ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி – 19

மாரீசனின் ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்த ராவணனை தவ வாழ்க்கை வாழும் மாரீசன் முறைப்படி வரவேற்றான். இப்போது சில நாட்கள் முன்பு தானே வந்தீர்கள். மீண்டும் வந்திருக்கின்றீர்கள் என்றால் முக்கியமான செய்தியோடு வந்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன் என்ன செய்தி சொல்லுங்கள் என்று மாரீசன் ராவணனிடம் கேட்டான். ராவணன் மாரீசனிடம் பேச ஆரம்பித்தான். என் சகோதரர்கள் கரனும் தூஷனனும் என் ஆளுகைக்கு உட்பட்ட தண்டகாருண்ய காட்டில் ஆட்சி செய்து கொண்டு வந்தார்கள். இது உனக்கு தெரியும். எனது சகோதரர்களையும் பதினான்காயிரம் படை வீர்களையும் ராமன் என்ற ஒருவன் தேர் இல்லாமல் பயங்கரமான ஆயுதங்கள் ஏதும் இல்லாமல் கீழே நின்று கொண்டே வெறும் வில்லையும் அம்பையும் மட்டும் வைத்துக்கொண்டு சர்வ சாதாரணமாக அனைவரையும் கொன்று விட்டான். இப்போது தண்டகாருண்ய காட்டில் ராட்சசர்கள் யாரும் இல்லை. ராட்சர்கள் என்கின்ற பயம் என்பதும் துளியும் இல்லை.

ரிஷிகளும் முனிவர்களும் பயம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் இருக்கின்றார்கள். ராமன் என்பவன் தந்தையால் காட்டிற்கு விரட்டப்பட்ட ஒரு நாடோடி. தன் மனைவி சீதையுடன் காடு காடாக சுற்றிக்கொண்டு நாடோடி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றான். தவஸ்வியைப் போல் வேடம் அணிந்து கொண்டு இந்திரனைப் போல் தன்னை எண்ணிக் கொண்டிருக்கின்றான். எந்த காரணமும் இல்லாமல் தன் பலத்தால் என் சகோதரியின் காதுகளையும் மூக்கையும் அறுத்து என் குலத்திற்கு அவமானத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றான். என் தங்கை என்னிடம் அழுது புலம்புகின்றாள். அரசன் என்கின்ற முறையிலும் தங்கைக்கு அண்ணன் என்ற முறையிலும் நான் ஏதாவது செய்தாக வேண்டும். நான் ஒன்றும் செய்யாமல் பார்த்துக் கொண்டிருந்தால் நான் ராட்சசர்களின் அரசன் என்று சொல்லிக் கொண்டிருப்பதில் பயன் ஒன்றும் இல்லை. இதனால் நான் பெரும் துயரத்தில் சிக்கி துயரப்பட்டுக் கொண்டிருக்கின்றேன். இத்துயரத்தை உன்னால் தான் போக்க முடியும் அதனால் உன்னை தஞ்சமடைந்திருக்கிறேன்.

ராமனின் மனைவி சீதையை தூக்கிச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். ராமனை தண்டித்து அவமானப்படுத்துவது எனது குலத்திற்கு செய்யும் கடமையாக நினைக்கின்றேன். நீயும் எனது சகோதரர்கள் விபிஷணன் கும்பகர்ணன் இருக்க எனக்கு என்ன பயம். ஆகவே துணிந்து முடிவெடுத்து விட்டேன். அதற்கு உனது உதவி வேண்டும். உன்னுடைய யுக்தியும் உருவம் மாறும் திறமையும் உலகத்தில் வேறு யாரிடமும் இல்லை. அதனால் உன்னிடம் வந்திருக்கின்றேன். நான் சொல்லும் தந்திரத்தை நீ ஆமோதித்து செய்ய வேண்டும் மறுக்க கூடாது. நான் சொல்வதை கேள். தங்க புள்ளிகளும் வெள்ளி புள்ளிகளும் கலந்த பொன் மானாக உருவம் எடுத்து ராமர் வாழும் காட்டிற்கு சென்று சீதையின் முன்பாக நிற்க வேண்டும். பெண்களின் சுபாப்படி அழகானவற்றை பார்த்ததும் அதனை அடைய வேண்டும் என்று எண்ணம் கொள்வார்கள். ராமரிடமும் லட்சுமணனிடமும் அந்த மானை பிடித்து கொடுக்கச் சொல்லி வற்புறுத்துவாள். உன்னை பிடிக்க அவர்கள் வரும் போது மான் உருவத்தில் இருக்கும் நீ காட்டிற்குள் ஓட வேண்டும். உன்னை பின் தொடர்ந்து வருவார்கள். அப்போது சீதை தனியாக இருப்பாள். அவளை சுலபமாக நான் தூக்கிச் சென்று விடுவேன். சீதையை இழந்த ராமன் மனம் உடைந்து பலவீனமடைவான். அப்போது ராமனை தாக்கி பழிவாங்கி திருப்தி அடைவேன் என்று மாரீசனிடம் ராவணன் சொல்லி முடித்தான்.

ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி – 18

ராமன் தண்டகாருண்ய காட்டின் அரசனான கரனையும் சேனாதிபதியான தூஷணனையும் சில கணங்களில் கொன்றுவிட்டான் என்று கோபத்தில் பேசிக் கொண்டிருந்த சூர்ப்பனகை இப்போது ராவணனிடம் சாந்தமாக பேச ஆரம்பித்தாள். ராமனுக்கு சீதை என்ற மனைவி இருக்கிறாள். ராமனோடு தனியாக இருக்கிறாள். அவளின் அழகை என்னவென்று சொல்வேன். தேவர்கள் கந்தர்வர்கள் உலகங்கள் உட்பட ஈரேழு பதினான்கு உலகங்கள் முழுவதும் தேடினாலும் அவளைப் போன்ற அழகியை நீ பார்க்க முடியாது. அவளைக் கண்டதும் அவள் உனக்குரியவள் உன்னிடம் இருக்க வேண்டியவள் என்று நினைத்தேன் அதற்கான செயலிலும் இறங்கி உனக்காக அவளை தூக்கி வர முயற்சி செய்தேன். அப்போது ராமனின் தம்பி லட்சுமணன் தடுத்து ராட்சசியாக இருந்தாலும் பெண் என்பதால் உன்னை உயிரோடு விடுகின்றேன் என்று சொல்லி என் காது மூக்கை அறுத்து அவமானப்படுத்தி விட்டான். உனக்காக செயல்படப் போய் நான் இந்த கோரமான முகத்தையும் அவமானத்தையும் பெற்றுவிட்டேன். இதற்கு பழிக்குப்பழி வாங்க வேண்டும். இப்பழியை தீர்த்து உன் குலத்தின் மானத்தைக் காப்பாற்ற உனக்கு ஆசையிருந்தால் உடனே தண்டகாருண்ய காட்டிற்கு புறப்படு.

சீதை போன்ற பேரழகி ராட்சச குலத்தின் அரசனான உன் அருகில் தான் இருக்க வேண்டும். சாதரண மானிதனுடன் காட்டில் இருக்கக் கூடாது. அவளை தூக்கி வந்து உனக்கு அருகில் வைத்துக்கொள். உன் சகோதரியாகிய எனக்கு கிடைத்த அவமானம் உனக்கு கிடைத்த அவமானம் ஆகும். ராமனை வெற்றி கொண்டோ அல்லது தந்திரமாகவோ சீதையை நீ தூக்கி வந்து ராமனை நீ அவமானப்படுத்தினால் போர்க்களத்தில் ராமனால் இறந்த உனது வீரர்கள் திருப்தி அடைவார்கள். நமது குலத்திற்கு ஏற்பட்ட அவமானம் தீர்க்கப்படும். இதனை மனதில் வைத்து சீக்கிரம் உனது குலத்தின் கௌரவத்தை காப்பாற்றிக்கொள் என்று ராவணனுக்கு சீதை மீது ஆசை ஏற்படும்படியும் ராமரின் மேல் கோபம் வரும் படியும் தூண்டிவிட்டு தனது பேச்சை முடித்தாள் சூர்ப்பனகை.

சீதையின் அழகை பற்றிய பேச்சில் மயங்கிய ராவணன் மந்திரிகளிடம் சபை முடிந்தது அனைவரும் செல்லலாம் என்று சபையை முடித்து அனைவரையும் அனுப்பி வைத்துவிட்டு யோசிக்க ஆரம்பித்தான். சீதையை தூக்கிவர வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் மாரீசன் ராமரைப்பற்றி சொல்லிய எச்சரிக்கை அவனது மனதில் தோன்றியது. சூர்ப்பனகையிடம் ராமன் என்பவன் யார்? அவன் எதற்காக தண்டகாருண்ய காட்டிற்கு வந்திருக்கின்றான்? அவனது உருவம் எப்படிப்பட்டது? ராமன் வைத்திருக்கும் ஆயுதங்கள் என்ன? அவன் தனியாக என்னென்ன போர் தந்திரங்களை கையாண்டு நமது குலத்தவர்களை அழித்தான் என்று ராமரைப்பற்றிய அனைத்தையும் சொல் என்று கேட்டுக்கொண்டான். சூர்ப்பனகை ராமர் அயோத்தியை சேர்ந்த ராஜகுமரன் என்று ஆரம்பித்து காட்டில் யுத்தம் முடிந்தது வரை ராமரைப் பற்றி தனக்குத் தெரிந்த அனைத்தையும் சொல்லி முடித்தாள். அனைத்தையும் கேட்ட ராவணன் நீண்ட யோசனைக்குப் பிறகு ஓர் முடிவுக்கு வந்தான். தனது பறக்கும் ரதத்தில் ஏறி மாரீசனை காணச் சென்றான்.

ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி – 17

மாரீசன் ராவணனிடம் பேச ஆரம்பித்தான். ராமர் யுத்தத்தில் மத யானைக்கு ஒப்பானவர். சீதையை அபகரிக்கும் இந்த யோசனையை எனக்கு யார் சொன்னது ராவணா? இதனை செயல்படுத்துவது என்பது கொடிய விஷ பாம்பின் வாயில் கைவிட்டு அதன் பல்லை பிடுங்கி மரணிப்பது போல் ஆகும். எவனோ உன் பகைவன் உனக்கும் உனது ராட்சச குலத்திற்கும் சர்வநாசம் உண்டாக வேண்டும் என்று உன்னுடைய நண்பன் போல் பாசாங்கு செய்து இந்த திட்டத்தை உனக்கு சொல்லியிருக்கிறான். ஏமாந்து அழிந்து போகாதே. ராமருடைய கோபத்தை தூண்டினால் உன் குலம் அழிந்து போகும். ராமர் யுத்தம் செய்யும் போது பாதாளத்தை அடித்தளமாக கொண்ட கடல் போன்று காட்சி அளிப்பார். அவரின் வில்லில் இருந்து வரும் அம்புகள் கடல் அலைகள் போல் நிற்காமல் வந்து கொண்டே இருக்கும். அக்காட்சியை கண் கொண்டு பார்க்க இயலாது அப்படி இருக்கும் போது யுத்தம் செய்வது எப்படி சாத்தியமாகும். அரக்கர்களின் தலைவனான ராவணா நீங்கள் சீதையை ராமருக்கு தெரியாமல் நீங்கள் கவர்ந்து செல்வது உங்களுக்கு நன்மையானது அல்ல. நான் சொல்வதை கேளுங்கள். மனம் அமைதி அடைந்து இலங்கைக்கு திரும்பி சென்று உங்களது மனைவிமார்களுடன் மகிழ்ச்சியுடன்
இன்பத்தை அனுபவியுங்கள். ராமர் தன் மனைவியுடன் காட்டில் மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்று மாரீசன் ராவணனிடம் புத்தி கூறினார். இதனைக்கேட்ட ராவணன் அனுபவசாலியான மாரீசன் கூறினாள் சரியாக இருக்கும் என்று தன் திட்டத்தை கைவிட்டு இலங்கைக்கு திரும்பிச்சென்றான்.

இலங்கையில் ராவணன் தனது அரசவையில் இந்திரன் போல் ஜொலித்துக்கொண்டு மந்திரிகள் சூழ அமர்ந்திருந்தான். அப்போது சபையில் அதிர்ச்சியை உண்டாக்கும் வகையில் ராவணனின் உடன் பிறந்த சகோதரி சூர்ப்பனகை காது மூக்கு அறுந்த நிலையில் மிகவும் கொடூரமான உருவத்துடன் அரசவைக்குள் நுழைந்து ராவணனிடம் கடுமையான வார்த்தைகளை கூறி பேச ஆரம்பித்தாள். ராட்சச அரசனை நீ அரச சுகங்களை அனுபவிப்பதில் மதிமயங்கி கிடக்கின்றாய். மிக பெரிய ஆபத்து ஒன்று பின்னாளில் வரப்போகிறது என்று நான் சொல்வதற்கு முன்பாகவே ஒற்றர்கள் வழியாக உனக்கு செய்தி வந்திருக்கும். அதனை தெரிந்தும் தெரியாதது போல் சிறுபிள்ளைதனமாக சுகங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றாய்.

உன்னுடைய ஆளுகைக்கு உட்பட்ட உனது இடத்தை ஒருவன் ஆக்ரமிப்பு செய்து உன் குலத்தை சேர்ந்த உன்னை நம்பி தண்டகாருண்ய காட்டை ஆட்சி செய்தவர்கள் அழிந்து விட்டார்கள். பதினான்காயிரம் வீரர்களையும் அரசன் சேனாதிபதி என அனைவரையும் முனிவர்களின் சார்பாக ஒருவன் அழித்திருக்கிறான். உன்னுடைய படைகளை கண்டு நடுநடுங்கிய எதிரிகள் இதனைப்பார்த்து இப்போது சிரித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதனை அறிந்தும் அறியாதவன் போல் அறிவிழந்து கிடக்கிறாய். மரண பயமில்லாமல் நீ இருந்தால் மட்டும் போதுமா அரசன் செய்ய வேண்டிய காரியத்தை நீ செய்ய வேண்டாமா? நீ எப்போது அழிவாய் என்று உனது பகைவர்கள் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். நீ இங்கு சுகமாக சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கின்றாய். உனக்கு அவமானமாக இல்லையா? உன்னை கண்டு நடுங்கிய முனிவர்களுக்கும் ரிஷிகளுக்கும் ராமர் இப்போது அபயம் அளித்து விட்டான். உன்னை பாராட்டி கொண்டிருப்பவர்களின் வார்த்தைகளில் திருப்திப்பட்டு கிடக்கும் உனக்கு ஆபத்து நெருங்கி விட்டது. இலங்கைக்கு இந்த நிலை வந்தால் உன் குடி மக்கள் கூட உன்னை மதிக்க மாட்டார்கள். உனக்கு கோவம் வரவில்லையா கோபம் இல்லாத அரசன் எதற்கும் உதவ மாட்டான் என்று சூர்ப்பனகை ராவணனின் கோபத்தை தூண்டி விட்டாள்.

ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி – 16

ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி – 16

ராமர் மிகவும் பராக்கிரமசாலி. உலகில் உள்ள வில்லாளிகளில் தலை சிறந்தவற் போல் காணப்படுகிறார். தெய்வீக அஸ்திரங்களை செலுத்தும் திறமை பெற்றிருக்கிறார். அவரது வில்லில் இருந்து கிளம்பிய அம்புகள் ஐந்து தலை பாம்புகள் போல் ராட்சசர்களை ஓட ஓட துரத்தியது. ராட்சசர்கள் எங்கே ஒளிந்தாலும் தேடிப்போய் அவர்களை கொன்றது என்று ராமர் தனது வில்லில் இருந்து செலுத்திய அம்பின் வேகத்தையும் அபார திறமையையும் விவரித்துச் சொன்னான். அனைத்தையும் கேட்ட ராவணன் அந்த இரண்டு மனித பூச்சிகளை இப்போதே கொன்று விட்டு திரும்புகின்றேன் என்று கர்ஜனையுடன் ராவணன் எழுந்தான். அகம்பனன் ராவணனை தடுத்து நிறுத்தினான்.

ராமரின் பாராக்ரமத்தை நேரில் பார்த்தவன் என்ற முறையில் சொல்கின்றேன் கேளுங்கள் என்று அகம்பனன் ராவணனிடம் பேச ஆரம்பித்தான். நான் சொல்வதை கேளுங்கள். ராமர் சர்வ வல்லமை படைத்தவராக இருக்கின்றார். இந்த உலகத்தில் உள்ள ராட்சசர்கள் அனைவரும் ஒன்று சேர்த்து ராமரை எதிர்த்து யுத்தம் செய்தாலும் அவரை வெற்றி பெற முடியாது. அவரை கொல்ல எனக்கு தெரிந்த ஓர் உபாயத்தை சொல்கின்றேன். தங்களுக்கு விருப்பம் இருந்தால் செயல் படுத்துங்கள் என்றான் அகம்பனன். உனது உபாயத்தை கூறு என்று ராவணன் அகம்பனனுக்கு கட்டளையிட்டான்.

ராமருடைய மனைவி சீதை இருக்கிறாள். பெண்களில் ரத்தினம் போன்ற பேரழகுடையவள். மூவுலகத்தில் தேடினாலும் அவளின் அழகுக்கு இணையாக யாரையும் பார்க்க முடியாது. அந்த பெரிய காட்டில் ராமரின் பாதுகாப்பில் இருக்கும் சீதையை யாருக்கும் தெரியாமல் வஞ்சகமான உபாயத்தை கையாண்டு கவர்ந்து கொண்டு வந்துவிடுங்கள். மனைவியின் மேல் பேரன்பு வைத்திருக்கும் ராமர் அவளின் பிரிவைத் தாங்காமல் உயிரை விட்டுவிடுவார் என்று சொல்லி முடித்தான். ராவணன் நீண்ட நேரம் யோசித்து அகம்பனனுடைய யோசனை சரியானதாக இருக்கின்றது என்று அத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தான். அடுத்த நாள் காலையில் தனது தேரோட்டியுடன் தான் மட்டும் தனியாக பறக்கும் தேரில் கிளம்பி தாடகையின் புதல்வனான மாரீசனின் ஆசிரமம் சென்று சேர்ந்தான் ராவணன்.

மாரீசன் பல வகையான உபசரணைகள் செய்து ராவணனை வரவேற்று பின்பு பேச ஆரம்பித்தான். ராட்சசர்களின் தலைவரே தங்கள் நாட்டில் அனைவரும் நலமாக இருக்கின்றார்களா நீங்கள் விரைவாக வந்திருப்பதை பார்த்தால் மனம் வருந்தும்படி ஏதோ தங்களுக்கு நடந்திருக்கின்றது என்று எண்ணுகின்றேன். என்ன செய்தி சொல்லுங்கள் என்று மாரீசன் ராவணனிடம் கேட்டான். எனது ராஜ்யத்திற்கு உட்பட்ட காட்டில் உள்ள எனது அழிக்க முடியாத படைகள் அனைத்தையும் தசரதரின் புதல்வன் ராமன் அழித்து எனக்கு மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தி விட்டான். இந்த அவமானம் போக அவனது மனைவி சீதையை கவர்ந்து செல்லவேண்டும் என்று முடிவு செய்து திட்டம் திட்டி இருக்கின்றேன். அதற்கு நீ எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று ராவணன் மாரீசனிடம் சொன்னான்.

நவபாஷாணம்

நவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். நவபாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை சித்தர்கள் முறைப்படி கட்டுவதாகும். பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளன. இதில் நீலி என்றொரு வகையும் உண்டு. நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க கூடியதாகும். எனவே இதனை முறைப்படி புடம் போட்டு கட்டவேண்டும். வெவ்வேறு இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளைக் கொண்ட பாஷாணத்தின் அணுக்களை சேர்ப்பது மற்றும் பிரிப்பதன் மூலம் புதிய மேம்படுத்தப்பட்ட இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளைக் கொண்ட அணுக்கட்டமைப்பை உருவாக்கி சித்தர்கள் இதனை செய்கின்றார்கள். அதன்படி நவ பாஷாணம் என்பது ஒன்பது வகை கடுமையான விஷங்களைக் கொண்டது. அவை

  1. சாதிலிங்கம்.
  2. மனோசிலை
  3. காந்தம்
  4. காரம்
  5. கந்தகம்
  6. பூரம்
  7. வெள்ளை பாஷாணம்
  8. கௌரி பாஷாணம்
  9. தொட்டி பாஷாணம்

மேற்கண்ட ஒவ்வொரு பாஷாணமும் ஒவ்வொரு விதமான தனி வேதியல் இயல்புகளைக் கொண்டதாகும். இந்த ஒன்பது பாஷாணங்களை திரவமாக்கி மீண்டும் திடமாக்க ஒன்பது வகை விறகுகளும் (எரிபொருட்களும்) ஒன்பது தடவை வடிகட்ட ஏதுவாக ஒன்பது வடிகட்டிகளும் கையாளப்பட்டன. சித்தர்கள் பாஷானங்களைக் கட்டும்போது அரைத்து வேகவைத்து எரித்து நுண்ணிய அணுக்களாகப் பிரிக்கப் புடமிடுவார்கள். வறட்டிகளைக் கொண்டு எரிக்கப்படும் தீயின் அளவைக் குறிப்பிடுவது புடத்தின் வகையாகும். வறட்டியின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு பெயர் குறிப்பிடப்படும். புடம் ஒன்றுக்கு ஒன்று முதல் ஆயிரம் வறட்டி வரை பயன்படுத்தப்படும். இதற்கு தங்கவாறு பெயர்களும் உள்ளது. அவை

  1. காடைபுடம் 1 வறட்டி
  2. கவுதாரிப் புடம் 3 வறட்டி
  3. குக்குடப் புடம் 8 முதல் 10 வறட்டி வரை
  4. வராக புடம் 50 வறட்டி
  5. யானை புடம் 500 வறட்டி முதல் ஆயிரம் வறட்டி வரை
  6. கன புடம் 700 முதல் 800 வரை
  7. மணல் மறைவுப் புடம் 800 வறட்டி
  8. கோபுடம் 1000 வறட்டி

இது தவிர நெருப்பினால் உண்டாகும் வெப்பம் மட்டுமல்லாது இயற்கையாகக் கிடைக்கக் கூடிய வெப்பம் தரும் புட வகைகளும் சித்தர்களால் பயன்படுத்தப்பட்டன. அவை

  1. கோபுர புடம் – மணல்
  2. பாணிடப் புடம் – தண்ணீர்
  3. உமிப் புடம் – உமி
  4. தானியப் புடம் -நெல்
  5. சூரியப் புடம் – வெயில்
  6. சந்திரப் புடம் – நிலவொளி
  7. பருவப் புடம் – பௌர்ணமி நிலவு
  8. இருள் புடம் – அமாவாசை இரவு
  9. பனிப்புடம் – பனி
  10. பட்டைப் புடம் – மரத்தூள்
  11. நிழற்புடம் – சூரிய ஒளி படாத அறை

நவபாஷாணம் சிலைகளை உருவாக்கியவர் போகர் பதினெட்டு சித்தர்களில் ஒருவர். சர்வ சாத்திரங்களையும் கற்ற போகியாவார். இவர் சித்தத்தை அடக்கி இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து இயற்கையை முற்றிலும் அறிந்து இந்த உலக இயக்கத்தையும், பிரபஞ்சத்தையும், இறைஆற்றலையும், உயிர் தத்துவத்தையும், பிரபஞ்ச ரகசியத்தையும் ஆராய்ந்து அறிந்தவர். இவர் காலாங்கி முனிவரின் சிறந்த மாணவர் ஆவார். இவரது மருத்துவ ஞானம் அளவற்றது. இவருடைய வைத்திய நூல்களில் நிகண்டு, வைத்தியம், துவாத காண்டம், சப்ப காண்டம், வைத்திய சூத்திரம், ஆகியவையும் ஆன்மீகத்தில் ஞான் சூத்திரம், அட்டாங்க யோகம், ஞான சாராம்சம் ஆகியவையும் குறிப்பிடத்தக்கது. நவ பாஷாண சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை நாம் அருந்தினால் தீராத நோய் எதுவாக இருந்தாலும் தீர்ந்துவிடும். நவ பாஷாணங்களின் சேர்க்கையில் போகர் மூன்று முருகர் நவ பாஷாண சிலைகள் உருவாக்கினார். அதில் 1. பழனி மலைக்கோவில் 2. கொடைகானல் அருகே உள்ள பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில். 3 வது சிலை கலியுகத்தின் இறுதியில் வெளிப்படும் என்று புராண வரலாறுகளில் உள்ளது.

ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி – 15

ராமரின் மேல் தேவர்கள் பூ மாரி பொழிந்தனர். சீதையும் லட்சுமணனும் மலை குகையில் இருந்து திரும்பி வந்தார்கள். பகைவர்களை கொன்று அழித்து முனிவர்களுக்கும் ரிஷிகளுக்கும் நன்மையை செய்த ராமரை பார்த்து மகிழ்ந்த சீதை அவருடைய நெற்றியில் இருந்த வியர்வையை துடைத்து இவ்வளவு பெரிய யுத்தத்தில் ராமருக்கு ஒன்றும் ஆகவில்லை என்று ஆனந்தப்பட்டாள். ஒற்றை ஆளாக இருந்து அனைவரையும் அழித்த ராமரை பெருமையுடன் பார்த்த லட்சுமணன் அவரை அணைத்துக்கொண்டான். முனிவர்களும் ரிஷிகளும் ராமருக்கு தங்களது வணக்கத்தை தெரிவித்துக் கொண்டார்கள்.

ராமருடன் நடந்த இந்த யுத்தத்தில் அகம்பனன் என்ற ஒரு ராட்சசன் மட்டும் பெண் உருவத்திற்கு மாறி ராமரின் அம்பிலிருந்து தப்பி நடந்தவற்றை ராவணனிடம் சொல்வதற்கு இலங்கைக்கு சென்றான். அரசவைக்குள் நடுநடுங்கியபடியே சென்ற அவன் ராவணனின் அருகில் சென்று பேச ஆரம்பித்தான். அரசரே தங்களின் ஆளுகைக்கு உட்பட்ட காட்டின் அரசனான கரனும் சேனாதிபதி தூஷணன் உட்பட நமது ராட்சச குலத்தவர்கள் அனைவரும் அழிந்து விட்டார்கள். நான் ஒருவன் மட்டும் தப்பி தங்களிடம் இந்த செய்தியைச் சொல்ல வந்திருக்கின்றேன் என்றான். கண்கள் சிவக்க கோபத்தில் பேச ஆரம்பித்தான் ராவணன். என் அழகான காட்டை அழித்தவன் எனக்கு பயந்து இந்த உலகத்தின் எந்த பகுதியிலும் தங்க இடம் கிடைக்காமல் அலைந்து கொண்டிருப்பான். அவனை இந்த உலகத்தின் எந்த மூலையில் ஒளிந்திருந்தாலும் அவனை விட்டு வைக்க மாட்டேன். எனக்கு கெடுதலைச் செய்தவன் இந்திரன் குபேரன் யமன் விஷ்ணு என்று யாராக இருந்தாலும் நிம்மதியாக இருக்க முடியாது. நான் யமனுக்கு யமன். சூரியனின் அக்னியையும் எரிப்பேன். நடந்தவற்றை முழுமையாக சொல் என்று கர்ஜனையுடன் கத்திக்கொண்டே அகம்பனனை நோக்கி வந்தான் ராவணன். அருகில் வரும் ராவணனை பார்த்து பயந்த அகம்பன் நடுங்கியபடியே தாங்கள் எனக்கு அபயம் அளித்தால் சொல்கின்றேன் என்றான். அபயம் அளிக்கின்றேன் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன் நடந்தவற்றை அப்படியே சொல் என்றான் ராவணன். அகம்பனன் பேச ஆரம்பித்தான்.

தசரதரின் புத்திரர் ராமர். அவர் தனது மனைவியுடனும் தனது சகோதரன் லட்சுமணனுடனும் அக்காட்டில் தவஸ்விகளை போல் வேடம் தரித்து வாழ்ந்து வருகின்றார்கள். ராமர் சிங்கம் போன்ற உடலமைப்பும் காளையைப் போன்ற தோள்களையும் உருண்டு திரண்ட அழகான கைகளையும் ஒப்பில்லாத உடல் பலத்துடன் இருக்கிறார். அவரது சகோதரன் லட்சுமணன் சூர்ப்பனகையின் காதுகளையும் மூக்கையும் வெட்டி விட்டான். சூர்ப்பனகை கரனிடம் தெரிவித்தாள். கரன் உத்தரவின் பேரில் ராமரை அழிக்க தூஷணன் தலைமையில் சென்ற பதினான்காயிரம் ராட்சசர்களையும் கரனையும் கொன்று விட்டார் ராமர். அவரால் அங்கிருந்த நமது குலத்தவர்கள் அனைவரும் அழிந்து விட்டனர் என்றான் அகம்பனன். அகம்பனுடைய பேச்சை கேட்ட ராவணன் இந்த ராமர் என்பவன் தேவேந்திரனோடும் அனைத்து தேவர்களோடும் காட்டிற்குள் வந்து யுத்தம் செய்தானா வேறு யார் யார் ராமனுக்கு இந்த யுத்தத்தில் உதவி செய்தார்கள் அனைவரையும் அழித்து விடுகின்றேன் என்று கர்ஜித்தான் ராவணன். ராமருடைய பேராற்றலை மேலும் சொல்ல ஆரம்பித்தான் அகம்பன்.

தொடரும்………

ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி – 14

ராமர் தனது வில்லில் இருந்து அம்புகளை அனுப்ப ஆரம்பித்தார். ராமரை சுற்றி இருக்கும் பல ஆயிரம் ராட்சசர்களை பார்த்த தேவர்கள் ஒற்றை ஆளாக இருந்து ராமர் எப்படி அனைவரையும் அழிக்க போகிறார் என்று இந்த யுத்தத்தை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ராமர் வில்லில் அம்பு பூட்டுவதோ அம்பு வில்லில் இருந்து செல்வதோ மின்னல் வேகத்தில் இருந்தது. சூரியனில் இருந்து அனைத்து பக்கமும் வெளிச்சம் பரவுவதைப் போல ராமர் தன்னை சுற்றி அம்பை அனுப்பிக்கொண்டே இருந்தார். எட்டு திசைகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான வீரர்கள் அழிந்தனர். யானைகளும் குதிரைகளும் பூமியில் வீழ்ந்து மடிந்தது. பெரிய உருவத்திற்கு மாறிய பல ராட்சசர்கள் ஆகாயத்தில் பறந்து வந்து ராமரை தாக்க முற்பட்டனர். ராமரின் வில்லில் இருந்து வந்த அம்புகள் அந்த ராட்சசர்களை ஆகாயத்திலேயே அழித்தது. தனது தேர் குதிரைகளை இழந்த தூஷணன் தனது கதையால் ராமரை தாக்க ஓடி வந்தான். ராமர் அனுப்பிய அம்பு அவனது இரு கைகளையும் வெட்டி தள்ளி அவனை அழித்தது. தூஷணன் இறந்ததை பார்த்த ராட்சச படைகள் பயந்து ஓட ஆரம்பித்தனர். அனைவரையும் உற்சாக மூட்டி மீண்டும் அழைத்து வந்தான் கரன்.

ராமரின் அம்பினால் அனைத்து ராட்சசர்களும் அழிந்தனர். ராமர் ருத்திர மூர்த்தியை போல் காணப்பட்டார். இவ்வளவு நாட்கள் சிரித்த முகத்துடன் அன்புடன் இருக்கும் ராமரை பார்த்திருந்த காட்டில் வசிப்பவர்கள் இப்போது ராமரை ருத்ரமூர்த்தியாக பார்க்கும் போது பயந்து நடுங்கினார்கள். அந்த காட்டுப் பகுதி முழுவதும் இறந்த ராட்சசர்களின் உடல்கள் மலை போல் குவிந்து கிடந்தது.

ராமர் கரனின் தேர் குதிரைகளை அழித்து அவனை நிர்மூலமாக்கினார். ஒற்றை ஆளாக நின்று கொண்டிருந்த கரனிடம் ராமர் பேச ஆரம்பித்தார். இக்காட்டில் யாருக்கும் எந்த தொந்தரவும் செய்யாமல் தவம் செய்து கொண்டிருக்கும் முனிவர்களையும் ரிஷிகளையும் ஏன் துன்புறுத்தியும் கொன்றும் வந்திருக்கிறாய். உன்னை போன்ற அரக்கர்களை அழிப்பதற்காகவே இக்காட்டிற்கு வந்திருக்கின்றேன். என்னுடைய அம்புகள் உன்னுடன் வந்த உன் ராட்சச குலத்தவர்கள் அனைவரையும் அழித்துவிட்டது. உலகத்தருக்கு துன்பம் விளைவித்து மக்களை கொல்பவன் எவ்வளவு பலசாலியாக இருந்தலும் ஒரு நாள் இறந்து போவான். இவ்வளவு நாள் இந்த பாவ காரியங்களை செய்து கொண்டிருந்த நீயும் இப்போது எனது அம்பினால் அழியப்போகிறாய் என்று தனது அம்பை வில்லில் பூட்டினார். கரன் தனது கதை ஆயுதத்தை ராமரின் மேல் எறிந்தான். ராமரின் அம்பு கரனின் கதையை இரண்டாக பிளந்தது. பெரிய மரத்தை வேரோடு பிய்த்து எறிந்தான் கரன். மரமும் ராமரின் அம்பினால் துண்டாகி தூரத்தில் போய் விழுந்தது. அம்புகள் பலவற்றை கரனின் மேல் எய்தார் ராமர். உடல் முழுவதும் காயமடைந்த கரன் ராமரை தனது கைகளினால் தாக்க ஓடி வந்தான். இனியும் தாமதிக்க வேண்டாம் என்று நினைத்த ராமர் இந்திர பாணத்தை கரனின் மேல் பிரயோகித்தார். அடுத்த நொடி கரனும் வீழ்ந்தான். காட்டில் முனிவர்களையும் ரிஷிகளையும் துன்புறுத்திய ராட்சசர்களை அனைவரையும் அழித்து விட்டார் ராமர். இனி இக்காட்டில் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்கலாம் என்று முனிவர்களும் ரிஷிகளும் மகிழ்ச்சியுடன் ராமரை வணங்கினார்கள்.

நம்பிக்கை

ஒர் ஊரில் ஒரு கூலி தொழிலாளியும் ஒரு செல்வந்தரும் வாழ்ந்து இருந்தனர். கூலி தொழிலாளி தினமும் தன் வீட்டின் ஓரத்தில் பெருமாள் படம் ஒன்றை வைத்து அதை வணங்கி வந்தார். செல்வம் இல்லாவிட்டாலும் சந்தோஷத்துடனும் மன அமைதியுடனும் இருந்தார். பல தலைமுறைக்கு செல்வம் சேர்த்து வைத்திருந்த செல்வந்தரோ தினமும் காலையில் குளித்துவிட்டு பல மணி நேரம் பூஜை புனஸ்காரம் எல்லாம் செய்வார். ஆனாலும் நிம்மதியின்றி வாழ்ந்து வந்தார். ஒரு நாள் நாரத முனிவர் விஷ்ணுவைப் பார்த்து அந்தச் செல்வந்தர் மிகுந்த பக்திமானாக இருக்கிறார். தினமும் உங்களுக்குப் பல மணி நேரம் பூஜை எல்லாம் செய்கிறார். அவர் நிம்மதியாய் வாழ ஏதாவது செய்யலாமே என்றார். விஷ்ணுவும் அதற்குச் சம்மதித்து அவரின் நம்பிக்கைக்கு ஏற்ப நீங்களே உங்களுக்கு விருப்பப்பட்டதை செய்யுங்கள். நீங்கள் கீழே சென்று நான் நாரயணனிடமிருந்து வருகிறேன் என்று செல்வந்தரரிடம் சொல்லுங்கள். அவர் தற்பொழுது நாராயணன் என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்று கேள்வி கேட்பார். அதற்கு நீங்கள் நாராயணன் தற்போது ஓர் ஊசியின் காது வழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருக்கிறார் என்று பதில் சொல்லுங்கள் என்று சொல்லி அனுப்பினார். அப்படியே அந்த தொழிலாளியையும் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள் என்று சொல்லி அனுப்பினார் விஷ்ணு.

நாரதர் முதலில் செல்வந்தர் வீட்டுக்கு சென்றார். பூஜை எல்லாம் முடித்துவிட்டு வீட்டிற்கு வெளியே வந்த செல்வந்தர் நாரதரிடம் நீங்கள் யார் என்று கேட்டார் நாரதர் தான் நாரயணரிடமிருந்து வருவதாகச் சொன்னார். அதற்கு அந்தச் செல்வந்தர் தற்போது நாராயணன் என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்று கேட்டார். நாரதர் நாராயணன் ஒர் ஊசியின் காது வழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருக்கிறார் என்றார். அதற்கு அந்த செல்வந்தர் அது எப்படி முடியும் இது என்ன நடக்கிற காரியமா என்று கேட்டு விட்டு இவர் ஏதோ உளருகிறார் என்று எண்ணி மேலும் ஏதும் பேசாமல் வீட்டிற்குள் சென்று விட்டார்.

நாரதர் அடுத்தது அந்த தொழிலாளியைப் பார்க்கச் சென்றார். அவரிடமும் இதே உரையாடல் நடைபெற்றது. இறுதி பதில் அளித்த தொழிலாளி இதில் என்ன விந்தை இருக்கிறது ஒரு பெரிய ஆலமரத்தை சின்ன விதையில் அடக்கியவர் பிரபஞ்சத்தை தன் வாயில் காண்பித்தவர் அவருக்கு யானையை ஊசியில் நுழைப்பது என்ன பெரிய விஷயமா நாராயணனால் செய்ய முடியாத செயல் என்று இந்த உலகத்தில் எதுவும் இல்லை என்று பதில் சொன்னார். நாரதர் தொழிலாளிக்கு தனது ஆசிகளை அளித்து விட்டு அங்கிருந்து கிளம்பி நாராயணனிடம் வந்து நடந்தத்தை சொன்னார்.

நாராயணன் நாரதரிடம் கடவுள் பக்தி என்பது மணிக்கணக்கில் பூஜை புனஸ்காரங்கள் செய்வது மட்டுமில்லை. இறைவனின் பாதத்தை பூரண நம்பிக்கையுடன் நீயே சரணம் என்று பற்றுவதே உண்மையான பக்தி. உண்மையான பக்திக்கு ஏற்ப ஆசிகள் சென்று கொண்டே இருக்கிறது அதுவே அந்த ஏழையின் நிம்மதிக்கு காரணம் என்று பதிலளித்தார் நாராயணன்.

குச்சனூர் சனீஸ்வர பகவான்

சனிஸ்வர பகவான் அரூபி வடிவத்தில் சுயம்பு லிங்கமாக பூமியிலிருந்து வளர்ந்து கொண்டேயிருந்தார். அவருக்கு மஞ்சனக் காப்புக் கட்டிய நிலையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சுயம்புவாக இருக்கும் இந்த சனீஸ்வர பகவான் கோவிலின் தலமரம் விடத்தை மரம். தலமலர் கருங்குவளை மலர் தல இலை வன்னி இலை. வாகனம் காகம். தானியம் எள். திருக்கோவிலின் வளாகத்தில் வினாயகப் பெருமான் முருகன் சந்நிதிகள் உள்ளன. உட்புறமாக லாடசந்நியாசியின் கோயில் உள்ளது. வாய்க்கால் கரையில் சோணை கருப்பனசாமி கோவில் உள்ளது. அதற்குப் பக்கத்தில் கன்னிமார் கோவிலும் நாகர் கோவிலும் உள்ளன. மூலஸ்தானத்திற்கு பின்புறம் விடத்தலை தலமரம் உள்ளது. நாள்தோறும் முக்கால பூஜைகளும் தவறாமல் இக்கோவிலில் நடைபெறுகிறது. தினந்தோறும் பூஜை முடிந்த பின் பிரசாதம் முதலில் காகத்திற்கு வைக்கப்படும். காகம் எடுக்காவிட்டால் அன்றைய தினம் தடையாகக் கருதி மீண்டும் பூசாரிகள் மன்னிப்புக் கேட்டு மீண்டும் காகத்திற்கு பிராதத்தை வைப்பார்கள். பிராதத்தை காகம் உண்டபின் தான் பக்தர்களுக்கு பரிமாறப்படும்.

குச்சனூர் பகுதியை சேர்ந்த தினகரன் எனும் மன்னன் ஒருவன் குழந்தையின்றி மனம் வாடிவந்த நிலையில் தனக்குக் குழந்தை ஒன்று அளிக்கக் கோரி தினந்தோறும் இறைவனிடம் வேண்டி வந்தான். ஒரு நாள் வேண்டிக் கொண்டிருந்த போது ஒருநாள் அசரீரி ஒன்று கேட்டது. அந்த அசரீரியில் அவனது வீட்டிற்கு பிராமணச் சிறுவன் ஒருவன் வருவான் என்றும் அவனை வளர்த்து வர வேண்டும் என்றும் அதன் பின்பு அவனுக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்றும் கூறப்பட்டது. அந்த அசரீரியில் கூறப்பட்டபடி சில நாட்களில் பிராமணச் சிறுவன் ஒருவன் வந்தான். அந்த மன்னனும் அந்த சிறுவனுக்கு சந்திரவதனன் என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தான். அதன் பின்பு அரசிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மன்னனும் அரசியும் அந்தக் குழந்தைக்கு சதாகன் என்ற பெயர் சூட்டி வளர்த்தனர். இரண்டு குழந்தைகளும் வளர்ந்து பெரியவர்களாயினர். சந்திரவதனன் மிகவும் அறிவுத் திறனுடன் இருந்தான். மன்னனும் அவனுடைய அறிவுத்திறனுக்கு அவனை மன்னனாக்குவதே சரி என்கிற எண்ணத்துடன் சந்திரவதனன் வளர்ப்பு மகனாக இருந்தாலும் அவனுக்கே முடிசூட்டினான். இந்நிலையில் மன்னன் தினகரனுக்கு சனி தோசம் பிடித்தது. சனி தோசத்தால் தினகரன் பல சோதனைகளுக்கு ஆளாகி மிகவும் துன்பமடைந்தான். தன்னை வளர்த்து மன்னனாகவும் ஆக்கிய தனது வளர்ப்புத் தந்தை அடையும் துன்பத்தைக் கண்டு மனமுடைந்த சந்திரவதனன் சுரபி நதிக்கரைக்குச் சென்று இரும்பால் சனியின் உருவத்தைப் படைத்து தனது தந்தைக்கு வரும் துன்பத்தை நீக்க வேண்டி வழிபடத் துவங்கினான்.

சந்திரவதனன் வழிபாட்டில் மனமிறங்கிய சனீஸ்வர பகவான் அவன் முன் தோன்றினார். அவரவர்களுடைய பாவ வினைகளுக்கேற்ப ஏழறை நாழிகை, ஏழறை நாட்கள், ஏழறை மாதங்கள், ஏழறை ஆண்டுகள் என்று சனி தோஷத்தால் அவர்களுக்குப் பல துன்பங்கள் வருகின்றன. இந்தக் காலங்களில் வரும் துன்பத்திலும் தங்கள் கடமைகளுடன் நன்மை செய்து வருபவர்களுக்கு அவர்களது நற்செயலுக்கேற்ப இறுதியில் நன்மையும் அளிக்கப்படும். உனது தந்தை முற்பிறவியில் செய்த பாவ வினைகளுக்கு ஏற்ப இந்தப் பிறவியில் சனி தோசம் பிடித்திருக்கிறார். அவரின் பாவ வினைகளுக்குத் தகுந்தபடி அவருக்குத் துன்பங்கள் வருகின்றன என்றார். சந்திரவதனன் அனாதையாக அந்த வீட்டிற்கு வந்த தன்னை வளர்த்ததுடன் வளர்ப்பு மகனான தன்னை இந்த நாட்டின் மன்னனாகவும் ஆக்கிய அவருக்குக் கொடுக்கும் துனபங்களைத் தனக்கு அளித்து அவருடைய துன்பத்தைக் குறைக்கும்படி வேண்டினான். அவனுடைய வேண்டுதலில் மனமிறங்கிய சனீஸ்வர பகவான் அவனுடைய தந்தைக்குப் பதிலாக அவனை ஏழறை நாழிகைக் காலம் சனி தோசம் பிடிக்கும் என்றும் அந்த ஏழறை நாழிகைக் காலத்தில் அவனுக்குப் பல துன்பங்கள் வரும். அந்தத் துன்பங்களை எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்றும் எச்சரித்தார். சந்திரவதனனும் அதற்கு சம்மதித்தான்.

சனீஸ்வர பகவானும் அதற்கு ஒத்துக் கொண்டு ஏழறை நாழிகை காலத்திற்கு அவனுக்குக் கடுமையான பல துன்பங்களைக் கொடுத்தார். அத் துன்பங்களையெல்லாம் ஏற்றுக் கொண்ட சந்திரவதனனின் முன் மீண்டும் தோன்றிய சனீஸ்வர பகவான் இந்த ஏழறை நாழிகை கால சனிதோசம் கூட உன் முற்பிறவியின் வினைகளுக்கேற்ப உனக்கு வந்தது. தங்கள் குறைகளை உணர்ந்து இவ்விடத்திற்கு வந்து என்னை வணங்கும் எவருக்கும் சனி தோசத்தால் வரும் துன்பங்களைக் குறைத்து முடிவில் நன்மைகளை அளிப்பேன் என்று சொல்லி மறைந்தார். சந்திரவதனனின் வேண்டுகோளுக்கிணங்க அங்கு சுயம்புவாகத் தோன்றினார். சனீஸ்வர பகவான் தோன்றிய அந்த இடத்தில் சந்திரவதனன் சனி பகவானால் பிடித்து அதனால் துன்பப்படும் பிறருக்கும் வழிகாட்டுதலாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அந்த செண்பக நல்லூரில் சிறிய கோவில் ஒன்றை அமைத்து அதற்குக் குச்சுப்புல்லினால் கூரை அமைத்து வழிபாட்டுத் தலமாக்கினான். இதன் பிறகு இந்த செண்பகநல்லூர் குச்சனூர் என்று ஆகிவிட்டது. தினகரன் மான்மியம் என்கிற பழமையான நூலில் இந்த தலத்திற்கான புராண வரலாறு உள்ளது. தேனி நகரிலிருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோவில் உள்ளது.