புஷ்பக விமானம்

இராவணனின் புஷ்பக விமானம் பிரம்மாவுக்காக விஸ்வகர்மா உருவாக்கினார். பின்னர் பிரம்மா அதை செல்வத்தின் அதிபதியான குபேரனுக்கு பரிசளித்தார். பின்னர் அதை அவரது ஒன்றுவிட்ட சகோதரர் இராவணன் குபேரனிடம் இருந்து கைப்பற்றி தனதாக்கிக் கொண்டார். இராமர் அனுமன் உருவாக்கிய பாலத்தின் மூலம் இலங்கை சென்று இராவணனை போரில் வென்று இராவணன் வைத்திருந்த புஷ்பக விமானத்தில் சீதையுடன் திரும்ப அயோத்திக்கு வந்தார். தனது பட்டாபிஷேகம் முடிந்த பின்னர் குபேரனை அழைத்து மீண்டும் குபேரனிடம் புஷ்பக விமானம் திரும்ப கொடுத்து விட்டார். இவ்வரலாறு கம்ப இராமாயணத்தில் மீட்சிப் படலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வரலாற்றை மரச்சிற்பமாக வடித்துள்ளார்கள். கிபி 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கடவல்லூர் விஷ்ணு ஆலயத்தின் கருவறையின் வெளிச்சுவரில் இந்த சிற்பம் உள்ளது.

லட்சுமணன்

ராமர் சீதை மற்றும் லட்சுமணன் வனவாசத்தின் போது லட்சுமணன் சூர்ப்பனகையின் மூக்கை வெட்டும் சிற்பமானது 5 மற்றும் 6 ஆம் நூற்றாண்டு குப்தர் காலத்தைச் சேர்ந்த ஆதிவராக கோவிலில் சிதிலமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு தற்போது டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

சிவதனுசை உடைத்த ராமர்

சுயம்வரத்தில் சிவதனுசை உடைத்த ஸ்ரீராமருக்கு மாலை அணிவிக்கும் சீதை. இடம்: பரிமளரங்கநாதர் கோவில். திருஇந்தளூர் மயிலாடுதுறை.

ராமர் சீதை

ராமரும் சீதையும் சின்முத்திரையில் உள்ளார்கள். பரதன் சத்ருக்கன் அருகே உள்ளார்கள். லட்சுமணன் பணிவாக வணக்கம் செலுத்துகிறார். அனுமான் அன்புடன் ஸ்ரீராமரின் பாதங்களைத் தன் கைகளில் தொட்டு வணங்குகிறார். இடம் சிருங்கேரியில் உள்ள குரு நிவாஸில் இந்த சிற்பம் உள்ளது.

அனுமன் மேல் ஸ்ரீராமன்

அனுமனின் மேல் அமர்ந்திருக்கும் கம்பீர தோற்றத்தில் ராமர். ஸ்ரீராமரை சுமந்திருப்பதால் பணிவான பெருமிதத்துடன் அனுமன். இடம்: ஸ்ரீசௌந்திரராஜபெருமாள் கோவில் தாடிக்கொம்பு. திண்டுக்கல் மாவட்டம்.

ராமர் அனுமன்

சீதையை இலங்கையில் கண்டதற்கு சாட்சியாக சீதை தந்த கணையாழியை ராமரிடம் கொடுக்கும் அனுமன். இந்த சிற்பத்தில் ராமர் ஒரு கால் மீது இன்னோரு கால் மடக்கி வைத்து அமர்ந்திருப்பதும் தனது அம்புகளை வைக்கும் அம்பறாத்தூணியில் அம்புகள் இருப்பது தெளிவாகத் தெரியும் வண்ணம் நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளது. இடம் திருஇந்தளூர் பரிமளரங்கநாதர் திருக்கோவில். மயிலாடுதுறை மாவட்டம்.

ராமர் விட்ட அம்பு

ஸ்ரீ ராமர் எய்த ஒரே அம்பு 7 பனை மரங்களை துளைத்துச் சென்றதாக புராணத்தில் உள்ளது. இதை விளக்கும் சிற்பம் கர்நாடக மாநிலம் ஹளபீடுவில் உள்ள ஹோய்சாலேஸ்வரர் கோவிலில் உள்ளது.