சுருட்டப்பள்ளி கொண்டீஸ்வரர்

துர்வாச மகரிஷியின் சாபத்தால் இந்திரலோக பதவியை இழந்தான் இந்திரன். அசுரர்கள் அவனது ராஜ்யத்தைப் பிடித்தனர். இழந்த பதவியை பெற வேண்டுமானால் பாற்கடலை கடைந்து அமுதம் உண்டு பலம் பெற வேண்டும் என தேவகுரு பிரகஸ்பதி கூறினார். திருமாலின் உதவியுடன் வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் மந்திர மலையை மத்தாகவும் கொண்டு தேவர்கள் ஒரு புறமும் அசுரர்கள் ஒரு புறமுமாக பாற்கடலை ஏகாதசி தினத்தில் கடைந்தனர். வாசுகி பாம்பு வலி தாங்காமல் விஷத்தை கக்கியது. அப்போது முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவபெருமானே இந்த விஷத்தை வெளியில் வீசினால் அனைத்து ஜீவராசிகளும் அழியும். இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து எங்களை காத்திடுங்கள் என மன்றாடினர். தேவர்களும் அசுரர்களும் பயந்து இதிலிருந்து தங்களை காப்பாற்ற சிவனை வேண்டினர்.

சிவன் தன் நிழலில் தோன்றிய சுந்தரரை அனுப்பி அந்த விஷத்தை திரட்டி எடுத்து வர கூறினார். சுந்தரர் மொத்த விஷத்தையும் திரட்டி சிவனிடம் தந்தார். உடனே சிவன் விஷாபகரண மூர்த்தியாகி அந்த கொடிய நஞ்சினை விழுங்கினார். இதைக்கண்டு பயந்த பார்வதி சிவனை தன் மடியில் கிடத்தி அவரது வாயிலிருந்த விஷம் கழுத்தினை விட்டு செல்லாதவாறு கைவைத்து அழுத்தினாள். இதனால் சிவனின் கழுத்தில் நீலநிறத்தில் விஷம் தங்கியது. அதனால் அவர் நீலகண்டன் ஆனார். விஷத்தை தடுத்து அமுதம் கிடைக்கச் செய்ததால் அம்பாள் அமுதாம்பிகை ஆனாள். பிறகு சிவன் பார்வதியுடன் கைலாயம் சென்றார். அப்படி செல்லும் வழியில் சுருட்டப்பள்ளி என பெயர் கொண்ட இத்தலத்தில் சற்று இளைப்பாறியதாக சிவபுராணமும் ஸ்கந்த புராணமும் கூறுகிறது. சிவன் பார்வதியின் மடியில் படுத்து ஓய்வெடுத்த இந்த அருட்காட்சியை இக்கோவிலில் பார்க்கலாம். சுவாமி பள்ளி கொண்டிருப்பதால் பள்ளி கொண்டீஸ்வரர் எனப்படுகிறார். இத்திருக்கோயில் விஜயநகர பேரரசர் வித்யாரண்யரால் கட்டப்பட்டது. இங்குள்ள சிவபெருமான் மனித உருவில் ஆலகால விஷம் உண்டபின்னர் பார்வதி தேவியின் மடியில் தலை வைத்து படுத்தபடி ஓய்வெடுக்கும் உருவில் இருக்கிறார்.

சிவன் பள்ளி கொண்ட நிலையில் அனைத்து தெய்வங்களும் தம்பதி சமேதராக இக்கோவிலில் உள்ளனர். பள்ளி கொண்ட ஈஸ்வரன் – சர்வ மங்களாம்பிகை, வால்மீகிஸ்வரர் – மரகதாம்பிகை, விநாயகர் – சித்தி, புத்தி. சாஸ்தா – பூரணை, புஷ்கலை, குபேரன் – கவுரிதேவி, சங்கநிதி, பதுமநிதி. என்று அனைவரும் மனைவியருடன் உள்ளனர். மூலவர் வால்மீகிஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். இவருக்கு எதிரில் ராமலிங்கம் உள்ளது. இந்த சன்னதிக்கு வெளியே துவார பாலகருக்கு பதில் சங்கநிதியும் பதுமநிதியும் உள்ளனர். அம்மன் மரகதாம்பிகை சன்னதிக்கு வெளியில் துவார பாலகியருக்கு பதில் பாற்கடலிலிருந்து கிடைத்த காமதேனுவும் கற்பகவிருட்சமும் உள்ளனர். பிரகாரத்தில் விநாயர், முருகன், பிருகு முனிவர், பிரம்மா, விஷ்ணு, மார்க்கண்டேயர், நாரதர், சந்திரன், குபேரன், சூரியன், சப்தரிஷிகள், இந்திரன் வீற்றிருக்கிறார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.