ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 134

கேள்வி: முருகனின் படை வீடுகளில் பழனியை சேர்க்காமல் ஆவினன்குடியை மட்டும் சேர்க்கிறார்களே அது பற்றி

அது மட்டுமா ஆவினன் குடி? ஆ என்றால் என்ன? பசு. பசு என்றால் என்ன? ஆத்மா. இந்த பசுவானது அந்த பதியான இறையோடு ஒன்று கலக்க வேண்டும். ஆ (ஆத்மா) தன் இனமான பதியோடு (இறையோடு) சேர வேண்டும். அப்படி சேரக்கூடிய ஸ்தலங்கள் எல்லாமே ஆவினன்குடிதான். அந்த நிலையிலே ஆ (ஆத்மா) ஆனது அப்படி பதியோடு (இறையோடு) சேர விடாமல் தடுப்பது எது? அதனை கட்டியிருப்பது எது? பாசம் என்கிற கயிறு. இந்த கயிற்றை அபாயமற்ற முறையிலே அவிழ்த்துவிட்டு பதி (இறை) தன்னோடு சேர்த்துக் கொள்ளக்கூடிய நிலைதான் மிக முக்கியமான முக்தி மோட்ச நிலையாகும். சாயுச்சம் சாரூபம் சாமீபம் சாலோகம் என்கிற நான்கு நிலைகள். இதனையும் தாண்டி பல்வேறு நிலைகள் இருக்கின்றன. ஆனால் எடுத்த எடுப்பிலேயே இதை மட்டும் மனிதன் புரிந்து கொண்டால் போதும். அதாவது தன்னுடைய ஆன்மா எனப்படும் ஆ அல்லது பசு இறைவனோடு இரண்டற கலக்கக்கூடிய ஸ்தலங்களில் அதுவும் ஒன்று.

அதற்காக அடிவாரத்தில் (திருஆவினன்குடி) உள்ளது மட்டும்தான் (ஆறு) படை வீட்டிலே சேர்க்க வேண்டும். அங்கே மலை மீதிலே இருக்கின்ற முருகனை சேர்க்கக்கூடாது என்றெல்லாம் நாங்கள் (சித்தர்கள்) வகுக்கவில்லையப்பா. படை என்றால் என்ன? என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வழி என்று இந்த இடத்திலே பொருள் கொள்ள வேண்டும். படை என்றால் ஏதோ மன்னர்கள் வைத்திருக்கும் படையை எடுத்துக் கொள்ளக்கூடாது. முக்திக்கு வழிகாட்டக்கூடிய ஸ்தலங்கள் அனைத்துமே படைவீடுகள்தான். அனைத்தையும் படைவீடு என்று கொள்ளலாம். குறிப்புக்காக சிலவற்றை எடுத்துக் கொள்கிறார்கள். அப்படி பார்த்தால் சுவாமி மலையை பிற்காலத்தில்தான் மனிதர்கள் உண்டாக்கினார்கள் என்று வைத்துக் கொண்டு ஓதிமலையும் (கோயம்புத்தூர் மாவட்டம்) ஒரு படை வீடு என்று கொள்ளலாம். இதையெல்லாம் இப்போதுள்ள மனிதர்கள் ஏற்றுக் கொள்வார்களா? எனவே இதுபோன்ற தர்க்க வாதங்களில் எமக்கு (அகத்திய மாமுனிவர்) ஈடுபாடு இல்லை.

ஓதிமலை முருகனைப்பற்றி தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

File source: http://commons.wikimedia.org/wiki/File:Palani_Hill.JPG

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 132

கேள்வி: ஐயப்பன் கோவில்களில் 18 படிகள் வரக்காரணம் என்ன? 18 என்ற எண்ணிக்கையின் சிறப்பு பற்றி கூறுங்கள்

இறைவன் அருளால் பொதுவாக 18 என்பது மனிதனுக்கு ஏதோ ஒரு வகையில் பிடித்துப் போய் விடுகிறது. அதனால்தான் 18 சித்தர்கள் மகாபாரதத்திலே 18 தினங்கள் யுத்தம் 18 பர்வதங்கள் (மலைகள்) என்று ஏற்றுக் கொண்டு விட்டான். இதில் சில இல்லாமல் இல்லை. இன்னவன் கூறிய ஹரிஹரபுத்திரனின் (ஐயப்பன்) அந்த படிகளின் எண்ணிக்கை பதி எண் (18) கணக்கிலே அந்த இரண்டையும் கூட்டி நவமாக்கி (ஒன்பதாக்கி) அந்த நவம் (ஒன்பது) என்பது மனிதனின் தேகத்திலே இருக்கிறது. இந்த நவத்தை (ஒன்பதை) வெல்ல வேண்டும் என்பதின் பரிபூரண சூட்சமம்தான் அங்கே படிகளாக வைக்கப்பட்டிருக்கிறது. இன்னொன்று விக்ரமாதித்தனின் ஆசனத்தில்கூட பல்வேறு படிகளும் பதுமைகளும் இருந்தன. படி தேவதைகள் என்று இருக்கிறது. ஒவ்வொரு நிலையிலும் பாவத்தைக் குறைத்து புண்ணியத்தை சேர்க்க சேர்க்க ஒரு படி மனிதன் ஏறுகிறான் என்பது தேவ மொழியாகும்.

இங்கே படிப்படியாக உயர்வது என்பது உலகியல்ரீதியாக வெளிப்படையாக பொருளாதார வெற்றியை பதவியை குறிக்கலாம். ஆனால் தேவ ரீதியில் இறை ரீதியில் மகான்கள் ரீதியில் நேற்றைவிட இன்றைய தினம் எந்தளவு பாவத்தைக் குறைத்திருக்கிறான்? எந்த அளவு புண்ணியத்தை செய்திருக்கிறான்? எனவே இறைவனை நோக்கி அடுத்த படியில் இவனை அமர்த்திவிடலாம் என்பதை படி தேவதைகள் தீர்மானித்து அடுத்த நிலைக்கு தள்ளிவிடும். அந்த நிலையிலேயே இருக்கிறானா? இன்னும் இறைவன் அருளை நோக்கி அடுத்த படிக்கு செல்கிறானா? என்பதை பார்த்து அந்த படி தேவதைகள் இன்னொரு படிக்கு தள்ளி விடுகிறது. இறுதியாக படிப்படியாக உயர்ந்து அந்தப் பதியிடம் (இறைவனிடம்) அந்த ஆத்மா செல்வதைதான் உண்மையான சூட்சுமப் படி குறிக்கிறது. இதை அந்த தெய்வத்திற்கு புறச்சடங்காக 18 படிகள் என்று வைத்திருக்கிறார்கள்.

எல்லா தெய்வங்களுக்கும் இந்த படி நிலை என்பது உண்டு. இதனால்தான் மலைகளில் ஏராளமான படிகள் வைத்து அந்தப் படிகளில் ஏறி இறங்கினால் இறையருள் என்று வைத்திருக்கிறார்கள். இறை அருள் என்பது பிறகு உடல் ஆரோக்கியம் என்பது முதலில். அந்தப் படி தேவதைகள் மட்டுமல்லாது ஒவ்வொரு படியின் அடியிலும் பல ரிஷிகளும் மகான்களும் தவம் செய்து கொண்டு இதோ என் மேல் ஏறிப் போகிறானே? இந்த மனிதனின் பாவங்கள் இத்தனை இருக்கிறது. இவன் இத்தனை இத்தனை பிறவிகள் எடுத்திருக்கிறான். இறைவா இப்பொழுதுகூட இவன் தன்னை உணராமல் ஏதோ சுற்றுலா போல்தான் இங்கு வந்திருக்கிறான். இவன் அறியாமையை நீக்கிவிடு. வேண்டுமானால் இவன் பாவங்களை நான் எடுத்துக் கொள்கிறேன் என்று ஒவ்வொரு படியின் அடியிலும் அமர்ந்திருக்கும் மகான் ஒவ்வொரு தினமும் வேண்டிக் கொண்டிருக்கிறார். எனவே அந்த படி என்பது சாதாரண விஷயமல்ல. படிப்படியாக மேலே செல்வதைக் குறிக்கும். பின்னால் இதனை நீ படிப்படியாக புரிந்து கொள்ளலாம்.

படிப்படியாக நாங்கள் பலவற்றைக் கூறினாலும் படிப்படி என்று நாங்கள் கூறும் பொழுது அது பல பேருக்கு அந்த படிப்படி என்பது புரியாமல்தான் போய் விடுகிறது. படி படி என்று குழந்தைகளைப் பார்த்து பெற்றோர்கள் கூறுவது குழந்தைகளுக்கு பிடிக்காதது போல நாங்கள் பல படிகளைக் கூறும்பொழுது மனிதர்களுக்கும் படிப்படி என்பது பிடிக்காமல் போய் விடுகிறது. படிப்படியாக நாங்கள் கூறுகிறோம். அதனை படிப்படியாக பதிவு செய்து படிப்படியாக மேலே ஏறி அந்த படியின் உச்சியிலிருக்கும் பதியிடம் (இறைவனிடம்) அனைவரும் சேர வேண்டும் என்று நல்லாசி கூறி படிப்படியாக இன்னும் மேலே உயர நாங்கள் அந்த எம்பிரானை வணங்கி இப்பொழுது சற்றே அயர்வு தந்து மேலும் படிப்படியாக வாக்குகளை பின்னர் உணவு இடைவேளைக்கு பிறகு சத்சங்கத்திற்குப் பிறகு இறையருளால் நாங்கள் கூறுவோம் என்று கூறி படிப்படியாக அனைவரும் உயர நல்லாசிகள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 133

கேள்வி: தீட்சை பற்றி

இறைவன் அருளால் ஒரு முழுமையான வழிகாட்டுதல் நெறிகாட்டுதல் என்பதைதான் தீட்சை என்றுகூட சொல்லலாம். ஆனால் தீட்சை என்ற சொல்லுக்கு உண்மையான பொருள் என்ன? என்றால் ‘தீ’ என்றால் ஒருவகையில் அழிப்பது. ஒருவனிடம் இருக்ககூடிய மல மாயங்களை பாவங்களை அழித்து அவனை மேலே தூக்குவது என்பதுதான் தீட்சை என்பதின் பொருளாகும். ஆனால் அப்படி அழிக்கக்கூடிய சக்தி படைத்த மகான்கள் மிக மிகக் குறைவு. அப்படியே சக்தி படைத்திருந்தாலும் கூட இறைவனின் அருளாணையில்லாமல் யாருக்கும் அவர்கள் தீட்சை வழங்கமாட்டார்கள். மற்றபடி மனிதர்கள் தீட்சை வழங்குவதாக கூறுவதெல்லாம் ஒருவகையான வழிகாட்டுதல் என்று வைத்துக் கொள்ளலாம். இருந்தாலும் இப்படி முறையாக தீட்சை பெற்றால்தான் இறைவனின் அருள் கிடைக்கும் என்பதை நாங்கள் ஒருபொழுதும் ஒத்துக் கொள்வதில்லை. ஒவ்வொரு மனிதனின் மனமும் மெய்யாக மெய்யாக இறைவனை நோக்கி இறை நிலையை நோக்கி என்றென்றும் திசை திருப்பி வைக்கப்பட்டிருந்தால் இறைவனை பிடித்த வடிவத்திலே பிடித்த நாமத்திலே வணங்கிக் கொண்டிருந்தால் கட்டாயம் இறைவனின் கருணை கிட்டும். இதற்கு தீட்சை பெற்றுதான் ஆகவேண்டும் என்று கட்டாயம் ஏதுமில்லை.

கேள்வி: கெளபனத்தை வீட்டில் வைத்து பூஜிப்பது பற்றி

மிகவும் சிறப்பு அப்பா. அதற்காக பஞ்சமா பாதகங்களை செய்கின்ற ஒரு மனிதன் அதை வாங்கி இல்லத்தில் (வீட்டில்) வைத்தால் சிறப்பு என்று கொள்ள முடியாது. நஞ்சற்ற மனம் தான் எதையும் சாதிக்கும். நஞ்சற்ற மனதிலே அமிர்தம் அமிர்தமாக இருக்கும். நஞ்சற்ற மனம் பஞ்சபாவங்கள் செய்யாத மனம் அங்குதான் இறை பிரசாதம் தன் பணியை பரிபூரணமாக செய்யும் என்பதை புரிந்து கொண்டால் அனைத்தும் புரியும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 131

கேள்வி: மனிதர்களின் கர்ம வினைகளுக்கு முடிவே இல்லையா?

ஒரு மனிதனை பார்த்து பல்வேறு பிறவிகள் எடுத்து பல்வேறு பாவங்களை செய்திருக்கிறாய். சில புண்ணியங்களையும் சேர்த்திருக்கிறாய். அந்த புண்ணியத்தையெல்லாம் கணக்கில் கொண்டு நடப்பு பிறவியில் இறைவன் உனக்கு பாவம் புண்ணியம் நவக்கிரகம் இறைவன் பிறவிகள் -இதுபோன்ற விஷயத்தை ஞானத்தை அளிக்க முன் வருகிறார். இந்த நிலையில் எடுத்த எடுப்பிலேயே சிறு வயதிலேயே ஒரு மனிதன் பார்த்து நீ எதுவும் செய்ய வேண்டாம். இந்த உலகம் மாயை. இங்கு வாழ்கின்ற வாழ்க்கை அர்த்தமற்றது. எனவே உடனடியாக நீ ஒரு குகைக்கு சென்றுவிடு. ஒரு மலையடிவாரம் சென்றுவிடு. ஒரு விருட்சத்தின் (மரத்தின்) அடியில் பத்மாசனமிட்டு அமர்ந்து உன் நெற்றி புருவத்தை கவனித்துக் கொண்டேயிரு. அப்பொழுது எல்லாம் புரியும் என்றால் அதை புரிந்து கொள்ளும் அளவிற்கு புண்ணிய பலம் எத்தனை மனிதர்களுக்கு இருக்கும்? இது எங்கனம் இருக்கிறது? என்றால் மிக உயர்ந்த கல்வி திட்டத்தை அடிப்படை கல்வி கற்கும் மாணவனுக்கு கொடுத்தால் குழந்தையாய் இருக்கும் மாணவனுக்கு கொடுத்தால் குழந்தையாய் இருக்கும் மாணவனால் கற்றுகொள்ள இயலுமா? அந்த வயதில் எந்த அளவு பாடதிட்டத்தைக் கொடுத்தால் ஏற்றுக்கொள்ள முடியுமோ அந்த பாடதிட்டத்தைத்தான் அவன் கற்றுக்கொள்ள முடியும். எனவே குண்டலினி யோகம் தியானம் ஞானம் தவம் தற்சோதனை இதுபோன்ற விஷயங்களுக்கெல்லாம் அடிப்படைதான் பக்தி மார்க்கம்.

இன்னொன்று இந்த பக்தி மார்க்கத்தில் தன்னை நன்றாக தோய்த்து தோய்த்து தோய்த்து ஆழ்ந்துவிட்டால் ஞான மார்க்கம் பிறர் போதிக்காமல் வரக்கூடும். ஆனால் ஞானமார்க்கத்தில் வந்துவிட்ட பிறகு பக்தி மார்க்கம் வேண்டுமென்றால் ஒரு மனிதன் அதற்கு முயற்சி செய்துதான் வர வேண்டும். பக்தி மார்க்கத்தின் வாயிலாக செய்யக்கூடிய புறசெயலை மட்டும் பார்க்கக்கூடாது. அதாவது பாலை விக்ரஹத்தின் மீது ஊற்றுவதாலோ தீபத்தை ஏற்றுவதாலோ நறுமணம் கமழும் புகையை தூவுவதாலோ இறைவன் மகிழ்கிறாரா? பாவம் குறைகிறதா? என்று வெளிப்படையான அறிவுத் தன்மையைக் கொண்டு புரிந்து கொள்ளக் கூடாது.

பிறந்த குழந்தை நகை கேட்கிறதா? புத்தம் புதிய ஆடை கேட்கிறதா? ஆனால் அவற்றையெல்லாம் தாயும் தந்தையும் குழந்தைக்கு அணிவித்து பார்த்து சந்தோசப்படுகிறார்களே? அதைப் போல் பக்தியில் தோய்ந்த பக்தனுக்கு இறைவனை விதவிதமாக அலங்காரம் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகம். எப்படி மனிதன் தன்னை பார்க்க விரும்புகிறானோ அப்படி இறைவன் தன்னை ஆட்படுத்திக் கொள்கிறான். எப்படி குழந்தைக்கு தகுந்தாற் போல் பெரியவர்கள் தம்மை வளைத்துக் கொள்கிறார்களோ அதைப் போலத்தான் பக்தியின் வாயிலாக செய்யப்படும் சில சடங்குகள் அறிவுக்கு அர்த்தமற்றது போல் தோன்றினாலும் அந்த பக்தியை செலுத்துகின்ற மனிதனின் மனோநிலைக்கு ஏற்புடையதாக இருப்பதால் அவன் மனதிலே எந்தவிதமான தீய எண்ணங்களும் இல்லாமல் தூய எண்ணத்தோடு இதை செய்தால் இறைவனுக்கு பிடிக்கும் என்று எண்ணி அந்த நிலையில் அவன் செய்வதால் இறைவனின் அருள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இறைவனின் அருள் கிடைக்க கிடைக்க பின்னால் பக்குவமான பக்தியும் பிறகே பக்தி என்பது வெறும் புற சடங்கு இல்லை அகந்தை நன்றாக வைத்துக் கொள்வதில்தான் இருக்கிறது என்ற நிலை வரும். இப்படி கல்வி உயர் கல்வி உயர் உயர் கல்வி என்ற நிலைபோல் அவன் உயர்ந்து வருகிறான். எனவே அந்த ஆரம்ப நிலையில் தீபத்தை ஏற்றுவதும் நல்ல தெய்வீக சடங்குதான் அதனாலும் பாவங்கள் குறையும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 130

கேள்வி: தீபத்தை பற்றி சொல்லுங்கள் ஐயனே

இறைவனின் கருணையைக் கொண்டு இந்த தீபம் என்ற சுடர் ஔிக்கற்றைக் குறித்து கூறினால் கூறிக்கொண்டே இருக்கலாம். அது ஒருபுறம் இருக்கட்டும். முதலில் ஆன்மீகம் தவிர்த்து தெய்வீகம் தவிர்த்து மனித ரீதியாகப் பார்த்தால் இருளை யாரும் விரும்புவதில்லை. விழிகள் நன்றாக இருந்தாலும் இருளில் எதிரே இருக்கும் சூழலை உணர இயலாது. எனவே இருள் நீங்க வேண்டும் என்றால் அங்கே கட்டாயம் இருளுக்கு எதிரான ஒரு செயல் வேண்டும். அது ஔி ஒன்றுதான். அனல் அக்னி நெருப்பு என்று எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளலாம். இவற்றிலிருந்து கிளம்பக்கூடிய கதிர்கள் ஆக்கப்பூர்வமான எண்ண அலைகளை மனிதனுக்கு ஏற்படுத்த வேண்டும். அதே சமயம் மனிதனின் உடல் ஆரோக்கியத்தையும் பேண வேண்டும். இப்படி கவனித்துப் பார்த்துதான் விதவிதமான தீபங்கள் முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்டு வந்தது. அந்த தீபங்களில் ஒன்றுதான் பரிசுத்தமான எள் எண்ணெய் தீபம் பரிசுத்தமான நெய் தீபமாகும். எல்லா தீபங்களிலிருந்தும் ஔிக்கற்றை ஔி சுடர் வரலாம். நல்லதொரு வெளிச்சத்தையும் அதற்கான சூழலையும் தரலாம். இருளை விலக்கலாம். ஆனால் அந்த செயலைத் தாண்டி ஆக்கப்பூர்வமான அதிர்வலைகள் எதில் இருக்கிறதோ அதை மனிதன் பின்பற்றினால் நல்ல பலன் உண்டு.

அந்த வகையில் பார்க்கும்பொழுது நெய் தீபத்திற்கு அந்த சக்தி உண்டு. எள் எண்ணெய் எனப்படும் நல்லெண்ணெய் தீபத்திற்கு அந்த ஆற்றல் உண்டு. இலுப்ப எண்ணெய்க்கு அந்த ஆற்றல் உண்டு. மற்ற எண்ணெய்களுக்கு அந்த ஆற்றல் இல்லாமல் இல்லை. ஆற்றலின் சக்தி சற்றே குறைந்திருக்கும். சில வகையான தீபங்களை சில குறிப்பிட்ட பூஜைகளை முன்னிட்டு ஏற்ற வேண்டுமே தவிர பொதுவில் ஏற்றுவது சிறப்பை தராது. இது மட்டுமல்லாது காலகாலம் மனிதன் எத்தனையோ புதிதாக கற்று செயல்படுத்த துவங்கிவிட்டான். அந்த வகையில் நெய் தீபமோ அல்லது எண்ணெய் தீபமோ இல்லாமல் திரியில்லாமல் எரியக்கூடிய தீபங்களையெல்லாம் (மின்சார விளக்கு) இறைவன் அருளால் கண்டுபிடித்துவிட்டான். இருந்தாலும் அவைகள் வெறும் உலகியல் வாழ்விற்கு உதவலாம். அதிலிருந்து வரக்கூடிய அதிர்வலைகள் கட்டாயம் மனிதனுக்கு ஆன்மீக முன்னேற்றத்தை தருவதாக இராது (இருக்காது). அதுமட்டுமல்லாது பூமியில் கிடைக்கக்கூடிய பொருள்களை விதவிதமாக சேர்த்துதான் மனிதன் புதிய விஷயங்களையும் புதிய கருவிகளையும் கண்டுபிடிக்க கற்கிறான். பூமியில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்கினால்தான் அது அவன் அறிவு திறமைக்கு சான்றாகும். ஆனால் மனிதன் கண்டுபிடித்த எந்த ஒரு பொருளுக்குப் பின்னாலும் இறைவன் ஏற்கனவே தந்த அடிப்படை பொருள் இருக்கும்.

அந்த வகையிலே அது சிறப்பான பலனை எந்த அளவிற்கு தரும் என்று பார்த்தால் உலகியல் சார்ந்த விஷயங்களுக்கு அது உதவலாம். அதே சமயம் உண்மையான மெய்யான மெய் உணர்வை பெற வேண்டுமென்றால் ஆதி காலம் முதல் இருக்கக்கூடிய கண்டு பிடிக்கக்கூடிய மண் அகல் தீபம் பசு நெய் தீபம் மண் அகலில் தூய எள் எண்ணெய் தீபம் – இவற்றை ஏற்றுவது சிறப்பான பலனைத் தரும். அதோடு மட்டுமல்லாமல் உடலில் இருக்கக்கூடிய தீய கழிவுப் பொருள்களை வெளியேற்றுவதில் இதுபோன்ற தீப சுடர்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. இறைவனை ஒருவன் நம்பாமல் இருக்கட்டும். பக்தி இல்லாமல் இருக்கட்டும். பயத்தின் காரணமாகவோ அல்லது பக்தியின் காரணமாகவோ ஆலயம் சென்று வணங்கினால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையினாலோ கூட்டம் கூட்டமாக குறிப்பிட்ட தினங்களில் ஆலயத்தை நோக்கி செல்கிறான். ஒரு குறிப்பிட்ட இடத்தில் வழக்கத்திற்கு அதிகமான மனித கூட்டம் சேரும் பொழுது சுவாசிக்க தூய்மையான காற்று கிடைப்பது கடினமாகிறது. எப்பொழுதுமே இறைவன் படைப்பு நுட்பமானது. இங்கே மனிதனுக்கு தேவையான உயிர்சக்தியை தரக்கூடிய பிராணவாயுவின் சதவிகிதம் காற்றில் குறைவு. ஆனால் அதற்கு எதிராக தளர்வையும் அயர்வையும் மயக்கத்தையும் தரக்கூடிய எதிர்தன்மை கொண்ட வாயுவின் தன்மை அதிகம்.

இந்த நிலையில் தீபத்தை ஏற்றினால் அந்த தீப சுடர் எரிவதற்கும் மேலும் பிராண வாயு தேவைப்படும் பட்சத்தில் இன்னும் பிராண வாயு சக்தி குறையுமே? இப்படியிருக்கும் பட்சத்தில் பிராணவாயு பற்றாக்குறையை எவ்வாறு சரி செய்வது? கட்டாயம் பசு நெய் தீபம் நூற்றுக்கு நூறு சரி செய்யும். அடுத்ததாக விண்வெளியில் உள்ள அசுத்தங்களை சரி செய்யும். அந்தப் பகுதியில் உள்ள எதிர்மறை எண்ணங்களையும் சரி செய்யும். அடுத்த நிலையில் எள் எண்ணெய் தீபமும் இவ்வாறு சரி செய்யும். எனவே இப்படி உடல் சார்ந்த ஆரோக்கியத்திற்கும் உள்ளம் சார்ந்த ஆன்மீகத்திற்கும் தீப வழிபாடு நல்ல பலனைத் தரும். பக்தியோடு வேறு புற சிந்தனைகள் இல்லாமல் இறைவனை மனதார ஒன்றுபட்ட எண்ணத்தோடு எண்ணி தீபத்தை ஏற்றி வணங்கி வந்தால் கட்டாயம் உடலுக்கும் நன்மை உண்டு உள்ளத்திற்கும் நன்மை உண்டு. அதற்காக ஆலயத்திலே தற்காலத்திலே உள்ள மின்சார விளக்குகளை பொருத்த வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. ஆலயத்திற்கோ அல்லது வேறு சேவை செய்யும் அமைப்புக்கோ மின்சார விளக்குகளை பொருத்த ஒரு மனிதன் உதவினாலும் அதுவும் அவனுக்கு புண்ணிய பலனையே தரும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 129

கேள்வி: திருமறைக்காட்டில் உள்ள சரஸ்வதியைப் பற்றி?

மறை வனம் எனப்படும் அந்த வேத ஆரண்யத்திலே வேதாரண்யம் (நாகப்பட்டினம் மாவட்டம்) துர்க்கை என்பது சிறப்பான வழிபாட்டில் இருந்து வருகிறது. அங்குள்ள தீர்த்தம் நாழிகைக்கு நாழிகை தன்னுடைய தன்மையை மாற்றிக் கொள்ளக்கூடிய ஒரு தீர்த்தமாக இருக்கிறது. ஞானத்திலே கல்வியிலே தேர்ச்சி பெற வேண்டியவர்கள் சென்று வணங்க வேண்டிய ஆலயங்களில் இதுவும் ஒன்று. இங்கு சென்று சிவபெருமானை வணங்கும் பொழுதெல்லாம் மகாபலியை நினைத்துக் கொள்ளலாம். அங்கு அன்னை கலைவாணியை (சரஸ்வதி) வெண்தாமரையால் அர்ச்சனை செய்வதும் நிறைய வெண்தாமரை மாலை சாற்றுவதும் பரிபூரணமான மலர் மது எனப்படும் தூய்மையான தேனால் அபிஷேகம் செய்வதும் கல்வியில் விருத்தி ஆர்வம் ஏற்பட நல்லதொரு வாய்ப்பாக இருக்கும்.

கேள்வி: பக்தியில் என்னென்ன நிலைகள் உள்ளன? அன்பிற்கும் பக்திக்கும் என்ன வித்தியாசம்?

அன்பு என்பது தன்னை போல் தன்னுடைய நிலையிலே தன்னை ஒத்து இருக்கக்கூடிய மனிதரிடம் உயிர்களிடம் காட்டுவது. பக்தி என்பது தன்னைவிட பல பல மடங்கு மேலான எல்லா வகையிலும் உயர்ந்த நிலையைக் கொண்ட மகானிடமோ இறையிடமோ காட்டுவது. அன்பின் உச்சநிலைதான் பக்தி.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 128

கேள்வி: எங்கள் ஊரிலே லட்சுமி நாராயணபெருமாள் ஆலய கும்பாபிஷேகம் நடத்தினோம். தங்களின் (அகத்திய மாமுனிவர்) திருமேனியையும் அக்கோவிலில் பிரதிஷ்டை செய்திருக்கிறோம். 48 நாள் மண்டல பூஜை நடந்த பொழுது ஒரு வாரம் உச்சி காலத்தின் போது பகவானின் திருமேனியில் வியர்வைத் துளிகள் வந்த வண்ணமே இருந்தது. அதன் பொருள் என்ன?

இறைவன் அருளாலே சில கற்களுக்கு இயற்கையிலேயே நீரை கசிவிக்கும் தன்மை உண்டு. இது விஞ்ஞான பார்வை. இன்னொன்று தெரியுமா? சீரலைவாய் (திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி) முருகனுக்கு வியர்ப்பதாக விசிறிய பக்தன் உண்டு. எங்கே வியர்க்கிறது? நான் பார்க்க வேண்டும் என்று சோதித்த வெள்ளையோனும் (டச்சுக்காரன்) உண்டு. அப்படி சோதிக்கும் பொழுது கற்சிலைக்கல் ஐம்பொன் சிலைக்கு வியர்த்ததை பார்த்த ஆதாரங்கள் எல்லாம் இருக்கிறதப்பா. எனவே இது இறையருள்தான் என்பதை இந்த பொல்லா கலியுகத்தில் மனிதர்கள் உணர வேண்டும். மனிதர்களுக்கு எதையாவது மனித சக்திக்கு மீறிய ஒன்றைக் காட்டினால்தான் இறைவன் மீது ஈடுபாடு ஏற்படும் என்பதற்காக அவ்வப்பொழுது இறை நடத்தும் லீலைகளில் ஒன்று.

கேள்வி: மயிலாடுதுறை அருகில் உள்ள கோமல் என்ற ஊரின் அருகில் வெள்ளை வேம்பு அம்மனைப் பற்றி

பொதுவாக இலைகளுக்கு நிறத்தைத் தரக்கூடிய நிறமிகள் விதவிதமான தன்மையைக் கொண்டது. அந்தத் தன்மைகள் மாறுபடும் பொழுது நீ கூறிய அந்த அமைப்பு விருட்சங்களுக்கு (மரங்களுக்கு) ஏற்படுகிறது. இருந்தாலும்கூட இந்த விஞ்ஞான நிலையையும் தாண்டி யாங்கள் கூறவருவது அதிலே அளவிற்கு அதிகமான இறையாற்றல் பொதிந்திருப்பது என்பது உண்மைதான். எனவே மனோ நிலையிலே அதிகம் பாதிப்பு ஏற்பட்டு மன பதட்டம் மன சிதைவு கொண்டவர்கள் சென்று அந்த விருட்சத்தை (மரத்தை) வழிபட நல்ல மாற்றம் ஏற்படும். இந்த அளவில் அதனை நுணுக்கமாக புரிந்துகொள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 127

ஆதியிலே பாவவினைகள் எவ்வாறு ஏற்பட்டது?

பாவம் என்பதே பரம்பொருள் ஏகனாக (ஒருவன்) இருக்கும் பொழுது சகலமும் பரம் என்ற நிலையில் இல்லை. பரம் தன்னுடைய தரம் தாழும் என்று அறிந்தோ அறியாமலேயோ தன்னிடமிருந்து சிறிய சிறிய ஆத்மாக்களையெல்லாம் பிரித்து அனுப்பும் பொழுதே அங்கே பாவங்கள் உற்பத்தியாகிவிடுகிறது. எல்லா வகையிலும் சுகத்தையும் எல்லா வகையிலும் உயர்வையும் தந்து ஒரு பிறவியை முதலில் படைக்கும் பொழுதே தனக்கு இவ்வாறெல்லாம் கொடுக்கப்பட்டிருப்பது பிறருக்கு நன்மைகளை செய்வதற்குதான் என்று மனிதனோ அல்லது உயர்ந்த நிலையில் உள்ள தேவர்களோ சமயத்தில் புரிந்து கொள்ளாமல் ஆணவத்தால் தவறு இழைக்கும் பொழுது அங்கே முதல் பாவம் தோன்றுகிறது. அந்த பாவத்தால் சற்றே தரம் குறைந்து அடுத்த நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அங்கே பாவத்தை நீக்குவதற்கு வாய்ப்புகள் தந்தாலும் நீக்குவதற்கு பதிலாக மேலும் மேலும் பாவத்தை சேர்த்துக் கொள்ள அடுத்தடுத்து பிறவிகள் சங்கிலி போல் நீள்கிறது.

கேள்வி: அப்படியென்றால் பிரபஞ்சத்தில் அனைவரும் திருந்தி வாழ வழியே இல்லையா?

அதற்கு வழிகாட்டினால் அதை ஏற்கும் நிலையில் யாரும் இல்லை என்பதே உண்மையிலும் உண்மை.

கேள்வி: காலம் தானாக சுழற்சி பெறுமா? அல்லது மறுபடியும் அதை இறைவன் ஆரம்பத்திலிருந்து இயக்குவாரா?

இறைவனின் கருணையாலே வளைந்த நிலையிலே உள்ள ஆரத்திற்கு எது ஆரம்பம்? எது முடிவு? அதைப் போலத்தான் இந்த அண்ட சராசரமும் இறைவனின் இயக்கமும் இன்று ஆரம்பம் போல் தோன்றும். இன்னொன்று முடிவு போல் தோன்றும். முடிவிலும் ஆரம்பம் இருக்கும். ஆரம்பத்திலும் முடிவு இருக்கும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 126

கேள்வி: வாசி யோகம் பற்றி?

இறைவனின் அருளைக் கொண்டு யோகம் என்பது மனிதர்களால் பல்வேறுவிதமாக கையாளப்படுகிறது. ஒருவன் நல்ல ஆரோக்யமான உடலை பெற்று நல்ல பதவியில் இருந்தால் அவனுக்கென்னப்பா யோகக்காரன் என்று கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் யோகம் என்பதை விட ஏகம் என்பதே சரியான பொருளாக இருக்கும். ஏகம் என்பது தனித்திருத்தல். தனித்திருத்தல் என்றால் ஏதோ கூட்டங்களை விட்டு ஒதுங்கியிருத்தல் என்று தவறாக எண்ணுகிறார்கள் அப்படியல்ல. உள்ளத்திலிருந்து இந்த உலகத்தைப் பிரித்து தனித்திருத்தல். ஏகமாக இருத்தல். அப்படி ஏகமாக இருக்கும் பொழுதுதான் ஏகனாக இருக்கக்கூடிய அந்த ஏகாம்பரனின் அருள் கிட்டும். அப்படி கிட்டுகின்ற வழிமுறைகளில் ஒன்றுதான் இது போன்ற வாசி யோகம் வாசிக் கலை பிராணாயாமம். முதலில் உடலை சரி செய்யாமல் சுவாசப் பயிற்சியில் சென்றால் தேவையில்லாத பின் விளைவுகள் ஏற்படும். எனவே உடலை நன்றாக பரிபூரணமாக ஆரோக்கியமாக வைத்துக் கொண்டு உடல் ரீதியான சில பயிற்சிகளையெல்லாம் செய்துவிட்டு பிறகு கும்பகம் செய்யாமல் அதாவது மூச்சை உள்ளே நிறுத்தாமல் ஆழ்ந்த சுவாசத்தை அதிகாலையிலே வாய் வழியாக இல்லாமல் நாசி வழியாக மட்டும் விட பழகிக்கொண்டே வந்தால் பிறகு இன்னவன் கூறுகின்ற வாசிக்கலையானது காலப்போக்கிலே இறையருளால் யாம் கூறுகின்ற வழிமுறைகளை பின்பற்றிக் கொண்டே வந்தால் சித்தியாகும். ஆனால் வாசி கற்றுக் கொடுக்கும் இடங்களெல்லாம் நூற்றுக்கு நூறு சரியான முறை என்று எம்மால் ஏற்றுக் கொள்ள இயலாது. தவறான மூச்சு பயிற்சியால் உடலில் தேவையில்லாத பக்க விளைவுகள் ஏற்படும் என்பதை மனிதர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 125

கேள்வி: பரமாத்மாவுடன் ஜீவாத்மா இரண்டற கலக்க எந்தெந்த நிலைகளைக் கடக்க வேண்டும்? ஒவ்வொரு நிலையிலும் எத்தகைய அபாயங்கள் காத்திருக்கின்றன?

இறைவனின் அருளால் யாம் கூறுவது என்னவென்றால் ஒரு மிகப்பெரிய மலை இருக்கிறது. சஹஸ்ரம் சஸஸ்ரம் (ஆயிரம் ஆயிரம்) படிகள் இருக்கிறது. உச்சியிலே இறைவன் அருள் புரியும் ஆலயம் இருக்கிறது. கதிர்மதி எனப்படும் அமாவாசை தினம். எங்கும் இருள் சூழ்ந்து இருக்கிறது. சிறிய ஔி கூட இல்லை. அடிவாரத்தில் ஒரு பக்தன் வந்து நிற்கிறான். உதவி செய்வார் யாரும் இல்லை. இப்பொழுது அவன் அத்தனை படிகளையும் ஏற சித்தமாக இருக்கிறான். அவன் என்ன வேண்டுவான்? ஔி இருந்தால் அந்த வெளிச்சத்திலே மெல்ல மெல்ல மேலேறி செல்லலாம் என்று எண்ணுவான். அப்படி ஏற எண்ணுபவனுக்கு மலை முழுவதும் தீப ஔிகள் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும் என்றாலும்கூட அதை அப்படி அவன் பார்ப்பதைவிட ஒரு சிறிய கை ஔி இருந்தால் ஏற நினைக்கும் முதல் படியில் அந்த வெளிச்சம் விழும். அதில் அவன் தன் பாதத்தை வைத்தபிறகு அந்த வெளிச்சம் அடுத்த படியை நோக்கி செல்லும். இப்படியாக படிப்படியாக அவன் சென்றுவிடலாம். எனவே ஒட்டு மொத்தமாக பிரபஞ்சம் கர்மா பிறவி இறைவன் பாவம் புண்ணியம் என்று பார்த்தால் மனிதனுக்கு மலைப்பாக இருக்கும். அதைவிட கிடைத்த இந்த வாய்ப்பை ஒரு மனிதன் பயன்படுத்திக் கொண்டு நேர்மையான முறையிலே கடமையை ஆற்றுதல் வாழ்வை நடத்துதல் அன்றாடம் இறை நாமத்தை ஜபித்தல் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்தல் அன்றாடம் ஒரு ஆலயமாவது சென்று வழிபாடு செய்தல் என்று இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே போதும் நீ எண்ணுகிற அந்த ஜீவாத்மா பரமாத்வை அடைவதற்கு மிக எளிய வழிகளை பரமாத்மாவே அந்த ஜீவாத்மாவிற்கு காட்டி அருள்வார்.