திருலோக்கி

குருபகவானுக்கு ரிஷபவாகனத்தில் காட்சியளித்த உமாமகேஸ்வர வடிவம். அணைத் தெழுந்த பிரானின் அழகுத் திருமேனி நந்தியின் மேல் ஒரு பீடத்தில் சிவம் தழுவிய சக்தியாக அல்லது சக்தி தழுவிய சிவமாக காட்சியளிக்கும் அரிய திருமேனி. பின் இரு கரங்களில் சூலம் மான் ஏந்தியும் முன் வலது கரம் அபய முத்திரையுடனும் திகழ இடது கரம் அம்பிகையை அணைத்த அழகு வடிவம். பெருமான் வலது காலைத் தொங்கவிட்டு இடது காலை மடக்கி அமர்ந்துள்ளார். அம்பிகையின் வலது கரம் பெருமானது இடுப்பைப் பற்றிக் கொண்டும் இடது கரத்தில் மலர் ஏந்தியும் உலக நாயகனைப் பார்த்து ரசிக்கும் பூரிப்பில் அவர் முகம் பார்த்தபடி காட்சியளிக்கிறாள். இந்த உமாதேவியின் பெயர் பார்யா சௌக்யப்ரதாயினி என்பதாகும்.

அம்பிகை வலது காலை சாய்த்துத் தொங்கவிட்டுக் கொண்டு இடது காலை மடக்கி உடம்பை வளைத்துக் கொண்டு ஒய்யாரமாக அமர்ந்திருக்கிறாள். இருவரும் அமர்ந்திருக்கும் பீடத்தின் மேற்புறம் கந்தர்வர்கள் கானம் செய்கிறார்கள். கின்னரர் வாத்தியம் வாசிக்கிறார்கள் நடன மங்கையர் ஆடுகின்றனர். இவை அனைத்தையும் எந்த ஒரு ஆரவாரமின்றி அவர்களைத் தமது முதுகில் தாங்கிக் கொண்டு அமைதியாகக் காட்சியளிக்கும் நந்தியெம் பெருமானின் மிடுக்கான தோற்றம் மிக அருமை.

தமிழகத்தில் வேறு எங்கும் காண இயலாத மிகமிக அற்புதமான வடிவமாகும். இந்தத் திருக்கோலத்தைத் தரிசிக்கவே பல்லாண்டுகள் தவமிருந்ததுபோல் அருகில் கிழக்கு நோக்கி இரண்டு கரங்களையும் கூப்பிக்கொண்டு நவகிரக குருபகவான் பக்திப் பரவசத்துடன் காட்சியளிக்கும் பாங்கே அலாதியானது. சாதாரணமாக எல்லா தலங்களிலும் அபய முத்திரையுடன் காட்சியளிப்பார் குரு. இங்கே மட்டும் அஞ்சலி முத்திரையில் வணங்கும் கோலத்தில் காட்சியளிப்பது மிகவும் சிறப்பானது. குரு பூஜித்து பேறு பெற்ற ஒப்பற்ற தலம் திருலோக்கி.

இடம் அகிலாண்டேஸ்வரி சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கும்பகோணம் அணைக்கரை வழியில் திருப்பனந்தாள் அருகில் 5 கி.மீ. தொலைவில் திருலோக்கி கோவில் அமைந்துள்ளது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.