நாயன்மார் – 13. ஏனாதிநாத நாயனார்

சோழவள நாட்டிலுள்ள சிற்றூரின் பெயர் எயினனூர். இத்தலத்தில் சான்றார் குல மரபில் தோன்றியவர் ஏனாதிநாதர் என்பவர். திருநீற்றுப் பக்தி மிக்கவர். மெய்ப்பொருள் நாயனாரைப் போலவே திருநீறு அணிந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைச் சிவமாகப் பார்த்து வணங்கி வழிபடுவார். பகைவர்களாக இருந்தாலும் அவர்களது நெற்றியில் திருநீற்றை கண்டுவிட்டால் உடனே பகைமையை மறந்து அவரை வணங்கி வழிபடுவார். இதனால் இவர் பகைவரும் போற்றும் படியாக நல்லொழுக்கத்தில் தலை சிறந்து விளங்கினார். இவர் சோழ மன்னரின் படையில் சேனாதிபதியாக இருந்தவர்களின் சந்ததியில் தோன்றியவர். ஏனாதிநாதர் வாள் பயிற்சிப் பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். இவரிடம் நல்ல வீரமும் சிறப்பான வாள் பயிற்சி அளிக்கும் முறையும் இருந்ததால் வாள் பயிற்சி பெற மாணவர்கள் இவரிடம் நிறைய வந்து சேர்ந்தார்கள். வாள் பயிற்சி மூலம் கிடைத்த தனக்கு கிடைத்த வருமானத்தை சிவனடியார்களுக்கே செலவு செய்தார்.

ஏனாதிநாதர் வாழ்ந்த அதே ஊரில் அதிசூரன் என்று ஒருவன் இருந்தான். அவனும் வாள் பயிற்சி கூடம் ஒன்றை அமைத்து மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வந்தான். தொழில் நுட்பத்தில் ஏனாதிநாதரைவிட மிகக் குறைந்து காணப்பட்டான். அதனால் அதிசூரனிடம் வந்து சேர்ந்த மாணவர்கள் விலகி ஏனாதிநாதரின் பள்ளியில் வந்து சேர்ந்தார்கள். இதனால் ஏனாதிநாதரிடம் ஏராளமான மாணவர்கள் பயிற்சி பெற்றார்கள். அதிசூரனிடம் ஒன்றிரண்டு மாணவர்கள் கூட பயிற்சி பெற வருவதே கஷ்டமாகி விட்டது. இதனால் அதிசூரனது வருவாய் குறைந்தது. இதனால் அதிசூரன் ஏனாதிநாதரிடம் பொறாமை கொண்டு பகைமை கொண்டான். ஒருநாள் தன் சுற்றத்தாரையும் சில போர் வீரர்களையும் அழைத்துக்கொண்டு நாயனாரின் வீட்டை வந்தடைந்தான். ஏனாதிநாதரே ஒரே ஊரில் இரண்டு பயிற்சிக் கூடம் வேண்டாம். இரண்டு ஆசிரியர்களும் வேண்டாம். இந்த ஊரில் நாம் இருவரில் வாள் பயிற்சி ஆசிரியராக இருப்பதற்குரிய தகுதியும் திறமையும் யாருக்கு உண்டு என்பதை ஊரறியச் செய்ய நாம் இருவரும் வாள் சண்டை போடுவாம் என்றான். துணிவிருந்தால் என்னோடு சண்டை போடுங்கள் என்று கத்தினான். அதிசூரனின் சவாலைக் கேட்ட ஏனாதிநாதர் சிங்கம் போல் கிளர்த்தெழுந்தார். அதிசூரனின் ஆட்கள் ஒரு புறமும் ஏனாதிநாதரின் ஆட்கள் ஒரு புறமும் நின்று சண்டையிட்டார்கள். இரு தரப்பிலும் பலருக்கு காயம் ஏற்பட்டது. சிலர் உயிரிழந்தார்கள். இறுதியில் ஏனாதிநாதர் வெற்றி பெற்றார். அதிசூரன் தோல்வி அடைந்தான். இதனால் அதிசூரன் உள்ளத்தில் பகைமை உணர்ச்சி அதிகமானது. ஏனாதிநாதரை நேர் பாதையில் வெல்ல முடியாது என்பதை உணர்ந்து சூழ்ச்சியால் அவரை கொன்று விடலாம் என்று திட்டம் திட்டினான்.

ஏனாதிநாதரிடம் அதிசூரன் தனது வேலைக்காரன் ஒருவனை அனுப்பினான். தன்னோடு வேறோரிடத்திலே தனித்து நின்று போர் புரியலாம் என்றும் வீணாகப் பெரும் படை திரட்டிப் போர் புரிந்து எதற்குப் பல உயிர்ச் சேதத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் தனது வஞ்சக முடிவைச் சொல்லி அனுப்பினான். அவனது அந்த முடிவிற்கும் ஏனாதிநாதர் சம்மதித்தார். அதன் பிறகு அதிசூரன் சண்டை போடுவதற்கான நாள் நேரம் குறித்து இடத்தைத் தேர்ந்தெடுத்து ஏனாதிநாதருக்குச் செய்தி சொல்லி அனுப்பினான். அதற்கும் அவர் சம்மதித்தார். குறித்த நாளும் வந்தது. அதிசூரன் வஞ்சனையால் வெல்லத்தக்க சூழ்ச்சி செய்தான். போருக்குப் புறப்படும் முன் நெற்றியிலும் உடம்பிலும் திருநீற்றைப் பூசிக் கொண்டான். வாளும் கேடயமும் எடுத்துக் கொண்டான். தனது நெற்றியும் உடம்பும் தெரியாதவாறு கவசத்தாலும் கேடயத்தாலும் மறைத்துக் கொண்டான். போர் புரிய வேண்டிய இடத்திற்குச் சென்றான். அங்கே ஏனாதிநாதர் அதிசூரனை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தார். அதிசூரன் கேடயத்தால் தன் முகத்தை மறைத்த வண்ணமாகவே நாயனாருக்கு முன் சென்றான். இருவரும் போர் புரியத் தொடங்கினர். ஏனாதிநாதர் வாளைச் சுழற்றி பயங்கரமாகப் போர் புரிந்தார். ஏனாதிநாதர் கைகளிலே சுழன்று கொண்டிருந்த வாள் அதிசூரனின் உடலைக் கிழித்துக் கொல்ல நெருங்கி வருகின்ற தருணத்தில் அதிசூரன் தன் உடலை மறைத்துக் கொண்டிருந்த கவசத்தையும் கேடயத்தையும் விலக்கினான். திருநீறு அணிந்த அதிசூரனின் நெற்றியைப் பார்த்துத் திடுக்கிட்டார் நாயனார். அவர் கைகள் தளர்ந்தன. வீரம் பக்திக்கு அடிமையானது. பகைவன் என்று போரிட வந்தேனே சிவத்தொண்டராக அல்லவா இருக்கிறார் இவரோடு போரிடுவது தகாத செயல் ஆகும் என்று எண்ணிய ஏனாதிநாத நாயனார் வரும் ஆபத்தை பற்றி சிந்திக்காமல் தம் கையிலிருந்த வாளையும் கேடயத்தையும் கீழே போட எண்ணினார்.

ஏனாதிநாதருக்கு அத்தருணத்தில் வேறொரு எண்ணமும் பிறந்தது. நாம் ஆயுதங்களைக் கீழே போட்டால் நிராயுத பாணியயை சிவனடியார் கொன்றார் என்ற இழிவுப் பெயர் இவருக்கு வந்துவிடும். அத்தகைய கெட்ட பெயர் இவருக்கு ஏற்படாத வண்ணம் இறுதிவரை நான் ஆயுதத்துடனே இவரை எதிர்த்து நிற்பது போல் பாசாங்கு செய்வேன் என்று எண்ணியபடியே வாளையும் கேடயத்தையும் தாங்கி எதிர்த்துப் போர் செய்வது போல் பாவனை செய்து கொண்டிருந்தார். அவர் முன்னே நின்ற கொடிய பாதகனும் தன் கருத்தை நிறைவேற்றிக் கொண்டான். ஏனாதிநாதர் ஆவி பிரிந்தது. ஆகாயத்தில் பேரொளி தெரிந்தது. எம்பெருமான் உடையாளுடன் விடை மேல் எழுந்தருளினார். ஏனாதிநாதரை உயிர் பெற்றெழச் செய்தார். நாயனார் நிலமதில் வீழ்ந்து இறைவனை வணங்கி நின்றார். பகைவனது வாளால் உலகப் பற்று பாசம் பந்தம் ஆகிய எல்லாத் தொடர்புகளையும் அறுத்துக் கொண்ட ஏனாதிநாத நாயனாருக்கு பேரின்ப வாழ்வை அளிப்பதற்கென்றே இவ்வளவு பெரிய சோதனையை நடத்திய எம்பெருமான் நீ நம்மை விட்டுப் பிரியாதிருக்கும் பெரு வாழ்வினைப் பெறுவாயாக என்று திருவாய் மலர்ந்தார்.

குருபூஜை: ஏனாதி நாத நாயனாரின் குருபூஜை புரட்டாசி மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

நாயன்மார் – 12. ஏயர்கோன் கலிக்காம நாயனார்

சோழ நாட்டில் பெருமங்கலம் என்னும் நகரத்தில் ஏயர் குலத்தினர் சோழருடைய படைத் தலைமை வகிக்கும் பெருமை பெற்றவர்களாக சிறந்து விளங்கினர். அக்குடியில் வாழ்ந்து வந்தவர்களில் கலிக்காமர் என்பவரும் ஒருவர். இவர் பக்தியின் உருவமாகவும் அன்பின் வடிவமாகவும் சிறந்த சிவத்தொண்டராய் விளங்கினார். இவர் மானக்கஞ்சாற நாயனாருடைய மகளைத் திருமணம் செய்து இல்லறத்தை இனிது நடத்தி வந்தார். இச்சிவனடியார் சிவனை சிந்தையில் வைத்து ஐந்தெழுத்து நமசிவாய மந்திரத்தை இடைவிடாமல் எந்நேரமும் ஓதி வந்தார். இவர் வாழ்ந்து வரும் நாளில் இறைவனை சுந்தரர் தனக்காக பரவையாரிடம் (சுந்தரரின் மனைவி) தூது போக விட்ட நிகழ்ச்சி நடந்தது. இச்செய்தியைக் கேள்வியுற்ற கலிக்காமர் மனம் வருந்தினார். இத்தகைய செயல் புரிந்த இவர் தன்னை இறைவனின் தொண்டன் என்று கூறிக்கொள்ள வெட்கப்பட வில்லையா? இது எவ்வளவு பாவமான செயல் பொறுக்கமுடியாத அளவிற்கு இந்த செய்தியை கேட்ட பின்னும் என்னுயிர் போகவில்லையே என்று வருந்தினார் கலிக்காமர். இதனால் சுந்தரர் மீது மிகவும் கோபம் கொண்டார். கலிக்காமரின் கடும் கோபத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட சுந்தரமூர்த்தி சுவாமிகள் மிகவும் மனம் வாடினார். தன்னால் ஒரு தொண்டருக்கு ஏற்பட்டுள்ள துயரத்திற்கு எப்படி முடிவு காண்பது என்று சிந்தித்தார். தனது தவறினை பொறுத்தருள இறைவனிடம் வேண்டினார். இறைவன் சுந்தரமூர்த்தி நாயனாரையும் கலிக்காமரையும் நண்பர்களாக்க எண்ணம் கொண்டார். அதன்படி இறைவன் கலிக்காமருக்குக் கொடிய சூலை நோயினைக் கொடுத்து ஆட்கொண்டார். கலிக்காமர் சூலை நோயால் மிகவும் துடித்தார். கொடிய கருநாகப் பாம்பின் விஷம் தலைக்கு ஏறினாற்போல் துடித்த கலிக்காமர் மயக்க நிலைக்கு சென்றார். அப்பொழுது இறைவன் உன்னைத் துன்புறுத்துகின்ற சூலை நோயைத் தீர்க்க வல்லவன் சுந்தரனே ஆவான் என்று அசீரிரியாக சொல்லி மறைந்தார்.

இறைவன் சுந்தரரிடம் உடனே நீ சென்று கலிக்காமருக்கு ஏற்பட்டுள்ள சூலை நோயைத் தீர்த்து வருவாயாக என்றார். சுந்தரர் இறைவனை வணங்கிப் பெருமங்கலத்துக்குப் புறப்பட்டார். இறைவன் ஆணைப்படி பெருமங்கலத்திற்குப் புறப்பட்டு வரும் செய்தியை தனது பணி ஆட்கள் மூலம் முன்னதாகவே சொல்லி அனுப்பினார் சுந்தரர். பணி ஆட்கள் கலிக்காமர் இல்லத்தை அடைந்து சுந்தரர் வருகையைப் பற்றிக் கூறினர். ஏற்கனவே புழுப்போல் துடித்துக் கொண்டிருந்த கலிக்காமருக்கு சுந்தரரின் வருகையைப் பற்றிக் கேள்விப்பட்டதும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருந்தது. இறைவனை வணங்கியவாறு உடைவாளைக் கழற்றினார். இறைவனே இனிமேலும் நான் உலகில் வாழ விரும்பவில்லை. சுந்தரன் இங்கு வந்து என்னைப் பற்றியுள்ள சூலை நோயைத் தீர்க்கும் முன் எனது உயிரைப் போக்கிப் கொள்வேன் என்று கூறி கலிக்காமர் உடைவாளால் வயிற்றைக் கிழித்துக் கொண்டார். கலிக்காமர் உயிர் பிரிந்ததும் அவரது மனைவி தம் கணவரோடு உயிர் துறந்து அவருடன் இறைவனை சேர்வது என்று உறுதி பூண்டு அதற்குரிய செயலை ஆரம்பிக்கும் தருணத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் ஏவலாளர்கள் வந்து சுந்தரர் வந்து விட்டார் என்று கூறினார்கள். அவர்கள் கூறியதும் கலிக்காமரின் மனைவி தனது துயரத்தை மறைத்து கணவரது உடலை மறைத்து சுந்தரமூர்த்தி சுவாமிகளை இன்முகத்துடன் வரவேற்க தயாரானார்.

சுந்தரர் தன்னுடன் வந்த அன்பர்களுடன் உள்ளே நுழைந்தார். கலிக்காமரின் மனைவி சுந்தரரை வரவேற்றார். மலர் தூவிக் கோலமிட்ட ஆசனத்தில் அமரச் செய்து விதிமுறைப்படி அவரது திருப்பாதங்களைத் தூய நீரால் சுத்தம் செய்து மலர் தூவி வழிபட்டு மகிழ்ந்தார். சுந்தரரும் அம்மையாரின் அன்பிற்குக் கட்டுப்பட்டவராய் அம்மயாருக்கு அருள் செய்தார். சுந்தரர் அம்மையாரை நோக்கி அம்மையே என் நண்பர் கலிக்காமர் எங்குள்ளார்? அவருக்கு இப்பொழுது துன்பம் செய்து வரும் சூலைநோயினைக் குணப்படுத்தி அவரது நட்பைப் பெறும் காலம் வந்து விட்டது அவரை பார்க்க வேண்டும் அவர் இருக்குமிடம் அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினார். கலிக்காமருக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை என்று அங்குள்ளோர்களை சொல்லச் சொன்ன கலிக்காமரின் மனைவி தானும் அவ்வாறே சொன்னார். அதற்கு சுந்தரர் அவருக்கு எவ்விதமான தீங்கும் ஏற்படவில்லை என்றாலும் என் மனம் அவரை காண வேண்டும் என்று துடிக்கிறது. நான் உடனே அவரைப் பார்த்துதான் ஆகவேண்டும் என்றார். கலிக்காமரின் மனைவி வேறு வழியின்றி சுந்தரரை அழைத்துச் சென்று குருதி வெள்ளத்தில் கிடக்கும் கலிக்காமரைக் காண்பித்தார். குடல் வெளிப்பட்டு உயிர் நீங்கி கிடந்த கலிக்காமரைக் கண்டு உள்ளம் பதறிப்போன சுந்தரர் வேதனை தாங்க முடியாமல் கண்களில் நீர்பெருக இறைவனே தியானித்தார். எம்பெருமானே இதென்ன அபச்சாரமான செயல் இவரது இத்தகைய பயங்கர முடிவைக் கண்ட பின்னரும் நான் உயிர் வாழ விரும்பவில்லை. நானும் என் உயிரைப் போக்கிக் கொள்கிறேன் என்று கூறி கலிக்காமர் அருகே கிடந்த உடைவாளைக் கையிலெடுத்தார்.

இறைவன் திருவருளால் அப்போது ஏயர்கோன் கலிக்காம நாயனார் உயிர் பெற்று எழுந்தார். கணப்பொழுதில் தெளிவு பெற்று நடந்ததை அறிந்தார். உடைவாளால் தம்மை மாய்த்துக் கொள்ளப் போகும் சுந்தரரைப் பார்த்து மனம் பதறிப்போனார். உடை வாள் சுந்தரரை தாக்காமல் பிடித்துக் கொண்டார் கலிக்காமர். ஐயனே இதென்ன முடிவு? உங்கள் தோழமையின் உயர்வை உணராமல் என்னையே நான் அழித்துக் கொண்டதோடு உங்களது வாழ்க்கைக்கும் பெரும் பாவம் புரிந்துவிட்டேன். ஐயனே இறைவனின் அன்பிற்குப் பாத்திரமான உங்கள் மீது பகைகொண்டு நெறி தவறிய என்னை மன்னித்தருள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சுந்தரர் எம்பெருமானின் திருவருளை எண்ணி மகிழ்ச்சியுடன் கலிக்காம நாயனாரை ஆரத்தழுவிப் பெருமிதம் கொண்டார். கலிக்காமரும் சுந்தரரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். கலிக்காமரின் மனைவியும் மட்டிலா மகிழ்ச்சி பூண்டார். மானக்கஞ்சாரர் மகளான கலிக்காமர் மனைவியின் பக்தியை சுந்தரர் பெரிதும் போற்றினார். இறைவனின் திருவருள் கருணையினால் கலிக்காமரும் சுந்தரரும் தோழர்களாயினர். இருவரும் சேர்ந்து சிவயாத்திரை செல்ல எண்ணினர். ஒருநாள் பெருமங்கலப் பெருமானைப் பணிந்து இருவரும் புறப்பட்டனர். திருப்புன்கூர் என்னும் திருத்தலத்தை அடைந்து அங்கு எழுந்தருளியிருக்கும் திருசடை அண்ணலின் திருவடிகளைப் பணிந்து துதித்தனர். சுந்தரர் அந்தனாளன் எனத் தொடங்கும் பதிகத்தைச் சுந்தரத் தமிழில் பாடினர். அங்கியிருந்து புறப்பட்டு இருவரும் திருவாரூரை வந்தடைந்து பூங்கோயிலில் எழுந்தருளியிருக்கும் புற்றிடங்கொண்ட பெருமானின் பொற்பாதங்களைப் போற்றிப் பணிந்தனர். கலிக்காம நாயனார் சுந்தரருடன் பரவையார் இல்லத்தில் சில காலம் தங்கினார். இருவரும் திருவாரூர்த் தியாகேசப் பெருமானை வழிபட்டு மகிழ்ந்தனர். கலிக்காமர் சுந்தரரிடம் விடைபெற்றுக்கொண்டு பிரிந்து செல்ல மனமில்லாத நிலையில் தமது ஊருக்குப் புறப்பட்டார். அங்கு பற்பல திருத்தொண்டுகள் புரிந்து சிவபெருமான் திருவடியைச் சேர்ந்து இன்புற்றார்.

குருபூஜை: எயர்கோன் கலிக்காம நாயனாரின் குருபூஜை ஆனி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

நாயன்மார் – 11. எறிபத்த நாயனார்

கொங்கு நாட்டிலே உள்ள கருவூரிலே பிறந்தார் எறிபத்தர். அந்த ஊரில் ஆனிலை என்னும் திருக்கோயிலில் எழுந்தருளிய இறைனை வழிபட்டுச் சிவனடியார்களுக்குத் திருத்தொண்டு செய்து வந்தார். சிவனடியார்களுக்கு ஓர் பிரச்சனை என்று வந்தால் முதலில் அங்கு வந்து அவர்களுக்கு உதவுவார். அடியார்களுக்கு தீங்கு கொடுப்பவர்களுக்கு பரசு என்னும் கோடாலி ஆயுதத்தால் எறிந்து தண்டிப்பார். அதனால் அவர் கையிலே எப்பொழுதும் கோடலி ஆயுதம் இருக்கும். கோடாலியை எறிவதனால் அவருடைய இயற்பெயர் மாறி எறிபத்தர் என்ற பெயரால் அனைவராலும் அழைக்கப்பட்டார். அந்த ஊரில் சிவகாமியாண்டார் என்ற முதியவர் தினந்தோறும் கோவிலுக்கு சென்று இறைவனுக்கு பூக்களை கொடுப்பது வழக்கம். இறைவனுக்காக பூக்கள் பறித்து மாலையாகத் தொடுத்து இறைவனுக்கு அணியச் செய்வதில் அவருக்கு விருப்பம் அதிகம். விடியற்காலையிலேயே எழுந்து தான் அமைத்த நந்தவனத்திற்கு சென்று பயபக்தியுடன் மலர்களைப் பறிப்பார். அவற்றின் மேல் தன் மூச்சுக் காற்றுக் கூடப்படாதவாறு வாயைக் கட்டிக் கொண்டு அதை எடுத்து வருவார். ஒரு நாள் வழக்கம் போல் ஒரு கூடை நிறைய மலர்களை ஏந்தி திருக்கோவிலை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது மதம் கொண்ட பட்டத்து யானை அவர் கையில் வைத்திருந்த பூக்கூடையைத் தாக்கி தன் துதிக்கையால் கீழே போட்டது. மலர்களெல்லாம் கீழே சிதறின. இறைவனுக்கான மலர்களை யானை பாழ் செய்து விட்டதே என எண்ணி வருந்திய சிவகாமியாண்டார் கோபம் கொண்டு தன் கையில் இருந்த தடியால் யானையை அடிக்க ஓடினார். சிவகாமியாண்டார் யானையின் பின்னே ஓடிக் களைத்து கீழே விழுந்து விட்டார். பின் மெல்ல எழுந்த சிவகாமியாண்டார் கீழே சிதறிய பூக்களைப் பார்த்துத் துக்கம் தாளாமல் வாய்விட்டுப் புலம்பினார்.

அடியார் ஒருவரின் அழுகுரல் சத்தத்தை கேட்ட எறிபத்தர் உடனடியாக அங்கே வந்து நடந்தவற்றை கேட்டு அறிந்து கோபம் கொண்டார். யானை இருக்குமிடம் நோக்கி ஓடிய எறிபத்தர் பட்டத்து யானையின் முன் நின்றார். யானை அவரை தாக்க வந்தபோது கையிலிருந்த கோடாரியால் ஓங்கி வீசினார். பூக்கூடையை கீழே போட்ட யானையின் தும்பிக்கை துண்டாக கீழே விழுந்தது. உடனே யானையும் பிளறிக் கொண்டே கீழே விழுந்து இறந்தது. சிவகாமியாண்டாரின் துயரத்தை கண்ட எறிபத்தருக்கு இன்னும் கோபம் தீரவில்லை. இறைவனுக்கான பூக்களை கீழே தள்ளிவிட்ட யானையின் பாகனையும் அவனுக்கு உதவியாக வந்த காவலாளிகளின் மீதும் தன் கோடாரியை எறிந்து வீழ்த்தினார். போர்க்களக் காட்சி போல் யானை ஒரு பக்கம் விழுந்து கிடக்க ஒரு பக்கம் காவளாரிகள் இறந்து கிடந்தனர். அரசு சேவகர்கள் உடனே அரண்மனைக்குச் சென்று பட்டத்து யானையையும் உடன் இருந்த பாதுகாவலர்களையும் ஒருவன் கொன்று விட்டான் என்று புகழ்ச்சோழன் அரசனிடம் தகவலை அளித்தார்கள். புகழ்ச்சோழன் அரசன் சிவாலயங்களைப் பாதுகாப்பது சிவனடியார்களுக்கு வேண்டிய நன்மைகளை செய்து தொண்டுகளில் ஈடுபட்டிருந்தான். காவலாளிகள் கூறிவற்றைக் கேட்ட அரசன் பகைவர்களின் சதிச் செயல் என்று எண்ணி கோபமடைந்தான். தனது சேனைத் தலைவர்களுடன் தானும் சம்பவ இடத்திற்குச் சென்றான். யானை இறந்து கிடந்தது அருகில் எறிபத்தர் நின்று கொண்டிருந்தார். பகைவர்கள் ஓடியிருக்கவேண்டும் என எண்ணி அவர்கள் எங்கே என்று கேட்டான். இதோ இங்கே நிற்கிறாரே இவர் தான் யானையைக் கொன்றார் என்று எறிபத்தரைக் காட்டி அருகில் இருந்தவர்கள் கூறினர்கள். அவரைப் பார்த்த அரசன் எதிரியின் செயல் ஒன்றும் இல்லை. இந்த அடியவருக்குக் கோபம் உண்டாகும்படி ஏதோ நேர்ந்திருக்கிறது என்று யூகித்தான்.

யானை இந்த அடியவரை ஒன்றும் செய்யாமல் கடவுள் தான் காப்பாற்றினார் என்று மனதில் நினைத்து ஆறுதல் அடைந்து எறிபத்தர் முன் கண்ணீர் மல்க அவர் காலில் வீழ்ந்தான். தங்கள் உள்ளம் வருந்தும்படி அடியவருக்கு தீங்கு நடந்திருக்கிறது. அந்தத் தீங்குக்குப் பிராயச் சித்தமாக யானையையும் பாகனையும் தண்டித்தது விட்டீர்கள். இது போதாது யானைக்கு உரியவனான என்னையும் கொல்வதே முறையாகும். தங்களின் புனிதமான கோடாரியால் என்னைக் கொல்ல வேண்டாம் என்று தனது வாளை வாளை எடுத்து அவரிடம் நீட்டி என்னையும் கொன்று விடுங்கள் என்றான் அரசன். ஓர் சிவனடியாருக்கு நடந்த தீங்கை பெரிதாக எண்ணி அரசர் வருந்துவதை உணர்ந்த எறிபத்தர் தான் அரசரை கொல்லவில்லை என்றால் அரசன் தன்னை தானை வாளால் அறுத்துக் கொள்வாரோ என்று பயந்து அரசனிடமிருந்த அந்த வாளை உடனே வாங்கிக் கொண்டார். அதைக் கண்ட சோழன் முகம் மலர்ந்து எறிபத்தர் தம்மேல் வாளை வீசுவதற்கு ஏதுவாகப் பணிந்து நின்றார். சிவனடியார்கள் மீது இத்தனை அன்பு செய்யும் அரசர் இருக்கும் போது நாமே யானையை கொன்று தவறு செய்து விட்டோமோ என்று எண்ணிய எறிபத்தர் நானே குற்றவாளி இந்தக் குற்றத்துக்கு தண்டனையை நானே அளித்துக் கொள்கிறேன் என்று மனதில் புலம்பி கையிலிருந்த வாளைத் தன் கழுத்தில் வைத்து அறுத்துக் கொள்ளப்போனார். அரசன் என்ன காரியம் செய்யத் துணிந்தீர்கள் என்று அவர் கையிலிருந்த வாளைப் பறித்தான். எறிபத்தர் அசையாமல் நின்றிருந்தார். அப்போது இறைவனின் அசீரீரி குரல் கேட்டது. இறைவன் மீதும் அடியவர்கள் மீதும் உங்களுக்கு இருக்கும் பக்தியின் வலிமையை உலகிற்கு காட்டவே இந்த நிகழ்ச்சியை நடத்தினோம் என்று அசீரீரி குரல் கேட்டது. அதே சமயத்தில் கீழே விழுந்த யானையும் பாகனும் இறந்த காவலாளிகளும் உயிர் பெற்று எழுந்தனர். சிவகாமியாண்டாரின் பூக்கூடை பூக்களால் நிறைந்தது. அனைவரும் சிவபெருமானின் கருணையையும் அடியவர்களின் அன்பையும் உணர்ந்து ஆரவாரித்தனர்.

குருபூஜை: எறிபத்தர் நாயனாரின் குருபூஜை மாசி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

நாயன்மார் – 10. உருத்திர பசுபதி நாயனார்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் துறையூருக்கு அருகில் அமைந்துள்ள ஓரூர் திருத்தலையூர். வேதியர் மரபில் தோன்றிய அருளாளர் உருத்திர பசுபதி. சிவபெருமனின் மீது அளவில்லாத அன்பு கொண்டிருந்தார். வேதத்தின் கண் மலர் என போற்றப்படும் உருத்திர மந்திரத்தை தினந்தோறும் ஓத வேண்டும் என்ற கொள்கையுடன் வாழ்ந்து வந்தார். தினந்தோறும் ஊரில் உள்ள திருக்கோயிலின் தாமரைக் குளத்தில் காலையில் தொடங்கி மாலை வரையிலும் கழுத்தளவு தண்ணீரில் நின்று கைகள் இரண்டையும் தலைக்கு மேல் கூப்பி உருத்திர மந்திரத்தை நியதிப்படி சிவனை எண்ணியபடியே செபித்து வந்தார். பின்பு மாலைப் பொழுதிற்கு மேல் உருத்திர மந்திரத்தை பாராயணம் செய்து வந்தார். பல காலம் உருத்திர மந்திரத்தை மனதை ஒருமைப்படுத்தி செபித்து வந்த நிலையில் வேத நாயகனான சிவபெருமான் மிகவும் மகிழ்ந்து சிவபதம் அளித்தருளினார்.

குருபூஜை: நாயனாரின் குருபூஜை புரட்டாசி மாதம் அசுவினி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

நாயன்மார் – 9. இளையான்குடி மாறன் நாயனார்

இராமநாதபுரம் பரமக்குடியிலிருந்து ஒன்பது கிலோமீட்டர் மைல் தொலைவில் உள்ள ஊர் இளையான்குடி. அங்கு வேளாளார் குலத்தில் பிறந்தவர் இளையான்குடி மாறன். விவசாயத்தை தொழிலாக செய்து வந்தார். மிகுந்தச் செல்வந்தராய் இருந்தார் இளையான்குடி மாறன். இறைவன் மேலும் அவரின் அடியார்கள் மேலும் அளவில்லாத அன்பு கொண்டவராக இருந்தார். அடியவர்களுக்கு உணவு அளிப்பதை இறைவனுக்கு செய்யும் பெரும் தொண்டாகவும் இறைவனுக்கு செய்யும் வழிபாடாகவே செய்து வந்தார். அடியவர்கள் விரும்பும் அறுசுவை உணவை தயாரித்து பரிமாறி மகிழ்ந்தார். அவரின் பக்தியை அனைவருக்கும் உணர்த்த இறைவன் முடிவு செய்து அவரை சோதிக்க ஆரம்பித்தார். அவரின் செல்வம் அனைத்தும் கரைய ஆரம்பித்தது. அடியவர்களுக்க்கு உணவு அளிக்க கடன் பெற்றும் சொத்துக்ளை விற்றும் தொண்டு செய்து வந்தார். சிறிது நாளில் மிகவும் ஏழ்மை நிலைக்கு மாறினார். ஆனாலும் அடியவர்களுக்கு உணவு அளிப்பதை தொடர்ந்து செய்து வந்தார்.

ஒரு மழைக் காலத்தில் இரவு நேரத்தில் ஒரு அடியவர் வேடத்தில் இளையான்குடி மாறன் வீடு வந்து சேர்ந்தார். இளையான்குடி மாறனும் அவர் துணைவியரும் அவர்களுக்கே உணவு இல்லாமல் படுத்திருந்தார்கள். மழையில் நனைந்தபடியே வந்த அடியாரை வரவேற்று அவரின் ஈரமேனியைப் போக்க உடைகள் கொடுத்து உதவினார்கள். இளையான்குடி மாறன் மனைவியிடம் அடியவரின் பசியைப் போக்க என்ன செய்யலாம் என ஆலோசித்தார். அவர் மனைவி கணவரிடம் இன்று நம் சிறுவயலில் பயிர் செய்து வைத்த செந்நெல்லை எடுத்து வந்தால் அதைக் கொண்டு உணவு செய்யலம் என்றார். அதன்படி இளையான்குடி மாறன் மழையில் வயல் வெளிக்குச் சென்றார். அங்கு அன்று விதைத்த முளை நெல் மழையினால் மிதந்து கொண்டு இருந்தது. அதனை ஒன்று சேர்த்து கொண்டு வந்து மனைவியிடம் கொடுத்தார். வீட்டின் பின்புறம் சென்று உள்ள குழி நிரம்பாத குறும் பயிரான கீரையைக் கொண்டு வந்து கொடுத்தார். அடுப்பு எரிக்க இருந்த விறகு இல்லை என்பதை இளையான்குடி மாறனிடம் தெரிவித்தார். உடனே இளையான்குடி மாறன் குடிசையின் விட்டத்தில் உள்ள கட்டையே ஒடித்து கொடுத்தார். இவற்றையெல்லாம் வைத்து அடியரின் பசியைப் போக்க சுவை உணவாக மாற்றிய அம்மையார் தன் உணவு தயாராகி விட்டது ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் அடியவரை அழைக்கலாம் என்றார். இருவரும் அடியவரின் அருகில் சென்று அடியவரை அழைத்ததும் அடியவர் இருந்த இடம் பேரொளியாக மாறியது. இருவரும் திகைத்து நின்றனர். பேரோளியில் இருந்து இறைவன் அப்பனும் அம்மையுமாக இடப வாகனத்தில் காட்சியளித்து அன்பனே அடியவர்களுக்கு உணவளிப்பதையே எனக்கு செய்யும் வழிபாடாக செய்த நீயும் உனது மனைவியும் என் பெரும் உலகமாகிய சிவலோகத்தினை அடைந்து பேரின்பம் அனுபவித்திருப்பாயாக என்று அருள் செய்து மறைந்தருளினார்.

குருபூஜை: இளையான்குடி மாறன் நாயனாரின் குருபூஜை ஆவணி மாதம் மகம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

நாயன்மார் – 8. இயற்பகை நாயனார்

காவிரிபூம்பட்டினத்தில் கடற்கரை பகுதியில் வசித்தவர் இயற்பகையார். வணிகரான இவர் பெரும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தார். சிறுவயது முதலே ஈசனின் மீதும் அவர்கள் அடியார்கள் மீதும் அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். சிவனடியார்கள் யார் எது கேட்டாலும் இல்லை என்று கூறாமல் தன்னிடம் இருக்கும் அனைத்தையும் கொடுக்கும் அளவுக்கு சிவனின் சிறப்பு மிக்க அடியவராக திகழ்ந்தார். இயற்பகையாரின் பக்தியை உலகுக்கு உணர்த்த சிவபெருமான் சித்தம் கொண்டு தன் பக்தனை சோதிக்க எண்ணிய சிவபெருமான் அடியவர் வேடத்தில் இயற்பகையாரின் மாளிகை முன்பாக வந்து நின்றார். அவரைப் பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்தார் இயற்பகையார். அடியவர் தன் வாசல் தேடி வந்தது நான் செய்த பாக்கியம் என்று கூறி அவரை உள்ளே அழைத்துச் சென்றார். பின்னர் உயர்வான ஒரு ஆசனத்தில் அமரச் செய்தார். பின்னர் அடியவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். நீங்கள் இறைவனின் அடியவர்கள் என்ன கேட்டாலும் இல்லை என்று கூறாமல் வழங்குகிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். அதனால் உங்கள் இருப்பிடம் தேடி வந்தேன் என்றார். அதற்கு இயற்பகையார் ஐயனே எதுவாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள். என்னிடம் இருக்கும் பொருள் எதுவுமே எனக்கு சொந்தமானது இல்லை. எல்லாம் ஈசன் தந்தது. ஆகையால் அதனை இறைவனின் அடியவர்களுக்கே கொடுத்து ஆனந்தம் கொள்கிறேன் உங்களின் தேவையை சொல்லுங்கள் என்றார்.

சிவனடியார் வேடத்தில் இருந்த இறைவன் உன்னுடைய அழகிய மனைவி எனக்கு வேண்டும். அவளை என்னுடன் அனுப்பி வை என்றார். சாதாரண ஒரு மனிதனாக இருந்தால் இந்த இடத்தில் நடக்கும் செயல் வேறுமாதிரியானதாக இருந்திருக்கும். ஆனால் இறைவனின் சித்தத்தை உணர்ந்த இயற்பகையார் சிவனடியாருக்கு வேண்டியதைத் தருவதாக ஒப்புக் கொண்டார். ஐயனே தாங்கள் என்னிடம் இல்லாத பொருளைக் கேட்டு என்னை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி விடுவீர்களோ என்று கவலை கொண்டிருந்தேன். ஆனால் அப்படி எதுவும் நடைபெற வில்லை. ஆகையால் என் மனம் இப்போது மகிழ்ச்சியில் திளைக்கிறது. தங்கள் விருப்பப்படி இதோ என் மனைவியை உங்களுடன் அனுப்பி வைக்கிறேன் என்று கூறியவர் தன் மனைவியிடம் நடந்த விவரங்களை கூறினார். இயற்பகையாரின் இயல்பை நன்றாக அறிந்து வைத்திருந்த அவரது உத்தம மனைவி கணவனின் பேச்சுக்கு மறுபேச்சின்றி அவர் கட்டளையை ஏற்றுக் கொண்டாள். தான் சிவனடியாருடன் செல்வதாக ஒப்புக் கொண்டாள். இதையடுத்து இயற்பகையார் மனைவியை சிவனடியார் முன் நிறுத்தி அழைத்துச் செல்லும்படி கூறினார். வேடதாரியான சிவபெருமான் அங்கிருந்து சென்றார். அவர் பின்னே இயற்பகையாரின் மனைவியும் புறப்பட்டார். வீட்டின் வெளியே சென்ற பின் சிவனடியார் ஏதோ ஒரு யோசனையில் அப்படியே நின்றார். என்ன என்று அறியாததால் பதறிப்போய் ஓடி வந்த இயற்பகையார் ஐயனே ஏன் நின்று விட்டீர்கள் வேறு ஏதாவது வேண்டுமா என்று கேட்டார். அதற்கு அடியவர் ஒன்றுமில்லை. இந்த ஊரில் உனது உறவினர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். மேலும் நான் உன் மனைவியை அழைத்துச் செல்வது தெரிந்தால் அவர்களுடன் சேர்ந்து ஊர் பொதுமக்களும் எனக்கு இடையூறு செய்யக்கூடும். எனவே ஊர் எல்லை வரை நீ எனக்குத் துணையாக வந்தால் நலம் என்று நினைக்கிறேன் என்றார். ஐயனே இது நானே உணர்ந்து செய்திருக்க வேண்டிய காரியம். ஆனால் தவறிவிட்டேன். நீங்கள் நினைத்தது சரிதான். நான் உங்களுடன் வருகிறேன். எதிர்ப்பவர் எவராக இருப்பினும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியபடி வீட்டிற்குள் சென்று ஒரு வாளும் கேடயமும் எடுத்துக் கொண்டு கிளம்பினார்.

சிவனடியார் முன் நடக்க அவரைத் தொடர்ந்து இயற்பகையாரின் மனைவியும் பின் இயற்பகையாரும் சென்றனர். இதற்கிடையில் நடந்த சம்பவங்களை கேள்விப்பட்டு அவர்கள் செல்லும் வழியில் இயற்பகையாரின் உறவினர்களும் ஊர் பொதுமக்களும் கூடினர். அவர்கள் மூவரையும் தடுத்து நிறுத்தினார்கள். அடே மூடனே எவரும் செய்யத் துணியாத காரியத்தை செய்து ஊருக்கும் உறவினர்களுக்கும் களங்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறாய். உன் அறிவு இப்படியா மழுங்கிப் போகும். இப்போதே உன் மனைவியை அழைத்துக் கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டுச் செல் என்று அனைவரும் இயற்பகையாரை எச்சரித்தனர். ஆனால் அவர் தன் அடியவரை தடுக்கும் உங்களை கொன்று அழிக்கவும் தயங்க மாட்டேன் என்று கூறி எதிர்ப்பவர்கள் அனைவரையும் வாளால் வெட்டி வீழ்த்தினார். தப்பி ஓடியவர்கள் உயிர் பிழைத்தனர். எதிர்த்தவர்கள் இயற்பகையாரின் வாளுக்கு பலியாகினர். உறவினர்கள் அழுதனர். மூர்க்கத்தனமான அவரது வாள் வீச்சை எதிர்க்கும் சக்தி அவர்களில் யாருக்குமில்லை. சிவவேதியர் ஊர் எல்லைக்கு வந்து விட்டார். அவர்களை எதிர்த்து அங்கு யாரும் வரவில்லை. ஆகவே இயற்பகையாரை ஊருக்குத் திரும்புமாறு சிவவேதியர் கட்டளையிட்டார். அதை வேதவாக்காக கருதிய இயற்பகையார் சிவனடியாரை வணங்கி விடைபெற்றுக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார். அவர் தனது மனைவியை சற்றும் சலனமில்லாமல் திரும்பிப் பார்க்காமல் சென்றார்.

இயற்பகையனாரின் செயலைப் பார்த்து சிவனடியார் உருவில் இருந்த சிவபெருமான் மனம் மகிழ்ந்தார். அவரது பக்தியின் உயர்வைக் கண்டு இன்புற்றார். சிறிது தூரம்தான் சென்ற இயற்பகையனாருக்கு சிவனடியாரின் காப்பாற்றுங்கள் இயற்பகையாரே காப்பாற்றுங்கள் என்ற ஓலக்குரல் கேட்டது. பதறிப்போன இயற்பகையார் குரல் வந்த திசை நோக்கி ஓடினார். ஐயனே உங்களுக்கு தீங்கிழைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கொன்று அழிப்பேன் என்று எண்ணியபடி சென்றார். ஆனால் அங்கு சிவனடியாரைக் காணவில்லை. தன் மனைவி மட்டும் தனியாக நிற்பதைக் கண்டார். சற்றே குழப்பத்தில் ஆழ்ந்தார். அப்போது ஒரு பேரொளி விண்ணில் எழுந்தது. அந்த ஒளியில் இருந்து அசரீரியாக சிவவேதியரின் குரல் ஒலித்தது. இயற்பகையாரே உங்களை சோதிக்க யாமே வந்தோம். ஊரார் என்னை காமாந்தகாரன் என்று வசைபாடினர். நீரோ உலக மாந்தரின் இயல்பான சுபாவங்களை எல்லாம் உதறி எறிந்து உங்களது கொள்கையில் உறுதியாக நின்றீர்கள். சிவனடியாரே உபசரிக்கும் உங்களது பண்பு இந்த உலகம் கண்டு வியக்கக்கூடியது. அதை அனைவருக்கும் உணர்த்தவே உங்களை இவ்வாறு சோதித்தோம். சிவலோகம் உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது என்றார் இறைவன். இயற்பகையார் மெய் சிலிர்த்து நின்றார். அவர் மீதும் அவர் மனைவி மீதும் விண்ணவர்கள் பூமாரி பொழிந்தனர். சிவனடி சேர்ந்து அவ்விருவரும் அரிதிலும் அரிதான பாக்கியம் பெற்றனர். அவர்களுடன் இயற்பகையாரின் வாளுக்கு பலியானவர்களும் சிவலோகம் சென்றனர்.

குருபூஜை: இயற்பகை நாயனாரின் குருபூஜை மாதம் மார்கழி உத்திரம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

நாயன்மார் – 7. இடங்கழி நாயனார்

சோழநாட்டின் சிறிய நாடான கோனேட்டில் கொடும்பாளூர் என்னும் ஊரை இடங்கழி நாயனார் ஆண்டு வந்தார். சிவ வழிபாட்டினை போற்றி வந்தவர் இவர். இவரது காலத்தில் தான் சிவாலயங்கள் அதிகம் எழுப்பப்பட்டதாக வரலாறு கூறுகிறது. பேரும் புகழும் பெற்ற இக் குறுநில மன்னர் கோயில்களில் நடக்கும் சிவாகம வழிபாட்டிற்குத் தேவையான நெல்லையும் பொன்னையும் வாரி வாரி வழங்கினார். ஆகமத்திலுள்ள சைவ நெறியையும் வேதத்திலுள்ள தர்ம நெறியையும் பாதுகாத்து வந்த இவர் காலத்தில் சைவம் தழைத்தோங்கியது. சிவபெருமானுக்குத் திருத்தொண்டுகள் புரியும் அடியவர்களுக்கு கணக்கற்ற உதவிகளைச் செய்து வந்தார். அவரது நாட்டில் அடியார்கள் பலரும் இவருடன் சேர்ந்து சிவனடியார்களுக்கு உணவளித்து அருந்தவப் பணிகளை செய்து கொண்டு வந்தனர்.

அந்த ஊரில் இருந்த சிவனடியார் ஒருவர் சிவனுக்காகவே தான் வாழ்வு என்று வாழ்ந்து வந்தார். அடியவர்களுக்கு அன்னதானம் வழங்குவதைத் தவிர வேறு எந்த பணிகளையும் செய்யாமல் வாழ்ந்து வந்தார். சிவ நாமம் சொல்லி வரும் அடியார்கள் அனைவரும் இறைவனே என்று எண்ணினார். அவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு வேண்டிய பணிவிடைகள் செய்து அவர்களுக்கு உணவு அளித்து வந்தார். சிவனின் மீது எவ்வளவு பக்தி இருந்தால் இத்தகைய பணி விடையை அவர் செய்வார் என்று மகிழ்ந்த சிவனடியார்கள் இவரது அன்பில் செல்லும் இடமெல்லாம் இவரது புகழை பரப்பினார்கள். இதனால் அந்த ஊருக்கு வரும் அனைத்து சிவனடியார்களும் இந்த அடியாரின் வீட்டில் உணவு உண்பதை பெரும்பேறாக கருதினார்கள். சிவனடியார்களின் வருகையால் மூட்டிய அடுப்பு அணையாமலேயே உணவுகள் தயாரித்து கொண்டிருந்தார். அவரிடம் இருந்த செல்வம் சிறிது சிறிதாக கரைந்தது. ஆனாலும் மூட்டிய நெருப்பு அணையாமல் பார்த்துக் கொண்டார். செல்வம் முற்றிலும் கரைந்தது. அடியார்களுக்கு உணவு அளிப்பதை எக்காலத்திலும் நிறுத்தக்கூடாது அதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்த சிவனடியார் அந்நாட்டின் அரண்மனை கருவூலத்துக்குள் திருட்டுத்தனமாக நுழைந்தார். நெல்மணிகள் ஆபரணங்கள் தங்கக்காசுகள் என்று கையில் பட்டதை மூட்டை கட்டி எடுத்து வந்தார். அதனால் அன்னதானமும் குறைவின்றி தொடர்ந்து வந்தது. சிவனடியார்களுக்கு அன்னதானம் வழங்குவதை இலட்சியமாக கொண்டு வாழ்ந்தவருக்கு தன்னுடைய இலட்சியத்தில் குறையில்லாமல் அன்னதானம் நடக்கிறதே என்ற திருப்தி ஏற்பட்டது.

அரண்மனையில் பொக்கிஷங்களிலிருந்து பணமும் பொருளும் குறைகிறது என்று அரசர் இடங்கழியாரிடம் புகார் சென்றது. அரசர் காவலை பலப்படுத்தினார். ஒருநாள் பொருளை கொண்டு வரும்போது சிவனடியார் கையும் களவாக பிடிபட்டார். இடங்கழி நாயனாரிடம் அழைத்து சென்றார்கள். காவலர்கள் செய்தியை சொல்ல அடியவர் சிவக்கோலத்தில் நெற்றி நிறைய விபூதியுடன் தெய்வீக முகத்தை கண்ட இடங்கழி நாயனார் திகைத்தார். சிவக்கோலம் தாங்கியுள்ள நீங்கள் இத்தகைய இழிவான தொழிலைச் செய்யக் காரணம் என்ன என்று கேட்டார். சோழப் பெருந்தகையே சிவனடியார்களுக்கு உணவு கொடுப்பதை பல வருடங்களாக தவறாமல் செய்து வந்தேன். இப்போது இந்த சிறந்த சிவப்பணிக்கு சிக்கல் ஏற்பட்டது. அதனால் அரண்மனைக் களஞ்சியத்தில் உள்ள நெல்லைக் எடுத்து செல்லலாம் என்ற முடிவிற்கு வந்தேன் என்றார். அடியவர் சொன்னதை கேட்ட இடங்கழி நாயனார் அவரை காவலிலிருந்து விடுவித்தார். சிவனை வணங்கும் நான் கூட அடியார்களுக்கு அன்னதானம் அளிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. இவ்வளவு செல்வம் என்னிடமிருந்து என்ன பயன். என்னிடமுள்ள அனைத்து செல்வங்களும் சிவபக்தரில் சிறந்தவரான உங்களிடம் தான் இருக்க வேண்டும் என்று தன்னிடமிருந்த செல்வத்தை அடியாருக்கு வழங்கி அவரை வணங்கினார். அத்துடன் தமது நாட்டிலுள்ள சிவனடியார்களுக்கு தேவையான நெற்குவியல்களை அவர்களே எடுத்துச் செல்லட்டும் என்று பறைசாற்றுங்கள் என்று கட்டளை இட்டு மன நிறைவு பெற்றார் இடங்கழி நாயனார். இடங்கழியாரின் வள்ளல் குணத்தைக் கண்ட சிவபெருமான் அவருக்கு காட்சி தந்து அருளினார். அருள் வேந்தராகிய அரசர் நெடுங்காலம் அரசு புரிந்திருந்து சிவபதம் அடைந்தார்.

குருபூஜை: இடங்கழியார் நாயனாரின் குருபூஜை ஐப்பசி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

நாயன்மார் – 6. இசைஞானியார்

திருவாரூர் என்னும் வளம் நிறைந்த ஊரில் ஆருர் என்னும் கமலாபுரத்தில் ஆதி சைவ குலத்தில் கௌதம கோத்திரத்தில் பிறந்தவர் ஞானசிவாச்சாரியார் என்பவர். அவருக்குத் திருமகளாக அவதரித்தவர் இசைஞானியார். சிறுவயது முதலே சிவபெருமானின் மீது மிகுந்த அன்புடனும் பக்தியுடனும் சிறந்த சிவபக்தையாக வளர்ந்து திருவாரூர் இறைவரது திருவடிகளை என்றும் மறக்காமல் வாழ்ந்து வந்தார். குழந்தைப் பருவம் முடிந்து திருமணப் பருவத்தை அடைந்ததும் ஞான சிவாச்சாரியார் தனது மகளை சடைய நாயனாருக்கு திருமணம் செய்து வைத்தார். சடைய நாயனாரோடு இல்வாழ்க்கையில் ஈடுபட்ட போதும் சிவபெருமானின் மீது கொண்ட பக்தியிலும் அவரை வழிபடுவதிலும் எவ்விதமான குறைகள் இன்றி வாழ்ந்து வந்தனர். இசைஞானியார் பக்தியில் மகிழ்ந்த சிவபெருமான் சுந்தரமூர்த்தி நாயனாரை புத்திரனாகப் பெறும் பேறு பாக்கியத்தை இசைஞானிப் பிராட்டியாருக்கு அருளினார். தனக்கு பிறக்கும் குழந்தை தர்ம வழியில் வாழ வேண்டும் என்பதற்காக குழந்தையை கருவில் சுமக்கும்போதே சிவமந்திரங்கள் மற்றும் சிவபோற்றிகளை கற்பித்தார். இவருக்கு பிறந்த சுந்தரமூர்த்தி நாயனார் சமயக்குரவர்களில் ஒருவராவர். இத்தம்பதிகளின் மகனான சுந்தரமூர்த்தியை அந்நாட்டு மன்னன் நரசிங்க முனையார் தம்மோடு அழைத்துப் போக எண்ணியபோது இவர் மன்னரது அன்பிற்குக் கட்டுப்பட்டு ஒன்றும் பேசாமல் குழந்தையை அனுப்பி வைத்தார்.

சுந்தரமூர்த்தி நாயனாரைப் பெற்றமைக்காகவும் சைவநெறியில் நின்றமைக்காகவும் அவரது பெற்றோர்கள் இருவரையுமே நாயன்மார்கள் பட்டியலில் சேக்கிழார் இணைத்துள்ளார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் தாம் பாடியருளிய திருத்தொண்டத் தொகையில் பல இடங்களில் தம் பெற்றோர்களைப் பற்றிச் சிறப்பித்துக் கூறியுள்ளார். திருதொண்டத்தொகை பாடி உலகையெல்லாம் உய்வித்த தெய்வ புதல்வனை ஈன்ற சடைய நாயனாரும் இசைஞானியாரும் இறைவன் திருவடி நிழலை அடைந்து இன்புற்றனர்.

குருபூஜை: இசைஞானியார் நாயனாரின் குருபூஜை சித்திரை மாதம் சதயம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

46 – திருமூலர்

திருக்கைலாயத்தில் சிவபெருமானது திருக்கோயிலுக்கு முதற்பெரும் காவல் பூண்ட திருநந்தி தேவரது திருவருள் பெற்ற மாணாக்கருள் அணிமா முதலிய எண்வகைச் சித்திகளும் (அட்டமா சித்திகள்) கைவரப்பெற்ற சுந்தரநாதர் என்னும் சிவயோகியார் ஒருவர் இருந்தார். இவர் கைலாய பரம்பரையைச் சேர்ந்தவர். சித்தர் மரபில் முதலானவராகிய அகத்தியருக்கு அடுத்தவர் இவர் எனக் கருதப்படுகின்றார். கைலாயத்தில் நந்தியின் உபதேசம் பெற்றவர். திருமூலரின் 16 சீடர்களில் காலங்கி சித்தரும், கஞ்சமலைச் சித்தரும் முக்கியமானவர்கள்.

இவர் அகத்திய முனிவரிடத்தில் கொண்ட நட்பினால் அவரோடு சிலகாலம் தங்குவதற்கு எண்ணி அம்முனிவர் எழுந்தருளியிருக்கும் பொதிகை மலையை அடையும் பொருட்டுத் திருக்கைலையிலிருந்து புறப்பட்டுத் தென்திசை நோக்கிச் சென்றார். இவர் சுந்தர நாதன் என்ற பெயருடன் முதல் தடவை தென்னாட்டுக்கு வந்து தில்லையில் தப்பிலாமன்றில் பதஞ்சலி, வியாக்கிரமர்களுடன் தனிக்கூத்து கண்டது 8000 வருடங்கள் முன்னர் ஆகும். இது இராமாயண காலத்துக்குச் சமமானதாகும். திருக்கேதாரம், பசுபதிநாதர் கோவில், அவிமுத்தம் (காசி), விந்தமலை, திருப்பருப்பந்தம், திருக்காளத்தி, திருவாலங்காடு ஆகிய திருத்தலங்களை தரிசித்து விட்டு பின்பு காஞ்சி நகரையடைந்து, திருவேகம்பப் பெருமானை வழிபட்டு அந்நகரிலுள்ள சிவயோகியார்களாகிய தவமுனிவர்களுடன் அன்புடன் அளவளாவி மகிழ்ந்தார். பின்னர் திருவதிகையை அடைந்து முப்புரமெரித்த பெருமானை வழிபட்டுப் போற்றி இறைவன் அற்புதத் திருக்கூத்தாடியருளும் திருவம்பலத்தினைத் தன்னகத்தே கொண்டு திகழும் பொற்பதியாகிய பெரும்பற்றப் புலியூரை வந்தடைந்தார். எல்லா உலகங்களும் உய்யும்படி ஐந்தொழில் திருக்கூத்து இயற்றியருளும் கூத்தப்பெருமானை வணங்கித் துதித்துச் சிந்தை களிகூர்ந்தார்.

தில்லைத் திருநடனங் கண்டு மகிழ்ந்த சிவயோகியார் அங்கிருந்து புறப்பட்டுக் காவிரியில் நீராடி அதன் தெற்கு கரையினை அடைந்து உமையம்மையார் பசுவின் கன்றாக இருந்து இறைவனை வழிபாடு செய்து அம்முதல்வனுடன் எழுந்தருளியிருந்து அருள் புரியும் திருத்தலமான திருவாவடு துறையை அடைந்தார். திருக்கோயிலை வலம் வந்து பசுபதியாகிய இறைவனை வழிபட்டு அத்திருத்தலத்திலே சிறிது காலம் தங்கியிருந்தார். சில காலம் கழித்து திருவாவடு துறையிலிருந்து கிளம்பிச் செல்லும் பொழுது காவிரிக் கரையிலுள்ள சோலையிடத்தே பசுக் கூட்டங்கள் கதறி அழுவதைக் கண்டார். அந்தணர்கள் வாழும் சாத்தனூரிலே தொன்று தொட்டு ஆநிரை மேய்க்கும் குடியிற் பிறந்த ஆயனாகிய மூலன் என்பவன் இறந்தமையால் அதனைத் தாங்காத பசுக்கள் உயிர் நீங்கிய அவனது உடம்பினைச் சுற்றிச்சுற்றி வந்து வருந்தி அழுதன. மேய்ப்பான் இறந்தமையால் பசுக்களைடைந்த துயரத்தினைக் கண்ட அருளாளராகிய சிவயோகியாரது உள்ளத்தில் இப்பசுக்களின் துயரத்தினை நீக்குதல் வேண்டும் என்ற எண்ணம் திருவருளால் தோன்றியது. இந்த இடையன் உயிர் பெற்று எழுந்தாலன்றி இப்பசுக்கள் துயரம் நீங்காது என எண்ணிய தவமுனிவர் தம்முடைய திருமேனியைப் பாதுகாப்பாக ஒரிடத்தில் மறைத்து வைத்து விட்டுக் கூடுவிட்டுக் கூடு பாய்தல் (பரகாயப் பிரவேசம்) என்னும் சித்தியினால் தமது உயிரை அந்த இடையனது உடம்பில் புகுமாறு செலுத்தினார். மூலன் அதுவரை உறங்கியிருந்தவன் போல் சட்டென்று கண் விழித்து திருமூலராய் எழுந்தான்.

திருமூலர் விழித்தெழுந்ததைக் கண்டு பசுக்கள் மகிழ்ந்து தங்கள் அன்பை வெளிப்படுத்தின. துள்ளிக் குதித்தன. திருமூலராகிய சித்தருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. அவரும் பசுக்களைத் தட்டிக்கொடுத்து அவற்றோடு சேர்ந்து துள்ளிக் குதித்தார். மாலை வந்ததும் வீடு நோக்கி பசுக்கள் புறப்பட திருமூலரும் கூடவே புறப்பட்டார். ஒவ்வொரு பசுவும் தத்தம் வீடு அறிந்து புகுந்து கொண்டன. திருமூலர் அவற்றை எல்லாம் வீடு சேர்த்தார். ஆனால் மூலன் மட்டும் அவரது வீட்டிற்கு போக விரும்பவில்லை. அவர் ஞான திருஷ்டியால் மூலனுக்குத் திருமணம் ஆகிவிட்டது என்பதை அறிந்தார். அதனால் தனியாக ஒரு இடத்தில் அமர்ந்து என்ன செய்வது என்று சிந்திக்கத் தொடங்கினார். மூலனின் மனைவி கணவன் வரவை வெகு நேரமாக எதிர்பார்த்துப் பயன் ஏதும் இல்லாததால் கணவனைத் தேடிப் புறப்பட்டாள். வரும் வழியிலே ஓரிடத்தில் கணவன் அமர்ந்து இருப்பதைக் கண்டு வியப்பு மேலிட அருகே சென்று வீட்டிற்கு வரக் காலதாமதம் ஆனது பற்றி வினவினாள். மூலன் மௌனம் சாதித்தார். மூலனின் மனைவி வியப்பு மேலிட கேள்வி மேல் கேள்வி கேட்டாள். திருமூலர் மௌனமாகவே இருந்தார். அவரது மனைவிக்கு புரியவில்லை. திருமூலரின் கையைத் தொட்டு அழைக்க முற்பட்டாள். அம்மையார் செய்கை கண்டு திருமூலர் சிறிது எட்டி விலகினார். அதைக் கண்டு அந்தப் பெண்மணி அஞ்சி நடுங்கி உங்களுக்கு என்ன தீங்கு நேர்ந்தது? எதற்காக இப்படி விலகுகிறீர்கள்? என்று மன வருத்தத்தோடு கேட்டாள். திருமூலர் மூலனின் மனைவியிடம் என்னால் உன் வீட்டிற்கு வர முடியாது. உனக்கும் எனக்கும் இனி மேல் எவ்வித உறவும் கிடையாது. அதனால் ஆலயம் சென்று இறைவனை வழிபட்டு அமைதி பெறுவாயாக என்று கூறினார். அதற்குமேல் அவள் முன்னால் நிற்பதும் தவறு என்பதை உணர்ந்து திருமூல யோகியார் அத்தலத்திலுள்ள திருமடம் ஒன்றுக்குச் சென்று சிவயோகத்தில் அமர்ந்தார். கணவனின் நிலையைக் கண்டு கதிகலங்கிப் போனாள் மனைவி. கணவனின் மனமாற்றத்தைப் பற்றி ஒன்றும் புரியாமல் கவலையோடு வீடு திரும்பினாள்.

இரவெல்லாம் பெருந்துயர்பட்டுக் கிடந்தாள். மறுநாள் மூலனின் மனைவி சுற்றத்தாரை அழைத்துக்கொண்டு அவர் இருக்குமிடத்திற்கு வந்தாள். யோக நிலையில் அமர்ந்திருக்கும் திருமூலரின் முகத்தில் தெய்வ சக்தி தாண்டமாடுவது போன்ற தனிப் பிரகாசம் பொலிவு பெறுவது கண்டு அனைவரும் திகைத்து நின்றனர். இருந்தும் அவர்கள் மூலனின் மனைவிக்காக திருமூலரிடம் வாதாடினர். ஒரு பலனும் கிட்டவில்லை. அதன் பிறகு திருமூலர் ஒரு முனிவர் என்பதை அவர்களால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அவர்கள் மூலனின் மனைவியிடம் உன் கணவர் முன்னைப்போல் இல்லை. இப்பொழுது அவர் முற்றும் துறந்த முனிவராகி விட்டார். இனிமேல் இந்த மெய்ஞானியாரோடு வாழ வேண்டும் என்பது நடக்காத காரியம் என்ற உண்மையைக் கூறினர். அவர்கள் மொழிந்ததைக் கேட்ட மூலனின் மனைவி கணவனுக்கு இப்படிப் பித்துப் பிடித்து விட்டதே என்று தனக்குள் எண்ணியவாறே அவரது கால்களில் விழுந்து வணங்கி வேதனையோடு வீடு திரும்பினாள். சற்று நேரத்தில் யோகநிலை தெளிந்த திருமூலர் மறைவாக ஒரு இடத்தில் வைத்திருந்த தமது திருமேனியைத் தேடினார். கிடைக்கவில்லை முதலில் யோகியாருக்கு சற்று வியப்பாகவே இருந்தது. மீண்டும் யோக நிலையில் அமர்ந்து தனது மேனியைப் பற்றிய உண்மைப் பொருளை உணர எண்ணம் கொண்டார். தபோ வலிமையால் இறைவன் அருளிய வேத ஆகமப் பொருள்களைத் தமிழிலே வகுத்து உலகோர்க்கு உணர்த்த வேண்டும் என்பதற்காகவே முக்கண்ணனார் தம் உடலை மறைத்தருளினார் என்பதை உணர்ந்து கொண்டார். திருமூலநாயனார் இறைவனின் விருப்பத்தை நிறைவேற்ற சித்தம் கொண்டார்.

மூலனின் ஊரிலிருந்து புறப்பட்ட திருமூலர் திருவாவடுதுறை திருத்தலத்தை அடைந்து மூலவர் பெருமானைப் பணிந்தவாறு மதிலுக்கு வெளியே மேற்கு பக்கமாக அமைந்துள்ள அரசமரத்தின் அடியில் அமர்ந்து சிவயோகம் செய்யத் தலைப்பட்டார். சிவயோகத்தில் நிலைத்து நின்று இதயக் கமலத்தில் எழுந்தருளிய எம்பெருமானுடன் ஒன்றினார். உணர்வு மயமாய்த் திகழ்ந்தார். உலகோர் பிறவியாகிய துன்பத்திலிருந்து நீங்கி உய்யும் பொருட்டு சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு நெறிகளையும் வகுத்தும், தொகுத்தும், விரித்தும் கூறும் நல்ல திருமந்திர மாலையினை ஓர் ஆண்டிற்கு ஒரு மந்திரப் பாடலாக மூவாயிரம் ஆண்டுகள் சிவயோகத்தில் அமர்ந்து மூவாயிரம் திருமந்திரங்கள் அடங்கிய திருமுறையை பாடினார். சிவயோக நுணுக்கங்களை விளக்கமாகக் கூறும் திருமந்திரம் ஓர் அற்புதமான அறநூல். தெய்வீக ஆற்றலுடன் திகழ்ந்து சிவபதவியை நினைப்பவரைப் பாவக் குழியிலிருந்து வெளியேற்றிக் காப்பதால் திருமந்திரம் எனத் திருநாமம் பெற்றது.

திருமந்திரத்தில் ஐந்து கரத்தினை என்று தொடங்கும் விநாயகர் வணக்கப் பாடல் தற்காலத்தில் தான் திருமூலர் திருமந்திரம் நூலில் சேர்க்கப்பட்டது. அவர் காலத்தில் சைவம் என்று கொண்டால் சிவனை அன்றி வேறொரு தெய்வத்தை வைத்து எந்த ஒரு காரியங்களையும் இலக்கியங்களையும் நூல்களையும் தொடங்கியது இல்லை. விநாயகரின் வழிபாடு பிற்காலத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான சிறுத்தொண்டராக போற்றப்படுகிற பரஞ்சோதி என்கிற மன்னன் வாதாபி வரை சென்று அங்கு போரிலே வெற்றி கொண்டு அந்தப் பிராந்தியத்திலே அவர்கள் வணங்கும் தெய்வமாகிய கணபதியை தமிழகத்துக்குத் தான் திரும்பும்வபொழுது கொண்டு வந்தார் என்பதும் அப்பொழுது விநாயகரின் வயிற்றுப் பகுதி இன்று இருப்பது போல தொந்தியாக இல்லாமல் தட்டையாக இருந்தது என்பதும் வரலாறு. இதற்குச் சான்றாக இன்றளவும் பழைய கணபதியின் தொப்பையில்லாத திருவுருவம் ஒன்று திருவாரூர் தியாகேசர் ஆலயத்திலும், மற்றொன்று இங்கிலாந்தில் இருக்கும் அருங்காட்சியகத்திலும் இருப்பதை இன்றும் காணலாம். இவரது திருநூலுக்குத் தமிழ் மூவாயிரம் என்ற பெயரே முதலில் இருந்தது. அந்த நூலில் மிக நிரம்பிய மந்திரங்களும், சில தந்திரங்களும், மனித ஸ்தூல சரீரத்துக்குத் தேவையான எல்லாவற்றையும் விளக்கியுள்ளபடியால் பின்னர் அந்த நூல் “திருமூலர் திருமந்திரம்” என்று வழங்கப்பட்டது.

திருமூலர் பரம் பொருளாகிய சிவபெருமானைப் போற்றி பாடியருளிய திருமந்திரம் வேத ஆகமங்களின் சாரம். இது ஒன்பது மந்திரங்களாக அமைந்துள்ளது. பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக தெய்வீக ஆற்றலுடன் விளங்குவது இந்தத் திருமந்திரம். இது. சைவ சித்தாந்த சாத்திரங்கள் அனைத்திற்கும் முற்பட்டது. இந்தப் புனிதமான திருமந்திரத் திருமுறைக்கு நிகராக வேறு திருமுறைகளே இல்லை. இந்த மூவாயிரம் திருமந்திரப் பாடல்களையும் அதிகாலையில் எழுந்து அவற்றின் பொருள் உணர்ந்து ஓதுவோர் பிறவிப் பாசம் நீங்கி இறைவனை அடைவர் என்பது திருமூலரின் திருவாக்கு. இவ்வாறு உலகோர் உய்யும் பொருட்டுத் திருமந்திர மாலையை அருளியபின் திருமூலர் சிதம்பரம் சென்று தில்லை நாதனுடன் கலந்து தனது குருவாகிய நந்தியிடம் தஞ்சம் அடைந்தார்.

பிற்குறிப்பு:

திருமூலரின் காலம் ஏழாயிரம் வருடங்களுக்கு முந்தியது என்ற போதும் திருமந்திரத்தின் காலம் தற்கால ஏழாம் நூற்றாண்டு (கி.பி) என்று பல வரலாற்று வல்லுநர்களால் கருதப்படுகின்றது. இதற்குக் காரணம் உள்ளது. திருமூலர் திருமந்திரம் எழுதி முடித்தவுடன் அதை வெளியிடவில்லை. யாரும் அறியாதவாறு தான் யோக நிலையில் அமர்ந்திருந்த திருவாவடுதுறை ஆலையத்தின் கொடி மரத்தின் அடியில் தான் எழுதிய திருமந்திரம் அடங்கிய ஓலைச் சுவடிகளைப் புதைத்து வைத்துவிட்டு அவர் சிதம்பரம் சென்று நந்தீசுவரருடன் கலந்து விட்டார். அதன் பிறகு நாலாயிரம் வருடங்கள் கழித்து (திருமூலர் திருமந்திரம் எழுத எடுத்துக் கொண்டது மூவாயிரம் வருடங்கள்) தற்கால ஏழாம் நூற்றாண்டில் (கி.பி) அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் சைவக் குரவர்கள் என்று போற்றப்படும் நால்வர்களில் ஒருவருமான திருஞான சம்பந்தப் பெருமான் உதித்தார். அவர் தென்னாட்டிலுள்ள சைவ ஆலயங்கள் அனைத்தையும் சென்று வழிபட்டு அதில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானைப் பாடிச் சென்ற காலங்களில் திருவாவடுதுறை திருத்தலத்திற்கும் வந்திருந்தார். அப்போது கோயிலின் வாயிலுக்குள் நுழைந்தவுடன் இறைவனின் திருவருளால் திருமூலர் திருமந்திரத்தின் அற்புதமான தமிழ் வாசனை அவரை வந்தடைய அதனால் ஈர்க்கப்பட்டுத் தன்னுடன் வந்தவர்களிடம் இங்கே அருமையான தமிழ் வாசனை வருகின்றதே என்ன என்று பாருங்கள்’ என்று கூறி கொடி மரத்தின் அடியில் உள்ள மண்ணைத் தோண்டச் செய்து அங்கே திருமூலர் புதைத்து வைத்திருந்த திருமந்திர ஓலைச் சுவடிகளை கண்டு எடுத்தார். அவற்றை படித்து உணர்ந்து அதன் அருமை பெருமைகளை உலகோர் அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையில் அதை வெளியிட்டு அனைவருக்கும் ஓதி அருளச் செய்தார்.

பிற்காலத்தில் வந்த சேக்கிழார் பெருமான் அறுபத்து மூன்று நாயன்மார்களைப் பற்றித் தான் எழுதிய பெரிய புராணத்தில் திருமூலரை நாற்பத்து ஆறாவதாக சேர்த்து திருமூலரின் வாழ்க்கை வரலாற்றையும் திருமந்திரப் பாடல்களின் குறிப்பும் எழுதி வைத்தார். அவருக்குப் பின் வந்த நம்பியாண்டார் நம்பி சைவ சான்றோர்கள் பலர் அருளியிருந்த சைவத் திருமுறைகளை ஒன்றாகத் தொகுத்த போது திருமூலர் அருளிய திருமந்திரத்தையும் பத்தாவது திருமுறையாகத் தொகுத்து அருளினார்.

குருபூஜை: திருமூல நாயனாரின் குருபூஜை ஐப்பசி மாதம் அசுவினி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

நாயன்மார் – 5. ஆனாய நாயனார்

லால்குடி ரயில் நிலையத்திலிருந்து பூவாலுர் வழியே வடமேற்கில் சுமார் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருமங்கலம் என்ற ஊர். இத்தலத்தின் பெருமைகள் பெரியபுராணம் மற்றும் கச்சியப்ப முனிவர் பாடிய பூவாளூர் புராணத்திலும் கூறப்படுகிறது. அந்த ஊரில் ஆயர் குலத்தில் அவதரித்தார் ஆனாயர். பரசுராமர் சிவபெருமானை இங்கு தான் வழிப்பட்டு பரசு என்ற ஆயுதத்தைப் பெற்றார். தினம் ஈசனை வணங்கி திருநீறு இட்டு தன்னுடைய குலத் தொழிலான மாடுகளை மேய்க்க செல்வார். ஏராளமான பசு மந்தைகள் இவரிடம் இருந்தன. ஆ என்றால் பசு என்று பொருள்படும். பசுக்களை மேய்க்கும் தொழிலை கொண்ட இவர் ஆனாயர் என்ற பெயர் பெற்றார். இவர் சிவனைத் தனது முழுமுதற்கடவுளாக கொண்டிருந்தார். பசுக்கூட்டங்களைக் காட்டுக்கு கொண்டு போய் நண்பர்களோடு சேர்ந்து மேய்த்துக்கொண்டு வருவது இவரது வழக்கம். வகை வகையாக மாடுகளை பிரித்து மேய விட்டுவிட்டு புல்லாங்குழல் வாசிப்பார். இசையில் ஓம் நமச்சிவாய எனும் திருநாமம் கமலும். ஆனாயர் குழல் ஊதுவதில் சிறந்தவராக திகழ்ந்தார். பசுக்கூட்டத்துடன் சென்று அவை மேயும் பொழுது இவர் குழல் ஊதுவார்.

ஒரு மழைக்காலத்தில் அவரது தோழர்கள் யாவரும் பசுக்கூட்டங்களை மேய்த்துக் கொண்டு செல்ல ஆனாயர் மட்டும் தனி வழியில் நடந்து முல்லை நிலத்திற்கு சென்றார். அப்பொழுது கார் காலம் முல்லை மலர் பூத்து நறுமணம் வீசியது. அங்கு பூத்துக் குழுங்கும் கொன்றை மலர்களை எல்லாம் பார்த்து அதனுள்ளே சிவபெருமானை கண்டார். தனது புல்லாங்குழலை எடுத்து ஐந்தெழுத்து மந்திரமான நமச்சிவாய என்று குழலோசையில் வாசித்தார். எங்கும் நமசிவாய என்ற ஒலி எதிர்ரொலித்தது. குழல் ஓசையைக் கேட்ட பசுக்கள் அவர் அருகில் வந்து நின்றன. இளம் கன்றுகள் தாய்மடியில் பால் குடிப்பதை நிறுத்திவிட்டு அப்படியே நின்றது. ஆங்கே காணப்பட்ட எருதுகளும் மான் போன்ற விலங்குகளும் அப்படியே அசையாமல் நின்றது. ஆடுகின்ற மயில்கள் அப்படியே ஆடாமல் நின்றது. நமச்சிவாய நமச்சிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரம் மண்ணிலும் விண்ணிலும் ஒலித்தது. அனைத்து தேவர்களும் அங்கே வந்துவிட்டார்கள். இறைவன் அப்பனும் அம்மையுமாக இடப வாகனத்தில் காட்சியளித்தனர். உன் குழல் இசையை கேட்டேன் என்றும் இந்த இசையின் சத்தத்தை எனக்குத் தரவேண்டும் என்று இறைவன் கேட்டார். உடனே இறைவனடி சேர்ந்தார் ஆனாய நாயனார். நமசிவாய மந்திரத்தை ஓதி இறைவனை கவர்ந்து என்றென்றும் இறைவன் அருகிலிருந்து குழல் ஊதும் பாக்கியம் பெற்றார்.

குருபூஜை: ஆனாய நாயனாரின் குருபூஜை கார்த்திகை மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.