விராலி மலை

விராலிமலை முருகன் கோயில் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. இம்மலையின் புராண பெயர் சொர்ணவிராலியங்கிரி. மூலவர் சண்முகநாதர் ஆறுமுகம். முருகர் மயில் மீது வீற்றிருக்கிறார். இந்த மயில் தெற்கு பார்த்திருப்பதால் இதற்கு அசுர மயில் என்று பெயர். அம்மன் வள்ளி மற்றும் தெய்வானை. தலமரம் விராலிச்செடி காசிவில்வம். தீர்த்தம் சரவணப் பொய்கை நாக தீர்த்தம். நாகதீர்த்தம் நடுவே நாகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. முருகரின் வாகனமான மயில்கள் அதிகமாக நடமாடும் கோயில் இது. இடும்பன் சன்னதி பாறையில் குடைந்து அமைக்கப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதி அமைந்துள்ளது.

வயலூரில் ஓம் என்று நாவில் எழுதி திருப்புகழ் பாட வைத்த முருகப்பெருமான் அவரை விராலிமலை இருக்குமிடத்திற்கு வர கட்டளையிட்டார். விராலி மலைக்கு வழி தெரியாமல் தவித்த அருணகிரிநாதருக்கு விராலிமலைக்கு செல்லும் வழியை காட்ட முருகன் வேடன் வேடம் பூண்டு வேங்கையைத் துரத்தி வந்து அருணகிரிநாதருக்கு வழிகாட்டி தற்போது இக்கோவில் இருக்குமிடத்தில் உள்ள குரா மரத்தினுள் மறைந்து விட்டார். இந்த விராலிமலைத் தலத்தில்தான் அருணகிரிநாதருக்கு முருகர் அஷ்டமாசித்தி என்னும் கூடு விட்டு கூடு பாயும் வித்தையை வழங்கினார். திருப்புகழில் 18 தடவை இத்திருத்தலத்தைக் குறித்து அருணகிரிநாதர் பாடியுள்ளார். இத்தலத்தில் பலகாலம் தங்கியிருந்த அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தன் திருப்புகழில் உருகிப்பாடியுள்ளது இத்தலத்தின் பெருமைக்கு சான்று.

சிவன் பிரம்மாவின் ஆணவத்தை அடக்குவதற்காக அவரது ஒரு தலையைக் கொய்தார். அப்போது நாரதர் தன் தந்தை எந்தத் தவறும் செய்யவில்லை என்று சிவனிடம் வாதிட்டார். இதனால் அவர் சிவநிந்தனைக்கு ஆளானார். இதனால் அவரது தம்புரா வளைந்தது. சிவநிந்தையை போக்குவதற்கு இத்தலத்தில் முருகப் பெருமானை வணங்கி விமோசனம் பெற்றார். இதன் அடிப்படையில் இங்கு நாரதர் உற்சவராக இருக்கிறார். இவரது தம்புரா இப்போதும் வளைந்து காணப்படுகிறது. கோயில் திருவிழாவின் போது சுவாமி முன்பாக இவரும் உலா வருகிறார்.

குமாரவாடி என்ற ஜமீனில் நிர்வாகியாகப் பணி புரிந்தவர் கருப்பமுத்து பிள்ளை. வெள்ளிக் கிழமை தோறும் முருகப்பெருமானை தரிசித்த பின்பே உண்ணும் வழக்கம் உடையவர். இவர் தீவிர முருக பக்தர். இக்கோவிலில் நடந்த திருப்பணியில் கருப்பமுத்து ஈடுபட்டார். ஒருநாள் வெள்ளிக் கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்தது. அருகில் இருந்த நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆற்றைக் கடக்க முடியவில்லை. எப்படியாவது முருகனை தரிசிக்க வேண்டும் என்று முருகனைப் பிரார்த்தித்தார். குளிர் தாங்காமல் சுருட்டு ஒன்றை பற்ற வைத்தார். அப்போது அவர் அருகே ஒருவர் நடுங்கியபடி வந்து நின்றார். அவர் மீது இரக்கப்பட்ட கருப்பமுத்து உங்களுக்கும் சுருட்டு வேண்டுமா? எனக் கேட்டார். வந்தவரும் சுருட்டை வாங்கிக் கொண்டார். அந்த நபர் கருப்பமுத்துவுக்கு ஆற்றைக் கடக்க உதவி செய்தார். இருவருமாக ஆற்றைக் கடந்து சென்று கொண்டிருக்கும் போது அவர் மறைந்து விட்டார். இதனைக் கண்டு வியப்புற்ற கருப்பமுத்து கோயிலை அடைந்ததும் அங்கு முருகனுக்கு முன்பாக தான் கொடுத்த சுருட்டு இருப்பதைக் கண்டு தம்மிடம் சுருட்டு பெற்றவர் முருகனே என உணர்ந்தார். கருப்பமுத்து அங்கிருந்த அனைவரிடமும் நடந்ததைக்கூற ஆச்சரியமடைந்தனர். அன்று முதல் மாலை வேளை பூஜையில் முருகனுக்கு சுருட்டு நைவேத்யமாக படைக்கும் பழக்கம் உருவானது.

புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர் ஒரு முறை விராலிமலை வந்தார். சுருட்டை நிவேதனமாக வைப்பது கண்டு திடுக்கிட்ட மன்னர் இனி சுருட்டை நிவேதனப் பொருளாக வைக்கக்கூடாது என்று உத்தரவிட்டு சென்றுவிட்டார். அன்று மாலை அரண்மனை திரும்பிய மன்னருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. எந்த மருத்துவமும் பலன் தரவில்லை. அன்று இரவு முருகர் அவர் கனவில் தோன்றி எனக்கு சுருட்டு படைப்பது மற்றவருக்கு உதவி செய்யும் மனப்பான்மை வளர வேண்டும். பிறர் துன்பம் கண்டு அன்பை வளர்க்க வேண்டும் என்பதற்காகத்தானே தவிர புகைக்கும் பழக்கத்திற்கு முக்கியத்துவம் தருவதற்காக அல்ல. துன்பப்படும் ஒருவனுக்கு ஏதோ ஒரு வழியில் உதவி செய்ய வேண்டும் என என் பக்தர் விரும்பினார். அதற்காகவே அவர் தந்த சுருட்டை தகுதியற்றதாயினும் அன்புடன் ஏற்றுக் கொண்டேன். இப்பழக்கம் தொடரட்டும். தடை செய்யாதே என்றார். மேலும் நிவேதனமாக சுருட்டை வைக்க வேண்டாம் என்று கூறியதால் தான் அவருக்கு வயிற்று வலியை தோன்ற செய்தேன் என்று கூறினார். அடுத்தநாள் மன்னர் தான் போட்ட தடையை நீக்கினார். முதல் சுருட்டு நைவேத்தியமாக முருகனுக்கு வைத்தவுடன் மன்னரின் வயிற்று வலி குணமானது. அதன்பிறகு இன்று வரை இப்பழக்கம் இருக்கிறது. ஆறு கால பூஜையின் போது பாலும் பழமும் பஞ்சாமிர்தம் நைவேத்தியமாக செய்யப்படுகிறது. உச்சிகால வழிபாட்டின்போது மட்டும் சுருட்டு சேர்த்து நைவேத்தியம் செய்யப்படுகிறது

வசிஷ்டரும் அவரது துணைவி அருந்ததியும் தமது சாபம் நீங்க இத்தலத்தில் தவமியற்றி உள்ளார்கள். திருவாரூரில் இருந்த தட்சிணாமூர்த்தி என்னும் அடியார்க்கு இறைவனே அப்பம் தந்த தலம். சனகர் சனந்தர் சனாதனர் சனத்குமாரர் ஆகிய நால்வருக்கும் முருகன் தோன்றி காட்சி தந்த திருத்தலம். இத்தலத்தின் மீது விராலிக் குறவஞ்சி என்னும் நூலை முத்துப்பழனிக் கவிராயர் இயற்றினார். பங்குனி உத்திரம் கந்த சஷ்டி ஆகிய நாட்களில் இத்தலத்தின் சிறப்பான உற்சவங்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. பொதுவாக ஆலயங்களில் பிரமோச்சவம் என்பது ஒரு தடவை மட்டுமே நடக்கும். ஆனால் இந்த ஆலயத்தில் விசாகம் மற்றும் பூசம் விழாக்களை ஒட்டி இரண்டு பிரம்மோச்சவம் நடைபெறுகிறது. விஜயநகரப் பேரரசரின் வழிவந்த இரண்டாம் தேவராயரின் (கிபி1422 -1446) காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. குன்றில் அமைந்துள்ள இயற்கையான குகைகளில் மனிதர்கள் வாழ்ந்திருந்த அறிகுறிகள் காணப்படுகின்றன.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.