மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -6

பண்டைக் காலத்தில் பாரத கண்டத்தில் மன்னர்கள் இரண்டு விதமான முறைகளில் மணம் புரிந்து கொண்டனர். ஒன்று சுயம்வரம் முறை. அதன்படி ராஜகுமாரி ஒருத்தி தன் கணவனை தானே தேர்ந்தெடுத்துக் கொள்வாள். ராஜகுமாரியை மணந்து கொள்ள விரும்பும் ராஜகுமாரர்கள் ஒன்று கூடி தங்களுடைய திறமைகளையும் பராக்கிரமத்தையும் காட்டுவார்கள். மணந்து கொள்ள இருக்கும் ராஜகுமாரி அந்த ராஜகுமாரர்களில் தனக்கு பிடித்தமானவருக்கு மாலை சூட்டுவாள். இரண்டாவது முறை வெறும் கேள்வி அளவில் இருந்தது. நடைமுறையில் அதை யாரும் பார்த்ததில்லை. அந்த முறைப்படி போட்டிபோட வந்துள்ள ராஜகுமாரர்கள் ஒருவரோடு ஒருவர் யுத்தம் புரிந்து கொள்வார்கள். அவர்களில் வெற்றி பெற்ற ராஜகுமாரன் ராஜகுமாரியை அபகரித்துக் கொண்டு போய் திருமணம் செய்து கொள்வான்.

காசியை ஆண்டு வந்த அரசனுக்கு அம்பா அம்பிகா அம்பாலிகா என்ற மூன்று பெண்கள் இருந்தனர். அவர்களுக்கு மணமுடிக்கும் காலம் வந்தது. அப்போது திருமணம் செய்யும் வழக்கத்திலிருந்த சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தங்களுடைய திறமைகளைக் காட்டிக் கொள்வதற்கு ராஜகுமாரர்கள் பலர் வந்திருந்தனர். அக்கூட்டத்திற்கு பீஷ்மரும் வந்திருந்தார். இவர் எதற்காக இங்கு வந்திருக்கிறார் என்ற எண்ணம் பலர் உள்ளத்தில் எழுந்தது. அவர் ஒப்பற்ற போர் வீரன் என்பதில் ஐயமில்லை. ஆயினும் அவர் வயதில் சற்று முதிர்ந்தவன். ஆயுட்காலம் முழுவதும் பிரம்மச்சரியம் அனுஷ்டிக்கும் விரதமிருப்பவர். அத்தகையவர் இங்கு ஏன் வந்திருக்கிறார் என்று பலர் எண்ணினர்.

அப்போது பீஷ்மர் அங்கிருக்கும் அரசர்களைப் பார்த்து வேந்தர்களே இந்த கன்னிகைகள் மூவரையும் நான் தூக்கிக் கொண்டு செல்லப் போகிறேன். குரு வம்சத்து அரசனாகிய என் சகோதரன் விசித்திரவீரியனுக்கு இம்மூவரும் மனைவிமார்கள் ஆவார்கள். இதற்கு ஆட்சேபனை செய்கின்றவர்கள் என்னுடன் போர் புரியலாம் என்றார். சுயவரத்திற்கு வந்திருந்த ராஜகுமாரர்கள் ஒன்று கூடிப் பாய்ந்து வல்லமையுடன் பீஷ்மரை எதிர்த்தார்கள். ஆனால் அந்த எதிர்ப்பு பயன்படவில்லை. வீரமும் பராக்கிரமும் நிறைந்த பீஷ்மர் அவர்கள் அனைவரையும் விரட்டிவிட்டு மூன்று பெண்களையும் தனது தலைநகரான அஸ்தினாபுரத்திற்கு தூக்கிச் சென்றுவிட்டார். சகோதரிகளில் மூத்தவளாகிய அம்பா என்பவள் பீஷ்மரிடம் வந்திருந்த ராஜகுமாரர்களில் சௌபால நாட்டு அரசனாகிய சால்வன் என்னும் அரசனை மணந்து கொள்ள ஏற்கனவே தீர்மானித்திருக்கிறேன் எனது கற்பை காத்தருளும்படி பரிந்து வேண்டுகின்றேன் என்றாள். பீஷ்மரும் சத்தியவதியும் அவளுடைய விஷயத்தை எண்ணிப் பார்த்தார்கள். சௌபால நாட்டு அரசனாகிய சால்வனிடம் கொண்டு போய் சேர்க்கும் படி ஏவலாளர்களைக் கொண்டு தக்க ஏற்பாடு செய்தார்கள். மற்ற சகோதரிகள் அம்பிகாவும் அம்பாலிகாவும் முறைப்படி விசித்திரவீரியனுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். விசித்திரவீரியன் அல்ப ஆயுள் படைத்தவனாக இருந்தான். குழந்தை பெறுவதற்கு முன்பே அவன் பரகதி அடைந்து விட்டான். ராஜவம்சம் ஒன்றுக்கு ஏற்படுகின்ற துர்பாக்கியங்களுள் ஒன்று குலநாசம் அது மிகக் கொடியது. அந்த வம்சத்திற்கு இந்த ஆபத்து உண்டாயிற்று. மிக துயரத்தில் இருந்த சத்யவதி பீஷ்மரிடம் விதவைகளாக இருக்கும் ராஜகுமாரிகளை மணந்து அரச பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு கூறினாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.