கலிபுருஷன்

பரீட்சித்து அரசன் மத்சய நாட்டு இளவரசி உத்தரைக்கும் அபிமன்யுவிற்கும் பிறந்தவன். குருச்ஷேத்திரப் போரில் கௌரவர்களால் அபிமன்யு கொடூரமாக கொலையுண்ட போது பரிட்சித்து உத்திரையின் கர்ப்பத்தில் இருந்தவன். குருச்சேத்திரப் போர் முடிந்த நாளில் அசுவத்தாமன் பிரம்மாஸ்வரத்தை ஏவி உத்தரையின் கருவிலுள்ள குழந்தையையும் கொல்ல முற்படும்போது கிருஷ்ணர் பரீட்சித்தை காப்பாற்றுகிறார்.

கிருஷ்ணரும் பாண்டவர்களும் கலியுகம் ஆரம்பிக்க போகிறது ஆகவே உலகைவிட்டு செல்ல முடிவெடுத்து பரீட்சித்துவை அரசனாக்கிவிட்டு செல்கின்றனர். குரு நாட்டின் அரசாட்சியை ஏற்கும் பரீட்சித்து கிருபரின் வழிகாட்டுதலில் நல்லாட்சி புரிகிறான். பரீட்சித்து மகாராசா தன் நாட்டை சுற்றிப்பார்த்து வரும்போது ஒரு இடத்தில் மூன்று கால்களை இழந்து ஒற்றைக்காலில் நிற்கும் ஒரு காளையையும் அருகில் கண்ணீர் விட்டுக்கொண்டு நிற்கும் பசுவையும் இவைகளின் அருகே சாட்டையுடன் ஒருவன் நின்று காளையை அடிப்பதையும் காண்கிறான்.

மூன்று காலை இழந்து நிற்கும் காளை தர்மதேவதை. கிருதயுகத்தில் தர்மதேவதையான இந்த காளைக்கு நான்கு கால்கள். திரேதாயுகத்தில் தர்மம் குறைந்ததால் ஒரு கால் குறைந்து கால்கள் மூன்றானது. துவாபரயுகத்தில் மற்றொரு காலை இழந்தது. கலியுகத்தில் கலிபுருஷனிடம் அதர்மம் கூடியிருந்ததால் இன்னொரு காலையும் இழந்து ஒற்றைக் காலில் நிற்கிறது தர்மதேவதை. அருகே நிற்கும் பசு தான் பூமாதேவி. கலிபுருஷனின் அதர்ம ஆதிக்கத்தைக் கண்டு கண்ணீர் விடுகிறாள் பூமித்தாய். தர்மதேவதையோ மனிதர்களைக் காப்பதற்காக உருவெடுத்து வந்துள்ளது. ஆனால் மனிதர்களோ தர்மத்தை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கிறார்கள். இதனால் காளையின் மூன்று கால்கள் இல்லாமல் போய்விட்டன. சாட்டையுடன் காளையின் அருகில் நின்று காளையை மிரட்டி அடித்துக் கொண்டிருப்பவன் தான் கலிபுருஷன். தர்மத்தையே மிரட்டும் வலிமை கொண்டு அதர்மத்தை ஆட்சிபுரிய அனுமதித்தவன் தான் இந்த கலிபுருஷன். பரீட்சித்து மகாராஜாவுக்குப் புரிந்து விட்டது. எதிரே நிற்பவன் கலிபுருஷன்.

கிருஷ்ணர் மறைந்தவுடன் நிலவுலகில் அதர்மத்தை நிலைநாட்ட கலிபுருசன் அடி எடுத்து வைத்துவிட்டான். உடனே தனது வாளை எடுத்து நான் இருக்கும் வரையில் தர்மம் அடிபடுவதை அனுமதிக்கமாட்டேன் என்று கூறி கலிபுருசனை வெட்ட தயாராகிறான் பரீட்சித்து. கலிபுருஷன் அஞ்சுகிறான். பாண்டவர் வம்சத்தில் வந்தவன் இந்த பரீட்சித்து அவனை வெற்றி பெற இயலாது. கலிபுருஷன் பரீட்சித்து மகாராஜாவிடம் சரணடைகிறான். சரணடைந்தவனைக் காப்பது முறை. எனவே கொல்லாமல் விடுகிறான் பரீட்சித்து. இந்த நிலவுலகில் ஏதாவது ஓர் இடத்தைக் காண்பியுங்கள் நான் அங்கே போய் பிழைத்துக் கொள்கிறேன் என்று கலிபுருஷன் பரீட்சித்துவிடம் கெஞ்சுகிறான். பரீட்சித்து மகராஜா கலிபுருசனுக்கு நான்கு இடங்களை ஒதுக்கீடு செய்து கொடுக்கிறார்.

  1. சூதாட்டம் ஆடும் இடம்
  2. மது அருந்தும் இடம்
  3. பெண்களை அவமரியாதை செய்யும் இடம்
  4. பிராணிகளை வதை செய்யும் இடம்

கலிபுருஷனுக்கு மனம் திருப்தி அடையவில்லை. இந்த இடம் போதவில்லை என்று கூறி மேலும் சில இடங்கள் கேட்கிறான். பரீட்சித்து மகராஜா மேலும் நான்கு இடங்களை கொடுக்கிறார்.

  1. தங்கம் இருக்கும் இடம்
  2. பொய் பேசப்படும் இடம்
  3. ஆணவம் செருக்கு இருக்கும் இடம்
  4. காமம் கோபம் இருக்கும் இடம்

கலிபுருஷனுக்கு மனம் திருப்தி அடையவில்லை. இந்த இடம் போதவில்லை என்று கூறி மேலும் சில இடங்கள் கேட்கிறான். பரீட்சித்து மகராஜா மேலும் இரண்டு இடங்களை கொடுக்கிறார்.

  1. பேராசை இருக்கும் இடம்
  2. பகைமை இருக்கும் இடம்

திருப்தி அடைந்த கலி நான் இருக்கும் இந்த 10 இடங்களில் உங்களுடைய மக்கள் யாரும் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். யாரையும் ஒன்றும் செய்ய மாட்டேன் என்று உத்திரவாதம் கொடுத்து உலகத்தில் கலியுகத்தை ஆரம்பிக்கின்றார் கலிபுருசன்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.