மகாபாரதம் 15. ஆஸ்ரமவாசிக பருவம் பகுதி -2

ஒருநாள் திருதராஷ்டிரன் சபை ஒன்றை கூட்டினான். சபையிலே தன் தம்பி பாண்டுவின் பிள்ளைகளும் பொதுமக்களும் பிரதிநிதிகளும் கூடியிருந்தனர். தான் வனவாசத்திற்கு போக வேண்டிய அவசியத்தை குறித்து திருதராஷ்டிரன் அனைவருக்கும் எடுத்து விளக்கினான். மன்னன் ஒருவன் அறநெறியில் போர் புரிந்து போர்க்களத்தில் உயில் துறக்க வேண்டும். இல்லையேல் கடைசி காலத்தில் தவத்தில் இருந்து தனது வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இதுவே அரசனுக்குரிய தர்மமாகும். இந்த கோட்பாடுகளை முன்னிட்டு திருதராஷ்டிரன் காட்டிற்கு செல்ல தீர்மானித்தான். விதுரனும் சஞ்ஜயனும் காந்தாரியும் குந்தியும் அவரை பின்பற்றி தவம் புரிய காட்டிற்குப் போக தீர்மானித்தார்கள். இந்தத் தீர்மானத்திற்கு சபையிலிருந்த அனைவரும் அரை மனதுடன் அவருக்கு சம்மதம் கொடுத்தார்கள்.

வனத்திற்கு சென்றவர்கள் அற்புதமாக தங்கள் இறுதிக்காலத்தை கழித்தனர். இவ்வுலக வாழ்வை அவர்கள் அறவே மறந்து விட்டனர். நிலையற்ற இந்த நிலஉலக வாழ்வு அவர்கள் மனதில் இருந்து மறைந்து பட்டுப் போயிற்று. எப்பொழுதும் மறவாது இருக்கும் பரம்பொருளை பற்றிய எண்ணமே அவர்களுடைய உள்ளத்தில் நிறைந்து இருந்தது. தியானமும் பிரார்த்தனையும் முறையாக நிகழ்ந்தன. சான்றுகளுடன் பேச்சும் உரையாடலும் நடைபெற்றது. நில உலக வாழ்வின் இறுதி காலத்தில் இருக்கவேண்டிய பண்பில் அவர்கள் முற்றும் நிலைத்திருந்தனர். இவ்வாறு ஆண்டுகள் 3 சென்றது.

மகாபாரத யுத்தம் நிகழ்ந்து சரியாக 18 வருடங்களுக்கு பிறகு இப்போது ஊழித்தீ போன்ற நெருப்பு வனமெங்கும் பற்றி எரிந்தது. திருதராஷ்டிரனும் காந்தாரியும் குந்தியும் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்திருந்தனர். அவர்களுடைய தேகம் தீக்கு இரையாயின. ஆத்ம சொரூபம் இறைவனிடத்தில் ஒன்றுபட்டது. இவ்வுலக வாழ்க்கையை அவர்கள் முடிவுக்கு கொண்டுவந்தனர். தீயிலிருந்து தப்பிய விதுரரும் சஞ்ஜயனும் பிரம்ம நிஷ்டையில் இருக்கும் பொருட்டு இமயமலைக்கு புறப்பட்டுச் சென்றார்கள்.

ஆஸ்ரமவாசிக பருவம் முற்றியது அடுத்து மௌசல பருவம்.

தொடரும்…………

மகாபாரதம் 15. ஆஸ்ரமவாசிக பருவம் பகுதி -1

யுதிஷ்டிரன் தனது ஆட்சியில் மக்களை நல்வழியில் நடத்துவது தன் கடமை என உணர்ந்து செயல்பட்டான். அவன் ஆட்சியில் குறை ஏதும் தென்படவில்லை. நிறைவு எங்கும் நிலைத்திருந்தது. மக்கள் அனைவரும் யுதிஷ்டிரனை தங்கள் தந்தையாக கருதிவந்தனர். ஆட்சி புரிபவன் நான் என்ற எண்ணம் அரசனிடமும் இல்லை. ஆளப்பட்டு வருகின்றோம் என்ற எண்ணம் மக்களிடம் இல்லை. நாட்டில் உள்ள அனைவரும் பரந்த ஒரே குடும்பமாக அனைவரும் வாழ்ந்து வந்தார்கள்.

யுதிஷ்டிரன் தனது பெரியப்பாவாகிய திருதராஷ்டிரனுக்கு முழுமனதுடன் பணிவிடை செய்தான். திருதராஷ்டிரன் தனது மக்கள் அனைவரையும் இழந்துவிட்டான். துரியோதனனை ஆட்சில் அமர வைக்க வேண்டும் என்ற திருதராஷ்டிரனுடைய வாழ்வின் நோக்கம் நிறைவேறவில்லை. திருதராஷ்டிரன் நிலைமை இப்போது பரிதாபகரமாக இருந்தது. அத்தகைய நிலையில் திருதராஷ்டிரனுக்கு ஆறுதலையும் அமைதியையும் கொடுப்பது யுதிஷ்னிரனுடைய நோக்கமாக இருந்தது. துரியோதனன் திருதராஷ்டிரனுக்கு ஓயாத தொல்லை கொடுத்து வந்தான். அதற்கு நேர்மாறாக இப்பொழுது பாண்டுவின் புதல்வர்கள் யுதிஷ்டிரன் தலைமையில் சிறிதளவும் தர்மத்திலிருந்து பிசகாமல் நடந்து கொண்டார்கள். அதேவேளையில் நாட்டின் சக்கரவர்த்தியாக ஆட்சி புரிந்து வருவது தான் அல்ல. திருதராஷ்டிரன் தான் என்பதை என் பெரியப்பாவிடம் யுதிஷ்டிரன் சொல்லிக்கொண்டே வந்தான். யுதிஷ்டிரன் படைத்திருந்த பரந்த மனப்பான்மையின் விளைவாக மன வேதனையில் இருந்து திருதராஷ்டிரன் விடுபட்டான். குந்தியும் திரௌபதியும் காந்தாரிக்கு பணிவிடை செய்து அவளுக்கு ஆறுதலையும் அமைதியையும் கொடுத்தார்கள்.

யுதிஷ்டிரனுடைய நெறி பிறழாத ஆட்சி முறையிலும் பாதுகாப்பிலும் திருதராஷ்டிரன் 15 வருடகாலம் வாழ்ந்து வந்தான். சௌபாக்கியம் நிறைந்த அந்த நல்ல சூழ்நிலையில் வாழ்ந்து வந்ததன் விளைவாக துரியோதனன் சகுனி மற்றும் பலரின் நடுவில் பொல்லாங்கு மனதுடன் வாழ்ந்து வந்த திருதராஷ்டிரன் நல்ல மனதும் ஆழ்ந்த சிந்தனையும் உடைய மாறிவிட்டான். பீமனும் துரியோதனனும் ஜன்ம விரோதிகளாக முன்பு வாழ்ந்துவந்தனர். அதை முன்னிடு திருதராஷ்டிரன் பீமன் மீது கோபம் மிக படைத்திருந்தான். பீமன் எச்சரிக்கையாக நடந்து கொண்டதன் விளைவாக தற்போடு திருதராஷ்டிரனின் மனப்பான்மையை பீமன் அடியோடு மாற்றி விட்டான். திருதராஷ்டிரரின் மனதை திருத்தி அமைத்த சிறப்பு பாண்டவர்களுக்கு உரியதாக இருந்தது.