மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -3

கிருஷ்ணன் அர்ஜுனன் பீமன் மூவரும் ஜராசந்தனைப் பற்றி கூறியவற்றைக் கேட்ட மன்னன் யுதிஷ்டிரன் ஜராசந்தனை கொல்வதற்கு அனுமதி வழங்கினான். இப்பொழுது கிருஷ்ணனும் பீமனும் அர்ஜுனனும் வழிப்போக்கர்கள் போன்று மாறுவேடம் அணிந்து ஜராசந்தன் இருக்கும் மகத நாட்டிற்கு சென்றனர். நள்ளிரவில் அரண்மனைக்கு சென்று ஜராசந்தனை துவந்த யுத்தத்திற்கு வரும்படி அழைத்தனர்.

மூவரையும் பார்த்த ஜராசந்தன் பீமனே மூவருள் என்னுடன் சண்டையிட தகுதியானவன் என்று கூறி பீமனோடு சண்டையிட துணிந்தான். இருவருக்குள் சண்டை நெடுநேரம் நிகழ்ந்தது. பிறகு பீமன் ஜராசந்தனை இரண்டாக கிழித்து தரையில் போட்டான். ஆனால் இரண்டாக கிழிந்த ஜராசந்தனின் இரண்டு பகுதிகளும் மீண்டும் ஒட்டிக்கொண்டது. ஜராசந்தன் உயிர் பெற்று எழுந்து புதிதாக சண்டையிட துவங்கினான். இருவருக்குள் சண்டை நடந்து கொண்டிருந்த போது கிருஷ்ணன் வைக்கோல் ஒன்றை எடுத்து அதை இரண்டாக கிழித்து அதனை மாற்றி தரையில் போட்டான். அதை பார்த்த பீமனுக்கு விஷயம் விளங்கியது. அவன் ஜராசந்தனை மீண்டும் இரண்டாக கிழித்து உடலை மாற்றி போட்டான். இப்போது கிளிந்த இரண்டு பகுதிகளும் ஒட்டவில்லை அத்தோடு ஜராசந்தன் அழிந்தான்.

சிறையிலிருந்த அனைத்து ராஜகுமாரர்களும் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். ஜராசந்தனின் மகன் மகத நாட்டிற்கு அரசனாக்கப்பட்டான். சண்டையில் வெற்றி வீரர்களாக மூவரும் இந்திரப்பிரஸ்தத்திற்கு திரும்பினார். யுதிஷ்டிரன் அவர்களின் பராக்கிரமத்தை பெரிதும் பாராட்டினான். மகத நாட்டில் தாங்கள் புரிந்த வீரச் செயலை துவாரகா வாசிகளுக்கு எடுத்துச் சொல்ல கிருஷ்ணர் துவாரகாவிற்கு புறப்பட்டான்.

ராஜசூய யாக்ஞம் சிறப்பாக நடைபெற பீமன் அர்ஜுனன் நகுலன் சகாதேவன் ஆகிய யுதிஷ்டிரனின் நான்கு சகோதரர்களும் நான்கு திசைகளில் சென்று ஆங்காங்கு இருந்த அரசர்களின் நட்பையும் செல்வத்தை பெற்றார்கள். எடுத்த காரியம் நன்கு நிறைவேற்றப் பெற்று நால்வரும் தங்கள் தலைமை பட்டணத்திற்கு வெற்றியுடன் திரும்பினார்கள். அரசர்கள் அனைவரும் ராஜசூய யாக்ஞத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அஸ்தினாபுரத்தில் இருந்த முதியோர்களும் தாயாதிகளும் அந்த யாக்ஞத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். இந்திரப்பிரஸ்தம் சொர்கம் போன்று இருந்தது. ராஜசூய யாக்ஞம் அற்புதமாக நிறைவேறியது. பாண்டவர்களிடம் மேன்மையும் மகிமையும் மிளிர்ந்தது. இதன் காரணமாக கௌரவர்களிடம் வெறுப்பும் பொறாமையும் உருவெடுத்தது. ராஜசூய யாக்ஞம் இனிது நிறைவேறியது. வந்திருந்த விருந்தினர்களுக்கு வந்தனையும் வழிபாடும் செலுத்துவது கடைசி நிகழ்ச்சி ஆகும்.

மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -2

இந்திரப்பிரஸ்தத்தில் புதிதாக கட்டப்பட்ட சபா மண்டபத்தை பார்வையிட்ட பிரமுகர்களில் மிக முக்கியமானவர் நாரத மகரிஷி. அவர் மூவுலகையும் சென்று பார்த்தவர். விண்ணுலகம் ஆகட்டும் மண்ணுலகம் ஆகட்டும் எங்குமே இதற்கு ஈடான சபா மண்டபத்தை தான் பார்த்ததில்லை என்று அவர் யுதிஷ்டிரனிடம் கூறினார். இத்தகைய மண்டபம் ஒன்றை அமைத்த பிறகு அதில் ராஜசூய யாக்ஞம் நடத்துவது தான் பொருத்தம் என்று வேந்தனாகிய யுதிஷ்டிரனிடம் அவர் தெரிவித்தார். ராஜசூய யாக்ஞம் நடத்துவதின் வாயிலாக யுதிஷ்டிரன் அரசர்களுக்கெல்லாம் அரசன் ஆவான். பல பிரமுகர்களும் நாரதரின் கருத்தை ஆமோதித்தனர். ஆனால் சாந்தமூர்த்தியாகிய யுதிஷ்டிரன் அனைவரும் சொல்லும் இந்த கருத்தில் ஊக்கம் செலுத்தவில்லை. இதைப்பற்றி தான் கிருஷ்ணனோடு கலந்து பேசுவதாகவும் கிருஷ்ணன் கருத்துப் படியே நடந்து கொள்ளப்போவதாகவும் யுதிஷ்டிரன் அனைவரிடமும் தெரிவித்தார்.

கிருஷ்ணன் இந்திரப்பிரஸ்தத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி கிருஷ்ணனும் விரைவில் இந்திரப்பிரஸ்தம் வந்து சேர்ந்தான். பாண்டவர்களுக்கு எப்பொழுதும் உதவியாக இருந்த கிருஷ்ணனிடம் ராஜசூய யாக்ஞம் நடத்துவதைப் பற்றிய முக்கிய பிரமுகர்கள் கூறிய கருத்து சொல்லப்பட்டது. அனைத்தையும் கேட்ட கிருஷ்ணன் பாராளும் அனைத்து அரசர்களும் ஒத்துக் கொண்டால்தான் ராஜசூய யாக்ஞம் சாத்தியமாகும். மகத நாட்டு அரசனாகிய ஜராசந்தன் நமக்கு எதிரி. உன்னை சக்கரவர்த்தியாக அவன் அங்கீகரிக்க மாட்டான். விருஷ்ணியர்களுக்கு தொல்லை கொடுப்பதே அவனுடைய பொழுது போக்கு. அவனுடைய தொல்லைகளால் விருஷ்ணியர்கள் மதுராவை காலி செய்து விட்டு துவாரகையில் குடியேறி இருக்கிறார்கள். எண்பத்து ஆறு அரசர்களை அவன் சிறை பிடித்து வைத்திருக்கின்றான். இன்னும் 14 பேரை சிறை பிடிப்பது அவனது திட்டம். பிறகு அரசர்கள் நூறு பேரை பலி கொடுப்பது அவனுடைய திட்டம். அத்தகைய கொடூர அரசனை கொன்றால் மட்டுதே ராஜசூய யாக்ஞம் சாத்தியமாகும் என்று கிருஷ்ணன் தெரிவித்தான்.

அரசர்களுக்கெல்லாம் அரசனாக சக்கரவர்த்தியாக இருந்து ஏகாதிபத்தியம் செலுத்துவதற்கு தனக்கு சிறிதேனும் எண்ணமில்லை என்று யுதிஷ்டிரன் தன்னுடைய எண்ணத்தை கிருஷ்ணனிடம் தெரிவித்தான். தான் அமைதியாக நாடாளுவதும் மற்றவர்களை அமைதியாக நாடாள விட்டு விடுவதும் என்னுடைய குறிக்கோள் என்று கூறினார். அதற்கு பீமன் இந்த சோம்பலை நான் வெறுக்கின்றேன். கொடியவர்களை வென்றாக வேண்டும். என்னுடைய உடல் வலிமையும் கிருஷ்ணனுடைய அறிவோம் அர்ஜுனனுடைய திறமையும் ஒன்று கூடினால் ஜராசந்தனை வெல்ல முடியும் என்றான். பீமனுடைய கருத்தை அர்ஜுனனும் ஆமோதித்தான். திறமையை முறையாக கையாள விட்டால் அது வீணாக போகிறது. வல்லவன் ஒருவன் ஏனோதானோவென்று வாழ்ந்திருப்பது முறையாகாது. ஜராசந்தனுடைய ஆக்கிரமிப்பை அடக்குவது நம்முடைய கடமையாகும் என்று அர்ஜுனன் தெரிவித்தான். இறுதியாக கிருஷ்ணன் ஜராசந்தன் கொல்லப்பட வேண்டியவன். அவன் கொல்லப்பட்டால் தவறு ஏதும் செய்யாத 86 சிற்றரசர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப் படுவார்கள் என்று கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம் கூறினார்.

நம்பிக்கை

ஒரு பக்தன் ஒருவன் நெடுங்காலமாக சிவனை வேண்டிக் கொண்டிருந்தான். காலங்கள் கடந்தும் சிவனின் தரிசனம் கிடைக்கவில்லை. அவனது வேண்டுதல்களும் ஏதும் நிறைவேறவில்லை.

கோபம் கொண்ட அவன் சைவத்தில் இருந்து வைணவத்திற்கு மாறி விஷ்ணுவை வழிபட ஆரம்பித்தான். சிவன் சிலையை தூக்கி பரண் மேல் வைத்து விட்டு புதிய விஷ்ணு சிலையை வைத்து பூஜை செய்ய ஆரம்பித்து சாம்பிராணி ஊதுவத்தி ஏற்றினான். நறுமணம் அறை முழுவதும் பரவியது. நறுமணத்தை உணர்ந்த அவன் பரண் மீது ஏறி சிவன் சிலையின் மூக்கை துணியால் கட்டினான். சிவன் அந்த நறுமணத்தை நுகரலாகாது என எண்ணி கட்டிய அடுத்த நொடி சிவன் அவன் கண்முன் தரிசனம் தந்தார்.

வியந்து போன அவன் சிவனிடம் கேட்டான். இத்தனை நாட்கள் உன்னை பூஜித்த போது காட்சியளிக்காத நீ இப்பொழுது காட்சி தருவது ஏன்? பக்தா இவ்வளவு நாட்கள் நீ இதை வெறும் சிலையாக நினைத்தாய். இன்று தான் இந்த சிலையில் நான் இருப்பதை முழுமையாக நம்பினாய். உணர்ந்த அந்த நொடி நான் உன் கண் முன் வந்து விட்டேன் என இறைவன் பதிலளித்தார்.

Image result for சிவபக்தன்"

புத்தானிகந்தா கோவில்

நேபாளம் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது புத்தானிகந்தா கோவில். இந்த கோவிலில் உள்ள விஷ்ணு சிலை ஆதிசேஷன் மேல் படுத்துக் கொண்டிருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. 14 அடியில் நீளத்தில் மிகவும் பிரமாண்டமாக ஒரே கல்லால் செய்யப்பட்டுள்ள இந்த சிலை நீரில் மிதந்தபடியே இருக்கின்றது. 7 ஆம் நூற்றாண்டில் இந்த பகுதியை ஆண்ட விஷ்ணு குப்தா என்ற மன்னன் இந்த சிலையை நிறுவியதாக வரலாறு கூறுகிறது. இந்த சிலை மிதந்தபடியே இருந்தாலும் இதற்கான அர்ச்சனைகளும் அபிஷேகங்களும் தினமும் நடந்தவண்ணமே உள்ளன

இறைவனின் மகிழ்ச்சி

பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை மரத்திலிருந்து சுமார் 100 பழங்கள் உள்ள பெரிய வாழைத் தாற்றை அறுத்தார். தன் வேலைக்காரனை அழைத்து இந்த வாழைத் தாற்றைக் கோயிலுக்கு கொண்டு போய் கொடுத்து விட்டு வாருமாறு கூறினார். வேலைக்காரனும் அவ்வாறே செய்தான்.

அன்றிரவு பண்ணையாரின் கனவில் தோன்றிய இறைவன். நீ அனுப்பிய ஒரு வாழைப் பழம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி என்றார். திடுக்கிட்ட பண்ணையார் இறைவா நான் 100 பழங்களையல்லவா அனுப்பினேன் என்றார். இறைவன் எமக்கு வந்த ஒரு பழத்தை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டேன் என்றார். விடிந்ததும் பண்ணையார் வேலைக்காரனை அழைத்து நான் கொடுத்த வாழைப் பழங்களை முழுமையாகக் கோயிலில் கொண்டு சேர்த்தாயா என்றார். அவன் ஆம் என்றான். பண்ணையாருக்குக் கோபம் வந்து விட்டது. அவர் வேலைக்காரனை வேகமாக அறைந்தார். உண்மையைச் சொல் இல்லையென்றால் அடித்தேக் கொன்று விடுவேன் எனறார். அவன் உண்மையைச் சொல்லி விடுகிறேன் வழியில் ஒருவன் பசியாய் இருக்கிறது என்றான் நான் பரிதாபப்பட்டு அவனுக்கு ஒரு பழத்தைக் கொடுத்தேன் மீதமுள்ள எல்லாப் பழத்தையும் கோவிலிலுக்குக் கொடுத்து விட்டேன் என்றான். பண்ணையாருக்குப் புரிந்து விட்டது. கோயிலுக்குக் கொடுத்த 99 பழத்தை விட ஏழைக்குக் கொடுத்த ஒரு பழமே இறைவனைக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கின்றது.

பசியோடு இருப்பவரின் பசியை தீர்க்காமல் கோவிலுக்கு எவ்வளவு கொடுத்தாலும் இறைவனுக்கு மகிழ்ச்சி இல்லை.

மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -1

அர்ஜுனனுடைய உதவியால் மயன் என்னும் அரக்கன் உயிர் பிழைத்தான். அதற்கு தக்கதொரு கைமாறு செய்ய மயன் விரும்பினான். தங்களுக்கு ஏதேனும் செய்ய விரும்புகிறேன் என்று அர்ஜுனனுடைய அனுமதியை வேண்டி நின்றான். தங்களுக்கு என்ன தேவை கேளுங்கள் என்றான். அதற்கு அர்ஜுனன் பிறருக்கு செய்யும் பணிவிடைக்கு கைமாறாக எதையும் ஏற்றுக் கொள்ளுதல் இல்லை என்பது நான் கடைபிடிக்கும் கோட்பாடு ஆகும். ஆகையால் உன்னிடமிருந்து எம்மால் எதையும் ஏற்க இயலாது என்று கூறிவிட்டான். ஆனால் மயன் விட்டபாடில்லை மிகவும் வற்பறுத்தினான். அதற்கு அர்ஜுனன் கிருஷ்ணனுக்கு மரியாதை செலுத்துதல் பொருட்டு மயனே கிருஷ்ணனிடம் அனுப்பி வைத்தான். கிருஷ்ணன் மயனை யுதிஷ்டிரனிடம் அனுப்பி உன்னுடைய ஆசையை யுதிஷ்டிரன் வழியாக தீர்த்துக்கொள்ளுமாறு அனுப்பி வைத்தார். கடைசியாக மயன் யுதிஷ்டிரன் முன்பு வந்து தான் ஒரு கைதேர்ந்த சிற்பி என்றும் என்னுடைய சிற்பத் திறனுக்கு அறிகுறியாக இந்த இந்திரப் பிரஸ்தத்தில் சபா மண்டபம் ஒன்று அமைக்க அனுமதிக்க வேண்டும் என்று பணிவுடன் வேண்டினான். வேண்டியவர்க்கு வேண்டியதை வழங்கும் யுதிஷ்டிரன் சபா மண்டபம் அமைக்க அனுமதி கொடுத்தான். அந்த மண்டபம் எப்படி இருக்க வேண்டும். அதன் பண்பு எப்படி இருக்க வேண்டும் என்பது அனைத்தும் மயன் விருப்பப்படியே நடக்கட்டும் என்று யுதிஷ்டிரன் கூறிவிட்டான். நல்ல நாள் அன்று சபா மண்டபம் அமைக்கும் பணி துவக்கப்பட்டது.

கிருஷ்ணன் இந்திரப் பிரஸ்தத்திற்கு வந்து நெடு நாள் ஆயிற்று. எனவே தன்னுடைய மைத்துனர்களிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு துவாரகை கிளம்ப ஆயத்தமானார். பாண்டவர்களுக்கு அவனை விட்டு பிரிய மனம் இல்லை. வருத்தத்துடன் நின்றிருந்தனர். மானசீகமாக தான் எப்பொழுதும் அவர்களோடு இருந்து வருவதாக பாண்டவர்களுக்கு ஆறுதல் கூறினான். பின்பு எப்பொழுதெல்லாம் கிருஷ்ணரின் தேவை ஏற்படுமோ அப்போது அழைத்தால் உடனடியாக அவர்களின் முன்னிலையில் வருவதாக கிருஷ்ணன் வாக்கு கொடுத்தான். இரு தரப்பிற்கும் இடையில் இத்தகைய உடன்படிக்கை ஏற்பட்ட பின்பு அவ்விடத்தை விட்டு கிருஷ்ணன் புறப்பட்டுச் சென்றான்.

மயன் தன்னுடைய சிற்ப வேலைக்காக கைலாய கிரிக்கு வடபுறத்தில் இருந்த பிந்துசரஸை நோக்கி சென்றான். அங்கு அமைந்திருந்த ரத்தினங்களையும் ஏனைய அரிய பெரிய பொருட்களையும் ஏராளமாக சேகரித்துக் கொண்டு அவன் திரும்பி வந்து சேர்ந்தான். கொண்டு வந்த பொருட்களை எல்லாம் கொண்டு சபா மண்டபம் கட்டுவதற்கு பயன்படுத்தினான். பீமனுக்கு அவன் பெரிய கதை ஒன்றும் கொண்டு வந்து சேர்த்தான். அர்ஜுனனுக்காக தேவதத்தம் எனும் சங்கையும் எடுத்து வந்திருந்தான். 14 மாதங்களில் அந்த அரிய சபா மண்டபம் கட்டும் வேலை பூர்த்தியாயிற்று. சபா மண்டபம் அதிசயங்களுள் தலைசிறந்த அதிசயமாக இருந்தது. அந்த வேலைப் பாட்டை காண்பதற்கு அக்கம் பக்கத்தில் இருந்து ஏராளமான அரசர்கள் வந்தார்கள். ஆனால் கௌரவர்கள் மட்டும் அந்த இடத்தை எட்டிக்கூடப் பார்க்கவில்லை. பொறாமையே அதற்கு காரணமாக இருந்தது.

தொடரும்……………

மகாபாரதம் 1. ஆதிபருவம் பகுதி -49

அர்ஜூனன் அந்த முதியவரைப் பார்த்து நாங்கள் என்ன உதவி செய்ய வேண்டுமோ சொல்லுங்கள் செய்கின்றோம் என்றான். அதற்கு அந்த முதியவர் நீங்கள் இருவரும் பண்டைய காலத்து ரிஷிகளாகிய நரனும் நாராயணனும் ஆவீர்கள். இந்த யுகத்தில் நீங்கள் இருவரும் அர்ஜுனனாகவும் கிருஷ்ணனாகவும் அவதரித்து இருக்கின்றீர்கள். இந்த வனத்தை எரித்து சாம்பலாக்க நீங்கள் இருவரும் எனக்கு துணை புரிய வேண்டும் என்று கூறினார். பயங்கர பிராணிகளுக்கு இருப்பிடமாக இருக்கும் இந்த வனத்தை அழிப்பதன் அவசியத்தை கிருஷ்ணர் அர்ஜூனனிடம் கூறினார். அர்ஜுனன் அந்த முதியவரைப் பார்த்து தாங்கள் இந்த வனத்தை எரித்து அழிக்கும் போது இந்திரன் கொடுக்கும் மழையை தடுக்க எங்களால் இயலும். ஆனால் அதற்கேற்ற ஆயுதங்கள் எங்களிடம் தற்போது இல்லை. எங்களுக்கெற்ற ஆயுதங்களை நீங்கள் தேடி தாருங்கள். மழையை நாங்கள் தடுத்து வைத்து இருக்கும் போது நீங்கள் காண்டவ வனத்தை எரித்து தங்கள் பசியை தீர்த்துக்கொள்ளலாம் என்றான்.

அக்னி தேவன் சமுத்திர தேவனை வரவழைத்து அவர்களுக்கு தேவையான ஆயுதங்களை கொடுக்குமாறு கேட்க சமுத்திர தேவனும் ஆயுதங்களை அக்கணமே கொடுத்தான். அர்ஜுனனுக்கு பிரசித்தி பெற்ற காண்டீப வில்லும் அதனோடு எவ்வளவு எடுத்தாலும் குறையாத அம்புகள் நிறைந்த அம்பறாத் தூணிகள் இரண்டும் கிடைத்தது. ஊக்கம் ததும்பும் நான்கு வெள்ளை குதிரைகள் பூட்டிய மேலான ரதம் ஒன்று வந்தது. அந்த ரதத்திலே வானரக்கொடி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. கிருஷ்ணனுக்கு சுதர்சனம் எனும் சக்கராயுதம் ஒன்றும் கௌமோதகீ என்னும் கதாயுதம் ஒன்றும் கிடைத்தது. இந்த ஆயுதங்களை பயன்படுத்தி இரண்டு மூர்த்திகளும் அப்பாழடைந்த வனம் தீக்கிரையான பொழுது மழை பொழியாதபடி பார்த்துக் கொண்டனர். அந்த வானமும் அதிலிருந்த ஐந்துக்களும் அடியோடு அழிந்து போயின.

மாயன் என்னும் அசுரன் ஒருவன் தீக்கு இறையாகும் நெருக்கடியில் இருந்து தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று அர்ஜுனனை வேண்டினான். அதன் விளைவாக அவன் ஒருவன் மட்டும் தப்பிப் பிழைத்தான். அந்த இரண்டு மூர்த்திகள் பழுது பட்டுப் போன காட்டை அளிப்பதற்கு புரிந்த உதவியை முன்னிட்டு அக்னிதேவன் அகமகிழ்ச்சி அடைந்தான்.

ஆதிபருவம் பகுதி இந்த பகுதியுடன் முற்றியது. அடுத்தது சபா பருவம்.

மகாபாரதம் 1. ஆதிபருவம் பகுதி -48

துறவி வேடத்தில் இருந்த அர்ஜுனன் சுபத்திரை முன்பாக தனது துறவி வேடத்தை கலைத்தான். சுபத்திரைக்கு அளவில்லாத மகிழ்ச்சி உண்டாயிற்று. ஏனென்றால் எந்த ஆடவனை மணந்து கொள்ள வேண்டும் என்று எண்ணியிருந்தாலோ அதே ஆடவன் இங்கு துறவி வேடத்தில் வந்துள்ளார். அர்ஜுனன் சுபத்திரையிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா என்று கேட்டான். சுபத்திரையும் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தாள். இருவரும் கிருஷ்ணனின் ரதத்தில் ஏறி சென்று கொண்டிருந்தார்கள். இதைக்கண்ட விருஷ்ணி வம்சத்தினர் சுபத்திரையை துறவி வேடத்தில் வந்தவன் தூக்கிச் செல்கிறான் என்று எண்ணிக் கொண்டு இந்த ரதத்தை பின்தொடர்ந்து துரத்தினார்கள். ரதத்தின் அருகே வந்து பார்த்தவர்கள் சுபத்திரை ரதத்தை ஓட்டிச் செல்வதையும் அர்ஜூனன் பின்னால் அமர்ந்து இருப்பதையும் பார்த்து அவர்களுக்கு குழப்பம் உண்டாகியது. கிருஷ்ணன் தனது விருஷ்ணி வம்சத்தினரை சமாதானப்படுத்த முயன்றார் நிகழ்ந்ததில் கேடு ஏதும் இல்லை என்று கூறி நடந்தவைகள் அனைத்தையும் கூறி அனைவரையும் சமாதானப்படுத்தினான். நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் கண்ட பலராமன் தன்னிடம் கிருஷ்ணன் ஒன்றும் சொல்லவில்லை என்று அவன் மீது சிறிது கோபம் கொண்டான்.

பலராமன் மற்றும் விருஷ்ணி வம்சத்தவர்கள் அர்ஜுனன் சுபத்திரை திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்கள். இந்திரப் பிரஸ்தம் நாட்டை விட்டு வெளியே வந்து ஒரு வருட காலம் முடிந்தபின் அர்ஜுனனுக்கும் சுபத்திரைக்கும் இந்திரப் பிரஸ்தத்தில் வைத்து திருமணம் நடந்தது. திருமணத்திற்கு வந்த விருஷ்ணி வம்சத்தினர் அனைவரும் துவாரகைக்கு திரும்பினார்கள். ஆனால் கிருஷ்ணர் மட்டும் சிறிது காலம் அர்ஜுனனோடு வசித்திருந்தான். சிறிது காலத்திற்குப் பிறகு சுபத்திரை அபிமன்யு என்னும் மகனைப் பெற்றெடுத்தாள்.

கோடைப் பருவத்தில் தோன்றிய வெக்கை மிக புழுக்கமாக இருந்தது. அதை முன்னிட்டு கிருஷ்ணனும் அர்ஜுனனும் யமுனா நதி தீர்த்தத்தில் நீராடி ஒரு நாளைக் கழிக்க எண்ணினர். யுதிஷ்டிரனிடம் இருந்து அனுமதி பெற்றுக் கொண்டு அவர்கள் இருவரும் சென்றனர். உற்றார் உறவினர் பலர் அவர்களைப் பின் தொடர்ந்தனர். கூட்டத்தார் அனைவரும் நதியிலும் நிலத்திலும் உல்லாசமாக பொழுது போக்கி கொண்டிருந்தனர். கிருஷ்ணனும் அர்ஜுனனும் ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. பெரியவர் ஒருவர் அவர்கள் முன்பு தோன்றி தனக்கு மிகவும் பசி எடுக்கிறது என்றும் ஆதாரம் தேவை என்றும் கூறினார். அதற்கு அருஜூனன் உங்களுக்கு எத்தகைய ஆகாரம் தேவை என்று கேட்டான். அதற்கு அவர் நான் மானிடன் இல்லை நான் அக்னிதேவதை. இந்த காண்டவ வனம் மிகவும் பழுதுபட்டு விட்டது. இதில் பயங்கரமான விலங்குகளும் விஷம் நிறைந்த சற்பங்களும் ஏனைய ஐந்துக்களும் பெருகி இருக்கின்றன. ஆகையால் இதை பொசுக்கித்தள்ளி பசியாற பல தடவை முயன்றேன். பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது எனது கோட்பாடு. ஒவ்வொரு முறையும் இந்திரன் என்னுடைய முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டு மழையைக் கொட்டித் தள்ளுகின்றான். இதன் காரணமாக நான் பசிப்பிணியால் வருந்துகிறேன் என்றார்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -47

ஒருநாள் யுதிஷ்டிரனும் திரௌபதியும் தங்கள் மண்டபத்தில் இனிது உரையாடிக் கொண்டிருந்தனர். ஓர் அவசர நெருக்கடியை முன்னிட்டு அர்ஜுனன் தன்னுடைய வில்லையும் அம்புகளையும் எடுக்க யுதிஷ்டிரனும் திரௌபதியும் இருக்கும் மண்டபத்தின் வழியாக அவர்கள் இருப்பதை அறியாமல் மற்றொரு அறைக்கு விரைந்து சென்று சென்றான். வில்லையும் அம்பையும் எடுத்துக்கொண்டு வந்த பிறகு அவர்கள் இருப்பதை அறிந்தான். சகோதரர்கள் தங்களுக்குள் செய்த உடன்படிக்கையை அர்ஜூனன் மீறிய படியால் ஓராண்டுக்கு நாட்டை விட்டு வெளியேற கடமைப்பட்டவான் ஆனான். அதன் பொருட்டு 4 சகோதரர்களிடமும் விடைபெற்றுச் செல்ல வந்தான்.

யுதிஷ்டிரன் அர்ஜுனனிடம் நீ உன்னுடைய கடமையை செய்வதில் கண்ணும் கருத்துமாய் இருந்தாய். நீ அந்த மண்டபத்தின் வழியாக சென்றது எனக்கும் திரௌபதிக்கும் எந்தவித இடையூறும் ஏற்படவில்லை. நீ எங்கள் முன்னிலையில் சென்றதை நாங்கள் ஆட்சேபம் ஏதும் செய்யவில்லை. எனவே நாட்டை விட்டு ஒரு வருட காலம் வெளியே செல்ல வேண்டாம் என்றான். அதற்கு அர்ஜுனன் நமக்கிடையில் நாம் வைத்துக் கொண்டிருக்கும் சட்டதிட்டங்களை ஏதோ ஒரு சிறிய காரணத்தைச் சொல்லி மீறல் ஆகாது. நாம் தர்மத்திற்கு உட்பட்டே ஆக வேண்டும். ஆகையால் நான் அதை யாத்திரை செல்கிறேன் என்று புறப்பட்டுச் சென்றான். நாடெங்கும் தீர்த்த யாத்திரை செய்தான். தென்பகுதியில் உள்ள காவிரியில் நீராடினான். தென் குமரியை அடைந்து மேற்குக் கரையோரமாக வடதிசை நோக்கி அவன் சென்றான். பிரபாஸா என்னும் இடத்தைச் சென்று அடைந்து அங்கு சந்நியாசி போல் மாறு வேஷம் பூண்டு கொண்டு ஓர் ஆலமரத்தின் அடியில் அமர்ந்திருந்தான். கிருஷ்ணன் அர்ஜூனன் இருக்கும் இடத்தை அறிந்து கொண்டு அந்த சந்நியாசியை சந்திக்க அங்கு வந்து சேர்ந்தான்.

சுபத்திரா இன்னும் கன்னிகை கிருஷ்ணனுடைய சகோதரி ஆவாள். அவளை மணந்து கொள்ள வேண்டும் என்பது அர்ஜுனனுடைய விருப்பமாக இருந்தது. சுபத்திரையும் அர்ஜுனனை திருமணம் செய்து கொள்ள விருப்பத்துடன் இருந்தாள். இவர்கள் இருவருடைய மனப்பாங்குகள் கிருஷ்ணன் நன்கு அறிந்திருந்தான். ஆகையால் அவர்களுடைய எண்ணத்தை நிறைவேறுவதற்கான திட்டம் ஒன்றை கிருஷ்ணன் வகுத்தான். முதலில் விஷயத்தை குந்திதேவியிடமும் யுதிஷ்டிரனிடமும் சொல்லி அவர்களுடைய சம்மதத்தை வாங்கிக்கொண்டான். அதன் பிறகு சந்நியாசி வேடம் அணிந்த அர்ஜூனனை தனது நாட்டிற்கு அழைத்துச் சென்றான். கிருஷ்ணனின் மூத்தவனாகிய பலராமன் அர்ஜூனனை ஒரு துறவி என்று நம்பினான். சந்நியாசி தங்குவதற்கு பலராமன் ஏற்பாடு செய்தான். சந்நியாசிக்கு பணிவிடைகள் செய்ய தனது தங்கை சுபத்திரையை நியமித்தான். பொருத்தமான சூழ்நிலை தானாக அமைந்ததை எண்ணி கிருஷ்ணன் மகிழ்ச்சி அடைந்தான்.