அமைதி

ஒரு அரசன் அமைதி என்பதை மிகச் சரியாக விளக்கும் ஓவியத்திற்குப் பெரிய பரிசு கொடுக்கப்படும் என்று அறிவித்தார். பல ஓவியர்கள் பல அற்புதமான ஓவியங்களை வரைந்து வந்தனர். அதில் சிறந்த இரண்டு ஓவியங்களை மட்டும் அரசர் தேர்ந்தெடுத்தார்.

முதல் ஓவியத்தில் மிக அழகாக சலனமே இல்லாத ஒரு தெளிவான ஏரி இருந்தது. அதைச் சுற்றிப் பச்சைப் பசேலென்ற மலைகள். அதன் மேல் வெண் மேகங்கள் தவழும் நீல வானம் என அற்புதமாக இருந்தது. ஒவியத்தைப் பார்த்தாலே மனதில் முழுமையான அமைதி பிறக்கும். ஒவியத்தைப் பார்த்த அனைவரும் இந்த ஒவியத்தைதான் அரசன் தேர்ந்தெடுப்பார் என்று நினைத்தார்கள்.

இரண்டாவது ஓவியத்தில் இருண்ட வானம் இடி மின்னலுடன் பெய்யும் பயங்கரமான மழை. பார்ப்பதற்கே பயத்தைக் கொடுக்கும் உருண்டு திரண்டு விழும் ஒரு பெரிய அருவி. படத்தை உற்றுப் பார்த்தால் அந்த அருவிக்குப் பின்னால் உள்ள ஒரு பாறை இடுக்கில் ஒரு சின்ன செடியில் தாய் பறவை ஒன்று தன் கூட்டில் குஞ்சுகளோடு மிக நிம்மதியாகக் கண் மூடி அமர்ந்திருந்தது.

அரசர் இரண்டாவது ஓவியத்தை அமைதி ஒவியமாக அறிவித்தார். அனைவருக்கும் ஒரே குழப்பம் இந்த ஓவியத்தில் எங்கே அமைதி இருக்கிறது? என்று அரசரிடம் கேட்டார்கள். அரசர் சிரித்துக்கொண்டே சொன்னார். அமைதி என்பது சத்தமே இல்லாத எந்தப் பிரச்சனையும் இல்லாத இடத்தில் இருப்பது அல்ல. எவ்வளவு பெரிய புயலும் சத்தமும் போராட்டமும் உங்களைச் சுற்றி நடந்தாலும் உங்கள் மனதிற்குள் எந்தச் சலனமும் இல்லாமல் அந்தப் பறவையைப் போல் நிம்மதியாக இருந்தால் அதுதான் உண்மையான அமைதி என்றார்.

நம் வாழ்க்கையில பிரச்சனைகளே வரக்கூடாது அப்போதான் நிம்மதியா வாழ முடியும்னு நினைத்தால் அது கடைசி வரைக்கும் நடக்கவே நடக்காது. கடனைப் பற்றிய கவலை வேலைப்பளு குடும்பக் கஷ்டங்கள் என உலக துன்பங்கள் அனைத்தும் சுற்றிப் புயல் மாதிரி வீசினாலும் மனசை மட்டும் அந்தப் பறவை மாதிரி எப்பவும் அமைதியா வைத்துக் கொண்டால் அதுதான் அமைதியான நிம்மதியான வாழ்க்கை. உண்மையான அமைதி நிம்மதி வெளியில சூழ்நிலையில இல்லை. ஒவ்வொருவரின் மனதில் தான் இருக்கிறது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.