பகவத்கீதையும் கிருஷ்ணரும்

ஒரு ஏழை பிராமணன் கங்கைக் கரையில் மனைவியோடு வசித்து வந்தான். தினமும் கீதை பாராயணம் செய்து விட்டு பிட்சை எடுத்து கிடைத்ததை மனைவியிடம் கொடுத்து சமைக்க சொல்லி அன்றைய உணவை கிருஷ்ணனுக்கு நைவேத்யம் செய்து விட்டு இருவரும் சாப்பிடுவது வழக்கம். ஒரு நாள் கீதையைப் பாராயணம் செய்யும் போது ஒன்பதாம் அத்தியாயத்தில் யோக க்ஷேமம் வஹாம்யஹம் என்று வந்தது. இதனை படித்ததும் அவனுக்கு ஒரு சந்தேகம். இந்த உலகத்தில் கோடானு கோடி பேர் இருக்கிறார்கள். அவ்வளவு பேரையும் கிருஷ்ணன் எப்படி நான் ரட்சிக்கிறேன் என்று சொல்கிறான். தானே ஒவ்வொருவரின் துன்பத்தையும் அறிந்து நேரில் சென்று போக்குவது என்பது நடக்காத காரியம். எல்லோரின் துன்பத்தையும் கிருஷ்ணன் தனி ஒருவனாக எப்படி சுமப்பான்? அவர்களை துன்பத்திலிருந்து எவ்விதம் காப்பாற்றுவான்? நான் பாதுகாக்கிறேன் என்றால் என்ன அர்த்தம் என்று திரும்பி திரும்பி கீதையை படித்தும் அவருக்கு விளங்கவில்லை. இதை விடக்கூடாது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்து அந்த சுலோகத்தின் அருகில் x என்ற குறியிட்டை போட்டுவிட்டு புத்தகத்தை மூடினார். ஜால்ராவையும் பாத்திரத்தையும் எடுத்துக் கொண்டு வழக்கம் போல பிட்சைக்கு கிளம்பினான். அன்று யாரும் அவனுக்கு உணவு தானியங்கள் என்று எதுவும் பிட்சை அளிக்கவில்லை. ஜால்ராவை வைத்து பாடிக் கொண்டே சென்றான்.

பிராமணன் ஊருக்குள் அலைந்து கொண்டிருந்த சமயம் ஒரு சிறு பையன் பிராமணன் வீட்டு கதவைத் தட்டினான். பிராமணன் மனைவி வாசல் கதவை திறந்த போது அந்த சிறுவன் தலையிலிருந்து ஒரு பெரிய மூட்டையை இறக்கி வைத்தான். இதனை கண்ட அவன் மனைவி யாரப்பா நீ? என்ன இதெல்லாம்? தவறான இடத்திற்கு வந்து விட்டாய் போல இருக்கிறது என்றாள். அதற்கு அந்த சிறுவன் இல்லேம்மா. நான் அருகில் வசிக்கிறேன். இது என் குருநாதர் வீடு. அவர் எனக்கு கட்டளை இட்டிருக்கிறார். அந்த கட்டளையின் படி உணவிற்கு தேவைப்படும் அனைத்து பொருட்களும் கொண்டு வந்திருக்கிறேன் என்றான். நான் உன்னை பார்த்ததில்லை. அவருக்கு தெரியாமல் இதை நான் வாங்க மாட்டேன். இதெல்லாம் வேண்டாம் அவருக்கு தெரியாமல் வாங்கினால் அவர் என்னை கோபிப்பார் என்றாள். அம்மா உங்களுக்கு நான் இங்கே வருவதும் தெரியாது போவதும் தெரியாது. ஆனால் என் குருநாதருக்கு தெரியும். இதோ பாருங்கள் அவர் சொன்னதும் இந்த நான் மூட்டையை சுமந்து கொண்டு மெதுவாக நடக்கிறேன் என்று என் முதுகில் இடது பக்கமும் வலது பக்கமும் பலமாக அடித்திருக்கிறார் பாருங்கள் என்றான். முதுகில் x போல் அடித்தற்கான தழும்பு இருந்தது. அவள் திகைத்தாள் கணவர் ஏன் இவ்வாறு இந்த சிறுவனிடம் கொடுமையாக நடந்து கொண்டிருக்கிறார் என்று எண்ணியபடி நீ உள்ளை வா என்று அந்த சிறுவனை உள்ளே அழைத்து முதுகில் எண்ணெய் தடவி அவனுக்கு உணவளித்தாள். அவர் வரும் வரை ஓய்வெடு என்றாள். அவன் பூஜை அறையில் போய் படுப்பதாக சொல்லி உள்ளே சென்றான்.

பிராமணர் உணவு சமைக்க பிட்சை எதுவும் கிடைக்காமல் களைப்பாக வீடு திரும்பினார். அவரைக் கண்டதும் அவரை பேச விடாமல் ஒரு சிறுவனிடம் இப்படியா கொடுமைப்படுத்தி அடிப்பீர்கள் என்று அவரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்க ஆரம்பித்தாள். அவருக்கு ஒன்றும் புரியவில்லை என்ன உளற்றுகிறாய் என்றார். அவரிடம் நடந்த அனைத்தையும் சொல்லி மேலும் கேள்வி கேட்க ஆரம்பித்தாள். பிராமணருக்கு தலை சுற்றியது. எனக்கு சிஷ்யனா? நான் சாமான் கேட்டேனா? அவனை அடித்தேனா? என்னம்மா உளறுகிறாய். நீ சொல்வது போல் எதுவுமே நடக்கவில்லை என்றார். அதற்கு அவள் அந்த சிறுவன் முதுகை காட்டினான். அதில் x போல் அடித்த அடையாளம் இருந்தது. அவன் முதுகில் எண்ணெய் தடவினேன். சிறுவன் பொய் சொல்லவில்லை என்றாள். அதற்கு பிராமணர் என் கிருஷ்ணன் மீது ஆணையாக சொல்கிறேன். எனக்கு அவனைத் தெரியவே தெரியாது நான் அடிக்கவில்லை என்கிறார். அதற்கு அவள் இதோ பூஜை அறையில் தான் அந்த சிறுவன் இருக்கிறான் போய் பாருங்கள் என்றாள்.

பிராமணர் பூஜை அறைக்கு ஓடினார். வீடு முழுதும் தேடினார். சிறுவனைக் காணவில்லை. பிராமணருக்கு புரிந்துவிட்டது வந்தது கிருஷ்ணன் தான். வீட்டில் நிறைய உணவுப் பொருட்களை கொடுத்து தன் வறுமை நீக்கி கிருஷ்ணன் லீலை புரிந்திருக்கிறார். கிருஷ்ணரின் மீது நன்றியோடு கீதை புத்தகத்தை எடுத்து மறுபடியும் பாராயணம் செய்ய பக்கத்தை புரட்டினார். காலையில் அவர் சந்தேகத்தோடு போட்ட x குறியைக் காணவில்லை. கோடானு கோடி மக்களின் துன்பத்தை தீர்க்க நான் அருகிலே இருப்பேன் என்று சொல்கிறாயே. உன்னால் அது எப்படி சாத்தியம் என்று உன்னை சந்தேகப்பட்டேனே. உன்னால் அனைத்தையும் செய்ய முடியும் என்று எனக்கு புரிய வைத்தாய். கீதையும் நீயும் வேறல்ல என்பதைக் காட்ட கீதையில் நான் போட்ட x குறியை உன் முதுகில் தாங்கி வந்து என் சந்தேகத்தை தீர்த்து என் அகக் கண்ணை திறந்தாய் கிருஷ்ணா என்னை மன்னித்துவிடு என்று பிரார்த்தனை செய்தார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.