பிருங்கி முனிவர்

உலகிலேயே மூன்று கால்களை உடைய பிருங்கி முனிவர் சிவபெருமானை தவிர பிற தெய்வத்தை வழிபட மாட்டேன் என்கிற கொள்கை கொண்டவர். இவர் நாள்தோறும் சிவனை மட்டும் வழிபட்டு வந்தார். அருகில் உள்ள அம்பாளை கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை. இதைக்கண்ட சக்தி சிவனிடம் முறையிட்டாள். நாம் ஒரே உருவமாய் நிற்போம் என்று கூறி அம்மையப்பனாய் நின்றனர். அன்று பூஜைக்கு வந்த பிருங்கிரிஷி அம்மையும் அப்பனும் ஓர் உருவாய் இருப்பதைக் கண்டு யோசித்து பின்னர் வண்டு உரு எடுத்து சிவனை மட்டும் வலம் வந்தார். இதை கண்ட சக்தி பிருங்கியின் உடற்பாகத்தில் உள்ள தனது கூறாகிய சக்தியை நீக்கினாள். அதனால் வலிமை இழந்த பிருங்கி தடுமாறினார். சிவபெருமான் வலிமையுள்ள மூன்றாவது கால் ஒன்றை கொடுத்து அருளியதோடு முனிவரே சக்தியில்லையேல் சிவன் இல்லை என்பதை உணர்ந்திர்ப்பாய். சிவசக்தி வழிபாடே சிறந்தது என்றார். அறியாது நான் செய்த இத்தவறுகளை மன்னித்தருள்வாய் என்று சக்தியிடம் பிருங்கி முனிவர் மன்னிப்பு கோரினார். அறியாமல் செய்த தவறை மன்னித்தேன் என அன்னையும் அருள் வழங்கினார். பிருங்கி முனிவரின் சிற்பம் இருக்கும் இடம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் காஞ்சிபுரம்.

அரோகரா என்ற சொல்லின் பொருள்

ஹர ஹரோ ஹரா என்ற மந்திரத்தின் சுருக்கமே அரோகரா ஆகும். அரன் என்றால் காப்பவன். ஹர என்றால் நீக்குபவன். அரோகம் என்றால் நோயில்லாமல். அரோகரா என்றால் இறைவனே நோய் நொடிகளை நீக்கி துன்பங்களில் இருந்து காத்து நற்கதி அருள்வாயாக என்பதாகும்.

கண்டபேருண்டா

வலிமை கொண்ட இரு தலைகள் கொண்ட பறவையான கண்டபேருண்டா மல்லிகார்ஜூனா கோவிலில் புடைப்புச் சிற்பமாக உள்ளது. 1399 முதல் 1947 வரை மைசூர் சாம்ராஜ்யத்தை ஆண்ட உடையார்களின் அரச முத்திரையாக இந்த வலிமைமிக்க பறவை இருந்தது. தற்போது கர்நாடக அரசின் அதிகாரப்பூர்வ சின்னமாக உள்ளது.

யானையின் ஆசிர்வாதம்

யானையிடம் ஆசீர்வாதம் வாங்குவதில் தெய்வீக ரகசியம் உள்ளது. மூலிகை தாவரங்களை மட்டும் சாப்பிட்டு மிருகங்களில் பலமுள்ளதாக திகழும் உயிரினம் யானை. மகத்தான தெய்வீக அம்சங்கள் பொருந்தியது. உலகில் வாழும் உயிரினங்களில் இரண்டு நாசித் துவாரங்கள் வழியாகவும் ஒரே நேரத்தில் சுவாசிக்கும் தன்மை யானைக்கு மட்டுமே உண்டு.

நம்முடைய ஒரு நாசி வழியாகவே எப்போதும் சுவாசம் நடைபெறும். தினமும் 24 நிமிடங்களுக்கு ஒருமுறை நம்முடைய சுவாசம் ஒரு நாசித் துவாரத்திலிருந்து இன்னொரு நாசி துவாரத்தில் மாறிக் கொண்டே இருக்கும். இதற்கு சூரியகலை சந்திரகலை என்ற பெயரும் உண்டு. வலது நாசி வழியாக சுவாசம் நடைபெறும் போது சூரியகலை என்றும் இடது நாசி வழியாக சுவாசம் நடைபெறும் போது சந்திரகலை என்றும் பெயர். சுவாசத்தை கட்டுப்படுத்தும் மற்றும் முறைப்படுத்தும் ஆன்மீக முயற்சிகளுக்கு சரகலை என்று பெயர். பிராணயாமம் வாசியோகம் போன்றவைகளும் நமது சுவாசத்தை தெய்வீகத் தன்மைக்கு முன்னேற்றம் அடைய வைக்கும் ஆன்மீக பயிற்சி முறைகளாகும். யோகப் பயிற்சி செய்பவர்கள் வாசியோகம் அல்லது பிராணாயாமத்தில் மேல் நிலையை எட்டியவர்கள் எப்போதும் இரண்டு நாசித் துவாரங்கள் வழியாகவும் சுவாசிக்கும் திறமையை பெற்று விடுவார்கள். இதற்கு சுழுமுனை வாசி யோகம் என்று பெயர்.

இரண்டு நாசிகளாலும் சதாசர்வ காலமும் சுவாசிக்கும் தன்மையை பெற்றவர்கள் ஞானிகளாகின்றார்கள். ஞானிகளிடம் ஆசி பெற்றால் நன்மை நடைபெறுவது போலவே இயற்கையாகவே சுழுமுனை வாசியோகம் உள்ள யானை அதன் தும்பிக்கையை தலையில் வைத்து ஆசீர்வாதம் செய்வதால் ஆசிர்வாதம் பெற்றவர்களுக்கு அவர்களின் மூச்சுக்காற்று சீராக செயல்பட்டு மனதில் தீய எண்ணம் வராமல் தடுத்து நல்ல சிந்தனைகளை வளரச் செய்யும். நல்ல சிந்தனைகள் இறைவனை சிந்திக்கும் ஆற்றலை வளர்க்கும். ஒழுக்கத்தை கொடுக்கும். தர்ம சிந்தனை வளரும். மனதில் அன்பு நிறைந்து இருக்கும். இறைவனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு எந்நாளும் துன்பம் இல்லை என்பதுதான் இதன் பின்னணியில் உள்ள தெய்வீக ரகசியம்.

மூச்சுக்காற்று

ஒரு மனிதன் உட்கார்ந்திருக்கும் போது 12 எண்ணிக்கை மூச்சும் நடக்கும் போது 18 எண்ணிக்கை மூச்சும் ஒடும் போது 25 எண்ணிக்கை மூச்சும் தூங்கும் போது 32 எண்ணிக்கை மூச்சும் உடலுறவின் போதும் கோபம் முதலான உணர்ச்சிகளில் சிக்கும் போது 64 எண்ணிக்கை மூச்சும் 1 நிமிடத்தில் ஓடுகின்றன.

இந்த மூச்சினுடைய அளவு எவ்வளவு மிகுதியாகிறதோ அதற்கு தகுந்தாற்போல் ஆயுள் குறைகிறது. அதனால்தான் வள்ளற்பெருமான் நாம் உடற்பயிற்சி செய்ய வேண்டுமெனில் மெல்லென நடை பயில வேண்டும் என்று கூறுவார். அதாவது நமது மூச்சுக்காற்று வெளியில் அதிக அளவில் செல்ல அவர் அனுமதிக்கவில்லை. மேலும் நம்பெருமானார் ஒருவன் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் உறங்க பழக்கப்படுத்திக் கொண்டால் அவன் 1000 வருடங்கள் வாழலாம் என்றும் கூறுவார். நாம் சும்மா உட்கார்ந்திருந்தால் 12 எண்ணிக்கை மூச்சுதான் செலவாகும். அதுவே உறங்கினால் 32 மூச்சு செலவாகிறது. அதாவது நாம் தூங்கும் போது 20 மூச்சு ஒரு நிமிடத்திற்கு விரையம் அடைகிறது. எனவே தூக்கத்தை குறைக்க வேண்டும். அதுபோல் ஒருவன் கோபப்பட்டால் 52 மூச்சு ஒரு நிமிடத்திற்கு விரையமாகிறது. எனவே கோபம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100. {21,600/1440=15. ஒரு நாளுக்கு 1440 நிமிடங்களாகும் (60×24=1440)} மேற்கண்டவாறு கணக்கிட்டால் ஒரு மனிதன் சராசரியாக

100 ஆண்டுகள் வாழ்ந்தால் அவன் ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சுகள் விட்டுள்ளான்.
93 ஆண்டுகள் வாழ்ந்தால் அவன் ஒரு நிமிடத்திற்கு 16 மூச்சுகள் விட்டுள்ளான்.
87 ஆண்டுகள் வாழ்ந்தால் அவன் ஒரு நிமிடத்திற்கு 17 மூச்சுகள் விட்டுள்ளான்.
80 ஆண்டுகள் வாழ்ந்தால் அவன் ஒரு நிமிடத்திற்கு 18 மூச்சுகள் விட்டுள்ளான்.
73 ஆண்டுகள் வாழ்ந்தால் அவன் ஒரு நிமிடத்திற்கு 19 மூச்சுகள் விட்டுள்ளான்.
66 ஆண்டுகள் வாழ்ந்தால் அவன் ஒரு நிமிடத்திற்கு 20 மூச்சுகள் விட்டுள்ளான்.

இவ்வாறு நிமிடத்திற்கு ஒவ்வொரு மூச்சு கூடும் போதும் நாம் நம் ஆயுளில் 7 வருடங்களை இழக்கிறோம் என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும். சராசரியாக

1 நிமிடத்தில் 2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு வாழலாம்.
1 நிமிடத்தில் 1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு வாழலாம்.
0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை (இது சித்தர்களால் மட்டுமே முடியும்).

சங்கநிதி பதுமநிதி

பக்தர்கள் எவ்வளவு செல்வம் கேட்டாலும் அள்ளிக் கொடுக்கும் லட்சுமி தேவிக்கு உதவியாக சிவ பெருமானால் நியமிக்கப்பட்டவர் அழகாபுரிப் பட்டிணத்தைச் சேர்ந்த வைச்ரவணன். ஈஸ்வரன் பட்டம் பெற்ற இராவணனின் தம்பி. பல வருடங்கள் சிவபெருமானை நோக்கி கடும் தவம் செய்ததின் பலனாக சிவபெருமானின் அருளைப் பெற்றார். லட்சுமி தேவியின் செல்வங்களை பாதுகாக்கும் காவலராக சிவபெருமானால் நியக்கப்பட்டு லட்சுமி தேவியால் குபேர பட்டம் பெற்றார். சிறந்த சிவபக்தர். ஈசனின் கட்டளைப்படியும் லட்சுமி தேவியின் ஆசியுடனும் வைச்ரவணன் ஒரு நல்ல நாளில் செல்வத்தை நிர்வகிக்கும் குபேர பதவி ஏற்றார். அதன்பின் இன்றளவும் அவர் பெயர் வைச்ரவணன் என்பது மாறி குபேரன் என்றே ஆயிற்று. குபேரப் பதவியை அடைந்ததனால் அவருக்கு திருமகளின் வெண்சங்கும் கலைமகளின் வெண்தாமரையும் வரமாகக் கிடைத்தன. அந்த இரண்டையும் இரு தேவகணங்களாக்கி தன்னுடைய நிர்வாகப் பணிக்கு துணையாக வைத்துக் கொண்டார் குபேரன். வெண்சங்காய் வந்த தேவகணத்திற்குப் பெயர் சங்கநிதி. செல்வத்தை அருள்பவர். வெண்தாமரையாய் வந்த தேவகணத்திற்குப் பெயர் பத்மநிதி. அறிவினை அருள்பவர்.

ஒன்பது வகையான நிதிகளுள் (நவ நிதிகள்) சங்க நிதிக்குரிய தெய்வமாக சங்க நிதி உள்ளார். இவரை சங்க லட்சுமி எனவும் அழைக்கின்றனர். சங்க நிதி தன்னுடைய கைகளில் செல்வச் செழிப்பினைக் குறிக்கும் அடையாளமான வலம்புரிச் சங்கினை வைத்துள்ளார். கோயில்களின் வாயில்கள் சிலவற்றில் ஒருபுறம் சங்கநிதி புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் பதுமநிதி புடைப்புச் சிற்பம் உள்ளது.

சங்கம் பதுமம் மகாபதுமம் மகரம் கச்சபம் முகுந்தம் குந்தம் நீலம் வரம் ஆகியன ஒன்பது நிதிகளாகும். இவற்றை குபேர சம்பத்துகள் என அழைக்கின்றனர். இந்த ஒன்பது நிதிகளில் சங்கநிதி மற்றும் பதும நிதி இரண்டிற்கு மட்டுமே உருவங்கள் உள்ளன. சங்கநிதி பதுமநிதி என இருநிதிகளும் எப்போதுமே ஒருசேர இருக்கின்றனர். பெரும்பாலும் எல்லா சிவன் கோவில்களிலுமே இந்த இருவரின் சிற்பங்களும் கோபுரத்திலோ சற்று உயரமான இடத்திலோ அமைக்கப்பட்டிருக்கும். அறிவுச் செல்வமாக இருந்தாலும் பொருள் செல்வமாக இருந்தாலும் கேட்டதை கொடுப்பவர் ஈசன். கோவிலுக்கு வந்து கேட்கும் பக்தர்களின் உணர்வுகளை மேலிருந்து கவனித்து பார்த்து பக்தரின் நடை உடை பாவணைகளை ஆராய்ந்து பக்தர்களுக்கு இறைவன் மீது உள்ள நம்பிக்கையையும் அந்த பக்தரின் தேவையையும் அளவிட்டு நிர்ணயம் செய்து எவ்வளவு அறிவுச் செல்வத்தையும் எவ்வளவு பொருள் செல்வத்தையும் பக்தர்களுக்கு அளிக்கலாம் என முடிவு செய்து குபேரனிடம் தருவதுதான் இவர்கள் பணி. அதன்பின் ஈசனின் வரப்படி அந்த பக்தர்களுககு செல்வங்களை அளிக்க வேண்டியதுதான் குபேரரின் பணி.

இவர்களின் முக்கியத்துவம் உணர்ந்துதான் கருவூர்த் தேவர் தன்னுடைய பிரியமான இராஜராஜ சோழனை, எப்போது பெரிய கோவிலுக்குச் சென்றாலும் மதிலின் வடமேற்கே உள்ள அணுக்கன் வாயில் வழியாக உள்ளே செல்லச் சொல்வாராம். அந்த வாயிலில் சங்கநிதி பத்மநிதி சிற்பங்கள் தவிர வேறு எந்த தெய்வத்தின் சிற்பமும் காண முடியாது. இதன் காரணமாகத்தான் கோவிலுக்கு வரும்போது குளித்து விட்டு தூய ஆடை அணிந்து வம்பு தும்பு பேசாமல் இறை சிந்தனையுடன் பக்தியுடன் கோவிலை வலம் வரவேண்டும் என்று முன்னோர்கள் வரையறை செய்திருந்தனர்.

ஆதிசங்கரரின் கடைசி உபதேசம்

ஆதிசங்கரர் கடைசியாக செய்த உபதேசம் ஸோபான பஞ்சகம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. ஸோபானம் என்றால் படிகளின் வரிசை என்று பொருள். பங்சகம் என்றால் ஐந்து என்று அர்த்தம். ஸோபான பஞ்சகம் என்பது ஐந்து சுலோகங்கள் கொண்ட சிறிய நூலாகும். இதனை உபதேச பஞ்சகம் அல்லது ஸாதனா பஞ்சகம் எனவும் கூறுவர். இதில் சங்கரர் மோட்ச சாம்ராஜ்யத்தை அடைய நாற்பது படிகளைக் கடக்க வேண்டும் என்று விளக்குகிறார்.

  1. தினந்தோறும் தவறாமல் வேதம் ஓது. அதில் விதித்துள்ள கர்மாக்களை முறைப்படி செய். பகவானை திருப்தி செய்ய பூஜைகள் செய். இவ்வாறு நீ செய்யும் கர்மாக்களின் பலனை எதிர்நோக்காமல் இது பகவானுக்கு என அர்ப்பணம் செய்து விடு. வாழ்க்கை நெறி முறைகளை மீறி நடந்ததினால் குவிந்துள்ள உன் பாவ மூட்டையைச் சிறிது சிறிதாகக் கரைத்து விட்டு விடு. இதனால் சித்த சுத்தி ஏற்படும். இந்நிலையில் சம்சார தோஷங்களை துருவி அலசிப்பார்த்தால் ஞான மார்க்கத்தில் அது கொண்டு விடும். இப்போது உனக்கு நித்யா நித்ய வஸ்துக்களின் அறிவு ஏற்படும். அநித்ய வஸ்துக்களில் வைராக்கியம் ஏற்படும் போது இடையில் தடை ஏற்படுமாகின் வீட்டை விட்டு (அடுத்த ஆசிரமத்தில் நுழைந்து விடு) வெளிச் சென்று விடு.
  2. நீ சத்ஸங்கத்திலேயே நிலைத்திரு. பகவத் பக்தியை திடமாக்கிக் கொள். சமாதி சட்க ஸம்பத்திகளுடன் நீ மோட்ச வேட்கையோடு ஆத்ம விசாரம் செய். பின்னர் கர்மாக்கள் பிறவிச்சுழலில் தள்ளிவிடும் என உணர்ந்து கர்மாக்களை விட்டு விடு. பிறகு ஆத்ம ஞானி ஒருவரை சரணடைந்தால் அவர் கருணை கூர்ந்து ஆத்ம ஞானத்தை உபதேசிப்பார். உபநிஷத்துக்களில் கூறும் தத் த்வம் அஸி (நீயே அதுவாக இருக்கிறாய் என்று பொருள்) போன்ற மகா வாக்கியங்களின் உட்பொருளை உணர்ந்து கொள்வாயாக.
  3. மகா வாக்யார்த்தங்களை விசாரணை செய். ச்ருதியை பிரமாணமாகக் கொள். வேதங்கட்கு மாறாக வாதாடுவோரிடமிருந்து விலகி இரு. வேதங்களின் உட்கொருளை உணர தர்க்கம் என்ற புத்திக் கூர்மையை ஆயிதமாகக் கொண்டு அக்ஞானம் என்ற அசுரனை வெட்டிவிடு. நான் உடலல்ல பிரம்மமே என்பதை உணர்ந்து கொள். இவ்வறிவு பெற்ற பின் அகந்தையை அணுக விடாதே. அறிவாளிகளிடம் வாதம் செய்யாதே.
  4. பசி என்ற நோயைத் தீர்க்க மருந்தெனக் கருதி கிடைத்த உணவை மிதமாக உட்கொள். நாவிற்கு ருசியான உணவில் ஆசையைத் துறந்து பிச்சை எடு. சுகத்தையும் துக்கத்தையும் சமமாகக் கருதிக் செயல்படு. பொன் போன்ற நேரத்தை வெட்டிப் பேச்சில் ஈடுபடுத்தாதே. பதவியில் உள்ளவர்களையும் தனவான்களையும் புகழ்ந்து தன் காரியததைச் சாதித்துக் கொள்ள விரும்பாதே.
  5. ஏகாந்தமான இடத்தில் ஆசனத்தில் அமர்ந்து பர பிரம்மத்தைப் பற்றியே சிந்தித்திரு. பலன் தரத் தொடங்கிவிட்ட கர்மாக்களின் பலனைப் புரதத்தே தீர்த்துவிடு. பிரம்மத்திலேயே நிலைத்திருப்பதில் தயக்கம் காட்டாதே. பிரம்மமும் பூர்ணம். இந்த ஜகமும் பூரணம். பூர்ணமான பிரம்மத்திலிருந்து பூர்ணமான ஜகம் வந்த பின் எஞ்சியிருப்பதும் பூர்ணம் என அறிந்து பூர்ணாத்மாவினை தரிசனம் செய். நீ செய்த கர்மாக்களின் பலனை ஞானத்தால் எரித்து விடு.

என் அருமை சிஷ்யர்களே உங்களுக்கு இதுவே என் இறுதியான உபதேசம் என ஆதிசங்கரர் அருளினார்.

சிரஞ்சீவி என்றால் என்ன அர்த்தம்?

மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்பவர்களை சிரஞ்சீவி ஆவார்கள். அஸ்வத்தாமன் மகாபலி வியாசர் அனுமன் விபீஷணன் கிருபாச்சாரி பரசுராமன் மார்கண்டேயன் ஆகியோர் சப்த சிரஞ்சீவிகள் ஆவார்கள். மரணமில்லாப் பெருவாழ்வு எய்தியிருக்கும் இவர்கள் பல யுகங்களாக தங்களின் உடலுடனே தங்கள் ஆன்மாவுடன் இந்த உலகத்தில் தற்போதும் உலவிக்கொண்டு தானிருக்கிறார்கள். தகுதி பெற்றவர்களுக்கே தங்களை வெளிப்படுத்திக் காட்டிக் கொள்வார்கள். இந்த சிரஞ்சீவிகளில் முக்கியமானவர் மார்கண்டேயன். இவரை காப்பாற்ற வேண்டி சிவபெருமான் காலனையே காலால் உதைத்தார். மார்கண்டேயனுக்கு மட்டும் அது எப்படி சாத்தியமாயிற்று? இதன் பின்னணியில் மிகப் பெரிய செய்தி அடங்கியிருக்கிறது.

மார்கண்டேயனுக்கு இளம் வயதில் மரணம் சம்பவிக்கும் என்றும் அவனுக்கு அல்பாயுசு தான் என்றும் அவன் தந்தையான மிருகண்டு மகரிஷிக்கும் தெரியும். ஆகையால் மகனை காக்க விரும்பிய மிருகண்டு முனிவர் அவனுக்கு உபநயனம் செய்வித்த பின்னர் பெரியோர்கள் எவரை சந்தித்தாலும் தயங்காது அவர்கள் காலில் விழுந்து நமஸ்கரித்து அவர்களது ஆசிகளை பெற்று வருவாயாக என்று பணித்தார். மார்கண்டேயனும் அதே போல தான் பார்க்கும் பெரியவர்கள் காலில் விழுந்து விழுந்து ஆசி பெற்று வந்தான். சப்த ரிஷிகள் ஒருமுறை மிருகண்டு முனிவரின் ஆஸ்ரமத்திற்கு வந்த போது மார்கண்டேயன் இவ்வாறு அவர்களிடம் வீழ்ந்து ஆசி பெற அவர்களும் தீர்க்கா யுஷ்மான் பவ என்று வாழ்த்தி விட்டார்கள். பிறகு தான் தெரிந்து கொள்கிறார்கள் அவனுக்கு 12 வது வயதில் மரணம் சம்பவிக்கும் என்று. என்றும் சத்தியத்தையே பேசும் சப்தரிஷிகளின் வாக்கு பொய்க்குமா? இருப்பினும் இந்தப் பிரச்னையை பிரம்மாவிடம் கொண்டு செல்கிறார்கள். பிரம்மாவிடமும் விழுந்து ஆசி பெறுகிறான் மார்கண்டேயன். அவரும் அதே போல ஆசி வழங்கி விடுகிறார்.

மார்க்கண்டேயன் இப்படித் தான் பார்க்கும் ஞானிகள் அனைவரிடமும் ஆசி பெற்றான். அவர்கள் அனைவரது ஆசியும் சேர்ந்து அவனது தலையெழுத்தையே மாற்றி விடுகிறது. சத்தியத்தை கடைபிடிக்கும் ஞானிகளின் ஆசியை நிறைவேற்றுவது பரம்பொருளின் கடமையல்லவா? ஆகவே தான் சிவபெருமான் தோன்றி மார்கண்டேயனை காத்ததோடு மட்டுமல்லாமல் அவன் என்றும் சிரஞ்சீவியாக இருப்பான் என்று வரமும் தருகிறார்.

பகவான் கிருஷ்ணர் தம்மினும் பெரியோர்களை கண்டால் தவறாது விழுந்து வணங்குவார். பெரியோர்களை விழுந்து வணங்குவது என்பது நமது பாரம்பரியங்களில் ஒன்று. எனவே வயதிலும் தகுதியிலும் சிறந்து விளங்கும் பெரியோர்களை கண்டால் அவர்களை விழுந்து வணங்கி அவர்களது ஆசியை பெறவேண்டும். அது தீய விதியை மாற்றி நன்மையை கொடுத்து காக்கும் அரண் போல் இருக்கும்.

வினாச காலே விபரீத புத்தி

வினாச காலே விபரீத புத்தி இதன் பொருள் அழிவு ஒருவனை நெருங்கும் போது அவனது அறிவு வேலை செய்வதில்லை என்பதாகும். இதற்கு உதாரணம்

அனுமான் இலங்கை நகரை தீக்கிரையாக்கி விட்டு சென்ற பின் ராவணனுக்கு கவலை அதிகரித்தது. தனது அமைச்சர்களை கூட்டி ஆலோசனை நடத்தினான். கும்ப கர்ணனும் விபீஷணனும் ராவணது செயலை கண்டித்தனர். கும்ப கர்ணன் பேசும்போது சீதையை அபகரித்து வருவதற்கு முன்பு செய்திருக்க வேண்டிய ஆலோசனையை இப்போது செய்வதில் என்ன லாபம்? என்றான்.

விபீஷணர் ராமர் நமது ராஜ்யத்தை அழிக்கும் முன்பு சீதையை ராமரிடம் திருப்பி அனுப்பி விடுவதே நலம் என்றார்.

சினம் கொண்ட ராவணன் குலத்தை கெடுக்க வந்த கோடாரிக்காம்பே. நீ என் கண் முன் நில்லாதே இங்கிருந்து ஓடி விடு என்றான். விபீஷணனும் நான் உன் நலனை உத்தேசித்து பேசிய பேச்சு உனக்கு பிடிக்கவில்லை. வினாச காலே விபரீத புத்தி என்பது போல அழிவு ஒருவனை நெருங்கும் போது அவனது அறிவு வேலை செய்வதில்லை என்று கூறி அவையை விட்டு வெளியேறி ராமரை சரண் அடைந்தான்.

நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் நாம் கவனமாக இருந்தாலும் விபரீத புத்தி வந்து நம்மைக் கெடுத்து விடும். ஆகவே

எண்ணத்தில் கவனமாய் இருங்கள் ஏனெனில் எண்ணங்கள்தான் சொற்களாகின்றன.
சொல்லில் கவனமாய் இருங்கள் ஏனெனில் சொற்கள்தான் செயல்களாகின்றன.
செயலில் கவனமாய் இருங்கள் ஏனெனில் செயல்கள்தான் பழக்கங்களாகின்றன.
பழக்கத்தில் கவனமாய் இருங்கள் ஏனெனில் பழக்கங்கள்தான் ஒழுக்கங்களாகின்றன.
ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்.

காமத்தை வெல்வது பற்றி பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்

ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம் மிகுந்த பதட்டத்துடன் இளைஞன் ஒருவன் வந்து என் மனத்தை எவ்வளவு அடக்க முயற்சி செய்தாலும் சில நேரங்களில் கீழான ஆசைகளும் வெறுக்கத்தக்க உணர்ச்சிகளும் என் மனத்தை அலைக்கழிக்கின்றன. அதனால் நான் அமைதியை இழந்து தவிக்கிறேன் காமம் எப்படி விலகும்? என்று கேட்டன்.

அதற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணர் அப்பா இறைக்காட்சி கிட்டாதவரை காமம் அடியோடு விலகுவதில்லை. அதன் பிறகும் உடல் இருக்கும் வரை அதன் சுவடு சிறிது இருக்கவே செய்யும். அதனால் எவ்விதத் தொந்தரவும் இருக்காது. என்னிடமிருந்து முழுமையாகக் காமவாசனை போய்விட்டதென்றா நினைக்கிறாய்? காமத்தை வென்று விட்டதாக நான் ஒரு சமயம் நினைத்தேன். அதன் பிறகு ஒருநாள் பஞ்சவடியில் அமர்ந்திருந்தபோது என்னைமீறிக் காம உணர்ச்சி பீறிட்டு எழுந்தது. என்னால் அடக்கவே முடியாது போல் தோன்றிற்று. நான் ஆடிப் போய்விட்டேன். உடனே தரையில் விழுந்து புழுதியில் முகத்தைத் தேய்த்துக் கொண்டு அழுத வண்ணம் அன்னை காளியிடம் அம்மா நான் பெரிய தவறு செய்துவிட்டேன். காமத்தை வென்றதாக இனி எண்ணவே மாட்டேன் என்று முறையிட்டேன். அதன் பின்னரே அந்த உணர்ச்சி என்னை விட்டு நீங்கியது. நீயோ வாலிபன். அதனால்தான் உன்னால் அந்த வேகத்தை அடக்க இயலவில்லை. பெரு வெள்ளம் புரண்டு வரும்போது அது கரையைப் பற்றி கவலைப்படவா செய்யும். கரையோவஎதுவோ வழியிலுள்ள அனைத்தையும் உடைத்துக் கொண்டு அது முன்னேறுகிறது. வயல்களில் புகுந்து பெரும் உயரத்திற்குத் தேங்குகிறது.

கலியுகத்தில் மனத்தினால் அறியாமல் செய்கின்ற பாவம் பாவமே இல்லையென்று கூறப்பட்டுள்ளது. ஏதோ ஒருமுறை கெட்ட எண்ணம் எழுந்து விட்டதற்காக ஏன் இப்படிப் படபடக்கிறாய்? உடலின் இயற்கைப் படி இந்த உணர்ச்சிகள் சில சமயம் வந்துபோகத்தான் செய்யும். இதையும் மலம் கழிப்பது போன்ற சாதாரண உணர்ச்சியாக எண்ணிக் கொள்ள வேண்டும். மலம் கழிக்க வேண்டியிருக்கிறது என்பதற்காக யாராவது கன்னத்தில் கைவைத்து கொண்டு கவலைப்படுகிறார்களா? அதேபோன்று இத்தகைய உணர்ச்சிகளையும் இயல்பானவையாக அற்பமானவையாகக் கருது. அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்காதே. இறைவனிடம் மனமுருகிப் பிரார்த்தனை செய். இறை நாமத்தை ஜெபி. அவரது பெருமையில் ஈடுபடு. கெட்ட எண்ணங்கள் வரட்டும் போகட்டும். அவற்றைக் கண்டு கொள்ளாதே. தாமாகவே அவை கட்டுக்குள் அடங்கி விடும் என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர்.