திரௌபதியின் கர்வம்

பஞ்ச பாண்டவர்களின் மனைவி திரௌபதிக்கு கிருஷ்ணரின் மீது கொண்ட பக்தியில் தன்னை மிஞ்ச உலகில் வேறு ஆளில்லை என்று கர்வம் இருந்தது. இதை கவனித்த கிருஷ்ணர் திரௌபதியின் இந்த கர்வத்தை அகற்ற எண்ணம் கொண்டார். ஒரு நாள் காட்டில் இருந்த திரௌபதியை பார்க்க வந்தார். கிருஷ்ணரை கண்ட திரௌபதைக்கு மிக்க மகிழ்ச்சி. அவள் கிருஷ்ணரிடம் அண்ணா நீங்கள் துவாரகையில் இருந்து எப்படி வந்தீர்கள்? தேர் குதிரை பல்லக்கு என எதையும் இக்காட்டில் காணவில்லையே? என்றாள். அதற்கு கிருஷ்ணர் தங்கையே மனம் உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலால் உந்தித் தள்ளியது. அதனால் நடந்தே உன்னை காண இங்கே வந்து விட்டேன் என்றார். அதைக்கேட்டு திரௌபதையின் கண்களில் கண்ணீர் அரும்பியது. அண்ணா என்னை காண உங்கள் பொற்பாதம் வலிக்க நடந்தே வந்தீர்களா? அவை எந்தளவுக்கு வலிக்கும். நான் வெந்நீர் போட்டுத் தருகிறேன். நீராடுங்கள் தங்களின் உடல் களைப்பு நீங்கும் நடந்த கால்களுக்கும் இதமாக இருக்கும் என்றாள். கிருஷ்ணரும் சிரித்து கொண்டே தலையாட்டினார்.

திரௌபதியின் வேண்டுதலை ஏற்று பீமன் ஒரு பெரிய கொப்பறையை வெந்நீர் போட தூக்கி வந்தான். அருகே ஓடிய ஆற்றில் கொப்பறையில் தண்ணீர் எடுத்தான். மூன்று பெரிய பாறைகளை உருட்டி வந்தான அதையே அடுப்பாக்கி கொப்பறையைத் தூக்கி வைத்தான். ஒரு காய்ந்து போன மரத்தையே ஒடித்து வந்து தீப்பற்ற வைத்தான். தீ ஜூவாலை விட்டு எரிந்தது. நீண்ட நேரம் ஆகியும் கொப்பறை தண்ணீர் துளிகூட சுடவில்லை. கிருஷ்ணர் திரௌபதியிடம் மதியம் ஆகிறது வயிறும் ஆகாரம் கேட்கிறது. தீர்த்தமாட வெந்நீர் கொடுக்கிறேன் என்றாய் என்னாச்சு? என்று கேட்டார். அதற்கு திரௌபதி கண்கலங்கியவாறே அண்ணா என்ன சோதனையோ தெரியவில்லை. கொப்பறையின் நீர் துளிக்கூட கொதிக்கவில்லை. மாறாக ரொம்பவும் குளிர்ந்திருக்கிறது என்றாள். கிருஷ்ணர் பீமனிடம் பீமா அந்த கொப்பரை தண்ணீரை கீழே கொட்டு என்றார் பீமனும் கிருஷ்ணரின் ஆணைக்கிணங்கி நீர் நிறைந்த கொப்பறையை கீழே கவிழ்த்தார். கொப்பறையின் உள்ளிருந்து ஒரு குட்டி தவளை தாவி ஓடியது. கிருஷ்ணர் திரௌபதியிடம் தீ ஜுவாலை கொழுந்து விட்டு எரிந்தும் அந்த நீர் குளிர்ச்சியாக இருக்க காரணம் இதுதான். அந்த தவளை சுடுநீரில் சிக்கி மாண்டு விடாமல் இருக்க என்னை பிரார்த்தித்து கொண்டே இருந்தது. பிரார்த்தனையை ஏற்று அதைக் காப்பாற்றவே கொப்பறை நீரை குளிர்ச்சியாக இருக்க செய்தேன். கொப்பறை நீர் கொதிக்கவில்லை என்று இப்போது புரிகிறதா? ஒரு குட்டி தவளையின் சரணாகதி பிரார்த்தனை கூட எனக்கு எவ்வளவு பெரியதென்று பார்த்தாயா? என்றார்.

திரௌபதிக்கு நெஞ்சில் சுரீரென உரைத்தது. கிருஷ்ணரிடம் நான் கொண்ட என் பக்தியே உயர்ந்ததென நினைத்தேனே இப்போது இந்த தவளையின் பக்தி அல்லவா உயர்ந்ததாக காண்பித்து விட்டான். ஒரு தவளை கிருஷ்ணர் மீது கொண்ட பக்தியின் காரணமாக கொழுந்து விட்டு எரிந்த தீயிலிருந்து உயிர் பிழைத்து ஓடுகிறது. அதன் பக்தியை மிஞ்சி என் பக்தி எப்படி உயர்ந்ததாக முடியும் என்று எண்ணி கண்ணீர் வடித்தாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.