











































யாக அக்னியில் சாய்பாபா

யாக அக்னியில் சாய்பாபா
சிவலிங்கத்தை தழுகிய நிலையில் ஈசனோடு ஐக்கியமானவர் கருவூரார் சித்தர். அன்பு பூண்ட சித்தர்களிடமும் முனிவர்களிடமும் இளமையிலேயே ஞானப்பால் உண்டவர். இதற்கு சான்று கருவூராருக்கு கருவான ஞானப்பால் அழித்தபோதே என்ற அகத்தியர் 12000 நூல் விரிவாக கூறுகிறது.
சங்ககால சேர நாட்டு தலைநகர் வஞ்சி எனப்பெறும் கருவூரில் பிறந்தார் கருவூரார். கருவூராரின் தாய் தந்தையார் ஊர் ஊராகச் சென்று ஆங்காங்குள்ள கோவில்களில் விக்ரகங்கள் செய்யும் தொழில் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்கள். அதனால் கிடைத்த பொருள் கொண்ட முனிவர்களுக்கு வேண்டிய பொருட்களை எல்லாம் வாங்கிக் கொடுப்பார்கள். கருவூரார் செம்பு பித்தளை உலோகங்களை கொண்டு தொழில் செய்யும் குலத்தைச் சேர்ந்தவர் என்றும் இவர் போகரின் சீடர் என்றும் அகத்தியர் 12000 என்னும் பெருநூல் கூறுகிறது. சிறிய வயதிலேயே ஞான நூல்களைக் கற்று அம்பிகையிடம் மாறாத பக்தி கொண்டவர் கருவூரார். இவரது பக்தியை கண்டவர்கள் இவருக்கு இனி பிறவி இல்லை. இனி இவர் எக்கருவிலும் ஊரார் எனவே இவர் கருவூரார் என்று வியந்து கூறினார்கள். இதுவே இவரது பெயர் ஆயிற்று. இளம் வயதிலேயே வேதம் மற்றும் ஆகமங்களைக் கற்று தேர்ந்து மானுட வாழ்வின் நிலையாமையை உணர்ந்து காய சித்தி மாய சித்தி அதிகம் நிறைந்த மாமுனியாக திகழ்ந்தவர். போகரை குருவாகக் கொண்டு உபதேசம் பெற்றார். போகரை கருவூரார் சந்தித்த போது உனக்கு அம்பிகையே சரியாக வழிகாட்டுவாள் என்று ஆசீர்வாதம் செய்தார். ஞான நூல்கள் பலவற்றையும் ஆராய்ந்து சிவயோக முதிர்வு பெற்றார். புறக்கருவிகளாகிய ஞானேந்திரியங்கள் கன்மேந்திரியங்களை அதன் போக்கில் போக விடாமல் உள்ளிழுத்து அகக் கருவியாகிய சித்தத்தினை சமாதியில் இறுத்தி வெற்றி பெற்று அட்டமா சித்தி பெற்ற சித்தர் கருவூரார் ஆவார்.
வசியம் மோகனம் தம்பனம் உச்சாடனம் ஆக்ருசணம் பேதனம் மாரணம் எனும் அஷ்ட கர்ம மந்திரங்கள் அனைத்தையும் கற்று உணர்ந்தார் கருவூரார். ஒருநாள் கருவூரார் முன் ஒரு காகம் தன் காலில் கவ்வியிருந்த ஒரு ஓலையை வைத்தது கருவூரார் ஆச்சரியத்துடன் அந்த உரையை வாசித்தார். கருவூராரே நீர் உடனே தன்னை வந்து சேரும் என்று இருந்த அந்த ஓலையில் இருந்தது. அந்த ஓலையை அவரது குருவான போகர் எழுதி இருந்தார். தஞ்சையை ஆண்ட இராஜராஜ சோழ மன்னனுக்கு ஒரு சங்கடம் ஏற்பட்டிருந்தது அதனைப் போக்கவே அவரை அழைத்து இருந்தார். தஞ்சையில் சோழ மன்னன் ஒரு பிரம்மாண்டமான சிவாலயம் கட்டுகிறான். அற்புதமான அந்த ஆலயத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ய முயன்று பந்தனம் செய்ய முடியாமல் மருந்தானது வழிந்து கொண்டே இருக்கிறது. சோழ மன்னனுக்கு இதற்கான காரணம் புரியவில்லை .இந்த குறை தீர்க்கவே கருவூரார் அழைக்கப்பட்டிருந்தார்.
கோவிலுக்குள் நுழைந்த கருவூரார் சிவலிங்கத்தின் அருகில் சென்று பார்த்த போது அங்கு அஷ்ட பந்தனம் செய்ய விடாமல் ஒரு பிரம்ம ராட்சசி தடுத்துக் கொண்டு இருப்பதைக் கண்டதும் மந்திர உச்சாடனம் செய்து அதன் மீது காறி உமிழ்ந்தார். கருவூராரின் வாயில் எச்சில் பட்டு பொசுங்கி கருகியது பிரம்ம ராட்சசி. பக்தர்கள் கருவூராரின் அசைவுகளையும் கோபக்கனல் பொங்கும் கண்களையும் கவனித்தார்கள். ஆனால் என்ன நடக்கிறது என்பது அவர்களுக்குப் புரியவில்லை. இப்போது லிங்கத்தை அஷ்டபந்தனம் சாத்தி பிரதிஷ்டை செய்யுங்கள் என்று அர்ச்சகர்களிடம் சொன்னார் கருவூரார். அர்ச்சகர்களும் அவ்வாறே செய்ய லிங்கம் தனது இடத்தில் அமர்ந்தது. மேலும் அதில் இருந்து வெளிப்பட்ட ஜோதி கருவூராரின் நெஞ்சில் பாய்ந்தது. கருவூரார் இனம்புரியாத பரவசநிலைக்கு ஆளானார். அதன் பிறகு அவர் அஷ்ட பந்தனம் செய்து சிவலிங்கப் பிரதிஷ்டையும் அபிஷேகம் செய்து வைத்தார். அப்போது கருவூரார் அண்ட ரண்ட மந்திரத்தை உபதேசித்தார். சிவபெருமானின் ஐந்து முகமாகவே ஈசானம் தத்புருஷம் அகோரம் வாமதேவம் சத்தியோசாதம் என்பதை அகோரம் எனப்படுவது தான் அண்டரண்டம் மந்திரம்.
தில்லையம்பலமாகிய சிதம்பரத்துக்கு வடநாட்டை ஆண்ட இரணியவர்மன் ஒருமுறை வந்தான். சிவகங்கை தீர்த்ததில் நீராடிக் கொண்டிருந்தான். அப்போது தண்ணீருக்குள் சிவனின் நாட்டியக் காட்சியை கண்டான். அக்ககாட்சி அவனை பெரும் பரவசப்படுத்தியது. தண்ணீரில் இருந்து எழுந்து மீண்டும் தண்ணீருக்குள் மூழ்கி கண்களைத் திறந்து பார்த்தான். அங்கே யாரையும் காணவில்லை. சிவனின் நாட்டியக்காட்சி அவன் நெஞ்சை விட்டு அகல மறுத்தது. எப்படியாவது இந்த நடன சிவனை சிலையாக வடிக்க வேண்டும். அதுவும் தங்கத்தில் வடித்தால் அது பூமி உள்ளளவும் நம் பெயர் சொல்லும் என்று எண்ணினான்.
சிற்பிகள் அனைவரையும் வரவழைத்தான். தங்கத்தை அள்ளி அள்ளிக் கொடுத்து நான் கண்ட காட்சியைக் கூறி நடன சிவன் சிலையை 48 நாட்களுக்குள் வடிக்க வேண்டுமென்றும் அதற்குள் சிலை வடிக்காவிட்டால் அவர்களுக்கு கடும் தண்டனை அளிப்பேன் என்றும் உத்தரவிட்டான். சிற்பிகளும் வேலையை தொடங்கினர். தங்கத்தை வளைக்க வேண்டுமென்றால் சிறிதளவு செம்பு சேர்க்க வேண்டும். மன்னனோ எக்காரணம் கொண்டும் செம்பு சேர்க்கக் கூடாது என்றும் என்ன வித்தை செய்தாவது தூய தங்கத்தை வளைத்தே சிலை செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்திருந்தான். சிற்பிகளும் ஒரு தைரியத்தில் வேலையைத் தொடங்கி விட்டனர். 47 நாட்கள் கடந்து விட்டது. யாருக்குமே சிலை சரியாக வரவில்லை. நாளை மன்னன் வருவார். அவர் சிலையை எங்கே என்று கேட்டால் என்ன செய்வது? சிறையில் அடைத்து விடுவாரே என்று சிற்பிகள் பயந்தனர். இந்த சம்பவம் போகரின் சித்தத்திற்கு எட்டியது. அவர் திருவூராரை அழைத்து சிதம்பரத்தில் நடந்து கொண்டிருக்கும் விஷயத்தை விளக்கினார். கருவூரா நீ உடனே சிதம்பரம் செல். அந்த சிலைப் பணியை முடித்துக் கொடு என்றார். கருவூரார் கண்ணிமைக்கும் நேரத்தில் சிற்பிகள் முன்பு நின்றார். சிற்பிகளே உங்கள் மனக் கலக்கத்தை நான் அறிவேன். நீங்கள் எதற்கும் கலங்க வேண்டாம். இன்னும் இரண்டே நாழிகையில் சிலையை நான் தயார் செய்து விடுகிறேன் என்றார். அதற்கு சிற்பிகள் துறவியே நீங்கள் யாரோ எவரோ? சிவனின் அடியார் போல் தோன்றுகிறீர்கள். நாங்கள் தமிழகத்தின் பெரும் சிற்பிகள். எங்களாலேயே 48 நாட்களில் செய்து முடிக்க முடியாததை உங்களால் எப்படி இரண்டு நாழிகையில் சாதிக்க முடியும்? என்று கேட்டார்கள். உங்களுக்கு மாயமந்திரங்கள் தெரியுமா? மனம் நொந்து போயுள்ள எங்களை புண்படுத்துகிறீர்களா? அடியாரான உங்களுக்கு இது அழகா? என கோபமாகக் கேட்டனர். அவர்கள் அப்படி சொன்னதற்காக பண்பட்ட மனம் கொண்ட கருவூரார் கோபிக்கவில்லை.
கருவூரார் தன்னால் இயலும் என்று தன் வாதத்தில் உறுதியாக இருந்தார். ஒரு நாள்தான் இருந்தபடியால் வேறுவழியில்லாமல் சிற்பிகளும் சம்மதித்தார்கள். கருவூரார் தான் சிலை செய்யும் அறைக்கு யாரும் உள்ளே வரக்கூடாது என கட்டளையிட்டார். சொன்னபடி இரண்டு நாழிகையில் அறைக் கதவு திறந்தது. சிற்பிகளே உள்ளே போய் பாருங்கள். சிலை தயாராகி விட்டது என்றார். சிற்பிகள் ஓடிச்சென்று பார்த்தார்கள். நடராஜப் பெருமான் ஜொலித்தார். இப்படி ஒரு சிலையை எங்கள் வாழ்வில் பார்த்தில்லையே என சிற்பிகள் ஆச்சரியமடைந்தனர். அந்த ஆனந்த சிவனைப் போலவே இவர்களும் தாண்டவமாடினர். கருவூராரிடம் கோபப்பட்டதற்காக மன்னிப்பும் கேட்டனர். மறுநாள் மன்னன் இரணியவர்மன் வந்தான். நடராஜரைப் பார்த்ததும் தான் கண்ட காட்சி எப்படி இருந்ததோ அப்படியே சிலை வடித்தமைக்காக சிற்பிகளை மிகவும் பாராட்டினான். அந்த நேரத்தில் அமைச்சர் இந்த சிலை தூய்மையான தங்கத்தில் செய்யப்பட்டதா என்று சந்தேகத்தைக் கிளப்பினார்.
மன்னன் தங்கத்தை பரிசோதிக்க அமைச்சரிடம் கேட்டுக் கொண்டார். அமைச்சர் அதிகாரி வந்து சோதிக்க கட்டளை இட்டார். சிலை பரிசோதிக்கப்பட்டது. அதிகாரி அமைச்சரிடம் அரசே இது முழுமையான தங்கச் சிலை இல்லை. இதில் குறிப்பிட்ட அளவு செம்பு கலக்கப்பட்டிருக்கிறது என்றார். அமைச்சர் கொதித்துப் போனார். அரசரிடம் ஓடிவந்தார். மன்னா தங்களையே இந்த சிற்பிகள் ஏமாற்றி விட்டார்கள். சிலையில் செம்பு கலக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் முழுமையான தங்கச்சிலை வேண்டும் என்ற தங்களது உத்தரவு மீறப்பட்டிருக்கிறது. மேலும் எஞ்சிய தங்கம் எங்கே என்ற கேள்வியும் எழுகிறது. தாங்கள் தகுந்த விசாரணை நடத்தி இந்த சிற்பிகளைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்றார். சிற்பிகள் நடுங்கி விட்டனர். மன்னரின் காலடியில் விழுந்தனர். மன்னா தவறு நடந்து விட்டது. நாங்கள் இதோ நிற்கிறானே இந்தத் துறவியை நம்பி மோசம் போனோம். நடராஜ பெருமானின் சிற்பத்தை வடிக்க சுத்த தங்கத்தால் பல நாள் முயற்சித்தோம். நாங்கள் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் முடிக்க முடியவில்லை. கடைசி நேரத்தில் வந்த இவன் சில நாழிகைகளுக்குள் சிலைப் பணியை முடித்து விட்டான். அதுகண்டு நாங்களே ஆச்சரியம் கொண்டோம். இந்த அதிசய செயல் கண்டு அவனைக் கொண்டாடினோம். அவன் தனிமையில் அந்த அறையில் அமர்ந்து சிலை செய்தான். எங்களை அனுமதிக்கவில்லை. எனவே என்ன நடந்ததென்றே எங்களுக்கு தெரியவில்லை. எங்களை மன்னித்து விடுவியுங்கள் என்று கதறினர். மன்னனுக்கு கோபம் அதிகமானது.
துறவி வேடமிட்டு தங்கத்தை அபகரித்த அந்தக் கயவனை இழுத்துச் செல்லுங்கள். சிறையில் தனியறையில் வைத்து சித்ரவதை செய்யுங்கள். இந்த சிற்பிகளையும் விசாரணை முடியும் வரை சிறையில் வையுங்கள் என்றான். எல்லாச் சிற்பிகளும் கை கூப்பி தில்லையம்பல நடராஜரை வணங்கி பிரார்த்தித்தவாறு சென்றனர். இந்தத் தகவல் போகர் சித்தரின் சித்தத்துக்கு எட்டியது. அவர் தன் சீடர்களுடன் வானமார்க்கமாக கணநேரத்தில் தில்லையம்பலத்தை அடைந்தார். கோபமாக இரணியராஜன் முன்பு தோன்றினார். தன் முன்னால் திடீரென கோபக்கனல் பொங்க நின்ற ஒரு துறவியைக் கண்டு அதிசயித்தனர் இரணியராஜன். நான் போக சித்தர் என்ன காரணத்தினால் என் சீடனை சிறையில் அடைத்தாய். தங்கத்தை வளைக்க செம்பு தேவை என்ற அடிப்படை ஞானமில்லாத நீ இப்படிப்பட்ட முட்டாள் தனங்களைச் செய்வாய் என்பதிலும் ஆச்சரியமில்லை தான் இருப்பினும் குற்றமற்ற என் சீடன் செய்த செயலை மனதில் கொள்ளாமல் என் சீடனிடம் தக்க விசாரணை செய்யாமல் சிறையில் தள்ளி விட்டாய். மூடனே அவனை உடனே வெளியே அனுப்பு என்றதும் இரணியரஜன் கலங்கி விட்டான். சித்தரே தங்கள் தரிசனம் கிடைக்க என்ன பாக்கியம் கிடைக்க என்ன பாக்கியம் செய்தேன். தங்கள் சீடனை வேண்டுமென்றே அடைக்கவில்லை. தங்கத்தால் சிலை செய்ய முடியாது என்ற தகவலை சிற்பிகள் பயத்தில் மறைத்திருக்கின்றனர். தங்கள் சீடர் கருவூராரும் ஒன்றும் சொல்லாமல் சிலையை செய்யவே இப்படி செய்து விட்டேன் என்னை மன்னியுங்கள் என்றான். இப்போதே என் பக்தனை விடுதலை செய் என்று போகர் கூற மன்னன் விடுதலை செய்ய கட்டளையிட்டான். காவலர்கள் சிறைக்குச் சென்றனர். அங்கே கருவூர் சித்தரைக் காணவில்லை. அவர்கள் ஓடிவந்து தகவல் கூறினர்.
கருவூரான் இன்னும் ஒரு நாழிகைக்குள் வந்தாக வேண்டும். தங்கத்துக்காக தானே அவனை சிறையில் அடைத்தாய். இதோ பிடி தங்கம் அந்த சிலையையும் விட மேலான அளவுக்கு உனக்கு நான் தங்கம் தருகிறேன் என்ற போகர் நடராஜர் சிலையின் எடைக்கும் மேலாக தங்கத்தை அங்கே உருவாக்கி இதோ நீ விரும்பும் தங்கம் எடுத்துக் கொள் என் சீடனை என்னிடம் ஒப்படைத்துவிடு என்றார். மன்னன் நடுங்கினான். தில்லையம்பல நடராஜரை மனம் உருகி வேண்டினான். அவனது நிலையை கண்ட போகர் இரணியராஜா கலங்காதே. கருவூரான் சிறையில் தான் இருக்கிறான். சித்தர்களுக்கே உரித்தான சில யோகங்கள் மூலம் அவன் தன்னை மறைத்துக் கொண்டிருக்கிறான். நான் அழைத்தால் வருவான் என்று கருவூரா வெளியே வா என்றார் போகர். அக்கணமே அவர் முன்னால் வந்த கருவூரார் குருவே தாங்கள் கற்றுக் கொடுத்தபடி குறுகிய இடைவெளி வழியே வெளியே வரும் கலை மூலம் சிறையில் இருந்து வெளிப்பட்டேன் என்றார். பின்னர் போகர் மன்னனிடம் நடராஜர் சிலை அமைய வேண்டிய முறை கோயில் எழுப்ப வேண்டியே முறை ஆகியவற்றை போதித்து கருவூராருடன் மறைந்து விட்டார்.
வேத கோஷம் முழங்க அரங்கனை தரிசிக்க வந்தார் கருவூரார். அரங்கனைக் கண் குளிர தரிசித்து முடித்து வெளியே வந்தார். அப்போது நாட்டியம் ஆடும் அபராஞ்சி என்ற ஒரு தாசி அவரது காலடியில் விழுந்தாள். கருவூரார் என்ன விஷயம்? என்பது போல் ஒரு பார்வையில் கேட்டார். சற்று முன் கேட்ட வேத கோஷத்தில் யோக சாதனையில் தனக்குள்ள சில ஐயங்களைத் தீர்க்கச் சொல்லிக் கேட்டாள். இப்படியும் ஒரு தாசியா? பாட்டுக்கு நடனம் மட்டுமே ஆடாமல் அதன் பொருளையும் கேட்ட விதம் அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. அவள் ஆர்வத்தைப் பாராட்டி ஐயத்தை அங்கேயே தீர்த்து வைத்தார். ரங்கநாதரைப் பார்த்து உன் கழுத்து பவழ மாலையை என்னிடம் கொடு என்று கேட்டார். அடுத்த நிமிடம் அரங்கன் தன் கழுத்தில் இருந்த மாலையை கரூராரிடம் கொடுத்தார். அபரஞ்சி உனது கேள்வியால் என்னை வியப்பில் ஆழ்த்தி விட்டாய். ஆகையால் இதை என் பரிசாக வைத்துக் கொள். நீ எப்போது நினைத்தாலும் நான் வருவேன் என்று சொல்லி விட்டுக் கிளம்பி விட்டார். மறுநாள் காலை கோயிலுக்குள் வந்த அபரஞ்சியின் கழுத்தில் அரங்கனின் பழவ மாலை இருந்ததை கண்டு அவள் மீது ஆளுக்கு ஒன்றாய் குற்றச்சாட்டு வைத்தார்கள். கருவூரார் கொடுத்த பரிசு என்பதை அபரஞ்சி கூறி கருவூராரை மனதால் வேண்டினாள். கேள்விக்கு விளக்கம் சொல்லி அரங்கனின் மாலையை கொடுத்து விட்டு சென்றீர்கள். திருட்டு பட்டம் வந்து விட்டது என்று அழுகிறாள். கருவூரார் அங்கே மீண்டும் வந்து அரங்கனை சாட்சிக்கு அழைத்தார். அரங்கன் அசரீரியாய்ச் சாட்சி உரைத்தார். திருவரங்கக் கோயில் நிர்வாகத்தினர் அபரஞ்சியிடமும் கரூராரிடமும் மன்னிப்பு கேட்டார்கள்.
கருவூரார் நெல்லையப்பரிடம் ஒன்றாக கலந்ததற்கு இரண்டு விதமான வரலாறு உள்ளது. முதல் வரலாறு. கருவூரார் சித்தர் இறைவனிடம் ஓடுங்க வேண்டிய நேரம் வந்து விட்டதை உணர்ந்து மீண்டும் தான் பிறந்த ஊராகிய கருவூர் வந்து சேர்ந்தார். அங்கிருந்த வேதியர் ஒருவர் கருவூரார் ஊருக்குள் வந்திருப்பதை அறிந்து கொண்டார். பழைய பகை காரணமாக மன்னனிடம் சென்று முறையிட்டனர் . கரூராரை கொன்று விட மன்னர் உத்தரவிட்டார். கருவூரார் பயந்தவர் போல கோயிலை நோக்கி ஓடினார். காவலர்கள் கருவூராரை பிடிக்க பின் தொடர்ந்து ஓடினார்கள். கருவூரார் ஓடிப்போய் நெல்லையப்பர் சிவலிங்கத்தை தழுவிக் கொள்ள இறைவன் அவரை தம்மோடு ஐக்கியப்படுத்திக் கொண்டார்.
இரண்டாவது வரலாறு கருவூரார் சித்தர் இறைவனிடம் ஓடுங்க வேண்டிய நேரம் வந்து விட்டதை உணர்ந்து மீண்டும் தான் பிறந்த ஊராகிய கருவூர் வந்து சேர்ந்தார். அங்கு உள்ள ஆன்மீகப் போலித் தனங்களை அவர் கடுமையாக சாடினார். அதனால் அவர் மேல் வெறுப்பும் பொறாமையும் பகையும் சொந்த ஊரிலேயே எழுகிறது. குறிப்பாகப் போலியாக நியமங்கள் செய்யும் போலி வைதீகர்கள் சில பேர் அவர் மேல் அதிக பகைமை கொண்டார்கள். கருவூரார் ஒரு துர்மார்க்க வேத நிபுணர் என்று மன்னனிடம் சொன்னார்கள். அதற்கு சான்றாக அவரது வீட்டில் மது மாமிச படையல் வைக்கிறார் என்று மன்னனிடம் சொல்லி அவரை நம்ப வைத்தார்கள். அதே நேரம் சிலர் அவர் வீட்டில் மது மாமிசம் ஒளித்து வைத்தார்கள். கரூராரின் வீட்டில் மன்னனின் கட்டளைப்படி காவலர்கள் சோதனை செய்த போது மதுவும் மாமிசமும் யாகத் திரவியங்களாக மாறி இருந்தது. இதனால் மன்னனிடம் அந்த போலி வைதீகர்களுக்குப் பெருத்த அவமானமாகப் போய்விட்டது. இதனால் அதிக ஆள் பலத்துடன் சென்று சீடர்கள் யாரும் இல்லாத கருவூராரை எளிதாக அடித்து விடலாம் என்று அந்தப் போலி வைதீகர்கள் கிளம்பினார்கள். கரூரார் சிரித்தபடியே பயந்து ஓடுவது போல் நடித்து கோயிலுக்குள் ஓடினார். கரூராரை தொடர்ந்து அவர்கள் விரட்டினார்கள். கருவூரார் ஓடிப்போய் நெல்லையப்பர் சிவலிங்கத்தை தழுவிக் கொள்ள இறைவன் அவரை தம்மோடு ஐக்கியப்படுத்திக் கொண்டார். இறைவனுடன் கலந்து மறைந்த காட்சி தஞ்சைப் பெரிய கோயிலில் ஓவியமாகவும் நெல்லையப்பர் கோயிலில் சிற்ப வடிவிலும் உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதுார் கோவிலின் ராஜகோபுரத்தில் விஜய நகர அரசகால வண்ண ஓவியக் காட்சிகள் பல உள்ளன. அவற்றில் ஒரு காட்சியில் வன்னி மரத்தடியில் உள்ள விநாயகரை ஒருவர் அடுக்கு தீபம் காட்டி பூஜை செய்ய மரத்தின் அருகே கோலொன்றினை ஏந்தி நிற்கும் கருவூரார் ஒரு கையை உயர்த்தி சுட்டி காட்ட மீன் மழை பொழியும் காட்சி உள்ளது. அதில் கருவூர்த்தேவர் கூற என்ற தமிழ் பொறிப்பும் இடம் பெற்றுள்ளது. இதை போல மருத மரத்தின் கீழ் கருவூரார் புடைமருதுார் லிங்க பெருமானைக் கரம் கூப்பி வணங்கும் திருவுருவம் காணப்படுகிறது. இவ்விரு காட்சிகளிலும் தாடி மீசை சடை முடி ஆகியவை இன்றி இளம் வயது கோலத்துடன் தலையிலும் கழுத்திலும் உருத்திராட்ச மாலை தரித்தவராய் காட்சியளிக்கிறார். இந்த காட்சிகள் 17ம் நுாற்றாண்டில் வரையப்பட்டவை. பின்னர் தஞ்சை பெரிய கோவிலிலும் பிற இடங்களிலும் கருவூர்த் தேவரின் ஓவியங்கள் சிற்பங்களில் அவரை தாடி மீசையுடன் சடாபாரமம் தாங்கியவராய் யோகத்தில் அமர்ந்த நிலையில் காட்டியுள்ளனர்.
கருவூரில் ஒரு பசுபதீஸ்வரர் கோவிலில் கருவூராருக்கு தென்மேற்கு மூலையில் ஒரு தனி சன்னதி உள்ளது. தஞ்சை பெரிய கோயிலின் பிரகாரத்தில் கருவூராருக்கு தனி சன்னதி உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லையப்பர் திருக்கோயிலில் கருவூராருக்கு தனி சன்னதி உள்ளது. வாத காவியம், வைத்திய யோகம், யோக ஞானம், பல திரட்டு, குருநூல் சூத்திரம், மெய்ச் சுருக்கம், கற்பவிதி, முப்பு சூத்திரம், பூரண ஞானம், நொண்டி நாடகம், மூலிகை தைலம், விபரம் கர்ப்ப கூறு, அட்டமாசித்தி, பூசாவிதி இது போன்ற பல நூல்களை இயற்றியுள்ளார் கருவூரார். கற்ப மூலிகைகளைப் பற்றி அநேக பாடல்களை பாடியுள்ளார். பன்னிரு திருமுறைகளில் ஒன்பதாவதாக விளங்கும் திருமுறையில் திருவிசைப்பா திருப்பல்லாண்டு என்ற இரண்டிலும் இவரது திருப்பாடல்கள் அமைந்துள்ளது. தில்லை சிற்றம்பலம், திருக்களந்தை ஆதித்தேச்சரம், திருக்கீழ்கோட்டூர் மணியம்பலம், திருமுகத்தலை, திரைலோக்கிய சுந்தரம், கங்கை கொண்ட சோழபுரம், திருப்பூவணம், திருச்சாட்டியக்குடி, தஞ்சை பெரியகோவில், திருவிடைமருதுார் கோவில்களில் இவர் சிவனை போற்றி பாடல்கள் பாடியுள்ளார்.
இவரது பூர்விகம் வடநாட்டிலிருந்து வந்தவர் என்று கூறப்படுகிறது. திருவொற்றியூர் சுடுகாட்டில் சுடுகாட்டுச் சாம்பலை உடல் முழுதும் பூசிக்கொண்டு திகம்பரராக திரிந்தவர் இவர். சித்தரென்று அறியாமல் இவரைப் பித்தனென்று ஏசியும் கல்லெறிந்தும் விரட்டிய போதெல்லாம் அனைத்தையும் ஒரு புன்னகையுடன் ஏற்றுக் கொண்டவர் இவர். இவரது நிர்வாணக் கோலத்தைக் கண்ட காவல் துறையினர் ஒருநாள் இவரைப் பிடித்துப் போய் காவல் நிலையத்தில் ஒரு அறையில் அடைத்து வைத்தனர். இரவு நேரத்தில் காவலர் ஒருவர் அந்த அறையினுள் எட்டிப் பார்த்த போது சுவாமிகளின் உடல் பாகங்கள் தனித் தனியாகக் கிடப்பதைக் கண்டு திடுக்கிட்டுத் தனது மேலதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார். அவர்கள் வந்து பார்த்த போது சுவாமிகள் முழு உடலுடன் அவர்களைப் பார்த்து நகைத்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பின் சுவாமிகளின் பெருமை வெளி உலகிற்கு தெரிந்தது.
சுவாமிகளுக்கு சாலையோரக் கடைகளில் தேநீர் குடிப்பது மிகவும் பிடித்தமானது. அருகிலிருந்த கடைக்காரர் ஒருவர் தினமும் அதிகாலையின் முதல் தேநீரை சுவாமிகளுக்குக் கொடுத்துவிட்டுத் தான் வியாபாரத்தை துவங்குவார். வீரராகவ சுவாமிகள் ஏதேனும் ஒரு வீட்டின் முன் நின்று உணவு கேட்டால் அந்த வீட்டிலிருக்கும் துன்பங்கள் நீங்கிவிடும் என்று இப்பகுதி மக்களிடம் ஒரு நம்பிக்கை இருந்தது. பல அதிசயங்களைச் செய்து பக்தர்களின் குறைகளைத் தீர்த்து வைத்த சுவாமிகள் தாம் சமாதியாகும் நாளை முன்னதாகவே தெரிவித்து தமது சமாதியின் மீது பிரதிஷ்டை செய்ய வேண்டிய லிங்கத்தையும் அடையாளம் காட்டினார். 1964 ஆம் ஆண்டு சித்திரை மாதம் முதல் தேதி சதய நட்சத்திரத்தில் தமது உடலிலிருந்து ஆன்மாவை நீக்கிக் கொண்டார். அவரது சமாதியின் மீது பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள லிங்கத்தை, இங்கு வரும் பக்தர்கள் தொட்டு வணங்கவும் தாங்களாகவே அபிஷேகம் செய்யவும் பூஜை செய்யவும் இங்கு அனுமதிக்கப்படுகிறது. சுவாமிகளை தரிசிக்க திருவொற்றியூரில் எண்ணூர் முதன்மை சாலையில் பட்டினத்தார் சமாதிக்கு அருகில் உள்ள சுடுகாட்டின் வெளி காம்பவுண்டில் சுவாமிகளின் ஆலயம் அமைந்துள்ளது.
அருணகிரிநாதர் தமிழ் நாட்டில் கிபி 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர் ஆவார். இவர் திருவண்ணாமலையில் பிறந்தவர். இவர் தமிழ் மொழி வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவரைப் போல் ஆயிரக்கணக்கான இசைச் சந்தங்களிலே பாடியவர் வேறு யாரும் இல்லை. கருத்தாழமும் சொல்லழகும் இசைத்தாளச் செறிவும் நிறைந்தது இவரது பாடல்கள். அருணகிரிநாதர் தென்னிந்தியா முழுவதிலும் உள்ள கோயில்களுக்குச் சென்று 16000 பாடல்களை இயற்றினார். அவற்றுள் சுமார் 2000 பாடல்கள் மட்டும் இன்று வரை பாடப்படுகின்றன. அவரது பாடல்கள் நல்லொழுக்கம் மற்றும் நீதியுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான வழியைக் காட்டுகின்றன. இவருடைய மூதாதையர்கள் தற்போதைய பங்களாதேஷ் ராஜசாகி மாவட்டம் வரேந்திர கிராமத்திலிருந்து 11ம் நூற்றாண்டில் பிரபுடேவ மன்னன் காலத்தில் இங்கு குடியேறியதாக வரலாற்று செய்திகள் கூறுகின்றன.
காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்து வந்த திருவெண்காடாருக்கும் முத்தம்மைக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இவளுக்கு ஆதிலட்சுமி என்று பெயர் வைத்தார்கள். முத்தம்மைக்கு முருகக் கடவுள் மேல் அபார பக்தியாதலால் முருகப் பெருமானின் திருப்பாதங்களே சரண் என்று வாழ்ந்து வந்தாள். முருகன் கோயிக்குப் போவதிலும் முருகன் திருநாமத்தை ஜபிப்பதிலும் முருகக் கடவுளுக்குப் பூமாலை கட்டித் தருவதிலும் ஒருநாளும் அவள் தவறியதில்லை. முத்தம்மையின் முருக பக்தி தொடர்ந்து வந்தது. இவளுக்கு பெண் குழந்தை பிறந்திருந்தாலும் ஓர் ஆண் மகன் வேண்டும் என்று நாள் தோறும் பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள். முத்தம்மை செய்து வந்த தொடர் பிரார்த்தனைகளால் மூத்த பெண் ஆதிலட்சுமிக்கு நான்கு வயதாக இருக்கும் போது முத்தம்மைக்கு இரண்டாவது ஆண் குழந்தை ஆனிமாதம் மூல நட்சத்திரத்தில் அருளினான் முருகன். ஆண் குழந்தை பெற்ற மகிழ்ச்சியில் திளைத்தாள் முத்தம்மை. அக்குழந்தைக்கு அருணாச்சலேஸ்வர மலையின் பெயரை வைத்து அருணகிரி என்று பெயரிட்டாள் முத்தம்மை. அருணகிரியின் கைகளில் ஆறு விரல் இருந்தன. அதனால் முருகப் பெருமானின் ஆறு தலைகளையும் அவருக்குரிய சரவணபவ எனும் ஆறெழுத்து மந்திரத்தினையும் நினைவுறுத்துவது போல இருந்தது.
அருணகிரி பிறந்த மகிழ்ச்சியில் காசி யாத்திரை கிளம்பினார் திருவெண்காடர். யாத்திரை முடித்து அவர் வெகுகாலம் திரும்பி வரவில்லை காசியிலேயே தங்கி விட்டதாகக் கருதினாள் முத்தம்மை. சிறிது நாளில் கடுமையாக நோய் வாய்ப்பட்டாள் முத்தம்மை. தனக்கு நோய் முற்றி மரணம் நெருங்குவதை அறிந்து கொண்ட முத்தம்மை திருவண்ணாமலைக்கு வந்து விட்டாள். மரணம் நெருங்கிய காலத்தில் தன் மகள் ஆதிலட்சுமியை அழைத்தாள் முத்தம்மை. மகளே ஆதி என்ற உனது பெயரைப் போலவே ஆதி முதல் அந்தம் வரை இந்தக் குடும்பப் பொறுப்பு முழுவதும் உன் தலையில் விழுந்திருக்கிறது. நான் சேர்த்து வைத்துள்ள சொத்துகள் உன் வாழ்வைப் பாதுகாக்கும். நீ பாதுகாக்க வேண்டியது உன் தம்பியை. தவமாய்த் தவமிருந்து பெற்ற பிள்ளை. நீ அவன் மனம் நோகாமல் அவனை வளர்த்துவா. நீயே சிறுமி. உன்னிடம் இந்தப் பிஞ்சுக் குழந்தையை ஒப்படைக்கிறேன். இவனை முருக பக்தனாகப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். நீ இவனை நன்றாக வளர்ப்பாய் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்று கூறிய முத்தம்மை அருணகிரியின் கையைப் பற்றித் தன் மகள் ஆதிலட்சுமியின் கரத்தில் வைத்தாள். ஒரு பெருமூச்சோடு முருகா என்று உரத்து முருகன் நாமத்தை ஜபித்தாள். மறுகணம் மயில்மேல் அமர்ந்து முருகன் அவள் உயிரை ஏற்க ஓடோடி வரும் காட்சி அவள் கண்ணுக்கு மட்டும் தெரிந்தது. பெண்ணே நான் உன்னையும் ஆட்கொள்வேன். உன் மகன் அருணகிரியையும் பின்னாளில் ஆட்கொள்வேன் என்று சிரித்தவாறே வாக்குறுதி தந்தான் முருகன். முத்தம்மையின் முகத்தில் புன்னகை மலர்ந்து முக்தியடைந்தாள்.
அருணகிரியை வாரியெடுத்து முத்தமிட்டுத் தன்னோடு அணைத்துக் கொண்டாள் ஆதிலட்சுமி. தன் தாய் தனக்கிட்ட கட்டளையை எந்தக் குறைபாடுமின்றி நிறைவேற்றுவதென உறுதி கொண்டாள். திருமணம் செய்து கொள்ளாமல் தம்பியின் வாழ்க்கையையே நினைத்துத் தம்பிக்குச் சேவை செய்து வந்தாள் ஆதி. அருணகிரியே சிறு வயதில் இருந்து மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார் ஆதி. அருணகிரிநாதர் சிறு வயதில் இருந்தே பெண்ணாசை கொண்டவராய் இருந்தார். இந்த செய்தி தெரிந்தும் ஆதிலட்சுமி அம்மையார் விரைவில் இவர் திருந்துவார் என எதிர்பார்த்தார். ஏனெனில் அருணகிரி இளமையிலே நல்ல கல்வி கற்றுத் தமிழில் உள்ள இலக்கிய இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார். இளமையிலேயே திருமந்திரம் தேவாரம் திருமுருகாற்றுப்படை திருக்குறள் காரிகை ஆகிய தமிழ் நூல்களைப் படித்து அதில் புலமை பெற்றிருந்தார். உலா ஏசல் கலம்பகம் கோவைசிந்து தூது பரணி மடல் மாலை எனப்படும் நூல் வகைகளைப் பயின்றும் காம சாஸ்திர நூல்களை ஆராய்ந்தும் புலமை வாய்ந்து கவிபாடும் திறம் உடையவராயிருந்தார். உரிய வயதில் திருமணத்தை அவருக்கு செய்து வைத்தார் அவரது சகோதரி ஆதிலட்சுமி. ஆனாலும் இவருக்கு முற்பிறவியின் பயனாலோ என்னவோ பெண்களின் தொடர்பு அதிகமாய் இருந்தது. வீட்டில் கட்டிய மனைவி அழகியாய் இருந்தும் விதி வசத்தால் வெளியில் பரத்தையரிடமே உள்ளத்தைப் பறி கொடுத்ததோடு மட்டுமல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாய்ச் தனது சொத்தையும் இழந்தார். எந்நேரமும் காமத்திலே மூழ்கித் திளைத்ததன் விளைவாக சொத்தை இழந்ததோடு பெரும் நோயும் வந்து சேர்ந்தது அருணகிரிக்கு. அந்நிலையிலும் இவருக்குப் பெண்ணின் அண்மை தேவைப்பட கட்டிய மனைவியைக் நெருங்க முற்பட்டவரை மனைவி வெறுத்து ஒதுக்கினார். இதனால் இவர் சகோதரி தன்னை நெருங்குமாறு கோபத்துடனும் வருத்தத்துடனும் இவரிடம் சொல்ல தன் தீய செயல்களால் ஏற்பட்ட விளைவு குடும்பத்தையே உருக்குலைத்ததை எண்ணி இவர் வீட்டை விட்டே வெளியேறிக் கால் போன போக்கில் சென்றார். அப்போது ஒரு பெரியவர் இவரைத் தடுத்து ஆட்கொண்டார்.
அருணகிரிநாதரை தடுத்தாட் கொண்டது அருணாசலேஸ்வரர் என்றும் முருகக் கடவுள் என்றும் இரு வேறு கருத்துக்கள் உள்ளது. அந்தப் பெரியவர் அவருக்கு முருகக் கடவுளைப் பற்றிச் சொல்லி சரவணபவ ஆறெழுத்து மந்திரத்தையும் அதன் உட்பொருளையும் சரவணபவ என்னும் சொல்லின் தத்துவத்தையும் விளக்கி முருகனைப் போற்றிப் தவவாழ்வு வாழச் சொல்லி ஆசீர்வாதம் செய்தார். குழப்பத்தோடு இருந்த அருணகிரிநாதர் பெரியவர் சொன்னது சரியாகக் கேட்கவில்லை. ஒரு பக்கம் பெரியவரின் பேச்சு மறுபக்கம் குழப்பமான மனது. தவத்தினால் மனம் சற்றுத் தெளிவடைகிறது என நினைத்தால் மீண்டும் மீண்டும் குழப்பம். முருகனை நினைத்து தியானத்தில் அமர்ந்தால் மனம் ஈடுபட மறுக்கிறது. அமைதி வரவில்லை. தவம் வரவில்லை என்ன செய்யலாம்? குழப்பத்திலும் கவலையிலும் செய்வதறியாது தவித்த அருணகிரிநாதர் இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தார். திருவண்ணாமலைக் கோபுர வாயிலில் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அவர் கீழே குதித்த போது இரு கரங்கள் அவரைத் தாங்கி காப்பாற்றின. திகைத்த அருணகிரி தம்மைக் காப்பாற்றியது யார் எனப் பார்க்க முருகர் தன் திருக்கோலத்தைக் காட்டி அருளினான். மயில் வாகனனின் தரிசனம் கிடைத்த அருணகிரி வியப்பின் உச்சியிலிருந்தார். முருகன் அவரை அருணகிரிநாதரே என அழைத்துத் தம் வேலால் அவர் நாவிலே சரவணபவ என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து யோக மார்க்கங்களும் மெய்ஞ்ஞானமும் அவருக்குக் கைவரும்படி அருளினார். சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது. நாதர் என்ற பட்டத்தைப் பெற்ற அருணகிரி அன்று முதல் அருணகிரிநாதர் என்று அழைக்கப்பட்டார்.
அருணகிரிநாதர் உபதேசத்தை நேரடியாக முருகனிடமிருந்தே பெற்றதும் முருகனை இரு கரம் கூப்பித் தொழுதார். அப்போது முருகர் அருணகிரிநாதரே இந்தப் பிறவியில் இன்னும் செய்ய வேண்டியவை நிறைய உள்ளன உனக்கு. ஆகையால் இம்மையில் எம்மைப் பாடுவாயாக. பாடிப் பணிந்து பின்னர் எம்மிடம் வந்து சேருவாய் என்று அருளினார். முருகனின் கட்டளையால் மனம் மகிழ்ந்தாலும் பாடல் புனையும் வழி அறியாத தாம் எவ்விதம் கந்தனைப் பாடுவது எனக் கலங்கினார். அப்போது முருகர் யாமிருக்க பயமேன் அஞ்சேல் என்று சொல்லி முத்தைத் தரு பத்தித் திருநகை என பாடல் பாடுமாறு ஆரம்பத்தை எடுத்துக் கொடுத்து விட்டு முருகர் மறைந்தார். முருகர் வந்து உபதேசம் செய்து சென்ற பின்னர் திருவண்ணாமலை ஆலயத்தின் இளையனார் சந்நிதியில் பெரும்பாலும் மௌனமாக தவம் செய்து வந்தார் அருணகிரிநாதர். தவம் கலைந்த வேளைகளில் சந்தப் பாடல்களை மனம் உருகிப் பாடிவந்தார். சிறிது நாளில் அவரது உடம்பில் இருந்த நோய்கள் அனைத்தும் மறைந்து விட்டது. இவரின் இந்தப் பாடல்கள் யோகக் கலையை ஒட்டி அமைந்தவை. பரிபூரண யோக ஞானம் கைவரப் பெற்றவர்களுக்கு மட்டுமே இந்தப் பாடல்களின் உட்பொருள் புரியும். அப்போது திருவண்ணாமலையை ஆண்டு வந்தவன் விஜயநகர வம்சத்தைச் சேர்ந்த பிரபுடதேவராயன் என்னும் மன்னன். தெய்வ பக்தி மிகுந்த அவன் அருணகிரியாரைப் பற்றியும் அவருக்கு நேர்ந்த அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொண்டான். அருணகிரிநாதரைப் பணிந்து தனக்கும் அவருக்குக் கிடைத்த பாக்கியங்கள் கிடைக்குமாறு செய்யவேண்டும் என வேண்டிக் கேட்க அருணகிரிநாதருக்கும் அரசனுக்கும் நட்பு உண்டானது.
அருணகிரிநாதருக்கும் மன்னனுக்கும் உண்டான நட்பு அரண்மனையின் ஆஸ்தான பண்டிதன் ஆன சம்பந்தாண்டானுக்கு பொறாமையை உண்டாக்கியது. தேவியின் பக்தனான சம்பந்தாண்டான் தேவியின் குமாரனனான முருகனை பாடி தொழுது வந்த அருணகிரியிடம் ஏற்கெனவே பொறாமை கொண்டிருந்தான். இப்போது மன்னனும் அருணகிரியைப் பணிந்து அவர் சீடர் ஆக முயல்வதைக் கண்டதும் பொறாமை குணம் அதிகமாகி மன்னனைத் தடுக்க எண்ணம் கொண்டான் சம்பந்தாண்டான். அரசரிடம் நேரடியாக சென்றவன் அருணகிரிநாதரைப் பற்றி பேச ஆரம்பித்தான். அரசே நான் உங்கள் நெருங்கிய நண்பன். உங்கள் நன்மையே நாடுபவன். உங்களுக்கு நல்லதேயே செய்ய நினைக்கிறேன். அருணகிரிநாதர் பற்றி நீங்கள் சரிவர தெரியாமல் அவனிடம் நட்புக் கொண்டுள்ளீர்கள். இந்த நட்பு வேண்டாம். பரத்தையரிடமே தஞ்சம் எனக் கிடந்தவன் அந்த அருணகிரிநாதர். உற்றார் உறவினர்கள் அனைவரும் அவனை கைவிட்டனர். அத்தகைய பெருநோய் வந்திருந்தது அவனுக்கு. ஏதோ மாய வித்தையால் இப்போது அனைத்து வியாதிகளும் மறைந்திருக்கலாம். சித்து வேலைகளை எவ்வாறோ கற்றுக் கொண்டு முருகன் நேரில் வந்தான் எனக்குச் சொல்லிக் கொடுத்தான் நான் முருகனுக்கு அடிமை என்று சொல்லித் திரிகின்றான். அவன் பேச்சை நம்பவேண்டாம் என்று சொன்னான்.
அருணகிரிநாதரின் ஆன்ம பலத்தையும் அவரின் பக்தியையும் யோக சக்தியையும் அரசர் நன்கு உணர்ந்திருந்தார். அருணகிரியின் செந்தமிழ்ப் பாக்களும் அதன் சந்தங்களும் அவரைப் பெரிதும் கவர்ந்திருந்தன. சம்பந்தாண்டானிடம் பேசிய அரசர் நீங்கள் பெரிய தேவி உபாசகர் என்பதை நான் அறிவேன். அருணகிரிநாதர் பரிசுத்தமான யோகி. முருகன் அவரை உண்மையாகவே ஆட்கொண்டதோடு அல்லாமல் பாடல் பாடவும் அடியெடுத்துக் கொடுத்துள்ளான். அவரின் கடந்த கால வாழ்க்கை எவ்விதம் இருந்தாலும் இப்போது அவர் வாழ்வது பரிசுத்தமான துறவு வாழ்க்கை. முருகன் அருணகிரியை ஆட்கொள்ளவில்லை என்பதை உம்மால் நிரூபிக்க முடியுமா? என்று கேட்டான் அரசன். சம்பந்தாண்டான் இது தான் சமயம் என சாமர்த்தியமாக மன்னா தன்னை முருகனடிமை என்று சொல்லிக் கொண்டிருக்கும் அந்த அருணகிரியை அழையுங்கள். தேவி உபாசகன் ஆன நான் என் பக்தியால் அதன் சக்தியால் அந்தத் தேவியை இங்கே தோன்றச் செய்கிறேன். அதே போல் அருணகிரியும் தன் பக்தியால் அந்த முருகனைத் தோன்றச் செய்ய வேண்டும். தோல்வி அடைந்தால் ஊரை விட்டே ஓடவேண்டும் சம்மதமா? என்று சவால் விட்டான். அரசனும் தேவி தரிசனம் ஒருபக்கம் இன்னொரு பக்கம் முருகன் தரிசனம் சம்மதமே என்று சொன்னான் அரசன். குறிப்பிட்ட நாளும் வந்தது. அருணகிரிநாதருக்கும் விஷயம் சொல்லப்பட்டது. என் முருகன் என் அப்பன் என்னைக் கைவிட மாட்டான் என்ற பூரண நம்பிக்கையுடன் அவரும் சம்மதம் சொல்லிவிட்டார். மந்திர தந்திரங்களில் தேர்ந்த சம்பந்தாண்டான் தன் தந்திர வித்தையால் தேவியை வரவழைக்க முடியும் என்ற நம்பிக்கையில் இருந்தான். ஊரெங்கும் செய்தி பரவியது.
அருணகிரிநாதரை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று எண்ணிய சம்பந்தாண்டான் தன் தவ வலிமையால் தேவியிடம் அருணகிரிநாதரை வெற்றி பெற அருளவேண்டும் என்று கேட்டுக் கொண்டான். அதற்கு தேவியோ உனது தவ வலிமை அனைத்தையும் நீ வீணடித்து விட்டாய். ஆகவே இனி உனக்கு எமது காட்சி கிடைக்காது என்று அசீரிரியாக பதில் அளித்தாள். உடனே சம்பந்தாண்டான் தேவியிடம் ஒரு சிறு விண்ணப்பம் வைத்தான். அருணகிரிநாதர் நாளை முருகனை அழைத்துப் பாடும் போது முருகனை உனது அன்பினால் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். அருணகிரிநாதரின் புகழை உலகறியச் செய்ய நினைத்த தேவி இதற்கு சம்மதித்தாள்.
அருணகிரிநாதர் அரசர் சொல்லி அனுப்பிய இடத்திற்கு வந்தார். அனைவரும் அங்கு கூடி விட்டார்கள். தேவி உபாசகன் ஆன சம்பந்தாண்டான் தான் வழிபடும் தேவி தான் அழைத்ததும் வந்து விடுவாள். முதலில் அருணகிரிநாதரை முருகரின் தரிசனத்தை கிடைக்க செய்யுங்கள் என்றான். அனைவரும் அருணகிரியாரை மிகுந்த ஆவலுடன் நோக்கினார்கள். அருணகிரிநாதர் முருகரை நினைத்து திருப்புகழ் பாடினார். முருகரை தேவி தன் அன்பானால் பிடித்து வைத்துக் கொண்டிருந்தாள் ஆகையால் முருகர் தரிசனம் அங்கு கிடைக்கவில்லை. முருகர் ஏன் வரவில்லை என்று தன் ஞான திருஷ்டியில் கண்டு கொண்ட அருணகிரிநாதர் சம்பாந்தாண்டானின் சூழ்ச்சியை அறிந்து கொண்டார். முருகனை மனதில் தியானித்துப் பின்னர் அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் வடக்குப் பக்கம் இருக்கும் மண்டபத்தின் வடகீழ்த் தம்பத்தில் முருகன் காட்சி அளிக்கும்படி வேண்டிக் கொள்வதாயும் இறைவன் திருவருளால் காட்சி கிடைக்கும் என்றும் சொல்லி விட்டுக் கோயிலை நோக்கி நடக்கலானார். அனைவரும் அவரைப் பின் தொடர்ந்து சென்றார்கள். அருணகிரிநாதர் பக்திப் பரவசத்துடன் மனமுருகி மயிலை துதித்துப் பாட ஆரம்பித்தார். பாடி முடித்ததுதான் தாமதம் மயில் வாகனன் மயில் மீது அமர்ந்த திருக்கோலத்தில் கையில் வேல் தாங்கியபடி அங்கே அனைவரும் பார்க்கும் வண்ணம் தோன்றி மறைய கூடி இருந்த கூட்டம் பக்திப் பரவசத்தில் ஆனந்தக் கூத்தாடியது. அருணகிரிநாதரின் மகிமையை அனைவரும் உணர்ந்து கொண்டார்கள். இப்போது சம்பந்தாண்டானின் முறை வந்தது. சம்பந்தாண்டான் எவ்வளவோ முயற்சித்தும் தேவி தோன்றவே இல்லை. கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. சம்பந்தாண்டானின் தோல்வி உறுதியானது. சம்பந்தாண்டான் அவமானத்துடன் வெளியேறினான்.
அருணகிரிநாதர் தொடர்ந்து தல யாத்திரையாகத் தமிழ்நாட்டில் உள்ள தலங்களைத் தரிசித்து அங்குள்ள முருகப் பெருமான் மேல் திருப்புகழ் பாக்களைப் பாடி வந்தார். வயலூருக்கு வருமாறு ஆணையிட்ட முருகனை வயலூர் சென்று தரிசித்தார். விராலிமலைக்கு வருமாறு கூறி வழியையும் காண்பித்தார். அத்தலத்தையும் அருணகிரிநாதர் சென்று வணங்கினார். முருகனை நாடி திருப்பரங்குன்றம் வந்தார். மனமுருகி வழிபட்டபின் திருச்செந்தூர் வந்தார். திருச்செந்தூர் செல்லும் வழி காடாக இருந்ததால் மயில் அவருக்கு வழி காட்டியது. செந்திலாண்டவன் அவருக்கு நடராஜரைப் போல திருத்தாண்டவம் ஆடினார். ஆறுபடை வீடுகள் தவிர தமிழகத்தில் சுமார் 200 தலங்களைத் தரிசித்து வடநாடு ஈழநாடு முதலிய பல தலங்களுக்கும் சென்று அங்குள்ள முருகனைத் தரிசித்தார்.
அருணகிரிநாதர் ஒவ்வொரு ஊராக சென்று கொண்டிருக்கும் போது இடையில் வந்த தென்பெண்ணையாற்றின் வளங்கொழிக்கும் நடுநாட்டில் சனியூர் என்ற ஊரில் ஒரு வைணவப் பெரியார் இருந்தார். அவர் பெயர் வில்லிபுத்தூரார். இவர் சந்தக்கவி பாடுவதில் வல்லவர். வியாச பாரதக் கதையை தமிழில் மணிப்பிரவாள நடையில் எழுதி பெரும் புகழ் பெற்றவர். வரபதியாட் கொண்டான் என்ற கொங்கு நாட்டு அரசனின் அரசவைப் புலவராக வீற்றிருந்து அரசர்க்குரிய அனைத்து மரியாதைகளுடன் வரகவி என்று மக்களால் போற்றப்பட்டவர் இப்படி தனக்கு ஏற்பட்ட புகழால் கல்விச் செருக்குண்ட வரகவி தம்மிடம் வாதுக்கு வருபவர்களை வென்று கவிபாடி காது அறுப்பார். இவர் அருணகிரியாரின் அருட்செயல்களைக் கேட்டு பொறாமை அடைந்தார். கவிஞர்களின் காதுகளை அறுக்கும் அடாத செயலைக் கேட்டறிந்த அருணகிரியார் வருத்தப்பட்டார். இச்செயல் இனி நடக்காதவாறு தடுக்க வேண்டும் என்ற கருணையினால் வில்லிபுத்தூராரை சந்தித்து போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். மன்னர்கள் கூடிய பேரவையில் அருணகிரநாதருக்கும் வில்லியாருக்கும் பல்வேறு வகையான வாதங்கள் நடந்தன. ஒரு முடிவுக்கு வர இயலாத நிலையில் ஒருவர் பாட மற்றொருவர் பொருள் கூறவேண்டும் என்ற நிபந்தனை ஏற்பட்டது. பொருள் சொல்ல முடியாதவர் தோற்றவராவர் என முடிவு செய்யப்பட்டது. முதலில் அருணகிநாதர் கந்தர் அந்தாதி என்ற பிரபந்தம் பாடினார். ஒவ்வொரு பாடலுக்கும் வில்லியார் பொருள் விளக்கம் கூறிவந்தார். 54-ஆம் பாடலகிய
திதத்தத்தத் தித்தக திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதிதித்த தேதுத்த தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாத திதேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே என்ற பாடலுக்கு பொருள் கூற முடியாமல் வில்லிபுத்தூரார் திகைத்தார். பாடல் முழுவதும் தகர வர்க்கத்தால் ஆனது இப்படி ஒரு பாடல் இருக்காது இது பொய் பாடல் என்று வில்லிபுத்தூரார் கூறினார். இது மெய்ப்பாடலே இப்பாடலின் விளக்கத்தை கற்றோர் ஏற்றுக் கொள்ளுமாறு அருணகிரிநாதர் எடுத்துரைத்தார். அரசவை அருணகிரியாரைப் பாராட்டியது. வில்லிபுத்தூரார் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு காதருக்கும் கருவியை அருணகிரியாரிடம் கொடுத்து தன் காதை அறுக்குமாறு செருக்கு அழிந்து பணிந்து நின்றார். கருணைமிகுந்த அருணகிரிநாதர் அவ்வாறு செய்யவில்லை. இனி எங்கும் யாரையும் வாதுக்கு இழுத்து காதை அறுக்காதீர்கள். நன்று தமிழ்ப்பணி செய்வீர் என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு கிளம்பினார். அன்று முதல் காதறுக்கும் தொழிலைக் கைவிட்டார் வில்லிபுத்தூரார். கருணைக்கு அருணகிரி என மக்களால் போற்றப்பட்ட அருணகிரிநாதர் மீண்டும் திருவண்ணாமலை வந்தடைந்தார்.
அருணகிரிநாதரிடம் தோல்வி அடைந்த சம்பந்தாண்டான் அவரை பழி வாங்கத் துடித்தான். அந்த நேரத்திற்காக காத்திருந்தான். சில ஆண்டுகளில் மன்னன் பிரபுடதேவனின் கண் பார்வையில் கோளாறு ஏற்பட்டது. அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சம்பந்தாண்டான் தேவலோகத்தில் உள்ள பாரிஜாத மலரை கொண்டு வந்தால் மன்னனுக்கு மீண்டும் பார்வை கிடைக்கும் என்றான். அதோடு அந்த மலரை கொண்டு வரும் ஆற்றல் அருணகிரிநாதருக்கு மட்டுமே இருப்பதாகவும் கூறினான். உடனே அருணகிரிநாதரை அழைத்த மன்னன் தேவலோகம் சென்று பாரிஜாத மலரை கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டார். அதை ஏற்றுக் கொண்ட அருணகிரிநாதர் திருவண்ணாமலை பேக் கோபுரத்துக்கு சென்றார். அங்கு தவத்தில் ஆழ்ந்தார். பிறகு கூடு விட்டு கூடு பாயும் சக்தி மூலம் தனது உயிரை உடம்பில் இருந்து பிரித்தார். அங்கு இறந்து கிடந்த கிளி உடம்பில் உயிரை செலுத்தி தேவலோகத்துக்கு பறந்து சென்றார். இதையெல்லாம் மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருந்த சம்பந்தாண்டான் சடலமாக கிடந்த அருணகிரிநாதரின் உடலை அரசனிடம் காண்பித்து அருணகிரிநாதர் இறந்து விட்டார் என்று கூறி அனைவரையும் நம்ப வைத்தான். அரசனும் உண்மை அறியாது அவ்வுடலைத் தகனம் செய்தான். பாரிஜாத மலருடன் திரும்பிய அருணகிரிநாதர் தம் உடலை காணாது தேடினார். தன் உடல் அழிக்கப்பட்டதை கடவுள் செயலாகக் கருதினார்.
அருணகிரிநாதர் கிளி உருவத்தில் சென்று மன்னனிடம் பாரிஜாத மலரை கொடுத்தார். அப்போது அவர் மன்னிடம் நான் இறைவனிடம் சுகபதம் (முக்தி) வேண்டினேன். எனக்கு சுக (கிளி) உருவம் கொடுத்து விட்டார் என்றார். அதன்பிறகு கிளி உருவிலேயே கோபுரத்தில் அமர்ந்து கந்தர் அந்தாதி திருவகுப்பு மற்றும் கந்தர் அனுபூதியை அருணகிரிநாதர் பாடினார். ஒரு ஆனி மாதம் மூல நட்சத்திரம் கூடிய பவுர்ணமி நாளில் முருகனின் திருவடியை அருணகிரிநாதர் அடைந்தார். அவரது ஆன்மாவை தாங்கியிருந்த கிளி உண்ணாமுலை அம்மன் கையில் போய் அமர்ந்து விட்டதாகவும் திருத்தணியில் உள்ள முருகன் கையில் அமர்ந்ததாகவும் இருவேறு கருத்துக்கள் உள்ளது. திருவண்ணாமலை தலத்தில் அருணகிரிநாதர் கோபுரத்தின் உச்சியில் இருந்து கீழே குதித்த போது முருகரால் தாங்கி பிடிக்கப்பட்ட இடத்தில் கோபுரத்து இளையனார் என்ற பெயரிலும் கம்பத்தில் முருகர் காட்சியளித்த இடத்தில் கம்பத்து இளையனார் என்றும் முருகனுக்கு சன்னதிகள் அமைந்துள்ளன.
அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ் பாடல்கள் பல ஆண்டுகளாக இங்கும் அங்கும் எனச்சில ஓலைச் சுவடிகளில் பிரதி இருந்தன. 1871 இல் வ.த. சுப்ரமணிய பிள்ளை ஒரு மாவட்ட நடுவராக பணியாற்றியவர். அவர் சிதம்பரம் சுற்றுப்பயணத்தில் இருந்த போது அதிகாலை பண்டாரம் ஒருவரால் ஒரு திருப்புகழ் பாடலின் வரிகளை கேட்கும் வாய்ப்பைப் பெற்றார். பாடலால் ஈர்க்கப்பட்ட அவர் திருப்புகழ் பாடல்களின் முழுத் தொகுப்பையும் தேடும் பணியை மேற்கொள்ள முடிவு செய்தார். அவர் தென்னிந்தியா முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். எழுத்தோலை சுவடிகள் உள்ளிட்ட திருப்புகழ் கையெழுத்துப் பிரதிகளை சேகரித்து இரண்டு தொகுதி நூல்களாக வெளியிட்டார். அவரது மறைவுக்குப் பிறகு அவரது மகன் வ.சு செங்கல்வராய பிள்ளையால் விளக்கம் எழுதப்பட்டு புத்தகமாக வெளியிடப்பட்டது. திருப்புகழை மக்களிடையே பரவச் செய்தவர்களில் ஒருவர் வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் ஆவார். திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் மாணிக்கவாசகர் கண்ணப்ப நாயனார் திருமழிசை ஆழ்வார் முதலிய அடியார்கள் குறித்தும் திருப்புகழில் அருணகிரிநாதர் குறிப்பிட்டுள்ளார்.
அருணகிரிநாதர் இயற்றியவை
கந்தர் அந்தாதி 102 பாடல்கள்
கந்தர் அலங்காரம் 108 பாடல்கள்
கந்தரனுபூதி 52 பாடல்கள்
திருப்புகழ் 1307 பாடல்கள்
திருவகுப்பு 25 பாடல்கள்
சேவல் விருத்தம் 11 பாடல்கள்
மயில் விருத்தம் 11 பாடல்கள்
வேல் விருத்தம் 11 பாடல்கள்
திருவெழுகூற்றிருக்கை
குதம்பை என்ற ஆபரணத்தை காதில் அணிந்திருந்ததால் குதம்பை சித்தர் என்று பெயர் பெற்றார். பசுக்களை மேய்க்கும் தொழில் செய்து வந்த தம்பதியருக்கு பிறந்தவர். குதம்பை சித்தர் ஆடி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் ஆண்குழந்தையாக இருந்தாலும் இவரது அன்னை இவருக்கு பெண் குழந்தைகளுக்கு காதில் அணிவிப்பது போல் குதம்பை என்று சொல்லக்கூடிய ஒரு தொங்கட்டான் அணிவித்தாள். அந்த அணிகலனின் அழகால் குதம்பை என்றே மகனை அழைக்க ஆரம்பித்து விட்டாள். அந்த பெயரே அவருக்கு நிரந்தரமாகியது. குதம்பைச் சித்தருக்கு பதினாறு வயதாகும் போது அவருக்கு ஞான உபதேசம் செய்வதற்காக மாதவர் ஒருவர் வந்தார். அவரை வணங்கி நின்ற குதம்பையரிடம் நீ சென்ற பிறவியில் உய்வடையும் பொருட்டு கடுந்தவம் செய்தாய். ஆனால் தவம் முழுமை அடையும் முன்பே உன் காலம் முடிந்து நீ இறந்து போனாய். அந்த தவத்தை தொடர்ந்து செய்து இறைவனை அடைவதற்காகவே இப்பிறவியில் வந்திருக்கிறாய் என்றார். குதம்பையார் மிகுந்த பணிவுடன் அவற்றையெல்லாம் கேட்டு தன்னை ஆசிர்வதித்து இப்பிறவியிலும் தவம் தொடர ஆசி வேண்டினார். யாருக்கு மாதவர் குரு அருளுபதேசம் செய்த பின் சென்ற பிறவியின் தவத்தின் பயனால் தான் நீ என்னிடம் உபதேசம் பெற்றாய். நான் உபதேசித்ததை அனுபவத்தில் கொண்டு வெற்றி பெறுவாய் என்றார்.
குதம்பை வீட்டிற்கு வந்தார். அவருக்கு திருமணம் செய்வதற்காக அவரது தாய் பெண் பார்த்து வைத்திருந்தார். தனது தாயிடம் உடலைக் கட்டுப்படுத்தி வைக்க வெண்காயம் (பால் காயம்) இருக்கிறது. மிளகு இருக்கிறது சுக்கு இருக்கிறது. இவற்றைக் கலந்து மருந்தாக்கி உட்கொண்டால் ஒரு பெண்ணின் காயம் (உடல்) நமக்கு எதற்கு தேவைப்படப் போகிறது? பெண் இன்பத்தால் சித்திக்காத மன இன்பம் இந்த மருந்தால் சித்திக்காதோ என்றார் குதம்பை. தாய்க்கு அதிர்ச்சி என்னடா சித்தன் போல் பேசுகிறாயே இல்லறமே துறவறத்தை விட மேலானது. உன்னைப் பெற்றதால் நான் மகிழ்ந்தேன். நீ பெறும் குழந்தைகளாலும் நான் மகிழ வேண்டும். ஒரு தாயின் நியாயமான ஆசை இது. அதை நிறைவேற்றி வை அம்மாவின் கண்ணீர் குதம்பையாரை வருந்தச் செய்யவில்லை. அவரது எண்ணமெல்லாம் முந்தைய பிறவியின் தொடர்ச்சியாக தவம் செய்வதிலேயே இருந்தது. அன்றிரவு குதம்பைச் சித்தர் யாருக்கும் தெரியாமல் எழுந்து ஒரு காட்டிற்குள் புகுந்தார். அங்கிருந்த ஒரு மரப்பொந்தில் நுழைந்து தவ நிலையில் ஆழ்ந்தார். பல வருட தவத்திற்கு பிறகு ஒரு நாள் இறைவனின் அசீரீரீ அவருக்கு கேட்டது.
குதம்பை உன்னால் இந்த உலகத்துக்கு இன்னும் நன்மைகள் நடக்க வேண்டியிருக்கிறது. நீ இப்போது இருப்பது விந்திய மலைப்பகுதியில். இங்கே பல யானைகள் இருக்கின்றன. இந்த யானைகளுக்கு மந்திரங்களை ஈர்க்கும் சக்தியுண்டு. உனக்கு மழை பெய்வதற்குரிய வருண மந்திரத்தை உபதேசிக்கிறேன். இந்த மந்திரத்தை இங்குள்ள யானைகளின் காதில் விழும்படியாக நீ உச்சாடனம் செய். அவை பிளிறும்போது அந்த ஓசை மந்திரமாக வெளிப்படும். அப்போது பூமியில் அமுதம் போல் மழை கொட்டும். அந்த மழையால் உலகம் செழிப்படையும் என்று குதம்பையாருக்கு வருணமந்திரத்தை உபதேசித்தார். குதம்பையாரும் காட்டில் இருந்தபடியே அதை உச்சாடனம் செய்தார். மழை பொழிந்து காடு செழித்தது. தம் அனுபவங்களை 32 பாடல்களாக பாடியுள்ளார். அந்தப் பாடல்கள் தான் குதம்பைச் சித்தர் பாடல்களாக உள்ளன.
குதம்பைச் சித்தர் மயிலாடுதுறையில் சித்தியடைந்தார். மயிலாடுதுறை மாயூரநாதர்கோயிலில் சிவன் சன்னதி சுற்றுப்பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி அருகில் குதம்பை சித்தர் ஜீவ சமாதி உள்ளது. ஜீவ சமாதியின் மேல் விநாயகாரின் திருவுருவம் உள்ளது மழை வேண்டி இவருக்கு விசேஷ பூஜை செய்தால் மழை பொழியும். ஆரம்ப காலத்தில் இங்கிருந்த சந்தன மரத்தில் உருவான விநாயகர் இவர். அகத்தியரால் வழிபடப்பட்டவர் என்பதால் இவரை அகத்திய சந்தன விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார். கடவுளின் உண்மை உணர்ந்த ஞானிகளுக்கு உடலை வளர்க்கும் காயகற்பங்கள் தேவையில்லை என்பது குதம்பையாரின் தனிக் கருத்தாகும். நோயற்ற வாழ்வு வாழும் அவர்களுக்கு யோக சித்திகள் மூலம் உடலை வலுப்படுத்தும் காயகற்பம் தேவையா என்ற வினாவை எழுப்பிய அவர் வாசியோகமான பிரணாயமத்தை பின்பற்றும் ஒருவருக்கு யோகம் தேவையில்லை என்று தனது கருத்தை சொல்கிறார்.
பழனியம்பதியின் சித்த விலாச கணக்குப்படி வைகாசி மாதத்தில் பரணி நட்சத்திரத்தில் பிறந்த போகரின் பிறப்பு மூலம் பற்றி வேறு செய்திகள் இல்லை. அகத்தியரின் சீடனாக இருந்தார். திருமூலரின் சீடரான நவசித்தர்களில் ஒருவரான காலாங்கி நாதரின் மாணவராகவும் இருந்தார். இவர் பதினெட்டு சித்தர் வரிசை தோன்றுவதற்கு முன்பு நவசித்தர்களே பிரதானமாகக் கருதப்பட்டனர். மேரு மலையும் இமய மலையும் உலகப் பற்றில்லாத சித்த புருஷர்கள் பெருமளவு சஞ்சாரம் செய்யும் ஒரு இடமாகவே விளங்கியது. இங்கே தான் நவநாத சித்தர்கள் வசித்து வந்தனர். அவர்களுள் ஒருவர் காலாங்கி நாதர். போகர் வந்த சமயம் அவர் மகாசமாதியில் இருந்தார். போகர் சமாதியில் உள்ள காலாங்கி நாதரை வணங்கி அவ்விரு மலைகளிலும் பல தாது வகைகளை தேடிக்கண்டு பிடித்தார். அதைக் கொண்டு பல காய கற்பங்களை செய்து தானே உண்டு பார்த்து அதன் பயனையும் உடனே அடைந்தார். இதனால் அவரது தேகம் மிகவும் திடமாகியது. மேலும் வானவெளியில் பறப்பது நீர்மேல் நடப்பது போன்ற செயல்பாடுகள் எல்லாம் மிக மிகச் சாதாரணமாகியது. இதனால் போகருக்குள் கர்வம் துளிர்த்துவிட்டது. காலாங்கி நாதருக்கு சீடர்கள் இருந்திருந்தால் அவர்கள் கூட இப்படி எல்லாம் அறிந்திருக்க மாட்டார்கள் என்றெல்லாம் நினைக்கத் தொடங்கிவிட்டார். இதனால் இமய மலையில் பணிவாக பார்த்துப் பார்த்து நடந்தவர் நிமிர்ந்து நெஞ்சு நிமிர்த்தி நடக்க ஆரம்பித்தார். மேருவிலும் இமயத்திலும் சூட்சம வடிவில் பலநூறு சித்த புருஷர்கள் தவமியற்றி வந்தனர். அவர்களில் பலரது தவம் போகரின் கர்வமான நடையால் கலைந்தது. அவர்கள் கண் விழித்ததோடு போகருக்கும் காட்சியளித்தனர். திடுக்கிட்ட போகரிடம் நாங்கள் காலாங்கி நாதரின் மாணவர்கள் பலப்பல யுகங்களாக எங்களை மறந்து தவம் செய்தபடி இருக்கிறோம் என்றார்கள். அத்தனை யுகங்களும் சில நாட்கள் கடந்தது போலத்தான் இருக்கிறது என்று அவர்கள் கூற போகருக்கு அது ஆச்சரிய அதிர்ச்சியாகியது. அப்படியானால் அவர்கள் தவத்தை எவ்வளவு பெரிய விஷயமாக கொண்டிருக்க வேண்டும் என்றும் தோன்றியது. அந்த நொடி தான் கற்ற தாதுவித்தை எல்லாம் அந்த தவத்தின் முன்னால் மிக அற்பமானது என்கிற எண்ணம் ஏற்பட்டு அவரது கர்வமும் அடங்கியது. அதை அறிந்த அந்த சித்தபுருஷர்கள் போகருக்கு பல சித்த ரகசியங்களை போதித்தார்கள். ஒரு சித்தர் போகர் மீது பெரும் கனிவு கொண்டு அமிர்தமணிப்பழம் என்னும் தேவக்கனி மரம் ஒன்றை காட்டி அதன் பழங்களை உண்ணச் சொன்னார். அதை உண்டால் ஆயுள் முழுக்க பசிக்காது நரைக்காது முதுமை உண்டாகாது. இதில் உள்ள பழத்தை சாப்பிட்டு விட்டே இங்குள்ளோர் காலத்தை வென்று தவம் செய்கின்றனர் என்று கூறினார்கள்.
போகர் அந்தக் கனிகளை உண்டு உடம்பின் பிணியாகிய பசி தாகம் மூப்பு என்கிற மூன்றிலிருந்தும் விடுதலை பெற்றார். தானறிந்த மருத்துவ மூலிகை ரகசியங்களை நூலாக எழுதினார் அவைதான் போகர் ஏழாயிரம் போகர் நிகண்டு 17000 சூத்திரம் 700 யோகம் போன்றவை. நோயின்றி வாழ வைக்கும் பல அரிய குறிப்புகளை எழுதினார். இதனால் இவருக்கு எதிர்ப்பும் தோன்றியது. பல சித்த புருஷர்கள் இவரை பெரிதும் எதிர்த்தனர். சித்த ரகசியங்களை எழுதிவைப்பது ஆபத்து என்றனர். மனிதன் அனுபவிக்க வேண்டிய கர்மங்களை முற்றாக நீக்க முயற்சிப்பது இயற்கைக்கே ஊறு விளைவிக்கும் என்றெல்லாம் புகார்கள் கூறினர். போகர் அவற்றை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. சஞ்சீவி மூலிகை ஒருவர் கையிலும் அகப்படாதபடி விலகி ஓடும் இயல்பு உடையது. இதை அறிந்த போகர் அதை ஒரு மந்திரத்தால் கட்டி பின்பு அதை கைப்பற்றி காட்டினார். அந்த மந்திரம் தம்பணா மந்திரம் எனப்படுகிறது அமிர்தத்துக்கு இணையான ஆதி ரசத்தையே இவர் கண்டறிந்தார். அதைக் கொண்டு இரும்பைத் தங்கமாக்கலாம். ஆதிரசமோ அமிர்தமோ தேவர்களுக்கே உரியது. அசுரர்களோ மானிடர்களோ அதை உண்டால் அதனால் உலகம் அழிந்து விடும் அபாய நிலை உருவாகும் என்று பல சித்த புருஷர்கள் அஞ்சினர். தங்கள் அச்சத்தை தட்சிணா மூர்த்தியாகிய சிவபிரானிடம் கூறிட சிவபிரானும் அவர்களது கவலையை நீக்குவதற்காக போகரை அடைந்து அவர் அறிந்து எழுதிய அவ்வளவு ரகசியங்களையும் கேட்டார்.
போகர் எழுதியதை போகர் போல ஒரு சித்தரால் அன்றி சராசரி மனிதர்களால் விளங்கிக் கொள்ள இயலாது என்பதை அதன் மூலம் அறிந்த அவர் போகரின் முயற்சியை ஆசிர்வதிக்கவே செய்தார். அதன்பின் இவர் புகழ் பலமடங்கு பெருகியது. பலரும் இவரிடம் வந்து கற்பங்கள் குளிகைகள் பெற்றுச் சென்றனர். மொத்தத்தில் மனித சமூகத்தை இம்மண்ணில் உள்ள பொருட்களைக் கொண்டே தேவர்களுக்கும் கந்தவர்வர்களுக்கும் இணையாக ஆக்கினார். அண்டை நாடான சீன தேசமும் நமது நாவலந் தீவாகிய பாரத தேசமும் புவி இயலில் அனேக ஒற்றுமைகள் கொண்டிருந்தன. இதனால் மூலிகைச் செல்வங்கள் இவ்விரு தேசங்களில்தான் மிகுந்து காணப்பட்டது. எனவே வான்வழியாக அடிக்கடி சீனதேசம் சென்று வருவது போகரின் வழக்கமாகியது. அங்கே போ யாங் என்ற ஒரு சீன யோகியின் உடம்புக்குள் கூடுவிட்டு கூடு பாயும் முறையில் புகுந்து சீனராகவே வாழ்ந்தார். போகர் தமிழில் ஏராளமான நூல்களை இயற்றியிருந்த போதும் அவற்றைவிட அதிகமாக சீன மொழியில் எழுதியுள்ளார். அகத்தியர் தமது சௌமிய சாகரத்தில் போகர் இயற்றிய நூலின் பட்டியலைத் தருகிறார்.
இவைகளில் போகர் 12000 மற்றும் இரண வாகடம் நூல்கள் கிடைக்கவில்லை. போகரின் நூல்கள் யாவுமே அமுதமாகும் என்று காக புஜண்டர் தமது பெருநூல் காவியம் 144வது பாடலில் கூறியுள்ளார். அவர் இயற்றிய சப்தகாண்டம் என்ற நுலில் 1799 1800 ஆம் பாடலில் விமான தொழில் நுட்பத்தை பற்றிய குறிப்பையும் அதை எப்படி செய்யவேண்டும் என்றும் அதை வைத்து அவர் பறந்ததையும் தெள்ளத் தெளிவாக கூறிப்பிட்டிருக்கிறார் அது மட்டும் அல்ல 1926 ஆம் பாடலில் நீராவி இஞ்சின் (steam engine) வைத்து கப்பலை எப்படி இயக்குவது என்றும் கப்பலின் மாடலையும் குறிப்பிட்டிருக்கிறார்.
போகர் தான் உருவாக்கிய மரக்கப்பலில் என்னனென்ன எப்படி இருக்கிறது என்று தன்னுடைய நூலில் விவரித்திருக்கிறார். அதன்படி ஒரு மரக்கப்பல் 2400 அடி நீளம் 300 அடி அகலம் 300 அடி உயரம் 7 மாடிகள் 64 அறைகள் அவற்றிற்கு கிழக்கும் மேற்குமாய் வாயில்கள் தெற்கும் வடக்குமாக ஜன்னல்கள் ஒவ்வொரு மாடியிலும் 128 வாயில்கள் இவற்றை சிந்தித்து பார்த்தால் ஒரு அரண்மனை போல் இருக்கும். இந்த கப்பல் நீராவியின் மூலம் இயங்கும் தொழில் நுட்பத்தில் செய்திருக்கிறார். சீனாவில் இருந்தபோது அமைத்த அந்த கப்பலில் சீன மக்களையும் ரிஷிகள் பலரையும் ஏற்றிக்கொண்டு உலகைச் சுற்றி ஏழு கடல்களையும் காண்பித்ததாக பல பாடல்களின் மூலமாக அறிந்து கொள்ளலாம். போகர் தனது மரக்கப்பலில் உலகைச் சுற்றிய அனுபவம் உலகுக்கும் பற்பல அறிவியல் நன்மைகளை வழங்கின. நிலம் ஒரு பங்கு நீர் மூன்று பங்கு என்று புவிச்சூழல் அமைப்பை முதலில் சொன்னவர் போகர். கடல் பயணத்தின் போது கடும் பாறையை பாயும் சுறாவைக் கண்டறிந்து விலகிச் செல்ல கப்பலுக்குள் கண்ணாடிக் கருவி கண்டுபிடித்து அமைத்திருந்தார் போகர்.
போகர் தான் உருவாக்கிய விமானத்தில் என்னனென்ன எப்படி இருக்கிறது என்று தன்னுடைய நூலில் விவரித்திருக்கிறார். இதற்கு அவர் பட்டம் என்று பெயரிட்டிருக்கிறார். 30 அடி நீளம் 30 அடி அகலம் என சதுர பரப்பில் பட்டம் செய்தார். ஒரு குடை ராட்டினம் போல் அதை அமைத்து பறக்க வைத்தார். காந்த கொலுசுகளும் நார்ப்பட்டு கயிறுகளையும் வைத்து உருவான தொழில்நுட்பத்தில் பட்டம் செய்து பறக்கவிட்டார். மக்களை ஏற்றிக் கொண்டு முதலில் முப்பது மைல் தூரம் பறந்து இருக்கிறார். போகர் இந்த பட்டத்தின் துணையுடன் சென்ற நாடுகள் அதன் வழியாக சித்தர்கள் அதிகமான பாடங்களை கற்றிருக்கிறார்கள். இதனைப் பற்றி சித்தர்கள் பாடல்கள் பல உள்ளன. பட்டம் தயாரிப்பதற்காகவே போகர் அஸ்வினி மகரிஷியை சந்தித்ததாக புலிப்பாணியார் ஒரு பாடலில் சொல்லியிருக்கிறார். அஸ்வினி மகரிஷி பஞ்சலோகத்தை உருக்கிச் செய்தவர். போகரின் பெருமைகளையும் திறமைகளையும் அஸ்வினி மகரிஷி ஏற்கனவே அறிந்திருந்ததால் போகரை வாழ்த்திப் போற்றியதோடு தான் வைத்திருந்த ஆகாயப் புரவியையும் அதிலிருந்த தொழில்நுட்பத்தையும் அதற்கேற்ற சித்த மந்திரங்களையும் சொல்லிக் கொடுத்தார். இந்த பட்டம் பறக்கும் போது ஒளி பொருந்திய சிவரதம் போல் இருக்குமாம். இந்த வானரதம் தயாரித்த போகர் அன்பர்களை நண்பர்களை ஏற்றிக்கொண்டு உலகம் சுற்றி வந்தார்.
தானான ரோமாபுரி சுற்றி வந்தேன்
தக்காண எண்ணாயிரம் காதமப்பா
வேனான சித்தர்களை ஏற்றிக்கொண்டு
வேகமுடன் தானடத்தி வந்தேனப்பா
கோடி பேர் சமாதிநிலை தன்னைக் கண்டேன்
கொற்றவனாம் ரோமாபுரி சமாதியோரம்.
இப்படித் தொடர்கிறது போகரின் வான்வெளிப் பயணம். போச்சா என்பவர் தென் அமெரிக்கா வந்து எண்ணற்ற சீர்திருத்தங்கள் செய்ததாக கலாச்சார மாற்றம் ஏற்படுத்தியதாக எழுதி வைத்திருக்கிறார். சிலி நாட்டு வரலாற்றாசிரியர் மைகாஸ் என்பவர் தன் வரலாற்று ஆய்வின் மூலம் அந்த போச்சா என்பவர் தான் போகர் என்கிறார். வெப்பக் காற்றை நிரப்பி உயரே பறக்கும் பலூனை போகர் கண்டுபிடித்தார். அதற்கு அவர் வைத்த பெயர் கூண்டு வித்தை. பாராசூட்டை கண்டு போகர் பிடித்தார். அதற்கு அவர் வைத்த பெயர் குடை வித்தை.
போக சித்தருக்கு 63 சீடர்கள் இருந்தனர். பொதிகை மலைச்சாரலில் போகர் தங்கியிருந்த போது ஒரு நாள் இரவு நீர் வேட்கையால் அருகிலிருந்த சிற்றூருக்குச் சென்றார். ஒரு வீட்டுத் திண்ணையில் கும்பலாக அந்தணர்கள் அமர்ந்து வேதம் ஓதிக் கொண்டிருந்தனர். போகர் அவர்களிடம் தாகத்திற்கு தண்ணீர் கேட்டார். யார் நீ அந்தப்பக்கம் போ அருகில் வந்தாலே நாற்றமடிக்கிறது என்று எரிந்து விழுந்தனர். போகர் அவர்களின் அறியாமையைக் கண்டு அவர்களுக்கு பாடம் புகட்ட நினைத்து அந்த வழியாக வந்த பூனை ஒன்றின் காதில் போகர் வேதத்தை ஓதிவிட்டார். பூனை நன்றாக உட்கார்ந்து கொண்டு உரத்த குரலில் வேதத்தை ஓதத் தொடங்கியது. அந்தணர்கள் தாங்கள் அறியாமல் செய்த அவமதிப்பை பொறுத்தருளும்படி வேண்டினர். ஐயனே எங்கள் வறுமை அகல தாங்கள் வழி செய்ய வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டனர். போகர் அவர்களுடைய வீடுகளில் இருந்த உலோகங்களால் ஆன பொருட்களை எல்லாம் தன்னிடம் இருந்த ஆதி ரசத்தால் பொன்னாக மாற்றி அவர்களை மகிழ்வித்தார். போகர் பழனி மலையில் கடும் தவத்தில் ஈடுபடத்துவங்கினார். அவருடைய தவத்தின் பயனாக முருகப் பெருமான் அவர் முன் காட்சியளித்தார். அப்பொழுது போகரிடம் முருகப்பெருமான் பழனி மலையில் தன்னை மூலவராக வடிவமைத்து விக்கிரகமாகச் செய்து அதை எப்படி பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பதையும் கூறி காரியசித்தி உபாயத்தையும் சொல்லி மறைந்தார். போகர் முருகப்பெருமான் சொன்னபடியே நவபாசாணம் என்னும் ஒன்பது விதமான கூட்டுப்பொருட்களைக் கொண்டு பழனி ஆண்டவர் தண்டாயுதபாணி சிலையைச் செய்து முடித்து அவர் சொன்ன வண்ணமே பிரதிஷ்டை செய்தார். இதே மாதிரியான நவபாஷாண மூர்த்தியான திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரரையும் போகர் உருவாக்கினார். பழனியில் சிலகாலம் வாழ்ந்த போகர் அங்கேயே சமாதியடைந்தார். அவரது சமாதி பழனி ஆண்டவர் ஆலயத்தின் உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் உள்ளது. போகர் பூசித்து வந்த புவனேச்வரி அம்மையின் திருவுருவம் பழனியாண்டவர் சந்நிதியில் இன்றும் உள்ளது. போகரின் சமாதி அமைந்துள்ள இடத்திற்கும் புவனேச்வரி அம்மன் சந்நதிக்கும் இடையே சுரங்கப் பாதை ஒன்று உள்ளது.
பட்டினத்தார் வரலாற்றை பார்ப்பதற்கு முன்னர் இவரது முற்பிறப்பை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். ராவணனின் தம்பி முறை கொண்டவன் குபேரன். ராவணன் தன் தம்பிகளோடு சிவனை நோக்கி தவம்புரிய சிவபெருமானும் ராவணனின் கடும் தவத்தை மெச்சி வேண்டும் வரம் தருவதாக கூறினார். அதன்படி சிவனின் பக்தனான ராவணன் ஈஸ்வரர் பட்டம் பெற்று ராவணேஸ்வரன் என அழைக்கப்பட்டதோடு எப்படிபட்டவரையும் கொல்லும் இரண்டு நாகாஸ்திரத்தையும் சிவதனுசு என்ற வில்லையும் பெற்றான். கும்பகர்ணன் பிரம்மதேவன் சூழ்ச்சியால் எப்போதும் தூங்கிக்கொண்டே இருக்கவேண்டும் என்ற வரம் பெற்றான். விபூஷ்ணனும் வரம் பெற்றான். கடைசியாக குபேரனுக்கு என்ன வரம் வேண்டுமென சிவன் கேட்டார். அதற்கு சிவனோடு இருக்கும் பாக்கியம் கிடைத்தால் அதுவே போதும் என குபேரன் கூறினான். சிவனும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத உன்னிடத்தில் என் சிவலோகத்தில் உள்ள அனைத்து செல்வத்தையும் காக்கும் பொருப்பில் அமர்த்துகிறேன் என கூறி செல்வத்திற்கு அதிபதியாக குபேரனை நியமித்தார்.
குபேரன் ஒரு முறை பூமியை காண வலம் வந்தான். காவிரி வளம் கொழிக்கும் ஊரினை கண்டதும் குபேரனுக்கு நம் தேவலோகத்தில் இதுபோன்ற எழிலை காண முடியவில்லையே. குயில்களின் இசையும் மயில்களின் நடனமும் நதியின் இசையும் அழகிய மலர்களின் நறுமணமும் அழகிய வயலும் பொய்கையும் வாழை மா பலா என பழுத்த முக்கனிகள் அன்பான மக்கள் சிவனின் ஆலயம் இத்தனையும் அனுபவிக்க அப்பப்பா ஒரு பிறவி போதாதே என ஒருகணம் நினைத்தான் குபேரன். இதனை கண்ட சிவன் குபேரா நினைத்தது போலவே ஒரு பிறவி இப்பூமியில் பிறந்து உனது ஆசையை தீர்த்துகொண்டு வா என கூறிவிட்டார் சிவன். குபேரனும் பட்டினத்தாராக இப்பூமியில் அவதரித்தார். இதுவே பட்டினத்தாரின் முற்பிறப்பு வரலாறு.
காவிரிப்பூம்பட்டினத்தில் சிவநேசர் ஞானகமலாம்பிகை என்னும் சிவபக்த தம்பதியர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சிவன் அருளால் ஒரு மகன் பிறந்தார். பிறந்த குழந்தைக்கு திருவெண்காட்டில் இருக்கும் சுவேதாரண்யப் பெருமானை நினைத்து சுவேதாரண்யன் என்று பெயரிட்டார்கள். பெரும் செல்வந்தர்களான வணிகக் குடும்பம் என்பதால் கடல் கடந்து வியாபாரம் செய்து பெருஞ்செல்வம் திரட்டி மன்னரும் மதிக்கத்தக்க செல்வந்தராக இருந்தார் சுவேதாரண்யன். அதனால் பெயர் சொல்லி அழைக்கத் தயங்கிய மக்கள் பட்டினத்தார் என்று அழைத்தார்கள். பட்டினத்தார் தனது 16 வது வயதில் சிவகலை என்னும் பெண்ணை மணந்து இல்லறம் நடத்தினார். குழந்தைப் பேறு இல்லாத வருத்தத்தில் திருவிடைமருதூர் சென்று இறைவனை வேண்டினார் பட்டினத்தார். அந்த ஊரில் இருந்த சிவசருமர் என்பவருக்கு ஒரு குழந்தை பிறந்தது. சிவசருமரின் கனவில் தோன்றிய சிவன் குளக்கரையில் கண்டெடுத்த குழந்தை என்று கூறி பட்டினத்தாருக்கு குழந்தையை தத்து கொடுக்கும்படி கூறி மறைந்தார். சிவன் கூறியபடியே சிவசருமர் திருவெண்காடரிடம் குழந்தையை கொடுத்து விட்டார். மகிழ்ந்த பட்டினத்தார் இறைவன் அளித்த குழந்தையாக எண்ணி குழந்தைக்கு மருதவாணன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். பட்டினத்தார் கடல் கடந்து நவரத்தினங்களை வாணிபம் செய்து வந்தார். மருதவாணருக்கு வாலிப வயது வந்ததும் தானும் வாணிபம் செய்ய கடல் கடந்து செல்கிறேன் என்று தந்தையிடம் அனுமதி பெற்று வாணிபம் செய்ய சென்றார்.
பட்டிணத்தார் குபேரன் அவதாரம் என்பதால் அவர் பிறக்கும் போதே மிகுந்த செல்வந்தர். அவரது வீட்டின் கதவும் வாயிற்காலும் வெள்ளியில் செய்யப்பட்டு இருக்கும். வாசலில் முத்துக்களால் ஆன பந்தல் அமைத்திருப்பார். அந்நாட்டு அரசர் நகர்வலம் வந்தபோது இதனை கண்டு திகைத்துபோய் பட்டினத்தாரை அழைத்து நாளை முதல் நீங்கள் வெள்ளிகதவை உபயோகிக்ககூடாது கழற்றிவிடவும் என கூறினார். மறுநாள் பட்டினத்தார் வெள்ளிகதவை கழற்றி தங்கத்தால் ஆன கதவை பொருத்தினார். மன்னர் நகர்வலம் வந்தபோது தங்ககதவை பார்த்து மேலும் அதிர்ந்துபோய் பட்டினத்தாரிடம் உங்களை வெள்ளிகதவை கழற்ற சொன்னேனே என கேட்டார். பட்டினத்தாரும் ஆம் மன்னா தங்கள் உத்தரவுப்படி வெள்ளி கதவை கழற்றி தங்ககதவை மாட்டியுள்ளேன் என கூறினார். இதனைக்கேட்ட மன்னர் பொறாமையால் முத்துப்பந்தலை எரிக்க காவலாளிகளுக்கு உத்தரவிட்டார். காவலாளிகள் முத்துப்பந்தலை எரித்துவிட்டனர். இதனைக்கண்ட பட்டினத்தார் அடுத்தநாள் வைரங்களால் ஆன பந்தலை போட்டுவைத்தார். இதனைக்கண்ட மன்னர் அதற்கு மேலும் பேச வழியின்றி பட்டினத்தாரிடம் மன்னிப்பு கேட்டார். அவ்வளவு பெரிய செல்வந்தராக வாழ்ந்திருந்தார் பட்டினத்தார்.
சில நாட்கள் கழித்து திரும்பிய மருதவாணர் வியாபாரம் செய்யும் இடத்தில் தந்தையிடம் பெட்டி பெட்டியாக கொடுத்துவிட்டு வீட்டிற்கு கிளம்பிவிட்டார். மகன் சம்பாதித்து கொண்டு வந்திருப்பதை காண பெட்டியைத் திறந்தவர் அதிர்ச்சி அடைந்தார். அதில் தவிடு உமிகளைக் கொண்டு செய்யப்பட்ட எருவரட்டி இருந்தது. மகனை சம்பாதிக்க அனுப்பினால் தவிட்டு எருவைக்கொண்டு வந்திருக்கின்றானே என்று கோபத்தில் அதை வீசியெறிந்தார். அதில் வைரங்களும் வைடூரியங்களும் இருப்பதை பார்த்து அதிர்ந்த பட்டினத்தார் மகனைக்காண வீட்டிற்கு வந்தார். மருதவாணர் தனது தாயிடம் ஒரு பெட்டியை கொடுத்து தந்தை வருவார் அவரிடம் இதனைக் கொடுத்துவிடுங்கள் இதோ வருகிறேன் என்று சொல்லி விட்டு கிளம்பிவிட்டார். மருதவாணரை தேடி வீட்டுக்கு வந்த பட்டினத்தார் நடந்தவைகள் அனைத்தையும் கேள்விப்பட்டு மருதவாணர் கொடுத்த பெட்டியை திறந்து பார்த்தார். அதில் ஒர் ஓலைசுவடி இருந்தது. அதில் காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே என்று எழுதப்பட்டிருந்தது. அதைப்படித்ததும் பட்டினத்தாருக்கு ஞானம் பிறந்தது. மனிதன் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் கடைசியில் பயனில்லாத காதற்ற ஊசியைக்கூட கையில் கொண்டு செல்ல முடியாது என்ற உண்மையை உணர்ந்தார்.
பட்டினத்தார் இல்லற வாழ்க்கையை துறந்து இடுப்பில் துணியை மட்டும் கட்டிக்கொண்டு ஆண்டி கோலம் பூண்டார். இதனைகண்ட அவரது தாய் எனக்கு செய்ய வேண்டிய கடமை உனக்கு இருக்கிறது அக்கடமையை செய்யாமல் நீ செல்லவேண்டாம் என்று தடுத்தார். தாயாரிடம் தங்களுக்கான கடமை வரும் நேரம் நானே உங்களிடம் வந்து என் கடமையை செய்வேன் என்று உறுதியளித்துவிட்டு வீட்டைவிட்டு கிளம்பினார். பட்டினத்தாரின் செல்வத்தை காக்கும் பொருப்பில் இருந்தவர் சேந்தனார் என்பவர் பட்டினத்தாரிடம் வந்து உங்களுடைய சொத்துக்கள் அனைத்தையும் யாரிடம் எப்படி கொடுக்க வேண்டும் சொல்லிவிட்டு செல்லுங்கள் என்றார். இந்த சொத்துக்கள் அனைத்தும் எனக்கு சொந்தம் இல்லை என்று எண்ணிவிட்டேன். எனக்கு சொந்தம் இல்லாத சொத்தை நான் எப்படி என்ன செய்யவேண்டும் என்று கூறமுடியும் என்று சொல்லி விட்டு ஊருக்கு வெளியே ஒரு கோவிலில் அமர்ந்துவிட்டார்.
அந்நாட்டின் மன்னர் பட்டினத்தாரின் செய்கையை கேள்விப்பட்டு அவரை தேடி சென்றார். மரத்தடியில் அமர்ந்தருந்த பட்டினத்தாரிடம் இந்நாட்டின் அரசன் நான் என்னுடைய சொத்துக்களால் வைத்து என்னால் கூட தங்களுடன் போட்டி போட முடியவில்லை. இவ்வளவு பெரிய செல்வந்தரான நீங்கள் சிறிய இடுப்பு வேட்டியுடன் அமர்ந்திருக்கின்றீர்கள் தங்களுக்கு இதனால் என்ன மகிழ்ச்சி கிடைத்துவிட்டது. தாங்கள் மீண்டும் பழையபடி வீட்டுற்கு செல்லுங்கள் என்று சொன்னார். இதனைகேட்ட பட்டினத்தார் அன்று என்னுடைய வீட்டிற்கு தாங்கள் வந்தபோது நான் எழுந்துவந்து உங்கள் முன் நின்றுகொண்டு பேசினேன். நீங்கள் பல்லாக்கில் அமர்ந்திருந்தீர்கள். ஆனால் இன்று நான் அமர்ந்துகொண்டு இருக்கிறேன். மன்னராகிய தாங்கள் என்முன் நின்றுகொண்டு இருக்கிறீர்கள் இதுவே நான் பெற்றுக்கொண்ட மகிழ்ச்சி என்றார். இதனை கேட்ட மன்னன் தலைகுனிந்து அங்கிருந்து சென்றுவிட்டர்.
பெரும் செல்வந்தராய் இருந்த பட்டினத்தார் மாளிகையை இழந்து ஆடை அணிகலன் இழந்து ஒருவேலை உணவிற்கு அடுத்தவரிடம் யாசகம் பெற்று பரதேசி போன்று இருப்பதை கண்ட பட்டினத்தாரின் சகோதரி தனக்கு அவமானமாக இருப்பதால் அப்பம் செய்து அதில் கொடிய விஷத்தை கலந்து பட்டினத்தார் உண்பதற்காக கொடுத்தார். தன் ஞானத்தால் நஞ்சு கலந்திருப்பதை அறிந்த பட்டினத்தார் அந்த அப்பத்தை தன் சகோதரி வீட்டின் கூறைமீது வீசி எறிந்து தன் அப்பன் தன்னை சுட்டால் வீட்டப்பன் ஓட்டை சுடும் என கூறினார். சகோதரியின் வீட்டின் கூறையில் தீ பிடித்து மளமளவென எரியத்துவங்கியது. பட்டினத்தாரின் ஞானத்தை உணர்ந்த சகோதரி இவரிடம் மன்னிப்பு கேட்டார். மனம் அறிந்து திருந்தினால் நெருப்பு அணையும் என்று பட்டினத்தார் சொல்ல நெருப்பு உடனே அணைந்துவிட்டது. ஊரில் இருக்கும் அனைவரும் பட்டினத்தாரின் ஞானத்தை அறிந்து கொண்டார்கள். பட்டினத்தார் தான் வாழ்ந்த ஊரில் இருந்து கிளம்பி பல சிவ தலங்களுக்கு சென்று கொண்டிருக்கும் போது திருவெண்காடு என்னும் ஊரில் இருக்கும் திருவெண்காடரை தரிசித்து பாடல்கள் பாடினார். இத்தலத்தில் பட்டினத்தாருக்கு திருவெண்காட்டு நாதரே குருநாதராக வந்து சிவதீட்சை கொடுத்தார். இத்திருவிழா இகோவிலில் இப்போதும் நடைபெறுகிறது. திருவெண்காடர் என்ற பெயரை இக்கோவிலில் பட்டினத்தார் பெற்றார்.
மேலப்பெரும்பள்ளம் என்னும் ஊரில் வலம்புரநாதர் இறைவனை தரிசிக்க பட்டினத்தார் வந்திருந்தார். அவ்வூரில் இருந்த மன்னன் தனது தோசம் நிவர்த்திக்காக தினமும் 1000 பேருக்கு அன்னதானம் அளிக்க உத்தரவிட்டிருந்தார். அதன்படி அன்னதானம் தினந்தோறும் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இங்கு வந்த பட்டினத்தார் தனக்கு உணவு வேண்டும் என்று கேட்டார். அன்னதானம் ஆரம்பிக்க சிறிது நேரம் இருக்கிறது காத்திருங்கள் என்று அவர்கள் உணவு தர மறுத்தனர். உடனே பட்டினத்தார் மடப்பள்ளியின் பின் பக்கம் வழிந்தோடும் கஞ்சியை இருகைகளால் அள்ளி குடித்தார். கோவிலில் பல நாட்கள் அடிக்காமல் இருந்த மணியானது தானே ஒலிக்க ஆரம்பித்தது. அன்னதானமே இன்னும் ஆரம்பிக்கவில்லை அதற்குள் மணி ஒலித்து விட்டதே என அனைவரும் ஆச்சரியமடைந்தனர். பட்டினத்தார் அக்கோவிலில் வந்திருப்பதை அறிந்த மக்கள் அவரை வணங்கி ஆசிபெற்றனர். மன்னனின் தோசமும் விலகியது.
உஜ்ஜனியின் மாகாளம் என்ற இடத்திற்கு வந்த பட்டினத்தார் அங்கு இருக்கும் ஒரு கோவிலில் அமர்ந்து தியானத் செய்து கொண்டிருந்தார். அந்த நாட்டின் அரசனாக இருந்தவர் பத்ருஹரி சிவபக்தியில் சிறந்தவராக இருந்தார். அவருடைய அரண்மனையில் புகுந்த திருடர்கள் விலையுயர்ந்த ஆபரணங்களை எல்லாம் கொள்ளையடித்துச் சென்றனர். தங்கள் இருப்பிடம் செல்லும் வழியில் இருந்த கோயிலில் தாங்கள் கொள்ளையடித்து வந்த ஆபரணங்களில் ஒரு மாணிக்கமாலையை இறைவனுக்கு காணிக்கையாக வீசிவிட்டுச் சென்றனர். அந்த மாணிக்கமாலை இறைவன் கழுத்தில் விழுவதற்கு பதிலாக அங்கே தியானத்தில் அமர்ந்திருந்த பட்டினத்தாரின் கழுத்தில் விழுந்தது. விடிந்ததும் கொள்ளை போன செய்தியை அறிந்த பத்ருஹரி அரசன் வீரர்களை நாலாபுறமும் அனுப்பி கொள்ளையர்களைத் தேடச் சொன்னார். அனைத்து இடங்களிலும் வீரர்கள் திருடர்களை தேடிச்சென்றனர்.
கோயிலில் தியானத்தில் இருந்த பட்டினத்தாரையும் அவர் கழுத்தில் இருந்த மாணிக்கமாலையையும் பார்த்து அவர்தான் திருடன் என்று நினைத்து கைது செய்த வீரர்கள் அவரை அழைத்துச் சென்று அரசனின் முன்னிலையில் நிறுத்தினார்கள். மாணிக்கமாலை அவரின் கழுத்தில் இருந்ததை பார்த்த பத்ருஹரியும் தீர விசாரிக்காமல் பட்டினத்தாரைக் கழுவில் ஏற்றும்படி உத்தரவிட்டார். வீரர்கள் பட்டினத்தாரைக் கழுமரத்தின் அருகே கொண்டு சென்றனர். அப்போது பட்டினத்தார் என் செயலாவது ஒன்றுமில்லை என்று தொடங்கும் பாடலைப் பாடியதும் கழுமரம் தானாக தீப்பற்றி எரிந்தது. செய்தியைக் கேள்விப்பட்ட பத்ருஹரி ஓடி வந்து பட்டினத்தாரின் பாதங்களைப் பணிந்து தன்னை மன்னித்து தீட்சை கொடுத்து சீடராக ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். பத்ருஹரியின் மனப் பக்குவத்தை உணர்ந்த பட்டினத்தார் அவருக்கு தீட்சை வழங்கினார். பத்ருஹரி அரசன் பட்டினத்தாரின் சீடராகி பத்திரகிரியார் என பெயர் பெற்றார்.
பட்டினத்தார் பத்ரகிரியாரிடம் திருவிடைமருதூர் கோவில் சென்று துறவு வாழ்க்கையை மேற்கொள்ளுமாறும் காலம் வரும் போது அங்கு வந்து சந்திப்பதாகவும் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். பத்ரகிரியார் குருவின் கட்டளைப்படி திருவிடைமருதூர் வந்து துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயிலின் மேற்கு கோபுர வாசலில் அமர்ந்து தினமும் பிச்சை ஏற்று மானசீகமாக குருவுக்கு சமர்ப்பித்த பிறகே தான் உண்டு வந்தார். ஒருநாள் அவர் தன் குருவுக்கு சமர்ப்பித்துவிட்டு உணவை உண்ணும் வேளையில் பசியால் வாடிய ஒரு நாய் அவருக்கு முன்பாக வந்து நின்றது. நாயின் பசியைக் கண்ட பத்திரகிரியார் அதற்கு சிறிது உணவு கொடுத்தார். அன்று முதல் அந்த நாயும் அவருடனேயே தங்கிவிட்டது. சில வருடங்கள் கழித்து பட்டினத்தார் திருவிடைமருதூர் கோவிலுக்கு வந்தார். பட்டினத்தார் வருவதை பார்த்த பத்ரகிரியார் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். குரு தனக்கு இறைவனை அடையும் வழியை காண்பிக்க போகிறார். இறைவனிடம் செல்லப்போகின்றோம் என்று மகிழ்ச்சியில் பட்டினத்தாரை வணங்கி நின்றார்.
பத்ரகிரியாருக்கு ஆசி வழங்கிய பட்டினத்தார் மேற்கு வாசலில் அமர்ந்திருக்குமாறும் தான் கிழக்கு வாசலில் அமர்ந்திருக்கின்றேன் என்று சொல்லிவிட்டு கிழக்கு வாசலில் அமர்ந்துவிட்டார். சிலநாட்கள் சென்றபிறகு ஒருநாள் பட்டினத்தாரிடம் இறைவன் ஓர் ஏழை வடிவத்தில் வந்து பட்டினத்தாரிடம் பசிக்கிறது உணவு இருந்தால் கொடுங்கள் கேட்டார். அதற்கு பட்டினத்தார் மேற்கு கோபுர வாசலில் ஒரு குடும்பஸ்தன் இருக்கிறான். அங்கே சென்று அவரிடம் கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லி அனுப்பினார். இறைவனும் மேற்கு கோபுரத்துக்குச் சென்று அங்கிருந்த பத்திரகிரியாரிடம் ஐயா எனக்குப் பசியாக இருக்கிறது கிழக்குக் கோபுரத்தில் இருந்த ஒருவரிடம் பசிக்கு உணவு கேட்டபோது அவர் மேற்கு கோபுரத்தில் ஒரு குடும்பஸ்தன் இருப்பதாகச் சொல்லி என்னை தங்களிடம் அனுப்பினார் உணவு ஏதேனும் இருந்தால் தாருங்கள் என்று கூறினார். பதறிப்போன பத்திரகிரியார் நாடு அரசபதவி சொத்துக்கள் என அனைத்தையும் துறந்த எனக்கு இந்தப் பிச்சை எடுக்கும் ஓடும் நாயும் என்னைக் குடும்பஸ்தனாக ஆக்கிவிட்டதே என்று வருந்தி பிச்சையோட்டை நாயின் மேல் விட்டெறிந்தார். அது நாயின் தலையில் பட்டு இறந்து போனது. பிச்சை ஓடும் உடைந்து போனது. பத்ரகிரியாருக்கு இருந்த சிறிய பற்றும் போனது. மேலும் சில வருடங்கள் பட்டினத்தாரும் பத்ரகிரியாரும் திருவிடைமருதூர் கோவிலிலேயே ஆளுக்கொரு வாசலில் அமர்ந்திருந்தார்கள்.
ஞானியாகிய பத்திரகிரியாரிடம் உணவு சாப்பிட்டதன் விளைவாக இறந்த நாய் தனது அடுத்த பிறவியில் காசி அரசருக்குப் பெண்ணாகப் பிறந்தாள். அவளுக்குத் திருமணப் பருவம் வந்ததும் அரசன் வரன் தேட முயன்றார். அப்போது அந்த பெண்ணுக்கு பூர்வ ஜென்ம நினைவுகள் வந்தது. தனது தந்தையிடம் அப்பா நான் யாருக்கும் உரியவள் இல்லை. திருவிடைமருதூர் கோயிலின் மேற்கு கோபுர வாசலில் அமர்ந்திருக்கும் தவமுனிவருக்கே உரியவள் என்று கூறினாள். அரசரும் பெண்ணை விசாரிக்க பெண் தான் பிறப்பதற்கு முன்பு நடந்த அனைத்து சம்பவங்களையும் கூறினாள். மேலும் பெண் பிறப்பதற்கு முன் தன் நாட்டில் நடந்த சம்பவங்களை சில கூறினாள். ஆச்சரியமடைந்த அரசரும் பெண் கூறுவதில் உண்மை இருப்பதாக நம்பினார். தவமுனிவரையே திருமணம் செய்து கொள்வேன் என்ற பெண்ணின் மன உறுதியைக் கண்டு திருவிடைமருதூருக்கு அரசர் தனது பெண்ணை அழைத்துச் சென்றார்.
திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவிலின் மேற்கு வாசலுக்கு வந்த இளவரசி பத்திரகிரியாரைக் கண்டு வணங்கினாள். தாங்கள் உணவு கொடுத்து பசி தீர்ந்த தங்களின் அடிநாய் வந்திருக்கிறேன். என்னை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று வேண்டினாள். நான் முதுமையில் இருக்கின்றேன். தங்களோ சிறு பிள்ளை. இறைவனை தேடி நாடு செல்வம் அரச சுகங்கள் அனைத்தையும் துறந்து சன்யாசியாகி இங்கு அமர்ந்திருக்கின்றேன். மீண்டும் உலக பந்த பாசத்திற்குள் செல்ல விருப்பம் இல்லை ஆகவே சென்றுவிடுங்கள் என்று கூறினார். இளவரசி பிடிவாதமாக இருந்தாள். பத்திரகிரியார் அவளை அழைத்துக்கொண்டு கிழக்குக் கோபுர வாசலில் இருக்கும் தம்மை ஆட்கொண்ட பட்டினத்தாரிடம் வந்தார். குருவே எனக்கு என்ன சோதனை இது. எனக்கு முக்திநிலை கிடையாதா என்று கேட்டார்.
பட்டினத்தார் எல்லாம் மகாலிங்கன் செயல் அவரை தரிசியுங்கள் என்று கூறினார். பத்திரகிரியாரும் மகாலிங்கேச என்று கோவிலின் மூலஸ்தானத்தில் இருக்கும் சிவனை நோக்கி செல்ல அவர் பின்னே இளவரசியும் சென்றாள் அப்போது லிங்கத்தில் தோன்றிய பேரொளி பத்திரகிரியாரையும் இளவரசியையும் தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொண்டு மறைந்தது. பட்டினத்தார் எமக்கு முக்தி அளிக்காமல் தன்னுடைய சிஷ்யருக்கு முக்தி கொடுத்துவிட்டாய். தனக்கு எப்போது என்று முக்தி கிடைக்கும் என்று இறைவனை வேண்டினார். அப்போது அசிரிரியாய் இறைவன் குரல் கேட்டது. இறைவனை நம்புகிறவனை விட குருவை நம்பும் சீடன் மிகச்சிறந்தவர் என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டவே அவருக்கு முக்தி அளித்தோம் உமக்கு நுனிக்கரும்பு என்று இனிக்கிறதோ அன்று முக்தி கிடைக்கும் என்று இறைவன் கூறினார். மகிழ்ந்த பட்டினத்தார் அங்கிருந்து கிளம்பினார். பத்திரகிரியார் பாடிய பாடல்கள் மெய்ஞானப் புலம்பல் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.
பட்டினத்தார் தனது தாயாரின் இறுதி காலம் வந்துவிட்டதை அறிந்து தாயார் இருக்கும் ஊருக்கு வந்தார். தாயின் இறுதி சடங்கின்போது மரத்திலான விறகில் தனது தாயார் உடலை வைக்க வேண்டாம் வாழை மர மட்டையில் வையுங்கள் என்றார். அவர் கூறியபடியே உறவினர்கள் பச்சை வாழை மட்டையில் வைத்து சிதை அடுக்கினார்கள். அப்போது அவர் தாயை எண்ணி பாடல்கள் பாடினார். உடனே பச்சை வாழை மட்டை எரியத்தொடங்கியது. தனது தாயாருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி தனது கடமையை நிறைவேற்றினார் பட்டினத்தார்.
சேந்தனார் என்பவர் பட்டினத்தார் செல்வந்தராக இருக்கும் போது அவருக்கு கணக்கு பிள்ளையாக இருந்தவர். ஊருக்குள் பட்டினத்தார் வந்திருக்கும் தகவல் அறிந்த சேந்தனாரின் மனைவியும் மகனும் பட்டினத்தாரிடம் வந்து அழுது தொழுது முறையிட்டனர். ஜயா தங்களிடம் கணக்குப் பிள்ளையாக இருந்த சேந்தனாரின் மனைவி நான். இவன் எங்கள் பிள்ளை. தங்களின் செல்வத்தை ஏழை எளியவர்களுக்கு வாரிக் கொடுத்த தங்களின் கணக்குபிள்ளை சேந்தனாரை மன்னர் சிறையில் அடைத்து விட்டார். தாங்கள்தான் சிறையில் இருந்து அவரை விடுவித்து அருள வேண்டும் என வேண்டினார்கள். அனைத்தையும் கேட்ட பட்டினத்தார் திருவெண்காடு சுவாமி சந்நிதிக்கு அனைவரையும் அழைத்துச் சென்று இறைவனை துதித்து பாடினார்.
பட்டினத்தாரின் வேண்டுதலை ஏற்றுக்கொண்ட இறைவன் வினாயகரை அழைத்து அரசனின் சிறையில் இருந்து சேந்தனாரை விடுதலை செய் என்றார். வினாயகர் துதிக்கையை நீட்டி சிறைச்சாலையில் இருந்த சேந்தனாரை விடுதலை செய்து பட்டினத்தார் முன் விட்டார். நடந்தது எதையுமே அறியாமல் தூக்கத்தில் இருந்து விழித்ததைப் போல எழுந்த சேந்தனார் தன் எதிரில் பட்டினத்தார் இருப்பதைக் கண்டார். நடந்ததை உணர்ந்து கொண்டார். குருநாதா அரசர் வைத்த சிறையில் இருந்து விடுதலை அளித்ததைப் போல பிறவிப் பெருங்கடலில் இருந்தும் அடியேனை விடுவிக்க வேண்டும் என வேண்டினார். சேந்தனாரின் பக்குவ நிலையை அறிந்த பட்டினத்தார் சேந்தா குடும்பத்தோடு நீ தில்லைக்குப் போய் காட்டில் விறகு சேகரித்து வாழ்க்கை நடத்து. தினந்தோறும் ஒரு சிவனடியாருக்காவது உணவு அளித்து வா நீ நினைத்தது நடக்கும் என்று சொல்லி வழிகாட்டினார். குருநாதரையும் திருவெண்காட்டு ஈசனையும் வணங்கிய சேந்தனார் பட்டினத்தார் சொற்படி தில்லையை அடைந்து அதன்படியே வாழ்க்கை நடத்தி இறைவனடி சேர்ந்தார்.
சீடர் பத்திரகிரியார் முக்தி அடைந்த பிறகு பட்டினத்தார் சிதம்பரம் கனகசபையையில் நடராஜப் பெருமானின் நடனத்தை தரிசித்தார். அங்கிருந்து வெளிவந்ததும் பசி உண்டாயிற்று. பட்டினத்தாரின் பசியைப் போக்க அன்னை சிவகாமசுந்தரி பெண் வடிவில் வந்து உச்சிக்காலப் பிரசாதத்தை அவரிடம் தந்தாள். பட்டினத்தார் உண்டு பசியாறினார். பட்டினத்தார் பசியாறியதும் அம்பிகை அங்கிருந்து மறைந்தாள். அதன் பின்னரே அவருக்கு உண்மை தெரியவர உலகாளும் அன்னையே எதிரில் வந்து உணவு தந்தும் உணராமல் ஏமாந்து போனேனே என புலம்பி பாடல்கள் பாடினார்.
பட்டினத்தார் காஞ்சியை அடைந்து சுவாமி தரிசனம் செய்து கச்சித் திருவந்தாதி, திருவேகம்பமாலை, கச்சித் திருவகவல் முதலிய பாடல்களைப் பாடி சில நாட்கள் தங்கினார். ஒரு நாள் பசி தாங்காமல் இறைவனை நினைத்து பாடல்கள் பாட அம்பிகை காமாட்சி சுமங்கலி வடிவத்தில் வந்து அவருக்கு உணவளித்தாள்.
காளத்தி நாதனை தரிசிக்க காளாத்தி நோக்கி நடந்தார். இறைவனை தவிர வேறு எந்த நினைவும் இல்லாமல் பகல் இரவு பாராமல் எப்போது உன்னைக் காணவல்லேன் காளத்தி ஈஸ்சுரனே என்றபடி காட்டிற்குள் நடந்து கொண்டிருந்த பட்டினத்தாருக்கு காட்டில் இருந்த கொடூரமான ஜீவன்கள் கூட உதவி செய்தன. காட்டு யானைகள் முன்னால் நடந்து போய் முள் சிறுகட்டைகள் முதலியவற்றை நீக்கி வழியை உண்டாக்கின. புலிகள் தங்கள் வால்களால் தரையைப் பெருக்கிச் சுத்தம் செய்தன. வாயில் புல் கொண்ட மான்கள் அணிவகுத்து நின்று வழி காட்டின. மயில்கள் தோகைகளாலும் பறவைகள் சிறகுகளாலும் விசிறியும் நிழல் தந்தும் உதவின. குரங்கு முதலான விலங்கினங்கள் உணவுக்கு காய் கனி கிழங்குகளைக் கொண்டு வந்து தந்தன. பட்டினத்தாரின் உள்ளம் நெகிழ்ந்தது. என்ன செயல் என்ன செயல் அனைத்து பெருமையும் காளத்தி ஈசனுக்கே உரியது என்று பாடல்கள் பாடி காளாத்திஸ்வரரை தரிசித்தார்.
கரும்பை காணும் போதேல்லாம் நுனிக்கரும்பு இனிக்கிறதா என்று சாப்பிட்டு பார்த்து ஊர் ஊராக சிவனை தரிசித்துக்கொண்டு வந்தார். சென்னையில் இருக்கும் திருவொற்றியூர் வந்த பொழுது அவருக்கு நுனிக்கரும்பு இனித்தது. முக்தி அடைய நேரம் வந்துவிட்டதை அறிந்து மகிழ்ந்த பட்டினத்தார் அங்கிருக்கும் கடற்கரைக்கு சென்றார். அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களுக்கு தனது சித்துக்கள் மூலம் இனிப்புகள் கொடுத்து மகிழ்வித்தார்.
தன் அமர்ந்து கொள்கிறேன் என்னை ஒரு கூடை கொண்டு முடிவிடுங்கள் நான் வேறு இடத்தில் இருந்து வருகிறேன் இப்படியாக நாம் விளையாடலாம் என்றார். மகிழ்ந்த சிறுவர்கள் பட்டினத்தாரை ஒரு கூடையை வைத்து மூடிவிட்டு கூடையை பார்த்துக்கொண்டே இருந்தார்கள். பட்டினத்தார் வேறு இடத்தில் இருந்து வந்தார். குழந்தைகள் வியப்போடு ஓடி வந்தார்கள். மறுபடியும் தன்னை மூடிவிட சொன்னார். வேறு இடத்தில் இருந்து வந்தார். பல தடவைகள் இவ்வாறு நடந்தது. சிறுவர்களுக்கு உற்சாகம் உண்டானது. ஒரு முறை மூடிய பொழுது வெளியில் எங்கும் இருந்து பட்டினத்தார் வராததால் கூடையை திறந்து பார்த்தார்கள் சிறுவர்கள். அதனுள் பட்டினத்தார் இல்லை. சிவலிங்கமாக காட்சியளித்தார்.
பட்டினத்தார் பாடிய பாடல்கள் அனைத்தும் சைவத் திருமுறைகளில் பதினோராம் திருமுறைத் தொகுப்பில் உள்ளன. அவை
உலகிலேயே மூன்று கால்களை உடைய முனிவர் என்று போற்றப்படும் சிறப்பு வாய்ந்த பிருங்கிரிஷி சிவபெருமானை தவிர பிற தெய்வத்தை வழிபடக்கூடாது என்கிற கொள்கை கொண்டவர். இவர் நாள்தோறும் சிவனை மட்டும் வழிபட்டு வந்தார். அருகில் உள்ள அம்பாளை கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை. இதைக்கண்ட சக்தி சிவனிடம் முறையிட்டாள். நாம் ஒரே உருவமாய் நிற்போம் என்று கூறி அம்மையப்பனாய் நின்றனர்.
அன்று பூஜைக்கு வந்த பிருங்கிரிஷி அம்மையும் அப்பனும் ஓர் உருவாய் இருப்பதைக் கண்டு யோசித்து பின்னர் வண்டு உரு எடுத்து அம்மையப்பரின் தொப்புள் வழியே துளையிட்டு சிவனை மட்டும் வலம் வந்தார். இதைகண்ட சினம் உற்ற அம்மை பிருங்கியின் உடற்பாகத்தில் உள்ள தனது கூறாகிய சக்தியை நீக்கினாள். அதனால் வலிமை இழந்த பிருங்கி தடுமாறினார். உடனே சிவ பெருமான் வலிமையுள்ள மூன்றாவது கால் ஒன்றை கொடுத்து அருளினார் .
அருளியதோடு முனிவரே சக்தியில்லையேல் சிவன் இல்லை என்பதை உணர்ந்திருப்பாய். சிவசக்தி வழிபாடே சிறந்தது என்பதை புரிந்து கொள் என்றார். முனிவரும் அப்பனே என்னை அறியாது நான் செய்த இத்தவறுகளை மன்னித்தருள்வாய் என்றும் பராசக்தியிடம் மன்னிப்பும் கோரினார். அறியாமற்செய்த தவறை மன்னித்தேன் என அன்னையும் அருள் கூறினார்.
மகரிஷி கஷ்யப அதிதி தம்பதியருக்கு வருண் பிரசேதாஸ் ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்தார். வருண் பிரசேதாவிர்க்கு ரத்னாகர் பத்தாவது குழந்தையாக பிறந்தார். ரத்னாகர் பிறந்தவுடன் அவருடைய தந்தை மரணமடைந்தார். பெற்றோர்களை இழந்த ரத்னாகர் காட்டிற்கு சென்றார். காட்டிலுள்ளவர்கள் ரத்னாகரை வளர்த்தார்கள். ரத்னாகர் வயிற்றுப் பிழைப்பிற்காக திருட ஆரம்பித்தார்.
ஒரு தடவை கொள்ளையடிக்கச் சென்றபோது அவனிடம் நாரதர் மாட்டிக்கொண்டார். கையில் ஒரு தம்புரா வைத்துக்கொண்டு நாராயண நாராயண என்று பாடிக்கொண்டும் அந்த முனிவர் வந்து கொண்டிருந்தார். இவன் அவர் எதிரில் போய் எமன் போல் நின்றதும் இவனைப் பார்த்து யாரப்பா நீ. உனக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்டார். அதற்கு அவன் நான் யாராய் இருந்தால் உமக்கு என்ன? உம்மிடம் இருக்கும் எல்லாவற்றையும் எடுத்து வையும் என்றான். அப்பா நான் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்குத் பதில் சொன்ன பிறகு என்னிடம் இருப்பதை எல்லாம் நீ கொண்டு போகலாம். நீ யாருக்காக இந்த கொடுமையான கொள்ளையும் கொலையும் செய்கிறாய் என்று கேட்டார். வேறு யாருக்காக என் மனைவி மக்கள் இவர்களுக்காகத்தான். அவர்கள் தானே என் எல்லா சுக துக்கங்களிலும் என்னுடன் இருக்கிறார்கள். எனக்காக அவர்கள் உயிரையும் கொடுப்பார்கள். அப்படியா உன் பாவங்களில் அவர்கள் பங்கேற்பார்களா? சொல் என கேட்டார். என்ன இப்படி கேட்டு விட்டீர்கள். அவர்கள் வாய் திறந்து எனக்காக உயிரைக் கொடுப்பதாய் சொன்னதில்லை தான். ஆனால் என் மீது அவர்களுக்கு இருக்கும் அன்பு கொஞ்சம் நஞ்சம் இல்லை. உன் பாவங்களில் அவர்கள் பங்கு கொள்வார்களா? அதனை முதலில் கேட்டுப்பார். அதிலென்ன சந்தேகம். நான் கொள்ளையடித்துக் கொண்டு வருவதைப் பங்கு கொள்ளும் அவர்கள் என் பாவத்திலும் பங்கு கொள்வார்கள். அதை நிச்சயமாகத் தெரிந்துகொண்டாயா? இல்லையே அவர்கள் உன் பாவத்தில் பங்கு கொள்ள மாட்டார்கள் என்கிறேன் நான். நீ அதை இல்லையென்று நிரூபிக்க முடியுமா? ஆகா முனிவரே தப்பித்துப் போக முயல்கிறீரா? இதெல்லாம் என்னிடம் முடியாது. இல்லையப்பா நீ வேண்டுமானால் என்னைக் கட்டிப் போட்டு விட்டுப் போ. போய் அவர்களிடம் கேள். அவர்கள் உன் பாவத்தில் பங்கு கொள்வதாய்க் கூறிவிட்டால் என்னிடம் உள்ளதை எல்லாம் எடுத்துக்கொள். அவர்கள் இல்லையென்று சொல்லிவிட்டால் நான் சொல்வதை நீ செய்ய வேண்டும். ரத்னாகர் யோசித்துப் பார்த்தான். அந்த முனிவர் சொல்வதும் சரியாகத் தான் இருக்கிறது. நாம் கேட்டுத்தான் பார்ப்போமே என்று நினைத்து அந்த முனிவரை அங்கிருந்த ஒரு மரத்தில் கட்டிப் போட்டு விட்டு சென்றான்.
திரும்பி வரும்போது முற்றிலும் மாறியிருந்தான் அவன். ஓடி வந்தவன் முனிவரின் காலில் விழுந்து சுவாமி நீங்கள் சொன்னது சரிதான் என்று கண்கலங்கிய படியே முனிவரின் கட்டுகளை அவிழ்த்துவிட்டான். என்னப்பா நடந்தது. சுவாமி நீங்கள் சொன்ன படி நான் போய் என் மனைவியர், குழந்தைகள், நண்பர்கள், உற்றார் உறவினர் எல்லோரிடமும் என் பாவத்தில் பங்கு கொள்வீர்களா என்று கேட்டேன். எல்லோரும் ஒரே விதமாய் எங்களை காப்பாற்ற வேண்டியது உன் கடமை. நீ எப்படிப் பொருள் கொண்டு வருகிறாய் என்பது எங்களுக்குக் கவலை இல்லை. நீ பாவ வழிகளில் சம்பாதித்தால் அந்த பாவங்களை நீதான் அனுபவிக்க வேண்டும். அதில் எங்களுக்கு எந்த பங்கும் இல்லை என்று கூறிவிட்டார்கள். அவர்கள் சொன்னதில் தவறில்லையே. மனைவி மக்களைக் காப்பாற்றுவது உன் கடமை. அதை நல் வழியில் செய்கிறாயா இல்லையா என்பதைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை. ஆமாம் சுவாமி அதை நான் இப்போது உணர்கிறேன். நீங்கள் தான் நான் எல்லா பாவங்களில் இருந்தும் விடுபட ஒரு நல்ல வழி காண்பிக்க வேண்டும் நீ செய்த பாவங்களுக்கு எல்லாம் தகுந்த பிராயச்சித்தம் ராம நாமத்தைச் சொல்லிக் கொண்டு இருப்பதே சுவாமி என்ன நாமம் அது? ராம நாமம் என் வாயில் நுழையவில்லையே சுவாமி. இதோ இங்கிருக்கும் மரத்தின் பெயர் என்ன? இதுவா சுவாமி. இது மரா மரம். நீ இந்த மரத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டிரு. அது போதும். ஆகட்டும் சுவாமி. நீங்கள் யார் என்று இன்னும் சொல்லவில்லையே என் பெயர் நாரதன். திரிலோக சஞ்சாரி என்றும் சொல்வார்கள். நல்லது சுவாமி. நீங்கள் சொன்ன படியே இந்த மரா மரத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்று வணங்கி நின்றான்.
நாரதரும் தன் வழியே சென்றார். அவர் போனபின் அந்த கொள்ளையர் தலைவன் அங்கேயே அமர்ந்து தன்னை மறந்து மரா மரா மரா என்று ஜபிக்க ஆரம்பித்தான். அது ராம ராம ராம என்று ஒலித்தது. நாளடைவில் அவன் மேல் புற்று வளர்ந்தது. அந்த ராம நாம ஜபத்தால் அவன் பாவமெல்லாம் அழிந்து ஞானம் பெற்றான். அவர் தவம் முடிந்த பின் புற்றிலிருந்து வெளியே வந்தார். புற்றிலிருந்து வந்ததால் வால்மீகி என்று அழைக்கப் பட்டார். வால்மீகி முனிவரின் தன் ஆசிரமத்தை தமசா நதிக்கரையில் அமைத்தார். ஒருநாள் நாரதர் அங்கு வந்தார். அவருக்கு உபசாரங்கள் செய்து வரவேற்ற பிறகு வால்மீகி முனிவர் அவரை நோக்கி நாரதரே இந்த யுகத்தில் முப்பத்திரண்டு கல்யாண குணங்களும் பொருந்திய நேர்மையான் சத்தியம் தவறாத வீர தீர பராக்கிரமசாலியான புருஷன் யாராவது இருக்கிறானா? என்று கேட்டார். அதற்கு நாரதர் ராமபிரானுடைய வரலாற்றை முழுவதுமாக வால்மீகிக்கு எடுத்துரைத்தார். நாரதர் இறுதியில் விடைபெற்று சென்றபின் வால்மீகி தனது சீடர் பரத்வாஜருடன் தமசா நதிக்கரைக்குச் சென்றார்.
நதிக்கரையில் உல்லாசமாக அமர்ந்திருந்த ஒரு ஜோடி நாரைகளைப் பார்த்தார். அவற்றின் அந்தரங்க அன்புப் பிணைப்பினைக் கண்டு ரசித்தவாறே அவர் நீராடுகையில் எங்கிருந்தோ வந்த ஓர் அம்பு ஆண் நாரையின் மீது பாய்ந்து அதன் உயிரைக் குடித்தது. அதைக் கண்ட பெண் நாரை துக்கம் தாளாமல் ஓலமிட்டது. இதைக் கண்டு மனம் பதறிய வால்மீகி அம்பை எய்த வேடனை மிகுந்த சீற்றத்துடன் நோக்கி இதயமற்ற அரக்கனே என்ன காரியம் செய்து விட்டாய் நீ? வாழ்நாள் முழுதும் நீ அமைதியின்றி தவிப்பாய் என்று உணர்ச்சி வசப்பட அவருடைய வாயிலிருந்து வந்த சொற்கள் அவரையறியாமலே ஒரு கவிதை வடிவில் வெளிவந்தன. ஆசிரமத்திற்குத் திரும்பி வந்த பிறகும் அவருடைய படபடப்பு அடங்கவில்லை. சற்று நேரத்தில் பிரம்மா வால்மீகியைக் காணவந்தார். பிரம்மாவை விழுந்து வணங்கி வால்மீகி நின்ற போது பிரம்மா வால்மீகி என்னுடைய அருளினால் உனக்கு கவிதை பாடும் திறமை உண்டாகி விட்டது. ராமபிரானது வரலாற்றை இதற்கு முன் நீ கேட்டு இருக்கிறாய். அதை நீ காவியமாக இயற்று. இந்த உலகம் இருக்கும் வரை அவை காவியமாக நிலைத்திருக்கும் என்று வாழ்த்தி விட்டுச் சென்றார். பிரம்மாவின் அருளினால் வால்மீகி ராமாயணத்தை இயற்றினார். த்ரேதாயுக அவதாரமான ஸ்ரீராமபிரானின் வரலாற்றைச் எழுதினார். வால்மீகி 24000 ஸ்லோகங்களைக் கொண்ட ராமாயணத்தைப் படைத்தார்.
யோகவாசிஷ்டம்
அத்புத ராமாயணம்
கங்காஷ்டகம்
ஆகிய நூல்களும் இவரால் இயற்றப்பட்டன.
வால்மீகி இயற்றிய இராமாயணம் இந்தியாவின் அனைத்து மக்களிடமும் பரவி உலகில் பல்வேறு மொழிகளிலும் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இவர் இயற்றிய இராமாயணம் அதன் பாத்திரங்கள் சிறப்பு வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இராமாயணம் நூல் இதிகாசமே என்றாலும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் புவியியல் அமைவுகள் விவரிக்கப்பட்டிருக்கும் ஆட்சி முறைமைகள் அரசுகள் போன்றவற்றை ஆய்வு நோக்கில் பார்க்கும் போது வெறுமனே கற்பனையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு இவ்வாறான ஒரு இதிகாசத்தைப் படைக்க முடியாது. இது கி.மு 4ம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டுள்ளது. நான்கு பாதங்கள் கொண்ட செய்யுளில் வால்மீகியின் காவியத்தில் ஒரு பாதத்தைக் கூட மாற்ற முடியாது. இடைச் செருகல் செய்ய முடியாது என்பது மகாகவி பாரதியின் வாக்கு.