யார் துறவி – எது துறவு

மகாபெரியவர் அறுபது வயதை தொட்டிருந்த சமயம். பக்தர்கள் அவருக்கு தங்க கிரீடம் சூட்டி கௌரவிக்க எண்ணினார்கள். ஆந்திர மாநிலம் விஜய வாடாவில் பெரியவரின் இந்த வைபவத்தை ஒட்டி ஒரு தங்க கீரீடமும் இரண்டு லட்ச ரூபாய் காணிக்கையும் வழங்க பக்தர்கள் தீர்மானித்திருந்தனர். இதுபற்றிய செய்தி பெரியவரை வந்தடைந்தது உடனே அதற்கான வசூலை தடுத்துவிட்டார் பெரியவர். அந்த தேரத்தில் யார் துறவி – எது துறவு என்பதற்கு விளக்கம் கொடுத்தார்.

ஸ்தாபனத்திற்கு பலம் என்று ஒன்று அதிகமாகி விட்டால் அதன் அதிபதியனாவன் ஆத்ம பலம் சம்பாதிக்க சிரமப்பட வேண்டியதில்லை என்னும் ஆபத்து ஏற்பட்டுவிடுகிறது. சன்னியாசி என்பவன் ஒரு உடைமையுமில்லாத ஏகாங்கிகள். அவன் தன் ஊர் என்று சொல்லிக்கொள்வதற்குக்கூட ஒரு இடம் இருக்க வேண்டாமென்று ஊர்ஊராக செல்லும் படி சாஸ்திரம் கூறியுள்ளது. ஆனாலும் சமூகத்துக்கு வழிகாட்ட ஒரு அமைப்பு தேவைப்படுகிறது. அதுதான் மடம் என்றானது. இதை ஒரு தவிர்க்க முடியாத தீமை என்றுதான் கூற வேண்டும். தவிர்க்க முடியாத இந்தத் தீமையை நன்மையாக மாற்றிக்காட்டும் கடமையே சன்னியாசியின் கடமை. இந்தக் கடமையின் போது அவனது ஆன்ம தபோ பலத்தை விட பணத்தின் பலம் பெரிதாகி விடாமல் அவன் பார்த்துக்கொள்ள வேண்டும். காஞ்சிமடம் அவசியச் செலவுக்கே கஷ்டப்பட்ட காலம் உண்டு. ஆனால் சந்திரமௌலீஸ்வரர் கருணையாலே அந்த கஷ்டம் நீங்கியது. இந்த மாதிரி கஷ்டங்களை ஈஸ்வர சோதனையாகவே கருதினேன்.

உத்தமமா மடத்தை பார்த்துக்கொள்வது அவன்தான் பணமல்ல. எனவே எப்போதும் செலவுக்கு மேலே பணம் சேராதபடியே மடம் இருக்கும்படி ஜாக்ரதையாக நிர்வாகித்து வருகிறேன். இன்று இரண்டு லட்சம் ரூபாய் வாங்கி மடத்தின் நிதியை அதிகரிக்க கூடாது என்று கருதுகிறேன். சுவாமி தடுத்து விட்டாரே என நீங்கள் யாரும் வருத்தப்படவேண்டாம். பணத்தை வாங்கிக்கொண்டு நான் பண்ணுவது ஆசீர்வாதமாக இருக்காது. அதற்காக பணமே வேண்டாம் என்று கூறவில்லை. மடத்திற்கு நெருக்கடி ஏற்படும்போது உங்களிடம்தான் பிட்சை கேட்டு நிற்பேன். தேவைக்குத்தான் பணம். சன்னியாசிக்கு பணத்தைவிட ஆத்மபலம்தான் பெரும் பணம் என்றார்.

ராமாயணம் பால காண்டம் பகுதி -2

தசரதமன்னனுடைய வாழ்வில் அனைத்து சம்பத்துக்களும் இருந்தாலும் அவருடைய மனதில் குறை ஒன்று இருந்தது. அவருக்கு திருமணம் நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டாலும் மகப்பேறு வாய்க்கவில்லை. அதைப்பற்றிய துயரம் அவர் மனதில் அறித்துக்கொண்டிருந்தது. இந்த குறையை முன்னிட்டு அனைத்து மகிழ்ச்சிகளும் பயனற்றவைகளாக தசரத மன்னனுக்கு தெரிந்தது. மகப்பேறு ஒன்றை நாடி அவரின் உள்ளம் தவித்துக்கொண்டிருந்தது.

அயோத்தி மாநகரில் தசரதன் அரசவையில் இருந்தான் இப்போது குலகுருவான வசிஷ்டர் அரசவைக்கு வந்தார். அவரை அடிபணிந்த தசரதன் வழிவழியாக எங்கள் குலத்திற்கு தாயும் தந்தையாய் உயர்ந்த கடவுளாய் இருப்பவர் நீங்களே என்று போற்றி வணங்கி தக்க மரியாதை தந்து வரவேற்று அவருக்குத்தக்க ஆசனம் தந்து அமரவைத்தான். பின்பு அவரிடம் எனக்கு முன்னால் தோன்றிய சூரிய வம்சத்து அரசர்கள் அனைவரும் எல்லா நன்மைகளும் பெற்று அரசாட்சி செய்து இவ்வுலகை காத்து வந்தனர். நான் இவ்வுலகை அறுபதினாயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்து இவ்வுலகை காத்து வந்தேன். பெருந்தவம் புரியும் முனிவர்கள் வேள்விகள் செய்யும் அந்தணர்கள் வரை எவ்வித குறையுமில்லாமல் நலமுடன் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். எனக்குப்பின் இந்த நாட்டை ஆள வாரிசு இல்லை. ஆகையால் அவர்கள் அனைவரும் பெருந்துன்பத்தில் சிக்கக்கூடும் என்று என் மனம் மிகவும் வருந்துகிறது. எனக்கு வாரிசு கிடைக்க என்ன செய்யவேண்டும் என்று தாங்கள் கூறவேண்டும் என்று வசிஷ்டரிடம் கூறினான். தசரதர் கூறிய அனைத்தையும் கேட்ட வசிஷ்டர் பிற்காலத்தில் தசரதருக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை தன் தவவலிமையால் அறிந்துகொள்ள கண்களை முடி பின்வருவனவற்றை கண்டார்.

இலங்கையில் வாழும் அசுர அரசனான ராவணன் தேவர்களுக்கு தாங்க முடியாத துன்பத்தை கொடுத்துவந்தான். மனிதனைத்தவிர எந்த மூர்த்தியாலும் கொல்லமுடியாது என்ற வரத்தை பிரம்மனிடம் பெற்றிருந்தான். தேவர்கள் அசுரர்கள் கொடுக்கும் துன்பத்தை தாங்க முடியாமல் பிரம்மாவிடம் முறையிட்டார்கள். பிரம்மாவும் தேவர்களுடன் சேர்ந்து வைகுண்டத்திற்கு சென்றனர். திருமாலிடம் தங்கள் குறைகளை முறையிட்டு தங்களை காக்குமாறு தேவர்கள் கோரிக்கை வைத்தனர். இதனைக்கேட்ட திருமால் தான் தசரத சக்கிரவர்த்திக்கு மகனாக பிறக்கப்போவதாகவும் ஆதிஷேசன், சங்கு, சக்கரம் ஆகியவை எனக்கு தம்பிகளாக பிறக்கப்போகிறார்கள். விரைவில் அரக்கர்களை அழிப்பதாக வாக்குறுதி அளித்தார். இதனை ஞானதிருஷ்டியில் கண்ட வசிஷ்டர் தசரதனிடம் வருத்தப்படவேண்டாம். புத்திர காமேஷ்டி என்னும் வேள்வியை குறையின்றி செய்தால் உன் கவலை தீரும். ஏழு உலகையும் காக்கும் வலிமையுள்ள மகன் பிறப்பான் என்றார்.

இதைக்கேட்ட தசரதர் பெருமகிழ்ச்சி அடைந்து வசிஷ்டரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். புத்திர காமேஷ்டி வேள்வியை எப்படி செய்ய வேண்டும் என்று தாங்கள் கூறுங்கள். உடனே அதற்கான ஏற்பாட்டை செய்கிறேன் என்றான்.

ஆயுள்

ஒரு முறை பிரம்மாவுக்கு தானே சிரஞ்சீவி என்று கர்வம் ஏற்பட்டது. அவர் வைகுண்டத்துக்கு சென்று மஹா விஷ்ணுவிடம் நான் எவ்வளவு பெரியவன் சிரஞ்சீவி பார்த்தாயா என்றார். அதற்கு விஷ்ணு இல்லை உன்னைவிட பெரியவர்கள் இருக்கிறார்கள் என்றார். எல்லாரையும் படைப்பவன் நான் என்னை விட வயதானவர்கள் யார் இருக்கிறார்கள் என்று கேள்வி கேட்டர். சரி வா காட்டுகிறேன் என்று மஹாவிஷ்ணு பிரம்மாவை அழைத்துக்கொண்டு போனார். ஒரு இடத்தில் லோமசர் என்ற ரோமரிஷி காணப்பட்டார் அவரிடம் மஹாவிஷ்ணு தங்கள் வயதென்ன இன்னும் எவ்வளவு காலம் இருப்பீர்கள் என்று கேட்டார்.

என் வயதை கேட்கின்றாயா சொல்கிறேன். கிருத யுகம், துவாபர யுகம், த்ரேதாயுகம், கலி யுகம் என்று நான்கு யுகங்கள். இதற்கு சதுர் யுகம் என்று பெயர் (43 லட்சத்து 21000 மனித வருடங்கள்). அது போல 1000 சதுர் யுகங்கள் பிரம்மாவுக்கு ஒரு பகல். அதே மாதிரி இன்னொரு ஆயிரம் சதுர் யுகங்கள் ஒரு இரவு. இரண்டும் சேர்த்தால் பிரம்மாவின் வாழ்கையில் ஒரு நாள். இந்தக்கணக்கின் படி பிரம்மாவுக்கு நூறு வயது. இப்படி ஒரு பிரம்மாவின் ஆயுசு முடிந்து விட்டதென்றால் என் உடம்பில் இருந்து ஒரு ரோமம் உதிரும். இப்படி ஒவ்வொரு பிரம்ம கல்பத்துக்கு ஒரு ரோமம் உதிர்ந்தது போக இன்னும் எத்தனையோ ரோமங்கள் உடம்பில் இருக்கின்றன. என்றைக்கு இவை எல்லாமே உதிர்ந்துவிடுமோ அன்று என் ஆயுள் முடியும் என்றார். பிரம்மாவுக்கு ஒரே ஆச்சரியமாகிவிட்டது. அதுவும் போதாதென்று மஹாவிஷ்ணு பிரம்மாவை அஷ்டாவக்கிர முனியின் இருப்பிடத்துக்கு அழைத்துச்சென்றார். அவரது சரீரத்தில் 8 கோணல்கள் இருக்கும். அவர் ஒரு லோமச முனிவர் இறந்தால் என் ஒரு கோணல் நேராகும். இப்படியே எட்டு லோமச முனிவர்களின் ஆயுளில் என் எட்டு கோணல்களும் நேரானதும் என் ஆயுசு முடியும் என்றார். இதைக்கேட்டதும் பிரம்மாவின் கர்வம் கப்பென்று அடங்கியது.

ராமாயணம் பால காண்டம் பகுதி -1

புண்ணிய கங்கை நதிக்கு வடக்கே கோசல ராஜ்யம் மிகப்பெரியதாக இருந்தது. அந்த ராஜ்யத்திற்குள் சராயு நதி ஒடிக்கொண்டிருந்தது. கங்கையின் உப நதி சராயு நதியாகும். கோசல ராஜ்யத்தை ஆண்டு வந்த அரசர்கள் அனைவரும் சூர்ய குலத்தை சேர்ந்தவர்கள். இந்த வம்சத்தில் மனுச்சக்கரவர்த்தி, இக்ஷ்வாகு மன்னன், மந்தாதா, சிபிச்சக்கரவர்த்தி, சகரர், பகீரதர், நகுஷன், ரகு, அஜன் ஆகிய மன்னர்கள் மேன்மை தாங்கிய மன்னர்களாக மிளிர்ந்திருந்தனர். கோசல ராஜ்யத்திற்கு அயோத்ய பட்டணம் தலைமை நகரமாக இருந்தது. அயோத்ய என்ற சொல்லுக்கு யுத்தத்தில் அசைக்க முடியாதது என்று பொருள். அக்காலத்தில் இந்த நகரம் யாரிடமும் எவ்விதத்திலும் தோல்வி அடைந்தது இல்லை.

சூர்ய குலத்து அரசர்களுள் அஜமகா ராஜனுக்கும் இந்துமதிக்கும் மகனாகப்பிறந்த தசரத சக்கரவரத்தி கோசல ராஜ்யத்தை ஆண்டுவந்தார். தசம் என்றால் 10 என பொருள்படுகிறது. ரதம் என்பது தேரை குறிக்கிறது. தசரதன் என்னும் பெயர் ஒரே நேரத்தில் 10 தேரை வழிநடத்த வல்லவன் என்ற பொருள்படுகிறது. தசரத சக்கரவரத்தி ஆண்சிங்கத்தை ஒத்த உடல் வலிமையை பெற்றிருந்தான். இவருக்கு கௌசலை, கைகேயி, சுமித்திரை என்ற மூன்று மனைவிகள் இருந்தார்கள்.

மன்னன் ஒருவனிடம் இருக்க வேண்டிய மாண்புகள் அனைத்தும் தசரத சக்கரவரத்தியிடம் இனிது அமைந்திருந்தது. நெடுங்காலம் செங்கோல் தாங்கி ஆட்சி புரிந்துவந்தார். அவர் ஆட்சியில் தருமம் தழைத்தோங்கியது. தடுக்க முடியாத பாங்கில் போர் வாய்த்த போது அதை தசரத சக்கரவரத்தி திறமையுடன் சமாளித்தார். தேவர்களின் நலனுக்காக அசுரர்களை எதிர்த்து போர்புரிந்த சிறப்பை தசரத சக்கரவரத்தி பெற்றிருந்தார். போர் இல்லாத காலத்தை குடிமக்களை நலனுக்காக நன்கு பயன் படுத்திக்கொண்டார். தம்முடைய குடிமக்களை தந்தையின் பாங்கில் நன்கு பராமரித்து வந்தார். குடும்ப காரியம் ஆனாலும் நாட்டிற்கான காரியம் ஆனாலும் சான்றோர்களையும் முனிவர்களையும் அணுகி அவரகளுடன் நன்கு ஆலோசித்து அதன் பிறகே முடிவு செய்வார். இவருக்கு உதவியாய் இருந்த மந்தரிகள் அனைவரும் ஆட்சித்திறமை வாய்க்கப்பெற்றவர்களாக இருந்தார்கள்.

நான்கு வேதங்களைக்கொண்டு வேதியர்கள் இயற்றும் வேள்விகளில் இருந்த வந்த புகைகள் வானத்தில் மேகக்கூட்டம் போல் காட்சியளிக்கும். நாட்டில் பருவமழை சரியான அளவிற்கு பொழிந்து நாடு செழிப்புடன் இருந்தது. குடிமக்கள் நன்கு கல்வி கற்றவர்களாக இருந்தார்கள். ஒழுக்கத்திலும் நன்கு நிலை நின்றவர்களாக இருந்தார்கள். குடிமக்கள் நாட்டின் செல்வத்தை வளர்ப்பதில் ஊக்கம் மிகப்படைத்த உழைப்பாளிகளாக இருந்தார்கள். அனைவரின் உள்ளத்திலும் ஆனந்தம் குடிகொண்டு திருப்தி நிறைந்திருந்தது. தசரத சக்கரவரத்தியின் ஆட்சியில் மனிதர்களின் முயற்சியும் தெய்வ சம்பத்தும் ஒன்று கூடி பூலோக வைகுண்டம் போல் கோசல ராஜ்யம் காட்சி கொடுத்தது. கோசல நாட்டின் வளம் காரணமாக வறுமை என்பதே இல்லை. ஆகையால் தானதர்மங்களும் தனியாக இல்லை. அனைவரும் சத்தியத்தை கடைபிடித்து பொய் பேசாத காரணத்தால் உண்மை என்ற ஒன்று தனியாக இல்லை. நாட்டில் கள்வர்களே இல்லாத காரணத்தால் காவலர் என்ற ஒருவர் தேவையற்றவராக இருந்தார்.

மனம்

ஒரு ஊரில் ஒரு கோவில் இருந்தது. அரசாங்கம் அந்த கோயிலை பராமரித்து வந்தது அதிகாரிகள் அவ்வப்போது வந்து கணக்கு வழக்குகளை சரி பார்ப்பது வழக்கம். அந்த வகையில் ஒரு சமயம் அரசாங்க அதிகாரி அங்கே வந்தார். கோயில் நிர்வாக அதிகாரி கணக்கு புத்தகங்களையும் மற்ற பதிவேடுகளையும் எடுத்து அவர் முன்னால் வைத்தார் வந்த அதிகாரி கோயில் செலவு கண்ணுக்கு பார்த்து கொண்டு வந்தார். சும்மா இருக்கும் சாமியாருக்கு ஒரு பட்டை சோறு என்று தினசரி செலவு பட்டியலில் எழுதபட்டிருந்தது. அதை பார்த்த அவர் சும்மா இருக்கிறவருக்கு எதுக்காக சோறு போடணும் அதை உடனே நிறுத்துங்கள் என்று ஆணையிட்டார். உடனே ஆலய ஊழியர்கள் அதிகாரிகளை நெருங்கி மெல்ல சொன்னார்கள். ஐயா சும்மா இருப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. அதனால் தான் அவருக்கு சோறு வழங்குகிறோம். இந்த விளக்கம் அந்த அதிகாரிக்கு திருப்தி அளிக்கவில்லை. எனவே அதுபற்றி ஒன்றும் சொல்லாமல் சென்று விட்டார்.

அடுத்த நாள் சும்மா இருப்பது என்ன அவ்வளவு கடினமான காரியமா சிறிது நேரம் தானும் சும்மா இருந்து பார்க்கலாம் என்று கோவிலில் வந்து சும்மா இருக்கும் சாமியாருக்கு அருகில் அமர்ந்தார். மனம் அலைய ஆரம்பித்தது. கோவிலுக்கு சம்பந்தமில்லாத அனைத்து நினைவுகளும் வந்தது. மனம் அடங்க மறுத்தது. கொஞ்ச நேரம் கண்களை மூடி தியானம் செய்து பார்க்கலாம் என்று முயன்றார். சிறிது நேரத்திற்கு மேல் கண்களை முடி இருக்க முடியவில்லை தான் கொண்டு வந்த ஒரு புத்தகத்தை எடுத்து புரட்டினார் அதில் கவனத்தை செலுத்தினார். காகம் ஒன்று எங்கோ கத்துகிற சதம் அவர் காதில் விழுந்தது. கண்களையும் காதுகளையும் கட்டுபடுத்த முன்றார். மனம் எதிர்காலத்தை பற்றி யோசிக்க ஆரம்பித்தது. மகளுக்கு வரன் தேட வேண்டும். மகனுக்கு வேலை தேட வேண்டும். மறுபடி எதையும் நினைக்காமல் தியானம் செய்ய முயன்றார். திடீர் என ஒரு மணம் வந்து மூக்கை தொடுகிறது. சுவாமிக்கு வைக்க நெய்வேத்யம் பள்ளிமடத்தில் தயாரித்து கொண்டு இருந்தார்கள். மனது அங்கு செய்கிறது. அதை நினைத்ததும் வயிறு பசிக்கிறது போலிருக்கிறதே என்று நினைத்தார். அதிகாரி திணறி போனார். அவரின் சொல்லுக்கு ஊழியர்கள் கட்டுபடுகிறார்கள். உள்ளே இருக்கிற அவர் மனம் கட்டுப்பட மறுக்கிறது. அதிகாரி அலைபாய்கிற மனதை அடக்க முயன்று அது முடியாமல் சோர்ந்து போனார். சும்மா இருப்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பது அவருக்குபுரிந்தது. உடனே மறுபடியும் பதிவேட்டை கொண்டு வர சொன்னார். அதில் எழுதினார் சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு.

மனம் தியானம் இரண்டும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் உள்ளது. மனம் முடிந்து போகிற இடத்தில தான் தியானம் ஆரம்பமாகிறது. எனவே தியானம் இருக்கிற இடத்தில மனம் இல்லை. மனம் செயல்படுகின்ற வரையில் தியானமும் ஆரம்பமாவதில்லை.

ராமாயணம் முன்னுரை

பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே.

தர்மம் எப்பொழுதெல்லாம் அழிந்து அதர்மம் தலையெடுக்கிறதோ அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட நான் அவதரிப்பேன் யுகம் யுகமாக என்பது கீதாசாரம்.

தர்மம் அழிந்து அதர்மம் தலையெடுத்த போது பகவான் அவதரித்த வரலாற்றை கூறுபவை இதிகாசங்களாகும். இதிகாசம் என்பது கதை அல்ல. சமஸ்கிருதத்தில் இதி என்பதற்கு இப்படி என்றும் காசம் என்பதற்கு நடந்தது என்றும் அர்த்தம். இதிகாசம் என்றால் மரபுவழி வரலாற்று கதை என்றும் பெரும்காவியம் என்றும் பொருள் உண்டு. இதிகாசங்கள் இரண்டு 1. ராமாயணம் 2. மகாபாரதம். ராமாயணம் என்னும் பெயர் ராமன் மற்றும் அயணம் என்னும் சொற்களின் கூட்டாகும். அயணம் என்னும் சொல் சமஸ்கிருதத்தில் பயணம் அல்லது வழித்தடம் என்னும் பொருளுடையது. இதனால் ராமாயணம் என்பது ராமனின் பயணம் அல்லது அவன் வாழ்ந்த வழி என்னும் பொருளைக் குறிக்கிறது. மூல நூலான வால்மீகி ராமாயணத்தைத் தழுவிப் பல இந்திய மொழிகளிலும் பிற நாடுகளின் மொழிகளிலும் ராமாயணம் இயற்றப்பட்டுள்ளது. வடமொழியில் வால்மீகி இயற்றிய ராமாயணத்தை பின்பற்றி யோக வசிஷ்டர் எழுதிய வசிஷ்ட ராமாயணம், ராமசர்மர் எழுதிய அத்யாத்ம ராமாயணம் மற்றும் வால்மீகி பெயரால் அழைக்கப்படும் அற்புத ராமாயணம் ஆனந்த ராமாயணம் என நிறைய நூல்கள் உள்ளது. தமிழில் கம்பர் எழுதினார். இது கம்ப ராமாயணம் எனப்படுகின்றது. இந்தியில் துளசி தாசரும், மலையாளத்தில் எழுத்தச்சனும், அசாமியில் மாதவ் கங்குனியும், ஒரியாவில் பலராம்தாசுவும் இயற்றியுள்ளனர். கம்போடியாவின் கெமர் மொழியில் உள்ள ரீம்கெர், தாய்லாந்தின் தாய் மொழியில் உள்ள ராமாக்கியென் (ராமகீர்த்தி) தாய்லாந்து நாட்டின் தேசிய காப்பியம் ஆகும். லாவோ மொழியில் எழுதப்பட்ட ப்ரா லாக் ப்ரா லாம், மலாய் மொழியில் எழுதப்பட்ட இக்காயத் சேரி ராமா போன்றவை வால்மீகியின் ராமாயணத்தைத் தழுவியவை ஆகும்.

இந்தியாவில் வால்மீகி, கம்பன், துளசிதாஸ், எழுத்தச்சன், அஸ்ஸாமிய, வங்காள, சமண ராமாயணங்கள் பல கிடைக்கின்றன. இந்தியாவின் பெரும்பான்மையான மொழிகளில் ராமாயணங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. திரு. ஏ.கே. இராமானுஜம் 1991 இல் எழுதிய ஆங்கில கட்டுரை 300 ராமாயணங்கள் என்பதில் குறிப்பிடப்பட்டவை தவிர மேலும் பல ராமாயண நூல்கள் பிற்காலத்தில் பழைய நூலகங்களிலிருந்து கண்டெடுக்கப் பட்டுள்ளன. ராமாயணம் மொத்தம் எத்தனை உள்ளது என்று முழுமையாகச் சொல்லிவிடமுடியாது. இதற்கு காரணமாக ஏன் ராமாயணத்தில் இத்தனை வகைகள் தோன்றியது என்று எண்ணினால் அக்காலத்தில் புராணங்களும் இதிகாசங்களும் தலைமுறை தலைமுறையாக செவிவழிச் செய்தியாகவே பரிமாறப்பட்டிருக்கின்றன. யோகிகள் மகான்கள் எழுதிய நூல்கள் தவிர்த்து மற்ற அனைத்து ராமாயணங்களும் அவரவர்களுக்கு புரிந்தவைகளை அவரவர்கள் விருப்பம் போல் எழுதியிருக்கலாம். ஆகவே தான் யோகிகள் மகான்கள் எழுதிய ராமாயண காவியத்திற்கும் வால்மீகி ராமாயணத்திற்கும் அதிக வித்தியாசம் ஒன்றும் இல்லை. மற்றவர்கள் எழுதியதிற்கும் வால்மீகி ராமாயணத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் வந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும் ஓர் காலகட்டத்தில் சமணர்கள் சைவம் வைணவத்தை அழித்து தங்கள் சமண மதத்தை பரப்புவதற்காக வரலாற்று காவியங்கள் சிலவற்றை வேண்டுமென்றே திரித்து மொழி பெயர்த்திருக்கின்றார்கள் என்றும் வரலாறு உள்ளது. அதன்படியும் பல ராமாயண கதைகள் உருவாகியிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள்.

ராமாயணம் கி.மு. 5 ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி. 2 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் இயற்றப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்களால் கருதப்படுகின்றது. ராமாயண நூல் இதிகாசமே என்றாலும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் புவியியல் அமைவுகளும் விவரிக்கப்பட்டிருக்கும் ஆட்சி முறைகள் அரசுகள் போன்றவற்றையும் ஆய்வுநோக்கில் பார்க்கும் போது வெறுமனே கற்பனையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு இவ்வாறான ஒரு இதிகாசத்தை வால்மீகியால் படைத்திருக்க முடியாது என்பது தெரிகிறது. ராமாயண இதிகாசம் வாழ்வியல் நன்நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கும் ஒரு மனிதன் தலைவனாக எவ்வாறு நடந்து கொள்கிறான் என்பதையும் தன் வாழ்வில் சந்தித்த பல்வேறு நிலைகளையும் ஒன்றுபோல எதிர்கொண்டு சமயத்துக்குத் தக்கபடி நடந்து தனது சொந்த இன்ப துன்பங்களுக்கு அப்பால் குடிமக்களை எவ்வாறு வழிநடத்துகிறான் என்பதையும் காட்டுகிறது. வேறொரு கட்டத்தில் இது தீமையை ஒழித்து நீதியை நிலை நாட்ட மனிதனாகத் தனது ஏழாவது அவதாரத்தை எடுத்த விஷ்ணுவின் அவதார வரலாறும் ஆகும். மகாபாரத காவியத்தின் வன பருவத்தில் ராமாயண நிகழ்வுகளை மார்க்கண்டேய முனிவர் யுதிஷ்டிரனுக்கு எடுத்துரைத்திருக்கின்றார். வால்மீகி ராமாயணம் 24,000 பாடல்களைக் கொண்டது. இவை மொத்தம் ஏழு காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை ராமரின் பிறப்பில் இருந்து இறப்பு வரை விளக்குகின்றன. அவையாவன பின்வருமாறு:

  1. பால காண்டம்: ராமன் மற்றும் அவரின் உடன்பிறந்தோரின் பிறப்பு, கல்வி, திருமண காலத்துப் பகுதி.
  2. அயோத்தியா காண்டம்: ராமன் சீதையை மணந்து கொண்ட பின்னர் இளவரசனாக அயோத்தியில் வாழ்ந்த காலத்துப் பகுதி.
  3. ஆரண்ய காண்டம்: ராமன் காட்டுக்குச் சென்றதும் அங்கு வாழ்ந்த காலத்துப் பகுதி.
  4. கிஷ்கிந்தா காண்டம்: கடத்திச் செல்லப்பட்ட சீதையைத் தேடிச் செல்லும்போது வானரர் நாட்டில் ராமனது வாழ்க்கை காலத்துப் பகுதி.
  5. சுந்தர காண்டம்: சீதையைத் தேடி அனுமன் இலங்கைக்குச் சென்றது அங்கே சீதையைக் கண்டது ஆகியவற்றை உள்ளடக்கிய காலத்துப் பகுதி.
  6. யுத்த காண்டம்: ராமனுக்கும் இராவணனுக்கும் இடையிலான போரை உள்ளடக்கிய காலத்துப் பகுதி.
  7. உத்தர காண்டம்: ராமன் அயோத்திக்கு திரும்ப வந்து அரசனானதையும் சீதை மீண்டும் காட்டுக்கு அனுப்பப்பட்டதையும் உள்ளடக்கிய கதைப் பகுதி.

இந்த ராமாயணத்தில் காணப்படும் முதல் காண்டமும் இறுதிக் காண்டமும் வால்மீகியால் எழுதப்பட்டதா என்பதில் சில ஐயப்பாடுகளும் நிலவுகின்றன. இவ்விரு பகுதிகளிலிருக்கும் மொழி நடை ஏனைய பகுதிகளிலிருந்து வேறுபடுவதும் அவற்றின் உள்ளடக்கங்களில் முரண்பாடுகள் காணப்படுவதும் இத்தகைய ஐயப்பாடுகளுக்குக் காரணமாகும். எனினும் பலர் இவ்வேழு காண்டங்களும் வால்மீகியால் எழுதப்பட்டதாகவே நம்புகின்றனர்.

கம்பன் சோழ நாட்டில் கும்பகோணத்தில் உள்ள தேரெழுந்தூரில் கி.பி. 1180 ஆம் ஆண்டு ஆதித்தன் என்பவருக்கு மகனாக பிறந்தார். இவரின் குடும்பத்தின் வறுமை காரணமாக பணக்கார விவசாயி ஒருவருக்கு தத்து கொடுக்கப்பட்டார். இவர் சிறு வயதில் காளி கோவில் கம்பத்தின் கீழ் கிடந்ததால் கம்பர் எனவும் இவரது குருவின் கம்பங்கொல்லையை காவல் காத்தமையால் கம்பர் எனவும் அழைக்கப்பட்டார். கம்பர் சமஸ்கிருதத்திலும் தமிழிலும் மிகவும் புலமை பெற்ற மாபெரும் கவிஞன். கம்பனின் வறுமை நிலையில் ஆதரவுக்கரம் நீட்டியவர் திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல். தனது புலமையை மெய்பித்து இரண்டாம் குலோத்துங்க சோழ மன்னரின் அவைத் தலைவராக உயர்வு பெற்றார். குலோத்துங்க சோழ அரசன் கம்பரிடம் ராமாயணத்தை தமிழில் மொழி பெயர்க்குமாறு ஆணையிட்டார். கம்பர் வால்மீகி ராமாயணத்தை எப்படி தமிழில் தொடங்குவது என்ற குழப்பத்தில் இறைவனை நோக்கித் தியானித்திருந்த போது இறைவனே அவருக்கு அசீரரியாக உலகம் யாவையும் என்று முதலடி எடுத்துக் கொடுத்து பாடச் சொன்னார். அதை வைத்துக்கொண்டு

உலகம் யாவையுந் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடையா ரவர்
ஆண்டவ ரன்னவர்க் கேசர ணாங்களே.

விளக்கம்: உலகங்கள் எல்லாவற்றையும் தாமே இருக்கும்படியாக உருவாக்கியும் காலம் வரும்வரை அது நிலைத்து நிற்கும்படி காப்பாற்றியும் காலம் முடிந்ததும் அழித்தும் என்று எப்போதும் முடியாத திருவிளையாடலை மீண்டும் மீண்டும் அளவில்லாமல் விளையாடிக்கொண்டே இருக்கிறவர்தான் ஆண்டவர் அவரை நாங்கள் சரணடைகிறோம். என்று முதல் பாடலை இறை வணக்கமாகப் பாடி ஆரம்பித்து கம்பர் ராமாயணத்தை தமிழில் எழுதி முடித்தார்.

வால்மீகி முனிவரின் ராமாயணத்தை தமிழில் எழுதிய கம்பர் இதனை வடமொழியில் ஸ்ரீராமர் கதையை வகுத்து வான்புகழ் கொண்ட வால்மீகி முனிவரின் நூலை நான் தமிழ்ப் பாவினால் பாடியிருக்கின்றேன் என்று தனது பாடலின் வழியே கூறுகின்றார். தாம் இயற்றிய இந்நூலிற்கு கம்பர் முதலில் ராமகாதை என்றே பெயரிட்டிருந்தார். பிற்காலத்தில் ராமாயணம் பலரால் தொகுக்கப்பட்டதால் கம்பரின் பெயரோடு இணைத்து கம்பராமாயணம் என்றே அழைக்கப்படுகிறது. கம்பர் இந்த நூலை இயற்றிய பிறகு எண்ணற்ற ராமாயண நூல்கள் படைக்கப்பட்டன. தமிழில் பலவித ராமாயண நூல்கள் தோன்றுவதற்கு கம்பராமாயணம் தூண்டுதலாக இருந்தது என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். தக்க ராமாயணம், குயில் ராமாயணம், ராமாயண அகவல், கோகில ராமாயணம், அமர்த ராமாயணம், ராமாயணக் கீர்த்தைகள், பால ராமாயணம் என்று பல நூல்கள் பிற்காலத்தில் தோன்றியது.

கம்பர் தனது ராமகாதையை தொல்காப்பிய நெறிப்படி வல்லினம் மெல்லினம் இடையினம் என்று காட்சிக்கு ஏற்ப தனித்தனியாக பிரித்து சந்தத்தோடு பாடல்களில் தமிழை பயன்படுத்திய பெருமைக்குரியவர் ஆவார். உதாரணமாக அரக்கி ஒருத்தி நடந்து வரும் காட்சியில் வல்லின எழுத்துக்களில் ஆரம்பித்து சந்தத்தோடு எழுதியிருப்பார். அழகான பெண் நடந்து வரும் காட்சியில் மெல்லின எழுத்துக்களில் ஆரம்பித்து சந்தத்தோடு எழுதியிருப்பார். குதிரை வரும் காட்சிகளில் குதிரையின் காலடி சத்தம் வருவது போல வார்த்தைகள் வைத்து சந்தத்தோடு எழுதியிருப்பார். அதனை படிக்கும் போது குதிரை சத்தம் ரிதத்துடன் வருவது போலவே இருக்கும். கம்பரின் காவியத்தை படித்த 14 மொழிகளில் அறிஞரான மகாகவி பாரதியார் தான் கண்ட கவிஞர்களில் கம்பரைப்போல் வள்ளுவரைப்போல் இளங்கோவைப்போல் வேறு யாரையும் கண்டதில்லை என்று இந்த மூன்று தலைசிறந்த கவிஞர்களில் கம்பரை முதலாவதாகக் குறிப்பிட்டு கூறுகிறார்.

கம்பர் ஒரு நரசிம்ம உபாசகர். நரசிங்க பெருமாளின் தீவிர பக்தர். தான் எழுதிய ராமகாவியத்தை ஸ்ரீரங்கம் கோவிலில் நரசிம்மர் சன்னதி முன்னிலையில் அரங்கேற்ற நினைத்தார். ஸ்ரீரங்கம் கோவிலின் பண்டிதர்கள் மற்றும் புலவர்களிடம் தன் வேண்டுதலை முன் வைத்தார். அதற்கு அவர்கள் தில்லையில் இருக்கும் மூவாயிரம் தீட்சிதர்களிடம் அனுமதி பெற்று சான்று ஓலையை வாங்கி வந்தால் இங்கு அரங்கேற்ற அனுமதிக்கிறோம் என்றார்கள். தில்லை சென்ற கம்பர் அங்கிருந்த தீட்சிதர்களிடம் ஸ்ரீரங்கம் கோவிலைச் சேர்ந்தவர்களின் வேண்டுகோளைக் கூறி தாம் இயற்றிய ராமகாவியத்தைச் சரிபார்த்து சான்று தர வேண்டும் என்று கேட்கிறார். அவர்களோ நாங்கள் மூவாயிரம் தீட்சிதர்களும் ஒன்றாகக் கூடுவது அவ்வளவு எளிதானது அல்ல. பலர் பல இடங்களில் இருப்பார்கள் ஒருவர் குறைந்தாலும் ஓலையில் முத்திரை பதிக்கப்படாது. ஆகவே வீண் முயற்சி செய்யாதீர்கள். உமது ஊருக்கே சென்றுவிடுங்கள் என்றனர். கம்பர் மீண்டும் ஸ்ரீரங்கம் திரும்புகிறார். தன்னுடைய ராமகாதையை அரங்கேற்ற முடியவில்லையே என்று வருத்தப்பட்டு பாடல்கள் சில அந்தாதிகளாக எழுதினார்.

ஒருநாள் இரவு நித்திரையில் கம்பனின் கனவில் இறைவன் தோன்றி உடனே தில்லை செல்க என்றார். விழித்த கம்பர் உடனே தில்லை விரைந்து செல்கிறார். அங்கு மூவாயிரம் தீட்சிதர்களும் ஓர் இடத்தில் ஒன்று கூடி இருப்பதை கண்டார் கம்பர். ஆச்சரியத்துடன் அருகில் சென்ற போது ஒரு தீட்சிதரின் மகன் பாம்பு தீண்டி இறந்ததால் துக்கம் விசாரிக்க அனைவரும் ஒன்று சேர்ந்து இருக்கின்றனர் என்று தெரிந்து கொண்டார். இறைவனின் திருவிளையாடலை எண்ணி மகிழ்ந்து தாம் எழுதிய ராமகாதையின் ஓலைக் கட்டிலிருந்து நாகபடலம் பாடல்களின் ஒரு ஓலைச் சுவடியை எடுத்து இறந்து கிடந்த அச்சிறுவனின் நெஞ்சில் வைத்து அப்பாடலை இறைவனை நினைத்துக் கொண்டு பாடினார். உடனே அச்சிறுவன் உயிர் பெற்று எழுந்தான். கூடியிருந்த தில்லை அந்தணர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டனர். இவர் பாடலின் ஆற்றலைக் கண்ட அனைவரும் ஒரே முகமாக ஒப்புக்கொண்டு அரங்கேற்றத்திற்கான ஒப்புதல் ஓலை அளித்தனர். அதை வாங்கிக் கொண்டு ஸ்ரீரங்கம் திரும்பிய கம்பர் ஸ்ரீரங்கம் கோவில் தாயார் சன்னிதிக்கு எதிரிலுள்ள மண்டபத்தில் வீற்றிருக்கும் தனது இஷ்ட தெய்வமான நரசிம்மர் பெருமாள் முன்பு தனது ராமகாவியத்தை அரங்கேற்ற முடிவு செய்தார்.

ராமகாதையைக் கேட்ட ஸ்ரீரங்கத்துப் புலவர்கள் வால்மீகி எழுதிய ராமாயணத்தில் இரண்ய வதைப் படலம் இல்லை ஆனால் நீங்கள் எழுதி இருக்கின்றீர்கள். ஆகவே இது ராமாயணத்தோடு சேராது என்பதால் இங்கே அரங்கேற்றம் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அதற்கு கம்பர் தமக்கு இறைவனே அடி எடுத்து கொடுத்து எழுத வைத்திருப்பதால் அதைத் தன்னால் மாற்ற இயலாது என்றும் உங்களுடைய சந்தேகத்திற்கு இறைவன்தான் பதில் சொல்ல வேண்டும் என்றும் கூறினார். அதற்கு அவர்கள் அப்படி என்றால் இரண்ய வதைப் படலத்தை மட்டும் முதலில் அரங்கேற்றுங்கள் இறைவன் அடியெடுத்துக் கொடுத்தது உண்மையாக இருந்தால் இறைவனே வந்து சாட்சி சொல்லட்டும் அதன்பிறகு நாங்கள் முழு ராமகாதையை ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறினார்கள். உடனே கம்பர் ஸ்ரீநரசிம்ம பெருமானை மனதில் வைத்து வேண்டிக்கொண்டு இரண்ய வதைப் படலத்தை ஆரங்கேற்றம் செய்ய ஆரம்பித்தார். பாடலின் நடுவே இரண்யன் ஆரடா சிரித்தார் என்ற கேட்பது போலக் காட்சி வரும் போது மண்டபத்தின் தூணில் இருந்த நரசிம்மர் கடகடவென பெரிய சிரிப்பொலியுடன் கர்ஜனை செய்து கம்பரின் கூற்று உண்மை என ஆமோதித்து தலையாட்டினார். இந்த அதிசயத்தை பயத்தோடு கண்ட புலவர்கள் அனைவரும் கம்பரின் ராமகாதையை ஏற்றுக்கொண்டனர். அங்கு சிரித்த நரசிம்மரை மேட்டழகிய சிங்கர் என்பார்கள். இவர் தாயார் சன்னிதி அருகில் தனி சன்னிதியில் இப்போதும் இருக்கிறார். இவரது கையில் சங்கு மட்டும் இருக்கிறது சக்கரம் இல்லை. இன்றும் ராமாயணம் அரங்கேற்றப்பட்ட இடமான இம்மண்டப மேடையைக் காணலாம்.

வால்மீகி ராமாயணம் கம்பராமாயணத்தின் மூலமாக இருந்தாலும் கம்பர் அவற்றை வரிக்குவரி மொழி பெயர்ப்பு செய்யவில்லை. அந்நூலில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும் அப்படியே இருந்தாலும் முழுமையாக வால்மீகி ராமாயணம் போல் கம்ப ராமாயணத்தை இயற்றவில்லை. வால்மீகி ராமாயணத்தில் இல்லாத ராமரின் உணவு பழக்கமும் ராவணனின் திறமையும் ராவணன் சீதையைத் தொடாமல் இருந்த நெறியையும் கம்பராமாயணத்தில் காணலாம். கம்பர் தனக்கே உரித்தான பாணியில் வால்மீகி ராமாயணத்தின் கருப்பொருள் சிதையாமல் தமிழ் மொழியில் இயற்றியுள்ளார். வடமொழி கலவாத தூய தமிழ்ச் சொற்களைத் தனது நூலில் கையாண்டதால் கம்பர் தொல்காப்பிய நெறி நின்றவர் என்று புகழப்படுகிறார்.

கம்பராமாயணம் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் எனும் ஆறு காண்டங்களில் 123 படலங்களுடன் ஏறத்தாழ 22000 பாடல்களையும் உடையது. காண்டம் என்பது பெரும் பிரிவினையும் படலம் என்பது அதன் உட்பிரிவினையும் குறிக்கும். ஏழாம் காண்டமாகிய உத்திர காண்டம் என்னும் பகுதியை கம்பரின் சீடராகிய ஒட்டக்கூத்தர் இயற்றியுள்ளார்.

கம்பர் தம் ராமாயணத்தைப் பால காண்டம் முதல் யுத்த காண்டம் முடிய உள்ள ஆறு காண்டங்களில் நிறைவு செய்துள்ளார். யுத்த காண்டத்தின் நிறைவில் விடை கொடுத்த படலம் என்றொரு படலம் உள்ளது. அதில் சுக்ரீவன், அனுமன், விபீஷணன் மற்றும் வானரர் முதலியோர்க்கு பரிசுகள் கொடுத்து ராமர் விடை தந்து அனுப்பிய செய்தி கூறப்பட்டுள்ளது. அதன் பின்பு ராமர் பல்லாண்டு மனுநெறி தவறாமல் ஆட்சி செய்ததை விளக்கி ராமாயணத்தைக் கம்பர் நிறைவு செய்து விட்டார். அதன்பின் நிகழ்வுகளாக சீதையைக் குறித்து சந்தேகமாகப் பேசிய ஒரு குடிமகனின் ஆதங்கத்தைத் தீர்க்க வேண்டிய அரச தர்மத்தினால் ஐந்து மாத கர்ப்பிணியான சீதையை ராமன் லக்குமணனைக் கொண்டு சென்று காட்டில் விட்டுவிடும்படி கூறுவது காட்டில் சீதைக்கு வால்மீகி ஆசிரமத்தில் லவன் மற்றும் குசன் எனும் இரட்டைக் குழுந்தைகள் பிறப்பது ராமர் செய்த அசுவமேத யாகத்தில் உபயோகிக்க வேண்டிய குதிரைகளை லவ-குசர்கள் கட்டி வைத்தது சத்துருக்கனன், பரதன் மற்றும் லக்குமணராலும் வெல்ல முடியாத லவ-குசர்களை ராமரே நேரில் வந்து பார்த்து போரிடுவது பின்னர் தம்மக்கள் என்பதைத் தெரிந்து கொண்டு லவ-குசர்களை அயோத்திக்கு அழைத்து செல்வது சீதை பூமாதேவியை வேண்டிக் கொள்ள பூமி பிளந்து பூமாதேவியுடன் அவள் சேர்வது போன்ற செய்திகளை தான் எழுதிய உத்தர காண்டம் மூலம் ஒட்டக்கூத்தர் விளக்கிக் கொடுத்துள்ளார்.

அருணாசல கவிராயர் என்பவர் ராமாயணம் சராசரி மனிதருக்கும் புரிய வேண்டும் என்று ராமகாவியத்தை தெருக்கூத்து நாடகம் போல் இயற்றினார். தான் எழுதிய ராம நாடகத்தை ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றம் செய்ய அங்கு உள்ள புலவர்களிடம் அனுமதி கேட்கிறார். அதற்கு அவர்கள் இக்கோவில் ரங்கநாதர் கோவில் ஆகையால் நீங்கள் ரங்கநாதரை பற்றி பாடினால் அனுமதி தருகிறோம் என்று கூறுகிறார்கள். அதற்கு அருணாசல கவிராயர் ஒத்துக்கொண்டு பாட ஆரம்பிக்கின்றார். ஏன் பள்ளி கொண்டீரய்யா என்று ரங்கநாதர் பள்ளி கொண்டிருப்பதை பாடலின் முதல் வார்தையாக ஆரம்பித்து பின்பு ராமரைப் பற்றியே பாடுகிறார். விஸ்வாமித்திரர் தங்களை காட்டுக்கு அழைத்துச் சென்றாரே அங்கு பட்ட கஷ்டங்களை நினைத்து படுத்துக் கொண்டிருக்கின்றீர்களா? பெண்ணாக இருக்கும் தாடகை என்னும் அரக்கியை அம்பு விட்டு கொன்று விட்டோமே என்று வருத்தப்பட்டு படுத்துக் கொண்டிருக்கின்றீர்களா? ஜனகர் கொடுத்த சிவதனுசை முறித்து விட்டோமே என்ற வருத்தத்தில் படுத்துக் கொண்டிருக்கின்றீர்களா? பரசுராமர் வில்லோடு வந்த போது அதனை உடைத்தீர்களே அதனை நினைத்து படுத்துக் கொண்டிருக்கின்றீர்களா? சீதையுடன் காட்டில் நடந்து சென்றீர்களே அந்தக் களைப்பில் படுத்துக் கொண்டிருக்கின்றீர்களா? கங்கையில் குகனுடன் ஓடத்தில் சென்றீர்களே அந்த உடல் அசதியில் படுத்துக் கொண்டிருக்கின்றீர்களா? என்று முதல் இரண்டு அடியை மட்டும் ரங்கராதரை பற்றி பாடி மீதி அனைத்தும் ராமரைப் பற்றியே பாடித் தனது ராம நாடகத்தை அரங்கேற்றம் செய்தார் அருணாசல கவிராயர்.

விஷ்ணு புராணம், ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்களிலும் இதிகாசங்களிலும் வரலாற்று உண்மை உள்ளதா என்ற இந்து பத்திரிக்கை நிருபரின் கேள்விக்கு சுவாமி விவேகானந்தர் பதில் கூறியுள்ளார். ஒரு வரலாற்று உண்மை புராணத்தின் கருவாக உள்ளது. உயர்ந்த கருத்துக்களைப் பல வடிவங்களில் மக்களுக்குக் கற்பிப்பதே புராணங்களின் நோக்கம். ராமாயணமும் மகாபாரதமும் கண்ட நியதிப்படி அவை ராமரையும் கிருஷ்ணரையும் சார்ந்திருக்க வேண்டியது இல்லை. ஆனால் அவை உயர்ந்த கருத்துக்களை மனித இனத்தின் முன் வைப்பதால் அவற்றைச் சிறந்த அடிப்படை நூல்களாகக் கருத வேண்டும். எந்தப் புராணமானாலும் அதிலுள்ள தத்துவத்தை அறிந்துகொள்ள வேண்டும். அதில் வரும் பாத்திரங்கள் உண்மையா கற்பனையா என்ற ஆராய்ச்சி தேவையில்லை. மனித இனத்திற்கு தர்மத்தை போதிப்பதே புராணங்களின் நோக்கம். ராமாயணத்தில் வரும் பத்துத் தலை அசுரன் வாழ்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அவன் ஓர் உண்மைப் பாத்திரமா அல்லது கற்பனையா என்ற கேள்வியைத் தள்ளி வைத்துவிட்டு அவன் மூலம் நமக்கு என்ன போதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய வேண்டும். இவ்வாறு அவர் பதிலளித்தார்.

காஞ்சி பெரியவர் சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் ராமாயணம் படித்தால் மனம் பக்குவப்பட்டு உடன் பிறந்தோர்களிடம் வேற்றுமை மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும் அதனால் உடன் பிறந்தவர்களிடம் விட்டுக் கொடுக்கும் தன்மை அதிகரித்து குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என்று சொல்லியிருக்கின்றார். முப்பதே வினாடிகளில் சொல்லி ராமாயணத்தை முழுவதுமாக சொல்லி முடிக்கிற மாதிரி அழகான ஒன்பதே வரிகளில் அருளியிருக்கிறார் மஹா பெரியவர்.

ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனு சாக்ரிஹத சீதா ஹஸ்தகரம்
அங்குல்யா பரண சோபிதம்
சூடாமணி தர்சனகரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர சைன்ய சேவிதம்
சர்வமங்கள கார்யானுகூலம்
சததம் ஸ்ரீ ராமச்சந்திர பாலயமாம்

அனைவரும் ராமாயணம் படித்து ராம காவியத்தை அறிந்து ஆனந்தத்துடன் இருப்போம்.

மகிழ்ச்சி

ஒர் பண்டிதரிடம் சென்ற ஒருவன் மற்றவர்கள் செய்யும் செயலால் நான் துன்பச் சிறையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன் என்றான். எனக்கு ஒரு வழி சொல்லுங்கள் என்றான். அதற்கு அவர் உனக்குத் துன்பம் கொடுப்பது உன்னுடைய மனம் தான். உன் மனதைப் புரிந்து கொள். நீ துன்பத்தில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியுடன் இருப்பாய் என்றார் பண்டிதர். என் மனதை நான் எப்படிப் புரிந்து கொள்வது என்று கேட்டான். இந்தக் கதையைக் கேள் உன் மனதை புரிந்து கொள்ள உதவும் என்ற பண்டிதர் ஓரு கதை சொன்னார்

ஆசையாக ஒரு பூனையை வளர்த்தார் ஒருவர். அந்தப் பூனை ஒருநாள் எலியைப் பிடித்து கவ்விக் கொண்டு வந்தது அவருக்கு அது மகிழ்ச்சியாக இருந்தது. மறுநாள் அந்தப் பூனை அவர் ஆசையாக வளர்த்த ஒரு கிளியைக் கவ்விக் கொண்டு வந்தது. அவருக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. இன்னொரு நாள் அந்தப் பூனை எங்கேயோ சென்று காட்டிலேயிருந்து ஒரு குருவியைப் பிடித்துக் கவ்விக் கொண்டு வந்தது. இப்போது அவர் மகிழவும் இல்லை வருந்தவும் இல்லை. எதையாவது பிடிப்பது பூனையின் சுபாவம் என்பதைப் புரிந்து கொள்ள அவருக்குக் கொஞ்ச காலம் ஆயிற்று. தனக்குப் பிடிக்காத எலியைப் பிடிக்கிறபோது இன்பம். தனக்குப் பிடித்தமான கிளியைப் பிடிக்கிறபோது துன்பம். தனக்குச் சம்பந்தமே இல்லாத குருவியைப் பிடிக்கிறபோது இன்பமுமில்லை துன்பமுமில்லை என்று கதையை முடித்தார். இவன் சிந்திக்கத் தொடங்கினான். மனதைப் புரிந்து கொள்கிறவர்களே மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.

ஞானியின் குரு

மிகச் சிறந்த ஞானி ஒருவரிடம் உங்களது குரு யார் என்று ஒருவர் கேட்டார். அதற்கு ஞானி எனக்கு ஆயிரக்கணக்கான குருமார்கள் இருக்கிறார்கள். நான் அவர்களது பெயரை சொல்வதற்கே எனக்கு பல மாதங்கள் பிடிக்கும் அவர்களைப் பற்றி பேச வருடங்கள் ஆகும். இருப்பினும் மூன்று பேர்களை மட்டும் நான் குறிப்பிட விரும்புகிறேன். அதில் முதலாமவர் ஒரு திருடர்.

ஒருமுறை நான் செல்லவேண்டிய கிராமத்தை போய் சேரும்போது நடு இரவாகி விட்டது. பாதி இரவு சென்று விட்டது. கடைகள் அனைத்தும் மூடிக் கிடந்தன. கதவுகள் அனைத்தும் அடைபட்டுக்கிடந்தன. ரோட்டில் மனித நடமாட்டமே இல்லை. நான் விசாரிப்பதற்காக யாராவது இருக்கிறார்களா என்று தேடினேன். இறுதியில் சுவற்றில் உள்ளே நுழைவதற்காக கன்னம் வைத்துக் கொண்டிருந்த ஒரு திருடனை பார்த்தேன். நான் அவரிடம் நான் தங்க இங்கே ஏதாவது இடம் இருக்குமா என்று கேட்டேன். அவர் நான் ஒரு திருடன் நீங்களோ ஒரு ஞானி போல தோன்றுகிறீர்கள். இப்போது தங்க இடம் கிடைப்பது மிகவும் கடினம். நீங்கள் விரும்பினால் என் வீட்டிற்கு வரலாம். திருடனுடன் தங்க உங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லையென்றால் என்னுடன் வாருங்கள் என்று அழைத்தார். நான் கொஞ்சம் ஒரு வினாடி தயங்கினேன். பின் எனக்கு உரைத்தது. ஒரு திருடன் ஞானியை பார்த்து பயப்படாத போது ஒரு ஞானி ஏன் திருடனைக் கண்டு அஞ்ச வேண்டும். உண்மையில் அவன்தான் என்னைக் கண்டு அஞ்ச வேண்டும். அதனால் நான் அவனிடம் சரி நான் உன் வீட்டிற்கு வருகிறேன் என்று கூறினேன். நான் அவனுடன் சென்று அவன் வீட்டில் தங்கினேன். அந்த மனிதன் மிகவும் அன்பானவன். நான் அவருடைய வீட்டில் ஒரு மாதம் தங்கினேன். ஒவ்வொரு இரவும் அவர் திருடுவதற்கு கிளம்பும்போதும் நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள் தியானம் செய்யுங்கள் ஓய்வெடுங்கள் நான் என் வேலையை பார்க்கப் போகிறேன் என்பார். அவர் திரும்பி வரும்போது ஏதாவது கிடைத்ததா என்று நான் கேட்பேன். இன்று எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் நாளை திரும்பவும் முயற்சிப்பேன் என்று கூறுவார். ஒருநாளும் அவர் நம்பிக்கையிழந்து நான் பார்க்கவேயில்லை. ஒரு மாதம் முழுவதும் அவர் வெறும் கையுடன்தான் திரும்பி வந்தார். ஆனாலும் அவர் மகிழ்ச்சியாகத்தான் இருந்தார். அவர் நாளை முயற்சி செய்வேன். கடவுள் விருப்பபட்டால் நாளை ஏதாவது கிடைக்கும். நீங்களும் எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள். இந்த ஏழைக்கு உதவி செய்யுங்கள் என்று நீங்கள் கடவுளிடம் சொல்லுங்கள். என்று கூறுவார்.

நான் பல வருடங்கள் தொடர்ந்து தியானம் செய்து கொண்டிருக்கையில் எதுவும் நிகழவில்லை. நான் மிகவும் மனமுடைந்து நம்பிக்கையிழந்து இது எல்லாவற்றையும் நிறுத்திவிடலாமா என்று பல சமயங்களில் நினைத்ததுண்டு. கடவுள் என்று ஒருவரும் இல்லை எல்லா பிரார்த்தனைகளும் எல்லா தியானங்களும் பொய் என்று நினைப்பேன் அப்போது திடீரென அந்த திருடனின் நினைவு வரும். அவர் ஒவ்வொரு நாள் இரவும் கடவுள் விருப்பபட்டால் நாளை ஏதாவது கிடைக்கும் என்று கூறியதை நினைத்துக் கொள்வேன். அதனால் மேலும் ஒருநாள் முயற்சி செய்து பார்க்கலாம் என்று நினைத்துக் கொள்வேன். திருடன் அந்த அளவு நம்பிக்கையுணர்வுடனும் இருக்கும்போது நான் ஏன் இன்னும் ஒருநாள் முயற்சி செய்து பார்க்கக் கூடாது என்று தோன்றும். பலமுறை இப்படி நிகழ்ந்திருக்கிறது. அந்த திருடனும் அவனைப் பற்றிய நினைவும் நான் இன்னும் ஒருநாள் தியானம் செய்யலாம் என்று நான் முயல உதவி செய்திருக்கிறது. அவர் தான் எனது முதல் குரு.

எனது இரண்டாவது குரு ஒரு நாய். நான் தண்ணீர் குடிப்பதற்காக நதியை நோக்கி போய்க் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நாயும் தண்ணீர் குடிப்பதற்காக நதியை நோக்கி வந்தது. நாய் நதிக்குள் பார்த்தது. தன்னுடைய பிம்பத்தை தண்ணீரில் பார்த்து பயந்து குரைத்தது. தண்ணீரில் இருந்த நாயின் பிம்பமும் குரைத்தது. இதை பார்த்து பயந்து போய் திரும்பி போனது. ஆனால் தாகம் மிகவும் அதிகமாக இருந்ததால் திரும்பி வந்து தண்ணீரை பார்த்தது. அந்த நாய் அங்கேயே இருப்பதை பார்த்தது. ஆனாலும் தாகத்தினால் தண்ணீரில் எட்டிக் குதித்தது. அந்த பிம்பம் கலைந்து போய் விட்டது. தண்ணீரை குடித்து தண்ணீரில் நீச்சலடித்து ஆனந்தப்பட்டது. நான் பார்த்துக் கொண்டே இருந்தேன். அதன்மூலம் கடவுளிடமிருந்து எனக்கு ஒரு செய்தி வந்ததை புரிந்து கொண்டேன். நாம் அறியாத ஒன்றை பார்த்து பயந்து பின் வாங்ககூடாது. எதிர்த்து செல்லவேண்டும். சென்ற பின்னால் அங்கு பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்று தெரிந்துவிடும். அறியாதவற்றை கண்டு நான் பயப்படும் போது நாயின் நினைவு வரும் எதிர்த்து நிற்பேன். என் அறியாமை மறைந்துவிடும். அந்த நாய்தான் எனது இரண்டாவது குரு.

எனது மூன்றாவது குரு ஒரு சிறு குழந்தை. நான் ஒரு நகரத்தினுள் சென்றபோது ஒரு எரியும் விளக்கை கைகளில் எடுத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தது அந்த குழந்தை. ஒரு கிண்டலுக்காக நான் அந்த குழந்தையை நீயா இந்த விளக்கை ஏற்றினாய் என்று கேட்டேன். ஆமாம் என்று கூறியது குழந்தை. விளக்கு எரியாமல் இருந்தது நீ நெருப்பை வைத்தாய் ஒளி வந்தது. நீ ஏற்றியபோது பார்த்தாய் அல்லவா அந்த ஒளி எங்கிருந்து வந்தது என்று உன்னால் கூற முடியுமா என்று கேட்டேன். அந்த குழந்தை சிரித்துவிட்டு விளக்கை ஊதி அணைத்துவிட்டு இப்போது நீங்கள் இந்த ஒளியை பார்த்தீர்கள் அல்லவா அது எங்கு போனது என்று எனக்கு கூறுங்கள் என்று கேட்டான். என்னுடைய ஆணவம் சுக்குநூறானது. எனது அறிவு அனைத்தும் பொடிபொடியானது. அந்த வினாடியில் நான் எனது முட்டாள்தனத்தை உணர்ந்தேன். அப்போதிலிருந்து நான் அனைத்தும் அறிந்தவன் என்ற எண்ணத்தை விட்டு விட்டேன். எனக்கு எப்போதெல்லாம் அனைத்தும் தெரியும் என்கின்ற எண்ணம் வருகின்றதோ அப்போதெல்லாம் இந்த குழந்தையை எண்ணிக்கொள்வேன் என்றார்.

அர்த்தநாரீஸ்வரர் கோவில்

விழுப்புரம் மாவட்டம் கூத்தனூர் அடுத்தள்ள ரிஷிவந்தியம் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோவில். மூலவர் அர்த்தநாரீஸ்வரர். அம்பாள் முத்தாம்பிகை. தலவிருட்சம் புன்னை. தீர்த்தம் அகஸ்த்திய தீர்த்தம், இந்திர தீர்த்தம், ஞான போத புஷ்கரிணி தீர்த்தம், அக்னி தீர்த்தம், சங்கர தீர்த்தம். சிவனின் சொல்படி அகத்தியர் தென்னகத்தில் பல பகுதிகளில் தங்கி சிவ பெருமானுக்குப் பூஜைகள் செய்தார். இப்பகுதியில் அகத்தியர் பூஜையில் இருக்கும் போது இறைவனின் திருமணக்காட்சியை காண விரும்பி சிவனை வேண்ட சிவன் திருமணக்காட்சியை தந்தருளினார். இக்காட்சியினை பிற மக்களும் கண்டு பிரார்த்திக்க வேண்டும் என அகத்தியர் வேண்டவே இங்கு சுயம்புலிங்கமாக தோன்றி அருள்பாலித்தார்.

விஜய நகர மன்னர்கள் காலத்தில் விவசாயம் செய்வதற்காக காடுகளை விவசாய நிலமாக மாற்ற நிலத்தை வெட்டும் போது சிவலிங்கம் தோன்றியது. இவரே அர்த்தநாரீஸ்வரர். மண்வெட்டியில் வெட்டுப்பட்ட கீறலை தழும்பாக இப்போதும் சுயம்புலிங்கத்தில் பார்க்கலாம். இக்கோவிலில் உள்ள கல்வெட்டுக்களில் இந்த சிவலிங்கம் துவாபரயுகத்தில் இருந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தலத்தில் ராமர், அகத்தியர், குகை நமச்சிவாயர் வந்து வழிபட்டதற்கான சான்றுகள் கோவில் கல்வெட்டில் காணப்படுகிறது. ரிஷிகள் பலர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டதால் இப்பகுதி ரிஷிவந்தியம் என பெயர் பெற்றுள்ளது. குகை நமச்சிவாயரின் சீடரான குரு நமச்சிவாயர் திருவண்ணாமலையிலிருந்து பல தலங்களை தரிசித்து விட்டு இத்தலம் வழியாக சிதம்பரம் செல்லும்போது பசி அதிகமானது. அவர் இங்குள்ள முத்தாம்பிகை அம்பாளிடம் தாயிருக்க பிள்ளை சோறு என்ற செய்யுளை பாடினார். உடனே அம்பாள் அவர் முன் தோன்றி நான் இங்கு ஈசனுடன் பாதிபாகமாக இடம் பெற்றிருக்கிறேன். எனவே இருவரையும் சேர்த்து பாடுவாயாக என்று கூற குக நமசிவாயரும் அதன்படியே மின்னும்படிவந்த சோறு கொண்டு வா என்ற பாடலைப்பாடினார். இந்த பாடலை கேட்டதும் முத்தாம்பிகையம்மன் பொற்கிண்ணத்தில் சோறு கொண்டு வந்து குருநமச்சிவாயரின் பசியாற்றினாள்.

தேவர்களின் தலைவரான இந்திரன் அன்றாடம் ரிஷிவந்தியம் இறைவனுக்கு 108 பால் அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தார். அத்தலத்தில் இருந்த அம்பாளை அவர் வழிபடவில்லை. ஒரு நாள் கோபமடைந்த அம்பாள் இந்திரனின் பால் குடத்தை மறைத்துவிட்டார். பால் குடத்தை காணாததால் மனமுடைந்த இந்திரன் கோவில் பலிபீடத்தில் தலையை மோதி உயிர்விட முயற்சித்த போது ஈசன் இந்திரன் முன் தோன்றி இனி பார்வதிக்கும் பாலாபிஷேகம் செய்யக் கூறினார். மேலும் இவ்வாறு அபிஷேகம் செய்யும் போது எனது உருவத்துடன் இணைந்து பார்வதியும் தோன்றும் எனக் கூறி சிவன் மறைந்தார். அன்று முதல் இன்று வரை தேனபிஷேக பூஜை செய்யும் தருணத்தில் சுயம்பு லிங்கத்தில் அர்த்தநாரி ஈஸ்வரனாக ஆண் பாதி பெண் பாதியான தோற்றத்தில் கையில் கிளியுடன் அம்பாளும் சிவனும் தோற்றமளிக்கின்றனர். இங்கு இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் தேன் கெடாது. தன்னுடன் சேர்க்கும் பொருளையும் கெட விடாது. இதன்படி இன்றும் தினசரி நடக்கும் தேனாபிஷேகத்தில் அம்பாளின் உருவம் தெரியும். மற்ற அபிஷேகம் நடக்கும் போது லிங்க வடிவம் மட்டுமே தெரியும்.