கச்சாலீஸ்வரர் கோயில்

மூலவர் கச்சாலீஸ்வரர் கச்சபேஸ்வரர். அம்பாள் அழகம்மை சௌந்தராம்பிகை. தலவிருட்சம் கல்யாண முருங்கை. தீர்த்தம் சிவகங்கை தீர்த்தம். இடம் சென்னை பாரிமுனை. அம்பாள் அழகம்பிகையின் சன்னதிக்கு இருபுறமும் லட்சுமியும் சரஸ்வதியும் உள்ளனர். கச்சபேஸ்வரருக்கு முன்புறம் சிங்க வாகனத்தின் மீது ஐந்து முக ஹேரம்ப விநாயகர் காட்சி தருகிறார். இவருக்கு அருகில் சித்தியும் புத்தியும் நின்ற கோலத்தில் உள்ளனர். இங்கு 63 நாயன்மார்களுக்கும் தனி மண்டபம் உள்ளது. தத்தாத்ரேயர் துர்க்கை ஆதிசங்கரர் மூலகேஸ்வரர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன. இத்தலத்தில் நவக்கிரகங்கள் தனிமண்டபத்தில் நின்ற வடிவில் உள்ளனர். கிரகங்களின் மத்தியில் உள்ள சூரியன் தனது மனைவியர்களான உஷா பிரத்யுஷா ஆகியோருடன் இருக்கிறார். மண்டப மேற்கூரையில் 12 ராசிகள் 28 நட்சத்திரங்கள் 60 வருடங்கள் நான்கு யுகங்கள் அஷ்டதிக் பாலகர்கள் ஆகியோர் சிற்பவடிவில் உள்ளனர். பாற்கடலை கடைந்த போது மத்தாகப் பயன்பட்ட மந்திரமலை கடலில் மூழ்கவே மகாவிஷ்ணு ஆமை வடிவம் எடுத்து மத்தாக பயன்பட்டார். அவர் வழிபட்ட சிவன் என்பதால் கச்சபேஸ்வரர் என்றும் கச்சாலீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். கச்சபம் என்றால் ஆமை என பொருள். மூலவர் கச்சாலீஸ்வரர் 1. கூர்மாசனம் 2. அஷ்ட நாகாசனம் 3. சிம்மாசனம் 4. யுகாசனம் 5. கமலவிமல ஆசனம் என்ற ஐந்து ஆசனங்களின் மீது அமர்ந்துள்ளார். இந்த அமைப்பில் சிவன் காட்சி தருவது அபூர்வம். இந்த லிங்கத்திற்கு பின்புறம் கருவறை சுவரில் ஐந்து முகங்களுடன் சிவபெருமான் சதாசிவ மூர்த்தியாக மனோன்மணித் தாயாருடன் காட்சி அளிக்கிறார். ஒரே கருவறையில் சிவனின் உருவமான இவ்வடிவையும் அருவுருவமான லிங்கத்தையும் வணங்கிட பாவங்கள் நீங்கி முக்தி கிடைக்கும். கோவிந்தராஜ பெருமாள் தனி சன்னதியில் இருக்கிறார்.

ஆங்கிலேயர்களிடம் மொழி பெயர்ப்பாளராக இருந்த துபாஷி தலவாய் செட்டியார் என்பவர் காஞ்சிபுரத்தில் உள்ள கச்சாலீஸ்வரரை வணங்கிவிட்டு சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் பலத்த மழை பெய்ததால் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. எனவே அவரால் ஊருக்கு திரும்ப முடியவில்லை. அவருக்கோ ஊரில் பல வேலைகள் பாக்கியிருந்தது. என்ன செய்வேன் இறைவா என தவித்து நின்றார். ஆனால் மழையோ ஒரு வாரம் கொட்டிய பின் தான் அடங்கியது. வெள்ளம் வடிய மேலும் ஒரு வாரம் பிடித்தது. துபாஷி தலவாய் செட்டியார் சிவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு வெள்ளம் வடிந்த பின் ஆற்றுக்குள் இறங்கி ஊர் வந்து சேர்ந்தார். அதிசயமாக அவர் செய்ய வேண்டிய அத்தனை பணிகளும் ஒன்று விடாமல் முடிக்கப் பட்டிருந்தன தன் பக்தனுக்காக எல்லா வேலைகளையும் இறைவனே பக்தனின் வடிவில் வந்து செய்து முடித்து விட்டார். இதனை அறிந்த துபாஷி தலவாய் செட்டியார் அவ்வூரில் சிவலிங்க பூஜை செய்ய ஆரம்பித்தார். பின் தன் துணைவியார் உதவியுடன் இங்கு 1725 இல் கோவில் கட்ட ஆரம்பித்து 3 ஆண்டுகளில் கட்டி முடித்தார் துபாஷி தலவாய் செட்டியார்.

சபரிமலையிலுள்ள ஐயப்பன் கோயில் 1950ம் வருடம் தீக்கிரையான போது புதிதாக மறுநிர்மாணம் செய்யப்பட்ட போது இப்போது சபரிமலையில் உள்ள ஐயப்பனின் சிலை பல்வேறு ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. சென்னைக்கு இக்கோவிலுக்குள் இந்தச் சிலையை இந்தக் கோயிலுக்கு பூஜைக்காக எடுத்து வந்தனர். பூஜை முடிந்ததும் சிலையை அங்கிருந்து கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் பல காரணங்களால் தடங்கல் ஏற்பட்டு மூன்று நாட்கள் இங்கேயே சிலை இருந்தது. மூன்று நாட்களும் ஐயப்பனுக்கு பூஜை நடத்தப்பட்டது. அதன் நினைவாக இங்கு ஐயப்பனுக்கு தனிச்சன்னதி கட்டப்பட்டுள்ளது. சபரி ஐயன் அமர்ந்த அதே இடத்தில் புதிய ஐயப்ப விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சென்னை நகரில் அமைந்த முதல் ஐயப்பன் சன்னதி இதுவே. சபரி மலையில் ஜோதி தரிசனத்தின் போது இங்கும் ஜோதி தரிசன விழா நடக்கிறது.

One thought on “கச்சாலீஸ்வரர் கோயில்

  1. Padmanaban Reply

    அருமை அருமை..கேட்க இனிமை..பார்க்கப்பார்க்க அதனினுமினிமை.. ஶ்ரீ ஓம் நமச்சிவாய..!!!

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.