ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாகலாபுரத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ வேத நாராயண சுவாமி கோயிலின் கோஷ்டத்தில் வீணாதார தட்சிணாமூர்த்தி அருள் பாலிக்கிறார். தட்சிணாமூர்த்தி வழக்கமாக அனைத்து சிவாலயங்களில் இருப்பார். சில பெருமாள் தலங்களில் புராண கதைகளின் படி இவரைக் காண முடியும். தட்சிணாமூர்த்தி தன் கரங்களில் வீணையை ஏந்தி இசையின் மூலம் பிரபஞ்ச ஞானத்தைப் போதிக்கும் காட்சியில் அருள் பாலிக்கிறார். பேரரசர் கிருஷ்ண தேவராயரின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் கட்டடக் கலைக்கும் ஆன்மீக ஒற்றுமைக்கும் சான்றாக விளங்குகின்றது.
இந்த பெருமாள் கோயிலில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிப்பதுபோல் கல்லிடைக் குறிச்சி மன்னார் கோயிலில் உள்ள வேதநாராயணர் கோவில் விமானத்திலும், கடையநல்லூர் நீலமணிநாதசுவமி கோயிலிலும் கம்பம் கம்பராயப்பெருமாள் கோயிலிலும் மதுரை சோழவந்தானிலுள்ள பெருமாள் கோவிலிலும் அருள்பாலிக்கிறார்.
திருமந்திரம் 6 ஆம் தந்திரத்தில் 7 ஆவதாக உள்ள “அருளுடைமையின் ஞானம் வருதல்” தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 21-06-2026 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி கிராமத்தில் கிபி 7 அல்லது 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முற்கால பாண்டியர் குடைவரைக் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் வெளிப்பக்கச் சுவரில் செதுக்கப்பட்டுள்ள இலகுலீசர் புடைப்புச் சிற்பம் தமிழகத்திலேயே மிகவும் அரிதான ஆன்மீக மற்றும் வரலாற்றுப் பொக்கிஷமாகக் கருதப்படுகிறது. இலகுலீசர் சிவபெருமானின் 28 ஆவது அவதாரமாகவும் பாசுபத சைவ சமயத்தைத் தோற்றுவித்தவராகவும் வழிபடப்படுகிறார். தலையில் கரண்ட மகுடத்துடனும் மார்பில் பட்டையான யக்ஞோப வீதத்துடனும் லகுலீசர் சிற்ப வடிவில் காட்சி தருகின்றார். இச்சிற்பத்தில் இலகுலீசர் தனது வலக்காலை மடித்தும் இடக்காலை தொங்கவிட்டபடியும் சுகாசன திருகோலத்தில் காட்சியளிக்கிறார். இவரைச் சிவபெருமானின் யோகநிலை வடிவம் என்றும் கூறுவர். வட இந்தியா கோயில்களில் இவரது சிற்பம் வேறு ரூபத்தில் உள்ளது.
இலகுலீசர் கிபி 2 ஆம் நூற்றாண்டு வாக்கில் குஜராத் மாநிலத்தின் காரோஹணம் என்ற ஊரில் பிறந்தவர். பௌத்தமும் சமணமும் விரிவாகப் பரவியிருந்த காலகட்டத்தில் இலிங்க வழிபாட்டைப் புதுப்பித்தவர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு. இலகுலீசர் உருவாக்கிய சைவ சமத்தின் பிரிவு பாசுபத சைவம் என அழைக்கப்படுவது. சிவபெருமானே இலகுலீசராக அவதாரம் செய்தார் என்று ஏகலிங்கி என்ற ஊரில் உள்ள கல்வெட்டு கூறுகிறது. இலகுலீசரின் பாசுபத சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு இலிங்க வழிபாடு தொடங்கப்பட்ட இடங்கள் காரோஹணம் என்றே வழங்கப்பட்டன. தமிழகத்தில் பக்தி இயக்கக் காலத்தில் காரோஹண சைவம் நிலை பெற்றிருந்தது. இறைவனே மானுட வடிவில் இறங்கி வந்து அவதரிப்பது காரோஹணம் என்று பெயர். அதாவது காயமாகிய உடல் எடுத்து கீழே இறங்கி வருதல் என்ற பொருளாகின்றது.
இராமானுஜரின் ஐந்து குருக்களில் திருக்கோட்டியூர் நம்பியும் ஒருவர். இவரிடத்தில் அஷ்டாக்ஷர மந்திரோபதேசம் பெறுவதற்காக 36 முறை அலைந்தார். அத்தனை முறையும் இன்னும் உனக்கு பக்குவம் வரவில்லை என்று இராமானுஜரை திருப்பி அனுப்பி விட்டார் குருவாகிய நம்பி. அதனால் தினமும் தன்னுடைய குருவை சந்திக்க வேண்டும் என்று திருக்கோஷ்டியூரிலேயே தங்கி தினமும் குருவை தரிசித்தார் இராமானுஜர். மார்கழி மாதம் ஒரு நாள் அதிகாலையில் இராமானுஜர் வீதியில் சங்கீர்த்தனம் செய்து கொண்டே தன்னுடைய குருவை பார்க்க சென்று கொண்டிருந்தார். மார்கழி மாதம் என்பதினால் ஒவ்வொரு வீட்டு வாசலில் கோலம் போட்டு அதில் ஒரு பூ வைத்து விளக்கு வைப்பார்கள். இராமானுஜர் குருவின் வீட்டு வாசலில் வந்து நின்றார். அப்போது நம்பியின் வீட்டு வாசலில் அவரது பெண் இருட்டில் கோலம் போட்டு கையில் விளக்குடன் நிற்பதைப் பார்த்ததும் ‘ஆ’ என்று கத்தி மயக்கம் போட்டு விழுந்து விட்டார். அந்தப் பெண் பயந்து வீட்டின் உள்ளே ஓடிச் சென்று நம்பியிடம் நமது வீட்டு வாசலில் ஒருவர் திருப்பாவை பாடிக் கொண்டே வந்து நின்றார். வந்தவர் என்னைப் பார்த்ததும் மயக்கம் போட்டு விழுந்து விட்டார் என்று சொன்னாள். இதனைக் கேட்ட நம்பி அவர் என்ன பாட்டு திருப்பாவையில் பாடிக் கொண்டு வந்தார் என்று கேட்டார். பந்தார் விரலி பாடல் என்றாள்.
பந்தார் விரலி பாடலின் அர்த்தம் என்ன என்றால் கையில் விளக்குடன் அந்த மகாலக்ஷ்மியின் தரிசனம் எனக்குக் கிடைக்கிறது என்று அர்த்தம். அப்போது திருக்கோஷ்டியூர் நம்பி தன் மகளிடம் சொல்கிறார். அவன் மேல் ஒன்றும் குறையில்லை. அந்தப் பாட்டில் மகாலட்சுமி எதிரில் வந்தாய் என்ற வார்த்தையை அவன் பாடும் போது அவன் முன் நீ கையில் விளக்குடன் நின்றிருப்பாய். அந்தப் பாட்டில் அவன் இலயித்து இருந்ததால் உன்னைப் பார்த்ததும் மகாலட்சுமி நிற்பது அவன் கண்களுக்கு தெரிந்திருக்கிறது. ஆகையால் அவன் அப்படியே மயங்கி விழுந்து விட்டான் என்றார்.
இதுபோல் எந்தப் பாட்டு நாம் பாடினாலும் அந்தப் பாட்டில் நம்மை ஐக்கியப்படுத்தி இலயித்துப் பாடும் போதுஅதன் பலன் முழுமையாக இருக்கும். மந்திரங்கள் நாம் ஜெபிக்கும் போதும் மந்திரத்தின் தெய்வத்தை நினைத்துக் கொண்டே தன்னை அதில் ஐக்கியப்படுத்தி ஜெபம் செய்வதினால் அந்த மந்திரத்தின் சித்தி விரைவாக கிடைக்கும்.
திருப்பாவை பாடல் 18
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன் நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய் கந்தம் கமழும் குழலி கடை திறவாய் வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப் பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண் பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
பொருள்: மதம் கொண்ட வலிமையான யானையை தன்னிடத்தே கொண்டனும் போரில் பின்வாங்காத தோள்வலிமை உடையவனுமான நந்தகோபனின் மருமகளே! நப்பின்னை பிராட்டியே! ((நப்பின்னை என்றாள் கண்ணனுக்கு முறைப்பெண் என்று பொருள்) வாசனை சிந்தும் கூந்தலை உடையவளே! உன் வாசல் கதவைத் திற! கோழிகள் கூவும் ஒலி நாலாபுறத்தில் இருந்தும் கேட்கிறது. குருக்கத்திக் கொடியின் மேல் அமர்ந்து குயில்கள் பாடத் துவங்கி விட்டன. பூப்பந்தைப் போன்ற மென்மையான விரல்களைக் கொண்டவளே! உன் கணவனின் புகழ் பாட நாங்கள் வந்துள்ளோம். அளவுமாறாத நீ உனது செந்தாமரை மலர் போன்ற கைகளில் உள்ள வளையல்களின் ஓசைகள் ஒலிக்கும் கைகளால் மகிழ்ச்சியுடன் வந்து கதவைத் திறந்தால் எங்கள் உள்ளம் மகிழ்ச்சியடையும் என்று அழைக்கிறாள் ஆண்டாள்.
விளக்கம்: பெருமாள் கோயிலுக்குப் போனால் நேராக சுவாமி சன்னதிக்கு போகக்கூடாது. தாயாரை முதலில் சேவிக்க வேண்டும். ஏன் என்றால் நமது வீட்டில் அப்பாவிடம் கோரிக்கை வைத்தால் எதற்கடா அதெல்லாம் என்பார். அதையே அம்மாவிடம் சொல்லி அப்பாவிடம் கேட்கச் சொன்னால் அதே கோரிக்கை பத்தே நிமிடத்தில் நிறைவேறி விடும். இதுபோல் தான் நாராயணனிடம் ஒரு கோரிக்கை வைத்தால் அந்த மாயன் அவ்வளவு எளிதில் ஏற்க மாட்டான். அதையே தாயாரிடம் சொல்லி வைத்து விட்டால் அவனால் தப்பவே முடியாது. கண்ணனின் மனைவி நப்பின்னையை (மகாலட்சுமியை) எழுப்பி கண்ணனை எழுப்புகிறார்கள் பாவை நோன்பிருக்கும் பெண்கள்.
இந்த திருப்பாவைப் பாடலை தினமும் இராமானுஜர் இலயித்து பாடியது போல் பாடி பரந்தாமனை வணங்கினால் வாழ்வில் குன்றாத செல்வமும் குறையாத மகிழ்வும் தந்து நம்மை உய்விப்பான் மாலவன்.
ஒரு நாத்திகர் இருந்தார். அவர் ஒரு மக்கள் கூட்டத்தில் பேசும் போது கடவுள் என்ற ஒருவர் கிடையவே கிடையாது என்று கடவுளை அவன் விருப்பத்திற்கு திட்டினான். நான் வேண்டுமானால் சவால் விடுகிறேன். கடவுள் என்று ஒருவர் இருந்தால் இன்னும் 30 நிமிடத்திற்குள் இந்த மேடைக்கு வந்து என்னை கொல்ல வேண்டும். அப்போது நான் கடவுள் இருக்கிறார் என்று ஏற்கிறேன் என்று சொல்லி விட்டு கடிகாரத்தை அவர் முன் இருக்கும் டேபிள் மீது வைத்து அங்கு அமர்ந்து விட்டார். இப்போது இங்கு என்ன நடக்க போகிறது என்று அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 30 நிமிடம் ஆனது. சவால் விட்டவன் சாக இல்லை. அப்போது அங்கு உள்ளவர்களின் மனதில் கடவுளை இவ்வளவு திட்டுகிறான். இவ்வளவு திட்டியும் இவனுக்கு ஒன்றுமே ஆகவில்லையே? கடவுள் என்ற ஒருவர் இல்லையோ என்ற சந்தேகம் வர ஆரம்பித்தது. சிலர் இவன் சொன்னது சரிதான் 5 நிமிடமாகியும் இவன் சாகவே இல்லை. ஆக கடவுள் இல்லை என்று சொன்னார்கள்.
அப்போது அந்த மேடையில் ஒரு ஞானி வந்து மக்கள் முன் பேச ஆரம்பித்தார். இவன் சொன்னதை இவ்வளவு நேரம் கேட்டீர்கள். இப்போது நான் சொல்வதையும் கேட்டு சிந்தித்து முடிவு செய்யுங்கள் என்று ஆரம்பித்தார். உங்களது மகனோ மகளோ உங்களது எதிரில் வந்து என்னை நீ 5 நிமிடத்தில் கொன்றால்தான் நீ எனக்கு தாய் தந்தை. இல்லை என்றால் நீங்கள் எனது தாய் தந்தை இல்லை என்று என்று சொன்னால் நீங்கள் உங்களது தாய் தந்தை உறவை நிருபிக்க உங்களது குழந்தைகளை நீங்கள் கொல்வீர்களா? உங்களது குழந்தைகள் உங்களை தவறாக பேசினால் கூட அவர்களை எப்படி திருத்துவது என்றுதானே சிந்திப்பீர்கள். அவர்களுக்கு நீங்கள் தண்டனை கொடுப்பதில்லை. அதுபோல் இறைவன் என்பவர் நமக்கு உண்மையான தாய் தந்தை. அவர் அன்பின் உருவம். நாம் அவரை தவறாக பேசினால் கூட அவர் நம்மை தண்டிப்பதில்லை. நாம் இறைவன் என்று ஒருவர் இருக்கிறார் என்று அவரை ஏற்றுக் கொள்வதாலோ ஏற்றுக் கொள்ளாமல் போனாலோ அவருக்கு எந்த நஷ்டமும் இல்லை. அவர் தன்னுடைய கடமைகளை சரியாக செய்து கொண்டே இருப்பார். இதனை அறிந்து கொள்வதும் ஆன்மிகமே என்று சொல்லி முடித்தார். மக்கள் மனதில் வந்த சந்தேகம் முழுமையாக அகன்று இறைவன் இருக்கிறார் என்று ஒருமித்த குரலில் சொல்லி அங்கிருந்து கிளம்பினார்கள். நாத்திகரின் மனதிற்குள்ளும் இறைவன் இருக்கிறாரோ என்ற சிந்தனை ஓட ஆரம்பித்தது.
ஒரு சீடன் தன் குருவிடம் ஒரு கேள்வி கேட்டான். குருவே இறைவனை அடைய நல்லதை செய் நல்லதை பார் நல்லதை கேள் என்று சொல்லிக் கொடுக்கிறீர்கள். இந்த உலகில் உள்ள அனைத்தையும் நம்முடைய நன்மைக்காகவே படைத்தார் என்றும் சொல்கிறீர்கள். அப்படி என்றால் நன்மை தீமை இரண்டையும் இறைவன்தான் படைத்திருக்க வேண்டும். இறைவன் படைத்த நல்லதை நாம் ஏற்பது போல் கெட்டதையும் ஏற்றால் என்ன? என்று கேட்டான். அதற்கு குரு சிரித்துக் கொண்டே அது அவரவர் விருப்பம் என்று சொல்லி விட்டு உணவிற்கு பின் பதில் சொல்வதாக சொல்லி அவனையும் அழைத்துச் சென்றார்.
சீடன் தனக்கு அளிக்கப்பட உணவைப் பார்த்து அதிர்ந்து விட்டான். ஒரு கிண்ணத்தில் பாலும் மற்றோரு கிண்ணத்தில் பசு மாட்டு சாணமும் வைக்கப்பட்டு அவனிடம் உண்ணக் கொடுக்கப்பட்டது. சீடன் விழித்தான். குரு புன்முறுவலுடன் அவனிடம் சொன்னார். பால் சாணம் இரண்டுமே பசு மாட்டிடம் இருந்து தானே வருகிறது. பாலை ஏற்றுக் கொள்ளும்போது சாணியை ஏற்றுக் கொள்ளக் கூடாதா? என கேட்டார். சீடன் விழித்தான். குரு தொடர்ந்தார் பால் போன்ற நல்லவை நாம் மகிழ்வாய் வாழ. அதனை அப்படியே ஏற்கலாம். சாணியை விலக்கி மண்ணில் புதைத்து உரமாக்குவது போல் தீயவைகளை விலக்கி புதைத்து அது தரும் பாடத்தை வாழ்விற்கு உரமாக்கி உயரும் வல்லமை கற்க வேண்டும் என்று சீடனுக்கு விளக்கம் அளித்தார்.
கருட வாகனத்தில் பெருமாளை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவியே இல்லை. பெருமாளுக்கு வாகனமாகவும் அவரது கொடியின் சின்னமாகவும் இருப்பவர் கருடாழ்வார். ஆண் வடிவில் மட்டுமே காணப்படும் கருடாழ்வார் ஒரு சில விஷ்ணு ஆலயங்களில் கருடி என்ற பெயரில் பெண் வடிவில் அருள் பாலிக்கிறார். புராணங்கள் நூல்களில் கருடனின் பெண் வடிவம் அல்லது கருடனின் துணைவி கருடீ அல்லது உன்னதி என்று அழைக்கப்படுகிறார். கருட பகவான் சாதாரணமாக இரு பெரிய இறக்கைகளுடன் மனிதனைப் போல வடிவம் கொண்டு வளைந்த மூக்குடன் அழகிய முகத் தோற்றத்தில் பெருமாள் எதிரே நின்ற நிலையில்தான் கோவில்களில் காட்சி தருவார். வாகனமாக திருமாலை எழுந்தருளச் செய்து செல்லும்போது அமர்ந்த நிலையில் காட்சி தருவார்.
திருவாரூரிலிருந்து சுமார் 30 கிமீ தொலைவில் உள்ள மன்னார்குடியில் அமைந்துள்ள இராஜகோபாலசுவாமி கோவிலில் செங்கமலத்தாயார் சன்னிதி அருகே பெருமாள் சன்னிதி எதிரே பெண் வடிவ கருடாழ்வார் காட்சி தருகிறார். இவர் காதணி மூக்கணி மற்றும் புடவை அணிந்த கோலத்தில் மங்களகரமாகக் காட்சி தருகிறார். ஆண் வடிவ கருடன் பெருமாளுக்கு வாகனமாக இருப்பது போல தாயாரின் வாகன சேவைக்கு அடையாளமாக இந்த பெண் வடிவ கருடீ வழிபடப்படுகிறார்.
சிவபெருமானுக்கு எண்ணிலடங்கா வடிவங்களும் பெயர்களும் உள்ளது. அவற்றில் 108 பெயர்கள் அதிகமாக அறியப்பட்டு உள்ளது. அவற்றில் 108 சிவன் பெயர்களும் அதற்கான பொருளும்:
ஆதிகுரு – முதல் குரு
ஆஷுதோஷ் – அனைத்து விருப்பங்களையும் உடனடியாக நிறைவேற்றுபவர்