மகாபாரதம் 5. உத்தியோக பருவம் பகுதி -15

அஸ்தினாபுரத்தின் சபையில் துரியோதனன் பாட்டனாராகிய பீஷ்மரை அணுகி அவர் கௌரவ சேனையின் சேனாதிபதியாக வேண்டும் என்று கேட்டுக்கொண்டான். அதற்கு பீஷ்மர் இயற்கையின் பாங்குகள் அனைத்தையும் உலக மக்கள் எல்லோரும் அவரவருக்கு ஏற்றவாறு பயன்படுத்துகிறார்கள். இயற்கையோ நல்லார்க்கும் பொல்லார்க்கும் பொதுவாக எப்பொழுதும் பயன்பட்டு வருகிறது. இந்த இயற்கை தாயின் போக்கையே நானும் பின்பற்றி வருகிறேன். என்னிடதில் உள்ள பேராற்றல் பேரறிவு ஆகிய அனைத்தையும் எனக்காக நான் எப்பொழுதும் பயன்படுத்தில்லை. என்னிடத்தில் யார் எதைக் கேட்டாலும் அதை நான் தவறாமல் வழங்கிக் கொண்டே இருக்கிறேன். நான் உனக்கு கொடுத்த வாக்குப்படி நடந்து கொள்கின்றேன். என்னுடைய வீரியம் அனைத்தும் உனக்கு சொந்தமாகி விடுகிறது. ஆயிரக்கணக்கான வீரர்களை நான் கொல்வேன். ஆனால் பாண்டவர்களை மட்டும் நான் கொல்லமாட்டேன். நீயும் உன் சகோதரர்களும் என் அன்புக்கு உரியவர்களாக இருப்பது போன்றே பாண்டவர்களும் என் அன்புக்கு உரியவர்களே.

மற்றுமொரு விஷயத்தையும் உன்னுடைய கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். மீண்டும் சொல்கிறேன் நான் யுத்தத்தை ஆமோதிக்கிறவன் அல்ல. உன்னுடைய தோழனாகிய கர்ணன் எப்போதும் எனக்கு உபத்திரத்தை உண்டு பண்ணுபவனாக இருக்கின்றான். நான் சேனாதிபதியாக இருக்கும் சமயத்தில் அவன் போர் புரிவது இல்லை என்று உறுதி கூறி இருக்கின்றார். ஆகையால் அந்த சேனாதிபதி பொறுப்பை நீ முற்றிலும் கர்ணன் வசம் ஒப்படைக்கலாம். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. நான் அவன் சொல்படியே என்னுடைய கடமையை நன்கு நிறைவேற்றுவேன் என்றார். துரியோதனன் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. பீஷ்மரை கௌரவப்படைகளுக்கு தலைமை சேனாதிபதியாக தன் விருப்பப்படியே நியமித்தான். பீஷ்மரின் தலைமையில் கௌரவப்படைகள் போர்களம் செல்ல துவங்கினார்கள்.

கிருஷ்ணனுடைய தமையன் பலராமன் குருஷேத்திரப் போர் களத்திற்கு வந்து பார்த்தான். எண்ணிக்கையில் அடங்காத போர் பட்டாளங்கள் ஒன்றையொன்று அழித்துத் தள்ளக்கூடிய பாங்கில் இருப்பதைப் பார்த்தான். பலராமன் பீமனுக்கும் துரியோதனனுக்கும் கதை யுத்தம் சொல்லிக்கொடுத்தவன். ஆகையால் இருவரையும் அவன் ஒரே பாங்கில் நேசித்தான். பலராமனுடைய விருப்பத்திற்கு மாறாக அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் மாய்த்துக்கொள்ள முடிவு கட்டியிருந்தார்கள். அத்தகைய தன் மனதுக்கு ஒவ்வாத போராட்டத்தை பார்க்க பலராமன் விரும்பவில்லை. ஆகையால் அவன் அவ்விடத்தைவிட்டு தீர்த்த யாத்திரைக்குப் புறப்பட்டுபோனான்.

உத்தியோக பருவம் இந்த பகுதியுடன் முற்றியது. அடுத்து பீஷ்ம பருவம்.

மகாபாரதம் 5. உத்தியோக பருவம் பகுதி -14

கிருஷ்ணரால் தூண்டப் பெற்ற குந்திதேவி கர்ணனை தனியாக சந்தித்து பேசினாள். கர்ணன் அவளுக்கு எப்படி மைந்தன் ஆனான் என்ற உண்மையை விளக்கினாள். கர்ணன் தன்னுடைய சொந்த சகோதரர்களாகிய பாண்டவர்களோடு வந்து சேர்ந்து கொள்ள வேண்டும் என்று தாய் குந்தி கர்ணனை வற்புறுத்தி வேண்டினாள். ஆனால் கர்ணன் அதற்கு சிறிதும் இணங்கவில்லை. கிருஷ்ணரிடம் தெரிவித்த அதே கருத்தை குந்திதேவியிடம் தெரிவித்து எக்காரணத்தை முன்னிட்டும் தான் பூண்டிருந்த தீர்மானத்தில் இருந்து பின்வாங்க ஆயத்தமாக இல்லை என்றும் தெரிவித்தான்.

குந்தி தேவி கிருஷ்ணரின் ஆலோசனையின் படி 2 வரங்களை கர்ணனிடம் கேட்டு வாங்கினாள். அதன்படி கர்ணன் அர்ஜுனனை தவிர மற்ற சகோதரர்கள் 4 பேரையும் எதிர்த்து ஆயுதம் ஏந்தி போர் புரிய கூடாது. கர்ணன் வைத்திருக்கும் நாகாஸ்திரத்தை அர்ஜூனன் மீது ஒரு முறைக்கு மேல் பிரயோகப்படுத்தக்கூடாது என்ற வரத்தை வாங்கினாள். கர்ணன் குந்தி தேவி கேட்ட வரத்தை தர சம்மதித்து ஒரு விண்ணப்பம் வேண்டினான். அதன்படி அர்ஜுனனை கர்ணன் கொல்ல வேண்டும். அல்லது அர்ஜுனனால் கர்ணன் கொல்லப்பட வேண்டும் இரண்டில் ஒன்று நிச்சயம். யுத்தத்திற்கு பிறகு அவன் உயிர் பிழைத்திருந்தால் அவனை தன் தலை மகன் என்று குந்தி பகிரங்கமாக அறிவிக்கலாம். அப்படி அல்லாது போர்க்களத்தில் கர்ணன் இறந்தபிறகு அவன் தலையை குந்திதேவி தனது மடியில் வைத்துக் கொண்டு தன்னுடைய மகன் இவன் என்று உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும். அதுவரையில் அவனைப் பற்றிய மர்மம் யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டும் என்று குந்திதேவிடம் அவன் விண்ணப்பம் வைத்தான். குந்திதேவியும் அதற்கு சம்மதித்து அங்கிருந்து கிளம்பினாள்.

கிருஷ்ணன் உபப்பிளவியாவிற்கு திரும்பிவந்து அஸ்தினாபுரத்தில் நிகழ்வுகளையெல்லாம் மற்றவர்களுக்கு எடுத்து விளக்கினான். யுத்தம் புரிவதைத் தவிர வேறு உபாயம் ஏதும் அவர்கள் கைவசம் இப்போது இல்லை. இனி காலதாமதம் செய்யாமல் அவர்கள் யுத்தத்திற்கு தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டார்கள்.

துருபத மன்னன், அவன் மகன் திருஷ்டத்யும்னன், விராட வேந்தன், சிகண்டி, சாத்யகி, சேகிதானன். பீமன் ஆகியோரை தங்கள் வசமிருந்த ஏழு அக்ஷௌஹினி படைகளுக்கும் சேனாதிபதியாக நியமித்தார்கள். அர்ஜுனனும் கிருஷ்ணனும் ஆலோசித்து திருஷ்டத்யும்னனை அனைவருக்கும் தலையாக சேனாதிபதியாக நியமித்தார்கள். துருபத மன்னனுடைய வீரியமான மகன் திருஷ்டத்யும்னன் ஆவான். அவன் தன்னுடைய சகோதரி திரௌபதியை அர்ஜுனனுக்கு மணமுடித்து கொடுத்தவன். திரௌபதியே கௌரவர்கள் சபை நடுவே வைத்து அவமானப்படுத்தியது பாண்டவர்கள் 13 வருடங்களாக காட்டில் வசித்தது அகியவற்றை அவன் மனதில் வைத்திருந்தான். இதற்கு பழிக்குப்பழி வாங்கும் சந்தர்ப்பம் இப்பொழுது அவனுக்கு வாய்த்தது. பாண்டவர்களின் படைகள் அனைத்திற்கும் திருஷ்டத்யும்னன் தலையாய சேனாதிபதியாக பொறுப்பெடுத்துக் கொண்ட பொழுது வீரர்கள் அனைவரும் ஏகோபித்து கர்ஜித்தனர். சங்க நாதங்கள் முழங்கின. யானைகள் பிளிறின. பாண்டவப் படைகளை ஒருசேர போர்களம் செல்ல துவங்கினார்கள்.

மகாபாரதம் 5. உத்தியோக பருவம் பகுதி -13

கிருஷ்ணரின் சகாயம் பாண்டவர்கள் பக்கம் முழுமையாக இருக்கின்றது என்பது அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிந்தது. இந்த அற்புதத்தை பார்த்த பிறகும் துரியோதனனுக்கு நடக்கப்போகும் விபரீதம் அதன் விளைவுகள் விளங்கவில்லை. போராட்டத்தை தவிர்ப்பதற்கு அத்தனை பேர்களும் எடுத்துக்கொண்ட முயற்சிகள் யாவும் பயனற்றுப் போயின. யுத்தம் நிகழப் போவது உறுதியாயிற்று.

அஸ்தினாபுரத்தை விட்டு புறப்படுவதற்கு முன்பு கிருஷ்ணன் கர்ணனை தனியாக சந்தித்தான். இதுவரை அறியாத கர்ணனின் வரலாற்றை கிருஷ்ணன் கர்ணனுக்கு எடுத்து விளக்கினான். குந்தி தேவி சிறுமியாய் இருந்த பொழுது சூரியனுக்குரிய மந்திரத்தை உச்சரித்து அந்த சக்தியின் விளைவாக முதல் மகனாக கர்ணனை பெற்றெடுத்துவிட்டு மீண்டும் கன்னிகையானாள். ஆகையினால் தர்மசாஸ்திரப்படி அவன் பாண்டுவின் முதல் மகன் ஆகின்றான். குரு வம்சத்து அரசாங்கத்துக்கு அவனே தலைமகன் ஆகின்றான். இவ்வுண்மையை பாண்டவ சகோதரர்கள் அறிந்தால் அவர்கள் மகிழ்வோடு கர்ணனை அரசனாக சிம்மாசனத்தில் அமரச் செய்வார்கள். இவ்வுண்மையை துரியோதனன் அறிந்தால் பாண்டவர்களுடன் ஒன்றுகூடி கர்ணனை அரசனாக்குவான். அதன் விளைவாக இப்பொழுது உருவெடுத்து வருகின்ற பயங்கரமான யுத்தம் தடுக்கப்படும். மகிழ்ச்சிக்கூறிய இந்த செயல்கள் யாவும் இப்போது உன்னிடத்தில் இருக்கின்றன என்று கிருஷ்ணன் விளக்கியதை கர்ணன் முற்றிலும் நம்பினான். ஆயினும் மூன்று முக்கியமான காரணங்களை முன்னிட்டு அவன் தன்னைப் பற்றிய உண்மையை வெளிப்படுத்த ஆகாது என்று கிருஷ்ணனிடம் வேண்டிக்கொண்டான்.

முதலாவதாக தன்னை வளர்த்து வந்த அதிரதன் ராதை தம்பதிகள் கர்ணனை தங்கள் மகன் என்றே கருத வேண்டும். இந்த எண்ணத்திற்கு எந்த இடைஞ்சல்களும் வரக்கூடாது. இரண்டாவது எக்காரணத்தை முன்னிட்டும் தனக்கும் துரியோதனனுக்கும் இடையிலான நட்பு வேறு போக்கில் மாறக்கூடாது. மூன்றாவதாக அர்ஜுனனை கொல்வதாக விரதம் பூண்டிருக்கின்றேன். அப்பொழுது அதனை மாற்றியமைக்க தான் ஆயத்தமாக இல்லை. ஆகையால் யுத்தம் முடிவடையும் வரையில் கர்ணனை பற்றிய வரலாற்றை ரகசியமாகவே வைத்து இருக்க வேண்டும் என்று கிருஷ்ணரிடம் வற்புறுத்தி வேண்டிக்கொண்டான். கர்ணனுடைய சுயநலப் பற்றற்ற பாங்கையும் ஆண்மையையும் கிருஷ்ணன் பெரிதும் பாராட்டினார்.

விதுரரையும் சாத்யகியையும் தன்னோடு அழைத்துக் கொண்டு கிருஷ்ணன் நேராக குந்திதேவியை பார்க்கச் சென்றான். சபையில் நிகழ்ந்தவைகள் அனைத்தையும் தெரிவித்தான். அதற்கு குந்திதேவி தர்மத்தை சார்ந்திருந்த போராட்டம் ஒன்றை நிகழ்த்த வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் மக்களை பெற்றுள்ள பாக்கியம் க்ஷத்திரிய பெண்ணாகிய எனக்கு அமைந்திருக்கிறது. எனவே நான் பாக்கியவதி ஆகின்றேன். இனி வரப்போகும் யுத்தத்தில் அவர்கள் முறையாக ஈடுபட்டு வெற்றி பெறுவார்கள். கிருஷ்ணா என்னுடைய ஆசீர்வாதங்களை தயவு கூர்ந்து என் பிள்ளைகளுக்கு தெரிவிப்பாயாக என்றாள்.

மகாபாரதம் 5. உத்தியோக பருவம் பகுதி -12

அஸ்தினாபுரத்தின் சபா மண்டபத்தில் அனைவரும் துரியோதனனுக்கு புத்திமதி கூறினார்கள். அதற்கு துரியோதனன் இவ்வளவு நாட்கள் நிகழ்ந்த அனைத்திற்கும் நானே பொறுப்பாளி என்றும் குற்றம் முழுவதும் என்னைச் சார்ந்தது என்றும் நீங்கள் அனைவரும் ஒன்றுகூடி எண்ணுவதாக தென்படுகிறது. குரு வம்ச அரசாங்கத்துக்கு நான் ஒருவனே எல்லா விதத்திலும் அசைக்க முடியாத இளவரசன் ஆகின்றேன் எல்லோரும் ஒன்றுகூடி யுதிஷ்டிரனை இளவரசனாக்கியது பெரும் பிழையாகும். அதிர்ஷ்டவசத்தால் யுதிஷ்டிரன் பெற்ற ராஜ்யத்தையும் செல்வத்தையும் பகடை விளையாட்டில் பணயமாக வைத்து விளையாடி இழந்து விட்டான். யுதிஷ்டிரன் இழந்த ராஜ்யத்தை மனமுவந்து நாங்கள் அவனுக்கு திருப்பி கொடுத்து உதவினோம். மற்றுமொருமுறை அவன் அதை பணயமாக வைத்து இழந்தான். இது என்னுடைய குற்றமல்ல. இப்பொழுது பாண்டவர்கள் பாஞ்சால நாட்டு அரசர்களோடு சேர்ந்துகொண்டு குரு வம்சத்து அரசாங்கத்தின் மீது உள்நாட்டு கழகத்தை கிளப்பியிருக்கின்றார்கள். ஆயினும் தற்காப்பு நான் அவர்களைவிட மேம்பட்டவனாகவே இருக்கின்றேன்.

11 அக்ஷௌஹினி படைகள் என் வசம் இருக்கின்றன. பாண்டவர்களிடம் வெறும் 7 அக்ஷௌஹினி படைகளே இருக்கின்றன. யாராலும் வெல்ல முடியாத பீஷ்மர் துரோணர் கிருபர் அஸ்வத்தாமன் கர்ணன் ஆகிய மாபெரும் வீரர்கள் என் பக்கம் இருக்கின்றார்கள். யுத்தத்தில் நான் ஜெயிப்பது உறுதி. ஒருவேளை நான் தோல்வி அடைகின்றேன் என்றே வைத்துக்கொள்வோம் அவ்வாறு நிகழ்ந்தாலும் அதை நான் பொருட்படுத்த மாட்டேன். க்ஷத்திரியனான நான் வெற்றிக்கும் தோல்விக்கும் ஆயத்தமாக இருக்கின்றேன். என்னுடைய வழக்கு நீதிக்கு உட்பட்டது. ஆகையால் பயமுறுத்துதலுக்கு நான் அஞ்சுபவன் அல்ல. யார் நயந்து கேட்பதையும் நான் பொருட்படுத்த மாட்டேன். இந்த ராஜ்யம் முழுவதும் எனக்கு உரியது என்பதை நான் நன்கு அறிகிறேன். ஆகையால் ஒரு ஊசி முனை நிலம் கூட நான் பாண்டவர்களுக்கு கொடுக்கப் போவதில்லை என்று கூறிவிட்டு முதியோர்களை அவமானப்படுத்தும் வகையில் துரியோதனன் சபையிலிருந்து வெளியேறினான்.

கிருஷ்ணனை கைதியாக பிடித்து அடைத்து வைக்க துரியோதனன் தனது கூட்டாளிகளுடன் சதி ஆலோசனை செய்தான். இச்செய்தி சபையோரின் காதுக்கு எட்டியது. அவர்கள் பரபரப்பு மிக அடைந்தனர். கைது செய்ய வந்தவர்களுக்கு கிருஷ்ணன் தன்னுடைய விஸ்வரூபத்தை காட்டினான். அதை பார்த்த சதியாலோசனைக்காரர்கள் திக்குமுக்காடி விட்டார்கள். பார்க்கும் அனைவரும் கிருஷ்ணனாக காட்சி கொடுத்தனர். யாரைப்பிடித்து எங்கே கட்டி வைப்பது என்றே அவர்களுக்கு விளங்கவில்லை. கிருஷ்ணரின் இச்செயலால் ஒரு சிறு நலனும் வடிவெடுத்தது. திருதராஷ்டிரனுக்கு சிறிது நேரம் கண் பார்வைய கிடைத்தது. வந்த பார்வையைக் கொண்டு அவனுக்கு கிருஷ்ணனுடைய தெய்வீக ஆற்றல் ஓரளவு விளங்கியது. வேறு எதையும் பார்ப்பதற்கான கண்பார்வை தனக்கு வாய்க்க வேண்டும் என்று அவர் பிரார்த்தனை பண்ணவில்லை. கிருஷ்ணரை பார்த்தை இன்பத்திலேயே அவர் லயித்திருந்தார்

மகாபாரதம் 5. உத்தியோக பருவம் பகுதி -11

கிருஷ்ணர் மேலும் பேசினார். குருவம்சத்தை சேர்ந்த துரியோதனும் அவனுடைய கூட்டாளிகளும் பாவம் நிறைந்த அதர்மத்தை செய்து வந்திருக்கின்றார்கள். அதற்கு அரசனான தங்களும் ஒருவிதத்தில் உடந்தையாக இருந்திருக்கின்றீர்கள். அத்தகைய ஆடாத பாவச்செயல்களை மன்னிக்கவும் மறக்கவும் யுதிஷ்டிரன் இப்போது ஆயத்தமாய் இருக்கின்றான். இப்பொழுதும் தங்களுக்கு அடிபணிந்து நடந்து கொள்ள அவன் ஆயத்தமாய் இருக்கின்றான். பகடைவிளையாட்டின் முடிவில் அமைத்து வைத்த ஒப்பந்தப்படி அவர்கள் தானாக சம்பாதித்துக் கொண்ட ராஜ்யத்தை அவர்களுக்கு திருப்பித் தந்துவிட வேண்டும் என்பது ஒன்றே அவர்களுடைய வேண்டுகோள் ஆகும் என்று கிருஷ்ணன் சபையில் தெரிவித்தார்.

திருதராஷ்டிரன் பேசினார். இது ஒரு ஓயாத குடும்பத்தகராறு. ஆயினும் இது விரைவில் அமைதியாகவும் பெருந்தன்மையான முடிவுக்கு வர வேண்டும் என்பதே என்னுடைய ஆவல். ஆனால் என் மகன் துரியோதனன் என் சொல்படி கேட்க மறுக்கிறான். அவன் கர்ணன் சகுனியுடம் சேர்ந்து கொண்டு தன் போக்கில் விபரீதமாக நடந்து கொள்கின்றான். கிருஷ்ணா தயவு செய்து நீ தான் அவனை நல்வழியில் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கிருஷ்ணன் துரியோதனிடம் ராஜ குடும்பத்தில் பிறந்தவன் அதற்கேற்றவாறு பெருந்தன்மையோடு நடந்து கொள்வது சரியானது. கீழோன் ஒருவன் கடைபிடிக்கின்றன சிறுநெறிகள் உனக்கு ஒரு பொழுதும் பொருந்தாது. நீசனாக இருப்பவன் பேராசை பிடித்தவனாகின்றான். மற்றும் தயாள குணம் படைத்திருப்பது மன்னனின் மகனாக பிறந்து இருப்பவனுடைய பாங்கு ஆகின்றது. நீ முற்றிலும் மன்னனுடைய மாட்சிமை படைத்தவனாக இருப்பாயாக. பெற்றோர் சொல்லை கேட்பதனால் அறநெறியில் நிலைத்திருப்பவன் ஆகின்றாய். சகோதரர்களோடு நல்லிணக்கம் பூணுவதன் வாயிலாக உன்னுடைய வல்லமையும் மகிமையும் நீ வளர்க்கின்றாய். இதற்கு நேர்மாறாக யுத்தத்தில் இறங்குவாய் என்றால் அதன் விளைவாக குரு வம்சம் முழுவதும் அழிந்து பட்டுப் போகும். வேறு சில பல அரச குடும்பங்களும் அழிந்து போகும் என்று கிருஷ்ணன் துரியோதனிடம் கூறினார்.

கிருஷ்ணன் கொடுத்த அரிதிலும் அரிதான புத்திமதியை பீஷ்மரும் துரோணரும் முற்றிலும் ஆமோதித்தார்கள். தயாளகுணம் படைத்தவனாக துரியோதனன் இருக்கவேண்டுமென்று அவனிடத்தில் அன்போடு அவர்கள் எடுத்துரைத்தார்கள். விபரீதத்தை தவிர்ப்பதற்கு பாண்டவர்களோடு சமாதானம் பண்ணிக் கொள்வது ஒன்றே சரியான உபாயம் என்று எடுத்துரைத்தார்கள். அடுத்தபடியாக இதே விதத்தில் விதுரரும் துரியோதனிடம் முறையாக வேண்டிக்கொண்டார். துரியோதனனுடைய தந்தை திருதராஷ்டிரரும் தாய் காந்தாரியும் பிடிவாதம் பிடித்தவனாக இருக்க வேண்டாம் என்று அவனிடம் கேட்டுக்கொண்டார்கள்.

மகாபாரதம் 5. உத்தியோக பருவம் பகுதி -10

கிருஷ்ணர் கூறியதை கேட்ட துரியோதனன் தன் முயற்சியை நிறுத்திவிடவில்லை. குருவம்சம் முழுவதுக்கும் நீ நடுநிலை வகித்துள்ளாய். அப்படி இருக்க குரு வம்சத்தின் ஒரு பகுதியை வேற்றார் ஆகவும் மற்றொரு பகுதியை உற்றாராகவும் பாகு படுத்திப்பார்ப்பது ஏன் என்று கிருஷ்ணனிடம் துரியோதனன் கேட்டான். அதற்கு கிருஷ்ணன் பாண்டவ சகோதரர்கள் ஒருபொழுதும் தர்மத்திலிருந்து பிசகியவர்கள் அல்லர். அவர்கள் எப்பொழுதும் நேர்மையே வடிவெடுத்து இருக்கின்றார்கள். நீயோ அவர்களுக்கு ஜென்மசத்ரு அவர்களை ஒழித்துக்தள்ள தீர்மானித்திருக்கிறார். நல்லவர்களுக்கு பகைவன் எனக்கும் பகைவன் ஆகிறான். அவர்களை உனக்குச் சொந்தம் என்று நீ அங்கீகரிக்கும் வரையில் நான் உன்னிடத்தில் இருந்து விலகியிருக்க கடமைப்பட்டிருக்கிறேன் என்று கூறிவிட்டு கிருஷ்ணன் விதுரருடைய வீட்டுக்கு திரும்பிச் சென்றான்.

விதுரரும் கிருஷ்ணரும் நிலைமையை ஆலோசனை செய்து கொண்டார்கள். துரியோதனன் செருக்கே வடிவெடுத்து இருக்கின்றான். பிடிவாதக்காரனாக இருக்கின்றான். அவனுடைய சபா மண்டபத்திற்கு போவது சரியானதாக இருக்காது என்று விதுரர் கிருஷ்ணரிடம் தெரிவித்தார். ஆனால் கிருஷ்ணரோ கடைசி நிமிடம் வரையில் சமாதானத்திற்கு முயற்சி பண்ண வேண்டும் என்றும் அதன் விளைவு எதுவானாலும் ஆகட்டும் என்று கூறினார். அடுத்தநாள் துரியோதனனும் சகுனியும் திருதராஷ்டிரரின் பிரதிநிதிகளாக கிருஷ்ணன் இருக்குமிடம் வந்து அவனை சபா மண்டபத்திற்கு அழைத்தார்கள். கிருஷ்ணனும் அவ்வாறே வருவதற்கு சம்மதித்தார். விதுரரும் அவரைப் பின்பற்றிச் சென்றார். அஸ்தினாபுர சபா மண்டபத்தில் கிருஷ்ணன் தக்க மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். முதியோர்கள் அனைவரும் அவர்களுடைய பக்கத்தில் சேர்ந்திருந்த அரசர்கள் எல்லோரும் எழுந்து நின்று கிருஷ்ணருக்கு வணக்கம் செலுத்தினார்கள். ஆரம்பத்தில் நடைபெற வேண்டிய வரவேற்பு முறைமைகள் நிறைவேற்றப்பட்டன.

கிருஷ்ணன் எழுந்து தன் கருத்தை சபையோருக்கு தெரிவித்தார். குருவம்சத்துக்குரிய அரசாங்கம் பலவீணமடைந்த பொழுது தங்களுடைய தம்பியாகிய பாண்டு குருவம்சத்தை பழைய பெருமைக்கு கொண்டு வந்து நிலைநிறுத்தினார். வனத்தில் பாண்டு மன்னன் மடிந்து போன பொழுது அவருடைய பிள்ளைகள் அனாதைகள் போன்று தங்களிடம் வந்து சேர்ந்தார்கள். பெரியப்பாவாகிய உங்களை தங்களுடைய தந்தைக்கு நிகராக கருதி உங்களை அவர்கள் சார்ந்து இருந்தார்கள். ஆரம்பத்தில் தாங்கள் யுதிஷ்டிரனை யுவராஜனாக நியமித்தது முற்றிலும் பொருத்தமாக இருந்தது. அவன் தந்தைக்கு அடிபணிந்து நடப்பது போன்றே தங்களையும் அடிபணிந்து வந்திருக்கின்றான். ஆனால் தாங்கள் அவனுடைய அடக்க ஒடுக்கத்தை தேவைக்கேற்றவாறு பயன்படுத்திக் கொண்டீர்கள். தங்களுடைய தம்பியின் மக்களை எத்தனை எத்தனையோ வகையாக அல்லல்களுக்கு ஆளாக்கினீர்கள். மடிந்து போவதிலிருந்து அவர்கள் தப்பித்துக் கொண்டது தெய்வாதீனமானதாகும். தங்களுடைய மைந்தன் துரியோதனன் வேண்டுமென்றே அவர்களை பலபல ஆபத்துக்களுக்கு ஆளாக்கினான். அவர்கள் தப்பி கொண்டதும் தெய்வாதீனமானதாகும்.

மகாபாரதம் 5. உத்தியோக பருவம் பகுதி -9

பாண்டவர்களும் கிருஷ்ணனும் பேசுவதைக்கேட்ட திரௌபதி கிருஷ்ணனை தனியாக சந்தித்து தேம்பித் தேம்பி அழுதாள். அஸ்தினாபுரத்தில் சபை நடுவே தான் பட்ட அவமானத்தையும் அல்லல்களையும் கிருஷ்ணனுக்கு அவள் ஞாபகம் மூட்டினாள். பரிதாபகரமான காட்சியை பார்த்த கிருஷ்ணன் திரௌபதியிடம் சமாதானத்தை நாடி நான் அஸ்தினாபுரம் போகிறேன். ஆனால் துரியோதனன் அதற்கு சம்மதம் கொடுக்க மாட்டான். போராட்டத்தில் தான் அவன் நம்மை இணைத்து வைக்கப்போகிறான். அதன் விளைவாக உனக்கு நிகழ்ந்த மானபங்கத்துக்கு பொருத்தமான ஈடு வந்து சேரும் என்று கூறினான். கிருஷ்ணன் பேச்சைக் கேட்ட திரௌபதி மன ஆறுதல் அடைந்தாள்.

பாண்டவர்களிடம் விடைபெற்று சாத்யகியை தன்னோடு அழைத்துக்கொண்டு கிருஷ்ணன் அஸ்தினாபுரம் புறப்பட்டுப் போனான். கிருஷ்ணருடைய வருகையைப் பற்றி கேள்விப்பட்ட திருதராஷ்டிர மன்னன் அவனுக்கேற்ற மேன்மைமிக்க வரவேற்பை அளிக்கவேண்டும் என்று ஆணையிட்டான். கிருஷ்ணருடைய மேன்மையை பாராட்டும் விதத்தில் துரியோதனன் ஆங்காங்கு ராஜரீதியான கொட்டைகளையும் வரவேற்பு பந்தல்களையும் அமைத்து வைத்தான். ஆனால் கிருஷ்ணனோ எந்த ஆடம்பர ஏற்பாடுகளையும் கவனிக்காமல் தன் போக்கில் பயணம் சென்றார். அத்தகைய ஆடம்பரங்களுக்கு கிருஷ்ணன் கட்டுப்பட மாட்டான் என்றும் பாண்டவர்களுக்கு கௌரவர்கள் செய்துள்ள பாதங்களுக்கு நிவர்த்தி தேடுவதே கிருஷ்ணனுடைய வருகையின் நோக்கமாக இருக்கிறது. அதைப் புறக்கணித்து விட்டு பண்ணுகின்ற எந்த ஒரு செயலும் கிருஷ்ணனை திருப்திப்படுத்தாது என்று துரியோதனனுக்கு விதுரன் எடுத்து விளக்கினார்.

கிருஷ்ணனை பிடித்து கைதியாக அடைத்து வைத்து விடலாம் என்று துரியோதனன் சதி ஆலோசனை பண்ணினான். ஆனால் முதியவர்கள் அதற்கு சம்மதம் கொடுக்கவில்லை. சமாதானம் பேச வருகின்றவரை இவ்வாறு கையாளுதல் முற்றிலும் பொருத்தமற்றது என்று துரியோதனனின் செயலுக்கு தடை போட்டார்கள். கிருஷ்ணன் அஸ்தினாபுரத்தை வந்தடைந்த பொழுது பொது மக்கள் பலமான வரவேற்பு அளித்தனர். வந்தவன் முதலில் திருதராஷ்டிர மன்னனுடைய மாளிகைக்குப் போய் அவனுக்கு வணக்கம் செலுத்தினர். அடுத்தபடியாக விதுரருடைய வீட்டிற்குச் சென்றான் அங்கு வசித்து வந்த குந்திதேவி கிருஷ்ணரை பார்த்ததும் தாரைதாரையாக கண்ணீர் சிந்தி வரவேற்றாள். வனவாசத்தில் தன் புதல்வர்கள் அனுபவித்த கஷ்ட திசையை அவள் கண்ணீர் சிந்துவதற்கு காரணமாக இருந்தது. அவளுடைய புதல்வர்களுக்கு அதிவிரைவில் நல்ல காலம் வரும் என்றும் தான் எப்போதும் துணை இருப்பதாகவும் கிருஷ்ணன் அவளுக்கு ஆறுதல் அளித்து அங்கிருந்து கிளம்பினான்..

கிருஷ்ணர் துரியோதனன் இருப்பிடத்திற்கு சென்று நலம் விசாரித்தான். துரியோதனன் கிருஷ்ணனை தன் மாளிகைக்கு விருந்துக்கு வரவேண்டும் என்று அழைத்தான். ஆனால் கிருஷ்ணனோ அதற்கு சம்மதம் கொடுக்கவில்லை. தூதனாக வந்த ஒருவன் வந்த காரியம் வெற்றிகரமாக நிறைவேறுவதற்கு முன்பு எதிரிகளிடமிருந்து உணவு ஏற்றுக் கொள்ளல் ஆகாது என்று தெரிவித்தார்.

மகாபாரதம் 5. உத்தியோக பருவம் பகுதி -8

கிருஷ்ணனுடைய உதவியை நாடி அவனை முதலில் சந்தித்தவன் நான். கிருஷ்ணனுடைய உதவியை பெற்றுக்கொள்ளும் உரிமை முதலில் எனக்கே இருந்தது. அப்படி இருக்கும்போது அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் ஒரு சலுகை காட்டினான். கிருஷ்ணன் ஆயுதம் இல்லாத தன்னை ஒற்றை ஆளாக ஒருபக்கமும் தளவாடங்கள் நிரம்பப்பெற்றிருந்த சேனைகள் மற்றொரு பக்கமும் பிரித்து வைத்து பங்கு போட்டான். இரண்டில் ஒன்று விருப்பப்பட்ட பாகத்தை எடுத்துக்கொள்ளலாம் என்று அனுதாபம் காட்டினான். அசடு ஆகிய அவனோ வல்லமை வாய்ந்த சேனையை புறக்கணித்துவிட்டு ஆயுதம் எடுத்து போர் புரிவது இல்லை என்று கூறிய கிருஷ்ணனை தன் பக்கம் சேர்த்துக் கொண்டான். யுத்தத்துக்கு தேவையாக இருக்கின்ற கிருஷ்ணனுடைய சேனையை நான் பெற்றுள்ளேன். இப்பொழுது என் வசம் 11 அக்ஷௌஹினி படைகள் இருக்கின்றன. ஆனால் பாண்டவர்கள் வசம் 6 அக்ஷௌஹினி படைகள் மட்டுமே உள்ளது. ஆகையால் அவர்கள் தோற்றுப் போவார்கள். தோற்று விடுவோம் என்று பாண்டவர்கள் அஞ்சுகிறார்கள் ஆகையால் தான் அவர்களுடைய வாழ்க்கை ஆதாரத்திற்கு வெறும் ஐந்து கிராமங்கள் கிடைத்தால் போதும் என்று அவர்கள் கெஞ்சுகின்றார்கள் என்று துரியோதனன் பேசினான்

திருதராஷ்டிரன் பேசினார். துரியோதனா நீ தாராள மனம் படைத்தவனாக இரு. அவர்களுடைய ராஜ்யம் முழுவதையும் அவர்களிடம் திருப்பி ஒப்படைத்து விடு. நீ இப்படி நடந்து கொள்வது உன்னுடைய பரந்த மனப்பான்மையை வெளிக்காட்டுவதாக இருக்கும். ஒருவரை ஒருவர் நேசிக்கின்ற சகோதரர்களாக நீங்கள் வாழ்ந்திருங்கள். நீங்கள் இவ்வாறு வாழ்வது எனக்கு பெருமையை உண்டு பண்ணும் என்றார். அதற்கு துரியோதனன் தந்தையே அவர்கள் கேட்பது ஐந்து கிராமங்கள். நான் ஐந்து ஊசி முனை அளவு நிலம் கூட அவர்களுக்கு தரப்போவதில்லை. அவர்கள் மீண்டும் வனதிற்கு சென்று தொலைந்து போகட்டும் என்று கூறிவிட்டு அக்கணமே சபையில் இருந்து வெளியேறினான்.

சஞ்சயன் திரும்பிச்சென்ற பிறகு பாண்டவர்கள் இடையே மீண்டும் ஆலோசனை நடந்தது. கௌரவர்கள் அபகரித்துக் கொண்ட ராஜ்யத்தின் எந்த ஒரு பகுதியையும் அவர்கள் திருப்பித் தரப் போவதில்லை என்று யுதிஷ்டிரன் தெரிவித்து விட்டு இந்த நெருக்கடியான நேரத்தில் கிருஷ்ணனுடைய அபிப்பிராயத்தை அவன் நாடி நின்றான். இவ்வளவு நாள் போர்புரிய பொங்கிக்கொண்டிருந்த பீமனுக்கு ஏதேனும் ஒரு போக்கில் சமாதானம் செய்து கொள்வதே நலம் என்னும் சாந்த மனப்பான்மை இப்பொழுது வடிவெடுத்தது. போர் நிகழ்ந்தால் என்னென்ன கேடுகள் எப்படியெல்லாம் அமையக் கூடும் என்பதை அர்ஜுனன் யோசித்தான். சமாதானத்தை நாடி அஸ்தினாபுரத்திற்கு செல்லப்போவதாக கிருஷ்ணன் தெரிவித்தான். அப்படி போவது உயிருக்கு ஆபத்தாக முடியும் என்று யுதிஷ்டிரன் அதற்கு ஆட்சேபம் தெரிவித்தான். ஆனால் கிருஷ்ணனோ தன்னை யாரும் எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது என்று உறுதி கூறினான்.

மகாபாரதம் 5. உத்தியோக பருவம் பகுதி -7

பீஷ்மர் பேசினார். உங்களை நான் தப்பான வழியில் நடத்தலாகாது. நீங்கள் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே இருவரையில் கண்டிருக்கின்றீர்கள். அதுவும் பகடை விளையாட்டில். பாண்டவர்களை வஞ்சித்து பெற்றது மட்டுமே உங்களுடைய வெற்றி. அது ஒன்றே தவிர வேறு எந்த போராட்டத்திலும் நீங்கள் பாண்டவர்களை தோற்கடித்தது கிடையாது. வனத்திலே கந்தர்வர்கள் உங்கள் அனைவரையும் கைதிகளாக பிடித்து கூட்டிக்கொண்டு போனபொழுது வீராதி வீரனாகிய அர்ஜுனன் ஒருவன் தான் உங்கள் உயிரைக் காப்பாற்றினான். அவ்வேளையில் கர்ணன் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக ஓட்டம் பிடித்து தப்பித்துக் கொண்டான். அது தான் உங்களுடைய வீரியம். சில நாட்களுக்கு முன்பு விராட நாட்டின் மீது படையெடுத்துச் சென்ற பொழுது 6 அதிரர்களாகிய நாம் அனைவரையும் அர்ஜுனன் ஒற்றை ஆளாக இருந்து கொண்டு தோற்கடித்தான். அப்படி இருந்தும் உங்களுடைய வீரத்தைப் பற்றி நீங்களே பெருமை பேசிக்கொள்கிறீர்கள். வெற்றி உங்களுடையது என்ற இறுமாப்பில் இருக்கின்றீர்கள் என்று பீஷ்மர் பேசினார்.

கர்ணன் பேசினான். தோல்வி என்பது வரப்போகும் வெற்றிக்கான வழி என்பதை இந்த முதியவர் அறிந்து கொள்ளவில்லை வெவ்வேறு விதமான போர்த் திட்டங்களை தோல்விகள் என்று இவர் பொருள் சேராத வண்ணம் வியாக்கியானம் பண்ணுகிறார். தலைவிதி என்னும் கொள்கையை இவர் உறுதியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார். ஆகையால் இவரோடு சேர்ந்திருந்து நான் போர் புரிய போவதில்லை. வீராதி வீரன் என்று இவர் கூறுகின்ற அர்ஜுனனால் இவர் தோல்வியடையும் வரை நான் ஆயுதம் தொடமாட்டேன். என்றைக்கு நான் ஆயுதத்தை எடுக்கிறானோ அன்றைக்கு அர்ஜுனன் அழிந்து போவது உறுதி. முதுமையால் ஆட்கொள்ளப்பட்டு வெற்றியில் நம்பிக்கை இழந்து இருக்கும் இந்த முதியவரின் கருத்து பிரகாரம் அர்ஜுனனை யாராலும் தோற்கடிக்க முடியாது என்று கூறிவிட்டு பீஷ்மரை எதிர்க்கும் பாங்கில் கர்ணன் சபையை விட்டு வெளியேறினான்.

திருதராஷ்டிரன் பேசினார். நம் குடும்பத் தலைவராகிய பீஷ்மர் கூறுவது முற்றிலும் மெய். போர் வேண்டாம் சமாதானத்தில் ஒன்றுபடுவோம் என்று பெரியவர்கள் அனைவரும் ஏகோபித்து கூறுகின்றனர். அதுதான் சரியான வழி என்று நானும் நம்புகின்றேன். ஆனால் முரட்டு பிடிவாதக்காரர்களாகிய இளைஞர்கள் தம் போக்கிலேயே சென்று கொண்டிருக்கின்றார்கள். நம்முடைய அறிவுரையை அவர்கள் பொருட்படுத்துவது இல்லை என்று திருதராஷ்டிரர் கூறினார்.

துரியோதனன் பேசினான். தந்தையே தயவு செய்து நான் சொல்வதை சிறிது கேளுங்கள். தாங்கள் நினைத்தபடி நான் அவசரக்காரன் இல்லை. இந்த பாண்டவர்களிடத்தில் சிறிதளவாவது க்ஷத்திரிய வீரீயம் இருந்திருந்தால் பகடை விளையாட்டில் நாங்கள் அவர்களை தோற்கடித்து அவமானப்படுத்திய பொழுது எங்கள் மீது அவர்கள் கோபப்பட்டு சீறி எழிந்து சண்டை போட்டிருக்க இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை.

மகாபாரதம் 5. உத்தியோக பருவம் பகுதி -6

சஞ்சயன் கூறியவற்றை கேட்ட திருதராஷ்டிரனின் மனசாட்சி அவனை துன்புறுத்தியது. இரவு முழுவதும் அவனுக்கு தூக்கம் வரவில்லை. விதுரனை வரவழைத்து தனக்கு அமைதி இல்லை என்றும் தனக்கு அமைதி வேண்டும் என்றும் ஏன் இப்படி நடக்கிறது உன்னுடைய புத்திமதி என்ன என்று கேட்டான். அறிஞனாகிய விதுரர் அன்று இரவு முழுவதும் திருதராஷ்டிரனிடம் நீதி நெறிகளை விளக்கினார். தர்மநெறி தவறுபவர்களுக்கு அமைதி கிடைக்காது. கபடமாக பாண்டவர்கள் கொள்ளையடிக்கப்பட்டார்கள். அப்படி இருந்தும் அவர்கள் சௌபாக்கியமாகவே வாழ்ந்து வருகின்றார்கள். தர்மத்திலிருந்து அவர்கள் பிசகாது இருந்ததே அதற்கு காரணமாக இருந்தது. ஆனால் கௌரவர்களுக்கு சொத்து ஏராளமாக இருந்தும் மனஅமைதி இல்லை. அதற்கு அவர்களது அக்கிரமமே காரணமாய் இருக்கிறது என்று இரவு முழுவதும் திருதராஷ்டிரனுக்கு ஏராளமாக தர்மத்தை போதித்து விதுரர் விடைபெற்றார்.

விதுரர் கூறிய அனைத்தையும் கேட்ட திருதராஷ்டிரன் கவலையில் ஆழ்ந்தான். மைந்தான் மகாபாவியாகி விட்டான். தன்னுடைய போக்கை நல்வழிக்கு மாற்றிக்கொள்ள வேண்டும் என்று திருதராஷ்டிரன் இடையிடையே உணர்ந்தான். ஆனால் அவன் உள்ளத்தில் ஊறிக்கிடந்த சிற்றியல்பு அதற்கு இடம் தரவில்லை. மற்றொரு பக்கம் புத்திர வாஞ்சையும் பொல்லாங்கிலேயே அவனை எடுத்துச் சென்றது.

காலையில் சஞ்சயன் கௌரவர்களுடைய சபா மண்டபத்திற்கு வந்து சேர்ந்தான். பாண்டவர்கள் எப்படி சமாதானம் பண்ணிக் கொள்வதற்கு ஆயத்தமாய் இருக்கின்றார்களோ அதே போல் அவர்கள் போர் செய்வதற்கும் ஆயத்தமாக இருக்கிறார்கள் என்று சஞ்சயன் கூறியது கௌரவர்களை விவாதத்தில் இழுத்துச் சென்றது. அப்போது அவர்களுக்கு இடையில் கருத்து வேற்றுமை வளர்ந்தது.

பீஷ்மர் திருதராஷ்டிரனிடம் கூறினார். அர்ஜுனனும் கிருஷ்ணரும் பழங்காலத்து நரன் நாராயணாகிய ரிஷிகள். அவர்கள் இப்பொழுது மனித ரூபத்தில் தோன்றி வந்திருக்கின்றனர். மண்ணுலகத்தில் உள்ள அக்கிரமங்களை ஒழிப்பதற்கும் நேர்மையை நிலைநாட்டுவதற்கும் அவர்கள் வந்திருக்கிறார்கள். போர் புரிய அவர்கள் தீர்மானித்தால் அவருடைய எதிரிகள் அனைவரும் துடைத்துத் தள்ளப்படுவார்கள். ஆகையினால் அவர்களோடு நாம் சமாதானம் பண்ணிக் கொள்வது சரியானதாக இருக்கும் என்று பீஷ்மர் கூறினார். அதைக் கேட்ட கர்ணன் இந்த முதியவர் மிகவும் படுபாவி. இவருடைய உடல் நம்மோடும் அவருடைய உள்ளம் நம்முடைய எதிரிகளிடமும் இருக்கிறது. நம்முடைய எதிரிகளை போற்றுவதும் நம்மை தூற்றுவதும் இவருடைய தொழிலாகும் என்றான் கர்ணன்.