நவ பிருந்தாவனம்

ஸ்ரீ ராகவேந்திரரின் மந்திராலயத்தில் இருந்து சுமார் 170 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து நவபிருந்தாவனம் இருக்கும் ஆனேகுந்தி பகுதிக்கு செல்ல வேண்டும். அதன் பின் படகு பயணம். துங்கபத்திரா நதிக்கரையின் நடுவே ஒரு ரம்யமான தீவை போல் காட்சியளிக்கும் அழகும் தெய்வீகமும் நிறைந்த பகுதியாக இந்த நவபிருந்தாவனம் பகுதி இருக்கிறது. இந்த பகுதியில் உள்ள மலைகள் அனைத்தும் சிறுசிறு பாறை துகள்களாக காட்சியளிக்கின்றன. ஆஞ்சநேயர் சிறுவயதில் இந்த மலையை தன் கதையால் அடித்து அடித்து விளையாடி மலைக்கு மாலை தாவி விளையாடிய இடம் ஆகையால் மலைகள் அனைத்தும் சிறுசிறு பாறை துகள்களாக காட்சியளிக்கின்றன. துங்கபத்ரா நதி அதிக ஆழம் கொண்டுள்ளதால் தண்ணீரின் வேகம் அதிகமாக உள்ள காரணத்தால் படகில்தான் நவ பிருந்தாவனம் செல்ல முடியும். துங்கபத்திரா நதியின் நடுவே அமைந்திருக்கும் இந்த மணற்திட்டு சுமார் 300 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று கார்பன் டேட்டிங் ஆய்வுகள் சொல்கிறது. அதாவது 30 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

ஸ்ரீ ராகவேந்திரரின் குரு சுதீந்திர தீர்த்தர் முதலான 9 மகான்கள் துங்கபத்திரா நதிக்கரையின் நடுவே ஜீவசமாதி அடைந்துள்ளார்கள். துங்கபத்திராவின் நடுவே பள்ளிகொண்ட அரங்கநாதர் கோவில் அனுமன் கோவில் மற்றும் ஒன்பது மகான்கள் 1. ஸ்ரீ பத்மநாப தீர்த்தர் 2. ஸ்ரீ ஜெய தீர்த்தர் 3. ஸ்ரீ கவீந்திர தீர்த்தர் 4. ஸ்ரீ வாகீச தீர்த்தர் 5. ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர் 6. ஸ்ரீ ஸ்ரீனிவாச தீர்த்தர் 7. ஸ்ரீ ராம தீர்த்தர் 8. ஸ்ரீ சுசீந்திர தீர்த்தர் 9. ஸ்ரீ கோவிந்த தீர்த்தர் ஆகியோரது ஜீவசமாதிகள் உள்ளன.

நவபிருந்தாவனத்தில் முதன்மையாக ஸ்ரீ அரங்கநாதர் அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் பெரிய பிராட்டியார் ஆதிசேஷனில் அமர்ந்து சேவை செய்யாமல் கீழே நின்று சேவை செய்யும் வண்ணம் அமைந்துள்ளது. இச்சன்னதியின் அருகே ஜாக்ரதை அனுமனின் சன்னதி உள்ளது. இச்சன்னதியில் அனுமன் இராவணனின் மகன் அக்ஷய குமாரனைத் தன் காலில் இட்டு வதம் செய்யும் கோலத்தில் சேவை சாதிக்கின்றார். இந்த இரண்டு சன்னதிகளுக்கு இடையில் ஒரு குகை உள்ளது இந்தக் குகையில் அமர்ந்து தியானம் செய்யலாம்.

அவதாரத்ரய ஹனுமான்

மூன்று அவதாரங்கள் ஒன்று சேர்ந்த ஹனுமான் இவர். திரேதா யுகத்தில் ஸ்ரீராம சேவை செய்வதற்காக அனுமனாகவும் துவாபர யுகத்தில் ஸ்ரீ கிருஷ்ண சேவை செய்வதற்காக பீமனாகவும் இக்கலியுகத்தில் ஸ்ரீ வியாச சேவை செய்ய மத்வராகவும் அவதாரம் செய்தார் இந்த மூன்று அவதாரங்களும் ஒன்றாக இணைந்தவர்தான் அவதாரத்ரய ஹனுமான். ஹனுமன் முகமும் பீமனை குறிக்கும் புஜங்களும் மத்வரை குறிக்கும் பகவத்கீதை சுவடியும் கொண்டு சேவை சாதிக்கின்றார். இவருக்குப் பின்னே சங்கு சக்ரங்களுடன் ஸ்ரீ நரசிம்மர் சேவை சாதிக்கின்றார். இந்த அவதாரத்ரய அனுமனை வியாஸராஜர் பிரதிஷ்டை செய்தார். மழைக் காலத்தில் ஆற்றில் வெள்ளம் அதிகம் செல்லும் போது நவபிருந்தாவனத்திற்கு யாரும் செல்ல முடியாது அப்போது ஆற்றின் இக்கரையிலிருந்தே கற்பூர ஆரத்தி காட்டுகின்றனர்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.