யுயுத்சு

யுயுத்சு மகாபாரதத்தில் ஓர் குறிப்பிடத்தக்க வீரர். ஒரு சமயம் வியாச முனிவர் திருதராஷ்டிரன் அரண்மனைக்கு விஜயம் செய்தார். வியாச முனிவரை உபசரிக்கும் பொறுப்பை மனைவி காந்தாரியிடம் திருதராஷ்டிரர் ஒப்படைத்தார். அவளுடைய உபசரிப்பில் மகிழ்ந்த முனிவர் விடை பெற்றுச் செல்லும் முன் காந்தாரியின் வேண்டுகோளின் படி மக்கட் செல்வம் பெறும் வரத்தை அருளினார். பின் காந்தாரி கர்ப்பம் தரித்தாள். கர்ப்பகாலம் இரண்டு வருடங்கள் நீடித்தது. அவள் நிலை கண்டு அனைவரும் கவலையுற்றனர். காந்தாரி கர்ப்பமாக இருக்கும் போது திருதராஷ்டிரருக்குத் தேவையான பணிகளைச் செய்துக் கொடுக்க சுகதா என்னும் பணிப்பெண் நியமிக்கப்பட்டாள். அவள் காந்தாரியின் உற்ற தோழியும் ஆவாள். திருதிராஷ்டிரருக்கு காந்தாரி மூலம் 100 மகன்களும் துஷலா என்னும் பெண் குழந்தையும் பிறந்தனர். பணிப்பெண் சுகதா மூலம் ஒரு ஆண்மகன் பிறந்தான். அவன் தான் யுயுத்சு. துரியோதனன் பிறந்த அதே நாளில் யுயுத்சு பிறந்தார். துச்சாசனன் மற்றும் பிற கௌரவர்களை விட மூத்தவர்.

யுயுத்சுவின் குண நலன்கள் விதுரரை ஒத்திருந்தது. இருவருமே தாசியின் புத்திரர்கள். அறிவு மிகுந்த இவ்விருவரும் பாண்டவர்கள் மீது அன்பும் கிருஷ்ணரிடம் பக்தியும் உடையவர்களாக இருந்தனர். கெளரவர்கள் மனசாட்சிப்படி நடக்காவிட்டாலும் யுயுத்சு எப்போதும் மனசாட்சிப்படி நடந்தான். துரியோதனனின் சதித்திட்டங்களை தக்க சமயத்தில் பாண்டவர்க்கு எடுத்துரைத்து அவர்களைக் காப்பாற்றினான். குருசேத்ர யுத்தத்திற்காக தேர்ப் படை யானைப் படை குதிரைப் படை காலாட் படை எனப் பாண்டவர்களின் நால்வகைப் படைகள் ஒருபுறம் நிற்க எதிர்புறம் கௌரவர்களின் நால்வகைப் படைகளும் அணிவகுத்து ஒன்றுக்கொன்று எதிரெதிராக நின்றிருந்தன. இருபுறமும் மாபெரும் வீரர்கள் கூட்டம் கையில் வாளோடும் வேலோடும் வில் அம்பு கதை முதலிய ஆயுதங்களோடும் போரிடத் தயாராய்த் துடிதுடிப்புடன் காத்திருந்தனர். அந்நேரத்தில் அர்ச்சுனன் கிருஷ்ணரை நோக்கி நூறு கௌரவர்களும் அழிக்கப்பட வேண்டியவர்கள் தானே கண்ணா? என்றான். கண்ணன் கலகலவென நகைத்தான். ‘நூறு கௌரவர்கள் அழிக்கப்படுவார்கள் என்பது சரியல்ல அர்ஜீனா கௌரவர்களில் நூறுபேர் அழிக்கப்படுவார்கள் என்பதே சரி என்று புதிராக பதில் சொன்னான். இவர்கள் இப்படி உரையாடிக் கொண்டிருந்த போது யுதிஷ்டிரர் யுத்த களத்தின் மையப் பகுதிக்கு வந்து நின்றார். ஏதோ முக்கியமாக ஒன்றை அறிவிக்கும் நோக்கில் வந்திருக்கிறார் என்பதை அறிந்த இரு தரப்பு வீரர்களும் அமைதி காத்தனர். துரியோதனன் யுதிஷ்டிரரை வெறித்துப் பார்த்தவாறு அவரது அறிவிப்பைக் கேட்கக் காத்திருந்தான். யுதிஷ்டிரர் ஒரு அறிவிப்பை உரத்துச் சொல்ல ஆரம்பித்தார். வீரர்களே விரைவில் தர்மயுத்தம் தொடங்க இருக்கிறது. இப்போது இரு தரப்பு வீரர்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறது. எங்கள் அணியிலிருந்து யாரேனும் கௌரவர்களான துரியோதனன் அணிக்குச் செல்வதானால் செல்லலாம். துரியோதனன் அணியிலிருந்து யாரேனும் பாண்டவர்களான எங்கள் அணிக்கு வருவதானாலும் வரலாம். வீரர்களே எந்த அணியில் தர்ம நெறி மிகுந்து இருக்கிறது என்று கண்டு உணர்ந்து அதன் பொருட்டுத் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள விரும்பினால் இது கடைசி சந்தர்ப்பம் என்றார். மேலும் அப்படி அணி மாறுகிறவர்கள் மேல் இரு தரப்பினரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கலாகாது. அப்படி அணி மாறியவர்கள் அவரவர்கள் சார்ந்த புதிய அணியின் தரப்பில் போரிடுவார்கள் என அறிவித்த யுதிஷ்டிரர் அமைதியாய் காத்திருந்தார்.

அர்ஜீனன் பீமன் நகுலன் சகாதேவன் நால்வரும் தர்மனின் அறிவிப்பைக் கேட்டு வியந்தார்கள். யுதிஷ்டிரரின் அறிவிப்பு அவரது உயர்ந்த பண்பாட்டை இரு அணியினருக்கும் புலப்படுத்தியது. கெளரவர் தரப்பிலிருந்து ஒரு தேர் பாண்டவர் பக்கம் மெல்ல நகரத் தொடங்கியது. அதில் இருந்தவன் யுயுத்சு என்பதை பீஷ்மர் அறிந்தார். யுயுத்சுவை நோக்கி துரியோதனன் வில்லை வளைத்தபோது பீஷ்மர் துரியோதனா சற்றுப் பொறு என்று குறுக்கிட்டார். அவனைப் போகவிடு. யுதிஷ்டிரர் கட்சி மாறுபவர்கள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கலாகாது என்றானே? அந்த வீரன் அவன் மனச்சாட்சிப்படி நடக்கிறான். நீ அவனை போகவிடு. நம் படை அவன் ஒருவனை இழப்பதால் எந்த வகையிலும் வலிமை குன்றப் போவதில்லை. நம்மிலிருந்து வேறுபட்டுப் பாண்டவர் அணியில் சேர்ந்த வீரனை போர் தொடங்கியதும் நம் வீரர்களில் ஒருவனாலேயே கொல்லப்படுவான். அதுவே அவனுக்கான நமது தண்டனை என்றார் பீஷ்மர். அவர் சொன்னதைக் கேட்ட துரியோதனன் அம்பைத் தன் அம்பறாத் தூணியில் செருகிக் கொண்டான். யுயுத்சு கெளரவர் படையில் ஓர் அதிரதி. அதிரதி என்பவன் ஒரே சமயத்தில் 60000 போர் வீரர்களை அழிக்கும் ஆற்றல் பெற்றவன்.

அர்ஜீனா யுயுத்சு சாதாரணப் படைவீரன் அல்ல. கௌரவர்களில் ஒருவன் என்றார் கிருஷ்ணர். நம் அணிக்கு வரும் இவனை நீயும் அறிவாய். நீங்கள் சிறுவர்களாக இருந்தபோது ஒருமுறை பீமனை கொல்ல துரியோதனன் நீரில் நஞ்சு கலந்து கொடுக்க முற்பட்டானே அப்போது அதை முன்கூட்டியே பீமனுக்குத் தெரிவித்து பீமன் உயிரைக் காத்தவன் இவன்தான். இவன் தர்ம நெறியிலிருந்து சிறிதும் மாறாமல் இருப்பவன். அவனைப்போல் தர்மத்தை விடாமல் அனுசரிப்பவர்களுக்கு என்றும் என் துணை உண்டு. இவனது உயிரை இறுதிவரை நான் காப்பேன். இவன் உயிரை நான் காப்பதற்கு வேறு ஒரு முக்கியமான காரணமும் இருக்கிறது. அதையும் இன்றைய போர் முடிந்த பிறகு சாவகாசமாகச் சொல்கிறேன் என்றார் கிருஷ்ணர். முதல் நாள் போர் நடந்து முடிந்தது. மறுநாள் காலை போரில் மீண்டும் சந்திப்போம் என்று முழக்கமிட்டு கௌரவர்களும் பாண்டவர்களும் அவரவர் பாசறைக்குத் திரும்பினார்கள். பாண்டவர் அணியில் புதிதாய்ச் சேர்ந்த கௌரவ வீரனைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு பாண்டவர்கள் தங்கியிருந்த இருப்பிடத்திற்கு வந்த கிருஷ்ணரிடம் அர்ஜீனன் கண்ணா எங்களைக் காப்பதுபோல இவன் உயிரையும் இறுதிவரை காப்பேன் என்றாயே? நீ அப்படிச் சொன்னதன் காரணம் என்ன? என்று கேட்டான். அதற்கு கிருஷ்ணர் யுயுத்சு தங்கள் தந்தைக்குப் பிறந்தவன் என்றாலும் பணிப்பெண்ணின் மகன் என்பதால் இவன் பிற கௌரவர்களால் அலட்சியமாக நடத்தப்பட்டான். அதோடு விதுரனைப்போல் தர்ம நெறியிலேயே இவன் சிந்தனை சென்றதும் கூட மற்ற கௌரவர்கள் இவனை வெறுக்கக் காரணமாயிற்று. தர்ம நெறியைப் போற்றும் இவன் அதர்ம அணியில் தொடர்ந்து இருக்க விரும்பாததால் நம் அணிக்கு வந்துவிட்டான். போரில் யுயுத்சுவைத் தவிர எஞ்சியுள்ள அத்தனை கௌரவ சகோதரர்களும் அழிக்கப்படுவார்கள். போர் முடிந்து சிறிது காலத்திற்குப் பிறகு திருதராஷ்டிரனும் காலமாவான். அவனுக்குக் பித்ரு கடன்களை செய்ய ஒரே ஒரு பிள்ளையாவது வேண்டும். இந்த யுயுத்சு தான் திருதராஷ்டிரனுக்கு இறுதிக் கடன் செய்வான் எனக் கூறினார் கிருஷ்ணன். யுதிஷ்டிரர் யுயுத்சுவை இழுத்து அணைத்துக் கொள்ள பிற பாண்டவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் அவனைத் தட்டிக்கொடுத்தார்கள். கிருஷ்ணரின் தயவால் தர்மம் வென்றது. குருசேத்திரப் போரின் இறுதியில் பாண்டவர்களில் உயிர் பிழைத்த பதினொரு வீரர்களில் ஒருவராக இருந்தார். போரில் வென்ற பின் இந்திரப்பிரஸ்த அரசானாக யுயுத்சுவிற்கு முடி சூட்டினார் யுதிஷ்டிரர். திருதராஷ்டிரன் மறைந்த பின் யுயுத்சு தன் தகப்பனாருக்கு பித்ருக் கடனை செய்தான். அர்ஜீனனின் பேரனும் அபிமன்யுவின் மகனுமான பரீட்சித்திற்கு பாதுகாவலராக இருந்து அவனுக்கு தகுந்த வயது வரும் வரை அரசனாக நல்லாட்சி புரிந்து பின் அந்த அரசை பரீட்சித்திடம் ஒப்படைத்தார் யுயுத்சு.

துரியோதனின் பொறாமை

பாண்டவர்களும் கௌரவர்களும் துரோணரிடம் வில்வித்தைக் கற்று வந்தனர். அதில் பாண்டவர்களின் திறமையே எங்கும் பளிச்சிட்டது. அதனால் துரியோதனனின் மனதுக்குள் பொறாமைத் தீ எரிந்து கொண்டே இருந்தது. ஒருநாள் பீஷ்மரிடம் வந்த துரியோதனன் தாத்தா வில் வித்தை கற்றுத் தரும் துரோணர் அனைவரையும் சரிசமமாக பாவிப்பதில்லை. பாண்டவர்களுக்கு ஒரு மாதிரியாகவும் எங்களுக்கு வேறு மாதிரியாகவும் பாடம் நடத்துகிறார். இதுபற்றி அவரிடம் கேளுங்கள் என்று வற்புறுத்தினான். வேறு வழியின்றி துரோணரை சந்தித்த பீஷ்மர் தான் வந்த நோக்கத்தை நாசூக்காகத் தெரிவித்தார். உடனே துரோணர் பிதாமகரே நாளைய தலைமுறை இடையே நான் எந்த வேறுபாடும் காட்டுவதில்லை. அனைவரையும் ஒன்றாகவே எண்ணி போதிக்கிறேன். என்ன தான் மழை பெய்தாலும் பாத்திரத்துக்கு தக்க படி தானே நீர் நிரம்பும். அதற்காக மழையை குற்றம் சாட்ட முடியாது தானே? எனினும் தாங்களே வந்து கேட்டதற்கு நன்றி என்றவர் பீஷ்மரை நீராட அழைத்துச் சென்றார்.

துரோணரும் பீஷ்மரும் முன்னே நடக்க பாண்டவர்களும் கௌரவர்களும் பின்தொடர்ந்தனர். சிறிது தூரம் சென்றதும் அர்ஜுனா எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம் என்றிருக்கிறேன். ஆஸ்ரமம் சென்று எண்ணெய்ப் பாத்திரத்தை எடுத்து வா என்றார் துரோணர். அர்ஜுனன் ஆஸ்ரமம் நோக்கி ஓடினான். இதையடுத்து அனைவரும் பயணத்தைத் தொடர்ந்தனர். வழியில் பெரிய ஆலமரம் ஒன்று இருந்தது அதன் நிழலில் பீஷ்மருடன் சென்று அமர்ந்தார் துரோணர். அர்ஜூனன் வரும்வரை புதிய பாடத்தை சொல்லிக் கொடுக்கப் போகிறேன் என்றவர் மந்திரம் ஒன்றைத் தரையில் எழுதினார். பிறகு இந்த மந்திரத்தை சொல்லி மரத்தின் மீது அம்பு எய்தினால் அந்த அம்பானது மரத்தின் எல்லா இலைகளிலும் துளையிடும் என்றவர் மந்திரத்தை எப்படி உச்சரிக்க வேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்தார். துரியோதனனை அழைத்து இந்த வித்தையை செய்து காட்டுமாறு பணித்தார். துரியோதனன் எழுந்தான் தரையில் இருந்த மந்திரத்தைப் படித்தான். குரு சொல்லிக் கொடுத்தபடி மந்திரத்தை சொல்லி மரத்தை நோக்கி அம்பு எய்தினான். மரத்தில் இருந்த எல்லா இலைகளிலும் துவாரம் விழுந்தது. அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். துரியோதனன் கர்வத்துடன் வந்து அமர்ந்தான். பீஷ்மர் சந்தோஷப்பட்டார். இதையடுத்து சரி நீராடச் செல்வோம் வாருங்கள் என்று கிளம்பினார் துரோணர்.

அர்ஜுனனும் எண்ணெய்க் கிண்ணத்துடன் வந்து சேர்ந்தான். அனைவரும் நதியில் நீராடினர். பிறகு அங்கிருந்து கிளம்பியவர்கள் மீண்டும் அந்த மரத்தடியில் வந்து அமர்ந்தனர். அப்போது நிமிர்ந்து பார்த்தவர்கள் அதிர்ந்து போனார்கள். காரணம் மரத்தின் எல்லா இலைகளிலும் இரண்டாவதாக துளை இருந்தது. பீஷ்மருக்கு குழப்பம். துரோணரே நீராடச் செல்லும்போது துரியோதனன் அம்பெய்தி மர இலைகளில் துளையை உண்டாக்கினான். நீராடிவிட்டு வந்தால் எல்லா இலைகளிலும் இன்னொரு துளை இருக்கிறதே எப்படி? என்றார் வியப்புடன். உடனே மாணவர்கள் பக்கம் திரும்பிய துரோணர் இது யார் செய்த வேலை? என்று கேட்டார். அடியேன் என்று வணங்கி நின்றான் அர்ஜுனன். பீஷ்மர் திகைத்தார். அர்ஜுனனிடம் இந்த வித்தையை துரோணர் கற்றுக் கொடுக்கும்போது நீ இங்கு இல்லை. பிறகெப்படி? என்று ஆச்சரியம் மேலிடக் கேட்டார். தாத்தா எண்ணெய்ப் பாத்திரத்துடன் திரும்பும் போது இந்த மரத்தடியில் காலடிச் சுவடுகள். அதைத்தவிர தரையில் எழுதப்பட்டிருந்த மந்திரத்தையும் கண்டேன். எதற்காக இந்த மந்திரம் என்று யோசித்த வேளையில் மரத்தின் இலைகளில் இருந்த துளைகளைக் கவனித்தேன். இரண்டுக்கும் ஏதோ தொடர்பு உண்டு என்று யூகித்தேன். மந்திரத்தை உச்சரித்து அஸ்திரம் தொடுத்தேன். என் யூகம் பொய்க்கவில்லை. எனது அஸ்திரம் எல்லா இலைகளையும் துளைத்தது என விவரித்தான் அர்ஜுனன். அவனைக் கட்டியணைத்துக் கொண்டார் பீஷ்மர். துரியோதனனுக்கு ஆத்திரம் தாங்கவில்லை. இதென்ன சாதனை? என்று கேலி செய்தான். இதைக் கண்ட துரோணர் துரியோதனா எங்கே மீண்டும் அம்பு எய்தி இலைகளில் துளை உண்டாக்கு என்றார் சிரித்தபடி. துரியோதனன் மந்திரம் எழுதியிருந்த இடத்துக்கு வந்தான். அங்கே மந்திரம் இல்லை. அழிக்கப்பட்டிருந்தது. அதிர்ந்து போனான். தரையில் எழுதப்பட்டிருக்கும் மந்திரத்தை எவரேனும் மிதித்து விடக் கூடாதே என்று மந்திரத்தை மனதில் பதிய வைத்துவிட்டு நான் தான் அழித்து விட்டேன் பவ்வியமாகச் சொன்னான் அர்ஜுனன். மந்திரத்தை மனதில் பதிய வைக்கத் தவறியதால் தலை குனிந்து நின்றான் துரியோதனன்.

பீஷ்மரே இப்போது கூறுங்கள் என் மீது ஏதும் குற்றம் உண்டா? என்று கேட்டார் துரோணர். பிறகு மாணவர்கள் பக்கம் திரும்பிய துரோணர் சீடர்களே பொறாமை ஆத்திரம் அவசரம் கோபம் முதலான தீய குணங்களுக்கு மனதில் இடம் தரவே கூடாது. எதிலும் அலட்சியம் கூடாது. சந்தர்ப்பங்களை சரிவர பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் கோட்டை விட்டவர்கள் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் பிரகாசிக்க முடியாது. பார்க்கின்றவற்றிலெல்லாம் என்ன கற்றுக் கொள்ளலாம் என்று யோசித்து தேடி கற்றுக் கொள்ளுங்கள். வெற்றி பெறுவீர்கள் என்று வாழ்த்தினார். பீஷ்மரும் உண்மையை உணர்ந்து கொண்டு அங்கிருந்து எந்த மனச்சலனமுமின்றி சென்றார்.

பேதம்

ஒரு முறை கிருஷ்ண பகவான் உதங்க முனிவரிடம் என்ன வரம் வேண்டும் கேளுங்கள் என்றார். ஒன்றும் வேண்டாம் என்றார் முனிவர். கிருஷ்ணர் வற்புறுத்தினார். நான் சுற்றிக் கொண்டே இருப்பவன். சில சமயம் தாகத்துக்குத் தண்ணீர் கிடைப்பதில்லை. அதற்கு ஏற்பாடு செய்தால் நல்லது என்றார் உதங்கர். கிருஷ்ணர் அதை ஒப்புக்கொண்டார். அதே சமயம் ஒரு நிபந்தனையும் விதித்தார். தாகம் எடுக்கும்போது என்னை நினைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் கிடைக்கும். ஆனால் நான் எப்படித் தண்ணீரை அனுப்பினாலும் நீங்கள் வாங்கிக் கொள்ள வேண்டும் என்றார் கிருஷ்ணர். உதங்கர் ஒப்புக் கொண்டார். நாட்கள் கடந்தன. உதங்கர் ஒரு முறை பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது அவருக்குத் தாகம் எடுத்தது. பக்கத்தில் தண்ணீர் கிடைக்க வழி இல்லை. அப்போது கிருஷ்ணனை நினைத்தார்.

கிருஷ்ணரின் திருவுள்ளம் தொலை தூரத்தில் இருந்தாலும் உதங்கரின் எண்ணத்தை உணர்ந்த கிருஷ்ணர் உடனே தேவேந்திரனைத் தொடர்புகொண்டார். உதங்கருக்கு தேவாமிர்தம் தரும்படி சொன்னார். தேவேந்திரன் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. மனித ரூபத்தில் உள்ளவர்களுக்கு தேவாமிர்தம் தருவதில்லையே என்றான். கிருஷ்ணரின் வற்புறுத்தலின் பேரில் சம்மதித்தான். ஆனால் என் விருப்பப்படிதான் செல்வேன் என்றான். கிருஷ்ணர் ஒப்புக் கொண்டார். இந்திரன் ஒரு புலையரின் வடிவத்தில் உதங்கரிடம் சென்றான். அழுக்கான உடல் அதைவிட அழுக்கான ஒற்றை ஆடை பஞ்சடைந்த தாடி மீசை கையில் அழுக்குப் பிடித்த ஒரு தகரக் குவளை பக்கத்தில் சொறி பிடித்த நாய். இந்தக் கோலத்தில் சென்றான். உதங்கரிடம் சென்று தகரக் குவளையை நீட்டினான். அருவருப்படைந்த முனிவர் அவனை விரட்டி விட்டார். மாற்றுருவில் வந்த இந்திரன் வற்புறுத்தினான். முனிவர் கேட்கவில்லை. இந்திரன் சென்றுவிட்டான். உதங்கருக்கு மகா கோபம். கிருஷ்ணன் இப்படிச் செய்து விட்டானே என்று வருந்தினார். எப்படியோ சமாளித்துச் சற்றுத் தொலைவில் உள்ள ஊருக்குச் சென்று தாகத்தைத் தணித்துக் கொண்டார்.

கிருஷ்ணரை வேறொரு நாளில் மீண்டும் சந்தித்தார். உதங்கர் முகத்தைத் திருப்பிக் கொண்டார். புன் சிரிப்போடு நெருங்கிய கிருஷ்ணர் என்ன முனிவரே உங்களுக்காக இந்திரனிடம் தேவாமிர்தம் கொடுத்து அனுப்பினேன் நீங்கள் அவனை விரட்டிவிட்டீர்களே என்றார். உதங்கருக்குத் தன் தவறு புரிந்தது. உதாங்கர் பெரிய தவயோகி. ஆனால் ஏன் அவரால் கிருஷ்ணர் அனுப்பிய அமிர்தத்தைக் குடிக்க முடியவில்லை. விஸ்வரூபம் காட்டிய பரந்தாமனே அனுப்பிய நீர் என்றால் யோசிக்காமல் எடுத்துக் குடிக்க வேண்டியதுதானே? அப்படிச் செய்ய விடாமல் உதங்கரைத் தடுத்தது எது? உயிர்களிடத்தில் உயர்வு தாழ்வு பேதம் பார்க்கும் அவரது குணம் காரணம். ஒருவர் எவ்வளவு தவம் செய்கிறார் என்பது முக்கியமல்ல. எவ்வளவு சாஸ்திரங்களைப் படித்துக் கரைத்துக் குடிக்கிறார் என்பதும் முக்கியமல்ல. புறத் தோற்றம் முக்கியமல்ல தோற்றத்துக்குப் பின் என்ன இருக்கிறது என்பதை உணர்வதே முக்கியம். இதைத்தான் கிருஷ்ணர் உதங்கருக்கு உணர்த்தினார். உதங்கர் எவ்வளவுதான் ஞானியாக இருந்தாலும் அவருக்கு மனிதர்களிடத்தில் பேதம் பாராட்டும் தன்மை இருந்தது. தோற்றத்தை வைத்து ஒருவரை எடைபோடும் தன்மை இருந்தது. அது இருக்கும்வரை ஒருவர் கடவுளை நெருங்க முடியாது. ஆகவே தனது மாய விளையாட்டால் இதனை உதாங்க முனிவருக்கு உணர்த்தி அவரது குணத்தை மாற்றினார் கிருஷ்ணர்.

சிந்தித்து பேச வேண்டும்

அஸ்தினாபுரம் அரண்மனை மாடத்தில் இருந்து அஸ்தினாபுரம் நகரைச் சுற்றி பார்த்துக் கொண்டிருந்தாள் திரௌபதி. ஒரு சில ஆண்கள் மட்டுமே காணப்பட்டனர். விதவைகள் அதிகமாக இருந்தனர். அனாதைகள் அங்குமிங்கும் சுற்றித் திரிவதைக் கண்டாள் திரௌபதி. இவை அனைத்திற்கும் தானே காரணம் என்று அவளது மனம் சொல்லியது. அப்போது கிருஷ்ணர் அங்கு வந்தார். அவரைப் பார்த்ததும் அழத் தொடங்கினாள். அவளிடம் என்ன நடந்தது? என்று கேட்டார் கிருஷ்ணர். திரௌபதி அமைதியுடன் இருந்தாள். அவளின் எண்ணத்தை அறிந்த கிருஷ்ணர் பேச ஆரம்பித்தார்.

திரௌபதி விதி மிகவும் கொடூரமானது. நாம் நினைப்பது போல் வேலை செய்யாது. நம்முடைய செயல்கள் பேச்சுகள் சிந்தனைகளுக்கு ஏற்ப அது அதன் போக்கில் அதனுடைய செயல்களைச் செய்கிறது. முடிவுகளையும் மாற்றுகிறது. நீ பழிவாங்க நினைத்தாய் வெற்றி பெற்றாய். துரியோதனனும் துச்சாதனனும் மட்டுமல்ல. அவர்களை சார்ந்திருந்த கௌரவர்கள் அனைவரும் மடிந்து விட்டனர். இப்போது என் வருத்ததுடன் இருக்கிறாய். நீ மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றார். அதற்கு திரௌபதி என் காயங்களைத் ஆற்ற வந்தீர்களா அல்லது அதன்மீது உப்பு தூவ வந்தீர்களா? என்றாள். அதற்கு கிருஷ்ணர் திரௌபதி உண்மை நிலையை உனக்கு உணர்த்தவே வந்துள்ளேன். உனது தொலை நோக்கு பார்வையற்ற செயல்களின் விளைவு என்பதை உணர்த்த வந்தேன் என்றார். இந்தப் போருக்கு நான்தான் முழுப் பொறுப்பா என்று கேட்டாள். இல்லை திரௌபதி நீ மட்டுமே காரணம் என்று கருதாதே. ஆனால் நீயும் ஒரு காரணம் என்றார். உன் செயல்களில் நீ கொஞ்சம் தொலை நோக்கு பார்வையைக் கொண்டிருந்தால் நீ இவ்வளவு துன்பங்களை அனுபவித்திருக்க மாட்டாய் என்றார்.

நான் என்ன செய்திருக்க முடியும் கிருஷ்ணா என்று கேட்டாள். நீ நிறைய செய்திருக்க முடியும். உனது சுயம்வரம் நடந்த போது கர்ணனை அவமானப்படுத்தாமல் போட்டியில் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பளித்திருந்தால் ஒருவேளை முடிவு வேறு ஏதாவதாக இருந்திருக்க கூடும். அதற்குப் பிறகு குந்தி உன்னை ஐந்து கணவர்களுக்கு மனைவியாக்கும்படி கட்டளையிட்டதை அப்போது நீ ஏற்றுக் கொள்ளாமல் இருந்தாலும் முடிவு வேறு விதமாக இருந்திருக்கும். அதற்கு பிறகு உன் அரண்மனையில் பார்வையற்றவரின் மகன்கள் குருடர்கள் என்று துரியோதனனை அவமானப்படுத்தினாய். அவ்வாறு நீ சொல்லாதிருந்திருந்தால் நீ மானபங்கப்பட்டிருக்க மாட்டாய். அப்போதும் ஒருவேளை சூழ்நிலைகள் வேறு விதமாக இருந்திருக்கும். நம் வார்த்தைகள் கூட பல நேரங்களில் பல விளைவுகளுக்கு காரணமாகி விடும் திரௌபதி. பேசுவதற்கு முன் உன் ஒவ்வொரு யோசித்து சிந்தித்து யாருடைய மனமும் காயம் அடைந்து விடுகிறதா என்று பார்த்து பேசுதல் வேண்டும். இல்லையெனில் அதன் தீய விளைவுகள் உன்னை மட்டு மல்ல உனது சுற்றுப் புறத்தையும் மகிழ்ச்சியற்றதாக ஆக்கிவிடும் என்றார். திரௌபதியின் மனம் தனது தவறை சிந்தித்தது. சிறிது ஆறுதல் அடைந்து அமைதியானாள்.

மனிதனின் பற்களில் விஷமில்லை. ஆனால் பேசும் வார்த்தைகளில் விஷம் கக்கும் ஒரே விலங்கு இவ்வுலகில் மனிதன் மட்டுமே. எனவே வார்த்தைகளை அறத்துடன் பயன்படுத்த வேண்டும். யாருடைய மனதையும் புண்படுத்தாதபடி சிந்தித்து பேச வேண்டும். நல்லதை நினைத்து நல்லதை பேசி நல்லதை செய்தால் விதி நல்லதை நடந்திக் கொடுக்கும். இந்த கருத்து மகாபாரதம் கதைக்குள் மறைந்திருக்கிறது.

முரண்பாடான சம்பவங்களும் யுதிஷ்டிரரின் விளக்கமும்

யுதிஷ்டிரரின் நாட்டை ஆட்சி செய்யும் போது நாட்டு மக்களின் பிரச்சனைகளை பீமன் தீர்த்து வைத்தார். எவருக்கேனும் கேள்விகளோ பிரச்சனைகளோ இருந்தால் பீமனிடம் முதலில் உதவி நாடி வந்தனர். ஒரு நாள் விசித்திரமான சம்பவம் ஒன்றை கவனித்ததாக ஒரு மனிதன் கூறினான். அவன் வீட்டு வேலி மற்றொருவனின் பகுதியில் நகர்ந்திருப்பதாகவும் அதற்குக் காரணம் என்னவென்று தெரியவில்லை என்றும் கூறினான். சாதாரணமாக அரக்கர்களின் தொல்லைகளால் அவதிப்பட்ட மக்களை காப்பாற்றுவது பீமனுக்கு அவனது வலிமையினால் சாதாரணமாக இருந்தது. இந்த புதிய சிக்கலான விஷயமாக இருப்பதினால் பீமன் அவனை யுதிஷ்டிரரிடம் செல் என்று கூறினார்.

அதே தினத்தில் இன்னொரு மனிதன் வந்து தன்னுடைய பிரச்சணையை சொன்னான். ஒரு பானை நிறைய தண்ணீர் இருந்தது. அதனை நான்கு சிறிய பானைகளில் நிரப்பினால் நிரம்புகிறது. மீண்டும் நான்கு சிறிய பானை தண்ணீரை பெரிய பானைக்குள் நிரப்பிய போது பாதி அளவு தண்ணீர் மட்டுமே இருந்தது பெரிய பானை நிரம்பவில்லை. இதற்கும் பதில் ஒன்றுமே தெரியாமல் தவித்த பீமன் அம்மனிதனையும் யுதிஷ்டிரரிடம் சென்று கேட்குமாறு அனுப்பினார். மூன்றாவதாக ஒரு மனிதன் மற்றொரு விசித்திரமான சம்பவத்துடன் பீமனிடம் வந்தான். ஒரு யானையின் பெரிய உடம்பு ஊசியின் சிறிய துளை வழியாக செல்கிறது. ஆனால் ஆச்சரியப்படும் வகையில் யானையின் வால் அந்த ஊசியின் துளையில் சிக்கிக் கொண்டு விட்டது என்று அந்த மனிதன் புகார் கூறினான். பீமன் மறுபடியும் அம்மனிதனை யுதிஷ்டிரரிடம் அனுப்பி வைத்தார். நான்காவதாக ஒரு மனிதன் அங்கு வந்து தெருவில் ஒரு பெரிய பாறையைப் பார்த்ததாகக் கூறினான். அப்பாறையை வலிமையுள்ள சில மனிதர்களால் நகர்த்த முடியவில்லை. ஆனால் ஒரு சாது கோல் ஒன்றை அசைத்து அப்பாறையை நகர்த்தினார். இது எப்படி என்று காரணத்தை கேட்டான். இந்த மனிதனையும் யுதிஷ்டிரரிடம் அனுப்பினார் பீமன். இப்போது இந்த நான்கு பிரச்சனைகளுக்கும் விடை தெரிந்துகொள்ள பீமனிடம் ஆர்வம் வந்தது. யுதிஸ்டிரர் என்ன பதில் கொடுக்க போகிறார் என்று தெரிந்து கொள்ள அவைக்கு சென்றார்.

நால்வரும் சேர்ந்து யுதிஷ்டிரரிடம் சென்று இந்த சந்தேகங்களைப் பற்றி விசாரித்தனர். அதற்கு அவர் இந்த சம்பவங்கள் அனைவற்றும் வரப் போகின்ற கலியுகத்தை குறிப்பிடுகின்றன என்று கூறி கீழ்கண்டவாறு விளக்கினார்.

ஒருவனின் வேலி மற்றொருவனின் பகுதியில் நகர்ந்த முதலாவது சம்பவத்தில் மற்றவர்களின் உடைமைகளின் மீது ஆசைப்படுவதை குறிக்கின்றது. மன வேதனைகள் மற்றும் கோபம் போன்ற உணர்வுகளுக்கு வழி வகுத்து மற்றவர்களைப் போல நம்மிடம் இல்லையே என்ற எண்ணங்கள் இருப்பதனால் அதை அடைவதற்கு தகாத வழிகளை தேர்ந்தெடுத்தனர்.

பெரிய பானையிலிருந்து சிறிய பானைகளுக்கு தண்ணீரை ஊற்றி பிறகு சிறிய பானைகளிலிருந்து பெரிய பானைக்கு ஊற்றும் போது பாதி அளவு தண்ணீர் மட்டுமே இருக்கும் இரண்டாவது சம்பவத்தில் தாயானவள் தனது குழந்தைக்கு செலுத்தும் அன்பு கருணையை ஒப்பிடும் போது மகன்கள் பெரியவர்கள் ஆனதும் நால்வரும் சேர்ந்து தாயிடம் காட்டும் அன்பு தாய் காட்டும் அன்பிற்கு நிகரானதாக இல்லை. கலியுகத்தில் தாய் கொடுக்கும் அன்பு குழந்தைகளை நிரப்புகிறது. குழந்தைகளை காட்டும் அன்பு தாயின் அன்புக்கு நிகரானதாக இல்லை.

ஒரு யானையின் பெரிய உடம்பு ஊசியின் சிறிய துளை வழியாக செல்கிறது ஆனால் ஆச்சரியப்படும் வகையில் யானையின் வால் அந்த ஊசியின் துளையில் சிக்கிக் கொண்டு விடுகிறது என்ற மூன்றாவது சம்பவத்தில் மனிதர்கள் தங்களின் வருமானம் வலிமை வளம் போன்றவற்றை குடும்பம் நண்பர்கள் மற்றும் தனிப்பட்ட விருப்பங்களுக்காக யானையின் உடம்பின் அளவிற்கு செலவழிக்க தயாராக இருக்கின்றனர். ஆனால் கடவுளுக்கோ கடவுளின் சேவைகளுக்கோ தான தர்மத்திற்கோ யானையின் வாலலவு கூட செலவழிக்க மனம் வருவதில்லை என்றார்.

ஒரு பெரிய பாறையை வலிமை மிகுந்த மனிதர்களால் நகர்த்த முடியாத நிலைமையில் ஒரு சாது தன் கோலால் சுலபமாக நகர்த்தி விட்டார். இந்த சம்பவம் எவ்வளவு வலிமையான வினைகள் ஆனாலும் நாம சங்கீர்த்தனத்தின் மகிமையால் பாவங்களை நிவர்த்தி செய்ய முடியும் என்பதைக் குறிக்கின்றது என்றார்.

யுதிஷ்டிரரின் இந்த பதிலைக் கேட்ட நால்வரும் பீமனும் திருப்தியுடன் திரும்பினார்கள்.

அனுமனுடன் பீமன்

பாண்டவ சகோதரர்கள் அவர்களின் மனைவி திரௌபதியும் வன வாசத்தின் போது பத்ரிகாஷ்ரமத்திற்கு வந்தனர். ஐவரில் பலசாலியான பீமனும் திரௌபதியும் புனிதமான இடமாகக் கருதப்படும் பத்ரிகாஷ்ரம வனத்தில் நடமாடும் போது ​​திரௌபதியின் பாதங்களுக்கு அருகில் விண்ணுலகப் பூவான சௌகந்திகா என்ற அழகிய மணம் மிக்க மலர் விழுந்தது. அதன் அழகு மற்றும் நறுமணத்தால் வசீகரிக்கப்பட்ட திரௌபதி அந்த மலரை இன்னும் அதிகமாக விரும்பினாள். இதனால் பீமன் மலரைத் தேடிப் புறப்பட்டார். அவனுக்கு உதவி செய்ய அனுமன் எண்ணினார். இமயமலைச் சாரலை அடைந்து அங்கு பீமன் வரும் வழியில் பாதையை அடைத்தவாறு படுத்துக் கிடந்தார். வேகமாக வந்து கொண்டிருந்த பீமன் வழியில் வாலை நீட்டியவாறு படுத்திருந்த அனுமனை தள்ளிப் படுக்குமாறு கூறினான். அனுமன் முடியாது என்று கூற இருவருக்கும் வாக்குவாதம் வளர்ந்தது. அனுமன் பீமனைப் பார்த்து நீயே என் வாலை இழுத்து அப்பாற் தள்ளிவிட்டுச் செல் என்றார். பீமன் அவரது வாலை அலட்சியமாக தள்ளினான். ஆனால் ஆஞ்சநேயருடைய வால் கல்போல் கனத்தது. பீமனால் அதை அசைக்கக்கூட முடியவில்லை. பீமன் பிரமித்தான். தான் ஆணவத்தோடு செய்த செயலை நினைத்து தலைகுனிந்தான்.

பீமா நான் உன் அண்ணன் ஆஞ்சநேயன் என்று அனுமன் கூறியதும் பீமன் மகிழ்ந்து அவரை அணைத்தான். பின்னர் ஆஞ்சநேயர் இமயமலையில் உள்ள கந்தமாதன மலை வந்தடைந்தார்கள். அங்கு சௌகந்திகா மலர் நிறைந்த குளத்தைக் காட்டினார் அனுமன். அந்த தோட்டமும் குளமும் செல்வத்தின் அதிபதியான குபேரனுடையது. இதை மணிமான் மற்றும் க்ரோதவாஷா என்ற அரக்கர்கள் பாதுகாத்தனர். கடுமையான போருக்குப் பிறகு பீமன் காவலர்களை வெற்றி பெற்று சௌகந்திகா மலருடன் திரௌபதியிருக்கும் இடம் வந்து சேர்ந்தான்.

இடம்: சித்தேஸ்வரர் கோவில் ஹவேரி மாவட்டம் கர்நாடக மாநிலம். இன்னோரு சிற்பம் வைகுண்டநாதர் கோயில் திருக்குறுங்குடி.

தர்மம்

மகாபாரத யுத்தத்தின் முடிவில் பாண்டவர்கள் வெற்றி பெற்று முழு பாரத காண்டத்தின் சக்ரவர்த்தியாக யுதிஷ்டிரர் முடிசூட்டப்பட்டார். பேரரசராக இருந்த யுதிஷ்டிரரை மகரிஷி வேத வியாசர் இமயமலையின் தொலைதூர பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு மறைந்திருந்த பெரும் செல்வத்தை அவர்களுக்கு வழங்கினார். அஸ்வமேத யாகங்களில் மிகப் பெரிய யாகத்தை ஒவ்வொரு பாண்டவரும் மூன்று வருடங்களாக தொடர்ந்து பதினைந்து வருடங்களாக யாகம் செய்தார்கள். தேவதைகளும் ரிஷிகளும் பித்ருக்களும் மனிதர்களும் யாகத்தின் பலனைப் பெற்று திருப்தி அடைந்தார்கள். தர்மம் முழு மகிமையுடன் பூமியில் செழித்திருந்தது.

பஞ்ச பாண்டவர்கள் ஐவரும் தனது அரண்மனைக்கு முன்னால் ஒரு பெரிய மேளம் ஒரு மகாபேரி என்ற மேளத்தை நிறுவி எந்த தேவையாக இருந்தாலும் இங்கு வந்து இந்த மேளத்தை அடித்து தன் விருப்பத்தைத் தெரிவிக்கலாம். எங்களால் முடிந்தவரை அதை நிறைவேற்றுகிறோம் என்று தங்களது குடிமக்களுக்கு அறிவித்தார்கள். இதை அறிந்த ஒரு முதிய பிராமணர் சிறிது பொருள் வேண்டி தலைநகரை நோக்கிச் சென்றார். நீண்ட தூரம் பயணித்த அவர் யுதிஷ்டிரனின் அரண்மனையை இரவில் அடைந்தார். மிகுந்த ஆவலுடன் மேளத்தை அடிக்க ஆரம்பித்தார் பிராமணர். உறக்கம் கலைந்த யுதிஷ்டிரன் படுக்கையில் இருந்து எழுந்து யாரோ தனது தேவைக்காக தன்னை அழைப்பதை உணர்ந்தார். மேளம் அடிப்பது எதற்காக என்று விசாரிக்க சில காவலர்களை அனுப்பினார். விரைவில் காவலர்கள் யுதிஷ்டிரரிடம் திரும்பி ஒரு முதியவர் தனிப்பட்ட தேவைக்காக செல்வத்தைப் பெற வந்திருப்பதாக கூறினார்கள். யுதிஷ்டிரர் அதிக தூக்கத்தில் இருந்ததால் நடுஇரவு ஆகி விட்டபடியால் காலையில் அவரது கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படும் என்று பிராமணரிடம் உறுதியளித்து காலையில் வரச் சொல்லி பிராமணரை திருப்பி அனுப்புமாறு காவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

யுதிஷ்டிரரின் செய்தியைக் கேட்ட பிராமணர் ஏமாற்றமடைந்து பீமனின் அரண்மனை முன்பாக இருந்த மேளத்தை அடிக்க ஆரம்பித்தார். பீமன் உடனே வெளியே வந்து அந்த முதிய பிராமணருக்கு என்ன வேண்டும் என்று கேட்டான். யுதிஷ்டிரரின் அரண்மனை முன்பாக நடந்தவற்றை சொல்லி தனது கோரிக்கையை முன்வைத்தார் பிராமணர். அவருடைய கோரிக்கையைக் கேட்ட பீமன் தற்போது இரவு வெகு நேரமாகி விட்டது. இப்போது கருவூலம் திறந்திருக்காது. உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற காலை வரை காத்திருக்க முடியாது. எனவே இதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று தனது விலையுயர்ந்த தங்க காப்பை கழற்றி பிராமணரிடம் ஒப்படைத்தார். விலையுயர்ந்த ரத்தினங்கள் பதிக்கப்பட்ட அந்தத் தங்கக் காப்பைக் கண்ட பிராமணன் மிகவும் மகிழ்ச்சியடைந்து தன் கிராமத்திற்குத் திரும்பினார்.

பீமசேனன் யுதிஷ்டிரனின் அரண்மனையை நோக்கிச் சென்றான். அங்கு சென்றதும் இடைவிடாமல் மகாபேரி மேளத்தை அடிக்க ஆரம்பித்தார். விண்ணை முட்டும் அளவு சத்தத்தைக் கேட்ட யுதிஷ்டிரர் ஏதோ அசம்பாவிதம் நடந்திருப்பதை உணர்ந்து உடனடியாக மேளம் இருக்கும் இடத்திற்கு வந்தார். அங்கு பீமன் மேளத்தை அடிப்பதை பார்த்ததும் ஆச்சரியமடைந்து பீமனிடம் காரணத்தை கேட்டார். ஒரு முதிய பிராமணர் தங்களிடம் உதவி நாடி வந்தார். நாளை காலை திரும்பி வரும்படி கூறினீர்கள். அடுத்த நாள் உயிருடன் இருப்போம் என்று அறிந்த ஒரு மனிதனால் மட்டுமே அவ்வாறு கூற முடியும். தன் தர்மத்தையே ஒரு நாள் தள்ளிப் போட்டீர்கள். அப்படியானால் நீங்கள் நாளை வரை இருப்பீர்கள் என்று அறிந்து கொள்ளும் ஞானத்தை பெற்று விட்டீர்கள் என்று பொருளாகிறது. என் அண்ணன் இப்படிப்பட்ட மிகப்பெரிய ஞானியாக இருக்கிறாரே என்ற மகிழ்ச்சியில் மூழ்கியிருக்கிறேன். அதனால் நான் இந்த மேளத்தை அடிக்கிறேன் என்றான். காரணத்தைக் கேட்ட யுதிஷ்டிரர் குற்ற உணர்வில் ஆழ்ந்தார். தான் எவ்வளவு பெரிய தவறு செய்தேன் என்பதை உணர்ந்தார். பீமனை தழுவிக் கொண்டு நன்றி தெரிவித்ததோடு தர்ம காரியத்தைத் தள்ளிப் போடும் தவறை இனி ஒருபோதும் செய்ய மாட்டேன் என்றார். பீமன் தன் சகோதரனை ஆறுதல்படுத்தி எனது நோக்கம் உங்களை குறை சொல்ல வேண்டும் என்பதற்காக அல்ல. தர்மம் செய்யும் போது ​​ஒருபோதும் தாமதம் இருக்கக் கூடாது என்பதற்காக இதனை செய்தேன் என்று புன்னகை செய்தான். பீமனின் உபதேசத்தால் விழித்துக் கொண்ட யுதிஷ்டிரர் அன்றிலிருந்து தர்மப் பாதையிலிருந்து விலகாமல் இருந்து தர்மராஜா ஆனார்.

பீமனின் மானசீக பூஜை

அர்ஜூனன் இறைவனுக்கு பூஜைகளை தவறாமல் செய்பவன். தினமும் பூஜை செய்து முடியும் வரையில் சிறிது உணவையும் உண்ண மாட்டான். இதனால் உலகத்தில் தன்னை விடச் சிறந்த பக்தர் யாரும் இல்லை என்று அகந்தை கொண்டிருந்தான். பீமனைப் பார்க்கும் போதேல்லாம் இவன் பூஜைகள் எதுவும் செய்வதில்லை. எந்நேரமும் தூங்குவதிலும் உணவு உண்பதிலும் ஆர்வம் காட்டுகிறான் என்று எண்ணி நகைப்பான் அர்ஜூனன். இதனை அறிந்த கிருஷ்ணர் அர்ஜுனனிடம் இந்த அகந்தை போக்க எண்ணி சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார். பாரதப் போரில் தாங்கள் வெற்றி பெற வேண்டும் என நினைத்த அர்ஜுனன் அதற்கு வழி காட்டுமாறு கிருஷ்ணனை கேட்டுக் கொண்டான். சிவபெருமானை சந்தித்து அவரின் ஆசி பெற்று வரலாம் வா என்று அர்ஜூனனை கயிலை மலைக்கு அழைத்துச் சென்றார் கிருஷ்ணர். பனியால் மூடப்பட்டிருந்த கயிலை மலைப் பகுதியில் புல் பூண்டு கூட முளைப்பது இல்லை. ஆனால் அந்த வழியெங்கும் மலர்கள் குவிந்த வண்ணமே இருந்தன.

சிவ கணங்கள் குவியும் மலர்களை அப்புறப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். ஒருமுறை அப்புறப்படுத்தப்பட்ட இடத்தில் மறுகணமே மலர்கள் குவிந்து கொண்டிருந்தது. மலர்களை அள்ளி அள்ளி அப்புறப்படுத்திக் கொண்டு இருந்தார்கள் சிவகணங்கள். இக்காட்சியைக் கண்ட அர்ஜுனன் கிருஷ்ணரிடம் பனி மூடிய பகுதியில் மலர்கள் மலர இயலாது. ஆனால் மலர்கள் மலை போல் இங்கு குவிந்து கொண்டே இருக்கின்றன. மலர்கள் தானாக எப்படி இங்கு வர இயலும்?இக்காட்சி வியப்பாக உள்ளது. இது எப்படி என்று கேள்வி கேட்டான். அதற்கு கிருஷ்ணர் இம்மலர்கள் இங்கு பூப்பவை அல்ல. பக்தன் ஒருவன் பூக்களை வைத்து இறைவனுக்கு பூஜிக்கிறான். அங்கு சமர்ப்பிக்கும் பூக்கள் அனைத்தும் இங்கு மலை போல் குவிக்கின்றன என்றார். அதற்கு அர்ஜூனன் ஒரு மனிதன் சில நிமிடங்களில் மலை போல் குவியும் இவ்வளவு பூக்களை எப்படி இறைவனுக்கு சமர்ப்பித்து வழிபட இயலும். நானும் தினமும் பூஜை செய்கிறேன். யாராலும் இவ்வளவு பூக்களை வைத்து பூஜை செய்வது என்பது இயலாத காரியம் எப்படி இது சாத்தியம். யார் அந்த பக்தன் என்று மீண்டும் கேள்வி கேட்டான்.

பீமன் இறைவனுக்கு அர்ச்சனை செய்த மலர்கள் தான் இவை அனைத்தும். பீமன் இறைவனுக்கு அர்ச்சனை செய்ய செய்ய இங்கு மலர்கள் குவிக்கின்றன என்றார் கிருஷ்ணர். பீமன் இறைவனுக்கு அர்ச்சனை செய்கிறானா? அவனுக்கு அர்ச்சனை செய்ய நேரம் ஏது? உணவு உண்ணவே நேரம் போதவில்லை. அப்படியிருக்கும் போது அவன் எப்போது அர்ச்சனை செய்தான்? அப்படியே அர்ச்சனை செய்தாலும் அதை ஒரு நாளும் நான் பார்த்ததில்லை. நான் மட்டும் இல்லை யாருமே பார்த்தது இல்லை. இப்படியிருக்க நீ கூறுவதை எப்படி நம்புவது? என்றான் அர்ஜூனன்.

அர்ஜுனா பீமன் அர்ச்சனை செய்வதை யாரும் பார்க்கவில்லை. பார்க்கவும் முடியாது. ஏனெனில் அவன் உன்னைப் போல் மற்றவர்களைப் போல இறைவனின் உருவத்தை வைத்துக் கொண்டு மந்திரங்கள் ஓதி மலர்கள் தூவி அர்ச்சனை செய்வதில்லை. அவன் செய்யும் பூஜைகள் அர்ச்சனைகள் அனைத்தும் மானசீகமானது. அவன் மனதிற்குள்ளேயே செய்கிறான். அவன் எங்காவது சென்று கொண்டு இருக்கும் போது கண்ணில் பட்ட மலர்களைப் பார்த்து இவை தெய்வ அருச்சனைக்கு உரியவை ஆகட்டும் என்று மனத்தால் நினைப்பான். உடனே அந்த மலர்கள் அனைத்தும் இங்கே வந்து மலை மலையாகக் குவிந்து விடும். மற்றவர்கள் நினைப்பது போல் பீமன் சாப்பிட்டுக் கொண்டிருப்பவன் அல்ல. சிறந்த தெய்வ பக்தன். ஆஞ்சனேயர் அம்சம். ஆஞ்சனேயரின் ராம பக்தி உலகறிந்தது. பக்தியில் பீமனோடு உன்னை ஒப்பிடும் போது நீ பக்தனே அல்ல. சிறந்த பக்தனான பீமனை நீ அடிக்கடி ஏளனம் செய்வதை நான் அறிவேன். இனியாவது ஏளனம் செய்வதை விட்டு விடு. நீ தான் சிறந்த பக்தன் என்ற அகந்தை உன்னிடம் உள்ளது. இறை பக்திக்குப் பெரும் தடையாக இருப்பது உன்னுடைய அகந்தை. உன்னுடைய அகந்தையை விட்டுவிடு என்றார். கிருஷ்ணரின் உபதேசத்தால் அர்ஜுனனிடம் இருந்த அகந்தை என்ற அரக்கன் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனது. அர்ஜூனன் அன்று முதல் பீமனிடம் மிக்க பணிவுடன் நடந்து கொண்டான்.

பீமனின் பக்தி

பாண்டவர்கள் வனவாசத்தில் காட்டில் வாழ்ந்து வந்தார்கள். இக்காலத்தில் தியானம் ஜெபம் பூஜைகள் என்று பயனுள்ளதாக கழித்தார்கள். குந்திதேவி பாஞ்சாலி பஞ்ச பாண்டவர்கள் அனைவரும் தினமும் பிரார்த்தனையில் ஈடுபட்டார்கள். அதில் பீமன் மட்டும் எப்போதும் தாமதமாகவே படுக்கையிலிருந்து எழுவான். இதனால் அவன் பிரார்த்தனையில் இறுதியாகவே வந்து கலந்து கொள்வான். ஒரு நாள் நீ யானை போல் பலசாலிதான் ஆனாலும் பிரார்த்தனையில் ஈடுபடும் எண்ணமே இல்லாமல் இருக்கிறாயே. உனக்கு ஏன் பக்தி இல்லாமல் போயிற்று என்று கடிந்தார் தருமர். இதன் பிறகாவது நேரத்திற்கு எழுந்து பிரார்தனையில் கலந்து கொள்வான் என்று எண்ணினார் தருமர். ஆனாலும் வழக்கம் போல தாமதமாகவே பீமன் படுக்கையிலிருந்து எழுந்தான்.

ஒரு நாள் கிருஷ்ணரை விருந்துக்கு அழைக்க எண்ணி நகுலனை கிருஷ்ணரிடம் அனுப்பி வைத்தார் தர்மர். நகுலன் திரும்பி வந்து நாளை கிருஷ்ணருக்கு வேறு வேலை இருக்கிறதாம். வேறு நாள் வருவதாக சொல்லிவிட்டார் என்று கூறினான். நீங்களெல்லாம் கூப்பிட்டால் கிருஷ்ணன் வரமாட்டார். நான் போய் அழைத்து வருகிறேன் பாருங்கள் என்று கூறியவாறு அர்ஜூனன் நம்பிக்கையுடன் சென்றான். கிருஷ்ணரிடம் நாளை விருந்துக்கு வரும்படி அழைப்பு விடுத்தான். நாளை எனக்கு வேறு வேலை இருக்கிறதே என்றார் கிருஷ்ணர். மனம் சோர்ந்தவனாக அர்ஜூனன் திரும்பினான். அர்ஜூனன் அழைத்தும் கிருஷ்ணர் வேறு வேலை இருப்பதாகக் கூறி மறுத்து விட்டாரே என்று அனைவரும் அடுத்த நாள் காலையில் பூஜையில் முக வாட்டத்துடன் இருந்தனர். வழக்கம் போல தாமதமாகவே படுக்கையிலிருந்து எழுந்த வந்த பீமன் அனைவரின் முகமும் வாட்டமாக இருப்பதைக் கண்டு ஏன் கவலையுடன் இருக்கிறீர்கள்? என்று கேட்டான். அப்பொழுது தருமர் கிருஷ்ணரை இன்று விருந்துக்கு அழைத்திருந்தோம். அவருக்கு வேறு வேலை இருப்பதாகக் கூறி மறுத்து விட்டார் என்றார். நான் போய் கிருஷ்ணரை அழைத்து வருகிறேன் என்றான் பீமன்.

அப்போது அர்ஜூனன் நான் போய் அழைத்து வர முடியாத கிருஷ்ணர் நீ கூப்பிட்டதும் வந்து விடுவாரா? என்று கிண்டல் செய்தான். பீமன் தனது கதையை (தண்டாயுதம்) தூக்கிக் கொண்டு புறப்பட்டான். போகும் போது பாஞ்சாலி நீ விருந்து தயார் செய். கிருஷ்ணனுக்கு வெள்ளித் தட்டில் சாப்பாடு எடுத்து வை என்று கூறிவிட்டுச் சென்றான். சிறிது தூரம் போனபின் தன் கதையை வானத்தை நோக்கி வீசி எறிந்தான். கிருஷ்ணா என்னுடைய பக்தி உண்மையாக இருந்தால் நீ விருந்துக்கு வர வரவேண்டும். வராவிட்டால் நான் வீசிய கதை என் தலைமேல் விழுந்து நான் என் உயிரை விடுவேன் என்று உரக்கக் கத்தினான். உடனடியாக கிருஷ்ணர் தோன்றி பீமனின் தலைக்கு மேலாக வந்து கொண்டிருந்த கதையை சட்டென்று பிடித்துக் கொண்டார். பீமனின் பக்தி அழைப்பினை ஏற்று அவனோடு விருந்திற்கு வர சம்மதித்தார். பீமனோடு கிருஷ்ணர் வருவதைக் கண்டதும் கேலி செய்தவர்கள் தலை குனிந்தனர்.

பீமனின் பக்திதான் சிறந்தது என்று நிரூபணம் ஆனது. பீமன் தனது பக்தியை தம்பட்டம் அடித்துக் கொள்வதில்லை என்பதை உணர்ந்தான் அர்ஜூனன். தினமும் பிரார்த்தனையில் கலந்து கொள்ளாத போதிலும் பீமனின் மனம் தூய்மையாகவும் தன்னலம் அற்றதாகவும் பக்தியுடனும் இருந்தது.

சௌகந்திகா மலர்

பாண்டவ சகோதரர்கள் அவர்களின் மனைவி திரௌபதியும் வன வாசத்தின் போது பத்ரிகாஷ்ரமத்திற்கு வந்தனர். ஐவரில் பலசாலியான பீமனும் திரௌபதியும் புனிதமான இடமாகக் கருதப்படும் பத்ரிகாஷ்ரம வனத்தில் நடமாடும் போது ​​திரௌபதியின் பாதங்களுக்கு அருகில் விண்ணுலகப் பூவான சௌகந்திகா என்ற அழகிய மணம் மிக்க மலர் விழுந்தது. அதன் அழகு மற்றும் நறுமணத்தால் வசீகரிக்கப்பட்ட திரௌபதி அந்த மலரை இன்னும் அதிகமாக விரும்பினாள். இதனால் பீமன் மலரைத் தேடிப் புறப்பட்டார். காட்டு மிருகங்கள் மற்றும் அசுரர்களுடன் பல சாகச நிகழ்வுகளுக்குப் பிறகு பீமன் கந்தமாதன மலையை வந்தடைந்தார். அங்கு சௌகந்திகா மலர் நிறைந்த குளத்தைக் கண்டார். அந்த தோட்டமும் குளமும் செல்வத்தின் அதிபதியான குபேரனுடையது. இதை மணிமான் மற்றும் க்ரோதவாஷா என்ற அரக்கர்கள் பாதுகாத்தனர். கடுமையான போருக்குப் பிறகு பீமன் காவலர்களை வெற்றி பெற்று சௌகந்திகா மலருடன் திரௌபதியிடம் திரும்புகிறான்.

ஹம்பியில் உள்ள பீமனின் நுழைவாயிலின் அடிவாரத்தில் திரௌபதி விரும்பிய விண்ணுலகப் பூவான சௌகந்திகாவுடன் பீமன் திரும்பும் சிற்பம் உள்ளது.