மகாபாரதம் 16. மௌசல பருவம் பகுதி -3

துவாரகையில் இருந்து பெண்கள் குழந்தைகள் அர்ஜூனன் தலைமையில் அஸ்தினாபுரம் செல்லும் வழியில் கொள்ளையர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு தாக்கி அவர்களிடம் இருந்த பொருள்களை கொள்ளையடித்தனர். அவர்களை துணிச்சலை குறித்து அர்ஜுனன் நகைத்தான். உடனே திரும்பி ஓடாவிட்டால் திருடர்கள் அத்தனை பேரும் அழிந்து போவீர்கள் என்று அர்ஜுனன் எச்சரிக்கை செய்தான். ஆனால் இந்த எச்சரிக்கையை கொள்ளையர்கள் பொருட்படுத்தவில்லை. தங்கள் போக்கில் அவர்கள் பொருட்களை சூறையாடினார்கள்.

அர்ஜுனன் அக்கணமே தன்னுடைய வில்லின் அம்பை பொருத்தி சண்டையிட முன் வந்தான். ஆனால் அவனது ஆயுதம் செயலற்றுப் போனது. அவன் கற்ற அஸ்திர மந்திரங்கள் அனைத்தும் மறந்து போனது. மகாபாரதப் போரில் தலை சிறந்த வில்லாளியாக இருந்த அர்ஜுனன் இபொழுது ஆதரவற்ற சாதாரண மானிட நிலைக்கு வந்துவிட்டான். பெண்கள் சிலரை மட்டும் ஏதோ ஒரு பொக்கில் தன்னால் இயன்றவரை காப்பாற்றினான்.

பெண்களில் பெரும்பான்மையோர் கைவசம் இருந்த பொருள்கள் அனைத்தும் திருடர்கள் கையில் அகப்பட்டுக் கொண்டது. அதைக்குறித்து அர்ஜுனன் மிகவும் வேதனைப்பட்டான். துவாரகையிலிருந்து அஸ்தினாபுரம் வந்து சேர்ந்தவர்களுக்கு வசிப்பதற்கு பொருத்தமான இடங்கள் வழங்கப்பட்டன. ருக்மணி சத்தியபாமாவும் காட்டிற்கு சென்று தவம் புரிந்து தங்கள் வாழ்க்கையை முடிக்க தீர்மானித்து காட்டிற்கு சென்றனர்.

பலராமனும் கிருஷ்ணனும் இல்லாத இந்த நிலவுலகம் நிர்மூலமாகி விட்டதை அர்ஜுனன் உணர்ந்தான். தனக்கு ஏற்பட்ட அனுபவத்தால் குழப்பத்துடன் இருந்த அர்ஜூனன் முன் வியாசர் தோன்றினார். அவருக்கு பணிவுடன் தனது வணக்கத்தை தெரிவித்தான். தான் கற்றிருந்த அஸ்திர வித்தைகள் மந்திரங்கள் எல்லாம் மறைந்து போயிற்று. ஆற்றல் அற்றவனாக நிற்கின்றேன். பெண்களை காப்பாற்ற இயலாமல் போயிற்று இதற்கான காரணம் என்ன என்று தனக்கு தெளிவு படுத்துமாறு வியாசரிடம் அர்ஜூனன் கேட்டான்

கருத்து மிக நிறைந்த விஷயத்தை அர்ஜுனனுக்கு எடுத்து வியாசர் விளக்கினார். பாண்டவர்களாகிய நீங்கள் மண்ணுலகிற்கு வந்ததன் நோக்கம் நிறைவேறியது. கிருஷ்ணனும் பலராமனும் வந்த காரியம் முடிவுற்றது. இனி வரும் காலத்திற்கு நீ கற்ற அஸ்திர சாத்திரங்கள் மந்திரங்கள் இவ்வுலகத்திற்கு தேவை இல்லை. நீ கற்ற அஸ்திர சாத்திரங்கள் மந்திரங்கள் எல்லாம் தனது வேலை முடிந்ததும் தங்களுக்கேற்ற தேவதைகளிடம் போய்ச் சேர்ந்து விட்டது. ஆகையால் அனைத்தும் உனக்கு மறந்து போயிற்று. இனி நீயும் உன் சகோதரர்களும் இந்த உலகை விட்டுப் புறப்படுங்கள் என்று வியாசர் அர்ஜுனனிடம் கூறினார்

மௌசல பருவம் முற்றியது அடுத்து மகாபிரஸ்தானிக பருவம்

தொடரும்………….

மகாபாரதம் 16. மௌசல பருவம் பகுதி -2

குருஷேத்திர யுத்தம் முடிந்த பிறகு கிருஷ்ணர் துவாரகையில் 36 ஆண்டுகள் ஆட்சி புரிந்து வந்தான். தன்னுடைய மண்ணுலக வாழ்வு முடிவுக்கு வந்துவிட்டது என்பதை கிருஷ்ணன் அறிந்து கொண்டான். இவ்வையகத்தில் சாதிக்க வேண்டியவைகளை யாவும் முற்றுப்பெற்று விட்டன. தன் உடலை விட வேண்டிய காலம் நெருங்கி விட்டது என்பதை கிருஷ்ணர் அறிந்தான்.

உல்லாசப் பயணமாக விருஷ்ணிகள் கடற்கரைக்கு போனார்கள். அங்கு அவர்களுடைய குடிவெறி வரம்பு கடந்து போயிற்று. அதன் விளைவாக அவர்களிடையே சச்சரவு உண்டானது. அது கைச்சண்டையாக உருவேடுத்தது. பிறகு ஒருவரை ஒருவர் தாக்கத் தொடங்கினர். கடற்கரையில் வளர்ந்திருந்த நாணல் கொம்புகளை பெயர்த்தெடுத்து ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டனர். ரிஷிகள் இட்ட சாபத்தின் விளைவாக நாணல் கொம்புகள் பயங்கரமான ஆயுதங்களாக மாறி இருந்தது. சிறிது நேரத்திற்குள் விருஷ்ணி குலத்தினர் முழுவதும் ரிஷிகள் இட்ட சாபத்தின்படி அழிந்தனர். பாற்கடலில் ஆதிஷேசனாக இருந்த பலராமன் இதனை கேள்விப்பட்டதும் தியானத்தில் அமர்ந்து தனது உடலை விட்டுவிட்டு மேலுலகம் சென்றடைந்தான்.

காந்தாரி இட்ட சாபத்தின் படி தன் இனத்தவரின் அழிவை கிருஷ்ணன் அமைதியோடு பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு வனத்திற்குச் சென்றார். தன் உடலை விட்டுச் செல்லும் காலம் வந்துவிட்டது என்பதை கிருஷ்ணன் அறிந்து கொண்டார். தன் பாதங்களை வெளியே காட்டிய படி புல் தரையின் மீது யோக நித்திரையில் படுத்தார். பாதத்தை தவிர வேறு எந்த இடத்தில் அடித்தாலும் கிருஷ்ணனுக்கு மரணம் வராது. தூரத்திலிருந்து பார்க்கும் ஒருவனுக்கு கிருஷ்ணன் படுத்திருப்பது மான் போன்று காட்சி கொடுத்தது. ஒன்றோடு ஒன்று அமைந்திருந்த கிருஷ்ணனுடைய இரண்டு பாதங்களும் மானின் தலை போன்று காட்சி கொடுத்தன. இதனை கண்ட வேடன் ஒருவன் மான் என கருதி அம்பு எய்தான். அம்பின் நுனியில் கடற்கரையில் அகப்பட்ட இரும்புத்துண்டு இருந்தது. கிருஷ்ணனின் பாதத்தின் வாயிலாக வேடனின் அம்பு கிருஷ்ணரின் உடலுக்குள் பாய்ந்தது. வினைப்பயன் உடலை தாக்கியவுடன் கிருஷ்ண பரமாத்மா தன்னுடைய எதார்த்த நிலையை எய்தினார்.

துவாரகையில் நிகழ்ந்த பரிதாபகரமான நிகழ்ச்சிகள் அனைத்தையும் அஸ்தினாபுரத்தில் யுதிஷ்டிரனிடம் கிருஷ்ணனுடைய தந்தையாகிய வாசுதேவர் தெரிவித்துவிட்டு தன் உடலை நீத்தார். துவாரகையில் எஞ்சியிருக்கும் பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாத்து அஸ்தினாபுரத்திற்கு அழைத்து வரும் பொறுப்பை அர்ஜுனனிடம் யுதிஷ்டிரன் அளித்தான். உடனடியாக அர்ஜுனன் துவாரகை சென்று கிருஷ்ணனுக்கும் பலராமனுக்கும் செய்ய வேண்டிய சிரார்தம் கடமைகளை முறையாக செய்து முடித்தான். பின்னர் துவாரகையில் எஞ்சி இருந்த பெண்களையும் குழந்தைகளும் தன்னோடு அழைத்துக்கொண்டு அர்ஜுனன் அஸ்தினாபுரம் கிளம்பினான். துயரத்தில் மூழ்கியிருந்த சிறு கூட்டம் கிளம்பி துவாரகையை விட்டு வெளியே வந்தவுடன் துவாரகை கடலில் மூழ்கியது அனைவரும் அஸ்தினாபுரம் நோக்கி சென்றார்கள்

மகாபாரதம் 16. மௌசல பருவம் பகுதி -1

கிருஷ்ணனுடைய விருஷ்ணி குலத்தைச் சேர்ந்தவர்கள் தங்களை மற்றவர்களைவிட தாங்கள் மேலானவர்கள் என்று அவர்களை அவர்களே பெருமை பாராட்டிக் கொண்டனர். அவர்களிடத்தில் கர்வம் வரம்பு கடந்து காணப்பட்டது. துவாரகைக்கு விருந்தினராக மூன்று ரிஷிகள் வந்தார்கள். வந்தவர்களை முறைப்படி வரவேற்க வேண்டும். ஆனால் விருஷ்ணி குலத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களை வரவேற்பற்குப் பதிலாக இவர்களுக்கு நாம் தான் பொருள் உதவி செய்து ஆதரிக்கின்றோம் என்ற மனப்பான்மையுடன் இருந்தனர். மேலும் அங்கு வந்த ரிஷிகளின் திறமையை சோதிக்க அவர்கள் எண்ணம் கொண்டனர்.

ஆடவன் ஒருவனுக்கு கருத்தரித்தது போல் பெண்பால் வேஷம் போட்டு அவனை ரிஷிகள் முன்னிலையில் நிறுத்தினர். இப்பெண்ணுக்கு ஆண் பிள்ளை பிறக்குமா அல்லது பெண் பிள்ளை பிறக்குமா என்று கேட்டார்கள். அதற்கு ரிஷிகள் இவனுடைய வயிற்றில் இருக்கும் இரும்பு துண்டு ஒன்று உங்களுடைய குலம் அழிந்து போவதற்கு காரணமாக இருக்கும் என்று சபித்தார்கள். அதிருப்தி அடைந்திருந்த ரிஷிகள் அக்கணமே அந்த இடத்தை விட்டு வெளியேறினர். குதுகலத்துடன் இருந்த இளைஞர்கள் இப்போது மனம் கலங்கினர். கர்ப்பிணி வேஷம் போட்ட ஆணின் வயிற்றில் கட்டியிருந்த துணி மூட்டையில் இரும்புத் துண்டு ஒன்று இருந்ததை பார்த்தார்கள். அதை பார்த்த பின் அந்த இளைஞர்களிடம் பயம் பன்மடங்கு அதிகரித்தது. அவர்கள் அக்கணமே கிருஷ்ணனையும் பலராமனையும் நாடிச் சென்றனர். தங்களுக்கு ஏற்பட்ட சாபத்தை அவர்கள் இருவரிடமும் தெரிவித்தனர். இந்த இரும்புத் துண்டை தூளாக்கி சமுத்திரத்தில் போட்டுவிடும் படி பலராமன் அவர்களுக்கு தெரிவித்தான். அவர்களும் அவ்வாறே செய்தனர். ஆனால் தற்செயலாக தூளாகத இரும்பு துண்டு ஒன்றும் சிறிதளவு இரும்புத்தூளும் கடற்கரை ஓரத்தில் விழுந்தது. இதனை அவர்கள் கவனிக்கவில்லை. இரும்பை கடலில் போட்டபின்பு தங்களுக்கு வரப்போகும் ஆபத்தை தடுத்து விட்டதாக இளைஞர்கள் எண்ணினார்கள். பிறகு இந்த நிகழ்ச்சியும் அவர்கள் அறவே மறந்து விட்டனர். ஆனால் கிருஷ்ணன் அதன் விளைவை அவன் நன்கு அறிந்திருந்தான்

யாதவ குலத்தைச் சேர்ந்த விருஷ்ணிகள் தங்களுடைய வாழ்வியல் முறையில் சீர்கேடு அடைந்து வந்தனர். இந்திரிய சுகபோகங்களில் அவர்கள் வரம்பு கடந்து ஈடுபட்டனர். சுகஜீவனமும் பெருமிதமான வாழ்வும் பரம்பொருளால் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வரப்பிரசாதம் என அவர்கள் எண்ணி மதுவிலும் காமத்திலும் விருஷ்ணிகள் உச்ச நிலையை அடைந்தனர். சிறிது காலத்திற்கு முன்பு விருஷ்ணிகள் மீது மூன்று ரிஷிகள் விட்ட சாபம் இப்போது வடிவெடுத்து வந்தது. கடலுக்குள் போடப்பட்ட இரும்புத் தூள்கள் நாணல்களாக வடிவெடுத்து உயர வளர்ந்திருந்தன. கடற்கரையில் இருந்த ஒரு இரும்புத் துண்டை வேடன் ஒருவன் கண்டெடுத்தான். அதை அவன் தனது அம்புக்கு கூறாக அமைத்துக்கொண்டான்.