திருமந்திரத்தில் கேள்வி கேட்டு அமைதல்

திருமந்திரம் முதல் தந்திரத்தில் 21 ஆவதாக உள்ள “கேள்வி கேட்டு அமைதல்” தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 22-08-2021 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.

108 திவ்யதேசத்தில் 106 வது திருமலை திருப்பதி

திருப்பதியில் மூலவர் திருவேங்கடமுடையான் ஸ்ரீநிவாசப் பெருமாள் வெங்கடாஜலபதி பாலாஜி என்று பல்வேறு பெயர்கள் உண்டு. நின்ற திருக்கோலத்தில் வெங்கடாஜலபதி அருள் புரிகிறார். உத்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர். தீர்த்தம் சேசாசலசுவாமி புஷ்கரிணி பாபவிநாச நீர்வீழ்ச்சி ஆகாசகங்கை கோனேரி தீர்த்தம். இதைத் தவிர வைகுண்ட சக்ர ஜாபாவி வருண ஆகாசகங்கை பாபவிநாசம் பாண்டவ குமாரதாரை இராமகிருஷ்ண தும்புரு சேச சனகசந்தன யுத்தகள சீதம்ம தீர்த்தங்களும் உண்டு. விமானம் ஆனந்த நிலய விமானம். இங்குள்ள ராஜகோபுரம் நாற்கோண அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. படிகாவலி மஹா துவாரம் என்று இந்த கோபுரத்திற்கு பெயர். சோழர் காலத்து கட்டட கலை வடிவமைப்பில் உள்ள இந்த கோபுரம் 13ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டுள்ளது. ஆஞ்சநேயர் லட்சுமி நரசிம்மர் உள்ளிட்ட தெய்வங்களின் சிற்பங்கள் உள்ளன. தொண்டைமான் ஆறுமுகன் ஆகியோருக்கு கோயில் ஆதிவராஹ சந்நிதி புஷ்கரணியின் வடமேற்கு மூலையில் உள்ளது. இங்கு தான் முதல் தளிகை. பிறகு தான் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு நடக்கும். ஏழு மலைகள் தாண்டி கோயில் கொண்டிருப்பதால் ஏழுமலைவாசர் என்றும் பெயர். ஏழு மலைகளுக்கும் பெயர்கள் உண்டு. வெங்கடாத்ரி சேசாசலம் வேதாசலம் கருடாசலம் விருஷபாத்ரி அஞ்சனாத்ரி ஆனந்தாத்ரி என்பது அந்த ஏழு மலைகளின் பெயர்களாகும். இந்த மலையையொட்டி சந்தர கிரிப்பக்கம் ஸ்ரீநிவாச மங்காபுரம் என்ற சிற்றூரிலும் ஸ்ரீநிவாசப் பெருமாள் குடி கொண்டிருக்கிறார். மலை மீதேறி தரிசனம் செய்ய முடியாதவர்களுக்கு அங்கேயே தரிசனம் கொடுக்க பகவானே விரும்பி செய்த ஏற்பாடு இது. பகவானுக்கு நைவேத்தியம் தயாரிக்கும் முக்கிய சமையலறைக்கு பொட்டு என்று பெயர். இதற்குள் மகாலட்சுமி அருள்பாலிக்கிறாள். இவளுக்கு பொட்டு அம்மா என்று பெயர். இந்த பெயருக்கு சமையலறை பெண்மணி என்பது பொருள். இவளை மடப்பள்ளி நாச்சியார் என்றும் அழைப்பதுண்டு. இந்த பெண்மணியே ஸ்ரீநிவாசனுக்கு திருமலையில் தங்க இடமளித்த வராக சுவாமியால் அனுப்பப்பட்ட வகுளமாலிகா என நம்பப்படுகிறது. இவள்தான் பத்மாவதியுடன் ஸ்ரீநிவாசனுக்கு திருமணம் நடக்க ஏற்பாடு செய்தாள். வரலட்சுமி விரத நாளில் இந்த தாயாருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. மற்றொரு சமையலறையிலும் மகாலட்சுமியின் சிற்பம் உள்ளது. இந்த சமையலறையில் அன்னப்பிரசாதம் பணியாரம் லட்டு வடை அப்பம் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. இந்த சிறிய சமையலறைக்கு படிப்பொட்டு என்று பெயர்.

திருப்பதியில் தெப்போற்சவம் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பவுர்ணமிக்கு முன்னதாக ஐந்து நாட்கள் நடக்கும். பங்குனி ஏகாதசியன்று ராமர் சீதா லட்சுமணருடன் சுவாமி புஷ்கரணி தெப்பத்தில் உலா வருவர். அடுத்த நாள் துவாதசியன்று கிருஷ்ணர் ருக்மணியுடன் உலா வருவார். இதையடுத்த மூன்று நாட்கள் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் தெப்ப உலா வருவர். சித்திரை மாதம் திரயோதசி சதுர்த்தசி மற்றும் பவுர்ணமி நாட்களில் இந்த நிகழ்ச்சி நடக்கும். இந்த நாட்களில் மலையப்ப சுவாமி மற்றும் பரிவார தேவதைகள் வசந்த மண்டபத்திற்கு ஊர்வலமாக வருவர். அங்கு அபிஷேகம் நடத்தப்படும். மூன்றாவது நாள் சுவாமியுடன் ராமர் சீதை லட்சுமணர் ஆஞ்சநேயர் கிருஷ்ணர் ருக்மணி சத்யபாமா ஆகியோர் ஊர்வலத்தில் வருவார்கள். வைகாசி மாதம் நவமி தசமி மற்றும் ஏகாதசி திதி நாட்களில் பத்மாவதி பரிநயம் நிகழ்ச்சி நாராயணகிரி தோட்டத்தில் நடக்கும். இந்த தோட்டத்தில்தான் சீனிவாசனுக்கும் பத்மாவதிக்கும் திருமணம் நடந்தது. இந்நாட்களில் மலையப்ப சுவாமி யானை குதிரை கருட வாகனங்களில் ஸ்ரீதேவி பூதேவியுடன் தனித்தனி பல்லக்கில் வருவார்கள். அங்கு அவர்களுக்கு திருமணம் நடக்கும். மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சிலைகள் சேதமடையாமல் தவிர்ப்பதற்காக சிறப்பு திருமஞ்சனம் நிகழ்த்தப்படுகிறது. ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தை அடுத்து வரும் மூன்று நாட்கள் இந்த நிகழ்ச்சி நடக்கும். இதை ஜேஷ்டாபிஷேகம் என்று சொல்வார்கள். மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் கல்யாண உற்சவ மண்டபத்திற்கு எழுந்தருள்வார். அபிஷேகம் முடிந்தவுடன் வைரம் பதித்த வஜ்ர கவசம் அணிவிக்கப்படும். பின்னர் சுவாமிகள் ரதவீதிகளில் உலா வருவர். இரண்டாம் நாள் முத்தங்கி சேவை மூன்றாம் நாள் தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சுவாமி பவனி வருவார். புரட்டாசி பிரமோற்சவத்தின் ஐந்தாம் திருநாளில் கருட சேவை நடக்கும். அன்று சுவாமி பவனியின் போது மூலவரே வெளியில் வருவதாக ஐதீகம். இதன் காரணமாக ஒரு காலத்தில் சுவாமி பவனி முடியும் வரை கோயில் நடை அடைக்கப்பட்டது. தற்போது கூட்டம் அதிகமாக இருப்பதால் பெயரளவுக்கு ஐந்து நிமிடங்கள் மட்டும் நடை அடைக்கப்படுகிறது.

திருப்பதி கோயிலுக்குள் மூன்று பிரகாரங்கள் உள்ளன. இதில் ஒரு பிரகாரத்திற்கு சம்பங்கி பிரதட்சிணம் என்று பெயர். இந்த பிரகாரத்திற்குள் பக்தர்கள் செல்ல முடியாது. இங்கு பிரதிமை மண்டபம் ரங்க மண்டபம் திருமலை ராய மண்டபம் சாளுவ நரசிம்மர் மண்டபம் ஐனா மகால் த்வஜஸ்தம்ப மண்டபம் ஆகியவை உள்ளன. சம்பங்கி பிரதட்சிண பிரகாரத்தில் ரங்க மண்டபம் அமைந்துள்ளது. 14ம் நூற்றாண்டில் ஸ்ரீரங்கத்தில் அன்னியர் படையெடுப்பின் போது ரங்கநாதரின் உற்சவர் சிலை திருப்பதிக்கு எடுத்து செல்லப்பட்டது. அந்த சிலை இந்த மண்டபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. 1320-1360 களில் இப்பகுதியை ஆண்ட ஸ்ரீரங்கநாத யாகவராயர் காலத்தில் விஜய நகர பாணியில் இந்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. வெங்கடாசலபதி கருவறைக்கு செல்லும் முன் ஒரு சதுரவடிவ அறை இருக்கும். இதற்கு ஸ்நாபன மண்டபம் என்று பெயர். இதை அடுத்துள்ள செவ்வக அறைக்கு ராமர் மேடை என்று பெயர். இதில் ராமர் சீதா லட்சுமணர் ஆகியோரின் சிலைகளும் விஷ்வக்சேனர் கருடன் ஆகிய உற்சவ மூர்த்திகளின் சிலையும் வைக்கப்பட்டுள்ளன. குலசேகர ஆழ்வார் படியை ஒட்டி போக சீனிவாசர் சயனிக்கும் சயன மண்டபம் அமைந்துள்ளது. இதற்கு அர்த்த மண்டபம் என்று பெயர். இதையடுத்து கர்ப்பகிரகத்தில் வெங்கடாசலதி ஆறடி உயரத்தில் நின்ற கோலத்தில் இருக்கிறார். இவரை காணும் முன்பு நம்மை அறியாமலே ஒரு படியின் மீது காலை வைக்கிறோம். அந்த படிக்கு குலசேகர படி என்று பெயர். குலசேகர ஆழ்வார் படியை ஒட்டி போக சீனிவாசர் சயனிக்கும் சயன மண்டபம் அமைந்துள்ளது. இதற்கு அர்த்த மண்டபம் என்று பெயர்.

திருப்பதி கோயிலின் உள்கோபுரம் நடிமி படி காவிலி என்ற பெயருடன் அழைக்கப்படுகிறது. கொடிமர மண்டபத்தை அடுத்து இந்த கோபுரவாசல் உள்ளது. கோபுர கதவுகள் வெள்ளி தகடுகளால் மூடப்பட்டுள்ளது. வெளி கோபுர கதவுகளை விட இந்த கோபுர கதவுகள் சிறியது. இந்த கதவுகளின் அருகில் நின்று எந்த பிரார்த்தனை செய்தாலும் அது உடனடியாக நிறைவேறும். வெண்டிவாகிலி என்று இந்த கதவுகளுக்கு பெயர். இந்த கதவுகளை ஒட்டியுள்ள சுவரில் ஜடா வர்மன் சுந்தரபாண்டியன் 1251ல் இக்கோயிலுக்கு அளித்த உபய விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமாமணி மண்டபத்தைக் கடந்து பங்காரு வகிலி எனப்படும் தங்க நுழைவு வாயில் வழியாக சென்று பெருமாளைத் தரிசிக்கலாம். இதன் வாசலில் ஜெயன் விஜயன் எனப்படும் துவார பாலகர்கள் உள்ளார்கள். இந்த வாசலில் உள்ள மரக்கதவு தங்க முலாம் பூசிய தகடுகளால் போர்த்தப்பட்டுள்ளது. அந்த தகடுகளில் தசாவதார சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இதனுள் நுழையும் போது சுப்ரபாதம் எந்நேரமும் காதில் ஒலிக்கும். வெங்கடாசலபதியை தரிசித்து விட்டு வெளியில் வந்ததும் முக்கோடி உள்ளது. அந்த பிரகாரத்தில் விஷ்வக்சேனர் சன்னதி உள்ளது. இவர் நான்கு கரங்களை உடையவர். சங்கு சக்கரம் வைத்திருப்பார். வைகானச ஆகம விதிப்படி பெருமாள் கோயிலுக்கு செல்பவர்கள் விஷ்வக்சேனரை அவசியம் வழிபட வேண்டும் என்பது விதி. வெங்கடாசலபதியின் கழுத்திலிருந்து கழற்றப்படும் மாலைகள் எப்போதும் விஷ்வக் சேனருக்கு அணிவிக்கப்படுகிறது. பிரம்மோற்சவத்தின் போது இவருக்கு சிறப்பு பூஜை உண்டு. இவரே விழா ஏற்பாடுகளை கவனிப்பதாக நம்பிக்கை. இவரது விக்ரகம் ஊர்வலத்தின் போது எடுத்துச்செல்லப்படும். பெருமாளை தரிசித்து வெளியே வரும் வழியில் உண்டியல் உள்ளது. தனது திருமணத்துக்கு குபேரனிடம் கடன் வாங்கிய பெருமாள் யார் யார் பாவம் செய்தார்களோ அவர்களின் பாவக்கணக்குக்கு ஏற்ப கலியுகத்தில் அவர்களிடமிருந்து பணத்தை வசூல் செய்து கடனை அடைத்து விடுவேன் என அவரிடம் வாக்கு கொடுத்துள்ளார். அதன்படி அவர் பக்தர்களிடம் இருந்து வசூலை நடத்திக் கொண்டிருக்கிறார். காவாளம் எனப்படும் மிகப்பெரிய பித்தளை அண்டா துணி சுற்றப்பட்டு ஒரு வண்டியில் வைத்து நமது பார்வைக்கு தெரியாமல் உள்ளே நிறுத்தப்பட்டிருக்கும் அதுவே உண்டியல். அது நிறைந்தவுடன் அந்த வண்டியை நகர்த்தி விட்டு புதிய அண்டாவுடன் இன்னொரு வண்டி உள்ளே தள்ளப்படும். நிரம்பிய பானை பாதுகாப்புடன் உண்டியல் மண்டபத்துக்கு எடுத்துச் செல்லப்படும். பக்தர்களில் சிலர் உண்டியல் எண்ணும் இடத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் கையில் சில்லரைக் காசு கூட கொண்டு செல்லக்கூடாது. ஒருவேளை தப்பித்தவறி பெரும் தொகை நகைகளுடன் உள்ளே சென்று விட்டால் அதுவும் பெருமாளுக்கு சொந்தமாகி விடும். உண்டியல் மண்டபத்திற்கு பரகாமணி மண்டபம் என்று பெயர்.

திருப்பதி கோயில் விமானத்தின் கிழக்கு பகுதியில் வரதராஜ சுவாமி சன்னதி உள்ளது. சங்கு சக்கரத்துடன் அபயஹஸ்த நிலையில் இவர் காட்சியளிக்கிறார். முதல் பிரகாரத்தில் வடகிழக்கு பகுதியில் யோக நரசிம்மர் சன்னதி அமைந்துள்ளது. இவருக்கு கிரிஜா நரசிம்மசுவாமி என்று பெயர். சனிக்கிழமைகளில் இவருக்கு திருமஞ்சனம் நிகழ்த்தப்படும். வைகாசி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் நரசிம்ம ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்படும். இவரது கருவறையை சுற்றி வரும்போது கல் ஒன்று பதிக்கப்பட்டிருக்கும். இதில் பக்தர்கள் தங்கள் கோரிக்கையை விரல்களால் எழுதுவார்கள். 15ம் நூற்றாண்டில் இந்த சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த சன்னதியிலுள்ள கற்கள் பளபளக்கும் விதத்தில் பாலிஷ் கற்களாக இருக்கின்றன. வெங்கடாசலபதியின் எதிரே கருடாழ்வார் கூப்பிய கரங்களுடன் அமர்ந்திருக்கிறார் இவருக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்படுகிறது. பிரம்மோற்சவ கொடியேற்றும் போது அந்த கொடியில் கருடனின் உருவம் பொறிக்கபட்டிருக்கும். வெங்கடாசலபதிக்கு காலை பூஜை முடிந்ததும் பரிவார தேவதைகளுக்கு நைவேத்யம் எடுத்து செல்லப்படும். அதை ஒரு சிவிகையில் (பல்லக்கு) சுமந்து செல்வார்கள். அந்த சிவிகை கருடாழ்வாரின் அம்சமாக கருதப்படுகிறது. கருவறைக்குள் நுழையும் வழியில் உள்ள ராமர் மேடையில் உற்சவ கருடாழ்வார் காட்சியளிக்கிறார். சங்கீர்த்தன பண்டார அறையின் வடக்கே ராமானுஜர் சன்னதி இருக்கிறது. இந்த சன்னதியை பாஷ்யக்காரர் சன்னதி என அழைக்கிறார்கள்.

திருப்பதிக்கு ராமானுஜர் வந்தபோது பல நந்தவனங்களை அமைத்தார். பெருமாளுக்கு தினமும் புத்தம் புதிய மலர்கள் கிடைக்க வேண்டுமென்பதில் அவர் அக்கறை கொண்டிருந்தார். பல முக்கிய வழிபாடுகளை ஏற்படுத்தியவரும் இவரே. 13ம் நூற்றாண்டில் இவரது சன்னதி அமைக்கப்பட்டது. இவரது சன்னதியின் நுழைவுப்பகுதியில் பாண்டியர்களின் சின்னமான மீன்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ராமானுஜர் சன்னதியின் மேற்குப் பகுதியில் தலப்பாகமரா எனப்படும் சங்கீர்த்தன பண்டார என்னும் அறை அமைந்துள்ளது. இது மிகச்சிறிய அறையாகும். தலக் கவிஞர்கள் எனப்படும் அன்னமாச்சாரியார் அவரது மகன் பெட்டதிருமலாச்சாரியார் பேரன் சின்ன திருமலாச்சாரியார் ஆகியோர் ஏழுமலையானைப் பற்றி பாடிய பாடல் தொகுப்பு (சங்கீர்த்தனம்) இந்த அறையில் வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இதற்கு சங்கீர்த்தன பாதுகாப்பு அறை என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. கி.பி.1424ல் அன்னமாச்சாரியாரும் அவரது மகன் மற்றும் பேரனும் திருமலைக்கு வந்தனர். அவர்கள் பெருமாளைப் பணிந்து பல பாடல்களை பாடியுள்ளனர். திருப்பதியிலுள்ள வெங்கடேஸ்வரா நூலகம் 1993 இல் அமைக்கப்பட்டது. இங்கு 40 ஆயிரம் இந்துமத வரலாற்று நூல்கள் உள்ளன. ஆங்கிலம் இந்தி மொழிகளில் இந்நூல்கள் இருக்கும்.

நாரதர் தனது தந்தையான பிரம்மனைப் பார்க்க வந்தார். அப்போது பூலோகத்தில் மக்களுக்கு இழைக்கப்படும் நடக்கும் அநியாயத்தை தட்டிக் கேட்க ஏதாவது வழி செய்ய வேண்டும் என பிரம்மனிடம் காசியபர் என்ற முனிவரின் தலைமையில் தேவர்கள் ஆலோசித்துக் கொண்டிருந்தனர். யாகம் செய்தால் மக்களுக்கு நல்வழி பிறக்கும் என பிரம்மன் கூறினார். யாருக்கு யாகத்தின் பலனை கொடுத்தால் பூலோகத்தில் நடக்கும் அட்டூழியங்களை தடுத்து நிறுத்த முடியும்? என சிக்கலான கேள்வி கேட்டார் நாரதர் இது பற்றி பிருகு முனிவர் என்பவரிடம் மற்றவர்கள் கருத்து கேட்டனர். பிருகு முனிவர் இயற்கையிலேயே கர்வம் மிக்கவர். அவரது கர்வத்தை அடக்க ஸ்ரீமன் நாராயணன் நேரம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். பிருகு முனிவருக்கு பாதத்தில் ஞானக்கண் உண்டு. எதிர்காலத்தை உணர்ந்து கொள்ளும் சக்தி உண்டு. இதை பயன்படுத்தி மற்றவர்களை மட்டம் தட்டுவதில் அவருக்கு அலாதி இன்பம். பிருகு முனிவர் நான் நேரடியாக அனைத்து லோகங்களுக்கும் சென்று எந்தக்கடவுள் பொறுமை மிக்கவர் என்பதை பார்த்து வருகிறேன். அவருக்கே யாகம் செய்வோம் என்று கூறினார். அதன்படி அவர் முதலில் பிரம்மனிடம் சென்றார். அங்கு சரஸ்வதியும் பிரம்மனும் தனித்திருந்தனர். பிருகு அனுமதி பெறாமல் உள்ளே நுழைந்து விட்டார். பிரம்மா இதைக் கண்டித்தார். பக்தனை வரவேற்காத பிரம்மனுக்கு இனி உலகில் பூஜையே நடக்காது என சாபம் இட்டு விட்டு சிவலோகம் சென்றார். சிவலோகத்தில் சிவபெருமான் பார்வதியுடன் தனித்திருந்தார். பிருகு முனிவர் அங்கு இருந்தவர்கள் தடுத்தும் கேளாமல் நேரடியாக இருவரும் இருந்த இடத்திற்கு சென்றுவிட்டார். சிவபெருமானுக்கும் கோபம் ஏற்பட்டது. அவர் பிருகு முனிவரை கண்டித்தார். உடனே பிருகு முனிவர் பூலோகத்தில் உனக்கு இனி லிங்க ரூபமே கிடைக்கும். அதற்கே பூஜை நடக்கும் என சாபமிட்டார். அடுத்து வைகுண்டத்திற்கு சென்றார். அங்கு விஷ்ணு சயனகோலத்தில் இருந்தார். அருகில் லட்சுமி தேவி இருந்தார். பிருகு வந்ததை கவனித்தாலும் வேண்டுமென்றே கவனிக்காதது போல விஷ்ணு தூக்கத்திலேயே இருந்தார். உடனே பிருகு முனிவர் கோபத்துடன் மார்பில் உட்டி உதைத்தார். அந்த நேரத்தில் பிருகுவின் பாரத்திலிருந்த ஞானக்கண்ணை அவருக்குத் தெரியாமலேயே பெருமான் பிடுங்கி எறிந்து விட்டார். தன்னை உதைத்ததற்காக பெருமாள் கோபப்படவில்லை. உடனே உலகத்திலேயே பொறுமைமிக்க கடவுள் விஷ்ணுதான் என்பதை உணர்ந்து அவருக்கே யாகத்தின் பயனை கொடுப்பது என முனிவர்கள் முடிவு செய்தனர்.

பெருமாளின் மார்பில் தான் குடிகொண்டிருப்பது தெரிந்தும் எட்டி உதைத்த முனிவரை கண்டிக்காத கணவன் மீது லட்சுமி கோபம் கொண்டாள். உடனே பெருமாளை விட்டு பிரிந்து பூலோகம் செல்வதாக கூறிவிட்டு பூலோகத்திற்கு வந்தாள். லட்சுமிதேவி தங்கியிருந்த இடம் நாராயண வனம் என அழைக்கப்பட்டது. இந்த பகுதியை ஆகாசராஜன் என்பவர் ஆண்டு வந்தார். அவரது மனைவி தரணிதேவி. இவர்கள் குழந்தை வரம் கேட்டு யாகம் செய்வதற்காக பொன் கலப்பையால் மண்ணை உழுதுக் கொண்டிருக்கும் போது கலப்பையில் ஏதோ ஒரு பொருள் தட்டியது. அந்த இடத்தில் தோண்டி பார்த்தபோது உள்ளே பெட்டிக்குள் இருந்த தாமரையின் நடுவே ஒரு பெண் குழந்தை இருந்தது. தாமரைக்கு பத்மம் என்ற பெயர் உண்டு. பத்மத்தில் வீற்றிருந்ததால் அந்த குழந்தைக்கு பத்மாவதி என பெயரிட்டனர். பத்மாவதி விஷ்ணு பக்தை. ஒருமுறை வேதாசல மலை பகுதியில் தோழிகளோடு சுற்றி வந்தாள். அங்கே வேட்டைக்கு சீனிவாசன் என்ற வேடன் வந்தான். பத்மாவதியை பார்த்ததும் அவளை திருமணம் செய்ய ஆசைப்பட பத்மாவதி மறுத்து விட்டாள். பின்னர் வேடனாக வந்தது ஸ்ரீமன் நாராயணன் என்பது தெரிந்ததும் பத்மாவதி சீனிவாசனை திருமணம் செய்ய சம்மதித்தாள். ஆனால் சீனிவாசனிடம் திருமணத்திற்கான பணம் இல்லை. ஏற்கனவே லட்சுமி தேவி பிரிந்து போய் விட்டதால் பணம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தார் நாராயணன். இந்த சமயத்தில் நாரதர் குபேரனிடம் பணம் பெற்று திருமணத்தை நடத்தலாம் என யோசனை கூறினார். உடனே பெருமாள் குபேரனை அழைத்து ஒரு லட்சத்து 14 ஆயிரம் பொன் கடன் வாங்கி கொண்டு பத்திரம் எழுதிக் கொடுத்து விட்டார். தன்னை வழிபட வரும் பக்தர்கள் தரும் பணத்தை கலியுகம் முழுவதும் வட்டியாக தந்து விட்டு கலியுகம் முடியும் போது அசலை தந்து விடுவதாக குபேரனிடம் தெரிவித்தார் நாராயணன். திருமணம் சிறப்பாக முடிந்தது. திருமணத்திற்கு பிறகு பெருமாள் திருமலையில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அவருக்கு ஆகாசராஜனின் தம்பியான தொண்டைமான் என்பவர் கோயில் கட்டினார். கோயிலில் வழிபட தேவாதி தேவர்கள் எல்லாம் வந்தனர். பிரம்மனும் அங்கு வந்தார். அவர் பெருமாளிடம் ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் உற்சவம் நடத்த அனுமதி கேட்டார். அதன்படி பிரம்மோற்சவம் நடந்தது. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கொங்கணர் என்ற சித்தரின் பீடம் இங்கு உள்ளது. பக்தர்கள் தரும் காணிக்கையை கணக்கு பார்த்து குபேரனிடம் கொடுப்பதில் பெருமாளுக்கு சிக்கல் ஏற்பட்டது. எனவே தனது சகோதரனான கோவிந்தராஜனை அழைத்து இந்த பணத்தை குபரேனிடம் கொண்டு சேர்ப்பது உனது பொறுப்பு என்றார். அதன்படி கோவிந்தராஜன் கீழ்திருப்பதியில் தங்கியிருந்து வெங்கடாசலபதிக்கு சேரும் காணிக்கையை மரக்கால் மூலம் அளந்து குபேரனிடம் கொடுத்து வருகிறார்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 வரை சுப்ரபாத தரிசனம் நடக்கும். காலையில் சுவாமியை எழுப்புவதற்கு 2 அர்ச்சகர்கள் 2 ஊழியர்கள் தீப்பந்தம் பிடிக்கும் ஒருவர் வீணை வாசிக்கும் ஒருவர் என 6 பேர் சன்னதி முன்னால் உள்ள தங்க வாசலுக்கு வந்து சேருவார்கள். முதலில் துவார பாலகர்களுக்கு வணக்கம் செய்வார்கள். பின்னர் அர்ச்சகர் ஒரு ஊழியரிடம் சாவியை வாங்கி சன்னதியை திறப்பார். பின்னர் சுவாமியை வணங்கிவிட்டு சன்னதி கதவை சாத்திவிட்டு உள்ளே செல்வார்கள். அந்நேரத்தில் கவுசல்யா சுப்ரஜா ராம என்ற சுப்ரபாதம் வெளியே நிற்கும் ஒரு குழுவினரால் பாடப்படும். சன்னதிக்குள் தீப்பந்தம் கொண்டு செல்பவர் அங்குள்ள விளக்குகளை எல்லாம் ஏற்றுவார். பின்னர் வீணையை இசைக்க வெங்கடாசலபதி அருகில் போக சீனிவாசமூர்த்தி என்பவரை கொண்டு வந்து அமர்த்துவார்கள். அவரை முதல்நாள் இரவில் ஒரு தொட்டிலில் படுக்க வைத்திருப்பார்கள். அந்த தொட்டிலிலிருந்து சுவாமியை எடுத்து மூலவர் அருகில் அமரவைப்பர். சுப்ரபாதம் பாடி முடித்ததும் சன்னதி திறக்கப்படும். சுவாமிக்கு பாலும் வெண்ணெயும் படைத்து நவநீத ஹாரத்தி எனப்படும் தீபாராதனை செய்யப்படும். விஸ்வரூப தரிசனம் என்றும் இதை சொல்வதுண்டு. இந்த சேவையைக் காண மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள். திருப்பதி மலை யிலுள்ள ஆகாயகங்கை தீர்த்தத்திலிருந்து மூன்று குடங்களில் புனிதநீர் வந்துசேரும். ஒரு குடம் நீரை காலை பூஜைக்கும் மற்றொன்றை மாலை பூஜைக்கும் இன்னொன்றை இரவு பூஜைக்கும் எடுத்து வைப்பார்கள். பிரம்மோற்சவ காலத்தில் மட்டும் யானை மீது தீர்த்தம் எடுத்து வரப்படும். ஒரு குடம் தண்ணீரை ஐந்து வெள்ளி பாத்திரங்களில் நிரப்புவார்கள். பின்னர் உத்தரணியில் (ஸ்பூன் போன்றது) தண்ணீர் எடுத்து சுவாமி முன்பு அர்ச்சகர் நீட்டுவார். சுவாமி அதில் முகத்தை அலம்பிக் கொள்வார் என்பது ஐதீகம். பின்னர் மீதி உள்ள தண்ணீரை சுவாமியின் பாதத்தில் அபிஷேகம் செய்வார்கள். முழு மூர்த்திக்கும் அபிஷேகம் நடப்பதில்லை. மூலவருக்கு பதிலாக அருகிலுள்ள போகசீனிவாச மூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்படும். அப்போது சுவாமியின் இடுப்பில் ஒரு துண்டை கட்டி வாசனை தைலம் தேய்த்து மஞ்சள் கலந்த நீரால் அபிஷேகம் நடத்துவார்கள். பிறகு பசும்பால் சந்தனம் தேன் மீண்டும் மஞ்சள் தண்ணீர் என வரிசையாக அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு பிறகு வஸ்திரம் சாத்தப்படும். சுவாமிக்கு நெற்றியில் நாமம் இடுவார்கள். பிறகு அவர் முன்னால் கண்ணாடியை காட்டுவார்கள். குடைபிடித்து சாமரத்தால் விசிறுவார்கள். இதன்பிறகு தீபாராதனை நடக்கும். இத்துடன் காலை சுப்ரபாத பூஜை நிறைவடையும்.

சுப்ரபாத பூஜையை அடுத்து காலை 3.30 முதல் 3.45 வரை சன்னதியை திரை போட்டு மறைத்து சுத்தி எனப்படும் தூய்மை செய்யும் பணி நடக்கும். அந்த நேரத்தில் முதல் நாள் சுவாமிக்கு அணிந்த மாலைகளை கோயிலுக்கு பின்னால் உள்ள பூக் கிணற்றில் கொண்டு சேர்ப்பார்கள். பின்னர் புதிய மாலைகள் சுவாமிக்கு கொண்டு வரப்படும். இதைக் கொண்டு வர ஜீயங்கார் என்பவர் உள்ளார். ஜீயங்காருக்கு உதவியாக ஏகாங்கி என சொல்லப்படுபவர் இருக்கிறார். ஜீயங்கார் முன்னால் நடக்க ஏகாங்கி பின்னால் வருவார். கூடவே முரசு வாத்தியத்துடன் ஒருவர் செல்வார். இவர்களுக்கு பின்னால் பள்ளி எழுச்சி பாட இருவர் திருப்பாவை பாட இருவர் புருஷ ஸுக்தம் சொல்ல இருவர் என ஒரு கோஷ்டியே திரண்டு வரும். பூ கட்டுவதற்கு என யமுனாதுறை என்ற இடம் கோயிலில் இருக்கிறது. அங்கிருந்து பூமாலைகள் சுவாமிக்கு அணிவதற்காக எடுத்து வரப்படும். காலை 3.45 மணிக்கு தோமாலை சேவை ஆரம்பமாகும். சன்னதிக்கு பூக்கூடை வந்தவுடன் அர்ச்சகர் சுவாமியின் மார்பில் இருக்கும் மகாலட்சுமிக்கு முதலில் பூச்சரத்தை சாத்துவார். பின்னர் சுவாமிக்கு மாலைகள் சாத்தப்படும். பெருமாளுக்கு மாலை சாத்தி முடித்து அடுக்கு தீபாராதனை செய்யப்படும். இதற்கு 25 நிமிடம் ஆகும். அதுவரை ஜீயங்காரும் மற்றவர்களும் திருப்பள்ளி எழுச்சி திருப்பாவை பாசுரங்களை பாடுவார்கள். இதை பார்ப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும். இந்த சேவை ராமானுஜர் காலத்தில் தோள் மாலை சேவை என சுத்த தமிழில் அழைக்கப்பட்டது. பின்னர் தெலுங்கில் தோமாலா சேவா என மாறிவிட்டது. தோமாலை சேவை காலை 4.30 மணிக்கு நிறைவுபெறும்.

தோமாலை சேவைக்கு அடுத்து கொலுவு நிகழ்ச்சி 15 நிமிடங்கள் நடக்கும். இதற்காக கொலுவு ஸ்ரீநிவாச மூர்த்தி விக்ரகம் ஏழுமலையான் சன்னதிக்குள் இருக்கிறது. இந்த விக்ரகத்தை வெள்ளி பல்லக்கில் வைத்து வெள்ளி குடை பிடித்து சன்னதியில் இருந்து வெளியில் எடுத்து வருவர். ஒரு மறைவிடத்தில் வைத்து எள்ளுப்பொடி வெல்லம் வெண்ணெய் நைவேத்தியம் செய்து அர்ச்சனை நடத்தி ஆரத்தி காட்டுவர். பிறகு அர்ச்சகர் ஒரு பஞ்சாங்கத்தை பிரித்து அன்றைய நாள் நட்சத்திரம் திதி உள்ளிட்ட விவரங்களை வாசிப்பார். அதன்பிறகு முதல்நாள் உண்டியலில் எவ்வளவு பணம் சேர்ந்தது தங்கம் வெள்ளி வரவு ஆகிய விபரங்களை சுவாமியிடம் சொல்வர். மூலவரே கொலுவு ஸ்ரீநிவாசமூர்த்தியின் வடிவில் வெளியே வருவார் மூலவரிடமே நேரடியாக கணக்கு வழக்குகளைச் சொல்வதாக நம்பிக்கை. இந்த காட்சியைக்காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை. அர்ச்சனாந்திர தரிசனம் முடிந்ததும் வெங்கடாசலபதிக்கு முதல் நைவேத்தியம் படைக்கப்படும். அப்போது இரண்டு மணிகள் ஒலிக்கப்படும். அவருக்கு முதலில் தயிர்சாதம் படைக்கப்படும். மூலவருடன் விஷ்வக்சேனர் கருடன் மற்றும் நித்யசூரிகளுக்கும் (முக்தி பெற்றவர்கள்) இதே நைவேத்தியம் படைக்கப்படும். இதையடுத்து மீண்டும் மணி அடிக்கப்பட்டு 2 வது முறையாக நைவேத்தியம் படைக்கப்படும். அப்போது வராக புராணத்தில் உள்ள 108 நாமாக்களை கொண்ட அஷ்டோத்திர நாமா வாசிக்கப்படும். இதை பக்தர்கள் யாரும் பார்க்க முடியாது. சுவாமிக்கு நைவேத்தியம் செய்யப்படும் பணியார வகைகள் ஒரு குறிப்பிட்ட அளவு பக்தர்களுக்கு மட்டும் பிரசாதமாக வழங்கப்படும். திருப்பதி லட்டை ஒரு காலத்தில் மனோகரம் என்ற பெயரில் அழைத்தார்கள். கொலுவு தரிசனத்தை அடுத்து சகஸ்ரநாம அர்ச்சனை நடக்கும். விஷ்ணு சகஸ்ரநாமம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் வெங்கடாசலபதிக்கென தனியாக ஆயிரத்தெட்டு பெயர் சொல்லி சகஸ்ரநாமம் இருக்கிறது. காலை 4.45 மணி முதல் 5.30 வரை இந்த அர்ச்சனை நடக்கும். இந்த தரிசனத்தின் போது பக்தர்களை அங்குள்ள ஊழியர்கள் யாரும் தள்ளி விட மாட்டார்கள். சகஸ்ரநாம அர்ச்சனை முடிந்து பூஜை நடத்தப்படும். இந்த பூஜைக்கு அர்ச்சனாந்தர தரிசனம் என்று பெயர். ஊஞ்சல் மண்டபத்தில் தினமும் மாலை 5.30 மணிக்கு சகஸ்ர தீப அலங்காரம் (ஆயிரம் தீபங்கள்) செய்யப்படும். அப்போது அன்னமயா சங்கீர்த்தனம் பாடப்படும். வியாழக்கிழமைகளில் வெங்கடாசலபதிக்கு முக்கிய ஆபரணங்கள் எதுவுமின்றி வேட்டி மற்றும் வெல்வெட் அங்கி அணிவிக்கப்படும். அதன் மேல் அங்கவஸ்திரம் மட்டும் சாத்துவார்கள். இந்த நிகழ்ச்சிக்கு சாலிம்பு என்று பெயர். மேலும் சுவாமிக்கு வழக்கமாக அணிவிக்கப்படும் திருநாமத்திற்கு பதிலாக நெற்றியின் மத்தியில் மெல்லிய நாமம் மட்டும் அணிவிக்கப்படும். திருப்பதி கோயிலில் உள்ள சம்பங்கி பிரகாரத்தில் திருமண மண்டபம் இருக்கிறது. அங்கு உற்சவரான மலையப்ப சுவாமிக்கும் ஸ்ரீதேவி பூதேவிக்கும் திருமணம் நடத்தப்படும். பதினைந்தாம் நூற்றாண்டில் இருந்து இந்த திருமணம் நடந்து வருகிறது. சுவாமிக்கும் தாயார்களுக்கும் மத்தியில் ஒரு திரை போடப்படும். பின்னர் அந்த திரை அகற்றப்பட்டு ஹோமங்கள் நடக்கும். ஒரு புரோகிதர் தாயார்களுக்கும் சுவாமிக்கும் திருமணம் செய்துவைப்பார். விழாக்காலங்களில் மட்டும் இந்த திருமணம் நிறுத்தி வைக்கப்படும்.

திருப்பதி கோயிலுக்கு வெளியே உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் மாலை 4 மணிக்கு மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் ஊஞ்சலில் ஆடும் காட்சியை பார்க்கலாம். இதற்கு டோலாத்ஸவம் என்று பெயர். அப்போது வேத பாராயணம் செய்யப்படுவதுடன் மங்கள வாத்தியங்களும் முழங்கும். திருப்பதியில் நள்ளிரவு 1.30 மணி வரை நடை திறக்கப்பட்டு சர்வதரிசனம் நடக்கும். 1.30 மணிக்கு சுவாமியை தூங்கச் செய்வதற்காக ஏகாந்த தரிசனம் என்னும் நிகழ்ச்சி நடத்துவார்கள். சன்னதிக்குள் இருக்கும் போக ஸ்ரீநிவாச மூர்த்தியை வெள்ளி தொட்டிலில் இடுவார்கள். தொட்டிலுக்குள் வெல்வெட் மெத்தை இருக்கும். தூங்குவதற்கு முன்னால் சுவாமியின் உடலில் உள்ள பூக்களை களைந்து விடுவார்கள். காய்ச்சிய பால் முந்திரி பாதாம் திராட்சை ஆகியவற்றை நைவேத்யம் செய்வார்கள். பிறகு விளக்கு திரியை குறைத்து வைப்பார்கள். இதன்பிறகு அன்னமாச்சாரியார் பரம்பரையில் வந்தவர்கள் தம்புராவுடன் வந்து கீர்த்தனைகளை பாடுவார்கள். நைவேத்தியமாக வைத்த பாலை அவர்களுக்கு கொடுப்பார்கள். பின்னர் சன்னதிக்கு திரை போட்டு தங்க வாசல் சாத்தப்படும்.

திருப்பதி பெருமாளை ஹாதிராம் பாவாஜி என்னும் வடநாட்டு பக்தர் தினமும் வணங்குபவர். அவரின் பக்தியை ஏற்ற வெங்கடேசப் பெருமான் பாவாஜி தங்கியிருந்த மடத்திற்கு வந்தார். சுவாமி என்னுடன் சொக்கட்டான் விளையாடி அருள் செய்ய வேண்டும் என்று பாவாஜி கேட்டுக் கொண்டார். வெங்கடேசனுடன் அதையேற்று விளையாடினார். ஒருநாள் பெருமாள் தான் அணிந்திருந்த மாலை (ஹாரம்) ஒன்றை விட்டுச் சென்று விட்டார். ஹாதிராம் பாவாஜி காலையில் கோயிலில் சென்று கொடுத்து விடலாம் என்று எண்ணினார். காலையில் பூஜைக்கு சென்ற அர்ச்சகர்கள் மாலை இல்லாததைக் கண்டு அதிகாரிகளிடம் தெரிவித்தனர். மாலையை வைத்திருந்த பாவாஜியை திருடன் என்று முடிவெடுத்து தண்டித்தனர். பாவாஜி இறைவனே நேரில் வந்து சொக்கட்டான் விளையாடிய உண்மையை சொல்லியும் யாரும் நம்புவதாக இல்லை. பாவாஜியை சிறை வைத்தனர். அவரிடம் நீங்கள் சொல்வது உண்மையானால் இந்த அறையிலுள்ள கரும்புக் கட்டுக்கள் அத்தனையும் நீங்களே தின்று தீர்க்க வேண்டும். அப்படியில்லா விட்டால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்று நிபந்தனை விதித்தனர். பாவாஜி பக்தியுடன் பாலாஜியைத் தியானிக்கத் தொடங்கினார். நள்ளிரவில் யானையாக வந்த பெருமாள் கரும்புக் கட்டுகளை தின்று தீர்த்து தனது பக்தனின் பெருமையை உலகறியச் செய்தார். திருமலையிலிருந்து பாபவிநாச தீர்த்தம் செல்லும் வழியிலுள்ள வேணுகோபால சுவாமி கோயிலில் பாவாஜியின் அதிஷ்டானம் அமைந்து உள்ளது.

திருமலையில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் மலைப்பாதையில் சிலாதோரணம் என்ற அறிவியல் ஆர்ச் உள்ளது. இது ஒரு பாறைப்படிமம். மிகமிக அரிதாக அமைந்துள்ள இப்பாறைப் படிமம் இயற்கையாக அமைந்த ஒன்றாகும். இரண்டாயிரத்து 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவானது என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இத்தோரணத்தின் நீளம் 25 அடி உயரம் 10அடி இவ்விடத்தில் இருந்த புற்றில் இருந்தே வெங்கடேசப் பெருமாள் சீனிவாசனாக வெளிப்பட்டதாகக் கூறுகிறார்கள். இந்த படிமத்தில் சங்கு சக்கரம் அபயஹஸ்தம் கருடாழ்வார் ஐராவதம் ஆகிய உருவங்கள் இயற்கையாக அமைந்துள்ளன.
இயற்கை அழகு பச்சைப்பசேல் என்று எங்கும் நிறைந்திருக்கும் மலைப்பாதையில் சேஷாத்ரி மலையைக் கடக்கும்போது மோக்காலு மிட்டா என்னும் இடம் வருகிறது. இப்புனித மலையின் மீது பாதம் பதித்து நடந்தால் பாவம் உண்டாகும் என்று எண்ணிய ராமானுஜர் முழங்கால் களாலேயே ஊர்ந்து மலையேறினார். அவ்வாறு ஏறும்போது ஓரிடத்தில் ராமானுஜரின் கால் எலும்பு முறிந்தது. அதனால் அந்த இடத்துக்கு முழங்கால் முறிச்சான் என்ற பெயர் ஏற்பட்டது. தெலுங்கில் இதை மோகாலு மிட்டா என்று அழைக்கிறார். அவ்விடத்தில் ராமானுஜருக்கு கோயில் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. திருப்பதி ஏழுமலையானின் மீது ஈடுபாடு கொண்டு அன்னமய்யா என்ற சிறுவன் மலையேறி வந்தான். அவனுக்கு பசிதாகம் ஏற்பட்டு மயங்கி விழுந்தான். பத்மாவதி தாயார் அச்சிறுவன் முன்தோன்றி அமுதளித்தாள். அன்னையின் அருள்பெற்ற அன்னமாச்சார்யா நூறு பாடல்களைப் பாடி போற்றினார். பின்னாளில் பெருமாளின் மீது ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய அன்னமய்யாவின் அருள் வாழ்க்கை இம்முழங்கால் முறிச்சானில் தான் ஆரம்பமானது.

திருப்பதி வெங்கடாசலபதி கோயிலின் வடபுறத்தில் வராக சுவாமி கோயில் அமைந்துள்ளது. புராணங்களின்படி இதுவே ஆதி வராக சேத்ரம் என்று தெரியவருகிறது. பெருமாள் ஸ்ரீநிவாசனாக பூமிக்கு வந்தபோது ஆதி வராக சுவாமியிடம் அனுமதி பெற்றே திருமலையில் தங்கினார். பிரம்ம புராணத்தில் சொல்லப்படும் தகவலின்படி வெங்கடாசலபதி கோயிலுக்கு செல்வதற்கு முன் பக்தர்கள் ஆதி வராக சுவாமியை தரிசிக்க வேண்டும் என்பது விதி. அது போல அவருக்கே முதல் நைவேத்தியமும் படைக்க வேண்டும். அத்ரி சம்ஹிதை என்ற நூலில் சொல்லப்பட்டுள்ளபடி வராக அவதாரம் ஆதி வராகம்0 பிரளய வராகம் யஜ்ன வராகம் என மூன்று வடிவங்களில் பூஜிக்கப்படுகிறது. இவ்வகையில் இங்குள்ள வராக சுவாமி ஆதி வராகர் எனப்படுகிறார். இவரது திருநாமம் ஆதிவராக மூர்த்தி என்பதாகும். இவரது கோயில் சுவாமி புஷ்கரணி தெப்பக்குளக் கரையில் உள்ளது. திருப்பதி சன்னதி வீதியில் ஸ்ரீபேடி ஆஞ்சநேய சுவாமி கோயில் உள்ளது. ஒரு பெருமாள் கோயிலின் எதிரே கருடன் அல்லது ஆஞ்சநேயர் கோயில் தனித்து அமைந்திருந்தால் அது மிகவும் சிறப்பானதாக சொல்லப்படுகிறது. அவ்வகையில் வெங்கடாசலபதி கோயிலின் எதிரே இந்த கோயில் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இவருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடத்தப்படும். ஆஞ்சநேயர் ஜெயந்தி அன்றும் விசேஷ பூஜை உண்டு. பேடி என்றால் விலங்கு என பொருள். அஞ்சனாதேவி திருமலையில் தவமிருந்து ஆஞ்சநேயரை பெற்றதாக புராண கதைகள் உண்டு. வெங்கடாசலபதியின் அருளால் பிறந்த இந்த குழந்தை அவரை எந்த காலமும் பிரியக்கூடாது என அஞ்சனாதேவி நினைத்தாள். ஆனால் விளையாட்டு பிள்ளையான ஆஞ்சநேயரோ சூரியனை பிடிப்பதற்காக வானத்திற்கு பறந்து சென்று திரும்பினார். இதன் பின்னும் அவர் எங்காவது விளையாட செல்லக்கூடாது என்பதற்காக அஞ்சனா அவருக்கு விலங்கிட்டு வைத்தாள். அந்த நிலையிலேயே அவரை வெங்கடாசலபதி சன்னதி முன்னால் நிறுத்தி சுவாமியை எந்நேரமும் வணங்க வேண்டும் என கட்டளையிட்டாள். விலங்கிடப்பட்ட ஆஞ்சநேயர் என்பதால் இவருக்கு பேடி ஆஞ்சநேயர் என்று பெயர். இதுதவிர வராக சுவாமி கோயில் எதிரிலும் ஒரு ஆஞ்சநேயர் கோயில் இருக்கிறது.

திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள தீர்த்தம் கபிலதீர்த்தம். இதற்கு ஆழ்வார் தீர்த்தம் என்றும் பெயர் உண்டு. மாதவன் என்னும் அந்தணன் பெண்பித்தனாய் அலைந்து நோய்வாய்ப்பட்டான். திருமலைக்கு சென்றால் தீர்வு கிடைக்கும் என்று எண்ணி இங்கு வந்தான். கபில தீர்த்தத்தில் நீராடி பிண்டதானம் செய்தான். நோய் தீர்ந்து சுகம் பெற்றான். திருமலைக்கு ஏறி பெருமாளைத் தரிசித்து மோட்சம் அடைந்தான். கபில முனிவர் இங்கு வந்து சிவனருள் பெற்றதால் இப்பெயர் பெற்றது. தீர்த்தக்கரையில் காமாட்சி சமேத கபிலேஸ்வரர் கோயில் உள்ளது. கேசவபட்டர் என்பவர் ஒருநாள் தன் தந்தையின் சிரார்த்த நாளில் வீட்டிற்கு வந்த அந்தணருக்கு உணவளித்து தட்சணையும் தந்து வழியனுப்பினார். இதன்பிறகு அவர் அவலட்சண வடிவை அடைந்தார். இதற்கு காரணம் தெரியாமல் தவித்தபோது அகத்தியர் அங்கு வந்தார். அவரிடம் நடந்த விபரத்தை சொல்லி வருந்தினார். அந்தணருக்கான நியதிகளை கடைபிடிக்காத அந்தணரைக் கொண்டு பிதுர்தர்ப்பணம் செய்ததால் குரூர வடிவம் பெறுவார்கள் என்று சொன்ன அகத்தியர் இதற்குப் பரிகாரமாக திருமலையிலுள்ள ஆகாச கங்கையில் நீராடினால் மீண்டும் பழையவடிவம் பெறலாம் என்றார். கேசவபட்டரும் அவ்வாறே செய்து பலன் பெற்றார். திருப்பதி பத்மாவதி தாயாரின் தந்தை ஆகாசராஜனின் பெயர் இந்த தீர்த்தத்துக்கு வைக்கப்பட்டதாகவும் சொல்வர். பிரம்மோற்ஸவத்தின் முக்கிய விழாவான கருடசேவை கொண்டாடப்படுவதற்கு ஒரு கதை உண்டு. திருமால் சீனிவாசனாக அவதாரம் கொண்டு திருப்பதி வந்து சேர்ந்தார். தான் ஓடி விளையாட வைகுண்டத்தில் இருப்பது போல இயற்கை அழகு மிக்க ஒரு இடம் வேண்டும் என பெருமாள் சொல்ல கருடன் வைகுண்ட மலையையே பெயர்த்து பூலோகத்திற்கு கொண்டு வந்தார். ஏழுமலை ஒன்று சேர்ந்து பூலோகத்திற்கு வந்தது. அங்கேயே சீனிவாசன் குடியிருந்தார். இன்றும் குடியிருக்கிறார். அவ்வளவு பெரிய மலையையே பெயர்த்து வந்த கருடனைக் கௌரவிக்கும் வகையில் திருமால் அவரையே வாகனமாக்கி கொண்டார். தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்கள் வாசலில் அமர்ந்திருக்கும் கருடனை தரிசித்தபிறகே தன்னை வணங்க வேண்டும் என்று அருள் பாலித்தார். அதன்படி எல்லாப் பெருமாள் கோயில்களிலும் வாசலில் கருடபகவான் வீற்றிருக்கிறார்.

ஆந்திரா மாநிலம் ராய துர்க்க பகுதியில் உள்ள தரிகொண்டா என்ற கிராமத்தில் 1730 ம் ஆண்டு பிறந்தவர். சிறு வயது முதலே திருமலை பெருமாள் மீது அதீத பக்தி கொண்டவர். இதன் காரணமாக வெங்கமாம்பா திருமணத்தை வெறுத்தார் பெற்றோர் கட்டாயப்படுத்தி மிகச் சிறுவயதிலேயே வேங்கடாசலபதி என்பவரை திருமணம் செய்து வைத்தார்கள். திருமணம் செய்து வைத்த போதும் இல்லற சுகத்தை மறுத்தார். பெருமாளே கதி என பக்தியில் கரைந்து கவிதைகளை பொழிந்தார். சில நாட்களில் அவரது கணவர் இறந்த பின் கணவர் வருவதற்கு முன்பிருந்தே தான் வைத்துக் கொண்டிருக்கும் பூ பொட்டு என்ற மங்கல சின்னங்களை கணவர் இறந்ததற்காக நான் எதற்கு எடுகக வேண்டும் என்று சொல்லி பூவும் பொட்டும் வைத்துக் கொள்வதில் உறுதியாக இருந்தார். இவரது உறுதியையும் ஆன்மீக பற்றையும் பார்த்துவிட்டு கிராமத்தினர் நாளடைவில் அவரை தேவுடம்மா எனச் சொல்லி வழிபட்டனர். வேங்கடவன் மேல் கீர்த்தனைகள் இயற்றுவதிலும் பாடுவதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். சுப்ரமண்யுடு என்ற ஆசானிடம் யோகக் கலை பயின்றார். திருவேங்கடவன் மீது கொண்ட காதலால் திருமலைக்கே குடியேறி வாழ ஆரம்பித்தார். இங்கு வந்த பிறகு பல முக்கியமான நூல்களை இயற்றியதோடு யோகக் கலையையும் நன்கு பயின்று அஷ்டாங்க யோக சாரம் என்ற நூலையும் எழுதி மக்களுக்கு படைத்தார். திருமலையையும் திருவேங்கடவனையும் பற்றி ஏராளமான கவிகள் இயற்றினார்.

வேங்கடவனே கதி என வாழ்ந்த வெங்கமாம்பா ஒவ்வொரு நாள் இரவும் ஏகாந்த சேவை ஆரத்தியின் போது தட்டில் முத்துக்களை வைத்து வேங்கடவனை வணங்கி வந்தார். ஒரு நாள் திருவேங்கடவன் நகை காணாமல் போக அப்பழி தினமும் கோயில் நடைசாற்றியவுடன் வேங்கடவன் முன் பாடும் வழக்கத்தை கொண்டிருந்த இவர் மீது விழுந்தது. இதனால் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு அவரை கோயிலுக்கு எளிதில் வரமுடியாத துாரத்தில் உள்ள தும்புரகோணா என்ற குகைக்கு அனுப்பி வைத்தனர். இவர் தும்புறு குகையிலிருந்து திருமலை கருவறைக்கு ரகசிய பாதை அமைத்து தன்னுடைய பாமாலை பணியை யாரும் அறியவண்ணம் ஆறு வருடங்கள் தொடர்ந்து வந்தார். பின்னாளில் திருவேங்கடவன் மூலம் இவரின் பக்தி எல்லோராலும் அறியப்பட்டு மீண்டும் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டதோடு இவரின் பாடலோடும் கற்பூர ஆரத்தியோடும் நடைசாற்றும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது. இவ்வழக்கம் இன்றும் தொடர்ந்து ஏகாந்த சேவையில் அதாவது கோயில் நடை மூடப்படும் முன் செய்யும் உபசாரங்களில் இறுதியாக எடுக்கப்படும் கற்பூர ஆரத்திக்கு வேங்கமாம்பா ஆரத்தி என்றே பெயரிட்டு அழைக்கப்பட்டு வருகிறது.

1730 ம் ஆண்டு பிறந்த வெங்கம்மாம்பா தனது 87வது வயதில் 1817 ம் வருடம் திருமலையில் ஜீவசமாதி அடைந்தார். இவர் நினைவாக இவரது பெயரில் தற்போது திருமலையில் அன்னதானக்கூடம் அமைந்துள்ளது. மாத்ரு தரிகொண்ட ஸ்ரீ வெங்காமாம்பா நித்யா அன்னதானக்கூடம் என்று பெயரிடப்பட்ட இம்மண்டபத்தில் ஒவ்வொரு நாளும் இரண்டு லட்சம் பேர் சாப்பிடுகிறார்கள். திருமலை மாடவீதிக்கு அருகிலுள்ள இவரின் உடல் புதைக்கப்பட்ட இடம் வளாகத்தை உள்ளடக்கி உயர்நிலைப் பள்ளியாக திருமலை கோயில் நிர்வாகம் பயன்படுத்தி வருகிறது. ஆயினும் வேங்கமாம்பாளின் சமாதியை யாவரும் வணங்கும் வண்ணம் அடியார்கள் எப்போதும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். திருமலையை வணங்க வரும் அடியார்களுக்கு தினமும் அன்னதானம் இடும் மூன்று பெரிய வளாகங்களுக்கு மாத்ரு ஸ்ரீ தரிகொண்ட வேங்கமாம்பா என்று இவரின் பெயரை வைத்திருக்கிறார்கள். தரிகொண்ட வேங்கமாம்பாவின் பெயரும் உருவமும் பொறித்த அஞ்சல் தலை அரசால் வெளியிடப்பட்டது.

இவர் முதல்முறை திருமலை வந்தவுடன் இயற்றிய நூல்கள்

தரிகொண்ட நரசிம்ம சதகம்
நரசிம்ம விலாச கதா
சிவ நாடகம்
பாலக்கிருஷ்ண நாடகம்
யக்‌ஷ கானம்
ராஜயோகம்ருத சாரம்
த்விபத காவியம்

தும்புரு குகையிலிருந்து மீண்டும் வந்தவுடன் இயற்றிய நூல்கள்

விஷ்ணு பாரிஜாதம்
செஞ்சு நாடகம்
ருக்மிணி நாடகம்
ஜலக்கீரட விலாசம்
முக்திகாந்தி விலாசம்
கோபி நாடகம்
ராம பரிநயம்
ஸ்ரீ பாகவதம்
ஸ்ரீ கிருஷ்ண மஞ்சரி
தத்வ கீர்த்தனலு
வசிஷ்ட ராமாயணம்
ஸ்ரீ வேங்கடாசல மகாத்மியம்
அஷ்டாங்க் யோகசாரம்

பெரியாழ்வார் 7 பாசுரம் ஆண்டாள் 16 பாசுரம் குலசேகராழ்வார் 11 பாசுரம் திருமழிசையாழ்வார் 15 பாசுரம் திருப்பாணாழ்வார் 2 பாசுரம் திருமங்கையாழ்வார் 61 பாசுரம் பொய்கையாழ்வார் 10 பாசுரம் பூதத்தாழ்வார் 9 பாசுரம் பேயாழ்வார் 19 பாசுரம் நம்மாழ்வார் 52 பாசுரம் திருப்பதி பெருமாள் மீது பாடியுள்ளார்கள்.

புனுகீஸ்வரர்

மயிலாடுதுறை நகரினுள் கூறைநாடு என்னும் பகுதியில் புனுகீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இப்பகுதி முற்காலத்தில் தனியூர் என்று குறிக்கப்பட்டு வந்தது. தற்போது கூறைநாடு என்று அழைக்கப்படுகிறது. சிவத்தலங்கள் மொத்தம் 1008 என்று கூறப்படுகிறது. இவற்றுள் 276 தலங்களுக்கு மட்டுமே தேவாரப் பாடல்கள் கிடைக்கின்றன. ஏனைய தலங்களைப் பற்றிய பாடல்கள் அழிந்து போயின. புனுகீஸ்வரர் திருக்கோயில் அவற்றுள் ஒன்றாக இருக்கலாம். பாடல் பெற்ற சிவத்தலங்களுக்கு இணையாகக் கருதப்படும் சிறப்புக்களை இக்கோவில் பெற்றுள்ளது. மூலவர் புனுகீசுவரர். அம்பாள் சாந்தநாயகி மேல் இரு கரங்களில் மாலையையும் தாமரை மலரையும் தாங்கி கீழ் இரண்டு கரங்களில் அபய வரத ஹஸ்த முத்திரைகளுடன் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். தலவிருட்சம் பாரிஜாதம் என்னும் பவழமல்லிகை வடக்கு உள்பிரகாரத்தில் அமைந்துள்ளது.

திருக்கோயில் இரு பிரகாரங்களுடன் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கோவில் ஐந்து நிலைக் கோபுரத்துடன் அமைந்துள்ளது. நேராக பலி பீடமும் உயந்த கொடிமரமும் உள்ளது. வெளிப்பிரகாரத்தின் கன்னி மூலையில் விநாயகப்பெருமான் உள்ளார். அருகில் சகஸ்ரலிங்கம் சந்நிதி உள்ளது. சனிபகவான் திருநள்ளாரில் இருப்பதைப் போன்று கிழக்கு நோக்கி தனி விமானத்துடன் கூடிய கருவறையில் அமைந்துள்ளார். தென்பகுதியில் திருக்குளம் அமைந்துள்ளது. உள்பிரகாரத்தின் கன்னிமூலையில் வரதவிநாயகர் சந்நிதியும் அருகில் உற்சவமூர்த்திகள் எழுந்தருளியுள்ள சந்நிதியும் அமைந்துள்ளன. வடமேற்குப்பகுதியில் ஆறுமுகப்பெருமான் லட்சுமி ஆகியோரின் சந்நிதிகள் அமைந்துள்ளன. தெற்கு நோக்கி நடராஜரின் சந்நிதி அமைந்துள்ளது. கருவறையின் வடக்கு மாடங்களில் துர்க்கை பிரம்மா ஆகியோரின் திருவுருவங்கள் உள்ளன. அதனருகில் சண்டேசர் சந்நிதி உள்ளது. வடகிழக்கு மூலையில் பைரவர் சூரியன் ஆகியோரின் திருவுருவச்சிலைகள் உள்ளன. கீழ்ப்பகுதியில் நவக்கிரகங்களுக்கான சந்நிதி உள்ளது. கருவறையின் கிழக்கு மாடத்தில் லிங்கோத்பவர் அமைந்துள்ளார். உள்பிரகாரத்தின் தென்கிழக்கில் அறுபத்து மூவர் சந்நிதி உள்ளது. தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறார். இங்கு நால்வருக்கும் சேக்கிழாருக்கும் திருவுருவங்கள் உள்ளன. மாடத்தில் ஜுரஹரேசுரர் பிள்ளையார் உருவங்கள் உள்ளன. புதிதாகச் செய்யப்பட்ட அறுபத்து மூவரின் செப்புச் சிலைகள் உள்ளன. அதனை அடுத்து இத்தலத்தில் அவதாரம் செய்ததாகக் கருதப்படுபவரும் அறுபத்துமூன்று நாயனார்களில் ஒருவருமாகிய நேசநாயனாரின் சந்நிதி உள்ளது. சிவனடியார்களுக்கு ஆடைகள் தந்த தொண்டினை செய்ததினால் இறைவனால் இவருக்கு முக்தி கொடுக்கப்பட்டது என்று பெரியபுராணம் கூறுகிறது.

முற்காலத்தில் இந்த இடம் வனப்பகுதியாக தனியூர் என்று அழைக்கப்பட்டது. அந்தக் காலத்தில் மயிலாடுதுறைக்கு மேற்கே அமைந்திருந்த இந்த வனத்தில் எண்ணற்ற புனுகுப் பூனைகள் வாழ்ந்து வந்தன. அதன் காரணமாக அந்த வனத்தின் காற்றில் புனுகு மணம் கமழ்ந்தது. அங்கு வசித்த புனுகுப்பூனைகளில் ஒன்றிற்கு முற்பிறவி வாசனையின் காரணமாக இறை ஞானம் பெற்று தன் முற்பிறவி ஞாபகம் வந்தது. அந்த புனுகுப்பூனை முற்பிறவியில் இந்திரனாக இருந்தது. அப்போது நடந்த தட்சனின் யாகத்தில் கலந்து கொண்டதால் புனுகுப்பூனையாக மாறும்படி சிவனாரால் சபிக்கப்பட்டான் இந்திரன். பின்னர் அவன் தன் தவறை உணர்ந்து இறைவனிடம் சாபவிமோசனம் வேண்டினான். சிவபெருமான் விமோசனமாக இத்தலத்திற்கு சென்று வழிபடுமாறு கூறினார். புனுகுப்பூனையாக இங்கு பிறந்த இந்திரன் சிவன் அருளியபடி அந்த வனத்தில் உள்ள பவளமல்லி விருட்சத்தின் கீழ் சுயம்புவாக எழுந்தருளியிருந்த இறைவனை வழிபட்டது. தினமும் சிவலிங்கத் திருமேனி முழுவதும் நறுமணம் கமழும் புனுகினைப் பூசி வில்வ தளங்களை வாயினால் கவ்வி எடுத்துக்கொண்டு வந்து இறைவனுக்குச் சமர்ப்பித்து வலம் வந்து வழிபட்டது. நெடுங்காலம் தொடர்ந்தது இந்த வழிபாடு புனுகுப்பூனையின் பக்திக்கு இரங்கிய சிவபெருமான் அதற்குத் தேவ வடிவம் கொடுத்து ஆட்கொண்டார். இதையறிந்து இறைவனின் கருணைத்திறன் கண்டு வியந்த பிரம்மா திருமால் உள்ளிட்ட தேவர்கள் அந்த இடத்துக்கு வந்து பவளமல்லி விருட்சத்தின் நிழலில் சுயம்புவாக எழுந்தருளியிருந்த சிவனாரைப் போற்றி வழிபட்டனர். பிற்காலத்தில் இறைவனின் அற்புத லீலையை அறிந்த சோழ மன்னன் வனத்தில் இறைவனுக்கு அழகியதோர் ஆலயம் எழுப்பி இறைவனுக்கு புனுகீசர் என்று பெயரிட்டு வணங்கினான். நித்திய பூஜைகளும் விழாக்களும் நடைபெறும்படிச் செய்தான். இதுகுறித்து மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை இயற்றிய தனியூர்ப் புராணம் என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

சுலோகம் -46 # 47

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #46

இந்தப் போரில் ஆயுதம் ஏந்தாமல் எதிர்த்துப் போரிடாமல் இருக்கின்ற என்னைக் கையில் ஆயுதம் தாங்கிய திருதராஷ்டிர குமாரர்கள் கொன்றாலும் அதுவும் எனக்கு நன்மை பயப்பதாகவே ஆகிவிடும்.

இந்த சுலோகத்தில் அர்ஜூனன் சொல்ல வந்த கருத்து என்ன?

இந்த யுத்தத்தில் ஆயுதம் ஏந்தி நான் போரிடப் போவதில்லை. அப்போது கௌரவர்களின் தரப்பில் யார் என்னை கொன்றாலும் அதனை எதிர்க்காமல் ஏற்றுக் கொள்வேன். அப்படி நான் கொல்லப்பட்டால் மேலே சொல்லப்பட்ட சில சுலோகங்களில் உள்ள பாவங்கள் நடைபெறுவதற்கு நான் காரணமாக இருக்க மாட்டேன். ஆகையால் என்னை அவர்கள் கொல்வது எனக்கு நன்மை பயப்பதாகவே இருக்கும்.

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #47

சஞ்சயன் சொல்கிறான். இப்படியாக சொல்லிய அர்ஜூனன் போர்க்களத்தில் சோகத்தினால் கலங்கிய மனதுடன் தன்னுடைய அம்புகளையும் ஆயுதங்களையும் கீழே வைத்துவிட்டு தேரில் அமர்ந்து விட்டான்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

சஞ்சயன் திருதராஷ்டிரரிடம் சொல்கிறார். அர்ஜூனன் தர்மத்திற்கு பயப்படுகிறான். தன் குருக்கள் உறவினர்கள் நண்பர்கள் மீது வைத்திருந்த கருணையினாலும் அன்பினாலும் பாசத்தினாலும் மனக்கலக்கத்தினாலும் அர்ஜூனன் தன்னுடைய ஆயுதங்களை கீழே வைத்து விட்டு கவலையுடன் தேரில் அமர்ந்து விட்டான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 70

கேள்வி: போக மகரிஷியின் தொடர்பு கிடைக்க என்ன செய்ய வேண்டும்? அதற்கு ஆசி கூறுங்கள்.

இறைவனின் அருளைக் கொண்டு இன்னவனின் முன் இரு வினாக்களுக்கு பின்னொரு தருணம் இன்னவன் எம்முன்னே அமரும் தருணம் யாங்கள் வாக்குகளை பரவலாகக் கூறுகின்ற தருணம் இயம்பிடுவோம். அதே தருணம் போகன் என்று இல்லை. எந்த மகானுடன் மனிதன் தொடர்பு கொள்ள வேண்டும். எந்த சித்தர்களுடன் மனிதன் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் முதலில் மனிதன் தன்னிடம் உள்ள அனைத்து தீய பழக்க வழக்கங்களையும் குணங்களையும் விட்டுவிட்டு இன்னும் கூறப்போனால் பல மனிதர்களிடம் தன்னிடம் இன்ன இன்ன வேண்டாத குணங்கள் இருக்கின்றன என்று கூட புரிந்துகொள்ள முடியாமல் வாழ்கிறார்கள். அவற்றையெல்லாம் சுய ஆய்வு செய்து மெல்ல மெல்ல விட்டுக்கொண்டே இன்னொருபுறம் எந்த சித்தனோடு தொடர்பு கொள்ள வேண்டும் என்று மனிதன் எண்ணுகிறானோ அந்த சித்தனின் நாமத்தை (பெயரை) அடிக்கடி ஆழ்மனதிலே சொல்லிக் கொண்டு இருப்பதும் குறிப்பாக முன் பிரம்ம முகூர்த்தத்திலே எழுந்து வடகிழக்கு திசை நோக்கி பத்மாசனமிட்டு அமர்ந்து ஓர் முக சிந்தனையோடு அந்த சித்தனின் நாமாவளியை (பெயரை) மனதிற்குள் உருவேற்ற உருவேற்ற சித்தர்களின் தொடர்பு என்பது மிக எளிதாகும்.

ஆனால் சிக்கல் எங்கே உருவாகிறது? என்றால் சித்தர்களோடு எனக்கு தொடர்பு இருக்கிறது. சித்தர்கள் என்னோடு பேசுகிறார்கள் அல்லது நான் சித்தர்களை தரிசனம் செய்திருக்கிறேன் என்பது ஒரு மனிதனை பொறுத்தவரை அந்தரங்கமாக இருக்கும் வரையில் பிரச்சனை இல்லை. அதனை பலரும் நம்ப வேண்டும் என்று அவன் முயற்சி செய்யும் பொழுதுதான் சிக்கல் உருவாகிறது. எனவே இதனை அவன் தனித்தன்மையோடு வைத்துக்கொண்டு இந்தவிதமான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டு இதோடு பெருவாரியான தொண்டுகளையும் தேகவழி (உடல்வழி) தொண்டுகளையும் பொருள் வழி தொண்டுகளையும் செய்து கொண்டே இருந்தால் கட்டாயம் சித்தர்களின் தொடர்பு எல்லா மனிதர்களுக்குமே எளிதாகக் கிட்டும்.

சுலோகம் -44 # 45

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #44

ஜனார்த்தனா குல தர்மங்கள் அடியோடு அழிந்து விட்டபின் இருக்கும் மனிதர்களுக்கு எக்காலமும் நரகவாசம் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.

இந்த சுலோகத்தில் உள்ள கருத்து என்ன?

வர்ணகலப்பின் காரணமாக சில தலைமுறைகள் சென்ற பிறகு பார்த்தால் பலரும் குலத்திற்கு உரிய தர்மங்களை மறந்து போயிருப்பார்கள். இதனால் குலத்திற்குரிய வழிபாட்டு முறைகள் மறைந்து அழிந்து போகும். அதனால் அந்த தர்மங்களை கடைபிடிக்காமல் அவரவர்கள் தங்களின் விருப்பம் போல் செய்து கொண்டிருப்பார்கள். இப்போது ஒழுக்கமுறைகள் இல்லாததால் தவறுகள் செய்ய அதிக வாய்ப்புள்ளது. இங்கு அதர்மம் சூழ்ந்து கொள்ளும் பாவங்கள் வந்து சேரும். இதன் விளைவாக அவர்கள் நரகத்திற்கு செல்வார்கள். இதனை படித்து அறிந்து வைத்துள்ள அர்ஜூனன் கண் கூடாக இதனை பார்க்கவில்லை. ஏனெனில் அர்ஜூனன் காலத்தில் இது போல் ஒரு சம்பவம் நடைபெறவில்லை. ஆகையால் இதனை கேள்விப்பட்டிருக்கிறோம் என்று சொல்கிறான்.

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #45

ராஜ்யம் சுகம் ஆகியவற்றிற்கு ஆசைப்பட்டு நம் உறவினர்களேயே கொல்லத் தயாராக உள்ளோம். இது மிகப்பெரிய பாவம் என்று உணர்ந்தும் அதனைச் செய்ய துணிந்து நிற்கிறோம்.

இந்த சுலோகத்தில் உள்ள கருத்து என்ன?

மேல் சொல்லப்பட்ட 3 சுலோகங்களில் உள்ளவற்றை நாம் தெரிந்தும் உணர்ந்தும் வைத்திருக்கிறோம். ஆனாலும் ராஜ்யம் சுகம் ஆகியவற்றிற்கு ஆசைப்பட்டு நம் உறவினர்களேயே கொல்லத் துணிந்து இந்த பாவத்தை செய்ய வந்திருக்கிறோம் என்று அர்ஜூனன் கிருஷ்ணரிடம் கூறுகிறான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 69

கேள்வி: தமிழ் மொழியை நீங்கள்தான் உருவாக்கினீர்களா? உலகத்தில் தோன்றிய முதல் மொழி எது? வேதத்தை இறைவன்தான் உருவாக்கினாரா?

உலகில் தோன்றிய முதல் மொழி குழந்தையின் அழுகுரல்தானப்பா. இந்த நிலையிலே தமிழ் ஒத்து பல்வேறு மொழிகளை இறைவன்தான் உருவாக்கினாரப்பா. ஆனால் அப்படி தோன்றிய மொழிகளுக்கு தோண்டாற்றக்கூடிய வாய்ப்பையும் பணியையும் இறைவன் எமக்கு தன் அளப்பெறும் கருணையால் தந்தாரப்பா.

கேள்வி: நெருங்கிய உறவில் திருமணம் செய்யலாமா? மருத்துவர்களோ நெருங்கிய உறவில் திருமணம் செய்தால் பிறக்கும் குழந்தை அங்கஹீனமாக பிறக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இதைப் பற்றி?

இறைவனின் கருணையால் நெருங்கிய உறவில் திருமணம் செய்வது இருக்கட்டும். திருமணம் செய்த பிறகுதான் உறவே நெருங்கவேண்டும். இந்த நிலையிலே இவையெல்லாம் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பழக்கம். ஒரு மார்க்கத்தை பின்பற்றக்கூடியவன் கூடாது என்கிற விஷயத்தை வேண்டுமென்றே இன்னொருவன் பின்பற்றுகிறான். நீ கூறிய மாற்று மார்க்கம் மட்டுமல்ல. இந்த இந்து மார்க்கத்திலேயே தென்பகுதியிலே ஒரு சமூகம் இருக்கிறது. அவர்கள் நீ கூறிய அதாவது தங்கை முறை என்று மற்ற பிரிவுகளால் ஏற்கப்பட்ட ஒரு முறையை தாரமாக இன்றும் ஏற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவையெல்லாம் மனிதர்கள் வகுத்துக் கொண்ட ஒரு நிலை. நாங்கள் வேறு விதமாகக் கேட்கிறோம். ஒரே குடும்பத்தில் அண்ணன் தங்கையாக பிறந்து ஒன்றாக வளர்கிறார்கள். எனவே தங்கை அண்ணன் என்று தெரிகிறது. விதிவசத்தால் பால்ய வயதில் இருவரும் பிரிந்து விடுகிறார்கள். பல ஆண்டுகள் கழித்து எங்கோ சந்திக்கிறார்கள். இருவரும் திருமணம் செய்து கொண்டால் அப்பொழுது தங்கை என்ற உணர்வு அங்கு தலைதூக்குமா? சிந்தித்து பார்க்க வேண்டும். இதற்காக இதை நாங்கள் ஆதரிக்கவில்லை. மனித மனம் வக்கிரமாகி விடக்கூடாது என்பதற்காகத்தான் நாகரீகமாக வாழவேண்டும் என்பதற்காகத்தான் உறவுமுறை ஏற்படுத்தப்பட்டது. எம்மைப் பொருத்தவரை தனக்குள் பிரிவினையை வளர்த்துக் கொண்டு நான் இந்த பிரிவை சேர்ந்தவன். எனவே இதற்குள்தான் உறவு வைத்துக் கொள்வேன் என்பது மூடத்தனம். அந்த வகையில் பார்க்கும் பொழுது தொடர்பில்லாத இடத்திலிருந்து ஒருவன் பெண்ணை தேர்ந்தெடுப்பதும் பெண் ஆணை தேர்ந்தெடுப்பதும் மிகவும் சிறப்பு. உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. நல்லதொரு ஆரோக்கியமான சந்ததிகள் பிறப்பதற்கும் ஏற்புடையதாகும்.

சுலோகம் -43

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #43

இந்த வர்ணக்கலப்பு ஏற்படுத்துகின்ற குற்றங்களினால் தொன்று தொட்டு வருகின்ற குலதர்மங்களும் ஜாதி தர்மங்களும் அழிந்து விடுகின்றன.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: ஜாதி தர்மங்கள் என்று எதனை குறிப்பிடுகிறது?

சுலோகம் -41 இல் குறிப்பட்டுள்ள குலம் என்று அழைக்கப் படுபவர்களின் அனைத்து பிரிவுகளை இங்கு ஜாதி என்று அழைக்கப்படுகிறது. உதாரணத்திற்கு மரவேலை தச்சர் தொழில் செய்பவர்களுக்கு என்று ஒரு குலம் இருக்கும் இவர்களது குலத்தில் உள்ளவர்கள் அனைவரும் இந்த தொழிலை செய்வார்கள். நகை வேலை தச்சர் தொழில் செய்பவர்களுக்கு என்று ஒரு குலம் இருக்கும் இவர்களது குலத்தில் உள்ளவர்கள் அனைவரும் இந்த தொழிலை செய்வார்கள். இருவரது குலம் வேறு வேறு என்றாலும் இருவரும் தச்சர் வேலை செய்பவர்களே இது போல் தச்சர் தொழில் செய்யும் பல பிரிவுகளில் இருப்பவர்களை மொத்தமாக குறிப்பிடும் போது ஜாதி என்ற வார்த்தை இங்கு வருகிறது.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: வர்ணக் கலப்பு குற்றம் என்றும் ஜாதி தர்மங்களும் அழிந்து விடுகின்றன என்று சொல்வதன் காரணம் என்ன?

ஒருவர் தங்களது வர்ணத்தை விட்டு வேறு வர்ணத்தில் உள்ளவர்களை திருமணம் செய்யும் போது வர்ணக் கலப்பு ஏற்படுகிறது. இதில் பெண் ஆணின் குல தர்மத்தையோ அல்லது ஆண் பெண்ணின் குல தர்மத்தையோ தொடர்ந்து செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவதால் இருவரில் ஒருவர் தங்களுடைய குல தர்மங்களை தொடர்ந்து செய்ய முடியாதபடி ஆகிறது. இப்படி சில தலை முறைகள் சென்ற பிறகு பார்த்தால் ஒரு குலத்தின் தர்மங்கள் (குலத்தின் தர்மத்திற்கான விளக்கம் சுலோகம்- 40 இல் உள்ளது) அனைத்தும் அழிந்து போயிருக்கும் இதற்கு முக்கிய காராணமாக இருப்பது வர்ணக்கலப்பு ஆகும் இதனையே இந்த சுலோகம் சுட்டிக் காட்டுகிறது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 68

கேள்வி: ஆன்மா என்றால் என்ன?

என்ன? என்று எம்மை வினவுவதைவிட என்ன? என்பதை அறியுங்கால் அவனவன் மனதை வினவினால் ஆன்மா என்பது என்ன? என்பது புரியவரும். புலன்களுக்குப் புலப்படாமல் இருக்கின்ற ஒரு உயிர் தத்துவம் தான் ஆன்மா. அந்த ஆன்மாவை புரிந்து கொள்ள சுய ஆய்வும் பாவங்களற்ற தன்மையும் மிக அவசியம். அன்றாடம் வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து விடுகின்ற மூச்சுக் காற்றை சற்றே நிதானித்து உற்று கவனித்து வந்தால் ஆன்மா என்பது என்ன? தான் என்பது என்ன? தேகம் என்பது என்ன? இறை என்பது என்ன? இந்த உலக வாழ்வு என்பது என்ன? என்பது மெல்ல மெல்ல புரியவரும். நாங்கள் எத்தனை வார்த்தை பயன்படுத்திக் கூறினாலும்கூட ஐயம் மேல் ஐயம் வந்து கொண்டுதான் இருக்கும்.

கேள்வி: அழியாத புண்ணியம் எது?

புண்ணியம் எப்பொழுதுமே அழியாதப்பா. புண்ணியத்தால் ஒரு மனிதன் பெறக்கூடிய விஷயத்தைப் பொறுத்துதான் அது அழியக்கூடியதா? அழியாததா? என்பதை தீர்மானிக்க முடியும். புண்ணியம் யாவற்றையும் இறைவனுக்கே அர்ப்பணித்து அருட்புண்ணியமாக மாற்றிக் கொண்டால் அதனால் வரக்கூடிய பலன்கள் என்றும் அழியாது. ஆனால் புண்ணியம் யாவும் லோகாய (உலக) ஆதாயத்திற்காக ஒரு புண்ணியமாக மாற்றிவிட்டால் அதனால் வரக்கூடிய விஷயங்கள் யாவும் அழிந்துவிடும்.

சுலோகம் -42

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #42

இந்த குழப்பத்தால் அந்த குலத்தார்களும் அந்த குலத்தை அழித்தவர்களும் நரகம் செல்வார்கள். இவர்களின் பித்ருக்கள் பிதுர் பண்டங்களும் நீரும் இல்லாமல் வீழ்ச்சி பெறுவார்கள்.

இந்த சுலோகத்தின் கருத்து:

வர்ணங்கள் மாறி குலங்கள் மாறி திருமணம் செய்வதால் சில தலை முறைகளுக்கு பின் வருபவர்களுக்கு தங்களின் குலத்தின் பெயரும் அதன் வழிபாட்டு முறைகளும் ஒழுக்க முறைகளும் தெரியாமல் போகின்றது. குலத்தில் ஒற்றுமை மறைந்து இறுதியில் அந்தக் குலமே இல்லாமல் போகின்றது. இதனால் அந்தக் குலத்தில் வழிவழியாக முதாதையர்களுக்கு கொடுத்த வந்த தர்ப்பத்தையும் பிதுர் கடனையும் கொடுக்காமல் விட்டு விடுகின்றார்கள். ஒழுக்க முறைகள் மாறிவிடுகின்ற படியால் தர்மத்தின் படி நடக்க முடியாமல் போகின்றது. பித்ருக்கள் நீரும் பிதுர் பண்டங்களும் இல்லாமல் தங்கள் குலத்தை கைவிட்டுச் சென்று விடுகிறார்கள். இதனால் அனைவரையும் அதர்மம் சூழ்ந்து பாவம் செய்யும் சூழ்நிலைக்கு ஆளாகின்றார்கள். இதனால் அவர்கள் நரகத்திற்கு செல்கிறார்கள்.