லட்சுமணன் தனது வலது கரத்திதை சுக்ரீவனின் தோள்களில் வைத்திருக்கிறார். மற்றோரு கையில் கோதண்டத்துடன் இருக்கிறார். பாதங்களில் காலணி அணிந்திருக்கிறார். இடம் ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோவில் தூத்துக்குடி.

லட்சுமணன் தனது வலது கரத்திதை சுக்ரீவனின் தோள்களில் வைத்திருக்கிறார். மற்றோரு கையில் கோதண்டத்துடன் இருக்கிறார். பாதங்களில் காலணி அணிந்திருக்கிறார். இடம் ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோவில் தூத்துக்குடி.
ராமன் சீதையை மீட்க ராவணனுடன் போர் புரிய இலங்கைக்கு புறப்படும் முன் வானரப்படையை திரட்டிக் கொண்டிருந்தார். வானரங்களில் உயரமானவை குட்டையானவை என்று பல வகை இருந்தது. அதில் சிங்கலிகா என்று அழைக்கப்படும் குள்ளமான வானரங்கள் கொண்ட ஒரு படை இருந்தது. இதில் ஆயிரம் வானரங்கள் இருந்தன. இந்த வானரங்கள் கூட்டமாக சென்று எதிரியின் படை வீரர்கள் மேல் விழுந்து பற்களால் கடித்துக் குதறியும் நகங்களால் பிராண்டியும் போரிடும். போருக்குப் புறப்படும் வீரர்களை வழியனுப்பும் போது அவர்கள் குடும்பத்தார்களின் கண்களில் கண்ணீர். அவர்கள் உயிருடன் பத்திரமாக திரும்பி வர வேண்டுமே என்ற கவலையில் இருந்தார்கள். அதைக் கவனித்த ராமன் அவர்களிடம் கூறினார் யாரும் கவலைப்பட வேண்டாம். என் படை வீரர்களை பத்திரமாக திருப்பிக் கொண்டு வந்து சேர்ப்பது என் பொறுப்பு என்றார்.
ராமருக்கும் ராவணனுக்கும் போர் ஆரம்பமானது. கடும் போர் நடந்து கொண்டிருந்தது. ராவணனின் படையில் பல முக்கியமான வீரர்களும் படைத் தலைவர்களும் மடிந்தார்கள். தூங்கிக் கொண்டிருந்த தன் தம்பி கும்பகர்ணனை எழுப்பி போரிடச் சொன்னான் ராவணன். ராட்சசனைப் போல் இருந்தாலும் கும்பகர்ணன் மிகவும் நல்லவன். கும்பகர்ணன் இந்த போர் வேண்டாம் நீங்கள் சீதையைக் கடத்தியதற்காக ராமனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ராவணன் கேட்கவில்லை. வேறு வழியின்றி அண்ணனின் ஆணைப்படி போருக்குப் புறப்பட்டான் கும்பகர்ணன். கும்பகர்ணனின் ராட்சத உருவத்திற்கு ஏற்றாற் போல் அவனது தேரும் மிகப் பெரியதாக இருந்தது. தேரின் முன்புறம் பெரிய பெரிய மணிகள் தொங்கிக் கொண்டிருந்தன. போர் தொடங்கி சிறிது நேரத்தில் ராம பாணத்திற்கு பலியானான் கும்பகர்ணன். தேரிலிருந்து சாயும் போது கும்பகர்ணனின் கை பட்டு ஒரு மணி கழன்று கீழே விழந்தது. கீழே விழுந்த மிகவும் பெரிய பாரமான மணி போரிட ஒன்றாக ஓடிக் கொண்டிருந்த ஆயிரம் வானரங்கள் மேல் விழுந்து அவர்களை மூடி விட்டது. திடீரென்று தங்கள் மேல் எதையோ வைத்து மூடிவிட்டதைப் போன்று உணர்ந்த வானரங்கள் பயந்து விட்டன. ஒரே இருட்டு. நல்ல வேளை மணி விழுந்த இடம் கரடு முரடாக இருந்ததால் சுவாசிக்க காற்று வந்தது. சில மணி நேரங்கள் ஆன பிறகும் அவர்களைக் காப்பாற்ற யாரும் வரவில்லை. ஒரு வானரம் சொன்னது இந்த சுக்ரீவனை நம்பி வீணாகப் போய் விட்டோம். நாம் எல்லோரும் சாகப்போவது உறுதி என்றது. சுக்ரீவனும் அனுமனும் ஒன்றும் செய்யப் போவதில்லை நம்மைக் காப்பாற்ற நம் தலைவிதி இப்படியே கிடந்து சாக வேண்டியதுதான் சொன்னது இன்னொரு வானரம். ராமன் சொன்னாரே போருக்கு புறப்பட்டவர்களை எல்லாம் பத்திரமாக உயிரோடு திரும்ப கொண்டு வந்து சேர்ப்பது அவர் பொறுப்பு என்றாரே அவர் என்ன செய்தார் இன்னொரு வானரம் சொன்னது. இதைக் கேட்ட மற்ற வானரங்களும் ஆமாம் ஆமாம் என்றன. இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அவர்களில் ஒரு மூத்த வானரம் எல்லோரையும் அதட்டியது. முதலில் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவதை நிறுத்துங்கள். நான் சொன்னதை மட்டும் செய்யுங்கள். எல்லோரும் கண்களை மூடிக்கொண்டு ராமனை மனதில் நினைத்துக் கொண்டு ராம் ராம் ராம் என்று ஜெபம் செய்யுங்கள். ராமன் நம் எல்லோரையும் நிச்சயம் காப்பாற்றுவார் என்று சொன்னது. எல்லா வானரங்களும் அப்படியே செய்தன.
ராமரால் ராவணனும் கொல்லப்பட்டான் போர் முடிந்தது. சீதையை மீட்டதும் அயோத்திக்கு திரும்ப ஆயுத்தமானார்கள். அப்போது ராமன் சொன்னார் சுக்ரீவா நம் படையில் எல்லோரும் பத்திரமாக இருக்கிறார்களா. பார்த்து எண்ணிக் கொண்டு வா என்றார். அதற்கு சுக்ரிவன் எண்ணி விட்டேன். ஆயிரம் சிங்கலிகர்கள் மட்டும் காணவில்லை என்றான் சுக்ரீவன். அதற்கு ராமர் மற்றும் ஒரு முறை சரியாக எண்ணி வா என்றார் ராமன். ராமனின் ஆணைப்படி மற்றொருமுறை எண்ணிவிட்டு வந்த சுக்ரீவன் சொன்னான். தங்கள் ஆணைப்படி இன்னொரு முறை எண்ணினேன். ஆயிரம் சிங்கலிகர்கள் மட்டும் காணவில்லை என்றார். உடனே ராமர் அனுமா நீயும் என்னுடன் வா. நாம் அந்த ஆயிரம் வானரங்களை தேடுவோம் என்றார் ராமன். அனுமனும் ராமனும் வானர்களைத் தேடி போர்க்களத்தில் நடந்தார்கள். பல இடங்களில் மடிந்து கிடந்த படை வீரர்கள் உடைந்து கிடந்த தேரின் பாகங்கள் அம்புகள் கேடயங்கள் என்று எல்லாவற்றையும் கிளறிப் பார்த்தார் அனுமன். சிங்கலிகர்கள் தென்படவில்லை. திடீரென்று ராமன் ஒரு இடத்தில் நின்றார். அனுமா அங்கே பார். ஒரு பெரிய மணி தெரிகிறது என்றார். ராமன் சொன்னது புரிந்து விட்டது அனுமனுக்கு. இருவரும் அந்த இடத்திற்கு விரைந்தார்கள். சஞ்சீவி பர்வதத்தையே தன் ஒரு கையால் தூக்கிக் கொண்டு பறந்த அனுமன் தன் வாலின் நுனியை அந்த மணியின் வளையத்தில் நுழைத்து தூக்கினான். அனுமன் மணியைத் தாக்கியதும் அதன் கீழ் ஆயிரம் சிங்கலிகர்கள் கண்களை மூடிக்கொண்டு கைகூப்பியபடி ராமநாமம் ஜபித்துக் கொண்டிருந்தன. பல மணி நேரத்திற்குப் பின் வெளிச்சமும் காற்றும் பட்டதும் கண்களைத் திறந்தன வானரங்கள். எதிரே ஸ்ரீராமனும் அனுமனும் நின்றிருந்தார்கள். வரிசையாக கை கூப்பியவாறு நின்று கொண்டிருந்த வானரங்கள் கண்ணீருடன் ராமரிடம் பிரபுவே என்ன நடந்தது என்று தெரியாமல் இருட்டில் பயந்து அடைந்து கிடந்த நாங்கள் ஏதேதோ தவறாகப் பேசி விட்டோம். உங்கள் மேலேயே சந்தேகப்பட்டு விட்டோம். எங்களை மன்னித்து அருள வேண்டும் என்று சொல்லி ஆயிரம் வானரங்களும் ராமனின் பாதங்களில் விழுந்து வணங்கின. அதைக்கேட்டு புன் முறுவல் செய்த ராமன் எல்லா வானரங்களையும் தன் கையால் தடவிக்கொடுத்தார்.
ராமன் அனுமனைப் பார்த்து சொன்னார் அனுமா வாலில் பளபளக்கும் மணியுடன் நீ இப்படி நிற்கும் காட்சி எவ்வளவு சுந்தரமாக இருக்கிறது தெரியுமா? இந்தக் கோலத்தில் உன்னை தரிசிப்பவர்களுக்கு பக்தி ஞானம் வைராக்கியம் கிட்டும் என்று வாழ்த்தினார். கர்நாடகா ஆந்திரா மற்றும் தமிழ்நாடு இந்த மூன்று மாநிலங்களிலும் பல ஊர்களில் வியாசராஜர் பிரதிஷ்டை செய்த 732 அனுமன் விக்கிரகங்களிலும் வாலில் மணி தொங்கி கொண்டிருக்கும்.
ராமாயண யுத்தத்தில் இராவணன் மகன் இந்திரஜித்துக்கும் லட்சுமணனுக்கும் இடையே நடைபெற்ற போரில் இந்திரஜித் ஏவிய அஸ்திரத்தால் லட்சுமணன் மூர்ச்சையாகி மயங்கி விழுந்தார். இலங்கை அரச மருத்துவர் சுசேனர் லட்சுமணனை குணப்படுத்த இமயமலையில் வளரும் சஞ்சீவினி எனும் மூலிகை மருந்துச் செடிகளை பறித்து வர அறிவுறுத்தினார். சஞ்சீவினி மூலிகை மருந்தினை இமயமலையில் இருந்து கொண்டு வருவதற்காக பெரும் பலவானாகிய அனுமன் விரைந்து சென்றார். இதை அறிந்த ராவணன் அனுமனுக்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்த அவற்றை எல்லாம் கடந்து அனுமன் சஞ்சீவினி மலையை அடைந்தார். அங்கு அனுமனைக் கொல்ல காலநேமியை இந்திரஜித் அனுப்பி வைத்தான். காலநேமி என்னும் அசுரர் மாரீசனின் மகன் ஆவார். அனுமன் இமயமலையின் சஞ்சீவினி மூலிகை உள்ள பகுதியை அடைந்து சஞ்சீவினிச் செடிகளை பறிக்க முற்படுகையில் முனிவர் வேடம் போட்ட காலநேமி அனுமன் முன்னிலையில் சென்றார். முனிவரைக் கண்ட அனுமன் அவரை வணங்கினார். அப்போது அருகில் இருக்கும் குளத்தை காண்பித்த முனிவர் வேடத்தில் இருந்த காலநேமி இந்தப் புனிதக்குளத்தில் நீராடி வந்து ஆசி பெற்றுக்கொள். அப்போது ராம காரியம் வெற்றி பெறும் என்றார்.
அனுமன் ஏரியில் குளிக்கையில் காலநேமி ஏவிய மாய முதலை அனுமனை விழுங்கியது. அனுமன் அம்முதலையின் வயிற்றைக் கிழித்துக் கொன்றார். அனுமன் கையால் இறந்த முதலை உடனே ஒரு தேவனாக மாறி அனுமனை வணங்கி நின்றான். எனது பெயர் தான்யமாலி. ஒரு சாபத்தால் முதலையாக இங்கே இத்தனை ஆண்டு காலம் இருந்தேன். உங்களால் கொல்லப்பட்டதால் சாபவிமோசனம் பெற்றேன். நீங்கள் முனிவர் என்று நினைத்துக் கொண்டிருப்பவர் ஒரு அசுரன் முனிவர் வேடத்தில் உங்களை கொல்ல திட்டம் திட்டி இருக்கின்றான் என்று காலநேமியின் சதித் திட்டத்தை அனுமனுக்கு எடுத்துரைத்து காலநேமியைக் கொன்று விடிவதற்குள் சஞ்சீவினிச் செடிகள் பறித்து லட்சுமணனைக் காக்குமாறு தேவன் அனுமனிடம் கூறினான். அனுமனும் காலநேமியைக் கொன்று சஞ்சீவினி மூலிகைச் செடிகள் வளரும் மலையை கொண்டு வந்து லட்சுமணனின் மூர்ச்சையை தெளிய வைத்தார். ராமாயணத்தின் மிக முக்கிய திருப்புமுனையாக விளங்கும் இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் உள்ள சேசராயர் மண்டபத்தில் உள்ள தூணில் அழகிய சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளது.
ராமாயணம் என்பது நீண்ட காலத்திற்கு முன்பு நடந்த கதை மட்டுமல்ல இது ஒரு தத்துவ ஆன்மீக முக்கியத்துவத்தையும் மற்றும் அதில் ஒரு ஆழமான உண்மையையும் கொண்டுள்ளது. ராமாயணத்தை நாமே நமது சொந்த உடலில் உணரலாம்.
‘ரா’ என்றால் ஒளி என்று பொருள். ‘ம’ என்றால் எனக்குள் என் இதயத்தில் என்று பொருள். ‘ராம’ என்றால் எனக்குள் இருக்கும் ஒளி (ஆத்மா) என்று பொருள்.
ஆத்மா – ராமர்
மனம் – சீதை
மூச்சுக் காற்று – அனுமன்
விழிப்புணர்வு – லட்சுமணன்
அகங்காரம் – ராவணன்
ராமர் தசரதருக்கும் கௌசல்யைக்கும் பிறந்தவர். தசரத் என்றால் 10 தேர்கள் என்று பொருள். பத்து தேர்கள் என்பது மனிதர்களின் செயல் உறுப்புகளாகிய வாய் (பேசுதல்) கைகள் (செயல்) கால்கள் (போக்குவரவு) எருவாய் (கழிவுகளை நீக்குதல்) கருவாய் (இன்பமும் பிறப்பும்) ஆகிய ஐந்து கர்மேந்திரியங்களும் உணர்வு உறுப்புகளாகிய கேட்டல் (காதுகள்) ருசித்தல் (வாய்) முகர்தல் (மூக்கு) பார்த்தல் (கண்கள்) உணர்தல் (தோல்) ஆகிய ஐந்து ஞானேந்திரியங்களும் ஆகும்.
கௌசல்யை என்றால் ஆற்றும் சக்தி (திறன்) என்று பொருள்.
மனம் என்னும் சீதை ஆசை என்னும் ராவணனால் கவரப்படும் பொழுது எதனாலும் பாதிக்கப்படாத ஆத்மா என்னும் ராமர் பரமாத்மாவிடம் இருந்து விலகி நிற்கிறார். அப்போது நமக்குள் பத்து தேர்களாக இருக்கும் ஞானேந்திரியங்களையும் கர்மேந்திரியங்களையும் கௌசல்யை என்னும் திறனை பயன்படுத்தி அடக்கி ஆண்டால் ராமர் என்ற ஒளியை உணரலாம். இந்த ராமர் என்ற ஒளியை மனம் என்னும் சீதையுடன் சேர்க்க லட்சுமணன் என்ற விழிப்புணர்வின் துணையோடு பிராணனை (மூச்சுக்காற்றை) அனுமனின் உதவியோடு கவனித்து மனதை ஆத்மா என்ற பரமாத்மாவோடு ஒருமுகப்படுத்த வேண்டும். அப்போது அகங்காரம் என்னும் ராவணன் அழிந்து விடுவான். அதன் பிறகு மனம் எனும் சீதை ராமராகிய ஆன்மாவோடு ஒன்று சேர்ந்து மனம் எண்ணங்களற்ற நிலையை அடைந்து பேரின்பத்தில் இருக்கும்.
வால்மீகி ராமாயணத்தில் ராமர் மான் மாமிசத்தை உண்டார் என்று கூறப்படுவது இது உண்மையா? இடைச்செருகலா?
மகாவிஷ்ணுவின் அவதாரம் ராமர் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் அல்லவா அப்படியென்றால் மான்களை வேட்டையாடவே கூடாது என்று மிக மிக சராசரியான மன்னனே அக்காலத்திலெல்லாம் சட்டம் இயற்றியிருந்தான் தெரியுமா? மான்கள் முயல் இன்னும் சாதுக்களான விலங்குகளை யாரும் எக்காலத்திலும் வேட்டையாடுதல் கூடாது. இன்னும் கூறப்போனால் முறையான பக்குவம் பெற்ற மன்னர்கள் பொழுது போக்கிற்கு என்று வேட்டையாட செல்ல மாட்டார்கள். என்றாவது கொடிய விலங்குகள் மக்களை இடர்படுத்தினால் மட்டும் அதிலும் முதலில் உயிரோடு பிடிக்கத்தான் ஆணையிடுவார்கள். முடியாத நிலையில் தான் கொல்வார்கள். ஒரு சராசரி மன்னனே இப்படி செயல்படும் பொழுது மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று கூறப்படுகின்ற ஸ்ரீராமபிரான் இவ்வாறெல்லாம் செய்திருப்பாரா? கட்டாயம் செய்திருக்கமாட்டார். அப்படி விலங்குகளைக் கொன்று தின்னக்கூடிய அளவில் ஒரு கதாபாத்திரம் கற்பனையாகக்கூட ஒரு ஞானியினால் படைக்கப்படாது. ஒருவேளை அது உண்மை என்றால் அப்பேற்பட்ட ஸ்ரீ ராமர் தெய்வமாக என்றும் போற்றப்படுவாரா? யோசித்துப் பார்க்க வேண்டும். இதற்கு என்ன காரணம் என்று யோசித்தால் பின்னால் வந்த மனிதன் தான் சாப்பிடும் மாமிச உணவிற்கு வசதியாக ராமரே இவற்றையெல்லாம் உண்டிருக்கிறார். நான் உண்டால் என்ன? என்று பேசுவற்கு வசதியாக வைத்துக் கொண்டான்.
அகத்தியர் ஜீவநாடியில் ராமர் பற்றிய கேள்விக்கு அகத்தியரின் பதில்
கேள்வி: ராமாயண காலத்தில் இருந்த இலங்கைதான் தற்போதும் உள்ளதா? அப்போது ராமனால் அமைக்கப்பட்ட பாலம் இன்னும் கடலுக்கடியில் இருக்கிறதா? சேதுபாலம் தற்போது இடிக்கப்பட்டால் ஆஞ்சிநேயர் ராம பக்தர்களால் மக்களுக்கு துன்பம் நேருமா?
இறைவன் கருணை கொண்டு கூறும்பொழுது ராமன் சென்ற பாதை என்ற பொருளிலே மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ராமபிரான் வாழ்ந்த சரிதம் என்பது மெய்யிலும் மெய். அடுத்ததாக அப்பொழுது இருந்த இலங்கையின் அளவு இன்னும் இன்னும் பெரியதப்பா. அதன் ஒரு சிறிய பகுதிதான் இப்பொழுது எஞ்சியிருக்கிறது. இன்னொன்று இப்பொழுது கடல் கொண்ட பூம்புகார் போக எஞ்சியுள்ள பூம்புகார் இருப்பது போலதான் இப்பொழுது இருக்கின்ற இலங்கை தேசம். அடுத்ததாக பாலம் எல்லாம் இருப்பது உண்மையென்றாலும் கூட மனித கண்ணுக்கு இப்பொழுது அது புலப்படாது. இன்னொன்று இவற்றை சிதைப்பதால் ராமபிரானுக்கோ அனுமனுக்கோ சினம் வந்துவிடாதப்பா. மனிதன் மனிதனாக வாழாமல் பிறருக்கு சதா சர்வகாலம் தொல்லைகள் தந்துகொண்டே தான் நன்றாக வாழ்வதற்கு பலரை இடர்படுத்தி வாழ்கிறானே? அந்த செயல் ஒன்று தான் இறைவனுக்கு வருத்தத்தையும் சினத்தையும் ஏற்படுத்தும். வருத்தமும் சினமும் இறைவனுக்கு இல்லை. கேள்வி கேட்பதால் நாங்கள் கூறுகிறோம். மற்றபடி ராமாயண காலத்து எச்சங்கள் இப்பொழுது ஆங்காங்கே இருப்பது உண்மை. அவற்றை மனிதன் இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கவில்லை. அதில் இரணமண்டலம் என்கிற மலை ஒன்று இருக்கிறது. அது குறித்து முன்பே யாங்கள் கூறியிருக்கிறோம். இருந்தாலும் இன்னும் விஷயங்கள் பூமியில் புதையுண்டுதான் இருக்கிறது. அது தொடர்பாக சில கற்பனை கதைகள் கூறப்படுகின்றன. எப்படிக் கூறினாலும் எம்பிரான் ராமபிரானின் பெருமைகளைக் கூறுவதால் அதையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். இறைவன் அருளால் இதுபோன்ற விஷயங்களுக்கு எத்தனை விளக்கங்கள் தந்தாலும் புரிந்து கொள்ளக்கூடிய அளவிற்கு மனிதனுக்கு பக்குவம் இருக்க வேண்டும். அதற்கு அவன் கர்மவினை இடம் தர வேண்டும். இல்லையென்றால் நாங்கள் கூறுகின்ற விளக்கம் நாங்கள் கூறுகின்ற நோக்கிலே இல்லாமல் மனிதனால் வேறு விதமாக புரிந்து கொள்ளக்கூடிய நிலை வரும்.
ராமர் ராவணனை வதம் செய்து சீதையை மீட்ட பின்னர் ராமருடன் இருந்த ஆனைவரும் புஷ்பக விமானத்தில் அயோத்திக்கு கிளம்பினார்கள். செல்லும் வழியில் பரத்வாஜ மகரிஷியின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் ஆசிரமத்தில் ஒரு நாள் தங்கினார்கள். அப்போது அங்கு வந்த நாரதர் யுத்தத்தில் வெற்றி பெற்ற ராமருக்கு தனது வாழ்த்துக்களை சொல்லி அவரிடன் பேச ஆரம்பித்தார். ராவணன் அழிந்த பின்னரும் ராட்சசர்கள் சிலர் ஆங்காங்கு இருக்கவே செய்கின்றனர். அவர்களில் ரக்தபிந்து ரக்தராக்ஷகன் என்ற இருவரும் மிகவும் கொடியவர்கள். அவர்கள் தற்சமயம் கடலுக்கடியில் கடுந்தவம் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் தவம் நிறைவடையுமானால் ராவணனை போல வரமும் உரமும் பெற்று உலகை அழித்துவிடுவர்கள். ஆகையால் உலக நன்மையின் பொருட்டு அவர்களை தாங்கள் அழிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அதற்கு ராமர் தாங்கள் சொன்னபடி அந்த ராட்சசர்களும் அழிக்கப்பட வேண்டியவர்களே. ஆனால் நான் பரதனுக்கு கொடுத்த வாக்குப்படி உடனே அயோத்திக்கு திரும்ப வேண்டும். லட்சுமணனும் என்னை பிரிந்து செல்ல மாட்டான். எனவே அந்த ராட்சசர்களை அழிக்கும் ஆற்றலுடைய மாவீரன்அனுமனை அனுப்புகிறேன் என்றார்.
ராமரின் கட்டளையே பணிவுடன் அனுமன் ஏற்றுக் கொண்டார். அனுமன் சிரஞ்சீவி வரம் பெற்றவர். அளவிலா ஆற்றல் கொண்டவர். அஷ்டமா சித்திகளும் கற்றவர். எனினும் மாயாவிகளான ராட்சசர்களை வெல்ல இது போதாது. எனவே திருமால் தன்னுடைய சங்கு சக்கரத்தையும் பிரம்மா தனது பிரம்ம கபாலத்தையும் ஶ்ரீருத்ரன் தனது மழுவையும் அனுமனுக்கு அளித்தார்கள். ராமர் தனது வில்லையும் அம்பையும் வழங்கினார். அனைவரும் வழங்கிய ஆயுதங்களைத் தாங்கிய அனுமன் பத்து கரங்களுடன் காட்சியளித்தார். அதன்பின் வந்த கருடாழ்வார் தனது சிறகுகளை அளித்தார். சிவபெருமான் பத்து கரங்களிலும் ஆயுதங்கள் தரித்து நின்றிருந்த அனுமனைப் பார்த்து தன்னுடைய சிறப்புக்குரிய மூன்றாவது கணணை அனுமனுக்கு அளித்தார். மூன்று கண்களும் (திரிநேத்ரம்) பத்து கைகளும் (தசபுஜம்) கொண்ட வீரக்கோலத்தில் இருந்த அனுமன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். கடலுக்கு கீழே தவம் செய்த அசுரர்களையும் அவர்களது படையினரையும் அழித்த அனுமன் தனக்கு தரப்பட்ட கடமையை செய்து முடித்துவிட்டு ஆனந்தத்துடனும் ராமனை சந்திக்கப் புறப்பட்டார். அனுமன் வரும் வழியில் கடற்கரை ஓரத்தில் இயற்கை அழகு நிரம்பிய ஒரு இடத்தில் ஆனந்தத்துடன் தங்கினார். அவர் தங்கிய இடம் ஆனந்தமங்கலம் என பெயர் பெற்றது. தற்போது வழக்கில் அனந்தமங்கலம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு அனுமனுக்கு கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு வெளியே கோவிலின் முகப்பைப் பார்த்து சதுர்புஜத்துடன் ஒரு கையில் மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமியின் சாட்டையையும் ஏந்தி காட்சி அளிக்கிறார். திருக்கடவூர் தரங்கம் பாடிக்கு இடையே தேசிய நெடுஞ்சாலையிலிருந்து ஒரு கிலோமீட்டர் கிழக்கில் அனந்தமங்கலம் அமைந்துள்ளது.
ஜனகருடைய ஆட்சியில் அந்தணர் ஒருவர் தவறு செய்து விட்டார். அவரைத் தண்டிக்கத் தீர்மானித்த ஜனகர் நீங்கள் உடனே இந்த ராஜ்யத்தை விட்டு வெளியேறுங்கள் என உத்தரவிட்டார். அதைக் கேட்ட அந்தணர் மன்னா உங்கள் நாட்டின் எல்லை எதுவரை என்று எனக்கு தெரியாது. எல்லை எது என்று சொன்னால் அதைத் தாண்டிச் சென்று விடுவேன் என்றார். ஜனகர் இந்த மிதிலை முழுவதும் என் அதிகாரத்திற்கு உட்பட்டது தானே பிறகு ஏன் இந்த அந்தணர் இப்படி கேட்கிறார் என்று சிந்திக்க ஆரம்பித்தார். எனது அதிகாரம் இந்த அரண்மனைக்குள் மட்டும் தான் இருக்கும். இந்த அந்தணர் என் எல்லையைத் தாண்டி விட்டால் வேறு எங்காவது போய் பிழைத்துக் கொள்வார். அதன்பின் அவர் மீது அதிகாரம் செலுத்த என்னால் முடியாது என சிந்தித்தார். சிறிது நேரத்தில் இந்த அரண்மனைக்குள் என் அதிகாரம் செல்லும் என்று நினைத்தது கூட தவறு தான் காரணம் இந்த அரண்மனைக்குள் அமர்ந்து கொண்டு ஜனகராகிய நான் கட்டளை இடுகிறேன். எனது உடம்பே நீ இப்படியே இளமையாக இரு என்று கட்டளையிட்டால் என் உடம்பு என் உத்தரவுக்கு கட்டுப்பட்டு இளமையாக இருக்குமா என சிந்தித்தார். என் உடம்பின் மீது கூட எனக்கு அதிகாரம் இல்லை அப்படியிருக்க இன்னொருவரை வெளியேறச் சொல்ல எனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று கருதினார். மொத்தத்தில் இந்த உலகில் வாழும் எந்த மனிதனுக்கும் தனக்குத்தானே அதிகாரம் செய்து கொள்ளக்கூட அதிகாரம் இல்லை என்பது புரிந்தது. எல்லாம் கடவுளின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதை அவர் சூசகமாகப் புரிந்து கொண்டார்.
ஜனகர் அந்தணரிடம் என் அதிகாரத்திற்கு உட்பட்டு இந்த உலகில் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. ஆகையால் நீங்கள் விருப்பம் போல எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் என்று தண்டனையை ரத்து செய்து விட்டார். அந்தணர் அவரிடம் என்ன இது இவ்வளவு பெரிய ராஜாவாக இருந்தும் உங்களுக்கு அதிகாரம் இல்லை என்கிறீர்களே என்று வியப்புடன் கேட்டார். மனதில் தோன்றிய அனைத்தையும் அந்தணரிடம் சொன்னார் ஜனகர். அப்போது அந்தணர் தர்மதேவதையாக உருமாறி நின்றார். ஜனகரே உன்னைச் சோதிக்கவே அந்தணராக வந்தேன். தவறிழைத்தது போல நாடகம் ஆடினேன். நாட்டின் எல்லை எது என்று ஒரே ஒரு கேள்வி கேட்க அது உலக வாழ்வின் யதார்த்தத்தை உமக்கு புரிய வைத்து விட்டது. உம் போல உத்தமரை உலகம் கண்டதில்லை என்று வாழ்த்திவிட்டுப் புறப்பட்டார்.
இந்தக்கதை மூலம் தவறு செய்தவர்களைத் தண்டிக்கக்கூடாது என்று தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது. அதிகாரத்தில் இருப்பவர்கள் மட்டுமல்ல சாதாரண மனிதனும் கூட தன்னால் தான் உலகம் நடக்கிறது என எண்ணக்கூடாது. கடவுளின் கட்டளைப்படியே அனைத்தும் நடக்கிறது என்பதைப் புரிந்து கொண்டால் மனதில் ஆணவத்திற்கே இடமிருக்காது.
ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் லெபாக்ஷி என்ற சிறிய கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு பாறையில் சீதையின் வலது பாதம் பதிந்த இடமென நம்பப்படுகிறது. இந்தக் கால் தடத்தினுள் வற்றாது நீர் சுரந்து கொண்டேயிருக்கிறது. எங்கிருந்து நீர் சுரக்கிறது என்பதை விஞ்ஞானப்பூர்வமாக யாராலும் கண்டுபிடிக்க இயலவில்லை. இந்த பாதத்தில் வற்றாமல் நீர் சுரப்பது சீதையின் பாதம் என்று நம்புவதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. இந்த கால் தடம் சுமார் இரண்டரை அடி நீளமும் ஒன்றரை அடி அகலத்துடனும் இருக்கிறது. இவ்வளவு பெரிய பாதம் எப்படி என்று சிந்திந்தால் இந்தப் பாதத்தின் அளவைக் கொண்டு கணிக்கும் போது சீதையின் உயரம் சுமார் 25 அடிகளாக இருக்க வேண்டுமெனக் கருதப்படுகிறது. அதற்கான வரலாற்றுக் குறிப்புகளாக ராமாயணக் காலத்தில் மனிதர்களின் உயரம் 25 அடிகள் என்கின்றன சில வரலாற்றுக் குறிப்புகள் உள்ளது. திரேதா யுகத்தில் மனிதர்களின் உயரம் 25 அடிகள் எனவும் துவாபர யுகத்தில் 15 அடிகளாகக் குறைந்து தற்போது கலியுகத்தில் ஏழிலிருந்து ஒன்பது அடிகளாகி விட்டதாகச் சொல்லப்படுகிறது. பெரும்பாலான வரலாற்றுத் தகவல்களையொட்டி எழும் நம் கேள்விகளுக்கு ஆதாரப்பூர்வமான விடைகள் கிடையாது.
ஜடாயுவின் இறக்கைகளை ராவணன் வெட்டியதும் ஜடாயு இப்பாறையின் மேல் விழுந்தான். அப்போது அவருக்கு தேவையான தண்ணீரை கொடுக்க வேண்டும் என்பதற்காக சீதை தன் காலைப் பதித்து அதில் நீர் சுரக்கச் செய்தாள். அந்த நீரை ஜடாயு அருந்தி ராமர் வரும் வரை உயிர் வாழ்ந்தார் என்று வரலாறு உள்ளது.