மூலவர் குறுங்காலீஸ்வரர் குசலவபுரீஸ்வரர். அம்பாள் தர்மசம்வர்த்தினி மற்றும் அறம் வளர்த்த நாயகி. இறைவனும் இறைவனுக்கு வலப்புறமுள்ள அம்பாளும் வடக்கு நோக்கி அருள் பாலிக்கிறார்கள். அம்பாள் இடது காலை முன்னோக்கி வைத்தபடி தன்னை வேண்டும் பக்தர்களுக்கு விரைந்து வந்து அருள் செய்கிறார். தீர்த்தம் குசலவ தீர்த்தம். தல விருட்சம் பலா. இடம் சென்னை அருகில் உள்ள கோயம்பேடு. இக்கோயில் வடக்கு நோக்கியிருப்பதால் மோட்ச தலமாக கருதப்படுகிறது. லவ குசர்கள் கோ எனப்படும் அரசனாகிய ராமனின் குதிரைகளை அயம் என்னும் இரும்பு வேலியால் கட்டி வைத்த தலமென்பதால் இத்தலம் கோயம் பேடு என பெயர் பெற்றது. பேடு என்றால் வேலி எனப் பொருள். அருணகிரியார் இத்தலத்து முருகனைத் திருப்புகழில் பாடும் போது கோசைநகர் என்று குறிப்பிட்டுள்ளார். இக்கோவில் சுமார் 25200 சதுரடி பரப்பளவில் அமைந்துள்ளது. இடைக்காலச் சோழர்கள் காலத்தைச் சேர்ந்த பெரிய குளம் உள்ளது. இந்தத் தலம் காசிக்கு இணையான தலம் என்ற பெருமை உடையது. கோவிலுக்கு அருகில் வைகுண்ட பெருமாள் கோவில் உள்ளது.
ஒரு காலத்தில் இத்தலத்தில் உள்ள சிவலிங்கம் மணலால் மூடிவிட்டது. சோழ மன்னன் ஒருவன் இவ்வழியே தேரில் சென்ற போது சக்கரம் லிங்கம் மீது ஏறி ரத்தம் வெளிப்பட்டது. பயந்த மன்னன் பூமிக்கடியில் லிங்கம் இருந்ததைக் கண்டு கோயில் எழுப்பினான். சிவன் குறுகியவராக (குள்ளமானவராக) காட்சி தருகிறார். இதனால் சுவாமிக்கு குறுங்காலீஸ்வரர் என்ற பெயர் உண்டானது. குசலவம் என்றால் குள்ளம் என்றும் பொருள் உண்டு. இதன் அடிப்படையில் இவர் குசலவபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
மூன்று நிலைகளுடன் இராஜ கோபுரம் உள்ளது. அம்பாள் சன்னதிக்கு முன்புறம் நவக்கிரக சன்னதி தாமரைபீடத்தின் மீது அமைந்துள்ளது. நவக்கிரக மண்டபத்தில் ஏழு குதிரை பூட்டிய தேரை அவரது சாரதியான அருணன் ஓட்ட மனைவியருடன் சூரியபகவான் அருள் பாலிக்கிறார். நவக்கிரக சன்னதியின் தரைப் பகுதி மஞ்சள் கீழ்பீடம் வெள்ளை தாமரை பீடம் சிவப்பு ரதம் கருப்பு தெய்வங்கள் பச்சை என பஞ்ச நிறத்தில் இருக்கிறது. இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி சுவாமி சன்னதியின் பின்புறத்தில் லிங்கோத்பவரின் இடத்தில் இருக்கிறார். பிரகாரத்தில் ஜுரகேஸ்வரர் லிங்க வடிவத்தில் இருக்கிறார். சாஸ்தா லட்சுமி ஞானசரஸ்வதி நாகர் ஆகியோரும் இருக்கின்றனர். கோபுரத்திற்கு கீழே கபால பைரவர் வீரபத்திரர் இருக்கின்றனர். அதிகார நந்தி காலபைரவர் வீரபத்திரர் விநாயகர் பிரம்மன் சுப்பிரமணியர் ஆகிய தெய்வ சன்னதிகள் உள்ளன. மகாவிஷ்ணு மற்றும் துர்க்கை கருவறையின் மேற்குப்புற கோட்டங்களில் உள்ளனர். திருச்சுற்றில் நடராசர் மற்றும் நாயன்மார்களுக்கான சன்னதிகள் உள்ளன. கோவில் முன் 16 கால் மண்டபம் உள்ளது. மண்டபத் தூண்களில் இராமாயணக் காட்சிகள் குறுஞ்சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு வெளியே உள்ள ஒரு தூணில் சரபேஸ்வரரின் சிற்பம் இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் இவருக்கு பூஜை நடக்கிறது.
அயோத்தியில் ராமபிரான் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு சீதையின் கற்பிற்கு களங்கம் உண்டாகும்படி சிலர் பேசினர். சீதையின் கற்பை நிரூபிக்க ராமர் அவளை வனத்திற்கு அனுப்பினார். வால்மீகி ஆசிரமத்தில் தங்கிய அவள் லவன் குசன் என்னும் 2 மகன்களை பெற்றெடுத்தாள். ராமர் தனது தந்தை என தெரியாமலேயே லவ குசர் வளர்ந்தனர். இந்நேரத்தில் ராமர் அயோத்தியில் அஸ்வமேத யாகம் நடத்தினார். அங்கு வால்மீகி முனிவரின் உத்தரவின் பேரில் லவ குசர் இருவரும் சென்றார்கள். மனைவி இல்லாமல் அஸ்வமேத யாகம் நடத்துவது சாஸ்திர விரோதம் என்பதாலும் சீதாவை காட்டுக்கு அனுப்பி விட்டதை அறிந்தும் ராமர் மீது கோபமடைந்த லவ குசர் இருவரும் தாங்கள் வசித்த வனத்துக்கே திரும்பி விட்டனர். அப்போது அஸ்வமேத யாகக் குதிரை லவ குசர் வசித்த பகுதிக்கு வந்தது. அவர்கள் அவற்றை கட்டிப் போட்டனர். அங்கு வந்த சத்ருக்கனன் குதிரையை விடுவிக்கச் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. அவனுடன் போரிட்டு வென்றதோடு குதிரையை மீட்க வந்த லட்சுமணருடனும் போரிட்டு வென்றனர். இவர்களைத் தேடி ராமனும் இங்கு வந்தார். இதையறிந்த வால்மீகி லவ குசர்களிடம் ராமர் அவர்களது தந்தை என்பதையும் அவர்களது அன்னையே சீதை என்பதையும் எந்தச் சூழ்நிலையில் சீதாதேவியை ராமர் காட்டுக்கு அனுப்பினார் என்பதையும் விளக்கினார். இருப்பினும் தந்தையை எதிர்த்ததால் லவ குசருக்கு பித்ரு தோஷம் பிடித்தது. வால்மீகியின் ஆலோசனைப்படி இத்தலத்தில் சிவனை வேண்டி தவமிருந்து தோஷம் நீங்கப் பெற்றனர். இதனால் சுவாமிக்கு குசலவபுரீஸ்வரர் என்று பெயர் சூட்டப்பட்டது.
கோயம்பேடு என்ற ஊரும் இல்லை
குறுங்காலீஸ்வரர் என்ற பேரும் இல்லை
வடக்குப் பார்த்த சிவனும் இல்லை
மடக்குப் போன்ற லிங்கமும் இல்லை – என்பார்கள்.
இதற்கு விளக்கம் உலகத்தில் கோயம்பேடு என்ற பெயர் கொண்ட ஊர் வேறு இல்லை. இங்கு மட்டும் தான் உள்ளது. பொதுவாக ஒரு ஊரில் சிவபெருமானுக்கு இருக்கின்ற பெயர் இன்னொரு ஊரில் சிவபெருமானுக்கு இருக்கும். ஆனால் இந்த ஈஸ்வரனுடைய பெயர் வேறு எங்கும் இல்லை. வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ள மூலவராக ஈஸ்வரன் இருப்பது இங்குதான். மடக்குப் போன்ற லிங்கம் என்பது இங்குள்ள ஈஸ்வரனின் லிங்க பாணம் ஒரு மடக்கையை அதாவது பானை மூடப் பயன்படும் மூடியை கவிழ்த்தது போல் இருக்கும். ஆகவே அவ்வாறு சொல்வார்கள்.
இக்கோவிலில் இந்திய தொல்பொருள் அளவீட்டுத் துறையினர் 14 கல்வெட்டுகளைக் கண்டறிந்துள்ளனர். இவை மூன்றாம் குலோத்துங்கன் காலத்தைச் சேர்ந்தவை ஆகும். 12 நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டுகள் ஜெயம்கொண்ட சோழமண்டலம் மற்றும் மாங்காடு இப்பகுதியில் இடம் பெற்றிருந்ததை பதிவு செய்துள்ளன. கோயம்பேடு கிராமசபை மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் குறித்த செய்திகள் குறித்தும் இக் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளன. வால்மீகி முனிவர் ராமரின் மகன்கள் லவன் குசன் ஆகியோர் வழிபட்ட புண்ணியஸ்தலமாக இந்த கோவில் விளங்கி வருகிறது. அருணகிரிநாதர் இக்கோவில் முருகரை தனது திருப்புகழில் பாடியுள்ளார்.
![](https://i0.wp.com/tsaravanan.com/wp-content/uploads/2023/03/21.jpg?resize=650%2C568&ssl=1)
![](https://i0.wp.com/tsaravanan.com/wp-content/uploads/2023/03/22.jpg?resize=650%2C889&ssl=1)
![](https://i0.wp.com/tsaravanan.com/wp-content/uploads/2023/03/23.jpg?resize=650%2C781&ssl=1)
![](https://i0.wp.com/tsaravanan.com/wp-content/uploads/2023/03/24.jpg?resize=650%2C1073&ssl=1)
![](https://i0.wp.com/tsaravanan.com/wp-content/uploads/2023/03/25.jpg?resize=650%2C1235&ssl=1)
![](https://i0.wp.com/tsaravanan.com/wp-content/uploads/2023/03/26.jpg?resize=650%2C680&ssl=1)
![](https://i0.wp.com/tsaravanan.com/wp-content/uploads/2023/03/27.jpg?resize=650%2C571&ssl=1)
![](https://i0.wp.com/tsaravanan.com/wp-content/uploads/2023/03/28.jpg?resize=650%2C500&ssl=1)
![](https://i0.wp.com/tsaravanan.com/wp-content/uploads/2023/03/29.jpg?resize=650%2C562&ssl=1)
![](https://i0.wp.com/tsaravanan.com/wp-content/uploads/2023/03/30-2.jpg?resize=650%2C710&ssl=1)
![](https://i0.wp.com/tsaravanan.com/wp-content/uploads/2023/03/31.jpg?resize=650%2C346&ssl=1)
![](https://i0.wp.com/tsaravanan.com/wp-content/uploads/2023/03/32.jpg?resize=650%2C643&ssl=1)
![](https://i0.wp.com/tsaravanan.com/wp-content/uploads/2023/03/34.jpg?resize=650%2C591&ssl=1)
![](https://i0.wp.com/tsaravanan.com/wp-content/uploads/2023/03/35.jpeg?resize=650%2C488&ssl=1)
![](https://i0.wp.com/tsaravanan.com/wp-content/uploads/2023/03/36.jpeg?resize=650%2C488&ssl=1)