மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -5

தேரோட்டி கூறிய அனைத்தையும் கேட்ட தேவவிரதன் தேரோட்டியிடம் அந்த செம்படவர் தலைவன் இருக்கும் இடத்திற்கு தன்னை அழைத்து செல்லுமாறு கூறினான். தேரோட்டி செம்படவர் தலைவனிடம் அழைத்துச் சென்றான். செம்படவர் தலைவன் தேவவிரதனை வரவேற்று அவனிடம் நானும் என் குடும்பமும் பாக்கியம் பெற்று உள்ளோம் என்றும் அரச குடும்பம் எங்கள் மீது அதிக அபிமானம் வைத்திருக்கிறது என்றும் கூறினார். அதற்கு தேவவிரதன் என் சிற்றன்னையை என் தந்தையாகிய அரசனிடம் அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன் என்றான். அதற்கு செம்படவர் தலைவன் நிபந்தனைகளை நிறைவேற்றினால் நீங்கள் எதிர்பார்க்கிற சிற்றன்னையை அழைத்துச் செல்லலாம் என்றான். நீங்கள் விதிக்கும் நிபந்தனையை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்று தேவவிரதன் கூறினான். அதற்கு செம்படவர் தலைவன் இளவரசராக இருக்கும் தாங்களுக்கு ஆட்சி செய்யும் அதிகாரம் இருக்கும் போது தங்களை ஒதுக்கி வைத்துவிட்டு என் பேரன் எவ்வாறு சிம்மாசனத்தில் அமர முடியும் என்று கூறினான்.

எனது தந்தையாருக்கும் சிற்றன்னைக்கும் பிறக்கும் என்னுடைய எதிர்கால தம்பிக்கு சிம்மாசனத்தின் உரிமையை விட்டுக் கொடுக்கிறேன் என்று தேவவிரதன் அவரிடம் உறுதி அளித்தான். அதற்கு செம்படவர் தலைவர் நீங்கள் பரந்த மனப்பான்மை படைத்து இருக்கின்றீர்கள் ஆனால் தங்களுடைய மகனும் பேரனும் அரசாங்க உரிமைகளை கேட்பார்கள். அப்போது எனது பேரனால் என்ன செய்ய முடியும் என்று கூறினார். அதற்கு தேவவிரதன் இந்த நேரம் முதல் என்னுடைய ஆயுள் காலம் முழுவதிலும் திருமணம் செய்யாமல் பிரம்மச்சரியத்தை அனுஷ்டிக்கும் விரதம் எடுக்கின்றேன் என்று உறுதியளித்தான். இக்கடினமான விரதத்தை எடுக்கின்றேன் என்று அவரிடம் கூறியபோது விண்ணுலகில் இருந்து தேவர்கள் அவர் மீது பூமாரி பொழிந்து பீஷ்மன் பீஷ்மன் என்று கர்ஜித்தார்கள். மானுடன் ஒருவன் கடினமான விரதம் எடுத்து அதை நிறைவேற்றுகிறான் என்பதே அந்தப் பதத்தின் பொருள் ஆகும். அந்த நொடியிலிருந்து தேவவிரதன் பீஷ்மன் என்று பெயர் பெற்றான்.

செம்படவர் தலைவனுடைய அனுமதியின் பேரில் பீஷ்மன் தன் சிற்றன்னை சத்தியவதியை அரண்மனைக்கு அழைத்துச் சென்று தன் தந்தையிடம் ஒப்படைத்தான். தன் மகன் செய்த செயற்கரிய செயலை சந்தனு மன்னன் கேள்விப்பட்டான். தேவவிரதனைத் தவிர வேறு எந்த மனிதனும் இத்தகைய அரிய பெரிய தியாகத்தை செய்ய முடியது என்று வியந்தான். அதனால் தன் மைந்தனுக்கு தந்தை ஓர் வரத்தைக் கொடுத்தார். அந்த வரத்தின் படி பீஷ்மன் அனுமதித்தால் ஒழிய மரணம் பீஷ்மரை அணுகாது.

சத்யவதியானவள் உபரிசரவசு என்னும் வேந்தனுடைய மகள் என்பதையும் செம்படவன் அவருடைய வளர்ப்புத் தந்தை என்பதையும் அந்த மன்னன் அறிந்தான். எனவே அவள் ஒரு சத்திரிய பெண் ஆகிறாள். எனவே வேத விதிப்படி வேந்தன் அவளை விவாகம் செய்து கொண்டான். திருமணம் செய்த சிறிது நாட்களில் சித்திராங்கதன் விசித்திரவீரியன் என்னும் பெயர் படைத்த இரண்டு மகன்களை சத்தியவதி பெற்றெடுத்தாள். அதன் பிறகு சிறிது காலத்தில் சந்தனு மன்னன் பரகதி அடைந்தான். தம்பிகளை காப்பாற்றும் பொறுப்பை பீஷ்மர் ஏற்றுக் கொண்டார். சித்திராங்கதனை பீஷ்மர் அரசனாக்கினார். அப்பதவியை ஏற்ற சிறிது காலத்திற்குள் அவனைப் போலவே பெயர் பெற்ற சித்திராங்கதன் எனும் பெயர் படைத்திருந்த கந்தர்வன் ஒருவனால் சித்திராங்கதன் கொல்லப்பட்டான். அதனால் ஆட்சி நடத்த அரசன் வேண்டும் என்று இளைய சகோதரனாகிய விசித்திரவீரியனை அரசனாக்கினார் பீஷ்மன். அவன் வயதில் சிறியவன் ஆதலால் அவனுடைய பிரதிநிதியாக பீஷ்மர் நாட்டை ஆண்டு வந்தார். அந்த அரசனுக்கு ஏற்ற மனைவி ஒருத்தியை பீஷ்மர் தேடினார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.