கபிலர் மலை

மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமி குழந்தை வடிவில் குமாரராக இரண்டரை அடி உயரத்தில் கையில் வேலைத் தாங்கிய வண்ணம் அழகுமிக்க முருகனாக காட்சி அளிக்கிறார். மலையில் உள்ள தென்றல் காற்று முருகன் மீது மூலஸ்தான குகைக் துவாரத்தில் இருந்து எப்போதும் வீசிக் கொண்டு மூலஸ்தானத்தில் உள்ள தீபத்தை அசைத்துக் கொண்டே இருக்கும். அதனால் தென்றல் காற்று பரவும் குழந்தை குமாரர் என சிறப்பித்து பாடல் பாடப் பெற்றுள்ளார். கபிலர்மலை மேல் புராதன புகழ்பெற்ற முருகன் ஆலயத்திற்கு செல்ல மொத்தம் 120 படிகள் உள்ளது. இத்திருக்கோயிலில் அரசமரத்து பிள்ளையார் இடும்பன் சன்னதி சித்தி விநாயகர் காளஹஸ்தி ஈஸ்வரன் சன்னதி கமலாம்பிகா அம்மன் சன்னதி உள்ளது. தலவிருட்சம் நாவல்மரம். இம்மலை இயற்கையான செந்நிறம் கொண்டதாக உள்ளது.

கபிலர்மலை மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு தென்புறத்தில் அமைந்திருக்கும் பாறையில் தான் முக்காலத்தில் கபிலமகரிஷி என்ற முனிவர் அமர்ந்து முருகப் பெருமானை நினைத்து பெரும் வேள்வி செய்து தவம் செய்து வந்தார். இன்றும் அந்தப் பாறையில் கபில மகரிஷி தவம் செய்த இடம் தனித் தன்மையாக தெரிகிறது. பண்டைய காலம் முதல் இன்று வரை தொன்று தொட்டு கபில மகரிஷிக்கு தினசரி பூஜை நடந்து வருகிறது. திருவிழாக் காலங்களில் கபில மகரிஷி தவம் செய்த இடத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. கபில மகரிஷி இம்மலையில் தானாகவே தோன்றிய சுயம்பு மூர்த்தியாக விளக்கிய முருகப்பெருமானை வணங்கி வந்தார். அதன்பிறகு, அவரால் முருகப்பெருமான் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வணங்கி வந்ததாக கூறப்படுகிறது. கபில மகரிஷி இங்கு தங்கி தவம் இருந்து முருகனை வழிபட்டு வந்ததையொட்டியே இம்லைக்கு அவர் பெயரால் கபிலர் மலை என சிறப்பு பெயர் பெற்று புகழுடன் விளங்குகிறது. இங்கு மலையுச்சியில் கபில தீர்த்தமும் உண்டு. இச்செய்திகள் வடமொழி தல புராணம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கபிலர்மலை குறித்து சங்க நூல்கள் சிலவற்றில் குறிப்புகள் உள்ளன. அதன்படி கபிலர் என்னும் புலவர் செல்வக் கடுங்கோவாழியாதன் எனும் சேர மன்னனிடம் நூறு ஆயிரம் பொன் மற்றும் நாடும் பெற்று இம்மலையில் தங்கி பெரும் வேள்வி தவம் செய்து வாழ்ந்ததாக சான்றுகள் தெரிவிக்கின்றன. அதற்கு ஆதாரமாக ஆறுநட்டான் மலையில் உள்ள கடுங்கோவாழியாதன் அமைத்த கல்வெட்டு மூலம் அறியலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.