தொண்டு

ஒரு பெரிய அரசர் இருந்தார். அவருக்கு ஆன்மிகத்தில் மிகவும் ஈடுபாடு ஆகையால் தினந்தோறும் கோவிலுக்கு செல்வார். வழக்கம் போல ஒரு நாள் கோவிலுக்கு சென்று திரும்பி வந்து கொண்டிருந்தார். கோவிலுக்கு வெளியில் ஒரு சந்நியாசி தியானத்தில் அமர்ந்திருந்தார். இதனைக் கண்ட அரசர் அவரிடம் சென்று வணங்கி நின்றார். சந்நியாசியும் ஆசிர்வாதம் செய்தார். அரசர் தன்னிடம் இருந்த விலை உயர்ந்த சால்வை ஒன்றை சன்னியாசிக்கு கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பினார். மறுநாள் காலையில் அரசர் அரண்மனையின் மேல் மாடத்தில் நின்றிருந்தார். அப்போது தெருவில் ஒரு பிச்சைக்காரன் சென்று கொண்டிருந்தான். அவனை பார்த்த அரசர் அதிர்ச்சி அடைந்தார். காரணம் சன்யாசியிடம் கொடுத்த அந்த விலை உயர்ந்த சால்வையை இப்போது அந்த பிச்சைகாரன் வைத்திருந்தான். அரசர் உடனே காவலர்களை அனுப்பி அந்த பிச்சைக்காரனை அழைத்து வரச் சொன்னார். அவனிடம் இந்த போர்வை எப்படி வந்தது என்று விசாரிச்சார். கோவில் வாசலிலே தனக்கு ஒரு சன்யாசி கொடுத்தார் என்று சொன்னான். உடனே அந்த சன்யாசியை அழைத்து வர உத்தர விட்டார். சன்யாசியிடம் ஏன் பிச்சைக்காரனிடம் இந்த சால்வையை கொடுத்தீர்கள் என்று கேட்டார். அதற்கு சன்யாசி இவன் இரவில் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தான். அவனது உடையும் கிழிந்திருந்தது. ஆகவே எனக்கு தேவைப்படுவதை விட இவனுக்குத்தான் தேவை என்று கொடுத்து விட்டேன் என்றார். இந்த பதிலைக் கேட்ட பிச்சைக்காரன் சன்யாசியின் அன்பில் பூரித்து மகிழ்ச்சியில் சிரித்தான். இதனைக் கண்ட அரசர் கோபமடைந்து இது மிகவும் விலை உயர்ந்த சால்வை அரசர்களுக்கு என்றே விசேசமாக தயாரிக்கப்பட்டது. அதை உங்களுக்கு கொடுத்தேன். இந்த சால்வையை அவனிடம் கொடுத்தது என்னை அவமதிப்பு செய்வது போல் உள்ளது. ஆகவே உங்களையும் உங்களுடன் இந்த பிச்சைக்காரனையும் சிறையில் அடைக்க உத்தர விடுகிறேன் என்று சொல்லி விட்டு அரண்மனைக்குள் சென்று விட்டார். காவலாளிகள் இருவரையும் சிறையில் அடைத்தார்கள்.

அன்றிரவு அரசர் தூக்கத்தில் ஒரு கனவு கண்டார். அந்த கனவில் மன்னர் அந்த கோவிலுக்கு போகிறார். ஆண்டவன் சந்நிதியில் போய் நிக்கிறார். அங்கே கடவுள் குளிரால் நடுங்கி கொண்டிருக்கிறார். அரசர் கடவுளே என்ன ஆச்சு உனக்கு என்றார்? அதற்கு கடவுள் குளிர் அதிகமாக இருக்கிறது என்றார். உடனே அரசர் தன்னிடமிருந்த விலை உயர்ந்த சால்வையை எடுத்துக் கொண்டு கடவுளை நெருங்கினார். கடவுள் பயத்தில் கத்தினார் என்ன அது? உன்னுடைய சால்வையா? வேண்டாம் வேண்டாம் என்றார். அரசர் கடவுளே இதை ஏன் வேண்டாம் என்று சொல்கிறீர்கள்? நான் என்ன பாவம் செய்தேன்? என்று பயத்துடன் நின்றார். அதற்கு கடவுள் நேற்று ஒரு சால்வையை எனக்கு கொடுத்தனுப்பினாய். அதை கொண்டு வந்தவனையும் பெற்றுக் கொண்டவனையும் சிறையில் அடைத்து விட்டாய். இப்போது எனக்கும் சால்வை கொடுக்கிறாய். நாளை என்னையும் சிறையில் அடைத்து விடுவாய் ஆகவே வேண்டாம் என்றார். அரசர் அதிர்ச்சியில் விழித்து கொண்டார் அவருக்கு எல்லாம் புரிந்தது. ஓடிப்போய் அவரே சிறையின் கதவுகளை திறந்து விட்டார். சன்யாசியின் கால்களில் விழுந்தார். சுவாமி நான் அறியாமல் செய்து விட்டேன் தாங்கள் ஒரு மகான் என்னை மன்னித்து விடுங்கள் என்றார். அரசரே துன்பப் படுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான் கடவுளுக்கு செய்கிற தொண்டு அதை புரிந்து கொள் என்று சொல்லி விட்டு நடக்க ஆரம்பித்தார் சன்யாசி.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.