மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -30

திருதராஷ்டிரர் இளவரசன் யுதிஷ்டிரனை வரவழைத்தார். என் அருமை செல்வா வாரணவதத்தைப் பற்றி எல்லோரும் புகழ்ந்து பேசுகிறார்கள். வசிப்பதற்கு ஏற்ற ஊர் என்று அதைப் பாராட்டி கூறுகிறார்கள். ஆகையினால் நீ உன் தாயையும் தம்பிகளையும் அங்கு அழைத்துச் சென்று சிறிது காலம் அங்கு வசித்திரு. அதன் மூலம் நீ நல்ல ஆரோக்கியத்தைப் பெறுவாய். இப்பட்டணத்திலே நீ படாதபாடுபட்டு களைத்துப் போய் இருக்கிறாய். உனக்கு உற்சாகத்தை ஊட்டுவதற்கு இங்கு ஒன்றும் இல்லை. ஆகவே நீ வேறு ஊருக்குச் சென்று ஓய்வு பெறுவது முற்றிலும் அவசியமாகும் என்று திருதராஷ்டிரன் யுதிஷ்டிரனிடம் கூறினார்.

குறிப்பறிந்து கொள்ளும் யுதிஷ்டிரனுக்கு விஷயம் நன்கு விளங்கியது. புத்திமதி புகட்டுவது போன்று தனக்கு இடப்பட்டிருக்கும் உத்தரவு அது என்பதை உணர்ந்தான். அங்கு செல்ல அவனுக்கு விருப்பம் இல்லாத போதிலும் வேறு உபாயம் அவனுக்கு இல்லை. அரைமனதுடன் அந்த உத்தரவுக்கு அவன் இணங்கினான். பாண்டவ சகோதரர்களும் அவர்களுடைய அன்னையும் முதியோர்களாகிய பீஷ்மர் விதுரர் துரோணர் அவர்களிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டு போனார்கள். போகும் வழியில் அரசன் எங்களுக்கு ஆணை பிறப்பித்துள்ளார். அதனை ஏற்று நாங்கள் போகின்றோம் என்று பாண்டவர்கள் அனைவரிடமும் தெரிவித்தார்கள். நகர வாசிகளில் சிலர் பாண்டவர்கள் ஊர் கடந்து செல்வதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்று யோசித்தார்கள். அவர்களில் அனுதாபம் காட்டி சிலர் பாண்டவர்களை தொடர்ந்து சென்றார்கள். யுதிஷ்டிரன் அவர்களுக்கு ஆறுதல் கூறி அஸ்தினாபுரத்திற்கு திருப்பி அனுப்பி வைத்தான்.

விதுரர் மட்டும் தனியாக பாண்டவர்களுடன் நெடும் தூரம் நடந்து சென்றார். போகும் போது சூழ்ச்சிகளை பற்றியும் தீ விபத்துகளை பற்றியும் அவர்களுக்கு எச்சரிக்கை செய்தார். ஒரு வனமே தீப்பற்றி எரிந்த பொழுது எலிகள் பூமிக்குள் வளை தோண்டி அந்த விபத்தில் இருந்து தப்பித்து கொண்டதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார். ராஜகுமாரர்கள் இந்த எச்சரிக்கையின் உட்பொருளை நன்கு உணர்ந்து கொண்டார்கள். பாண்டவ சகோதரர்களுக்கு நலன் உண்டாகுக என்று வாழ்த்தி விதுரர் அஸ்தினாபுரத்திற்கு திரும்பிச் சென்றார். சில நாட்களில் சகோதரர்களும் அவருடைய அன்னையும் மிகவும் விளம்பரம் செய்யப்பட்டிருந்த வாரணவதத்தை சென்றடைந்தனர்.

பாண்டவர்கள் வாரணவதத்திற்கு கிளம்பி சென்றதைக் குறித்து துரியோதனன் மகிழ்ச்சியுற்று இருந்தான். அவனுடைய மாமாவாகிய சகுனியின் சதிஆலோசனையின்படி பாண்டவர்களை வேறு இடத்திற்கு கொண்டு செல்லும் திட்டத்தை நன்கு நிறைவேற்றினான். புரோச்சனன் என்பவன் அஸ்தினாபுரத்தின் ஒரு அமைச்சர் ஆவார். துரியோதனன் அவனை தனது சதியாலோசனைக்கு உட்படுத்தி வைத்திருந்தான். அந்த அமைச்சர் வாரணவதத்திற்கு பாண்டவர்கள் செல்லும் முன் விரைந்து சென்று அரக்கு மாளிகையை ஒன்றை கட்டி முடித்திருந்தான். பாண்டவர்களை அந்த மாளிகையில் வசித்து இருக்கும்படி வேண்டிக் கொள்ளுதல் வேண்டும். சிறிது காலத்திற்கு பிறகு அதற்கு தீமூட்டி விடுதல் வேண்டும். அதில் வசித்தவர்கள் தீக்கு இரையாகி மடிந்து போவார்கள். அந்த விபத்து தெய்வாதீனமாக நிகழ்ந்தது என அனைவராலும் கருதப்படும். இதுவே அவர்கள் அமைத்திருந்த கொடிய திட்டமாகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.