பசுபதீஸ்வரர்

மூலவர் பசுபதீஸ்வரர். அம்மாள் திரிபுரசுந்தரி. தல விருட்சம் கொன்றை. புராண பெயர் திருஆமூர் கடலூர் மாவட்டம். பழமையான ஆலயம் தேவாரப் பாடல் பாடிய அப்பர் என்ற அழைக்கப்படும் திருநாவுக்கரசர் அவதரித்த தலம். இத்தலத்தின் சிறப்பை சேக்கிழார் பெரிய புராணத்தில் சிறப்பித்து கூறுகின்றார். சுவாமி சன்னதிக்கு எதிரில் அப்பர் சுவாமிகள் நின்ற திருக்கோலத்துடன் அருள்பாலிக்கிறார். அதில் உழவாரப்படை இடது தோளில் சார்த்தப் பட்டிருக்கிறது. தெற்கு பிரகாரத்திலும் அப்பர் திருவுருவம் உள்ளது. அப்பரின் குருபூஜை சித்திரை சதய நட்சத்திரத்திலும் அப்பரின் ஜெயந்தி நாள் பங்குனி மாதம் ரோகிணியிலும் நடக்கிறது. அப்பரின் தாயார் மாதினியார் தகப்பனார் புகழனார் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளது. அப்பரின் அக்காள் திலகவதியாருக்கு தனி சன்னதி உள்ளது. அப்பர் அவதாரம் செய்த களரி வாகை மரத்தடியில் சுவாமிக்கு அழகிய கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த மரத்தை ஒரு அதிசய மரமாக கருதி பூஜிக்கின்றனர். இது செடியாகவும் இல்லாமல் கொடியாகவும் இல்லாமல் மரமாகவும் இல்லாமல் ஒரு புதுவகை அம்சமாக உள்ளது. இதன் இலையை சுவைத்தால் இனிப்பு புளிப்பு துவர்ப்பு கசப்பு உவர்ப்பு கார்ப்பு என்ற அறு சுவைகளையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. கிபி 7ம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே இந்த மரம் இங்கு உள்ளது.

திருவாமூர் என்ற இந்த தலத்தில் தேவாரம் பாடிய நால்வருள் முக்கியமானவரான அப்பர் என்று அழைக்கப்பட்ட திருநாவுக்கரசர் அவதரித்தார். இவரது தந்தை புகழனார். தாயார் மாதினியார். சகோதரி திலகவதியார். பெற்றோர் அப்பருக்கு மருள்நீக்கியார் என பெயர் வைத்தனர். இளமையிலேயே அவரது பெற்றோர் இறந்து விட்டனர். சகோதரியின் பாதுகாப்பில் மருள்நீக்கியார் வளர்ந்தார். உறவினர்கள் திலகவதியாருக்கு அவ்வூரில் சேனைத் தலைவராக இருந்த கலிப்பகையாரை திருமணம் செய்து வைக்க நிச்சயித்தனர். மன்னனால் போருக்கு அனுப்பப்பட்ட கலிப்பகையார் போரில் கொல்லப்பட்டார். திருமணம் நின்று போனதால் மனம் உடைந்த திலகவதி திருவதிகை என்ற தலத்திற்கு சென்று சிவத்தொண்டு செய்துவந்தார். திருநாவுக்கரசரோ சமண சமயத்தை சார்ந்து தர்மசேனர் என்ற பெயரை சூட்டிக் கொண்டார். திலகவதியார் தனது தம்பியை நம் தாய் சமயமான  சைவ சமயத்திற்கு மீட்டுத்  தரவேண்டும் என சிவபெருமானிடம்  வேண்டிக் கொண்டார். இதையடுத்து திருநாவுக்கரசரை சூலை நோய் தாக்கியது. திருவதிகை சென்று இறைவனின் திருநீறை வயிற்றில் பூசியதும் வலி குணமானது. இதனால் மெய்சிலிர்த்த அவர் திருப்பதிகம் பாடி வழிபட்டார். எனவே இறைவனே அவர் முன்பு தோன்றி நாவுக்கரசு என பெயர் சூட்டினார். பல தலங்களுக்கும் சென்று தேவாரம் பாடிய அப்பர் பெருமான் திருப்புகலூரில் சித்திரை சதய நாளில் இறைவனடி சேர்ந்தார். இவரது காலம் கிபி 7 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகும்.

தனித் தேவாரத்திருப்பதிகம் இக்கோயிலுக்கு இல்லை என்றாலும் அப்பர் சுவாமிகள் பாடியருளிய பசுபதி திருவிருத்தம் இத்தலத்து இறைவரைக் குறித்தே அருளிச் செய்யப் பெற்றதாகும். அருணகிரிநாதர் இத்தலத்து முருகப்பெருமான் குறித்து திருப்புகழ் பாடியுள்ளார். 3 ம் குலோத்துக்க சோழன் திருப்பணி செய்த தலம் 11 ம் நூற்றாண்டில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 550

கேள்வி: மது பானத்திற்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீள வழி என்ன?:

இறைவன் அருளால் முன்னோர்கள் பெற்ற கடுமையான பிதுர் சாபங்கள். இதுதான் மதிமயக்கும் பானத்திற்கு அடிமையாவதின் சூட்சுமம் அப்பா. எனவே தொடர்ந்து பைரவர் வழிபாடு சரபேஸ்வரர் வழிபாடு நரசிம்மர் வழிபாடு அன்னை ப்ரத்யங்கிரா வழிபாடு செய்வது நல்ல பலனை தரும்.

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 85

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 549

கேள்வி: தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் அதிகமாக இருக்கிறது. அதனால் இறைவனின் தலையில் இருக்கும் கங்கையையும் தங்கள் கமண்டலத்தில் உள்ள காவிரியையும் இணைக்க ஒரு வழி சொல்லுங்கள்:

இணைத்து விடலாம் அப்பா கவலைப்படாதே. ஒன்று தெரியுமா? மூடர்களால் வரக்கூடிய துன்பங்கள் தான் இந்த உலகிலே அதிகம். தன்முனைப்பு ஆணவம் உள்ள மனிதர்கள் பெருந்தன்மை இல்லாத மனிதர்கள் இவர்கள் கையில் நாடு சிக்கினால் இந்த நாட்டிற்கு விமோசனம் என்பதே கிடையாது. அரியாசனங்கள் என்றுமே அறியா ஜனங்களால் தீர்மானிக்கப்படுவதால் இந்த அறியா சனங்கள் அரியாசனங்களை சரியாக தக்க வைத்துக்கொள்ள தெரிவதில்லை. அறியா சனங்களின் அந்த அறியாத்தனத்தை அரியாசனங்கள் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. நல்லவர்களை இனம் காண முடியாத கொடுமைதான் இத்தனை கொடுமைக்கும் காரணம். ஏற்கனவே தான் எல்லா கொடுமைகளையும் ஒருவன் செய்கிறானே? மீண்டும் எதற்கு அவனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனென்றால் மனிதர்களை பொறுத்தவரை எல்லோருக்கும் தெரிந்தவனைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. அவன் மதிக்குள் அவன் விதி அப்படித்தான் அமர்ந்து வேலை செய்கிறது. வேறு விதமாக கூறினால் நன்றாக புரிந்து கொள்ளலாம்.

ஒரு மனிதன் பல நாட்களாக பல தர்ம காரியங்களை நல்ல தொண்டுகளை செய்கிறான். யாராவது அவனை கண்டு கொள்வார்களா? ஆனால் ஒரு நாள் அவன் சில பெண்களோடு பழகினால் தவறான ஒரு இடத்திற்கு சென்று வந்தால் மறுதினம் ஊரே எங்கும் அவனை பற்றி பேச்சாக இருக்கிறது. நல்லதே செய்யும் பொழுது கண்டுகொள்ளாத சமுதாயம் தீயதை செய்யும் பொழுது ஏன் கண்டு கொள்கிறது? இந்த குணம் மாறினால் தான் நாட்டில் சுபிட்சம் உண்டாகும். நல்லதை அங்கீகரிக்க கற்றுக் கொள்ளுங்கள். நல்லவர்களை ஆதரிக்க கற்றுக் கொள்ளுங்கள். முதலில் ஒவ்வொரு மனிதனும் நல்லவனாக வாழ கற்றுக் கொள்ளுங்கள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 548

கேள்வி: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கருவூரார் சாபம் பெற்றது பற்றி:

கருவூரான் என்றுமே கருவில் அவன் ஊரான் என்பதால் தான் அவனுக்கு அப்பெயர் இறைவனால் வழங்கப்பட்டது. மூலஸ்தானத்திலே இறையோடு இரண்டற கருவூர் பசுபதிசுவரர் ஆலயத்திலே அன்னவன் கலந்ததை யாம் என் நேத்திரம் கொண்டு பார்த்து களித்தோம். அது போல் நிலையிலே என்னதான் சித்தனாக இருந்தாலும் கூட சித்தர்கள் குறித்து பல்வேறு அனாச்சாரமான காரியங்கள் செய்ததாக கருத்துக்கள் மனிதர்களிடையே நிலவி வருகிறது. இதை தவிர்க்கவே முடியாது என்பது எமக்குத் தெரியும். இது மட்டுமல்ல அன்னவன் ஒருமுறை நெய்வேலி சென்று நெல்லையப்பரை பார்த்த பொழுது அங்குள்ள காளியிடம் ஏதோ கேட்டதாகவும் ஏதோ கிட்டியதாகவும் நெல்லையப்பர் ஏதோ மறுத்ததாகவும் அவரை சபித்ததாகவும் கூட கதை இருக்கிறது. இவை அத்தனையும் கட்டுக்கதை. இட்டுக்கதை. சித்தர்களை உயர்ந்த நிலையிலும் உயர்ந்த எண்ணத்திலும் தான் பார்க்க வேண்டும். சித்தர்கள் எது ஏதோ பானங்களை பருகுவதாகவோ வேறு விதமான பழக்க வழக்கங்களுக்கு ஆட்பட்டதாகவோ கூறப்படுவதெல்லாம் இடைச் செருகல்களில் ஒன்றுதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அப்பேர்ப்பட்ட இடைச்செருகல்ளில் ஒன்றுதான் இன்னவன் வினவியது. ஆனாலும் கூட அந்த ஆலய நிர்மாணத்திற்கு வேண்டிய அத்தனை ஆலோசனைகளையும் கருவூரான் தான் தந்தான். அப்படி அந்த சிவலிங்கத்தை ஸ்தாபிக்க மூலிகை சாற்றால் சிலவற்றை செய்தான். பிரார்த்தனையின் பலத்தால் சிலவற்றை செய்து தந்தான். இதுதான் மெய்.

கருவூரார்

சிவலிங்கத்தை தழுகிய நிலையில் ஈசனோடு ஐக்கியமானவர் கருவூரார் சித்தர். அன்பு பூண்ட சித்தர்களிடமும் முனிவர்களிடமும் இளமையிலேயே ஞானப்பால் உண்டவர். இதற்கு சான்று கருவூராருக்கு கருவான ஞானப்பால் அழித்தபோதே என்ற அகத்தியர் 12000 நூல் விரிவாக கூறுகிறது.

சங்ககால சேர நாட்டு தலைநகர் வஞ்சி எனப்பெறும் கருவூரில் பிறந்தார் கருவூரார். கருவூராரின் தாய் தந்தையார் ஊர் ஊராகச் சென்று ஆங்காங்குள்ள கோவில்களில் விக்ரகங்கள் செய்யும் தொழில் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்கள். அதனால் கிடைத்த பொருள் கொண்ட முனிவர்களுக்கு வேண்டிய பொருட்களை எல்லாம் வாங்கிக் கொடுப்பார்கள். கருவூரார் செம்பு பித்தளை உலோகங்களை கொண்டு தொழில் செய்யும் குலத்தைச் சேர்ந்தவர் என்றும் இவர் போகரின் சீடர் என்றும் அகத்தியர் 12000 என்னும் பெருநூல் கூறுகிறது. சிறிய வயதிலேயே ஞான நூல்களைக் கற்று அம்பிகையிடம் மாறாத பக்தி கொண்டவர் கருவூரார். இவரது பக்தியை கண்டவர்கள் இவருக்கு இனி பிறவி இல்லை. இனி இவர் எக்கருவிலும் ஊரார் எனவே இவர் கருவூரார் என்று வியந்து கூறினார்கள். இதுவே இவரது பெயர் ஆயிற்று. இளம் வயதிலேயே வேதம் மற்றும் ஆகமங்களைக் கற்று தேர்ந்து மானுட வாழ்வின் நிலையாமையை உணர்ந்து காய சித்தி மாய சித்தி அதிகம் நிறைந்த மாமுனியாக திகழ்ந்தவர். போகரை குருவாகக் கொண்டு உபதேசம் பெற்றார். போகரை கருவூரார் சந்தித்த போது உனக்கு அம்பிகையே சரியாக வழிகாட்டுவாள் என்று ஆசீர்வாதம் செய்தார். ஞான நூல்கள் பலவற்றையும் ஆராய்ந்து சிவயோக முதிர்வு பெற்றார். புறக்கருவிகளாகிய ஞானேந்திரியங்கள் கன்மேந்திரியங்களை அதன் போக்கில் போக விடாமல் உள்ளிழுத்து அகக் கருவியாகிய சித்தத்தினை சமாதியில் இறுத்தி வெற்றி பெற்று அட்டமா சித்தி பெற்ற சித்தர் கருவூரார் ஆவார்.

வசியம் மோகனம் தம்பனம் உச்சாடனம் ஆக்ருசணம் பேதனம் மாரணம் எனும் அஷ்ட கர்ம மந்திரங்கள் அனைத்தையும் கற்று உணர்ந்தார் கருவூரார். ஒருநாள் கருவூரார் முன் ஒரு காகம் தன் காலில் கவ்வியிருந்த ஒரு ஓலையை வைத்தது கருவூரார் ஆச்சரியத்துடன் அந்த உரையை வாசித்தார். கருவூராரே நீர் உடனே தன்னை வந்து சேரும் என்று இருந்த அந்த ஓலையில் இருந்தது. அந்த ஓலையை அவரது குருவான போகர் எழுதி இருந்தார். தஞ்சையை ஆண்ட இராஜராஜ சோழ மன்னனுக்கு ஒரு சங்கடம் ஏற்பட்டிருந்தது அதனைப் போக்கவே அவரை அழைத்து இருந்தார். தஞ்சையில் சோழ மன்னன் ஒரு பிரம்மாண்டமான சிவாலயம் கட்டுகிறான். அற்புதமான அந்த ஆலயத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ய முயன்று பந்தனம் செய்ய முடியாமல் மருந்தானது வழிந்து கொண்டே இருக்கிறது. சோழ மன்னனுக்கு இதற்கான காரணம் புரியவில்லை .இந்த குறை தீர்க்கவே கருவூரார் அழைக்கப்பட்டிருந்தார்.

கோவிலுக்குள் நுழைந்த கருவூரார் சிவலிங்கத்தின் அருகில் சென்று பார்த்த போது அங்கு அஷ்ட பந்தனம் செய்ய விடாமல் ஒரு பிரம்ம ராட்சசி தடுத்துக் கொண்டு இருப்பதைக் கண்டதும் மந்திர உச்சாடனம் செய்து அதன் மீது காறி உமிழ்ந்தார். கருவூராரின் வாயில் எச்சில் பட்டு பொசுங்கி கருகியது பிரம்ம ராட்சசி. பக்தர்கள் கருவூராரின் அசைவுகளையும் கோபக்கனல் பொங்கும் கண்களையும் கவனித்தார்கள். ஆனால் என்ன நடக்கிறது என்பது அவர்களுக்குப் புரியவில்லை. இப்போது லிங்கத்தை அஷ்டபந்தனம் சாத்தி பிரதிஷ்டை செய்யுங்கள் என்று அர்ச்சகர்களிடம் சொன்னார் கருவூரார். அர்ச்சகர்களும் அவ்வாறே செய்ய லிங்கம் தனது இடத்தில் அமர்ந்தது. மேலும் அதில் இருந்து வெளிப்பட்ட ஜோதி கருவூராரின் நெஞ்சில் பாய்ந்தது. கருவூரார் இனம்புரியாத பரவசநிலைக்கு ஆளானார். அதன் பிறகு அவர் அஷ்ட பந்தனம் செய்து சிவலிங்கப் பிரதிஷ்டையும் அபிஷேகம் செய்து வைத்தார். அப்போது கருவூரார் அண்ட ரண்ட மந்திரத்தை உபதேசித்தார். சிவபெருமானின் ஐந்து முகமாகவே ஈசானம் தத்புருஷம் அகோரம் வாமதேவம் சத்தியோசாதம் என்பதை அகோரம் எனப்படுவது தான் அண்டரண்டம் மந்திரம்.

தில்லையம்பலமாகிய சிதம்பரத்துக்கு வடநாட்டை ஆண்ட இரணியவர்மன் ஒருமுறை வந்தான். சிவகங்கை தீர்த்ததில் நீராடிக் கொண்டிருந்தான். அப்போது தண்ணீருக்குள் சிவனின் நாட்டியக் காட்சியை கண்டான். அக்ககாட்சி அவனை பெரும் பரவசப்படுத்தியது. தண்ணீரில் இருந்து எழுந்து மீண்டும் தண்ணீருக்குள் மூழ்கி கண்களைத் திறந்து பார்த்தான். அங்கே யாரையும் காணவில்லை. சிவனின் நாட்டியக்காட்சி அவன் நெஞ்சை  விட்டு அகல மறுத்தது. எப்படியாவது இந்த நடன சிவனை சிலையாக வடிக்க வேண்டும். அதுவும் தங்கத்தில் வடித்தால் அது பூமி உள்ளளவும் நம் பெயர் சொல்லும் என்று எண்ணினான்.

சிற்பிகள் அனைவரையும் வரவழைத்தான். தங்கத்தை அள்ளி அள்ளிக் கொடுத்து நான் கண்ட காட்சியைக் கூறி நடன சிவன் சிலையை 48 நாட்களுக்குள் வடிக்க வேண்டுமென்றும் அதற்குள் சிலை வடிக்காவிட்டால் அவர்களுக்கு கடும் தண்டனை அளிப்பேன் என்றும் உத்தரவிட்டான். சிற்பிகளும் வேலையை தொடங்கினர். தங்கத்தை வளைக்க வேண்டுமென்றால் சிறிதளவு செம்பு சேர்க்க வேண்டும். மன்னனோ எக்காரணம் கொண்டும் செம்பு சேர்க்கக் கூடாது என்றும் என்ன வித்தை செய்தாவது தூய தங்கத்தை வளைத்தே சிலை செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்திருந்தான். சிற்பிகளும் ஒரு தைரியத்தில் வேலையைத் தொடங்கி விட்டனர். 47 நாட்கள் கடந்து விட்டது. யாருக்குமே சிலை சரியாக வரவில்லை. நாளை மன்னன் வருவார். அவர் சிலையை எங்கே என்று கேட்டால் என்ன செய்வது? சிறையில் அடைத்து விடுவாரே என்று சிற்பிகள் பயந்தனர். இந்த சம்பவம் போகரின் சித்தத்திற்கு எட்டியது. அவர் திருவூராரை அழைத்து சிதம்பரத்தில் நடந்து கொண்டிருக்கும் விஷயத்தை விளக்கினார். கருவூரா நீ உடனே சிதம்பரம் செல். அந்த சிலைப் பணியை முடித்துக் கொடு என்றார். கருவூரார் கண்ணிமைக்கும் நேரத்தில் சிற்பிகள் முன்பு நின்றார். சிற்பிகளே உங்கள் மனக் கலக்கத்தை நான் அறிவேன். நீங்கள் எதற்கும் கலங்க வேண்டாம். இன்னும் இரண்டே நாழிகையில் சிலையை நான் தயார் செய்து விடுகிறேன் என்றார். அதற்கு சிற்பிகள் துறவியே நீங்கள் யாரோ எவரோ? சிவனின் அடியார் போல் தோன்றுகிறீர்கள். நாங்கள் தமிழகத்தின் பெரும் சிற்பிகள். எங்களாலேயே 48 நாட்களில் செய்து  முடிக்க முடியாததை உங்களால் எப்படி இரண்டு நாழிகையில் சாதிக்க முடியும்? என்று கேட்டார்கள். உங்களுக்கு மாயமந்திரங்கள் தெரியுமா? மனம் நொந்து போயுள்ள எங்களை புண்படுத்துகிறீர்களா? அடியாரான உங்களுக்கு இது அழகா? என கோபமாகக் கேட்டனர். அவர்கள் அப்படி சொன்னதற்காக பண்பட்ட மனம் கொண்ட கருவூரார் கோபிக்கவில்லை.

கருவூரார் தன்னால் இயலும் என்று தன் வாதத்தில் உறுதியாக இருந்தார். ஒரு நாள்தான் இருந்தபடியால் வேறுவழியில்லாமல் சிற்பிகளும் சம்மதித்தார்கள். கருவூரார் தான் சிலை செய்யும் அறைக்கு யாரும் உள்ளே வரக்கூடாது என கட்டளையிட்டார். சொன்னபடி இரண்டு நாழிகையில் அறைக் கதவு திறந்தது. சிற்பிகளே உள்ளே போய் பாருங்கள். சிலை தயாராகி விட்டது என்றார். சிற்பிகள் ஓடிச்சென்று பார்த்தார்கள். நடராஜப் பெருமான் ஜொலித்தார். இப்படி ஒரு சிலையை எங்கள் வாழ்வில் பார்த்தில்லையே என சிற்பிகள் ஆச்சரியமடைந்தனர். அந்த ஆனந்த சிவனைப் போலவே இவர்களும் தாண்டவமாடினர். கருவூராரிடம் கோபப்பட்டதற்காக மன்னிப்பும் கேட்டனர். மறுநாள் மன்னன் இரணியவர்மன் வந்தான். நடராஜரைப் பார்த்ததும் தான் கண்ட காட்சி எப்படி இருந்ததோ அப்படியே சிலை வடித்தமைக்காக சிற்பிகளை மிகவும் பாராட்டினான். அந்த நேரத்தில் அமைச்சர் இந்த சிலை தூய்மையான தங்கத்தில் செய்யப்பட்டதா என்று சந்தேகத்தைக் கிளப்பினார்.

மன்னன் தங்கத்தை பரிசோதிக்க அமைச்சரிடம் கேட்டுக் கொண்டார். அமைச்சர் அதிகாரி வந்து சோதிக்க கட்டளை இட்டார். சிலை பரிசோதிக்கப்பட்டது. அதிகாரி அமைச்சரிடம் அரசே இது முழுமையான தங்கச் சிலை இல்லை. இதில் குறிப்பிட்ட அளவு செம்பு கலக்கப்பட்டிருக்கிறது என்றார். அமைச்சர் கொதித்துப் போனார். அரசரிடம் ஓடிவந்தார். மன்னா தங்களையே இந்த சிற்பிகள் ஏமாற்றி விட்டார்கள். சிலையில் செம்பு கலக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் முழுமையான தங்கச்சிலை வேண்டும் என்ற தங்களது உத்தரவு மீறப்பட்டிருக்கிறது. மேலும் எஞ்சிய தங்கம் எங்கே என்ற கேள்வியும் எழுகிறது. தாங்கள் தகுந்த விசாரணை நடத்தி இந்த சிற்பிகளைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்றார். சிற்பிகள் நடுங்கி விட்டனர். மன்னரின் காலடியில் விழுந்தனர். மன்னா தவறு நடந்து விட்டது. நாங்கள் இதோ நிற்கிறானே இந்தத் துறவியை நம்பி மோசம் போனோம். நடராஜ பெருமானின் சிற்பத்தை வடிக்க சுத்த தங்கத்தால் பல நாள் முயற்சித்தோம். நாங்கள் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் முடிக்க முடியவில்லை. கடைசி நேரத்தில் வந்த இவன் சில நாழிகைகளுக்குள் சிலைப் பணியை முடித்து விட்டான். அதுகண்டு நாங்களே ஆச்சரியம் கொண்டோம். இந்த அதிசய செயல் கண்டு அவனைக் கொண்டாடினோம். அவன் தனிமையில் அந்த அறையில் அமர்ந்து சிலை செய்தான். எங்களை அனுமதிக்கவில்லை. எனவே என்ன நடந்ததென்றே எங்களுக்கு தெரியவில்லை. எங்களை மன்னித்து விடுவியுங்கள் என்று கதறினர். மன்னனுக்கு கோபம் அதிகமானது.

துறவி வேடமிட்டு தங்கத்தை அபகரித்த அந்தக் கயவனை இழுத்துச் செல்லுங்கள். சிறையில் தனியறையில் வைத்து சித்ரவதை செய்யுங்கள். இந்த சிற்பிகளையும் விசாரணை முடியும் வரை சிறையில் வையுங்கள் என்றான். எல்லாச் சிற்பிகளும் கை கூப்பி தில்லையம்பல நடராஜரை வணங்கி பிரார்த்தித்தவாறு சென்றனர். இந்தத் தகவல் போகர் சித்தரின் சித்தத்துக்கு எட்டியது. அவர் தன் சீடர்களுடன் வானமார்க்கமாக கணநேரத்தில் தில்லையம்பலத்தை அடைந்தார். கோபமாக இரணியராஜன் முன்பு தோன்றினார். தன் முன்னால் திடீரென கோபக்கனல் பொங்க நின்ற ஒரு துறவியைக் கண்டு அதிசயித்தனர் இரணியராஜன். நான் போக சித்தர் என்ன காரணத்தினால் என் சீடனை சிறையில் அடைத்தாய். தங்கத்தை வளைக்க செம்பு தேவை என்ற அடிப்படை ஞானமில்லாத நீ இப்படிப்பட்ட முட்டாள் தனங்களைச் செய்வாய் என்பதிலும் ஆச்சரியமில்லை தான் இருப்பினும் குற்றமற்ற என் சீடன் செய்த செயலை மனதில் கொள்ளாமல் என் சீடனிடம் தக்க விசாரணை செய்யாமல் சிறையில் தள்ளி விட்டாய். மூடனே அவனை உடனே வெளியே அனுப்பு என்றதும் இரணியரஜன் கலங்கி விட்டான். சித்தரே தங்கள் தரிசனம் கிடைக்க என்ன பாக்கியம் கிடைக்க என்ன பாக்கியம் செய்தேன். தங்கள் சீடனை வேண்டுமென்றே அடைக்கவில்லை. தங்கத்தால் சிலை செய்ய முடியாது என்ற தகவலை சிற்பிகள் பயத்தில் மறைத்திருக்கின்றனர். தங்கள் சீடர் கருவூராரும் ஒன்றும் சொல்லாமல் சிலையை செய்யவே இப்படி செய்து விட்டேன் என்னை மன்னியுங்கள் என்றான். இப்போதே என் பக்தனை விடுதலை செய் என்று போகர் கூற மன்னன் விடுதலை செய்ய கட்டளையிட்டான். காவலர்கள் சிறைக்குச் சென்றனர். அங்கே கருவூர் சித்தரைக் காணவில்லை. அவர்கள் ஓடிவந்து தகவல் கூறினர்.

கருவூரான் இன்னும் ஒரு நாழிகைக்குள் வந்தாக வேண்டும். தங்கத்துக்காக தானே அவனை சிறையில் அடைத்தாய். இதோ பிடி தங்கம் அந்த சிலையையும் விட மேலான அளவுக்கு உனக்கு நான் தங்கம் தருகிறேன் என்ற போகர் நடராஜர் சிலையின் எடைக்கும் மேலாக தங்கத்தை அங்கே உருவாக்கி இதோ நீ விரும்பும் தங்கம் எடுத்துக் கொள் என் சீடனை என்னிடம் ஒப்படைத்துவிடு என்றார். மன்னன் நடுங்கினான். தில்லையம்பல நடராஜரை மனம் உருகி வேண்டினான். அவனது நிலையை கண்ட போகர் இரணியராஜா கலங்காதே. கருவூரான் சிறையில் தான் இருக்கிறான். சித்தர்களுக்கே உரித்தான சில யோகங்கள் மூலம் அவன் தன்னை மறைத்துக் கொண்டிருக்கிறான். நான் அழைத்தால் வருவான் என்று கருவூரா வெளியே வா என்றார் போகர். அக்கணமே அவர் முன்னால் வந்த கருவூரார் குருவே தாங்கள் கற்றுக் கொடுத்தபடி குறுகிய இடைவெளி வழியே வெளியே வரும் கலை மூலம் சிறையில் இருந்து வெளிப்பட்டேன் என்றார். பின்னர் போகர் மன்னனிடம் நடராஜர் சிலை அமைய வேண்டிய முறை கோயில் எழுப்ப வேண்டியே முறை ஆகியவற்றை போதித்து கருவூராருடன் மறைந்து விட்டார்.

வேத கோஷம் முழங்க அரங்கனை தரிசிக்க வந்தார் கருவூரார். அரங்கனைக் கண் குளிர தரிசித்து முடித்து வெளியே வந்தார். அப்போது நாட்டியம் ஆடும் அபராஞ்சி என்ற ஒரு தாசி அவரது காலடியில் விழுந்தாள். கருவூரார் என்ன விஷயம்? என்பது போல் ஒரு பார்வையில் கேட்டார். சற்று முன் கேட்ட வேத கோஷத்தில் யோக சாதனையில் தனக்குள்ள சில ஐயங்களைத் தீர்க்கச் சொல்லிக் கேட்டாள். இப்படியும் ஒரு தாசியா? பாட்டுக்கு நடனம் மட்டுமே ஆடாமல் அதன் பொருளையும் கேட்ட விதம் அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. அவள் ஆர்வத்தைப் பாராட்டி ஐயத்தை அங்கேயே தீர்த்து வைத்தார். ரங்கநாதரைப் பார்த்து உன் கழுத்து பவழ மாலையை என்னிடம் கொடு என்று கேட்டார். அடுத்த நிமிடம் அரங்கன் தன் கழுத்தில் இருந்த மாலையை கரூராரிடம் கொடுத்தார். அபரஞ்சி உனது கேள்வியால் என்னை வியப்பில் ஆழ்த்தி விட்டாய். ஆகையால் இதை என் பரிசாக வைத்துக் கொள். நீ எப்போது நினைத்தாலும் நான் வருவேன் என்று சொல்லி விட்டுக் கிளம்பி விட்டார். மறுநாள் காலை கோயிலுக்குள் வந்த அபரஞ்சியின் கழுத்தில் அரங்கனின் பழவ மாலை இருந்ததை கண்டு அவள் மீது ஆளுக்கு ஒன்றாய் குற்றச்சாட்டு வைத்தார்கள். கருவூரார் கொடுத்த பரிசு என்பதை அபரஞ்சி கூறி கருவூராரை மனதால் வேண்டினாள். கேள்விக்கு விளக்கம் சொல்லி அரங்கனின் மாலையை கொடுத்து விட்டு சென்றீர்கள். திருட்டு பட்டம் வந்து விட்டது என்று அழுகிறாள். கருவூரார் அங்கே மீண்டும் வந்து அரங்கனை சாட்சிக்கு அழைத்தார். அரங்கன் அசரீரியாய்ச் சாட்சி உரைத்தார். திருவரங்கக் கோயில் நிர்வாகத்தினர் அபரஞ்சியிடமும் கரூராரிடமும் மன்னிப்பு கேட்டார்கள்.

கருவூரார் நெல்லையப்பரிடம் ஒன்றாக கலந்ததற்கு இரண்டு விதமான வரலாறு உள்ளது. முதல் வரலாறு. கருவூரார் சித்தர் இறைவனிடம் ஓடுங்க வேண்டிய நேரம் வந்து விட்டதை உணர்ந்து மீண்டும் தான் பிறந்த ஊராகிய கருவூர் வந்து சேர்ந்தார். அங்கிருந்த வேதியர் ஒருவர் கருவூரார் ஊருக்குள் வந்திருப்பதை அறிந்து கொண்டார். பழைய பகை காரணமாக மன்னனிடம் சென்று முறையிட்டனர் . கரூராரை கொன்று விட மன்னர் உத்தரவிட்டார். கருவூரார் பயந்தவர் போல கோயிலை நோக்கி ஓடினார். காவலர்கள் கருவூராரை பிடிக்க பின் தொடர்ந்து ஓடினார்கள். கருவூரார் ஓடிப்போய் நெல்லையப்பர் சிவலிங்கத்தை தழுவிக் கொள்ள இறைவன் அவரை தம்மோடு ஐக்கியப்படுத்திக் கொண்டார்.

இரண்டாவது வரலாறு கருவூரார் சித்தர் இறைவனிடம் ஓடுங்க வேண்டிய நேரம் வந்து விட்டதை உணர்ந்து மீண்டும் தான் பிறந்த ஊராகிய கருவூர் வந்து சேர்ந்தார். அங்கு உள்ள ஆன்மீகப் போலித் தனங்களை அவர் கடுமையாக சாடினார். அதனால் அவர் மேல் வெறுப்பும் பொறாமையும் பகையும் சொந்த ஊரிலேயே எழுகிறது. குறிப்பாகப் போலியாக நியமங்கள் செய்யும் போலி வைதீகர்கள் சில பேர் அவர் மேல் அதிக பகைமை கொண்டார்கள். கருவூரார் ஒரு துர்மார்க்க வேத நிபுணர் என்று மன்னனிடம் சொன்னார்கள். அதற்கு சான்றாக அவரது வீட்டில் மது மாமிச படையல் வைக்கிறார் என்று மன்னனிடம் சொல்லி அவரை நம்ப வைத்தார்கள். அதே நேரம் சிலர் அவர் வீட்டில் மது மாமிசம் ஒளித்து வைத்தார்கள். கரூராரின் வீட்டில் மன்னனின் கட்டளைப்படி காவலர்கள் சோதனை செய்த போது மதுவும் மாமிசமும் யாகத் திரவியங்களாக மாறி இருந்தது. இதனால் மன்னனிடம் அந்த போலி வைதீகர்களுக்குப் பெருத்த அவமானமாகப் போய்விட்டது. இதனால் அதிக ஆள் பலத்துடன் சென்று சீடர்கள் யாரும் இல்லாத கருவூராரை எளிதாக அடித்து விடலாம் என்று அந்தப் போலி வைதீகர்கள் கிளம்பினார்கள். கரூரார் சிரித்தபடியே பயந்து ஓடுவது போல் நடித்து கோயிலுக்குள் ஓடினார். கரூராரை தொடர்ந்து அவர்கள் விரட்டினார்கள். கருவூரார் ஓடிப்போய் நெல்லையப்பர் சிவலிங்கத்தை தழுவிக் கொள்ள இறைவன் அவரை தம்மோடு ஐக்கியப்படுத்திக் கொண்டார். இறைவனுடன் கலந்து மறைந்த காட்சி தஞ்சைப் பெரிய கோயிலில் ஓவியமாகவும் நெல்லையப்பர் கோயிலில் சிற்ப வடிவிலும் உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதுார் கோவிலின் ராஜகோபுரத்தில் விஜய நகர அரசகால வண்ண ஓவியக் காட்சிகள் பல உள்ளன. அவற்றில் ஒரு காட்சியில் வன்னி மரத்தடியில் உள்ள விநாயகரை ஒருவர் அடுக்கு தீபம் காட்டி பூஜை செய்ய மரத்தின் அருகே கோலொன்றினை ஏந்தி நிற்கும் கருவூரார் ஒரு கையை உயர்த்தி சுட்டி காட்ட மீன் மழை பொழியும் காட்சி உள்ளது. அதில் கருவூர்த்தேவர் கூற என்ற தமிழ் பொறிப்பும் இடம் பெற்றுள்ளது. இதை போல மருத மரத்தின் கீழ் கருவூரார் புடைமருதுார் லிங்க பெருமானைக் கரம் கூப்பி வணங்கும் திருவுருவம் காணப்படுகிறது. இவ்விரு காட்சிகளிலும் தாடி மீசை சடை முடி ஆகியவை இன்றி இளம் வயது கோலத்துடன் தலையிலும் கழுத்திலும் உருத்திராட்ச மாலை தரித்தவராய் காட்சியளிக்கிறார். இந்த காட்சிகள் 17ம் நுாற்றாண்டில்  வரையப்பட்டவை. பின்னர் தஞ்சை பெரிய கோவிலிலும் பிற இடங்களிலும் கருவூர்த் தேவரின் ஓவியங்கள் சிற்பங்களில் அவரை தாடி மீசையுடன் சடாபாரமம் தாங்கியவராய் யோகத்தில் அமர்ந்த நிலையில் காட்டியுள்ளனர்.

கருவூரில் ஒரு பசுபதீஸ்வரர் கோவிலில் கருவூராருக்கு தென்மேற்கு மூலையில் ஒரு தனி சன்னதி உள்ளது. தஞ்சை பெரிய கோயிலின் பிரகாரத்தில் கருவூராருக்கு தனி சன்னதி உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லையப்பர் திருக்கோயிலில் கருவூராருக்கு தனி சன்னதி உள்ளது. வாத காவியம், வைத்திய யோகம், யோக ஞானம், பல திரட்டு, குருநூல் சூத்திரம், மெய்ச் சுருக்கம், கற்பவிதி, முப்பு சூத்திரம், பூரண ஞானம், நொண்டி நாடகம், மூலிகை தைலம், விபரம் கர்ப்ப கூறு, அட்டமாசித்தி, பூசாவிதி இது போன்ற பல நூல்களை இயற்றியுள்ளார் கருவூரார். கற்ப மூலிகைகளைப் பற்றி அநேக பாடல்களை பாடியுள்ளார். பன்னிரு திருமுறைகளில் ஒன்பதாவதாக விளங்கும் திருமுறையில் திருவிசைப்பா திருப்பல்லாண்டு என்ற இரண்டிலும் இவரது திருப்பாடல்கள் அமைந்துள்ளது. தில்லை சிற்றம்பலம், திருக்களந்தை ஆதித்தேச்சரம், திருக்கீழ்கோட்டூர் மணியம்பலம், திருமுகத்தலை, திரைலோக்கிய சுந்தரம், கங்கை கொண்ட சோழபுரம், திருப்பூவணம், திருச்சாட்டியக்குடி, தஞ்சை பெரியகோவில், திருவிடைமருதுார் கோவில்களில் இவர் சிவனை போற்றி பாடல்கள் பாடியுள்ளார்.

அருள்மிகு சுருளிவேலப்பர் திருக்கோயில்

தேனி மாவட்டத்தில் உள்ள சுருளியில் இக்கோவில் உள்ளது. பொதிகை மலையும் சதுரகிரி மலையும் இணைந்த மேற்குத் தொடர்ச்சி மலைப்பிரிவுகளில் சுருளி மலை அமைந்துள்ளது. புராண பெயர் சுருதிமலை. மூலவர் சுருளிவேலப்பர் மற்றும் சுருளி ஆண்டவர். உற்சவர் வேலப்பர். தீர்த்தம் சுரபி தீர்த்தம் சுருளி தீர்த்தம். இத்தலத்தில் இனிய சுருதியுடன் அருவி கொட்டுவதால் சுருதி எனப்பட்ட தீர்த்தம் சுருளி என மருவியது. முருகனுக்கும் சுருளி வேலப்பர் என்ற பெயர் ஏற்பட்டது. ஆண்டிக் கோலத்தில் இருப்பதால் இவர் சுருளியாண்டி என்றும் அழைக்கப்படுகிறார். சுருளி வேலப்பர் மலையில் இயற்கையாகத் தோன்றிய குடவரை சன்னதியில் காட்சி தருகிறார். அருகில் விநாயகர் மகாலிங்கம் சந்தான கிருஷ்ணர் வீரபாகு ராமபிரான் லட்சுமணன் உள்ளனர். முருகன் குடிகொண்டதால் நெடுவேள்குன்றம் என்றழைக்கப்படும் இம்மலையில் அனைத்து தெய்வங்களும் வசிக்கின்றனர் என்பதலால் அனைவருக்கும் தனி சிலைகள் உள்ளன. இங்கு பூதநாராயணப்பெருமாள் கோயிலும் இருக்கிறது. பெருமாள் சன்னதிக்குள் சிவலிங்கம் இருக்கிறது. இதனால் இங்கு விபூதி குங்குமமும் தருகிறார்கள். சடாரி ஆசிர்வாதமும் செய்கிறார்கள். உச்சிக் கால பூஜையின் போது துளசி தீர்த்தம் தருகின்றனர். இக்கோயிலில் பெருமாளுக்கு பரிவார மூர்த்தியாக நரசிம்மரும் சிவனுக்கு தட்சிணாமூர்த்தியும் இருக்கின்றனர். இவர் இடது கையில் சின்முத்திரையுடன் காட்சியளிக்கிறார்.

சுருளியாண்டவர் சந்நதியில் கிழக்கு பாகத்தில் அமைந்துள்ள இமயகிரி சித்தர் குகை மிகவும் பிரசித்தி பெற்றது. இமயமலையில் வாழ்ந்த சித்தர் ஒருவர் சுருளி மலையில் தங்கி தவமியற்றி சிவபெருமான் தரிசனம் பெற்றார். இந்த குகையில் சிவலிங்கம் ஒன்றைப் பிரதிஷ்டை செய்துள்ளார். இது இமயகிரி சித்தர் குகை என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஒருவர் மட்டும் படுத்துக் கொண்டு போகக் கூடிய இந்தக் குகையில் சிறிது தூரம் தவழ்ந்து சென்றதுமே குகையின் உள்ளே பெரிய அறை போன்ற அமைப்பு உள்ளது. சுருளி ஆண்டவர் சன்னதியின் மேற்பாகத்தில் மரத்தின் வேர்களைப் பிடித்து மேலே சென்றால் அங்கு ஆகாசகங்கை வரும் வழியில் பல குகைகளைக் காணலாம். கோயில் உள்ள மலையில் கைலாச குகை என்ற ஒரு குகை உள்ளது. இந்த குகையில் சிவபெருமான் அகத்தியருக்கு காட்சி கொடுத்தபடியால் இந்த குகை கையிலாச குகை என்று அழைக்கப்படுகிறது. சிவனின் திருமணத்தின் போது அனைவரும் இமயமலைக்குச் சென்று விட வடக்கு உயர்ந்து தெற்கு தாழ்ந்தது. இதனால் உலகு சம நிலையை இழக்க சிவன் தென் பொதிகை எனும் இம்மலைக்கு அகத்தியரை அனுப்பி உலகை சமப்படுத்தினார். பின் இங்குள்ள குகையில் அகத்தியருக்கு மணக் கோலத்தில் சிவன் காட்சியளித்தார். இக்குகை தவிர விபூதிக் குகை சர்ப்பக் குகை பாட்டையா குகை கிருஷ்ணன் குகை கன்னிமார் குகை என பல குகைகள் தனித்தனி தீர்த்தங்களுடன் உள்ளன. சுருளி மலையைச் சுற்றி சுமார் 225 குகைகள் உள்ளது. இவற்றில் ரிஷிகள் தேவர்கள் சித்த புருஷர்கள் ஆகியோர் தவமிருந்துள்ளனர். சில குகைகள் பொதுமக்களின் பார்வையில் தென்படக்கூடியது. பிற குகைகள் அடர் வனத்திற்கு உள்ளே யாரும் காணாத படி அமைந்துள்ளது.

கோவில் அருகில் உள்ள மாமரத்தின் அடியில் இருந்து ஊற்று நீர் பொங்கி வந்து கொண்டே இருக்கிறது. 48 நாட்கள் இந்நீரில் கிடக்கும் இலை தழைகள் பாறை போல மாறுகிறது. பாறை மீது நீர் விழுவதால் ஏற்படும் பாசை வழுக்குத் தன்மையின்றி இருப்பது வியப்பிற்குரியது. இங்குள்ள மரம் ஒன்றின் மீது தொடர்ந்து நீர் விழுந்ததில் பாறையாக மாறி காட்சியளிக்கிறது. கோயில் வளாகத்தில் விபூதிப்பாறை உள்ளது. இந்த பாறையில் தீர்த்தம் பட்டு ஈரமான மணல் துகள்கள் காய்ந்த பின் வெண்ணிறத்தில் விபூதியாக மாறுகிறது. இந்த விபூதியையே பிரசாதமாக தருகிறார்கள். ஓம்கார வடிவில் உள்ள இம்மலையில் கன்னிமார்கள் நடனமாடிய ரேகைகளுடன் ஒரு பாறை உள்ளது.

மகாவிஷ்ணுவின் மகளான வள்ளியை மலையரசனான நம்பிராஜன் வளர்த்தார். அவளை முருகப்பெருமான் மணந்து கொண்டார். திருமண சீராக நம்பிராஜன் தனது ஆட்சிக்குட்பட்ட மலைப் பிரதேசங்களைக் கொடுத்தார். அதில் இந்த மலேயும் ஒன்று. இம்மலையில் முருகப்பெருமான் குடிகொண்டார். ஒரு சமயம் சனி பகவான் தன் சஞ்சாரப்படி தேவர்களைப் பிடிக்க வேண்டியிருந்தது. தேவர்கள் தங்களைக் காத்தருளும்படி இங்குள்ள முருகனை தஞ்சமடைந்தனர். சுவாமி அவர்களுக்கு அடைக்கலம் தந்து காத்தருளினார்.

ராவணன் தனது தவத்தால் அண்டசராசரங்கள் அனைத்தையும் ஆளும்படி வரம் பெற்று தேவர்களை கொடுமைப்படுத்தினான். அவனுக்கு முடிவு கட்ட எண்ணிய தேவர்கள் ரிஷிகள் சித்தர்கள் ஆகியோர் இங்குள்ள கைலாசநாதர் குகையில் மகாவிஷ்ணு தலைமையில் ஆலோசனை செய்தனர். அவர்களை அழிக்க ராவணேஸ்வரன் தனது அரக்கர் படையுடன் இங்கு வந்தான். தேவர்களைக் காக்க மகாவிஷ்ணு பூத சொரூபத்துடன் பஞ்ச பூதங்களாக விண்ணுக்கும் மண்ணுக்குமாக நின்றார். அவரது கோலத்தை கண்டு பயந்த ராவனேஸ்வரன் தன் அரக்கர் படையுடன் திரும்பி ஓடினான். இவ்வாறு தேவர்கள் ரிஷிகள் சித்தர்கள் தவம் புரிந்த கைலாசகுகையின் மேல் பகுதியில் சுருளிவேலப்பர் அருள் புரிகிறார். திருமுருகாற்றுப்படையில் மலைகள் அனைத்தும் முருகனுக்கே சொந்தம் எனக்குறிப்பிடும் நக்கீரர் மலைக் கோயில்களை குன்றுதோறாடல் என்கிறார். இத்தலமும் குன்றுதோறாடல் என்றே அழைக்கப்படுகிறது. ஆடி அமாவாசையன்று சுவாமிக்கு விசேஷ பூஜை நடக்கும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 547

கேள்வி: பலரும் கூட்டாக சேர்ந்து பூஜை மற்றும் தர்மம் செய்யலாமா?

இறைவன் அருளால் பலரும் கூட்டாக சேர்ந்து பூஜை செய்வதையோ தர்மம் செய்வதையோ நாங்கள் ஒருபோதும் தடை கூறவில்லை. ஆனால் மனிதர்களுக்குள் தேவையில்லாத கசப்புணர்வு ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. மனம் திறந்து மனதிலே எந்த வஞ்சனையும் சூழ்ச்சியும் சராசரி எண்ணங்களும் இல்லாமல் பெருந்தன்மையோடு யார் வேண்டுமானாலும் ஒன்று சேர்ந்து பூஜைகள் செய்யலாம். எமது பரிபூரண நல்லாசிகள் உண்டு.

தவ்வை என்னும் ஜேஷ்டாதேவி

ஜேஷ்டா தேவி என்பவர் இந்து சமய பெண் தெய்வங்களுள் ஒருவராவார். இவருக்கு தவ்வை மூதேவி அலட்சுமி, சேட்டை, காக்கைக் கொடியோள் பழையோள் கரியசேட்டை கேட்டை மாமுகடி என்று மூதேவிக்குப் பல பெயர்கள் உண்டு. இவள் 14 பெயர்களால் அழைக்கப்படுகிறாள். இவர் விஷ்ணுவின் மனைவியும் லட்சுமிதேவியின் மூத்த சகோதரி ஆவார். மூதேவி என்றால் மூத்த தேவி என்று பொருள். சைவ வைணவப் புராணங்களில் திருமால் பாற்கடலைக் கடைந்த போது திருமகளுக்கு முன்பாக தோன்றியவள் மூதேவி என்று சொல்லப்பட்டுள்ளது. தவ்வையின் காக்கையை தனது கொடியாக கொண்டிருக்கிறாள். வாகனம் கழுதை. அவளின் கையில் துடைப்பம் உள்ளது. தவ்வை ஏழு கன்னியர்களில் ஒருத்தியாக பல காலங்களாக வழிபடப்பட்டு வந்துள்ளாள். ஆய்வாளர்கள் தாய் தெய்வ வழிபாட்டில் இந்த தவ்வை வழிபாடு இருந்துள்ளதாகக் கூறுகின்றனர். ஏழு கன்னியர்களுள் தவ்வை குழந்தைப் பேறு வழங்கும் தெய்வமாக வழிபடப்பட்டுள்ளார். சாக்த வழிபாட்டில் சக்தி பீடத்தின் வடிவான மேரு மலை பூசையில் ஒன்பது படிக்கட்டுகள் அமைக்கப்படுகின்றன. அவற்றினை நவாபரணம் என்று அழைக்கின்றனர். இந்த ஆபரணங்களில் இரண்டாவது ஆபரணமாகத் தவ்வை திகழ்கிறாள்.

பிரதி தவ்வை என்ற பெயரில் இவரை தமிழ் நூல்கள் குறிப்படுகின்றன. திருவள்ளுவர் ஔவையார் போன்றோர் தவ்வையைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர். ஏழாம் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்கிடையில் வாழ்ந்தவராகக் கருதப்படும் தொண்டரடிப் பொடியாழ்வார் தன் திருவாய்மொழியில்

கேட்டிரே நம்பிமீர்காள் கெருட வாகனனும் நிற்க
சேட்டை தன் மடியகத்துச் செல்வம் பார்த்திருக்கின்றீரே

திருமால் இருக்க சேட்டை என்று அழைக்கபடுகின்ற தவ்வையிடம் செல்வத்தை எதிர்பார்க்கிறீர்களே என்று இகழ்ந்து பாடுகிறார். இப்பாடலில் இருந்து தவ்வையிடமே அக்காலத்தில் செல்வத்தை வேண்டி வழிபட்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. சமஸ்கிருதத்தில் ஜேஷ்டா தேவி என்று அழைக்கின்றனர். மூதேவி என்பது நம்மில் அதிகம் புழங்கும் வசைச்சொல். செல்வ வளத்தை அள்ளித்தரும் ஸ்ரீதேவிக்கு எதிர்ப்பதமாக மூதேவி என்ற வார்த்தையை நாம் பயன்படுத்தி வருகிறோம். அமங்கலமானவள் எதற்கும் உதவாதவள் சோம்பேறி என்றெல்லாம் அந்த வார்த்தைக்குப் பொருள்பட ஒரு தவறான கருத்து இருக்கிறது. பண்டைய தமிழர்கள் தவ்வையின் தோற்றத்தை அறிவு சார்ந்து உருவாக்கியிருந்தனர். ஆனால் நாளடைவில் தோற்றத்தை மட்டும் வைத்து தவ்வையை அமங்கலத்தின் அடையாளமாகவும் இழிவாகவும் ஆக்கிவிட்டனர். தவ்வையைப் பார்ப்பது அமங்கலம் என்ற தவறான எண்ணத்தில் உத்திரமேரூரில் உள்ள தவ்வை சிற்பத்தை தரையை நோக்கி சாத்தி வைத்து விட்டனர். இப்படி அவச்சொல்லுக்கு ஆளாகிக்கொண்டிருக்கும் மூதேவிதான் நம் முன்னோரின் பிரதான தெய்வமாக இருந்திருக்கிறாள். மூதேவி தான் செல்வத்துக்கான தெய்வமாகவும் வணங்கப்பட்டிருக்கிறாள்.

இயற்கையிலிருந்து நமது வழிபாடு தொடங்குகிறது. மரங்களை வழிபடும் மரபுக்கு கந்தழி என்று பெயர். தங்களைக் காப்பாற்றுவதற்காக யுத்த களத்திற்குச் சென்று உயிரிழக்கும் வீரர்கள் தலைவர்களின் நினைவாக ஒரு கல்லை நட்டு அதைக் கடவுளாக வழிபடுவார்கள். அதற்கு நடுகல் வழிபாடு என்று பெயர். இவை அனைத்தையும் விட மேலானது பெண் தெய்வ வழிபாடு. மாரி தெய்வமாக மழையையும் நீர் மகளிராக நதிகளையும் தாய் தெய்வமாக கொற்றவையையும் வழிபடுவது மரபு. கொற்றவைக்கு அடுத்ததாக சங்க இலக்கியங்களில் அதிகமாகப் பாடப்படும் தெய்வம் மூதேவி. தவ்வை என்ற பெயரில் பல இலக்கியங்களில் மூதேவி குறிப்பிடப்படுகிறாள். நம் முது தந்தையரை எப்படி மூதாதையர் என்று அழைக்கிறோமோ அப்படித்தான் மூத்த தேவிக்கு மூதேவி என்ற பெயர் வந்தது. அக்காவைக் குறிக்கும் சொல்லான அக்கை என்கிற வார்த்தை எப்படி தமக்கை ஆனதோ அதேபோல் அவ்வை என்ற வார்த்தை தவ்வை ஆகியிருக்கலாம் என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். அப்படியெனில் தவ்வை யாருக்கு அக்கா? செல்வத்தின் அடையாளமாகக் கருதப்படும் திருமகளுக்கு. நெற்கதிர்களின் அடையாளம் திருமகள். நெற்கதிர்கள் செழித்து வளர வேண்டும் என்றால் உரம் மிக அவசியம். இங்கே உரத்தின் அடையாளமாக உரமாக திகழ்பவள்தான் தவ்வை. அதன் காரணமாகவே பெரும்பாலான தவ்வைச் சிற்பங்கள் வயல்வெளிகளை ஒட்டியே கிடைத்திருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னர் கன்னியாரிகுமரியில் கிடைத்த தவ்வைச் சிற்பங்களே அதற்குச் சான்று.

தவ்வை பற்றி திருக்குறளில் குறிப்பு இருக்கிறது. அதேபோல் தொண்டை நாட்டுச் சிற்றரசனான பார்த்திபேந்திர வர்மன் சேட்டையார் கோயிலுக்கு மானியமாக 1148 குழி நிலம் வழங்கியதாக உத்திரமேரூர் கல்வெட்டில் சான்றுகள் உள்ளன. சேட்டை மூதேவியின் மற்றொரு பெயர். பேரங்கியூர் தென் சிறுவலூர் ஆகிய இடங்களில் கிபி எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தவ்வைச் சிற்பங்கள் கிடைத்துள்ளன. தவ்வைக்குத் தனியாகக் கோயில்களும் இருந்திருக்கின்றன. பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தவ்வைக் கோயில் ஒன்று 2010 ஆம் ஆண்டு பழநியில் கண்டு பிடிக்கப்பட்டது. கிபி 13 ஆம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் தவ்வை வழிபாடு சிறப்பாக நடந்து வந்தது. இதற்கு ஆதாரமாகப் பல தொல்லியல் சான்றுகள் உள்ளன. தவ்வையின் சிலை எவ்வித சிற்ப இலக்கணங்களுடன் இருக்க வேண்டும் என்பதற்கு காரணாகமம் சுப்பிரபேதாகமம் போன்ற ஆகமங்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இதுவரை கிடைத்த தவ்வைச் சிற்பங்கள் எல்லாம் செழித்த மார்புடனும் பருத்த வயிற்றுடனுமே காணப்படுகின்றன. இதுவே அவள் வளமை தெய்வம் என்பதற்கான சான்று.

பல்லவர்களின் ஆட்சிக் காலமான 8 ஆம் நூற்றாண்டில் தமிழர்களின் தெய்வமாக தவ்வை வழிபடப்பட்டுள்ளார். பல்லவர்கள் அமைத்த கோயில்களில் தவ்வைக்குச் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றுள்ளது. நந்திவர்ம பல்லவன் தவ்வையைக் குலதெய்வமாக வழிபாடு செய்துள்ளார். பல்லவர்கள் காலத்திற்குப் பிறகு பிற்காலச் சோழர்களின் காலத்திலும் தவ்வை வழிபாடு இருந்துள்ளது. அழுக்கு நாற்றம் துன்பம் புலம்பல் அடிக்கடி கொட்டாவி விடுதல் தலைவிரித்து போடுதல் எப்போதும் அழுக்கு ஆடைகளை அணிதல் அலங்கோலமாக இருத்தல் எதிர்மறையான எண்ணங்கள் தீராத மனக்கஷ்டம் இவற்றில் ஒன்று இருந்தாலே வரிசையாக எல்லாமே நம்மிடம் குடி புகுந்துவிடும். தவ்வை என்னும் ஜேஷ்டாதேவியை வழிபட்டால் இவை அனைத்தும் நீங்கி விடும்.

வடமொழியில் ஜேஸ்டா என்றால் மூத்தவள் என்று பொருள். காஞ்சி கயிலாசநாதர் ஆலயத்தில் ஜேஸ்டா (தவ்வை) தேவிக்குத் தனி சந்நிதி இருக்கிறது. திருவானைக்காவல் வழுவூர் போன்ற இடங்களில் தவ்வைச் சிற்பங்கள் வணங்கப் படுகின்றன. திருப்பரங்குன்றத்தில் தவ்வைக்குக் குடைவரைக்கோயில் ஒன்று உள்ளது. சப்த மாதா வழிபாட்டிலும் ஜேஸ்டா தேவிக்கு (தவ்வை) இடம் உண்டு. வடநாட்டு தாந்திரீக சாக்த மரபுகளிலும் தவ்வை சக்தியின் பத்து வடிவங்களில் ஒன்றான தூமாதேவியாகப் போற்றி வழிபடப்படுகிறாள். தூமாதேவிக்கு காஷ்மீரில் தூம்ராகாளி என்ற பெயரில் தவ்வைக்குக் கோயில் ஒன்று உள்ளது. இந்தியா முழுவதும் தவ்வைக்குச் சிறு சிறு சிலைகள் கோயில்கள் இருந்தாலும் தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் சிலைகளும் கோயில்களும் உள்ளன. தவ்வைக்கு வாராணாசியிலும் அஸ்சாமின் கௌஹாத்தியிலுள்ள காமாக்யாவிலும் கோயில் அமைந்துள்ளது. திருப்பதியில் உள்ள நீலாத்ரி மலையில் நீளா தேவிக்கு கோயில் அமைந்துள்ளது. திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள கமலமுனி சித்தர் பீடம் நுழைவு வாயிலில் ஜேஷ்டாதேவியின் சிலை அமைந்துள்ளது. மயிலாடுதுறை வழூவூரிலுள்ள வீரட்டேஸ்வரர் கோயிலில் மேற்கு திருச்சுற்றிலுள்ள மேடையில் மூத்ததேவி உருவம் வைக்கப்பட்டுள்ளது. மூத்த தேவியானவள் தனது வலது பக்கத்தில் மகன் மாந்தனுடனும இடது பக்கத்தில் மகள் மாந்தியுடனும் அமர்ந்த கோலத்தில் ஒரே பீடத்தில் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இத்தலத்திலும் அச்சிற்பத்தை தென்மேற்கு மூலையில் வைத்துள்ளனர். திருக்கொண்டீச்வரம் பசுபதீஸ்வரர் கோவிலில் ஜேஷ்டா தேவி இடம் பெற்றுள்ளாள். இத்தலத்தில் இவள் ஒரு அனுக்கிரக தேவதையாக அருள்பாலிக்கிறார்.

திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயிலில் ஜேஷ்டாதேவிக்கு சிலை உண்டு. பல்லவன் இராச சிம்மன் கட்டிய காஞ்சி கயிலாசநாதர் கோயிலிலும் கும்பகோணம் கும்பேசுவரர் கோயிலில் மங்களாம்பிகை சன்னிதிக்கு வடமேற்கேயும் வெடால் ஆண்டவர் திருக்கோயில் தென் புறத்திலும் சேஷ்டாதேவியின் திருவுருவம் நல்ல கட்டமைப்புடன் கூடிய இடத்தில் உள்ளது. திருச்சி மாவட்டம் உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் (மார்க்கண்டேயருக்கு மீண்டும் ஜீவன் அளித்ததால் சிவபெருமானுக்கு இப்பெயர்) கோவிலில் ஜேஷ்டாதேவியின் சிலை வித்தியாசமான வடிவமைப்பில் உள்ளது. ஓரையூர் சிவன் கோயில் கடலூர் மாவட்டம் குளித்தலை கடம்பவனநாதர் கோயில் திருச்சுற்றில் உள்ளது. சேலம் ஸ்ரீ சுகவனேஸ்வரர் கோயில் திருச்சுற்றில் தென்மேற்கு மூலையில் ஸ்ரீ மகாலட்சுமி சன்னதிக்கு அருகே தனிக்கல்லாக வைக்கப்பட்டுள்ளது. மோகனூர் அசலதீபேசுவரர் கோயில் சுற்றுசுவரில் பதியப்பட்டுள்ளது. திருமுக்கூடலூர் அகத்தீசுவரர் கோயில் திருச்சுற்றில் உள்ளது. சிறீராமசமுத்திரம் வாலீசுவரர் கோயில் கோயிலுக்கு வெளியே பிள்ளையார் நவக்கிரக சன்னதி அருகே உள்ளது.