ராமாயணம் இறுதிக் கட்டத்தில் ராமரைப்பற்றி ஐனகர் சொன்னது

மிதிலைராஜசபையில் அரியாசனத்தில் அமர்த்திருந்தார் மாமன்னர் ஜனகர். அவர் அருகே வீற்றிருந்தாள் மகாராணி சுனயனா. அயோத்தியிலிருந்து தூதுவன் கொண்டு வந்திருந்த செய்தி ஓலையை பிரித்து செய்தியை வாசித்த ஜனகர் ஒன்றும் பேசாமல் அந்த ஓலையை அப்படியே தன் மனைவியிடம் கொடுத்தார். ஐனகர் ராஜரிஷி. அந்த செய்தி அவர் முகத்தில் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.

ஓலையை வாங்கி வாசித்த சுனயனாதேவியின் விழிகளிலிருது சரசரவென கண்ணீர் அருவியென வழியத்தொடங்கியது. அவள் வாழ்வில் அடுத்தடுத்து எத்தனை எத்தனைத் துயரங்களை தாங்கிக் கொண்டிருக்கிறாள் அவள். பட்டாபிஷேகம் முடிந்து தன் மகள் சீதை பட்டத்து ராணியாகப் பொறுப்பேற்ற போது அளவற்ற மகிழ்ச்சியடைந்தாள். ஆனால் சிறிது காலத்திலேய, ஏதோ ஒரு துணிவெளுப்பவன் சொன்ன அபவாதத்தால் சீதை காட்டுக்கு அனுப்பப்பட்ட போது அவள் மாளாத துயரமடைந்தாள். சில ஆண்டுகளுக்கு பிறகு லவ குசன் என்ற இரண்டு ஆண் மக்களைப் பெற்றெடுத்து அவர்களை வளர்த்து சிறுவர்களாகத் தன் நாயகன் ராமனிடம் ஒப்படைத்த சீதை அயோத்தி வராமல் காட்டிற்குள்ளேயே மண்ணுக்குள் புகுந்து மறைந்தாள். சீதை மறைந்த துயரம் அவளின் வளர்ப்புத்தாய் சுனயனாவை மிகவும் பாதித்தது. லட்சுமணன் சிறிது காலத்திற்கு முன் சரயு நதியில் இறங்கி சித்தி அடைந்தான். லட்சுமணனை பிரிந்த தன் மகள் ஊர்மிளையின் நிலையை எண்ணி எண்ணி சுனயனா அளவற்ற துக்கமடைந்தாள். இதெல்லாம் முடிந்ததே இனியாவது சற்று நிம்மதியாக இருக்கலாம் என்றால் இதோ இப்போது அயோத்தியிலிருந்து வந்திருக்கிறது மிக கடுமையான செய்தியைத் தாங்கிய ஓலை. ராமனும் பரதனும் சத்ருக்கனனும் சரயு நதியில் இறங்கி சித்தி அடையப் போகிறார்கள். சீதை காலமானாலும் தன் மகனைப் போன்ற ராமனை அடிக்கடிப் போய்ப் பார்த்து ஆறுதல் அடைவாள் சுனயனா. இனி அது நடக்காது. அவளது மூன்று புதல்விகளான மாண்டவி ஊர்மிளை சுருதகீர்த்தி மூவரும் கணவரை இழந்தவர்களாகத்தான் இனி வாழ வேண்டும்.

ராமனும் பரதனும் சத்துருக்கனனும் சித்தி அடையும் நாளில் நாமும் அயோத்தியில் இருப்பதுதான் நல்லது. கணவரை இழந்து நம் புதல்விகள் உணர்ச்சி வசப்பட்டு அழுவார்கள். அவர்களுக்கு நேரில் சென்று அந்த சந்தர்ப்பத்தில் கூட இருந்து ஆறுதல் கூற வேண்டியது நம் கடமை என உணர்ச்சியற்ற குரலில் முகத்தில் சாந்தி தவழச் சொன்னார் ஜனகர். தன் கணவர் ஜனகர் எதற்கும் எப்போதும் பதற்றப்படமாட்டார் என்பதை சுனயனா அறிவாள். ஒரு பெருமூச்சோடு அரியாசனத்தை விட்டு எழுந்த அவள் தேரைப் பூட்டச் சொல்லுங்கள். நாம் அயோத்தி செல்வோம் எனப் புறப்பட்டாள். அவர்கள் இருவரையும் ஏற்றிச் சென்ற தேர் மிதிலையிலிருந்து உருண்டோடி அயோத்தி மாநகரை வந்தடைந்தது. அயோத்தி வீதிகளில் மக்கள் இல்லாததால் வெறிச்சென்று தென்பட்டன. மக்களெல்லாம் சரயு நதிக்கரைக்குச் சென்றிருக்க வேண்டும். தேரை சரயு நதிக்கரைக்கு விடச் சொன்னார் ஜனகர். தேரோட்டி சாட்டையை சொடுக்கியதும் குதிரைகள் பறந்தன. நதிக்கரைக்குப் போகும் வழியெங்கும் மக்கள் வெள்ளம். \

ராமனும் பரதனும் சத்ருக்கனனும் சரயு நதியின் கரையில் தங்கள் மாமனார் மாமியாரின் வரவுக்காக காத்திருந்தார்கள். மூவர் முகத்திலும் தாங்கள் சித்தி அடைய முடிவேடுத்துள்ளதைப் பற்றி எந்த சலனமும் இல்லை. அவர்கள் மரியாதை நிமித்தம் தங்கள் மாமனார் ஜனகரை வணங்கினார்கள். பின்னர் சுனயனாவிடமும் ஆசிபெற்ற அவர்கள் மெல்ல நடந்தார்கள். பரதன் சத்ருக்கனன் இருவரும் மாண்டவியிடமும் சுருதகீர்த்தியிடமும் விடை பெற்றுக் கொண்டார்கள். மக்கள் வியப்போடும் கலவரத்தோடும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த நிகழ்ச்சி நடந்தது. அவர்கள் மூவரும் ஒன்றாக சரயு நதியின் பெருகிய வெள்ளத்தில் இறங்கி அதன் ஓட்டத்தோடு சேர்ந்து வெள்ளத்திலேயே மெல்ல மெல்ல நடக்கலானார்கள். சிறிது நேரத்தில் வெள்ளம் அவர்கள் தலைக்குமேல் ஓடத் தொடங்கியது. தலைக்கு மேல் வெள்ளம் போய் விட்டதை உணர்ந்த மக்கள் ராமா ராமா என கோசம் எழுப்பினார்கள். ஊர்மிளை மாண்டவி சுருதகீர்த்தி மூவரிடமிருந்தும் பெரிய விம்மல்கள் வெடித்தெழுந்தன. அவர்கள் தங்கள் தாயைக் கட்டிக் கொண்டார்கள். தாய் சுனயனா அவர்கள் மூவரின் தோள்களையும் தட்டி தன்னால் இயன்ற அளவு அமைதிப் படுத்த முயன்றாள். அவள் விழிகளிலிருந்தும் கண்ணீர் இடைவிடாமல் வழியத் தொடங்கியது. ஆனால் ஜனகர் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. ஊர்மிளை வியப்போடு தன் தந்தையிடம் பேச ஆரம்பித்தாள்.

ராமர் நம்மை விட்டு நிரந்தரமாய் பிரிந்து விட்டாரே இனி நாம் அறத்தின் திருவுருவாக விளங்கிய அந்த அற்புதமான மனிதரைப் பார்க்கவே இயலாதே உங்களுக்கு வருத்தமாக இல்லையா? ஜனகர் முகத்தில் ஒரு மெல்லிய புன்முறுவல் இழையோடியது. சுனயனா ஜனகர் என்ன பதில் சொல்லப் போகிறார் என எதிர்பார்த்துக் காத்திருந்தாள். அவர் தரும் பதிலின் மூலம் தன் மனதில் ஓர் ஆறுதல் கிட்டாதா? என அவள் ஏங்கினாள். மாண்டவி சுருதகீர்த்தி இருவரும் விழிகளைத் துடைத்துக் கொண்டு தங்கள் தந்தை சொல்லப் போகும் பதிலுக்காக அவர் முகத்தையே கூர்மையாகப் பார்த்தவாறு இருந்தார்கள். பொதுமக்கள் கூட ஜனகரின் பதிலை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தார்கள். எங்கும் அமைதி நிலவியது. ஜனகர் சாந்தம் தவழும் முகத்துடன் இனிய குரலில் பரிவு பொங்க பேச ஆரம்பித்தார்.

மனித உடல் என்பது உறை. ஆன்மா என்பது அந்த உறையிலிருக்கும் வாள். உடலுக்குத்தான் அழிவுண்டே தவிர ஆன்மாவுக்கு அழிவு கிடையாது. உடல் பயன்படாத நிலை தோன்றுமானால் இறைச் சக்தி உடல் என்ற உறையிலிருக்கும் வாளை உருவித் தன் கையில் வைத்து கொள்கிறது. அவ்வளவுதான். வாழ்க்கை அநித்தியமானதுதான். பிறக்கும்போதே இறப்பும் உறுதி செய்யப்பட்டு விடுகிறது. எந்த நாள் என்பது வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால் எல்லோரும் ஒருநாள் இறக்கப் போவது உறுதி. இதை என் மாப்பிள்ளைகள் உணர்ந்து விட்டார்கள். இந்தப் பிறவியில் நிறைவடைந்து விட்டார்கள். தாங்கள் வந்த கடமை முடிந்து விட்டதை உணர்ந்து கொண்டு விட்டார்கள். அதனாலேய தாங்களே விரும்பி சித்தி அடைந்து விட்டார்கள். ஆனால் அவர்களுக்கு மரணமென்பது இல்லை. ஏனென்றால் என் மாப்பிள்ளைகள் நால்வரும் என் வளர்ப்பு மகள் சீதையும் தெய்வ வடிவங்களே என்ற பரம இரகசியத்தை நான் முன்பே அறிவேன். அவர்கள் மண்ணுலகில் மானிடர்களாக வசிக்கும்போது அந்த ரகசியத்தை வெளிப்படுத்த எனக்கு உரிமை வழங்கப்பட வில்லை. இப்போது அவர்கள் விண்ணுலகம் சென்று விட்டதால் நான் அதைப் பகிரங்கப்படுத்தலாம் என்றார்.

சுனயனா வியப்போடு கேட்டாள் . அப்படியானால் நம் மாப்பிள்ளைகள் தெய்வங்களா? என் செல்ல வளர்ப்பு மகள் சீதை தெய்வமேதானா? என்று கேட்டாள். அதற்கு ஐனகர் ஆமாம் ஒன்றை யோசி அவர்கள் தெய்வங்களாய் இல்லாவிட்டால் இத்தனை துன்பங்களை எப்படிச் சாந்தமாகத் தாங்கியிருக்க முடியும்? மானிடர்கள் அறநெறியில் வாழவேண்டும் என்பதை எடுத்துக்காட்டவே திருமால் இவ்விதம் அவதாரமெடுத்து வந்தார். அவதார நோக்கமும் காலமும் பூர்த்தியடைந்து விட்டதால் தெய்வங்கள் விண்ணுலகிற்கு சென்று விட்டன. ஆனால் மண்ணிலும் அவர்கள் சக்தி நிரந்தரமாய்க் குடியிருக்கும். அவர்களை பிரார்த்தித்தால் அந்த பிரார்த்தனைகள் நிறைவேறும். இனி அவர்களுக்கு ஊர்கள் தோறும் ஆலயங்கள் எழும். அந்த ஆலயங்களில் உள்ள விக்கிரகங்களில் அவர்களின் அருள் சக்தி குடி கொள்ளும் என்றார். அதற்கு சுனயனா இதெல்லாம் உண்மைதானா? இதற்கு உங்களால் சாட்சி காட்ட முடியுமா? என்று கேட்டாள்.

ராமன் திருவருளால் உங்களுக்கு ராமனையே நேரில் காண்பிக்கிறேன். எல்லோரும் அண்ணாந்து ஆகாயத்தை பாருங்கள் என்று ஜனகர் ஒரு கட்டளை போல் கூறினார். பிரமிப்போடு அனைவரும் அண்ணாந்து வானத்தைப் பார்த்தார்கள். வானில் சடாரென மேகங்கள் விலகி ராமபிரானும் சீதா தேவியும் லட்சுமணனும் பரத சத்துருக்கனர்களும் வலக்கரம் உயர்த்தி அனைவருக்கும் ஆசி கூறினார்கள். எல்லோரும் அவர்களைத் தரிசித்துக் கொண்டிருக்கும் போதே விந்தையான பல சம்பவங்கள் நிகழ்ந்தன. லட்சுமணன் உடல் ஒரு கணத்தில் ஆதிசேஷனாக மாறியது. ராமன் திருமாலாய் மாறி அந்தப் பாம்பணையில் பள்ளி கொண்டான். மறுகணம் பரத சத்துருக்கனர்கள் சங்கு சக்கரங்களாக மாறி திருமாலின் கரங்களில் பொருத்திக் கொண்டார்கள். ஜனகரின் வளர்ப்பு மகளான சீதை இப்போது லட்சுமி தேவியாக மாறி திருமாலின் பாதங்களைப் பிரியமாய்ப் பிடித்துவிடத் தொடங்கினாள். மெல்ல மெல்ல அந்த காட்சி மறைந்தது. மேகங்கள் மீண்டும் வைகுண்டத்திற்குத் திரையிட்டன.

ராமரைக் கண்ட மக்கள் அனைவரும் அளவற்ற மகிழ்ச்சியோடு ஜெய் ஸ்ரீராம் என உரத்து முழங்கினார்கள். அந்த முழக்கம் அந்த பிரதேசமெங்கும் நிறைந்தது. ஆண்கள் பெண்கள் குழந்தைகள் அனைவரின் குரல்களும் அந்த முழக்கத்தில் ஒன்றாய் இணைந்தன. ஜனகரின் மனைவி சுனயனாதேவி புதல்விகள் மாண்டவி ஊர்மிளை சுருதகீர்த்தி அனைவரின் மனங்களும் இன்னதென்று அறியாத சாந்தியிலும் நிறைவிலும் ஆழ்ந்தன. அவர்கள் இந்த அற்புத காட்சியைத் தங்களுக்குத் தரிசனம் செய்வித்த ஜனகரை நோக்கிக் கரம் கூப்பி வணங்கினார்கள். ராஜரிஷி ஜனகரின் மனம் ராம ராம என ஓயாமல் ஸ்ரீராமபிரானைத் தியானம் செய்யத் தொடங்கியது.

வாலி வழிபட்ட ஆதிபுரீஸ்வரர்

கிஷ்கிந்தை எனும் நாட்டை அரசாண்டு வந்த வாலி வீடுபேறடைவதற்காக தினசரி 4 சமுத்திரத்தில் நீராடி விதிப்படி நித்யகருமம் முடித்து பின்பு கயிலை மலை சென்று முதலில் நந்தி தேவரை வழிபட்டு அவரிடம் அனுமதி பெற்று பார்வதி சமேதரான சிவபெருமனை வாக்கு காயங்களினால் வழிபட்டுப் பின் தன் நகரினை அடைந்து நீதியுடன் நல்லாட்சி புரிந்து வந்தார்.

ஒரு நாள் திக் விஜயம் செய்து வந்த இராவணன் வாலியைக் கண்டு குறும்பாக அவனை தன் கையை விட்டுப் பிடிக்க முற்படுகையில் வாலி தன் வாலினால் இராவணன் உடல் முழுவதையும் சுற்றி கட்டி விடுகிறார். பின்னர் அப்படியே சமுத்திரங்களில் நீராடி கயிலை மலை சென்று நந்தி தேவனை வணங்கி சிவனைக் காண அனுமதி கேட்டார். அதற்கு நந்தி தேவர் கைலாசபதியானவர் முப்பத்து முக்கோடி தேவர்களோடும் அதிகாபுரியை அடுத்த ஆதிபுரத்திற்கு சென்றுள்ளார் என்றார். உடனே சிவபெருமானை தரிசிக்க வேண்டி நந்திதேவரிடம் வாலி ஆதிபுரத்திற்கு வழி கேட்டார். நந்திதேவரோ உன் வாலினால் கட்டுண்டு கிடக்கும் இராவணன் அந்த ஆதிபுரத்தை அறிவான் என்று கூறுகிறார். (இராவணன் மிகச்சிறந்த சிவ பக்தன். சிவன் இருக்கும் இடம் எதுவாகினும் இராவணனிற்கு தெரியும்) உடனே வாலி இராவணனைப் பார்த்து ஆதிபுரத்திற்கு வழி சொன்னால் இந்த கட்டை தளர்த்தி உன்னை விடுவிப்பேன் என்கிறார். உடனே இராவணன் இந்த ஆதிபுர திருத்தலத்தை காட்டிட அங்கு திரிபுரசம்கார மூர்த்தியாய் உள்ள சிவபெருமானைக் கண்டு பேரானந்தம் அடைந்து வாலி வழிபட்ட பெருமைக்குரிய திருத்தலம் இந்த ஆதிபுரம்.

வாலியின் வாலினால் கட்டுண்டு இராவணன் விழிபிதுங்கி நிற்கும் காட்சி மூல விக்ரகம் உள்ள சுற்றுச்சுவரின் வெளிப்புறத்தில் தெற்கு திசையில் உள்ளது. இடம்: பத்மதளநாயகி உடனுறை ஸ்ரீஆதிபுரீஸ்வரர் திருக்கோவில் ஆதிபுரம் எனும் எய்தனூர் (நெல்லிக்குப்பம் அருகில்) கடலூர் மாவட்டம்.

ராமர் விட்ட அம்பு

ஸ்ரீ ராமர் எய்த ஒரே அம்பு 7 பனை மரங்களை துளைத்துச் சென்றதாக புராணத்தில் உள்ளது. இதை விளக்கும் சிற்பம் கர்நாடக மாநிலம் ஹளபீடுவில் உள்ள ஹோய்சாலேஸ்வரர் கோவிலில் உள்ளது.

லட்சுமணன்

லட்சுமணன் தனது வலது கரத்திதை சுக்ரீவனின் தோள்களில் வைத்திருக்கிறார். மற்றோரு கையில் கோதண்டத்துடன் இருக்கிறார். பாதங்களில் காலணி அணிந்திருக்கிறார். இடம் ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோவில் தூத்துக்குடி.

அனுமனின் வாலில் மணி

ராமன் சீதையை மீட்க ராவணனுடன் போர் புரிய இலங்கைக்கு புறப்படும் முன் வானரப்படையை திரட்டிக் கொண்டிருந்தார். வானரங்களில் உயரமானவை குட்டையானவை என்று பல வகை இருந்தது. அதில் சிங்கலிகா என்று அழைக்கப்படும் குள்ளமான வானரங்கள் கொண்ட ஒரு படை இருந்தது. இதில் ஆயிரம் வானரங்கள் இருந்தன. இந்த வானரங்கள் கூட்டமாக சென்று எதிரியின் படை வீரர்கள் மேல் விழுந்து பற்களால் கடித்துக் குதறியும் நகங்களால் பிராண்டியும் போரிடும். போருக்குப் புறப்படும் வீரர்களை வழியனுப்பும் போது அவர்கள் குடும்பத்தார்களின் கண்களில் கண்ணீர். அவர்கள் உயிருடன் பத்திரமாக திரும்பி வர வேண்டுமே என்ற கவலையில் இருந்தார்கள். அதைக் கவனித்த ராமன் அவர்களிடம் கூறினார் யாரும் கவலைப்பட வேண்டாம். என் படை வீரர்களை பத்திரமாக திருப்பிக் கொண்டு வந்து சேர்ப்பது என் பொறுப்பு என்றார்.

ராமருக்கும் ராவணனுக்கும் போர் ஆரம்பமானது. கடும் போர் நடந்து கொண்டிருந்தது. ராவணனின் படையில் பல முக்கியமான வீரர்களும் படைத் தலைவர்களும் மடிந்தார்கள். தூங்கிக் கொண்டிருந்த தன் தம்பி கும்பகர்ணனை எழுப்பி போரிடச் சொன்னான் ராவணன். ராட்சசனைப் போல் இருந்தாலும் கும்பகர்ணன் மிகவும் நல்லவன். கும்பகர்ணன் இந்த போர் வேண்டாம் நீங்கள் சீதையைக் கடத்தியதற்காக ராமனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ராவணன் கேட்கவில்லை. வேறு வழியின்றி அண்ணனின் ஆணைப்படி போருக்குப் புறப்பட்டான் கும்பகர்ணன். கும்பகர்ணனின் ராட்சத உருவத்திற்கு ஏற்றாற் போல் அவனது தேரும் மிகப் பெரியதாக இருந்தது. தேரின் முன்புறம் பெரிய பெரிய மணிகள் தொங்கிக் கொண்டிருந்தன. போர் தொடங்கி சிறிது நேரத்தில் ராம பாணத்திற்கு பலியானான் கும்பகர்ணன். தேரிலிருந்து சாயும் போது கும்பகர்ணனின் கை பட்டு ஒரு மணி கழன்று கீழே விழந்தது. கீழே விழுந்த மிகவும் பெரிய பாரமான மணி போரிட ஒன்றாக ஓடிக் கொண்டிருந்த ஆயிரம் வானரங்கள் மேல் விழுந்து அவர்களை மூடி விட்டது. திடீரென்று தங்கள் மேல் எதையோ வைத்து மூடிவிட்டதைப் போன்று உணர்ந்த வானரங்கள் பயந்து விட்டன. ஒரே இருட்டு. நல்ல வேளை மணி விழுந்த இடம் கரடு முரடாக இருந்ததால் சுவாசிக்க காற்று வந்தது. சில மணி நேரங்கள் ஆன பிறகும் அவர்களைக் காப்பாற்ற யாரும் வரவில்லை. ஒரு வானரம் சொன்னது இந்த சுக்ரீவனை நம்பி வீணாகப் போய் விட்டோம். நாம் எல்லோரும் சாகப்போவது உறுதி என்றது. சுக்ரீவனும் அனுமனும் ஒன்றும் செய்யப் போவதில்லை நம்மைக் காப்பாற்ற நம் தலைவிதி இப்படியே கிடந்து சாக வேண்டியதுதான் சொன்னது இன்னொரு வானரம். ராமன் சொன்னாரே போருக்கு புறப்பட்டவர்களை எல்லாம் பத்திரமாக உயிரோடு திரும்ப கொண்டு வந்து சேர்ப்பது அவர் பொறுப்பு என்றாரே அவர் என்ன செய்தார் இன்னொரு வானரம் சொன்னது. இதைக் கேட்ட மற்ற வானரங்களும் ஆமாம் ஆமாம் என்றன. இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அவர்களில் ஒரு மூத்த வானரம் எல்லோரையும் அதட்டியது. முதலில் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவதை நிறுத்துங்கள். நான் சொன்னதை மட்டும் செய்யுங்கள். எல்லோரும் கண்களை மூடிக்கொண்டு ராமனை மனதில் நினைத்துக் கொண்டு ராம் ராம் ராம் என்று ஜெபம் செய்யுங்கள். ராமன் நம் எல்லோரையும் நிச்சயம் காப்பாற்றுவார் என்று சொன்னது. எல்லா வானரங்களும் அப்படியே செய்தன.

ராமரால் ராவணனும் கொல்லப்பட்டான் போர் முடிந்தது. சீதையை மீட்டதும் அயோத்திக்கு திரும்ப ஆயுத்தமானார்கள். அப்போது ராமன் சொன்னார் சுக்ரீவா நம் படையில் எல்லோரும் பத்திரமாக இருக்கிறார்களா. பார்த்து எண்ணிக் கொண்டு வா என்றார். அதற்கு சுக்ரிவன் எண்ணி விட்டேன். ஆயிரம் சிங்கலிகர்கள் மட்டும் காணவில்லை என்றான் சுக்ரீவன். அதற்கு ராமர் மற்றும் ஒரு முறை சரியாக எண்ணி வா என்றார் ராமன். ராமனின் ஆணைப்படி மற்றொருமுறை எண்ணிவிட்டு வந்த சுக்ரீவன் சொன்னான். தங்கள் ஆணைப்படி இன்னொரு முறை எண்ணினேன். ஆயிரம் சிங்கலிகர்கள் மட்டும் காணவில்லை என்றார். உடனே ராமர் அனுமா நீயும் என்னுடன் வா. நாம் அந்த ஆயிரம் வானரங்களை தேடுவோம் என்றார் ராமன். அனுமனும் ராமனும் வானர்களைத் தேடி போர்க்களத்தில் நடந்தார்கள். பல இடங்களில் மடிந்து கிடந்த படை வீரர்கள் உடைந்து கிடந்த தேரின் பாகங்கள் அம்புகள் கேடயங்கள் என்று எல்லாவற்றையும் கிளறிப் பார்த்தார் அனுமன். சிங்கலிகர்கள் தென்படவில்லை. திடீரென்று ராமன் ஒரு இடத்தில் நின்றார். அனுமா அங்கே பார். ஒரு பெரிய மணி தெரிகிறது என்றார். ராமன் சொன்னது புரிந்து விட்டது அனுமனுக்கு. இருவரும் அந்த இடத்திற்கு விரைந்தார்கள். சஞ்சீவி பர்வதத்தையே தன் ஒரு கையால் தூக்கிக் கொண்டு பறந்த அனுமன் தன் வாலின் நுனியை அந்த மணியின் வளையத்தில் நுழைத்து தூக்கினான். அனுமன் மணியைத் தாக்கியதும் அதன் கீழ் ஆயிரம் சிங்கலிகர்கள் கண்களை மூடிக்கொண்டு கைகூப்பியபடி ராமநாமம் ஜபித்துக் கொண்டிருந்தன. பல மணி நேரத்திற்குப் பின் வெளிச்சமும் காற்றும் பட்டதும் கண்களைத் திறந்தன வானரங்கள். எதிரே ஸ்ரீராமனும் அனுமனும் நின்றிருந்தார்கள். வரிசையாக கை கூப்பியவாறு நின்று கொண்டிருந்த வானரங்கள் கண்ணீருடன் ராமரிடம் பிரபுவே என்ன நடந்தது என்று தெரியாமல் இருட்டில் பயந்து அடைந்து கிடந்த நாங்கள் ஏதேதோ தவறாகப் பேசி விட்டோம். உங்கள் மேலேயே சந்தேகப்பட்டு விட்டோம். எங்களை மன்னித்து அருள வேண்டும் என்று சொல்லி ஆயிரம் வானரங்களும் ராமனின் பாதங்களில் விழுந்து வணங்கின. அதைக்கேட்டு புன் முறுவல் செய்த ராமன் எல்லா வானரங்களையும் தன் கையால் தடவிக்கொடுத்தார்.

ராமன் அனுமனைப் பார்த்து சொன்னார் அனுமா வாலில் பளபளக்கும் மணியுடன் நீ இப்படி நிற்கும் காட்சி எவ்வளவு சுந்தரமாக இருக்கிறது தெரியுமா? இந்தக் கோலத்தில் உன்னை தரிசிப்பவர்களுக்கு பக்தி ஞானம் வைராக்கியம் கிட்டும் என்று வாழ்த்தினார். கர்நாடகா ஆந்திரா மற்றும் தமிழ்நாடு இந்த மூன்று மாநிலங்களிலும் பல ஊர்களில் வியாசராஜர் பிரதிஷ்டை செய்த 732 அனுமன் விக்கிரகங்களிலும் வாலில் மணி தொங்கி கொண்டிருக்கும்.

அனுமனை விழுங்கிய முதலை சிற்பம்

ராமாயண யுத்தத்தில் இராவணன் மகன் இந்திரஜித்துக்கும் லட்சுமணனுக்கும் இடையே நடைபெற்ற போரில் இந்திரஜித் ஏவிய அஸ்திரத்தால் லட்சுமணன் மூர்ச்சையாகி மயங்கி விழுந்தார். இலங்கை அரச மருத்துவர் சுசேனர் லட்சுமணனை குணப்படுத்த இமயமலையில் வளரும் சஞ்சீவினி எனும் மூலிகை மருந்துச் செடிகளை பறித்து வர அறிவுறுத்தினார். சஞ்சீவினி மூலிகை மருந்தினை இமயமலையில் இருந்து கொண்டு வருவதற்காக பெரும் பலவானாகிய அனுமன் விரைந்து சென்றார். இதை அறிந்த ராவணன் அனுமனுக்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்த அவற்றை எல்லாம் கடந்து அனுமன் சஞ்சீவினி மலையை அடைந்தார். அங்கு அனுமனைக் கொல்ல காலநேமியை இந்திரஜித் அனுப்பி வைத்தான். காலநேமி என்னும் அசுரர் மாரீசனின் மகன் ஆவார். அனுமன் இமயமலையின் சஞ்சீவினி மூலிகை உள்ள பகுதியை அடைந்து சஞ்சீவினிச் செடிகளை பறிக்க முற்படுகையில் முனிவர் வேடம் போட்ட காலநேமி அனுமன் முன்னிலையில் சென்றார். முனிவரைக் கண்ட அனுமன் அவரை வணங்கினார். அப்போது அருகில் இருக்கும் குளத்தை காண்பித்த முனிவர் வேடத்தில் இருந்த காலநேமி இந்தப் புனிதக்குளத்தில் நீராடி வந்து ஆசி பெற்றுக்கொள். அப்போது ராம காரியம் வெற்றி பெறும் என்றார்.

அனுமன் ஏரியில் குளிக்கையில் காலநேமி ஏவிய மாய முதலை அனுமனை விழுங்கியது. அனுமன் அம்முதலையின் வயிற்றைக் கிழித்துக் கொன்றார். அனுமன் கையால் இறந்த முதலை உடனே ஒரு தேவனாக மாறி அனுமனை வணங்கி நின்றான். எனது பெயர் தான்யமாலி. ஒரு சாபத்தால் முதலையாக இங்கே இத்தனை ஆண்டு காலம் இருந்தேன். உங்களால் கொல்லப்பட்டதால் சாபவிமோசனம் பெற்றேன். நீங்கள் முனிவர் என்று நினைத்துக் கொண்டிருப்பவர் ஒரு அசுரன் முனிவர் வேடத்தில் உங்களை கொல்ல திட்டம் திட்டி இருக்கின்றான் என்று காலநேமியின் சதித் திட்டத்தை அனுமனுக்கு எடுத்துரைத்து காலநேமியைக் கொன்று விடிவதற்குள் சஞ்சீவினிச் செடிகள் பறித்து லட்சுமணனைக் காக்குமாறு தேவன் அனுமனிடம் கூறினான். அனுமனும் காலநேமியைக் கொன்று சஞ்சீவினி மூலிகைச் செடிகள் வளரும் மலையை கொண்டு வந்து லட்சுமணனின் மூர்ச்சையை தெளிய வைத்தார். ராமாயணத்தின் மிக முக்கிய திருப்புமுனையாக விளங்கும் இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் உள்ள சேசராயர் மண்டபத்தில் உள்ள தூணில் அழகிய சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளது.

ராமரின் முன்னோர்கள்

  1. பிரம்மாவின் மகன் – மரீசீ
  2. மரீசீயின் மகன் – கஷ்யபர்
  3. கஷ்யபரின் மகன் – விவஸ்வான்
  4. விவஸ்வானின் மகன் – மனு
  5. மனுவின் மகன் – இஷ்வாகு
  6. இஷ்வாகுவின் மகன் – விகுக்ஷி
  7. விகுக்ஷியின் மகன் – புரண்ஜயா
  8. புரண்ஜயாவின் மகன் – அணரன்யா
  9. அணரன்யாவின் மகன் – ப்ருது
  10. ப்ருதுவின் மகன் – விஷ்வாகஷா
  11. விஷ்வாகஷாவின் மகன் – ஆர்தரா
  12. ஆர்தராவின் மகன் – யுவான்ஷ்வா-1
  13. யுவான்ஷ்வாவின் மகன் – ஷ்ரவஷ்ட்
  14. ஷ்ரவஷ்டின் மகன் – வ்ரதஷ்வா
  15. வ்ரதஷ்வாவின் மகன் – குவலஷ்வா
  16. குவலஷ்வாவின் மகன் – த்ருதஷ்வா
  17. த்ருதஷ்வாவின் மகன் – ப்ரோமத்
  18. ப்ரோமத்தின் மகன் – ஹர்யஷ்வா
  19. ஹர்யஷ்வாவின் மகன் – நிகும்ப்
  20. நிகும்பின் மகன் – சன்டஷ்வா
  21. சன்டஷ்வாவின் மகன் – க்ருஷஸ்வா
  22. க்ருஷஸ்வாவின் மகன் – ப்ரஸன்ஜீத்
  23. ப்ரஸன்ஜீத்தின் மகன் – யுவான்ஷ்வா-2
  24. யுவான்ஷ்வாவின் மகன் – மன்தாத்தா
  25. மன்தாத்தாவின் மகன் – அம்பரீஷா
  26. அம்பரீஷாவின் மகன் – ஹரிதா
  27. ஹரிதாவின் மகன் – த்ரதஸ்யு
  28. த்ரதஸ்யுவின் மகன் – ஷம்பூத்
  29. ஷம்பூத்தின் மகன் – அனரண்யா-2
  30. அனரண்யாவின் மகன் – த்ரஷஸ்தஸ்வா
  31. த்ரஷஸ்தஸ்வாவின் மகன் – ஹர்யஷ்வா 2
  32. ஹர்யஷ்வாவின் மகன் – வஸுமான்
  33. வஸுமாவின் மகன் – த்ரிதன்வா
  34. த்ரிதன்வாவின் மகன் – த்ரிஅருணா
  35. த்ரிஅருணாவின் மகன் – திரிசங்கு
  36. திரிசங்கு வின் மகன் – ஹரிசந்திரன்
  37. ஹரிசந்திரநநின் மகன் – ரோஹிதாஷ்வா
  38. ரோஹிதாஷ்வாவின் மகன் – ஹரித்
  39. ஹரித்தின் மகன் – சன்சு
  40. சன்சுவின் மகன் – விஜய்
  41. விஜயின் மகன் – ருருக்
  42. ருருக்கின் மகன் – வ்ருகா
  43. வ்ருகாவின் மகன் – பாஹு
  44. பாஹுவின் மகன் – சாஹாரா
  45. சாஹாராவின் மகன் – அசமஞ்சன்
  46. அசமஞ்சனின் மகன் – அன்ஷுமன்
  47. அன்ஷுமனின் மகன் – திலீபன்
  48. திலீபனின் மகன் – பகீரதன்
  49. பகீரதனின் மகன் – ஷ்ருத்
  50. ஷ்ருத்தின் மகன் – நபக்
  51. நபக்கின் மகன் – அம்பரீஷ்
  52. அம்பரீஷனின் மகன் – சிந்து த்வீப்
  53. சிந்து த்வீப்பின் மகன் – ப்ரதயு
  54. ப்ரதயுவின் மகன் – ஸ்ருது பர்ணா
  55. ஸ்ருது பர்ணாவின் மகன் – சர்வகாமா
  56. சர்வகாமாவின் மகன் – ஸுதஸ்
  57. ஸூதஸின் மகன் – மித்ரஷா
  58. மித்ராஷாவின் மகன் – சர்வகாமா 2
  59. சர்வகாமாவின் மகன் – அனன்ரண்யா3
  60. அனன்ரண்யாவின் மகன் – நிக்னா
  61. நிக்னாவின் மகன் – ரகு
  62. ரகுவின் மகன் – துலிது
  63. துலிதுவின் மகன் – கட்வாங் திலீபன்
  64. கட்வாங் திலீபனின் மகன் – ரகு2
  65. ரகுவின் மகன் – அஜன்
  66. அஜனின் மகன் – தசரதன்
  67. தசரதனின் மகன் – ஸ்ரீ ராமர்
  68. ஸ்ரீ ராமரின் மகன்கள் – லவ குசா
  69. குசாவின் மகன் – அதிதி
  70. அதிதியின் மகன் – நிஷதா
  71. நிஷதாவின் மகன் – நலா
  72. நலாவின் மகன் – நபா

ராமாயணத்தின் தத்துவம்

ராமாயணம் என்பது நீண்ட காலத்திற்கு முன்பு நடந்த கதை மட்டுமல்ல இது ஒரு தத்துவ ஆன்மீக முக்கியத்துவத்தையும் மற்றும் அதில் ஒரு ஆழமான உண்மையையும் கொண்டுள்ளது. ராமாயணத்தை நாமே நமது சொந்த உடலில் உணரலாம்.

‘ரா’ என்றால் ஒளி என்று பொருள். ‘ம’ என்றால் எனக்குள் என் இதயத்தில் என்று பொருள். ‘ராம’ என்றால் எனக்குள் இருக்கும் ஒளி (ஆத்மா) என்று பொருள்.

ஆத்மா – ராமர்
மனம் – சீதை
மூச்சுக் காற்று – அனுமன்
விழிப்புணர்வு – லட்சுமணன்
அகங்காரம் – ராவணன்

ராமர் தசரதருக்கும் கௌசல்யைக்கும் பிறந்தவர். தசரத் என்றால் 10 தேர்கள் என்று பொருள். பத்து தேர்கள் என்பது மனிதர்களின் செயல் உறுப்புகளாகிய வாய் (பேசுதல்) கைகள் (செயல்) கால்கள் (போக்குவரவு) எருவாய் (கழிவுகளை நீக்குதல்) கருவாய் (இன்பமும் பிறப்பும்) ஆகிய ஐந்து கர்மேந்திரியங்களும் உணர்வு உறுப்புகளாகிய கேட்டல் (காதுகள்) ருசித்தல் (வாய்) முகர்தல் (மூக்கு) பார்த்தல் (கண்கள்) உணர்தல் (தோல்) ஆகிய ஐந்து ஞானேந்திரியங்களும் ஆகும்.

கௌசல்யை என்றால் ஆற்றும் சக்தி (திறன்) என்று பொருள்.

மனம் என்னும் சீதை ஆசை என்னும் ராவணனால் கவரப்படும் பொழுது எதனாலும் பாதிக்கப்படாத ஆத்மா என்னும் ராமர் பரமாத்மாவிடம் இருந்து விலகி நிற்கிறார். அப்போது நமக்குள் பத்து தேர்களாக இருக்கும் ஞானேந்திரியங்களையும் கர்மேந்திரியங்களையும் கௌசல்யை என்னும் திறனை பயன்படுத்தி அடக்கி ஆண்டால் ராமர் என்ற ஒளியை உணரலாம். இந்த ராமர் என்ற ஒளியை மனம் என்னும் சீதையுடன் சேர்க்க லட்சுமணன் என்ற விழிப்புணர்வின் துணையோடு பிராணனை (மூச்சுக்காற்றை) அனுமனின் உதவியோடு கவனித்து மனதை ஆத்மா என்ற பரமாத்மாவோடு ஒருமுகப்படுத்த வேண்டும். அப்போது அகங்காரம் என்னும் ராவணன் அழிந்து விடுவான். அதன் பிறகு மனம் எனும் சீதை ராமராகிய ஆன்மாவோடு ஒன்று சேர்ந்து மனம் எண்ணங்களற்ற நிலையை அடைந்து பேரின்பத்தில் இருக்கும்.

அகத்தியர் ஜீவநாடியில் ராமர் பற்றிய கேள்விக்கு அகத்தியரின் பதில் – 2

வால்மீகி ராமாயணத்தில் ராமர் மான் மாமிசத்தை உண்டார் என்று கூறப்படுவது இது உண்மையா? இடைச்செருகலா?

மகாவிஷ்ணுவின் அவதாரம் ராமர் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் அல்லவா அப்படியென்றால் மான்களை வேட்டையாடவே கூடாது என்று மிக மிக சராசரியான மன்னனே அக்காலத்திலெல்லாம் சட்டம் இயற்றியிருந்தான் தெரியுமா? மான்கள் முயல் இன்னும் சாதுக்களான விலங்குகளை யாரும் எக்காலத்திலும் வேட்டையாடுதல் கூடாது. இன்னும் கூறப்போனால் முறையான பக்குவம் பெற்ற மன்னர்கள் பொழுது போக்கிற்கு என்று வேட்டையாட செல்ல மாட்டார்கள். என்றாவது கொடிய விலங்குகள் மக்களை இடர்படுத்தினால் மட்டும் அதிலும் முதலில் உயிரோடு பிடிக்கத்தான் ஆணையிடுவார்கள். முடியாத நிலையில் தான் கொல்வார்கள். ஒரு சராசரி மன்னனே இப்படி செயல்படும் பொழுது மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று கூறப்படுகின்ற ஸ்ரீராமபிரான் இவ்வாறெல்லாம் செய்திருப்பாரா? கட்டாயம் செய்திருக்கமாட்டார். அப்படி விலங்குகளைக் கொன்று தின்னக்கூடிய அளவில் ஒரு கதாபாத்திரம் கற்பனையாகக்கூட ஒரு ஞானியினால் படைக்கப்படாது. ஒருவேளை அது உண்மை என்றால் அப்பேற்பட்ட ஸ்ரீ ராமர் தெய்வமாக என்றும் போற்றப்படுவாரா? யோசித்துப் பார்க்க வேண்டும். இதற்கு என்ன காரணம் என்று யோசித்தால் பின்னால் வந்த மனிதன் தான் சாப்பிடும் மாமிச உணவிற்கு வசதியாக ராமரே இவற்றையெல்லாம் உண்டிருக்கிறார். நான் உண்டால் என்ன? என்று பேசுவற்கு வசதியாக வைத்துக் கொண்டான்.

அகத்தியர் ஜீவநாடியில் ராமர் பற்றிய கேள்விக்கு அகத்தியரின் பதில்

அகத்தியர் ஜீவநாடியில் ராமர் பற்றிய கேள்விக்கு அகத்தியரின் பதில்

கேள்வி: ராமாயண காலத்தில் இருந்த இலங்கைதான் தற்போதும் உள்ளதா? அப்போது ராமனால் அமைக்கப்பட்ட பாலம் இன்னும் கடலுக்கடியில் இருக்கிறதா? சேதுபாலம் தற்போது இடிக்கப்பட்டால் ஆஞ்சிநேயர் ராம பக்தர்களால் மக்களுக்கு துன்பம் நேருமா?

இறைவன் கருணை கொண்டு கூறும்பொழுது ராமன் சென்ற பாதை என்ற பொருளிலே மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ராமபிரான் வாழ்ந்த சரிதம் என்பது மெய்யிலும் மெய். அடுத்ததாக அப்பொழுது இருந்த இலங்கையின் அளவு இன்னும் இன்னும் பெரியதப்பா. அதன் ஒரு சிறிய பகுதிதான் இப்பொழுது எஞ்சியிருக்கிறது. இன்னொன்று இப்பொழுது கடல் கொண்ட பூம்புகார் போக எஞ்சியுள்ள பூம்புகார் இருப்பது போலதான் இப்பொழுது இருக்கின்ற இலங்கை தேசம். அடுத்ததாக பாலம் எல்லாம் இருப்பது உண்மையென்றாலும் கூட மனித கண்ணுக்கு இப்பொழுது அது புலப்படாது. இன்னொன்று இவற்றை சிதைப்பதால் ராமபிரானுக்கோ அனுமனுக்கோ சினம் வந்துவிடாதப்பா. மனிதன் மனிதனாக வாழாமல் பிறருக்கு சதா சர்வகாலம் தொல்லைகள் தந்துகொண்டே தான் நன்றாக வாழ்வதற்கு பலரை இடர்படுத்தி வாழ்கிறானே? அந்த செயல் ஒன்று தான் இறைவனுக்கு வருத்தத்தையும் சினத்தையும் ஏற்படுத்தும். வருத்தமும் சினமும் இறைவனுக்கு இல்லை. கேள்வி கேட்பதால் நாங்கள் கூறுகிறோம். மற்றபடி ராமாயண காலத்து எச்சங்கள் இப்பொழுது ஆங்காங்கே இருப்பது உண்மை. அவற்றை மனிதன் இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கவில்லை. அதில் இரணமண்டலம் என்கிற மலை ஒன்று இருக்கிறது. அது குறித்து முன்பே யாங்கள் கூறியிருக்கிறோம். இருந்தாலும் இன்னும் விஷயங்கள் பூமியில் புதையுண்டுதான் இருக்கிறது. அது தொடர்பாக சில கற்பனை கதைகள் கூறப்படுகின்றன. எப்படிக் கூறினாலும் எம்பிரான் ராமபிரானின் பெருமைகளைக் கூறுவதால் அதையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். இறைவன் அருளால் இதுபோன்ற விஷயங்களுக்கு எத்தனை விளக்கங்கள் தந்தாலும் புரிந்து கொள்ளக்கூடிய அளவிற்கு மனிதனுக்கு பக்குவம் இருக்க வேண்டும். அதற்கு அவன் கர்மவினை இடம் தர வேண்டும். இல்லையென்றால் நாங்கள் கூறுகின்ற விளக்கம் நாங்கள் கூறுகின்ற நோக்கிலே இல்லாமல் மனிதனால் வேறு விதமாக புரிந்து கொள்ளக்கூடிய நிலை வரும்.