மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -30

திருதராஷ்டிரர் இளவரசன் யுதிஷ்டிரனை வரவழைத்தார். என் அருமை செல்வா வாரணவதத்தைப் பற்றி எல்லோரும் புகழ்ந்து பேசுகிறார்கள். வசிப்பதற்கு ஏற்ற ஊர் என்று அதைப் பாராட்டி கூறுகிறார்கள். ஆகையினால் நீ உன் தாயையும் தம்பிகளையும் அங்கு அழைத்துச் சென்று சிறிது காலம் அங்கு வசித்திரு. அதன் மூலம் நீ நல்ல ஆரோக்கியத்தைப் பெறுவாய். இப்பட்டணத்திலே நீ படாதபாடுபட்டு களைத்துப் போய் இருக்கிறாய். உனக்கு உற்சாகத்தை ஊட்டுவதற்கு இங்கு ஒன்றும் இல்லை. ஆகவே நீ வேறு ஊருக்குச் சென்று ஓய்வு பெறுவது முற்றிலும் அவசியமாகும் என்று திருதராஷ்டிரன் யுதிஷ்டிரனிடம் கூறினார்.

குறிப்பறிந்து கொள்ளும் யுதிஷ்டிரனுக்கு விஷயம் நன்கு விளங்கியது. புத்திமதி புகட்டுவது போன்று தனக்கு இடப்பட்டிருக்கும் உத்தரவு அது என்பதை உணர்ந்தான். அங்கு செல்ல அவனுக்கு விருப்பம் இல்லாத போதிலும் வேறு உபாயம் அவனுக்கு இல்லை. அரைமனதுடன் அந்த உத்தரவுக்கு அவன் இணங்கினான். பாண்டவ சகோதரர்களும் அவர்களுடைய அன்னையும் முதியோர்களாகிய பீஷ்மர் விதுரர் துரோணர் அவர்களிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டு போனார்கள். போகும் வழியில் அரசன் எங்களுக்கு ஆணை பிறப்பித்துள்ளார். அதனை ஏற்று நாங்கள் போகின்றோம் என்று பாண்டவர்கள் அனைவரிடமும் தெரிவித்தார்கள். நகர வாசிகளில் சிலர் பாண்டவர்கள் ஊர் கடந்து செல்வதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்று யோசித்தார்கள். அவர்களில் அனுதாபம் காட்டி சிலர் பாண்டவர்களை தொடர்ந்து சென்றார்கள். யுதிஷ்டிரன் அவர்களுக்கு ஆறுதல் கூறி அஸ்தினாபுரத்திற்கு திருப்பி அனுப்பி வைத்தான்.

விதுரர் மட்டும் தனியாக பாண்டவர்களுடன் நெடும் தூரம் நடந்து சென்றார். போகும் போது சூழ்ச்சிகளை பற்றியும் தீ விபத்துகளை பற்றியும் அவர்களுக்கு எச்சரிக்கை செய்தார். ஒரு வனமே தீப்பற்றி எரிந்த பொழுது எலிகள் பூமிக்குள் வளை தோண்டி அந்த விபத்தில் இருந்து தப்பித்து கொண்டதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார். ராஜகுமாரர்கள் இந்த எச்சரிக்கையின் உட்பொருளை நன்கு உணர்ந்து கொண்டார்கள். பாண்டவ சகோதரர்களுக்கு நலன் உண்டாகுக என்று வாழ்த்தி விதுரர் அஸ்தினாபுரத்திற்கு திரும்பிச் சென்றார். சில நாட்களில் சகோதரர்களும் அவருடைய அன்னையும் மிகவும் விளம்பரம் செய்யப்பட்டிருந்த வாரணவதத்தை சென்றடைந்தனர்.

பாண்டவர்கள் வாரணவதத்திற்கு கிளம்பி சென்றதைக் குறித்து துரியோதனன் மகிழ்ச்சியுற்று இருந்தான். அவனுடைய மாமாவாகிய சகுனியின் சதிஆலோசனையின்படி பாண்டவர்களை வேறு இடத்திற்கு கொண்டு செல்லும் திட்டத்தை நன்கு நிறைவேற்றினான். புரோச்சனன் என்பவன் அஸ்தினாபுரத்தின் ஒரு அமைச்சர் ஆவார். துரியோதனன் அவனை தனது சதியாலோசனைக்கு உட்படுத்தி வைத்திருந்தான். அந்த அமைச்சர் வாரணவதத்திற்கு பாண்டவர்கள் செல்லும் முன் விரைந்து சென்று அரக்கு மாளிகையை ஒன்றை கட்டி முடித்திருந்தான். பாண்டவர்களை அந்த மாளிகையில் வசித்து இருக்கும்படி வேண்டிக் கொள்ளுதல் வேண்டும். சிறிது காலத்திற்கு பிறகு அதற்கு தீமூட்டி விடுதல் வேண்டும். அதில் வசித்தவர்கள் தீக்கு இரையாகி மடிந்து போவார்கள். அந்த விபத்து தெய்வாதீனமாக நிகழ்ந்தது என அனைவராலும் கருதப்படும். இதுவே அவர்கள் அமைத்திருந்த கொடிய திட்டமாகும்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -29

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -29

திருதராஷ்டிரன் துரியோதனனிடம் உனது மாமா சகுனி மன்னன் தன்னுடைய ஆட்சிக்கு உறுதுணையாக மந்திரி ஒருவனை வைத்திருகின்றான். அவன் கல்வியில் தேர்ந்தவன். அவனுடைய பெயர் கணிகன். இவ்வுலக விவகார ஞானத்தில் அவனுக்கு ஈடானவர்கள் யாருமில்லை. அவனைப் பற்றிய எண்ணம் இப்போது என் உள்ளத்தில் உதிக்கிறது. அவன் இப்பொழுது அஸ்தினாபுரத்திற்கு வந்திருக்கிறான். விரைவில் சென்று அவனை யாருக்கும் தெரியாமல் அழைத்து வா என்றார்.

திருதராஷ்டிரன் அறைக்கு கணிகன் வேறு யாருக்கும் தெரியாதபடி ரகசியமாக அழைத்து வரப்பட்டான். ராஜ குடும்பத்தில் இருந்த சிக்கலான பிரச்சினைகள் அனைத்தும் அவனுக்கு எடுத்து விளக்கப்பட்டது. கணிகன் சிறிது நேரம் அமைதியாக சிந்தனையில் மூழ்கி இருந்தான். பின்னர் அவன் திருதராஷ்டிரனிடம். நீங்கள் இரண்டு வித மனப்பான்மைகளை உங்களிடத்தில் வரவழைத்து கொள்ளுங்கள். சூழ்ச்சிகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு அது முற்றிலும் அவசியமானது. முதலாவது பாண்டவர் பிள்ளைகளை நன்கு நேசிப்பதாக பாசாங்கு பண்ணுங்கள். எவ்வளவுக்கெவ்வளவு தங்களுக்கு அவர்களிடம் வெறுப்பு இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அன்பு இருப்பதாக பாசாங்கு பண்ணுங்கள். எண்ணியதை எண்ணியபடி நிறைவேற்றுவதற்கு உள்ளத்தில் புதைந்து கிடக்கும் வெறுப்பே தூண்டுகோலாய் இருக்கவேண்டும். இரண்டாவது எதிரிகளை எப்படியாவது ஒழித்து தள்ளவேண்டும். சிறிது நாள் காத்திருங்கள். காலதாமதம் நமக்கு பிரதிகூலமாக முடியும். இவ்வாறு கூறிவிட்டு கணிகன் அரண்மனையை விட்டு வெளியேறினான்.

சிறிது நாட்களுக்கு பின்பு திருதராஷ்டிரனிடம் துரியோதனன் தந்தையே நான் ஒரு சதித் திட்டம் வைத்திருக்கிறேன். தயைகூர்ந்து தாங்கள் பாண்டவர்களையும் அவர்களுடைய தாய் குந்தி தேவியும் ஒரு வருட காலத்திற்கு நமது நாட்டில் இருந்து வெகு தூரத்தில் இருக்கும் வாரணாவதம் என்னும் இடத்திற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யுங்கள். அவர்கள் நம் நாட்டில் இல்லாத பொழுது எனக்கேற்றவாறு நாட்டை நான் ஆயத்தப்படுத்திக் கொள்கிறேன். அவர்கள் இங்கு திரும்பி வராமல் இருக்கும் படி பார்த்துக்கொள்கிறேன். ஒருவேளை அவர்கள் திரும்பி வந்து சேர்ந்தால் அஸ்தினாபுரம் அவர்களுக்கேற்ற நகரம் இல்லை என்பதை அவர்களுக்கு புரிய வைக்கிறேன் என்றான். திருதராஷ்டிரர் மௌனமாய் இருந்தார். அவருடைய மௌனம் சதியாலோசனைக்கு அனுமதி போன்று இருந்தது. அதற்கு காரணம் காலம் சென்ற பாண்டுவின் புதல்வர்கள் மீது அவர் வைத்திருந்த பொறாமை அளவு கடந்து இருந்தது. தம்முடைய சொந்த மகனே நாட்டை ஆள வேண்டும் என்பது அவருடைய ஆசையாக இருந்தது. துரியோதனன் மந்திரிகள் சிலரை தனது கையாட்களாக அமைத்துக் கொண்டான். பின்பு வாரணாவதம் இடத்தைப் பற்றியும் அதன் சிறப்பை பற்றியும் அவர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்தார்கள். அவ்வூர் ஒரு பிரசித்தி பெற்ற சிவஸ்தலம். அங்கே நிகழும் விழா மிக மிக கவர்ச்சிகரமாக எல்லோருக்கும் மகிழ்ச்சி தரக்கூடியது. அந்த இடத்தின் சீதோஷ்ணம் மிக மிக ஆரோக்கியமானது என பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்த பிரச்சாரத்தின் விளைவாக எங்கு கேட்டாலும் வாரணாவதம் பற்றிய பேச்சாக இருந்தது.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -28

அஸ்தினாபுரத்து மக்கள் அரச குடும்பத்தை பற்றிய விஷயங்களை வெளிப்படையாக தங்களுக்குள் பேசிக் கொண்டனர். திருதராஷ்டிரன் அரசராக இருக்கலாகாது. அவருக்கு தகுதி போதவில்லை. ஆட்சிக்கு முற்றிலும் பொருத்தமானவர் பீஷ்மர். ஆனால் தாம் ராஜ்யத்தைப் துறந்து விட்டதாக அவர் நெடுநாளைக்கு முன்பே விரதம் பூண்டு கொண்டார். எக்காரணத்தை முன்னிட்டும் அந்த விரதத்திலிருந்து விலகமாட்டார். துரியோதனிடம் சில குறைபாடுகளை மக்கள் உணர்ந்தனர். ஆகையால் யுதிஷ்டிரன் ஒருவனே நாட்டை ஆள தகுதி வாய்ந்த மன்னன் ஆவான் என்று மக்களிடம் பேச்சாக இருந்தது.

துரியோதனன் நாட்டில் வேவுக்காரர்கள் பலரை நியமித்து வைத்திருந்தான். பொதுமக்களுடைய அபிப்பிராயம் முற்றிலும் தனக்கும் தனது தந்தைக்கும் அனுகூலமாக இல்லை என்பதை அறிந்து அவன் மிகவும் மனம் நொந்து இருந்தான். தன் தந்தையிடம் தனியாக சந்தித்து தன் உள்ளத்தில் கொதித்துக் கொண்டிருந்த உணர்ச்சிகளை எல்லாம் அவன் வாரிக் கொட்டி தள்ளினான். தாங்கள் ஏன் யுதிஷ்டிரனை இளவரசனாக்கினீர்கள். நாட்கள் ஏற ஏற அவன் ஆட்சி தரத்திலும் கீர்த்தியிலும் அதிவேகமாக முன்னேற்றம் அடைந்து வருகின்றான். தங்களுக்கு கண் தெரியாத காரணத்தினாலும் அவன் மக்களுக்கு செய்யும் நன்மை காரணமாகவும் மக்கள் அவனை அரசனாக்க விரும்புகின்றார்கள். அப்படி என்றால் ராஜகுமாரன் ஆகிய நான் ஒரு அடிமையாக ஒதுக்கப்படுகின்றேன். இத்தகைய பரிதாபகரமான நிலையில் வாழ்ந்து இருப்பதைக் காட்டிலும் நான் மடிந்து போவதை மேல். நிலைமை வரம்பு கடந்து போவதற்கு முன்பே ஏதாவது செயலில் ஈடுபட்ட ஆக வேண்டும். தயவு செய்து தீர்மானம் பண்ணுங்கள் என்று துரியோதனன் தன் தந்தையிடம் கூறினார்.

அதற்கு திருதராஷ்டிரன் எனக்கு கண் பார்வை இல்லை என்றாலும் இந்த நெருக்கடியான நிலைமையை என்னால் புரிந்து கொள்ள இயலுகிறது. மக்கள் எல்லோரும் என்னுடைய சகோதரன் பாண்டுவின் மகன்கள் ஆட்சி செய்வதை விரும்புகின்றார்கள். அவசரப்பட்டு நாம் ஏதாவது செயலில் இறங்கினால் அது நமக்கே கேடாக வந்து அமையும் என்றார். அதற்கு துரியோதனன் தந்தையே தயவு செய்து என் சொல்லுக்கு சிறிது செவி சாயுங்கள். நமது பாட்டனாராகிய பீஷ்மர் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில் நடுநிலையுடன் இருக்கின்றார். என்னையும் என் சகோதரர்களையும் கிட்டத்தட்ட செத்துப் போகும் நிலையில் வைத்து பீமன் எங்களை நசுக்கிய பொழுதும் பாட்டனார் அது தலையிடவில்லை. பிறகு பீமனுக்கு நான் விஷம் வைத்ததை அவர் அறிந்தும் அதில் அவர் தலையிடவில்லை. ஆகவே அவர் நம்மை ஒருபோதும் எதிர்க்க மாட்டார். துரோணரின் மகன் அஸ்வத்தாமன் என்மீது வைத்திருக்கும் அன்பு மிகவும் உறுதியானது. நலம் கேடு அனைத்திலும் அவன் என்னுடன் இருப்பான். அவனைப் பின்பற்றி அவருடைய தந்தை துரோணரும் தாய்மாமா கிருபரும் நம் பக்கமே சார்ந்து இருப்பார்கள். சித்தப்பா விதுரர் நிச்சயமாக பாண்டவர்களுக்கு உரியவர் ஆவார். ஆயினும் அவரிடம் உறுதிப்பாடு எதுவும் இல்லை. தர்மத்தைப் பற்றி பேசுவதில் அவர் நிபுணர். தர்மத்தை மட்டுமே அவர் பேசிக்கொண்டு இருப்பார். நல்லதோ கெட்டதோ எதையும் சாதிக்க அவரால் இயலாது. ஆகையால் அவரை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை நமக்கு உறுதி வாய்ந்த தக்க பின் பலத்தை ஆயத்தப்படுத்திக் கொண்டு அவர்களை தோற்கடிக்க நாம் திட்டம் போட வேண்டும். இதில் காலதாமதம் உதவாது. காலதாமதம் செய்தோம் என்றால் நாம் அழிந்து போவோம் என்றான்.

சுய அனுபவமே உண்மையானது

ஸ்ரீ ரமண மகரிஷியின் குட்டி கதை

ஒரு இளம் சன்னியாசி ஒரு குருவின் ஆசிரமத்தில் தங்கியிருந்து துறவறம் பற்றி அறிந்து கொள்ள முயன்று வந்தார். ஆனால் அந்த குருவோ எப்போதாவது ஏதாவது ஒரு விஷயத்தைச் சொல்வார். அவர் சொல்வதும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக இருக்காது.
இதனால் மனம்வெறுத்த அந்த துறவி அங்கிருந்து வெளியேறமுடிவு செய்தார். அவர் வெளியேறும் முன்பாக அங்கு ஒரு நிகழ்வு நடந்தது. அதன் பிறகு அந்த துறவி அங்கிருந்து வெளியேறவேயில்லை.

அன்றைய தினம் மற்றொரு இளம் துறவி அந்த ஆசிரமத்திற்கு வந்தார். அங்கிருந்தவர்களுடன் பேச ஆரம்பித்த அவர் பல்வேறு ஆழமான கருத்துக்களை பேசினார். ஆன்மீகத்தின் பல கோணங்களை ஆராய்ந்து ஏறக்குறைய 2 மணிநேரம் பேசினார். அந்த ஆசிரமத்தின் குரு கண்களை மூடியவாறு அவரது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தார். அந்தப் பேச்சைக் கேட்ட இளம் துறவி குரு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அவருடன் சென்று விட முடிவு செய்தார். அவரது பேச்சைக் கேட்ட அனைவரும் அவரைப் பாராட்டினார்கள்.

பேசி முடித்த அந்த புதிய துறவி அருகேயிருந்த குருவிடம் தனது பேச்சு எப்படி இருந்தது என்று சிறிது கர்வத்துடன் கேட்டார். கண் விழித்த அந்த குரு நீ எப்போது பேசினாய்? நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் 2 மணிநேரமாக நீ பேசாமல் அமர்ந்து கொண்டு தானே இருந்தாய் என்றார். அப்படியென்றால் இதுவரை பேசியது யார் என்று அந்த புதிய துறவி கேட்டார். சாஸ்திரங்கள் பேசின நீ படித்த புத்தகங்கள்
பேசின நீ உன் சுய அனுபவத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று குரு சொன்னார்.

இப்படித்தான் பலரும் தாங்கள் மற்றவரிடமிருந்து கேட்ட கற்ற விஷயங்களை பேசி வருகின்றனர். சுய அனுபவத்தைப் பேசுவதில்லை. சுய அனுபவமே உண்மையானது.

மஹா ம்ருத்யுஞ்சய மந்த்ரம்.

ஸ்ரீ ருத்ரத்தின் இறுதியில் வரும் மஹா ம்ருத்யுஞ்சய மந்த்ரம்.

த்ரயம்பகம் யஜாமஹே
ஸுகந்திம்
புஷ்டிவர்தனம்
உர்வாருகமிவ
பந்தனாத் ம்ருத்யோர்
முக்க்ஷீய மாம்ருதாத்.

இதில் உர்வாருகமிவ பந்தனாத் முக்க்ஷீய என்ற வரிகளின் அர்த்தம் வெள்ளரிப்பழம் அதன் கொடியிலிருந்து விடுபடுவது போல என் பந்தங்களிலிருந்து நான் விடுபடவேண்டும் என்பது அர்த்தம். எந்தப் பழமாயிருந்தாலும் பழுத்தவுடன் பட்டென்று தன் கொடி செடி அல்லது மரத்திலிருந்து அறுந்து விழுந்து விடும். பூமியில் நிறைய பழங்கள் இருக்கின்றது. இதில் வெள்ளரிப்பழத்தை மட்டும் ஏன் இந்த மந்திரத்தில் குறிப்பிட்டு சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கான விளக்கத்தை மஹா பெரியவா அற்புதமாக அளித்துள்ளார்.

மற்ற பழங்கள் போல் அல்லாமல் வெள்ளரிப் பழம் கொடியில் பூத்துக் காய்த்துப் பழுக்கும். வெள்ளரிக்கொடி தரையோடு தரையாய்ப் படரும். அதனால் வெள்ளரிப் பழமும் தரையிலேயே பழுத்துக்கிடக்கும். அது பழுத்தவுடன் அதைச் சுற்றியுள்ள கொடியின் கிளைகள் இலைகள் போன்றவை தானாகவே அந்தப் பழத்தை விட்டு விலகும். பழம் கொடியிலிருந்து உதிர்வதில்லை. கொடிதான் பழத்தை விட்டு விலகுகிறது.

அதுபோல ஞானிகளுக்கு அவர்கள் பந்தம் பற்றை விட்டு விலக வேண்டுமென்பதில்லை. சரியான தருணத்தில் அவர்கள் ஞானத்தை அடைந்துவிட்டால் இவர் பழுத்து விட்டார் என்று எப்படி வெள்ளரிக் கொடி தன் பழத்தை தானகவே விட்டு விலகுகிறதோ அது போல பந்தம் பற்று போன்றவை அவரை விட்டு தாமாகவே விலகி விடும்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -27

யுதிஷ்டிரனுக்கு தக்க வயது வந்த பொழுது அவன் இளவரசனாக முடிசூட்டப்பட்டான். அவனுடைய பெரியப்பாவாகிய திருதராஷ்டிரனுக்கு இந்நிகழ்ச்சி பிடிக்கவில்லை. தன்னுடைய சொந்த மகனாகிய துரியோதனன் அப்பதவியை ஏற்றிருக்க வேண்டும் என்பது அவருடைய ஆசையாக இருந்தது. ஆனால் விஷயங்கள் அதற்கு நேர்மாறாக இருந்தது. இறந்த குருவம்சத்து அரசன் பாண்டு மன்னனின் வாரிசில் மூத்தவனாக இருந்ததால் யுதிஷ்டிரன் இளவரசு பட்டத்துக்கு உரியவன் ஆனான். பீஷ்மர், விதுரர், துரோணர் ஆகிய பெருமக்கள் யுதிஷ்டிரனே ராஜபதவிக்கு தகுதி வாய்ந்தவன் எனக் கருதினார்கள். பொது மக்கள் எல்லோரும் அவனையே போற்றிப் பாராட்டினார்கள். ஆகையால் அவனுக்கு முடிசூட்டப்பட்டது. அவனது பங்காளிகளான கௌரவர்களுக்கு இது பிடிக்கவில்லை. ஆனால் பகிரங்கமாக அவர்களால் இதை எதிர்க்க இயலவில்லை.

யுதிஷ்டிரன் இளவரசர் பதவியை ஏற்று ஒரு வருடம் ஆகியது. குறுகிய காலத்தில் அவன் தன்னுடைய இளவரசன் தலைமையை முற்றிலும் நிரூபித்துக் காட்டினான். மன உறுதிக்கும் தளரா முயற்சிக்கும் நேர்மைக்கும் கடமைக்கும் இருப்பிடமாக அவன் இருந்தான். மக்கள் நலனுக்கு உரிய கடமைகளைநெறி பிறழாது அவன் நிறைவேற்றினான். ஆகையால் மக்கள் அனைவரும் அவனைப் பெரிதும் பாராட்டினர். காலம் சென்ற பாண்டு மன்னன் ஆட்சி முறையில் மிகச் சிறந்தவர் என உலகத்தவர் கருதினர். அச்செயலை நிறைவேற்றுவதில் தந்தையை மிஞ்சியவனாக யுதிஷ்டிரன் இருந்தான். அவனுடைய தம்பிமார்கள் அந்த ராஜ்ஜியத்தின் எல்லையை விரிவுபடுத்தினார்கள்.

அர்ஜுனன் பெற்றுவந்த வில்வித்தை பயிற்சியை துரோணாச்சாரியார் முற்றிலும் பூர்த்தி செய்து வைத்தார். வில்வித்தையில் விஜயன் என்னும் அவனுடைய பெயர் உலகெங்கும் பரவியது. இந்த திறமையை குறித்து அர்ஜுனன் கர்வம் கொள்ளக்கூடாது என்று துரோணாச்சாரியார் அவனுக்கு புத்தி புகட்டினார். மேலும் அவனிடத்தில் ஒரு விபரீதமான குரு தட்சணையை வேண்டினார். தக்க தருணம் வருகின்ற பொழுது அர்ஜுனன் துரோணரை எதிர்த்துப் போர் புரிய வேண்டும் என்பதே அவர் வேண்டியிருந்த குருதட்சணை ஆகும். அதன்பிறகு மேலும் ஒரு ரகசியத்தை கூறினார். வசுதேவன் என்னும் விருஷ்ணி வம்சத்தவர் அர்ஜுனனுடைய மாமா ஆவார். அந்த வசுதேவனுக்கு மகனாகப் பிறந்தவன் கிருஷ்ணன். அவனுக்கு பலராமன் என்னும் தமயன் இருக்கின்றான். கிருஷ்ணன் சாமானிய மானிடன் இல்லை. பரம்பொருளே கிருஷ்ணனாக வடிவெடுத்து வந்திருக்கிறான். ஆகையால் அர்ஜுனன் எப்பொழுதும் கிருஷ்ண பக்தியில் ஈடுபட்டு இருத்தல் வேண்டும் என்று துரோணர் அர்ஜுனனுக்கு உபதேசம் செய்தார்.

பீமனும் துரியோதனனும் கிருஷ்ணனுக்கு தமயனாகிய பலராமனுடைய மாணாக்கர்கள் ஆனார்கள். கதை யுத்தத்தில் பலராமன் மிகச்சிறந்த நிபுணன். பலராமனுக்கு மாணவர்கள் பலர் இருந்தனர். அவர்களில் அவன் துரியோதனனை மிக்க நேசித்தான். துரோணாச்சாரியாருக்கு எவ்வாறு அர்ஜுனன் அன்புக்குரிய சிஷ்யனாக இருந்தானோ அது போல் பலராமனுக்கு துரியோதனன் அன்புக்குரிய சிஷ்யன் ஆனான்.