ஊதியூர் மலை

ராம லக்ஷ்மனனுக்காக அனுமன் சஞ்சீவி மலையை எடுத்துவந்த போது அதன் ஒரு பகுதி கொங்குநாட்டில் விழுந்தது. அந்த மலையை ஊதியூர் மலை என்று அழைக்கப்படுகிறது. இம்மலையில் பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கொங்கண சித்தர் 800 ஆண்டுகள் தவம் செய்திருக்கின்றார். இந்த மலையில் உத்தண்டவர் என்ற பெயரில் முருகரை கொங்கண சித்தர் பிரதிஷ்டை செய்துள்ளார். அருகில் கொங்கன சித்தர் தவம் புரிந்த குகையும் அதில் அவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கமும் உள்ளது. இந்த குகைக்கு உள்ளே செல்வதற்கு ஒரு வழி வெளியே வருவதற்கு வேறு வழி உள்ளது. வெளியே வர படுத்து தவழ்ந்து தான் வரமுடியும். இந்தக் குகையிலிருந்து பழநி அமராவதி ஆற்றங்கரையில் இருக்கும் அப்பரமேஸ்வரர் கோயிலுக்குச் செல்ல சுரங்கப்பாதை இருந்தது. கொங்கணர் தங்கம் பதுக்கி வைத்தருக்குன்றார் என்ற மக்களின் தேடுதலால் மக்களின் தொல்லை தாளாமல் பின்னர் இந்தப் பாதை அழிக்கப்பட்டு விட்டது. கொங்கணவர் உருவாக்கிய உத்தண்ட வேலாயுத ஸ்வாமி சிலையே தங்கத்தால் ஆனவர் என்று நினைத்த சிலரால் முருகப்பெருமானின் திருப்பாதங்கள் பின்னப்படுத்தப்பட்டது. அது தங்கமில்லை என்று அறிந்ததும் அந்தச் சிலையை காட்டுக்குள் வீசிவிட்டனர். முருகன் சிலை பின்னமானதும் அந்த ஊரே பாழ்பட்டுப் போனது. பிறகு சித்தரின் சீடர்கள் அறிவுரையால் அதே சிலையை காட்டில் இருந்து கொண்டு வந்து பாதங்களை மறைக்கும் அளவுக்கு மண்ணால் புதைக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னால் இந்த மலையில் சித்தரால் உபயோகிக்கப்பட்ட மண் குழல்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்கள் பாழ்பட்டன. அதனால் சித்தர் உலாவிய அந்த இடங்கள் தற்போது வனத்துறையால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது.

ஊதியூர் மலை ஏறும் போது முதலில் நாம் தரிசனம் செய்வது உத்தண்டர் முருகன் கோவில் பின்பு சற்று மேலே தம்பிரான் சித்தர் சமாதி அதற்கு மேல் இரண்டு கிலோ மீட்டர் தொலைவு நடந்து சென்றால் கொங்கணரின் ஜீவ ஐக்கிய தலம். அதற்கும் சற்று மேலே கொங்கணர் குகை உள்ளது. பொன்னுருக்கி சித்துகளைச் செய்த கொங்கணவர் தவமியற்றிய சந்திரகாந்தக் கல்லில் தாமே சுயம்புவாக ஊதி மலையில் காட்சியளிக்கிறார். இம்மலையின் புராணபெயர் பொன்ஊதிமாமலை என்பதாகும். வள்ளி, தெய்வானை ஒரே சன்னதியில் உள்ளனர். மலை மீது செல்ல 158 படிகள் உள்ளன. இம்மலையிலேயே கொங்கண சித்தருக்கும் தனிக்கோயில் உள்ளது. அருணகிரிநாதர் முருகபெருமானை தரிசித்த 120 வது தலம் ஊதிமலை. முருகனை அருணகிரிநாதர் தமது திருப்புகழில் பாடியுள்ளார். ஊதியூர் இம்மலை தாராபுரத்திலிருந்து ஈரோடு செல்லும் வழித்தடத்தில் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கோவையின் தாராபுரத்திலிருந்து காங்கேயம் போகும் வழியில் 10 மைல் தொலைவில் உள்ளது.

கோவிலின் முதலில் பாத விநாயகர் சன்னதியைக் கடந்து படிப்பாதையில் மேலே சென்றால் இடும்பன் சன்னதி உள்ளது, அடுத்துள்ள ஆஞ்சநேயர் சன்னதியைக் கடந்து சென்றால் மலைக் கோயிலை அடையலாம். 156 படிகளைக் கொண்ட மலைக்கோயிலின் நுழைவு வாயில் தெற்கு நோக்கி உள்ளது. தீபஸ்தம்பம் ராஜகோபுரத்தின் முன் அமைக்கப்பட்டுள்ளது. ராஜகோபுரத்தை அடுத்துள்ளது, குறட்டுவாசல். கோயில் கிழக்கு நோக்கிய நிலையில் கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம் மற்றும் வாத்திய மண்டபம் என நான்கு பகுதிகளைக் கொண்டது. உட்பிராகாரத்தில் கன்னிமூல கணபதி, முனியப்பன், கன்னிமார், கருப்பராயன், நவகிரகங்கள் மற்றும் பைரவர் தனிச் சன்னதிகளில் அருள்கின்றனர்.

கொங்கு மண்டல சதகம் எனும் நூலில் இம்மலையின் பெருமைகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தோன்றிய சித்தர்களுள் முதன்மையானவர் அகத்தியர். அவரது சீடர்களான போகர், தேரையர், கொங்கணர் ஆகியோர் பசி, பட்டினி என வாடிய மக்களின் குறைகளை தங்கள் யோக ஆற்றலால் நிவர்த்தி செய்து வந்தனர். ஒரு சமயம் அவர்கள் காங்கேய நாட்டு மக்களின் வறுமையைப் போக்கும் விதமாக மக்களை ஒன்று திரட்டி மூலிகைகள் கொண்ட இம்மலைக்கு தீவைத்து புகை மூட்டி ஊதினர். அப்போது முருகப்பெருமான் அங்கு எழுந்தருளி மக்களின் வறுமையை நீக்கி அவர்களின் வாழ்வில் வளமையை உண்டாக்கினார். புகை மூட்டி ஊதியதால் ஊதிமலை என்றும் கொங்கணச் சித்தர் தவம் செய்து நெருப்பு ஊதி பொன் தயாரித்ததால் பொன் ஊதிமலை என்றும் அனுமன் எடுத்துச் சென்ற சஞ்சீவி மலையின் ஒரு பகுதி இது என்று கருதப்படுவதால் சஞ்சீவி மலை என்றும் பல பெயர்களில் இம்மலை அழைக்கப்படுவதாக தலபுராணம் கூறுகிறது.

இம்மலைக்கு அருகில் பொன்னுருக்கி குன்று ஒன்றுள்ளது. அம்மலையில் பொன்னை ஊதி தங்கத்தை பெற்றதால் பொனூதிமாமலை எனும் பெயரை பெற்றது. இங்கு கொங்கண சித்தர் பொன் செய்து மக்களுக்கு தானமாக தந்தார். சுயநலம் மிக்க மக்களை கண்டு மனம் வருந்தி அவர் எழுதிய பொன்னுருக்கும் குறிப்போலையை தனது சீடர் தம்பிரான் சித்தரிடம் கொடுத்து இவ்வித்தையை பிரயோகிக்க கூடாது என்றும் மறைத்து வைக்கும்மாறு சொல்லி தவத்தில் ஆழ்ந்தார். கொங்கணரின் பிரதான சீடன் தம்பிரான் சித்தர் தனது குருவின் கட்டளையை மீறி மறைத்து வைத்த குறிப்போலை கொண்டு தங்கம் செய்ய முற்பட்டு அதில் தோல்வியுற்றார். திப்பு சுல்தான் என்ற முகலாய மன்னன் கோவிலில் உள்ள வேலாயுத சுவாமி திருவுருவச்சிலையின் தலை, கை, கால்களில் வெட்டினான். இதனால் கோபமுற்ற சித்தர்கள் திப்புசுல்தானை நீ இந்த சிலையை எப்படி வெட்டினாயோ அதுபோலவே வெட்டுப்பட்டு இறப்பாய். எத்தை முறை வெட்டினாயோ அத்தனை மாதங்களில் இறப்பாய் என சாபம் கொடுத்தார்கள். அதுபோலவே திப்புசுல்தான் இறந்தார். இன்று இந்த கோயிலில் அந்த வெட்டுப்பட்ட சிலை உள்ளது. முருகப்பெருமான் தண்டாயுதபாணி கோலத்தில் கிழக்கு முகமாக காட்சி தருகிறார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.