சாயா சோமேஸ்வரர் ஆலயம்

மூலவர் சோமேஸ்வரர் லிங்க வடிவில் இருக்கிறார். இங்கு மூன்று கருவறைகள் ஃ வடிவில் அமைந்துள்ளன. சிவன் விஷ்ணு சூரியன் ஆகிய மூவருக்கும் முக்கோண அமைப்பில் அமைந்த ஆலயம் இது. இக்கோவிலின் மூன்று கருவறைகளில் ஒன்றுக்கு பிரம்ம கருவறை என்றும் மீதி இரண்டுக்கு லங்க கருவறை என்றும் பெயர் என்று கோவில் கல்வெட்டுக்களில் உள்ளது. பிரதான கோவிலில் உள்ள சோமேஸ்வரர் லிங்கத்தின் மீது நாள் முழுவதும் ஒரு நித்திய நிழல் இருப்பதால் இந்த கோவிலுக்கு சாயா சோமேஸ்வரர் கோயில் என்று பெயர் வந்தது. சாயா என்பது நிழலை குறிக்கும். இந்த கோயிலுக்கு எதிரில் ரங்க மண்டபம் என்ற அர்த்த மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் தூண்களை கொண்ட ஆச்சர்யமான சிற்ப வேலைப் பாடுகள் உள்ளன. இது நேரடியாக சூரிய ஒளி படுமாறு அமைந்துள்ளது. இது திரிகூடலாயம் (மூன்று சன்னதி வளாகம்) என்று அழைக்கப்படுகிறது. மூன்று ஆலயங்களும் சிக்கலான செதுக்கப்பட்ட தூண்களுடன் ஒரு பொதுவான மண்டபத்தை பகிர்ந்து கொள்கின்றன. இந்த சிற்பங்கள் மகாபாரதம் இராமாயணம் போன்ற புராணங்களின் காட்சிகளை சித்தரிக்கின்றன. இந்தக் கோயிலின் விமானம் பிரமிடுகளை ஒத்துள்ளது. இக்கோவிலை சூரியனின் மனைவியான சாயாதேவி வழிபடுவதாக தல வரலாறு சொல்கிறது. சாயா என்பதற்கு நிழல் என்று பொருள். அதன் படியே சூரியனுக்கான சுவாமி சன்னிதியின் எதிரே சூரியன் பயணம் செய்ய ஏழு குதிரைகளுடன் கூடிய பீடம் மட்டுமே அமைந்துள்ளது. சிலை வடிவம் இல்லை.

அறிவியலின் படி எந்த ஒரு பொருளின் மீது சூரிய ஒளி பட்டாலும் அந்த பொருளின் நிழல் அதற்கு முன்பு விழும் பின் சூரியன் நகர நகர அந்த நிழலும் நகரும். ஆனால் இந்த கோயிலில் லிங்க கருவறையில் லிங்கத்தின் பின்புறம் ஒரு தூணின் நிழல் விழுகிறது. ஆனால் காலையில் எந்த இடத்தில் இந்த நிழல் இருந்ததோ சூரியன் மறையும் வரை அதே இடத்தில் இருக்கிறது. இந்த நிழல் சூரியனின் நகர்விற்கேற்ப நகர்வதில்லை. இந்த கருவறைக்கு முன் நான்கு தூண்கள் உள்ளன இதில் எந்த தூணின் நிழல் கருவறைக்குள் விழுகிறது என்றும் தெரியவில்லை. எந்த தூணின் பின் நின்றாலும் நம் நிழல் விழாமல் தூணின் நிழலே விழுகிறது. ஆனால் பிரம்ம கருவறைக்கு முன் நின்று பார்த்தால் பிரம்மனுக்கு நான்கு தலை என்பதை சொல்லும் விதமாக நம் நிழல் நான்காக விழுகிறது அதுவும் எதிர் திசையில் விழுகிறது. இது இன்று வரை புரியாத புதிராகவே உள்ளது.

கோவிலின் கிழக்கே வற்றாத திருக்குளம் உள்ளது. கோவிலின் வாசல் மூன்று புறம் இருந்தாலும் தெற்கு வாசலை நோக்கியே ஆலய நுழைவு வாசல் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கியபடி சாயா சோமேஸ்வரர் காட்சி தருகிறார். எதிரில் நந்தி பலிபீடம் உள்ளது. ஆலயத்திற்கு வடக்கு நோக்கிய விஷ்ணு சன்னிதி மேற்கு நோக்கிய சூரியன் சன்னிதி இருக்கின்றன. இவ்வாலயத்தில் அமைந்திருந்த விஷ்ணு சூரியன் நந்திகள் அம்பாள் சிலைகள் டெல்லி சுல்தானியர்களின் காலத்தில் நடைபெற்ற ஆக்கிரமிப்பின் சிதைவால் அங்கு பீடங்கள் மட்டுமே காணப்படுகின்றன. அவற்றுக்கெல்லாம் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. கருவறை முன்புறம் விநாயகர் முருகன் பீடங்கள் அமைந்துள்ளன. கருவறையில் ஐந்து படிகள் கீழே சாயா சோமேஸ்வரர் பூமியோடு தன்னைப் பிணைத்துக் கொண்டு லிங்கத் திருமேனியில் நமக்கு காட்சியளிக்கிறார். சிவன் விஷ்ணு சூரியன் சன்னிதிகளின் எதிரே மையமாக நான்கு நாற்பட்டை வடிவத் தூண்கள் அமைந்துள்ளன. இந்தத் தூண்களின் கற்கள் அபூர்வமானதாக உள்ளன. இதில் மகாபாரதம் ராமாயணம் சிற்பங்கள் வெகு நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளன. ஆலயத்தில் விநாயகர் குமாரசுவாமி சாயா சோமேஸ்வரர் மகாவிஷ்ணு சூரியன் யோகினி மாதா நடராஜர் பைரவர் காளிக்கா மாதா ஆகிய சன்னிதிகள் அமைந்துள்ளன. ஆலய வளாகத்தில் தனியே சிறிய சிவாலயம் ஒன்றும் உள்ளது. தல மரமாக அவதம்பர் என்ற அபூர்வ மரம் உள்ளது. இதில் தத்தாத்ரேயர் தவமியற்றி உள்ளார்.

கோவில் ஆலய வளாகத்தில் 7 நந்திகள் முகலாயர்களால் தலை வெட்டப்பட்ட நிலையிலும் கம்பீரமான தோற்றத்துடன் காட்சி அளிக்கின்றன. அதில் முதல் நந்தியை கழுத்தில் கைகளால் தடவிப் பார்த்தால் உயிருள்ள நந்தியைத் தழுவுவது போன்று இருக்கும். இது முன்னோர்களின் கலைத் திறமையை உணர்த்துவதாக அமைந்துள்ளது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட இந்த கோயில் முக்கோன வடிவிலும் கருவறை விமானம் பிரமிடு அமைப்பிலும் கட்டப்பட்டு உள்ளது. 11 மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளில் பனகால் பிராந்தியத்தில் தெலுங்குச் சோடர்களும் குண்டூரு சோழர்களும் காக்கத்தியப் பேரரசின் முதலாம் பிரதாபருத்திரன் ஆகியோரின் காலத்தில் கட்டப்பட்டது. ஐதராபாத்திலிருந்து 100 கிமீ தொலைவில் தெலுங்கானா மாநிலம் நல் கொண்டா அருகில் அமைந்துள்ளது சாயா சோமேஸ்வரர் கோயில். பனகல் என்ற ஊரின் தென்பகுதியில் சாயா சோமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.