நாராயணபால் விஷ்ணு கோயில்

இந்திராவதி ஆற்றின் மறுகரையில் நாராயணபால் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஒரு புராதனமான அற்புதமான விஷ்ணு கோவில் உள்ளது. கோயில் நிறுவப்பட்ட பின்னர் நாராயண்பூர் என்று பெயரிடப்பட்டது. ஆரம்பத்தில் நாராயணபால் என்று இந்த ஊர் அழைக்கப்பட்டது. சுமார் 70 அடி உயரம் கொண்ட சிவப்புக் கல்லால் ஆன இந்தக் கோயில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 11 ஆம்  நூற்றாண்டில் நாகவன்ஷி வம்சத்தின் ஆட்சியாளர் சிந்தக் நாக்வன்ஷ் மன்னர் ஜகதீஷ் பூஷனால் இக்கோயில் கட்டப்பட்டது.

இக்கோவிலுக்குள் சுமார் 8 அடி உயர கல்வெட்டு உள்ளது. கல்வெட்டுகள் தேவநாகரி எழுத்துக்களில் உள்ளன. இதில் கோயில் கட்டுவதற்கு அருகில் உள்ள கிராம மக்கள் மன்னருக்கு உதவியதாக பொறிக்கப்பட்டுள்ளது. கோயிலில் சிவலிங்கம் சூரியன் சந்திரன் பசு மற்றும் கன்று வடிவமும் செதுக்கப்பட்டுள்ளது.

பண்டரிபுரம் விட்டலன் ருக்மணி தாயார்

கிருஷ்ணர் இங்கு விட்டலர் விதோபர் பாண்டுரங்கன் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். மஹராஷ்டிர மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் பந்தர்ப்பூர் என்று அழைக்கப்படும் பண்டரிபுரம் என்ற நகரத்தில் பாயும் சந்திரபாகா ஆற்றின் கரையில் இக்கோயில் அமைந்துள்ளது

மகாராட்டிராவில் புண்டரீகபுரத்தில் வசித்து வந்த ஜானுதேவர் சத்யவதி தம்பதிக்குப் பிறந்த மகன் புண்டரீகன். பெற்றோரிடம் மிகுந்த மரியாதையும் பக்தியுமாக இருந்தவன். பெற்றோர்க்குச் சேவை செய்யும் புண்டரீகனை ருக்மணிக்கு காட்ட எண்ணிய கிருஷ்ணர் புண்டரீகனின் குடில் வாயிலில் நின்று தண்ணீர் கேட்டான். அங்கு மழை பெய்து சேறும் சகதியுமாக இருந்தது. உள்ளேயிருந்து புண்டரீகன் ஒரு செங்கல்லைத் தூக்கிப் போட்டான். சற்று நேரம் அதன் மேலே நில்லுங்கள். என் பெற்றோருக்கான பணிவிடைகளை முடித்துவிட்டு உங்களைக் கவனிக்கிறேன் என்றான். அதன்படியே தனது பெற்றோர் சேவையை முடித்துக் கொண்டு புண்டரீகன் அவர்களை வரவேற்று தாங்கள் யார் என்று கேட்டான். அப்போது ருக்மிணி வந்திருப்பது கிருஷ்ணன் என்பதைக் கூறினாள்.

புண்டரீகன் பதறினான். மண்ணில் வீழ்ந்து மன்னிப்பு கேட்டான். கிருஷ்ணர் புன்னகைத்து உன் மாதா பிதா சேவையில் மனம் மகிழ்ந்தேன். வேண்டும் வரம் கேள் என்றார். நீங்கள் எழுந்தருளியுள்ள இத்தலமான புண்டரீகபுரம் புண்ணியத் தலமாக விளங்க வேண்டும். பக்தர்கள் அனைவரும் தரிசித்து அருள் பெறும்படியாக நீ இங்கே சாந்நித்தியம் கொள்ள வேண்டும் என்று வேண்டினான் புண்டரீகன். அவ்வாறே கிருஷ்ணன் இத்தலத்தில் செங்கல் மீது நின்று கொண்டு விட்டலராக காட்சி அளிக்கிறார். மராத்திய மொழியில் விட் என்றால் செங்கல் என்று பொருள். செங்கல் மீது நின்று அருளுகின்றபடியால் கிருஷ்ணருக்கு இத்தலத்தில் விட்டலர் எனப்பெயர் உண்டானது.

மாதங்கேஸ்வரர்

கஜூராஹோ கேதார்நாத் வாரணாசி மற்றும் கயா ஆகிய இடங்களில் மாதங்க முனிவரின் ஆசிரமங்கள் அமைந்திருக்கின்றன. இந்த நான்கு தலங்களும் தற்போது நான்கு மாதங்கேஸ்வரர் கோவில்கள் என்று அழைக்கப்படுகின்றன.

மத்திய பிரதேசத்தில் உள்ள கஜூராஹோ நகரில் உள்ளது இந்த கோயில். சிறிய அளவிலான இந்த ஆலயத்தின் உள்ளே அதிக பக்தர்கள் நிற்க முடியாது. வந்த வழியே திரும்பி வருவதும் சிரமம் தான். எனவே ஒரு வழியாக ஏறிச் சென்று மற்றொரு வழியாக இறங்கி வருவதற்கு என்று தனித்தனியாக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆலயத்தில் உள்ள மாதங்கேஸ்வரர் சிவலிங்க வடிவில் பிரமாண்டமாக காட்சி தருகிறார். இந்த லிங்கத்தின் பாணம் 1.1 மீட்டர் விட்டத்துடன் 2.5 மீட்டர் உயரமுள்ளது. லிங்கத்தின் அடிதளம் 1.2 மீட்டர் உயரமும் 7.6 மீட்டர் விட்டமும் கொண்டது. லிங்கத்தில் நாகரி மற்றும் பாரசீக கல்வெட்டுகள் உள்ளன.

இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம் கிபி 900 முதல் 925 ஆம் ஆண்டுக்குள் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. கோயிலின் உட்புறச் சுவர்கள் வெளிப்புறச் சுவர்கள் மற்றும் வளைவு கோபுரம் ஆகியவை எந்த சிற்பங்களின் வடிவமைப்பும் இல்லாமல் காட்சியளிக்கிறது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் சிவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெறும். 1986 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் இந்த கோயில் இடம் பெற்றது.

இடம்: மத்தியப்பிரதேசம் கஜூராஹோ நகர்

சுயம்பு நடராஜர்

கோனேரிராஜபுரம் நடராஜர் தீபாராதனை. புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே இந்த கோவிலில் உள்ள நடராஜரை தரிசிக்க முடியும் என்று அப்பர் பெருமானார் போற்றிப் பாடப்பட்ட சுயம்பு நடராஜர் இவர். இந்த கோயில் வரலாற்றையும் நடராஜரின் வரலாற்றை அறிந்து கொள்ளவும் மேலும் புகைப்படங்களை பார்க்கவும் கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம் கழுகுகள்

கழுகுகள் பூசித்துப் பேறு பெற்ற காரணத்தால் திருக்கழுக்குன்றம் என்று பெயர் ஏற்பட்டது.

பிரம்மனின் எட்டு மானச புத்திரர்கள் சாயுச்சியம் (இறைவனோடு இரண்டறக் கலத்தல்) பதவிக்காக தவம் இருந்தனர். தவத்தின் முடிவில் முடிவில் இறைவன் தோன்றி சாரூபம் (இறைவனின் உருவை ஒத்த நிலையடைதல்) பதவியாக வரம் தந்து இப்பதவியில் சில காலம் இருங்கள் பிறகு சாயுச்சியம் தருகிறோம் என்றார். அதை ஏற்க மறுத்து இறைவனோடு வாதம் செய்த புத்திரர்களை கழுகுருவம் அடைக என்று சாபமிட்டார். எனவே நான்கு யுகத்திற்கு இருவர் என கழுகுகளாக இங்கு வரும் அவர்கள் சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் உண்டு செல்வர். கழுகுகளுக்கு உணவு கொடுக்கும் செயல் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வருகிறது. முதல் யுகத்தில் சாபம் பெற்ற சண்டன் பிரசண்டன் என்னும் கழுகுகளும் இரண்டாம் யுகத்தில் சம்பாதி ஜடாயு என்னும் கழுகுகளும் மூன்றாம் யுகத்தில் சம்புகுத்தன் மாகுத்தன் என்னும் கழுகுகளும் நான்காம் யுகத்தில் சம்பு ஆதி என்னும் கழுகுகளும் முறையே வழிபட்டுப் பேறு பெற்றன. இறைவனின் வரத்திற்கு சாரூபம் (இறைவனின் உருவை ஒத்த நிலையடைதல்) ஏற்ப இந்த கழுகுகள் இறைவனாகவே பக்தர்களால் வழிபடப்பட்டன.

கழுகுகள் இராமேஸ்வரத்தில் குளித்து கழுக்குன்றத்தில் உணவு சாப்பிட்டு காசியில் அடைக்கலம் ஆவதாக ஐதீகம். 500 அடி உயரமுள்ள இம்மலையில் நாள் தோறும் உச்சிப்பொழுதில் கழுகு வந்து உணவு பெற்றுச் செல்லுவதால் இதற்கு பட்சி தீர்த்தம் என்றும் திருக்கழுக்குன்றம் என்றும் பெயராயிற்று. சில வருடங்கள் முன்பு வரை இக்கழுகுகள் மதியம் வந்து உணவு சாப்பிட்டு சென்று கொண்டிருந்தது. தற்போது வருவதில்லை. இடம்: வேதகிரீஸ்வரர் கோவில் திருக்கழுக்குன்றம் செங்கல்பட்டு மாவட்டம்.

ஆனேகுடே விநாயக கோவில்

அனேகுடே என்பது இந்தியாவின் உடுப்பி மாவட்டத்தில் குந்தபுரா தாலுக்காவில் உள்ள ஒரு கிராமம். இந்த கிராமம் கும்பாசி என்றும் அழைக்கப்படுகிறது. இது உடுப்பியில் இருந்து குந்தாபுரா நோக்கி செல்லும் வழியில் அமைந்துள்ளது. கும்பாசி என்ற பெயர் இங்கு கொல்லப்பட்ட கும்பாசுரனிடமிருந்து வந்ததாக வரலாறு உள்ளது. உடுப்பி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான விநாயகர் கோயில்களில் இக்கோயிலும் ஒன்று. ஆனேகுடே கடலோர கர்நாடகாவில் உள்ள ஏழு முக்தி ஸ்தலங்களில் (பரசுராம க்ஷேத்திரம்) ஒன்றாகும்.

முன் காலத்தில் இந்த பகுதி வறட்சியால் பாதிக்கப்பட்ட போது ​​​​அகஸ்திய முனிவர் பல முனிவர்களுடன் மழைக் கடவுள் வருணனை மகிழ்விக்க யாகம் செய்ய இங்கு வந்தார். அந்த நேரத்தில் கும்பாசுரன் என்ற அரக்கன் யாகம் செய்யும் முனிவர்களை தொந்தரவு செய்து யாகத்தை சீர்குலைக்க முயன்றான். முனிவர்கள் வன வாசத்தில் இருந்த பாண்டவர்களிடம் யாகத்திற்கு இடையூறு ஏதும் ஏற்படாதவாறு காக்குமாறு பாண்டவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். யாகத்திற்கு இடையூறு ஏதும் வராதவாறு காக்கிறோம் என்று பீமன் முன் வந்தான். வினாயகர் பீமனுக்கு வாள் கொட்டுத்து ஆசிர்வதித்தார். அந்த வாளைப் பயன்படுத்தி பீமன் அரக்கனைக் கொன்று யாகத்தை முடிக்க உதவினார். அரக்கன் இரந்த அந்த இடத்திற்கு இதற்கு கும்பாசி என்று பெயர் வந்தது. யானைத் தலை கடவுளான விநாயகத்தின் இருப்பிடமாக இருப்பதால் ஆனே (யானை) மற்றும் குட்டே (குன்று) என்பதிலிருந்து ஆனேகுடே என்ற பெயர் வந்தது.

இங்கு வினாயகர் சித்தி விநாயகா என்றும் சர்வ சித்தி பிரதாயகர் என்றும் அழைக்கப்படுகிறார். ஒவ்வொரு மாதத்தின் சதுர்த்தி நாள் அன்று கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

இடகுஞ்சி வினாயகர்

உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள ஹொன்னாவாரா தாலுக்காவில் உள்ள ஒரு சிறிய இடம் இடகுஞ்சி ஆகும். இங்கு இடகுஞ்சி கணபதி ஆலயம் உள்ளது. இடகுஞ்சி இடத்தின் முக்கியத்துவம் கந்தபுராணத்தின் சஹ்யாத்ரி காண்டில் குறிப்பிடப் பட்டுள்ளது. இடா என்றால் இடதுபுறம் குஞ்ச் என்றால் தோட்டம். சராவதி ஆற்றின் இடது கரையில் அமைந்திருப்பதால் இந்த இடத்திற்கு இடகுஞ்சி என்ற பெயர் வந்தது. இடகுஞ்சி கணபதி கோயில் 1500 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு பழமையான கோயிலாகும். கோவில் சற்றே பெரியது. வினாயகர் சிலை கருங்கல்லாலானது. விநாயகர் சிலை நின்ற கோலத்தில் இரண்டு கைகளுடன் மிகக் குட்டையான கால்களுடன் தரையில் தாழ்வுடன் ஒரு கல் பலகையில் நிற்கிறார். ஒரு கையில் மோதகத்தையும் மற்றோரு கையில் பத்மத்தையும் (தாமரை பிடித்துள்ளார். மார்பின் குறுக்கே ஒரு மாலையை அணிந்துள்ளார். சிறிய மணிகளால் ஆன மாலையால் அலங்கரிக்கப்பட்டுள்ளார்.

துவாபர யுகத்தின் முடிவில் கடவுள் கிருஷ்ணர் தனது தெய்வீக வசிப்பிடத்திற்கு செல்ல பூமியை விட்டு வெளியேற நேரம் வந்து விட்டதாக எண்ணினார். கிருஷ்ணரும் பூமியை விட்டு செல்வதால் கலியுகத்தின் வருகையை கண்டு அனைவரும் பயந்தனர். கர்நாடகாவின் சராவதி நதிக்கரையில் உள்ள குஞ்சவனம் என்ற வனப் பகுதியில் வாலகில்ய முனிவர் கலியுகத்தின் அனைத்து தடைகளையும் சமாளிக்க கிருஷ்ணரின் உதவியை நாடி யாகங்கள் பிரார்த்தனைகள் மற்றும் வழிபாடுகளை செய்யத் தொடங்கினார். இந்த நேரத்தில் அவர் யாகம் செய்வதில் பல இடையூறுகளைச் சந்தித்து மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார். எனவே அவர் நாரத முனிவரின் ஆலோசனையை நாடினார். யாகத்தை மீண்டும் தொடங்கும் முன் தடைகளை நீக்கும் விநாயகரின் ஆசீர்வாதத்தைப் பெறுமாறு நாரதர் வாலகில்யருக்கு அறிவுறுத்தினார்.

வாலகில்ய முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க நாரதரும் மற்ற முனிவர்களும் சேர்ந்து தேவதீர்த்தம் என்ற புதிய குளத்தை உருவாக்கினர்கள். நாரதர் விநாயகரின் அன்னை பார்வதியிடம் விநாயகரை அனுப்ப வேண்டும் என்று வேண்டினார். அர்ச்சனைகள் செய்யப்பட்டு விநாயகப் பெருமானைப் போற்றும் பாடல்கள் பாடப்பட்டன. அவர்களின் பக்தியால் மகிழ்ந்த விநாயகர் எந்த பிரச்சனையும் இல்லாமல் யாகங்களை நடத்த அவர்களுக்கு உதவ அந்த இடத்தில் இருக்க சம்மதித்தார். இந்த சந்தர்ப்பத்தில் மேலும் ஒரு ஏரி உருவாக்கப்பட்டு கோவிலுக்கு தண்ணீர் வர விநாயகர் தீர்த்தம் என்று பெயரிடப்பட்டது. அதே இடம் இப்போது இடகுஞ்சி என்று அறியப்படுகிறது அங்கு விநாயகர் கோயில் கிபி 4-5 ஆம் நூற்றாண்டுகளில் பக்தர்களால் கட்டப்பட்டது.

பாபநாசநாதர் திருக்கோயில் 1

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சந்தனச் சோலைகளும் மூலிகைகளும் நிறைந்த பொதிகை மலை உச்சியில் தாமிரபரணி உற்பத்தியாகி பாய்ந்து வரும் தாமிரபரணி ஆற்றங்கரையில் இக்கோயில் அமையப் பெற்றுள்ளது. மூலவர் பாபநாசநாதர். லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். அம்மாள் உலகம்மை விமலை உலகநாயகி. சுவாமி சன்னதிக்கு வடக்கில் உலகம்மை சன்னதி மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையில் அம்மை அழகே உருவாக வலது கையில் மலர்ச் செண்டுடனும் இடது கையைத் தொங்க விட்டும் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறாள். இடம் பாபநாசம் திருநெல்வேலி. புராண பெயர் இந்திரகீழ சேத்திரம். தலவிருட்சம் முக்கிளா மரம். தீர்த்தங்கள் தாமிரபரணி வேத தீர்த்தம் பைரவ தீர்த்தம் கல்யாண தீர்த்தம்.

அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். சிவனுக்கு பூஜை செய்த தாமரை மலர்களை தாமிரபரணியில் வீசும்படியும் அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார். அதன்படி உரோமசர் தாமரை மலர்களை நீரில் விட 9 பூக்கள் பல இடங்களில் கரை ஒதுங்கின. இந்த இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் உரோமசர். இவை நவ கைலாய தலங்கள் எனப்பட்டன. நவக்கிரகங்கள் ஒன்பது என்பதால் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டது. 1. பாபநாசம் 2. சேரன்மாதேவி 3. கோடகநல்லூர் 4. செங்காணி 5. முறப்பநாடு 6. ஸ்ரீவைகுண்டம் 7. தெந்திப்பேரை 8. ராஜாதிபதி 9. சேந்தபூமங்களும் ஆகிய கோயில்கள் நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுகிறது. நவ கைலாயம் என்று அழைக்கப்படும் கோவில்களில் முதன்மையான இக்கோயில் முதல் கிரகமான சூரியனுக்கு உரியது. சூரிய தலம் என்றும் சூரிய கைலாயம் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது.

அம்பாளின் 51 சக்தி பீடங்களில் இக்கோயில் விமலை சக்தி பீடம் ஆகும். கோயிலின் அனைத்துக் கருவறைகளயும் உள்ளடக்கியவாறு கோயிலைச் சுற்றிக் கருங்கல் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. நுழைவாயில் கோபுரம் ஏழு அடுக்குகள் கொண்டதாகும். கருவறையின் வெளிச்சுவற்றில் விநாயகர் சுப்பிரமணியர் தட்சிணாமூர்த்தி துர்க்கை நவகோள்கள் ஆகியோரின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொடிமரத்தை அடுத்துள்ள சிறுகோயிலில் யாளிகளைமைந்த தூண்களைக் கொண்ட மண்டபத்தில் நடராசர் உள்ளார். இங்கு ஆனந்த தாண்டவ கோலத்தில் காணப்படும் நடராசர் புனுகு சபாபதி என அழைக்கப்படுகிறார். இக்கோயில் குளம் பாபநாச தீர்த்தம் எனப்படுகிறது. மேலும் அகத்திய தீர்த்தமும் கல்யாணி தீர்த்தமும் இக்கோயிலைச் சேர்ந்தவையாகும். அகத்தியர் லோபாமுத்ரையுடன் அருள் பாலிக்கிறார்.

அசுர குருவான சுக்ராச்சாரியாரின் மகன் துவஷ்டா என்பவனை குருவாக ஏற்றான் இந்திரன். ஒரு சமயம் துவஷ்டா அசுரர்களின் நலனுக்காக யாகம் ஒன்றை நடத்தினார். இதனை அறிந்த இந்திரன் அவரை கொன்று விட்டான். இதனால் அவனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. பூலோகத்தில் பல தலங்களுக்கும் சென்று சிவனை வழிபட்டு விமோசனம் தேடினான். வியாழ பகவான் இந்திரனிடம் இத்தலத்தில் உள்ள சுவாமியை வணங்கினால் தோஷம் நீங்கும் என்றார். அதன்படி இந்திரன் இத்தலத்தின் எல்லைக்கு வந்தபோதே பாவம் நீங்கப்பெற்றான். இந்திரனின் பாவத்தை நீக்கிய சிவன் என்பதால் இவர் பாபநாசநாதர் என்று பெயர் பெற்றார்.

முற்காலத்தில் விக்கிரமசிங்கபுரத்தில் நமசிவாயக் கவிராயர் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் உலகம்மை மீது அளவு கடந்த பக்தியும் அன்பும் கொண்டிருந்தார். இவர் தினந்தோறும் பாவநாசம் திருக்கோயிலுக்குச் சென்று அர்த்தசாம வழிபாட்டில் அம்பிகையை தரிசித்துவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒரு நாள் இவர் இங்கு தரிசனம் முடித்துவிட்டு அம்மையின் மீது பாடல்களைப் பாடிகொண்டு நடந்தபடியே வீடு திரும்பிக் கொண்டிருந்தார். உலகம்மை கவிராயரின் பாடல்களைக் கேட்டவாறே அவருக்குத் தெரியாமல் பின்தொடர்ந்து வந்தாள். கவிராயர் தரித்திருந்த தாம்பூலத்தின் எச்சிலை அவர் உமிழ்ந்து கொண்டே பாடி வர அந்த உமிழ்ந்த எச்சில் பின் தொடர்ந்து வந்த அம்மையின் மீது பட்டுவிட்டது. அக்கோலத்துடனேயே அம்பிகையும் கோயிலுக்கு எழுந்தருளினாள். மறுநாள் காலை கோவிலுக்கு வந்த அர்ச்சகர் அம்மையின் வெண்ணிற ஆடை முழுவதும் படிந்திருந்த தாம்பூல எச்சில் திவலைகளைக் கண்டு மனம் பதறி மன்னனிடம் முறையிட்டார். மன்னனும் திருக்கோவில் வந்து பார்வையிட்டு அதற்குரிய பிராயச்சித்த பூஜைகள் செய்ய உத்தரவிட்டார். இப்பாதகச் செயலைச் செய்தவரை கண்டுபிடிக்க உத்தரவு பிறப்பித்தார்.

நமச்சிவக்கவிராயர் தாம்பூலம் தரிக்கும் பழக்கமுடையவர் ஆகவே அவர் மீது சந்தேகம் கொண்டு அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள் அரண்மனை வீரர்கள். அன்றிரவு மன்னன் கனவில் அம்மை தோன்றி நடந்த விவரங்களை கூறினாள். இதனால் திகைத்து விழித்தெழுந்த மன்னன் மறுநாள் காலை நமச்சிவாயக்கவிராயரை அழைத்து வரச்செய்து அவருடைய பக்தியை உலகறியச் செய்ய எண்ணி அம்மையின் கரத்தில் பூச்செண்டு ஒன்றை வைத்து பொன் கம்பிகளால் கட்டிவைத்து கவிராயரின் பக்தி உண்மையென்றால் அவர் பாடும் பாடல்களுக்கு இசைந்து அப்பூச்செண்டு கவிராயரின் கைகளுக்கு தானே வர வேண்டும் என கேட்டுக் கொண்டார். உடனே நமச்சிவாய கவிராயரும் அம்மை மீது அந்தாதி பாடல்களை பாடினார். அப்படி அவர் பாடிய ஒவ்வொரு பாடலின் முடிவிலும் அம்மையின் கரத்தில் கட்டப்பட்டிருந்த பொன் கம்பிகள் ஒவ்வொரு சுற்றாக அறுந்து கவிராயரின் பெருமையை வெளிப்படுத்தியது. இறுதியாக கவிராயர் பாடலை பாடி முடிக்கவும் அம்மையின் கரங்களில் இருந்த பூச்செண்டு கவிராயர் கைக்கு தானாக வந்தது. இதனைக் கண்ட மன்னனும் கவிராயரின் பக்தியை மெச்சி அவரை விடுதலை செய்து அவரிடம் மன்னிப்பு கோரினான். இதன் மூலம் நமச்சுவாயக் கவிராயரின் புகழை அம்மை உலகறியச்செய்தாள்.

இத்தலத்து லிங்கத்திற்கு முக்கிளா லிங்கம் என்ற பெயரும் உண்டு. கருவறையில் ருத்ராட்ச வடிவிலும் பிரகாரத்தில் முக்கிளா மரத்தின் கீழும் பாபநாசர் இருக்கிறார். ரிக் யஜுர் சாமம் ஆகிய மூன்று வேதங்களே கிளா மரமாக மாறி இறைவனுக்கு நிழல் தந்தும் அதர்வண வேதம் ஆகாயமாக இருந்தும் இவரை வழிபட்டது. எனவே சிவனுக்கு இப்பெயர் வந்தது. அம்பாள் உலகம்மை சன்னதி முன்பு ஒரு உரல் இருக்கிறது. இதில் பெண்கள் விரளி மஞ்சளை இட்டு அதனை இடித்து இம்மஞ்சளாலேயே அம்பாளுக்கு அபிஷேகங்கள் நடக்கிறது. வியாக்ரபாதர் பதஞ்சலி ஆகியோருக்கு ஒரு தைப்பூசத்தன்று நடராஜர் நந்தியின் கொம்புகளுக்கு இடையே நின்று நடன தரிசனம் தந்தார். எனவே இங்கு தைப்பூசத்தில் நந்திக்கு சந்தனக்காப்பு செய்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இத்தலத்தில் இறைவன் இறைவியுடன் திருமணக் கோலத்தில் அகத்தியருக்கு காட்சியளித்தார். இக்கோயிலுக்கு அருகிலுள்ள அருவி அகத்தியர் அருவி என அழைக்கப்படுகிறது

பொதிகை மலையில் உருவாகி மலைகளில் விழுந்து வரும் தாமிரபரணி நதி இக்கோயிலுக்கு அருகேதான் சம நிலையடைகிறது. தினமும் உச்சிக்கால பூஜையின் போது தாமிரபரணி நதியில் மீன்களுக்கு நைவேத்திய உணவுகளைப் படைத்து பூஜைகள் செய்யப்படுகிறது. சாளுக்கிய பாண்டியர்களால் கட்டப்பட்ட இக்கோயில் பின்னர் 16ஆம் நூற்றாண்டில் விஜயநகர அரசர்களாலும் நாயக்கர் அரசர்களாலும் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நாயக்கர் காலக் கலைப்பாணியிலான சிற்பங்கள் இக்கோயிலில் காணப்படுகின்றன. மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆண்ட சந்திரகுல பாண்டியன் என்ற பாண்டிய அரசனால் இக்கோயிலின் நடுக் கோயிலும் விமானமும் கட்டப்பட்டது. மதுரை நாயக்க வம்சத்தைச் சேர்ந்த வீரப்ப நாயக்கரால் கிபி1609-23 யாகசாலை கொடிமரம் நடராசர் மண்டபம் கட்டப்பட்டன.

அம்மநாதர் திருக்கோயில் 2

மூலவர் அம்மநாதர் அம்மையப்பர். கிழக்கு நோக்கி லிங்க வடிவில் சந்திர அம்சத்துடன் அருள்பாலிக்கிறார். அம்பாள் ஆவுடைநாயகி ஆவுடையம்மன் கோமதியம்பாள். கிழக்கு நோக்கிய தனி கருவறையில் ஆவுடையம்மை ஒரு கரத்தில் மலர் ஏந்தியும் மறு கையைக் கீழே தொங்கவிட்ட படியும் நின்ற கோலத்தில் புன்சிரிப்புடன் காட்சித் தருகிறாள். தல விருட்சம் பலாமரம் ஆலமரம். தீர்த்தம் தாமிரபரணி வியாச தீர்த்த கட்டம். இடம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மகாதேவி.

கோயிலுக்கு தெற்கு நோக்கியும் கிழக்கு நோக்கியும் இரண்டு வாசல்கள் உள்ளன. ஐந்து நிலை ராஜகோபுரம். பிரகாரத்தில் ஒரே கல்லில் செய்யப்பட்ட நடராஜருடன் சிவகாமி அம்மை காரைக்கால் அம்மை ஆகியோர் உள்ளார்கள். நாய் வாகனம் இல்லாத பைரவர் இருக்கின்றனர். நவக்கிரக சன்னதி கிடையாது. சந்திரன் நுழைவு வாசலின் வலப்புறத்தில் இருக்கிறார். மகாவிஷ்ணு காசி விஸ்வநாதர் விசாலாட்சி சுப்பிரமணியர் கஜலட்சுமி சனீஸ்வரர் நவகன்னிகள் ஆகியோரும் இருக்கின்றனர். இத்தலம் நவகைலாயங்களில் ஒன்று. இக்கோயிலை நந்தனார் தரிசித்திருக்க வேண்டும். இவரது சிற்பம் கொடிமரத்திற்கு கீழேயுள்ள பீடத்தில் இருக்கிறது. இவர் இங்கிருந்து சுவாமியை வணங்கியபடி இருக்க நந்தி சற்று விலகியிருக்கிறது. தற்போதும் கொடிமரம் அருகில் நின்று விலகிய நந்தி அருகில் நின்று சிவனை தரிசிக்கலாம். இக்கோயிலை கட்டிய சகோதரிகள் நெல் குத்தி அரிசி புடைக்கும் சிற்பம் முன்மண்டபத்திலுள்ள ஒரு தூணில் இருக்கிறது. அருகில் மற்றொரு தூணில் லிங்க பூஜை செய்யும் உரோமசர் உள்ளார். இத்திருக்கோயிலுக்கு அருகே யாக தீர்த்தம் உள்ளது. இங்கு தான் உரோமச முனிவருக்கு இறைவன் பக்தவச்சலராக காட்சியளித்தார். அங்கு தற்போது பக்தவச்சலார் கோவில் உள்ளது. அம்மநாதர் கோவிலுக்கும் யாக தீர்த்தத்திற்கும் இடையே ரணவிமோசன பாறை ஒன்று உள்ளது. இங்கு தொடர்ந்து 41 நாட்கள் விடாமல் ஸ்நானம் செய்தால் தீராத நோய்களும் தீரும். இத்தலத்தில் மார்கழி மாதத்தில் திருவிழா நடக்கும். இந்த திருவிழா அன்று அனைத்து நதிகளும் மூன்று நாட்கள் இந்தப் பகுதியில் சங்கமிக்கும் என்பது புராண வரலாறு.

அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். சிவனுக்கு பூஜை செய்த தாமரை மலர்களை தாமிரபரணியில் வீசும்படியும் அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார். அதன்படி உரோமசர் தாமரை மலர்களை நீரில் விட 9 பூக்கள் பல இடங்களில் கரை ஒதுங்கின. இந்த இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் உரோமசர். இவை நவ கைலாய தலங்கள் எனப்பட்டன. நவக்கிரகங்கள் ஒன்பது என்பதால் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டது. 1. பாபநாசம் 2. சேரன்மாதேவி 3. கோடகநல்லூர் 4. செங்காணி 5. முறப்பநாடு 6. ஸ்ரீவைகுண்டம் 7. தெந்திப்பேரை 8. ராஜாதிபதி 9. சேந்தபூமங்களும் ஆகிய கோயில்கள் நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுகிறது. நவ கைலாயம் என்று அழைக்கப்படும் கோவில்களில் இரண்டாவதான இக்கோயில் 2 ஆவதாக உள்ள கிரகமான சந்திரனுக்கு உரியது. சந்திர தலம் என்றும் சந்திர கைலாயம் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது.

இங்கு உரோமசர் லிங்க பிரதிஷ்டை செய்து சிவனை வழிபட்டார். பிற்காலத்தில் அந்த லிங்கம் ஒரு அரச மரத்தின் கீழ் இருந்தது. இப்பகுதியில் வசித்த சகோதரிகளான சிவபக்தைகள் இருவர் நெல் குத்தி அரிசி வியாபாரம் செய்து வந்தனர். தினமும் இத்தல லிங்கத்திற்கு பூஜை செய்து வணங்கிய பின்பே தங்கள் வேலையை துவங்குவார்கள். வெகுநாளாக இந்த லிங்கம் கோயிலில் இல்லாமல் மரத்தடியில் யாராலும் கவனிக்கப்படாமலேயே இருக்கிறதே என்று எண்ணினார்கள். எனவே சிவனுக்கு கோயில் கட்ட நினைத்தார்கள். ஏழைகளான அவர்களிடம் கோயில் கட்டுமளவிற்கு பணம் இல்லை. அவர்கள் தங்களது உழைப்பின்மூலம் கிடைக்கும் பணத்தை சிறுகச் சிறுக சேர்த்து வைத்தனர். அவர்களது பக்தியில் மகிழ்ந்த சிவன் அடியார் வடிவில் அப்பெண்களின் வீட்டிற்கு சென்றார். அவரை வரவேற்ற சகோதரிகள் உபசரித்து உணவு பரிமாறினர். அப்போது வீட்டில் விளக்கு எரியவில்லை. அதை சுட்டிக் காட்டிய அவர் விளக்கு எரியாத வீட்டில் எவ்வாறு பிரகாசம் இருப்பதில்லையோ அதைப் போலவே மங்களமும் இருப்பதில்லை. எனவே மங்களம் இல்லாத இவ்வீட்டில் நான் சாப்பிட மாட்டேன் என்று எழுந்தார். பதறிப் போன சகோதரிகள் அவசரத்தில் தேடிய போது விளக்கை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே சமையலுக்கு வைத்திருந்த தேங்காயை உடைத்து அதில் நெய்விட்டு விளக்கேற்றினர். மகிழ்ந்த சிவனடியார் சாப்பிட்டுவிட்டு சுய ரூபத்தில் காட்சி தந்தார். சகோதரிகள் சிவனை வணங்கினர். அதன்பின்பு அவர்களது இல்லத்தில் செல்வம் பெருகியது. அதைக் கொண்டு இங்கு கோயில் எழுப்பினார்கள்.

ராஜ ராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் கோவிலைக் கட்டியதாக கல்வெட்டுக்கள் உள்ளது. இத்திருக் கோயிலில் பாண்டியர்கள் கால கல்வெட்டுகளும் உள்ளது. மகாதேவி என்பது சேர மன்னன் மகளின் பெயர் ஆகும். சேர மன்னர் தன் மகளின் பெயரை இந்த ஊருக்கு சூட்டினார் என்றும் அதன் பின்னரே இந்த ஊருக்கு சேரன்மகாதேவி மங்கலம் என்ற பெயர் வந்தது என்று கோயிலில் உள்ள கல்வெட்டுக்களில் காணப்படுகிறது.

கைலாசநாதர் திருக்கோயில் 3

மூலவர் கைலாசநாதர். கிழக்கு நோக்கி லிங்க வடிவில் காட்சி தருகிறார். அம்பாள் சிவகாமி தெற்கு நோக்கிய தனி கருவறையில் நின்ற கோலத்தில் ஒரு கையில் மலர் ஏந்தியும் மறு கையை கீழே தொங்கவிட்ட படியும் இடை நெளித்தும் அழகிய புன்சிரிப்புடனும் காட்சித் தருகிறாள். நாகத்தின் கீழ் ஆனந்த கௌரி அம்மன் தனியாக அருள்பாலிக்கிறார். இவளுக்கு சர்ப்பயாட்சி நாகாம்பிகை என்றும் பெயர் உள்ளது. தல விருட்சம் வில்வம். தீர்த்தம் தாமிரபரணி. இடம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோடகநல்லூர். புராண பெயர் கார்கோடக நல்லூர். பெயர் மருவி கோடக நல்லூர் என்று தற்போது விளங்கி வருகிறது. இத்தலம் நவகைலாயங்களில் ஒன்று இது செவ்வாய் தலமாகும். கொடிமரம் பலிபீடம் பரிவார மூர்த்திகள் என எதுவுமே இல்லாத வித்தியாசமான கோயில் இது. சுவாமியே பிரதானம் என்பதால் இக்கோவில் இந்த அமைப்பில் உள்ளது. துவாரபாலகர்களின் இடத்தில் கல்யாண விநாயகரும் முருகரும் துவார பாலகர்களாக இருக்கின்றனர். நவ கைலாய தலங்களிலேயே பெரிய மூர்த்தி இவர். எனவே இவருக்கு எட்டு முழத்தில் எட்டு வேட்டிகளை அணிவித்து அலங்கரிக்கிறார்கள். இக்கோயிலில் உள்ள நந்திக்கு தாலி கட்டி பெண்கள் வழிபடுகிறார்கள். இக்கோயிலைச் சுற்றி இங்கு கரு நீல வண்ண பாம்புகள் நிறைந்து காணப்பட்டாலும் நல்லோரை தீண்டுவதில்லை.

ஒரு முனிவர் இப்பகுதியில் தவம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு உதவியாக அவரது மகனும் இருந்தார். அவர் விறகு பொறுக்க காட்டிற்குள் சென்றுவிட்டார். அப்போது ஒரு ராஜகுமாரன் அங்கு வந்தான். அவனுக்கு ராஜ்ய அபிவிருத்திற்காக யாகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. நிஷ்டையில் இருந்த முனிவரை எழுப்பி யாகம் செய்யும் முறை பற்றி கேட்டறியலாம் என எண்ணினான். ஆனால் எவ்வளவோ எழுப்பியும் அவர் கண் திறக்கவில்லை. கோபமடைந்த ராஜகுமாரன் ஒரு இறந்த பாம்பை எடுத்து முனிவரின் கழுத்தில் போட்டுவிட்டு சென்றுவிட்டான். நிஷ்டையில் இருந்ததால் முனிவருக்கு பாம்பு கழுத்தில் கிடப்பது தெரியவில்லை. விறகு பொறுக்கச் சென்ற மகன் திரும்பி வந்தார். தன் தந்தையில் கழுத்தில் பாம்பு கிடப்பதை பார்த்து கோபமடைந்தார். இந்த செயலை செய்தது ராஜகுமாரன் என்பது தெரிய வந்தது. உடனே அரண்மனைக்கு சென்று என் தந்தையின் கழுத்தில் போடப்பட்ட செத்த பாம்பு உயிர்பெற்று உன் தந்தையான பரிக்ஷித்து மன்னனை தீண்டும் என சாபமிட்டுவிட்டு சென்று விட்டார். சில நாட்கள் கழித்து மகாராஜாவின் ஜாதகத்தை பார்த்த ஜோதிடர்கள் ராஜாவுக்கு சர்ப்பதோஷம் இருப்பதாக கூறினர். பரிக்ஷித்து ராஜா பாம்பிடம் இருந்து தன்னை காத்துக் கொள்ள மிகவும் மறைவான இடத்தில் ஒரு மண்டபம் கட்டி வசித்தார். அதன் உள்ளே ஒரு எறும்புகூட புக வழியில்லை. ஒரு நாள் பரிக்ஷித்து ராஜா மாம்பழம் சாப்பிடும்போது உள்ளே குட்டியாக இருந்த கரு நீல வண்ண பாம்பு பழத்தினுள் இருந்து வெளிப்பட்டு ராஜாவை சாபப் படியும் கர்ம வினைப் படியும் தீண்டியது. இதனால் மகாராஜா இறந்து விடுகிறார்.

கார்கோடகன் என்னும் அந்த பாம்பு ஒருநாள் தான் வசித்த இடத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் மாட்டிக் கொண்டது. அப்போது அந்த வழியாக சூதாட்டத்தில் நாட்டையும் சொத்தையும் இழந்த நள மகாராஜா சோகத்தில் நடந்து வந்து கொண்டு இருந்தார். கார்கோடகன் பாம்பு தீயில் மாட்டிக் கொண்டதை பார்த்த நள மகாராஜா அந்த கார்கோடகன் பாம்பை உயிருடன் மீட்டு காப்பாற்றுகிறார். தன்னை காப்பாற்றியதற்கு பிராயச்சித்தமாக கார்கோடகன் பாம்பு நள மகாராஜாவை தீண்டி உருமாற்றியது. இதனால் நள மகாராஜா நாட்டு மக்களின் கண்களுக்கு தெரியாதவராக உருமாறினார். நள மகாராஜா உருமாறியதால் அவரது மனைவி தமயந்திக்கு கூட நள மகாராஜாவின் உருவம் தெரியவில்லை. இதனால் நள மகாராஜா நாட்டை இழந்து விட்டு எங்கோ சென்று விட்டார் என்று கருதினார். அந்த சமயத்தில் தேர் ஓட்டுவதில் மிகுந்த திறமை படைத்த நள மகாராஜா வீமராஜாவிடம் தேரோட்டியாக வேலைக்கு சேர்கிறார். நளன் வீமராஜாவிற்கு தேர் ஓட்டுவதை பார்த்த தமயந்தி உருவில் நளனை தெரியாவிட்டாலும் அவன் தேர் ஓட்டும் விதத்தை பார்த்து அவன் தான் தனது கணவன் என்பதை உறுதி செய்து கொண்டாள். பின்னர் நளனும் தமயந்தியும் ஒருவரையொருவர் பார்த்து சம்பாஷனை செய்து கொண்டனர். இதையறிந்த வீமராஜா நளனையும் தமயந்தியையும் மீண்டும் சேர்த்து வைத்தார். நளன் ஏழரை ஆண்டுகள் கழித்து மீண்டும் ராஜாவாக பட்டம் சூட்டிக் கொண்ட பின்னர் கார்கோடகன் பாம்பு மீண்டும் நளனை தீண்டி பழைய உருவத்திற்கு மாற்றியது.

பரிக்ஷித்து மன்னனையும் நளனையும் தீண்டிய பாவம் நீங்க விஷ்ணுவை நோக்கி அந்த கரு நீல வண்ண கார்கோடகன் பாம்பு தியானம் செய்தது. விஷ்ணு அங்கு தோன்றி இக்கோவிலில் உள்ள சிவபெருமானை வழிபட்டால் பாவம் நீங்கும் என்றார். அதன்படி சிவனை வழிபட்ட பாம்பு சாப விமோசனம் பெற்றது. பாம்பின் பாவத்தை போக்க சிவன் கைலாயத்தில் இருந்து வந்ததால் கைலாசநாதர் என்னும் பெயர் பெற்றார். கைலாசநாதர் கோயில்கள் பல இடங்களில் அமைக்கப்பட்டன. அதில் இந்தக் கோயிலும் ஒன்று. அங்காரகன் இங்கு சிவனை வழிபட்டார். அதனால் இது செவ்வாய் பரிகார தலமாயிற்று.

அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். சிவனுக்கு பூஜை செய்த தாமரை மலர்களை தாமிரபரணியில் வீசும்படியும் அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார். அதன்படி உரோமசர் தாமரை மலர்களை நீரில் விட 9 பூக்கள் பல இடங்களில் கரை ஒதுங்கின. இந்த இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் உரோமசர். இவை நவ கைலாய தலங்கள் எனப்பட்டன. நவக்கிரகங்கள் ஒன்பது என்பதால் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டது. 1. பாபநாசம் 2. சேரன்மாதேவி 3. கோடகநல்லூர் 4. செங்காணி 5. முறப்பநாடு 6. ஸ்ரீவைகுண்டம் 7. தெந்திப்பேரை 8. ராஜாதிபதி 9. சேந்தபூமங்களும் ஆகிய கோயில்கள் நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுகிறது. நவ கைலாயம் என்று அழைக்கப்படும் கோவில்களில் மூன்றாவது இக்கோயில் அங்காரகன் என்று அழைக்கப்படுகின்ற செவ்வாய்க்கு உரியது. செவ்வாய் தலம் என்றும் அங்காரக கைலாயம் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது.