் தன்னுடைய பாசுரங்களில் திருமாலின் அவதாரங்களுக்குள் அழகன் யார் என்று ஒரு போட்டி வைத்தார்.

1 மச்ச அவதாரம்: ஒரு பெரிய வெள்ளத்தில் இருந்து மனு என்ற முதல் மனிதரைக் காப்பாற்ற விஷ்ணு மீனாக அவதரித்தார்.
2 கூர்ம அவதாரம்: தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெற கடலைக் கடைந்தபோது மந்தர மலையின் சுமையாக விஷ்ணு ஆமையாக அவதரித்தார்.
3 வராக அவதாரம்: பூமியை கடலுக்குள் இழுத்துச் சென்ற போது பூமியை மீட்க விஷ்ணு பன்றியின் உருவத்தில் வந்தார்.
4 நரசிம்ம அவதாரம்: அரக்கன் இரண்யகசிபுவை வதம் செய்ய விஷ்ணு மனிதன் மற்றும் சிங்கத்தின் உருவத்தில் அவதரித்தார்.
5 வாமன அவதாரம்: திரிவிக்ரமன் என்று அழைக்கப்படும் வாமன அவதாரத்தில் விஷ்ணு ஒரு குள்ள பிராமணராக அவதரித்து மகாபலி சக்கரவர்த்தியின் அகங்காரத்தை அடக்கினார்.
6 பரசுராம அவதாரம்: பிராமணராக அவதரித்து பூமியில் க்ஷத்திரியர்களின் (ஆட்சியாளர்கள்) அட்டூழியங்களை அடக்கினார்.
7 இராம அவதாரம்: திரேதா யுகத்தில் தர்மத்தின் வடிவமாக அவதரித்த விஷ்ணு ராவணனை வென்று அயோத்தி அரசராக ஆட்சி செய்தார்.
8 பலராம அவதாரம்: துவாபர யுகத்தில் கிருஷ்ணரின் மூத்த சகோதரராக பலராமன் அவதரித்தார். அவர் விவசாயம் மற்றும் விவசாயிகளின் பாதுகாவலராக கருதப்படுகிறார்.
9 கிருஷ்ண அவதாரம்: துவாபர யுகத்தில் அவதரித்து பகவத் கீதையை போதித்தவர்.
10 கல்கி அவதாரம்: கலியுகம் முடியும் போது தர்மத்தை நிலைநாட்ட அவதரிக்கும் அவதாரம்.

இந்த பத்து அவதாரங்களையும் தன்னுடைய கண் முன் நிறுத்தினார். மச்ச கூர்ம வராக அவதாரங்கள் மிருக வடிவங்களில் இருந்தமையால் அவர்களை முதலில் நிராகரித்து விட்டார். மகாபலியிடம் சிறிய காலைக் காட்டி மூன்றடி நிலம் கேட்டு விட்டுப் பெரிய காலால் மூவுலகையும் அளந்தவர் நீங்கள். அதுபோலப் போட்டியிலும் நீங்கள் உருவத்தைத் திடீரென மாற்றிக் கொள்ள வாய்ப்புண்டு என்று அவரையும் நிராகரித்து விட்டார். பரசுராமர் எப்போதும் கையில் மழுவுடனும் கோபம் நிறைந்த முகத்துடனும் இருப்பதால் அவரையும் நிராகரித்தார். பலராமன் கண்ணன் இருவரையும் பார்த்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் போட்டியில் பங்கேற்கக் கூடாது. யாராவது ஒருவர் மட்டும் இருங்கள் என்று கூறினார். தம்பிக்காக பலராமன் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். கல்கி பகவான் இன்னும் அவதாரமே எடுக்காததால் நீங்கள் அவதரித்தபின் அடுத்த போட்டியில் வந்து பங்கேற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லி அவரையும் நிராகரித்து விட்டார். ராமன் அனைத்து நற்பண்புகளும் நிறைந்த பரிபூர்ணமான மனிதனாக வாழ்ந்து காட்டினான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மனிதனாகவே வாழ்ந்ததால் ஒரு வண்ணானின் பேச்சுக்காக தன் தேவியையே துறந்தார். அதனால் அவரையும் நிராகரித்தார். கண்ணன் கோபிகைகளை எல்லாம் மயக்கிய அழகன் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த கோபிகைகளையும் விரக வேதனையில் தவிக்க விட்டுச் சென்றபடியால் அவரையும் நிராகரித்து விட்டார். இறுதியில் நரசிம்மருக்குத் தலை சிங்கம் போல இருந்தாலும் உடல் மனித வடிவில் இருப்பதாலும் ஆபத்தில் யார் நமக்கு உதவி செய்கிறார்களோ அவர்கள்தான் மிகவும் அழகாக நம் கண்களுக்குத் தெரிவார்கள். பிரகலாதன் போன்ற பக்தர்கள் ஆபத்தில் தவிக்கும் போது உடனே ஓடோடி வந்து காக்கக்கூடிய பெருமாள் நரசிம்மர். எனவே அவர்தான் அழகு என்று கூறினார்.

பெருமாள் திருமேனியில் உள்ள அனைத்து அங்கங்களும் அழகாக இருந்தாலும் துன்பங்கள் நேரும்போது பெருமாளின் திருவடிகளைத்தான் நினைத்துக் கொள்கின்ற போது அந்தத் திருவடிகள்தான் ஆபத்திலிருந்து நம்மைக் காக்து மோட்சத்தை கொடுக்கிறது. எனவே அவைதாம் மிகவும் அழகு அவ்வாறே ஆபத்தில் ஓடோடி வந்து காப்பவரான நரசிம்மர்தான் அவதாரங்களுக்குள் அழகானவர். இந்தக் கருத்தைத் திருமழிசைப் பிரான் தாம் இயற்றிய நான்முகன் திருவந்தாதி என்ற நூலின் இருபத்திரண்டாவது பாசுரத்தில் அருளிச் செய்துள்ளார்.

அழகியான் தானே அரி உருவன் தானே
பழகியான் தாளே பணிமின் குழவியாய்த்தான்
ஏழுலகுக்கும் தன்மைக்கும் தன்மையனே
மீனாய் உயிரளிக்கும் வித்து.

என்ற பாசுரத்தில் அரி எனப்படும் சிங்க வடிவில் வந்த நரசிம்மரே அழகானவர் என்று காட்டுகிறார். அதனால்தான் அழகிய ராமன் அழகிய கண்ணன் முதலிய பெயர்களை நாம் கேள்விப்பட்டதில்லை. ஆனால் நரசிம்மர் மட்டும் அழகிய சிங்கர் என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இதனால் நரசிம்மருக்கு ஸ்ரீமான் என்ற திருநாமமும் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீமான் என்றால் அழகானவன் என்று பொருள். மற்ற அனைத்துப் பெருமாள்களுக்கும் மகாலட்சுமி திருமார்பில் அமர்ந்திருக்க நரசிம்மருக்கு மட்டும் ஏன் மடியில் அமர்ந்திருக்கிறாள்? ஸ்ரீமான் நரசிம்மரின் அழகிய முகத்தை திருமார்பில் இருந்தபடி காணமுடியாது. மடியில் அமர்ந்தால் காண முடியும் என்று ஸ்ரீமானின் மடியில் ஸ்ரீதேவியாகிய அன்னை அமர்ந்திருந்து அவர் அழகை ஒவ்வொரு நொடியும் கண்டு லயிக்கிறாள்.

வீணையுடன் அனுமன்

திரிலோக சஞ்சாரியான நாரதருக்கு வீணை இசைப்பதில் தனக்கு நிகர் எவரும் இல்லை என்ற கர்வம். தேவலோகத்தில் வீணை இசை வாசிப்பதில் சிறந்தவர்கள் நாரதர் மற்றும் தும்புரு. தும்புரு கைலாயத்திலும் நாரதர் வைகுண்டத்திலும் தம்முடைய திறமையை வெளிப்படுத்தி வந்தனர். ஒரு சமயம் இவர்களுக்குள் தம்முள் யார் சிறந்தவர் என்ற சர்ச்சை வந்தது. இருவரும் தீர்மானித்து கைலாயம் நோக்கி புறப்பட்டனர். அப்படி செல்லும் வழியில் ஓர் அடர்ந்த வனம் குறுக்கிட்டது. அந்த வனத்தில் இருந்து ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் என்ற ராம நாமம் ஒலித்தது. இது என்ன இந்த வனத்தில் ராமநாம ஜெபம் கேட்கிறதே? உள்ளே சென்று பார்ப்போம் என்று இருவரும் வனத்தினுள் நுழைந்தனர். அங்கே ஆஞ்சநேயர் ஒரு சிறு குன்றின் மீது அமர்ந்து ராமநாம ஜெபம் செய்து கொண்டிருந்தார். இருவரும் அனுமனை வணங்கினர். யாழிசை வல்லுனர்களே இருவரும் சேர்ந்து எங்கே பயணிக்கிறீர்கள்? என்று கேட்டார் அனுமன். உடனே நாரதரும் தும்புருவும் தங்களுக்குள் ஏற்பட்ட போட்டியையும் சிவனை தரிசித்து தீர்வு காண இருப்பதையும் கூறினர். யாழ் இசை வல்லுநர்களுக்குள் யார் இசை சிறந்தது என்ற போட்டியா? சரியான போட்டிதான் எனக்காக உங்கள் இசையை கொஞ்சம் வாசித்துக் காட்ட முடியுமா? என்று கேட்டார் அனுமன். இருவரும் தங்கள் யாழில் இசை மீட்டிக் காட்டினர். அருமையாக வாசிக்கிறீர்கள் நானும் கொஞ்சம் உங்கள் யாழை மீட்டட்டுமா? என்று அவர்களிடமிருந்த வீணையை வாங்கி வாசிக்கத் தொடங்கினார் அனுமன்.

அனுமன் வாசிக்க துவங்கியதும் அண்ட சராசரமும் அப்படியே உறைந்து நின்றுவிட்டது. நதிகளில் தண்ணீர் ஓடவில்லை. மரங்கள் கிளைகளை அசைக்கவில்லை. பறவைகள் அப்படியே பறந்தபடி நின்றன. உலகமே அந்த இசையில் மயங்கி அப்படியே நின்றுவிட்டது. அனுமன் அமர்ந்திருந்த அந்தப் பாறை அப்படியே உருகி வழிந்து ஓடத் துவங்கியது. நாரதரும் தும்புருவும் வெட்கம் அடைந்தனர். ஏதோ வாசித்து இதில் யார் சிறந்தவர் என்று போட்டியிட்டு கொள்கிறோமே? கல்லையும் கரைய வைக்கிறதே அனுமனின் இசை இவரல்லவோ சிறந்தவர். இவர் இசையல்லவோ சிறந்தது. இத்தனை திறமை இருந்தும் அடக்கமுடன் வாழும் இவரை பார்த்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தனர். சிறிது நேரத்தில் அனுமன் இசைப்பதை நிறுத்தி யாழை பாறையில் வைத்தார். உறுகிய பாறைக்குழம்பு கெட்டிபட்டு அதில் யாழ் ஒட்டிக்கொண்டது. இப்போது அனுமன் சொன்னார். நாரத தும்புரு முனிவர்களே இதோ இந்த பாறையில் உங்கள் யாழ் ஒட்டிக் கொண்டு விட்டது. நீங்கள் மீண்டும் இசை வாசியுங்கள். உங்களில் யார் இசைக்கு இந்த பாறை உருகுகிறதோ அவரே சிறந்தவர். அவர் இந்த வீணையை எடுத்துக் கொள்ளலாம். இதற்குப் போய் எதற்கு சிவனை தொந்தரவு செய்ய வேண்டும் என்றார். இரு முனிவர்களும் அனுமனின் பாதம் பணிந்தனர். சுவாமி உங்கள் இசை எங்கள் கண்களை திறந்து விட்டது. கல்லையும் கரைய வைக்கும் திறமை எங்களுக்கு இல்லை. எல்லாம் இறைவன் அருள். இறைவனே எல்லாவற்றையும் தருகிறார். எங்கள் இருவருக்குள்ளும் இருப்பது இறைவனே. இனி எங்களுக்குள் போட்டி வராது. எங்கள் கர்வம் ஒழிந்தது என்று வணங்கி நின்றனர். அனுமன் மீண்டும் இசைக்க பாறை இளகி யாழ் கிடைத்தது. அதை இருவரிடம் கொடுத்த அனுமன் முனிவர்களே வித்யா கர்வம் கூடாது. கர்வம் நானே பெரியவன் என்ற பெருமையை கொடுப்பது போல் தெரியும். ஆனால் இறுதியில் அழித்து விடும். அடக்கமே சிறந்த குணம். இதை உணர்ந்து இறைவனை பாடி வாருங்கள் என்று கூறினார்.

அனுமன் வாசிப்பில் ஒவ்வொரு ஸ்வரமும் ராம் ராம் என்று சொல்லும். அவர் வீணையுடன் ஒன்றி வாசிக்க அந்த நாதத்தில் ஸ்ரீ ராமனும் ஒன்றி விடுவார்.  இவருக்குப் பிடித்த ராகத்தின் பெயர் ஹனுமத்தோடி என்று புராண வரலாற்றில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இடம் குடந்தை ராமஸ்வாமி கோவிலில் ஸ்ரீ அனுமான் வீணையுடன் காட்சி தருகின்றார்.

கார்போதக கடல்

விஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக அவதாரம் ஆகும். பிரம்மனிடம் இருந்து வரம் பெற்ற இரண்யாட்சன் பூமியில் பல்வேறு பாவச் செயல்களைச் செய்தான். இதனால் பூமி கீழ் நோக்கிச் செல்லத் தொடங்கியது. இதனை மீட்டு வெளிக் கொண்டு வருவதற்காக விஷ்ணு வராக அவதாரமாகத் தோன்றினார். விஷ்ணு கார்போதக கடலில் இருந்து இரண்யாட்சனுடன் பல ஆண்டுகள் போர் புரிந்து வென்றார்.

வராக அவதாரம் எடுத்த விஷ்ணுவின் கையில் தூக்கியுள்ள பூமிக்கு உள்ளேதான் கடல் உள்ளது. அப்படி என்றால் எந்த கடலில் இருந்து விஷ்ணு போர் புரிந்தார்?

அந்த கடலுக்கு கார்போதக கடல் என்று பெயர். கார்போதக என்றால் ஒளி உட்புக முடியாத என்று பொருள். கார்போதக கடல் என்பது விண்வெளியில் உள்ள கரும்பொருள் கடல். அறிவியலின் படி அதற்கு Ocean Of Dark Matter என்று சொல்வார்கள். அதாவது ஒளியை பிரதிபலிக்காத கண்களால் காணமுடியாத விண்வெளி பருப்பொருட்களின் கூட்டம் என்று பெயர்.